ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 33

கேள்வி: ஆதாம் ஏவாள் பற்றி

இறைவன் அருளாலே ஏதோ ஒரு குறிப்பிட்ட ஒருவனை இறைவன் படைத்துவிட்டு அப்படி படைக்கப்பட்ட ஆணிலிருந்து ஒரு பெண்ணைப் படைத்தான் என்று ஒரு குறிப்பிட்ட மார்க்கத்தை சேர்ந்தவர்கள் சொல்வதை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்காக அதை குறை கூறவும் நாங்கள் விரும்பவில்லை. எனவே நீக்கமற நிறைந்துள்ள இந்த பிரபஞ்சம் அண்ட சராசரங்கள் எப்பொழுதுமே இருக்கின்றன. இங்கே ஆத்மாக்களும் எப்பொழுதுமே இருந்து கொண்டு இருக்கின்றன. இறைவன் எப்பொழுது இந்த உலகத்தைப் படைத்தான்? எப்படி படைத்தான்? என்று பார்க்கப்போனால் அதை புரிந்து கொள்ளக்கூடிய அறிவாற்றலானது மனித கூட்டுக்குள் இருக்கக்கூடிய ஆத்மாவிற்கு கிடையாது. இந்த மனித கூட்டுக்குள் இருக்கின்ற ஆத்மாவானது தன் உடலை மறந்து தனக்குள் நீக்கமற நிறைந்துள்ள ஆத்மாவை புரிந்து கொண்டு அந்த ஆத்மாவும் பரமாத்மாவும் ஒன்று என்று உணரும் பொழுதே அந்த ஆத்மாவிற்கு மெல்ல மெல்ல புலப்படத் துவங்கும்.

அதாவது பரந்துபட்டு ஓடுகின்ற ஒரு புண்ணிய நதி. அந்த நதியை சுட்டிகாட்டி அந்த அற்புதமான ஒரு புண்ணிய நதியைப் பார்த்து ஒருவன் கேட்பான் இது என்னப்பா? என்று இன்னொருவன் கூறுவான் இது புண்ணிய நதி இது கங்கை இது காவிரி இது சரஸ்வதி இது யமுனை என்று. சரி என்று ஒரு செப்புக் கலசத்திலே அந்த நதி நீரை அள்ளி இப்பொழுது இது என்ன? என்று கேட்டால் இது கலச நீர் என்பான். அந்த நதியிலே ஓடுகின்ற நீர்தான் கலசத்துள் வந்திருக்கிறது. ஆனால் நதியிலே இருக்கும் பொழுது அது கங்கை என்றும் காவிரி என்றும் பெயர் பெற்றது. இப்பொழுது அதே நீர் கலசத்திற்குள் வந்த பிறகு கலச நீர் என்றாகிவிட்டது. அந்த கலச நீரை நதியிலே மீண்டும் விட்டுவிட்டால் மீண்டும் நதி என்று பெயரை அடைந்து விடுகிறது. இப்படியாக இந்த ஆத்மா பரமாத்மா எனப்படும் நதியிலிருந்து பிரிக்கப்பட்டு இந்த உலகென்னும் கலசத்திற்குள் அடைக்கப்பட்டது. கலச நீர் ஜீவாத்மா என்று அழைக்கப்படுகிறது. மீண்டும் நதியோடு கலந்துவிட்டால் பரமாத்மா ஆகிவிடுகிறது. எனவே திடும்மென்று ஒரு நாள் ஒரு ஆணையோ பெண்ணையோ திடீரென்று இறைவன் படைத்து விடவில்லை. அதற்கு முன்பே தேவர்கள் யட்சர்கள் கந்தர்வர்கள் என்றெல்லாம் இருக்கிறது. அங்கே தவறு செய்பவர்களை அனுப்புவதற்கென்றே ஒரு சிறைக்கூடம் போல் ஒன்று செயல்பட்ட போது இந்த பூமி படைக்கப்பட்டு முதலில் மேலானவர்கள் செய்யக்கூடிய அறியாமையிலே அல்லது அகங்காரத்திலே செய்யக்கூடிய குற்றங்களுக்காக அவர்களை பதவியிறக்கம் செய்வதற்காக மனித குலம் படைக்கப்பட்டது. அந்த மனித குலம் மேலும் மேலும் விரிவடைந்து மீண்டும் மீண்டும் தவறுகள் மீண்டும் மீண்டும் பாவங்கள் என்று அடுக்கடுக்காக பிறவிகள் வந்து கொண்டே இருக்கிறது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.