சுலோகம் -8

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #8

துரோணாச்சாரியாரான தாங்களும் பாட்டனார் பீஷ்மரும் கர்ணனும் யுத்தங்களில் வெற்றி பெறுகின்ற கிருபாச்சாரியாரும் அவர் போலவே அஸ்வத்தாமனும் விகர்ணனும் சோமதத்தனின் மகன் பூரிச்ரவஸூம்.

இந்த சுலோகத்தில் முதல் கேள்வி: பாட்டனார் பீஷ்மர் இருக்கும் போது துரோணரை ஏன் துரியோதனன் முதலில் குறிப்பிட்டான்?

பீஷ்மர் அனைத்து ஆசாபாசங்களையும் விட்டவர் கர்மத்தை தீர்ப்பதற்காக மட்டுமே வாழ்ந்து கொண்டிருப்பவர். அவரை உயர்த்தி பெருமைப்படுத்தி பேசினாலும் தாழ்த்தி சிறுமைப்படுத்தி பேசினாலும் இரண்டையும் ஒன்று போலவே ஏற்றுக் கொள்பவர். அவரை பெருமைப்படுத்தி பேசுவதினால் துரியோதனனுக்கு அதிகப்படியான எந்த விதமான பலனும் ஏற்படப் போவதில்லை. துரோணரின் பெயரை முதலில் குறிப்பிடுவதினால் அவர் திருப்தி அடைந்து மேலும் உற்சாகத்தோடு யுத்தம் புரிவார் என்ற எண்ணத்தில் துரியோதனன் முதலில் துரோணரின் பெயரை குறிப்பிட்டான்.

இந்த சுலோகத்தில் 2 வது கேள்வி: துரோணர் என்பவர் யார்?

பரத்வாஜ மகரிஷியின் மகன் துரோணர். சரத்வான் மகரிஷியின் மகளும் கிருபாச்சாரியாரின் சகோதரியுமான கிருபியை மணந்து கொண்டார். இவரது மகன் அஸ்வத்தாமன். இவர் அக்னிவேச்ய மகரிஷியிடமும் பரசுராமரிடமும் அனைத்து வித அஸ்திர சாஸ்திர வித்தைகளையும் அதன் ரகசியங்களையும் பிரயோகப்படுத்தும் முறைகளையும் கற்றார். வேதத்தையும் அதன் அங்கங்களையும் முறையாக கற்றவர். பிரம்மாஸ்திரம் அக்னேய அஸ்திரத்தின் பிரயோகத்தை நன்கு அறிந்தவர். யுத்தக்களத்தில் இவர் தன்னுடைய பரிபூரண சக்தியோடு நின்றால் இவரை யாராலும் வெல்ல முடியாது. மகாபாரத யுத்தத்தில் பீஷ்மருக்கு பிறகு துரோணர் ஐந்து நாட்கள் சேனாதிபதியாக இருந்தார். தன்னுடைய மகன் அஸ்வத்தாமன் இறந்துவிட்டான் என்ற தவறான செய்தியை கேட்டதும் உலக வாழ்க்கையை வெறுத்து தன் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு தியானத்தில் அமர்ந்தார். அப்போது திருஷ்டத்யும்னன் தன்னுடைய வாளினால் துரோணரின் தலையை கொய்து தன் பிறப்பின் கடமையை செய்து முடித்தான். அவரது உடலில் இருந்து வந்த ஆத்ம ஒளியானது ஆகாயத்திற்கு சென்றதை அனைவரும் கண்டனர்.

இந்த சுலோகத்தில் 3 வது கேள்வி: பீஷ்மர் என்பவர் யார்?

