ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 344

அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:

மரணம் என்பது மனிதப் பார்வையிலே துக்கமாக இருக்கலாம். இருக்கத்தான் வேண்டும். அப்படித்தான் இருப்பதாகவே மனிதனுக்கு அது உணர்த்தப்பட்டுள்ளது. மரணம் என்பது முடிவாக மனிதனுக்குத் தெரிகிறது. அதை அப்படி பார்ப்பதை விட நாங்கள் அடிக்கடி கூறுகின்ற உதாரணத்தை வைத்துப் பார்த்தால் மிக எளிதாகப் புரியும். ஆனாலும் இது மனிதனுக்கு வேதனை தரக்கூடிய உதாரணமாக இருக்கலாம். அதே சமயம் எல்லா மரணத்திற்கும் இந்த உதாரணத்தை பொருத்திப் பார்க்கக் கூடாது.

கூடுமானவரை பல புண்ணியங்களை செய்கின்ற மனிதன் பலருக்கும் நல்லதை செய்கின்ற மனிதன் மெய்யாக மெய்யாக மெய்யாக மெய்யாக மெய்யைப் பேசி மெய்யாக நடந்து இறை பக்தியோடு அடக்கத்தோடு ஒழுக்கத்தோடு வாழ்கின்ற மனிதன் சட்டென்று மரணித்தால் அட்டா இத்தனை நல்லவன் இறந்து விட்டானே? எத்தனையோ தீய செயல்களை செய்கின்ற இன்னொரு மனிதன் வாழ்வாங்கு வாழ்கிறானே? என்று ஒப்பிட்டு பார்ப்பது மனிதர்களின் இயல்பு. ஆனால் இது போன்ற தருணத்தில் எப்படி புரிந்து கொள்ள வேண்டுமென்றால் ஒரு சிறைச் சாலையிலே பல்லாண்டுகள் சிறையில் வாட வேண்டும் என்று தண்டனை பெற்ற ஒருவன் நன்னடத்தை காரணமாக முன்னதாகவே சிறையை விட்டு வெளியே வருவது போல் பல ஆண்டுகள் தண்டனை பெற்று சிறையில் வாடுகின்ற ஒரு மனிதன் சில நாட்கள் மட்டும் தண்டனை பெற்று வெளியே போகும் கைதியைப் பார்த்து என்னப்பா நீ பெரிதாக குற்றம் செய்யவில்லையா? என்னைப் பார்த்தாயா? நான் எத்தனை பெரிய குற்றம் செய்து விட்டு ஆண்டாண்டு காலம் சிறையில் இருக்கிறேன். நீ எதற்கு இத்தனை குறுகிய காலத்தில் வெளியே செல்கிறாய்? உனக்கென்ன அத்தனை அவசரமா ? ஏன் நீ பெரிய குற்றமாக செய்யமாட்டாயா? என்று கேட்டால் அது எப்படியிருக்குமோ அப்படித்தான் சட்டென்று நல்லவன் மரணித்தால் இவன் மாண்டு விட்டானே என்று மற்றவர்கள் விசனம் கொள்வதற்கு ஏதுவாக இருக்கும்.

இப்படிக்கூறினால் மனிதனுக்கு இன்னொரு ஐயம் எழும். அது சரி அவனை சார்ந்த குடும்பம் என்னாவது அவன் மீது அதீத பற்றும் பாசமும் கொண்ட உறவும் நட்பும் வேதனைப்படுமே? என்றெல்லாம் பார்த்தால் அது சூட்சும கர்மக் கணக்கிற்குள் செல்லும். எனவே மேலெழுந்தவாரியாக மனிதன் புரிந்து கொள்வதை விட ஆழ்ந்து ஆழ்ந்து சென்று புரிந்து கொள்ள முயற்சி செய்திட வேண்டும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.