ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 299

கேள்வி: ஸ்ரீரங்கத்திலே சுக்ரவார கிருஷ்ணன் சன்னிதி இருக்கிறது. அதன் தாத்பர்யம் என்ன?

பொதுவாகவே அரங்க ஸ்தலம் (பெருமாள் ஆலயம்) என்பது சுக்ரனுக்கு உகந்த ஸ்தலம் என்று கூறலாம். ஜாதகத்தில் சுக்கிர பகவானின் அருள் குறைவாக இருக்கப் பெற்றவர்கள் சென்று வழிபட வேண்டிய ஸ்தலங்களில் ஸ்ரீரங்கமும் ஒன்று. எனவே அந்த ஸ்ரீரங்கம் முழுவதுமே சுக்கிரனின் ஆட்சி இருக்கிறது. அதனால்தான் அது ஆதிகாலத்தில் இருந்த நிலை நாளுக்கு நாள் மாறி மாறி தற்காலத்திலே மிகப்பெரிய நகரமாக வளர்ச்சி பெற்றிருக்கிறது. அதுபோல் நிலையிலே அங்கு எந்த சன்னிதியிலே சென்று இறைவனின் எந்த வடிவத்தை வணங்கினாலும் கூட அது சுக்ர தோஷத்திற்கு பரிகாரமாக அமையும். எனவே மூலவரை வணங்கினாலும் வேறு உப சன்னதியில் சென்று வழிபாடு செய்தாலும் கூட அது சுக்ரன் தொடர்பான தோஷங்களை நீக்கும். எனவே அங்குள்ள எல்லா வகை சன்னதியிலும் ஒரு மனிதன் எந்த வகை பூஜை செய்தாலும் அதற்கு சுக்கிர பரிகார பூஜை என்று பொதுவாக கொள்ளலாம். எனவே அந்த அடிப்படையில் எழுந்ததுதான் இன்னவன் விடுத்த வினா.

கேள்வி: சக்கரத்தாழ்வாரின் பின் பக்கம் நரசிம்மரை பிரதிஷ்டை செய்வதன் தாத்பரியம் என்ன?

மகாவிஷ்ணுவும் மகாவிஷ்ணுவுடன் இருக்கக்கூடிய சங்கும் சக்ரமும் இணை பிரியாதவை என்பதை ஒரு குறிப்பாக உணர்த்துவதற்காகத்தான். இதுபோல் முற்காலத்திலே எங்கு சுதர்சனத்தை பிரதிஷ்டை செய்தாலும் அதன் பின்னால் மகாவிஷ்ணுவின் வடிவத்தை பிரதிஷ்டை செய்வதாக ஒரு ஐதீகம் இருந்தது. அது சுதர்சனம் என்பது தீமையை அழிக்கக் கூடிய பகையை வெல்லக் கூடிய ஒரு அம்சமாக இருப்பதால் மகாவிஷ்ணுவின் அவதாரமான நரசிம்மரை பிரதிஷ்டை செய்யும் வழக்கமும் இருந்தது. எப்படியும் உப தெய்வங்களை வணங்குவதோடு பிரதான தெய்வத்தையும் வணங்குவதே சிறப்பு என்ற அடிப்படையிலேயே இவ்வாறு பிரதிஷ்டை செய்யப்படுகிறது. சுதர்சன பகவானை வணங்கினாலும் மகாவிஷ்ணுவை வணங்கினாலும் பலன் ஒன்றுதான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.