ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 124

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு

இறைவன் கருணையாலே விதியை ஒதுக்கி வைத்துவிட்டு மகான்களால் எதையும் கூற இயலாது. இருந்தாலும் மனிதர்களுக்கு புரிய வேண்டும் என்பதற்காக சிலசமயம் சில விதமான வாக்குகளை (ஜீவநாடி வாக்கு) யாங்கள் கூறுகிறோம். ஆனாலும் ஒரு மனிதனின் மதி எந்தளவிற்கு பக்குவப்பட்டு இருக்கிறதோ எந்தளவு பாவங்களற்ற நிலையில் இருக்கிறதோ அந்தளவுதான் இறைவனருளால் யாங்கள் கூறுகின்ற வாக்கினை சரியாக புரிந்துகொள்ள இயலும். பக்குவமற்ற பாவங்கள் நிறைந்த ஆத்மாக்களுக்கும் எத்தனை கீழிறங்கி வாக்குகளைக் கூறினாலும் அர்த்தம் அனார்த்தமாகத்தான் புரியும். நாங்கள் கூறுவதை சரியாக புரிந்துகொள்ள இயலாது.

இறைவனருளாலே எத்தனை விதமான பாவங்களின் தாக்கத்தால் பிறவிகள் எடுத்த ஆத்மாக்களுக்கு எத்தனையோ விதமான வழிமுறைகள் இருந்தாலும் பாவங்கள் நீங்க வேண்டும் அதே சமயம் அந்த பாவங்கள் மீண்டும் பற்றிவிடக்கூடாது என்பதை மட்டும் மையமாகக் கொண்டு இறைவனருளாலே இந்த ஜீவ அருள் ஓலையில் யாம் எத்தனையோ விதமான நுணுக்கமான வாக்குகளை கூறியிருக்கிறோம். சுருக்கமாக அதை செய் இதை செய் என்று கூறாமல் தர்மத்தை பிடித்துக்கொள் அது பாவத்திலிருந்து உன்னை விடுவிக்கும் என்று பலமுறை பலருக்கு பலமாகக் கூறியிருக்கிறோம். ஆனாலும் பலரில் சிலருக்கும் சிலரில் சிலருக்கும் அந்த சிலரில் சிலருமேதான் மதியில் பட்டு அந்த வழியில் வருவதற்கு விதி அனுமதி தந்திருக்கிறது என்பதே மெய்யிலும் மெய்யாகும். இன்னும் எத்தனையோ விதமான உண்மைகளை நாங்கள் வெளிப்படையாகக் கூறுவது என்பது அத்தனை நாகரீகமாக இராது. எனவே யாங்கள் மெளன தவத்தை தொடர்வதே இறைவன் இட்ட கட்டளையாக இருக்கிறது.

இறைவன் அருளாலே விதி வலிமையாக இருக்கும் பொழுது இறைவனே தோன்றி வழிகாட்டினாலும் அது மாந்தர்களின் (மனிதர்கள்) செவியில் ஏறாதப்பா. எனவே இத்தருணம் எத்தனையோ நுணுக்கமான கருத்துக்களை யாங்கள் கூறி உன் மூலமாக சிலருக்கு விளங்க வைக்கலாம் என்றாலும்கூட அதுவும் விதிவழி ஏற்புடையதாக இராது. எனவே நேர்மையான பிராத்தனைகளை உண்மையான தர்மத்தினை கூடுமானவரை சத்தியத்தினை கடைபிடிப்பதை தவிர இத்தருணம் வேறு வழி ஏதுமில்லையப்பா.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.