ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 341

அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:

இறைவனின் கருணையைக் கொண்டு இயம்புவது யாதென்றால் இதுபோல் நலம் எண்ணி நலம் உரைத்து நலமே செய்ய நலமே நடக்கும் என்று எமை நாடும் மாந்தர்களுக்கு யாம் இயம்பிக் கொண்டே இருக்கிறோம். ஆனாலும் சித்தர்கள் இயம்பிக் கொண்டே இருக்கட்டும். யாம் என்ன கூறினாலும் மனிதர்கள் அவனவன் மதி வழியே மதியை பிடித்திருக்கும் விதி வழியேதான் செல்வேன் எனும் பொழுது யாம் வழி காட்டுவதைத் தவிர வேறு எதுவும் மனிதர்கள் வாழ்விலே குறுக்கிட்டு திசை திருப்ப இயலாது. யாம் ஒரு மனிதனின் வாழ்விலே குறுக்கிட வேண்டுமென்றால் இறைவனின் அனுமதியும் அருளும் மட்டுமல்லாமல் அந்த மனிதனுக்கு அந்த அளவிற்கு பக்குவமும் பெருந்தன்மையும் சூழ்ச்சி கபடம் சூது சுயநலமில்லாமல் இருந்திட வேண்டும். இதை வைத்து பார்க்கும் பொழுது நாடி மூலம் சித்தர்களை நாடிக் கொண்டிருக்கும் பல மனிதர்களில் சிலருக்கு வாழ்விலே நல்ல பலன்களும் பலருக்கு நல்ல பலன்கள் நடவாமல் போவதற்கும் காரணமே அவனவன் அடிப்படை குணம்தான்.

இதுபோல் நிலையிலே யாம் கூறுவதை கூறிக் கொண்டே இருப்போம். எமை நாடுகின்ற மாந்தர்கள் எமை நாடி எமது அருளாசியை பெற்றுக் கொள்வதோடு நாங்கள் கூறுகின்ற நல் அறிவை நல் உபதேசத்தை பின்பற்றினால்தான் முழுமையான பலன் உண்டு. ஆனால் நாடி வாசிக்கின்ற இந்த ஸ்தானத்திலே அமரும் பொழுது மட்டும் பவ்யமாக அமர்வதும் பேசும் பொழுது உயர்ந்த கருத்துக்களை பேசுவதும் விவாதம் செய்யும் பொழுதும் பிறருக்கு போதனை செய்யும் பொழுதும் தர்மத்தையும் சத்தியத்தையும் போதனை செய்து தான் அதனை பின்பற்றாமல் இருந்தால் அதனால் பலனேதுமில்லை. இதைதான் எமை நாடும் மாந்தர்களுக்கு பலமுறை பலவிதமாக நயத்தகு நாகரீகம் என்ற அளவிலே சுட்டிக் காட்டுகிறோம். ஆனால் பலன்கள் என்பது மிகவும் குறைவாகத்தான் இருக்கிறது. தன்முனைப்பு சினம் ஆற்றாமை சோர்வு இதுபோன்ற எந்த எண்ணங்களும் இல்லாமல் உற்சாகமாக நேர்மையான வழியிலே உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாமல் பிறரை பாதிக்காத வகையிலே வாழ்க்கையை நடத்திக் கொண்டு அவனவன் கடமையை செய்து கொண்டு இறைவன் வழியில் சத்திய வழியில் தர்ம வழியில் எவன் நடக்கிறானோ அவனுக்கு யாம் என்றும் தோன்றாத் துணையாக இருப்போம். ஆனாலும் கூட எல்லோரும் அப்படி நடப்பார்கள் என்று எண்ணி நாங்கள் வாக்கினைக் கூறவில்லை.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.