ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 53

அகத்திய மாமுனிவர்(குருநாதர்) கூறும் சூட்சுமம்

ஒரு மனிதன் தன் தேவையை மறந்துவிட்டு பிறருக்கு சேவையும் பொது நலத் தொண்டையும் செய்யத் துவங்கும் பொழுதே அவன் தேவையை இறைவன் கவனிக்கத் துவங்கிவிடுவார் என்பதே சூட்சுமம். நாங்கள் கூறுகின்ற இந்த சூட்சுமத்தை யாரும் புரிந்து கொள்ளவேயில்லை.

கேள்வி: தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சம் அதிகமாக இருக்கிறது. அதனால் இறைவனின் தலையில் இருக்கும் கங்கையையும் தங்கள் கமண்டலத்தில் உள்ள காவிரியையும் இணைக்க வழி சொல்லுங்கள்?

இறைவன் அருளால் இன்னும் ஒரு நாழிகைக்குள் (24 நிமிடங்கள்) இணைத்து விடலாம் அப்பா கவலைப்படாதே. ஒன்று தெரியுமா? மூடர்களால் (முட்டாள்கள்) வரக்கூடிய துன்பங்கள்தான் இந்த உலகிலே அதிகம். தன் முனைப்பு ஆணவம் பெருந்தன்மை இல்லாத மனிதர்கள் இவர்கள் கையில் நாடு சிக்கினால் இந்த நாட்டிற்கு விமோசனம் என்பதே கிடையாது. அரியாசனங்கள் (இராஜ்ஜியம்) என்றுமே அறியா சனங்களால் (அறியாமையில் உள்ள மக்கள்) தீர்மானிக்கப் படுவதால் இந்த அறியாசனங்கள் அரியாசனங்களை சரியாக வைத்துக் கொள்ள தெரிவதில்லை. அறியாசனங்களின் இந்த அறியாசனத்தை அரியாசனங்கள் நன்றாகவே பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன. நல்லவர்களை இனம் காண முடியாத கொடுமைதான் இத்தனை கொடுமைக்கும் காரணம். ஏற்கனவே தான் எல்லா கொடுமைகளையும் ஒருவன் செய்கிறானே? மீண்டும் எதற்கு அவனை தேர்ந்தெடுக்க வேண்டும். ஏனென்றால் மனிதர்களை பொறுத்தவரை எல்லோருக்கும் தெரிந்தவனைதான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற விதி இருக்கிறது. அவன் மதிக்குள் அவன் விதி அப்படிதான் அமர்ந்து வேலை செய்கிறது. வேறுவிதமாகக் கூறினால் நன்றாக புரிந்து கொள்ளலாம்.

ஒருவன் பல நாட்களாக பல தர்ம காரியங்களை நல்ல தொண்டுகளை செய்கிறான் யாராவது அவனை கண்டு கொள்வார்களா? ஆனால் ஒரு நாள் அவன் சில பெண்களோடு பழகினால் தவறான ஒரு இடத்திற்கு சென்று வந்தால் மறுதினம் ஊரெங்கும் அவனைப் பற்றி பேச்சாக இருக்கிறது. நல்லதை செய்யும் பொழுது கண்டு கொள்ளாத சமுதாயம்\, தீயதை செய்யும் பொழுது ஏன் கண்டு கொள்கிறது? இந்த குணம் மாறினால்தான் நாட்டில் சுபீட்சம் உண்டாகும். நல்லதை அங்கீகரிக்க கற்றுக் கொள்ளுங்கள். நல்லவர்களை ஆதரிக்க கற்றுக் கொள்ளுங்கள். முதலில் ஒவ்வொரு மனிதனும் நல்லவனாக வாழ கற்றுக் கொள்ளுங்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.