சந்தனுவுக்கும் கங்கா தேவிக்கும் பிறந்தவர். இவரது இயற்பெயர் தேவவிரதர். தன் தந்தைக்கு சத்யவதியை திருமணம் செய்து கொடுப்பதற்காக அரச பதவியை தியாகம் செய்து பிரம்மச்சரிய விரதம் எடுத்துக் கொண்டார். இதனால் பீஷ்மர் என்று பெயர் பெற்றதோடு தன் தந்தையிடம் இருந்து இச்சாம்ருத்யு என்ற நினைக்கும் போது மட்டுமே மரணம் என்ற வரத்தையும் பெற்றார். அஸ்திர சாஸ்திரங்கள் அனைத்தையும் முழுவதும் அறிந்து அதில் தேர்ச்சியும் பெற்றவர். வீரம் தியாகம் சகிப்புத்தன்மை பொறுமை புலனடக்கம் தெளிவு வைராக்கியம் தாய் தந்தையிடம் பக்தி ஆகிய ஆகிய பல நல்ல பண்புகளைக் கொண்டவர். ஞானம் விஞ்ஞானத்தை நன்கு அறிந்து வைத்திருந்தார். கிருஷ்ணரின் ரூபத்தையும் தத்துவத்தையும் நன்கு அறிந்தவர். மகாபாரத யுத்தத்தில் இவருக்கு இணையாக ஒரு வீரரும் இல்லை. யுத்தத்திற்கு வரும் முன்பாக துரியோதனனிடம் பாண்டவர்கள் ஐவரையும் கொல்ல மாட்டேன். ஆனால் அவர்களின் படைகளில் ஒவ்வொரு நாளும் பதினாயிரம் வீரர்களை கொல்வேன் என்று பிரமாணம் செய்திருந்தார். கௌரவ படைகளுக்கு 10 நாட்கள் சேனாதிபதியாக இருந்து கோரமான யுத்தத்தை செய்தார். பாண்டவர்களின் வெற்றியை தடுக்கும் ஒரே ஒரு மாபெரும் சக்தியாக பீஷ்மர் இருந்தார். சிகண்டி பீஷ்மருடன் போர் புரிய அவர் முன்பு வந்து நிற்க சிகண்டி சிவனிடம் பெற்ற வரத்தின் விளைவாக பீஷ்மரால் ஆயுதம் எடுத்து போர் புரிய இயலாமல் போனது. அப்போது பீஷ்மரின் வில்லை அர்ஜுனன் உடைத்து தாக்க ஆரம்பித்தான். எதிரில் சிகண்டி ஆயுதம் தாங்கி நின்று கொண்டிருந்ததால் ஆயுதமின்றி பீஷ்மர் ஒடுங்கிப் போனார். அர்ஜூனனின் அம்பினால் வீழ்த்தப்பட்டு அம்புப் படுக்கையில் இருந்து அனைவருக்கும் ஞானோபதேசம் செய்தார். அவரால் அனைவருக்கும் சொல்லப்பட்டதே விஷ்ணு சஹஸ்ரநாமம். அவரது விருப்பப்படியே உத்தராயண காலம் வந்த பிறகு தன் உடலை விட்டார்.

இந்த சுலோகத்தில் 4 வது கேள்வி: கர்ணன் என்பவன் யார்?

குந்திதேவி துருவாச மகரிஷி அளித்த மந்திரத்தை சூரிய பகவானை நினைத்து விளையாட்டாக பிரயோகிக்க சூரிய பகவானின் அருளால் உடலோடு ஒட்டிய கவசத்துடனும் காதுகளில் குண்டலத்துடனும் பிறந்தவன் கர்ணன். அவனை குந்தி ஆற்றில் ஒரு பெட்டியில் வைத்து விட்டுவிட பெட்டி அதிரதன் என்ற ஒரு தேரோட்டியின் கையில் கிடைத்தது. குழந்தைக்கு கர்ணன் என்று பெயர் சூட்டி வளர்த்தார்கள். துரோணாச்சாரியாரிடமும் பரசுராமரிடமும் வில் அஸ்திர சாஸ்திர வித்தைகளை கற்றவன். துரியோதனின் நெருங்கிய நண்பனாக இருந்தவன். துரியோதனனின் ஆட்சிக்கு உட்பட்ட அங்க தேசத்திற்கு அரசனாக இருந்தவன். துரியோதனனின் நட்பிற்காக தன் உடல் பொருள் ஆவி அனைத்தும் துரியோதனுக்கே என்ற கொள்கையில் வாழ்ந்தவன். தன்னுடைய பிறவி ரகசியத்தை குந்திதேவி கர்ணனிடம் சொன்ன பிறகும் துரியோதனனை விட்டு பிரிந்து பாண்டவர்களுடன் சேர மறுத்து தான் கொண்ட கொள்கையுடன் வாழ்ந்தவன். யார் எதைக் கேட்டாலும் தன்னிடம் இருப்பதை தானமாக கொடுத்து விடும் தர்ம குணம் நிறைந்தவன். இந்திரன் உடலோடு ஒட்டிய கவசத்தையும் குண்டலத்தையும் தானமாக கேட்டதும் அக்கணமே யோசிக்காமல் தானமாக கொடுத்தவன். மகாபாரத யுத்தத்தில் பீஷ்மர் துரோணருக்கு பிறகு இரண்டு நாட்கள் சேனாதிபதியாக இருந்தான். மகாபாரத யுத்தத்தில் கிருஷ்ணரின் வழிகாட்டுதலோடு அர்ஜூனன் கையால் இறந்தான்.

