ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 323

அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:

பிரார்த்தனைகளும் தர்மங்களும் பலன் தரவில்லை என்றால் குறை அதனை செய்கின்ற மாந்தனிடம் (மனிதனிடம்) உண்டு என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அறியுங்கால் முன்ஜென்ம வினையின் தாக்கம் அதிகம் உண்டு. அது குறித்து அவன் செய்யும் பிரார்த்தனைகளின் அளவு போதவில்லை தர்மங்களின் அளவு போதவில்லை என்பது பொருளாம். அல்லது இன்னும் சில காலம் கழித்து கிட்டப்போகும் நன்மைக்கு முன்னரே சில தீமைகள் போல் தோன்றுகின்ற நன்மைகளும் தீமைகளாய் மாற்றி இறை தருகின்றது என்பது பொருளாகும். எது எங்ஙனம் ஆயினும் இந்த உலகில் நிலவுகின்ற ஒவ்வொரு சம்பவமும் அவனவன் மன நிலையைப் பொறுத்தே அமைவது ஆகுமப்பா. அப்பனே இன்பம் என்ற ஒன்றை மனம் தேடும் பொழுதே அதன் மறுபக்கம் துன்பம் என்ற ஒன்று உள்ளதை புரிந்து கொள்ள வேண்டும். துன்பம் என்ற ஒன்று வரும் பொழுதே அதன் மறுபக்கம் இன்பம் என்ற ஒன்று வரும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். வேண்டுமப்பா இவை இரண்டும் வேண்டாத உள்ளம் வேண்டுமப்பா. மனம் சமநிலையில் இருக்குங்கால் யாதொரு தொல்லையும் இல்லை. விளம்புங்கால் நிதம் நிதம் ஆயிரம் ஆயிரம் விபத்துக்கள் நிதம் நிதம் ஆயிரம் கஷ்டங்கள். விளம்புவோம். நிதம் நிதம் எத்தனையோ மனிதர்களுக்கு எத்தனையோ பிரச்சனைகள். வரியுங்கால் அதனை எல்லாம் எண்ணி அந்தப் பிரச்சினைகளை சாராத மனிதன் என்றாவது கலங்கி இருக்கிறானா? கவலைப்படுகிறானா? இல்லை. அதனை போலத்தான் ஒவ்வொரு மனிதனும் தனக்கு துன்பங்கள் வரும்போது மட்டும் கலங்குகின்ற நிலையையும் மாற்றிக் கொள்ள வேண்டும். வேண்டுமே மன உறுதி பெற உறுதி பெற எந்த பிரச்சனையும் பிரச்சினையாகத் தோன்றாது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.