இந்த சுலோகத்தில் 5 வது கேள்வி: கிருபாச்சாரியார் என்பவர் யார்?

கௌதம வம்சத்தில் சரத்வான் என்ற மகரிஷியின் மகன் கிருபாச்சாரியார். இவரது சகோதரியின் பெயர் கிருபி. இவர்கள் இருவரையும் சந்தனு மன்னன் வளரத்தார். வில்வித்தையில் அனுபவம் உள்ளவர். வேதசாஸ்திரங்கள் அறிந்தவர். எதிரிகளை வெற்றி கொள்வதில் நிபுணராக இருந்தார். குரு வம்சத்திற்கு துரோணர் குருவாக வருவதற்கு முன்பாக பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் யாதவர்களுக்கும் குருவாக இருந்து வில்வித்தைகளை கற்றுக் கொடுத்தார். மகாபாரத யுத்தம் முடிந்த பிறகு இவர் பாண்டவர்களின் வாரிசான பரீட்சித்திற்கு வில் வித்தைகளை கற்றுக் கொடுத்தார்.

இந்த சுலோகத்தில் 6 வது கேள்வி: அஸ்வத்தாமன் என்பவன் யார்?

துரோணரின் மகன் அஸ்வத்தாமன். திருமணம் முடிந்து வெகுகாலமாகியும் புத்திர பாக்கியம் இல்லாத துரோணர் சிவனை நோக்கி கடும் தவம் புரிந்தார். அவருடைய தவத்தால் மகிழ்ந்த சிவன் அவரிடம் என்ன வரம் வேண்டும் என்று கேட்க சிரஞ்சீவியாக அமர வாழ்வு பெற்ற ஒரு புதல்வன் எனக்கு மகனாக பிறக்க வேண்டும் என்று வரம் கேட்கிறார். அவரின் வேண்டுகோளின்படி மனித குலத்தின் கடைசி உயிர் இருக்கும் வரை சாகா வரம் உள்ள குழந்தை பிறக்கும் என்று சிவன் வரம் கொடுத்தார். அதன் பிறகு துரோணருக்கு குழந்தை பிறந்தது. குழந்தையின் நெற்றியில் பிருங்கி என்று அழைக்கப்படும் மணி இருந்தது. இந்த மணி இருக்கும் வரை தேவர் கந்தர்வர் மனிதர் அரக்கர் ரிஷிகள் யட்சர்கள் மிருகங்கள் என எந்த உயிரினமோ அல்லது எந்த விதமான திவ்ய அஸ்திரமோ அவனை கொல்ல முடியாது. பிறக்கும் போதே குதிரையைப் போல் கனைக்கும் திறன் பெற்றதால் அஸ்வத்தாமன் என்று பெயர் சூட்டப்படுகிறான். அவனது தாத்தா மகரிஷி பரத்வாஜரிடம் வேதங்களையும் கிருபாச்சாரியாரிடம் போரின் வியூக நுணுக்கங்களையும் பரசுராமரிடம் மொத்த ஆயுத அறிவையும் கற்றுக் கொண்டவன். கிருஷ்ணரிடம் இருந்து நாராயண அஸ்திர மந்திரத்தை பெற்றவன். தன் தந்தை துரோணாச்சாரியாரிடம் இருந்து பிரம்மாஸ்திர மந்திரத்தை பெற்றவன். காளிதேவியிடம் இருந்து மூவுலகையும் அழிக்கும் பாசுபதாஸ்திர மந்திரத்தை பெற்றவன். துவாபர யுகத்தில் பிரம்மாஸ்த்திரம் நாராயண அஸ்திரம் பாசுபதாஸ்திரம் என்ற இந்த மூன்றையும் கற்ற ஒரே வீரன் அஸ்வத்தாமன் மட்டுமே. மற்ற அஸ்திரங்களை விட இந்த மூன்று அஸ்திரங்களும் பல மடங்கு சக்தி வாய்ந்தது. தன்னை விட பலம் அதிகம் கொண்ட எதிரியின் மீது மட்டுமே இதை பயன்படுத்த வேண்டும். தர்மத்தின் பக்கம் நிற்பவர்களால் மட்டுமே இந்த அஸ்திரங்களின் கட்டிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள முடியும்.

யுத்தத்தின் இறுதியில் அஸ்வத்தாமன் பாண்டவர்களின் வம்சம் அழிந்து போக வேண்டும் என்று எண்ணி பிரமாஸ்திரத்தை செலுத்தினான். பதிலுக்கு அர்ஜூனனும் பிரமாஸ்திரத்தை செலுத்தினான். இரண்டும் மோதுமானால் உலகம் அழியும் என அறிந்த வியாசரும் நாரதரும் உலகை காக்க நினைத்தனர். அர்ஜூனனிடம் பிரம்மாஸ்திரத்தை திரும்ப எடுத்துக்கொள்ளுமாறு கட்டளையிட்டனர். அவர்கள் கட்டளைக்கு பணிந்த அர்ஜூனன் பிரமாஸ்திரத்தை திரும்ப அழைத்துக் கொண்டான். அஸ்வத்தாமனுக்கு பிரமாஸ்திரத்தை திரும்ப அழைத்து கொள்ளும் அறிவு இல்லை. பிரமாஸ்திரம் ஏதேனும் ஒரு இலக்கை அழித்தே தீரும். அதனால் அஸ்வத்தாமன் பாண்டவர் மனைவியர்களின் கர்ப்பத்தில் இருந்த சிசுக்கள் அனைத்தும் அழியட்டும் என அந்த அஸ்திரத்திற்கு இலக்கு நிர்ணயித்தான். ஆனால் கிருஷ்ணரின் அருளால் உத்திரையின் கரு மட்டும் காப்பாற்றப்பட்டது. சிசுக்களை அழித்த அஸ்வத்தாமனை கிருஷ்ணர் பழித்தார். நெற்றியில் இருந்த பிருங்கி மணியை வியாசர் தருமாறு கூற அவ்வாறே அளித்தான். அறிவிலியே நீ தொழுநோயால் பீடிக்கப்பட்டு காட்டில் தன்னந்தனியாய் பல ஆயிரம் ஆண்டுகள் விலங்காகவும் மானுடனாகவும் தவிப்பாயாக என்று அஸ்வத்தாமனை சபித்தார் வியாசர். (அஸ்வத்தாமன் வரலாற்றை மேலும் தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் தெரிந்து கொள்ளலாம்.

துரோணரின் மகன் அஸ்வத்தாமன்

இந்த சுலோகத்தில் 7 வது கேள்வி: விகர்ணன் என்பவன் யார்?

திருதராஷ்டிரனின் நூறு மகன்களில் ஒருவன் விகர்ணன். துரியோதனனின் சகோதரன். மகாரதனாக இருப்பவன் மகாபலசாலி தர்மாத்மா. திரௌபதியை கௌரவர்கள் தங்களின் அரசவையில் கொடுமைப்படுத்திய போது நான் தோற்று விட்டேனா இல்லையா என்று திரௌபதி கேள்வி எழுப்பிய போது அனைவரும் அவளின் கேள்விக்கு பதில் சொல்லாமல் மௌனமாக இருந்தார்கள். விதுரருடன் விகர்ணன் மட்டுமே எழுந்து பேசினான். திரௌபதியின் கேள்விக்கு பதில் சொல்லாமல் மௌனமாக இருப்பது பெரிய அநியாயம் என்று தன் பேச்சினால் நியாயத்தையும் தர்மத்தையும் அனைவருக்கும் புரியும்படி தெளிவாக எடுத்துக் கூறினான். விகர்ணன் மிகவும் நல்லவன் என்று கிருஷ்ணரால் சொல்லப்பட்டவன். மகாபரத யுத்தத்தில் பீமனின் கையால் விகர்ணன் இறந்தான்.

இந்த சுலோகத்தில் 8 வது கேள்வி: பூரிச்ரவஸ் என்பவர் யார்?

சந்தனு மன்னனின் மூத்த சகோரதர் பாஹ்லீகரின் மகன் சோமதத்தனின் மகன் பூரிச்ரவஸ். மிகுந்த தர்மசீலன் யுத்தக் கலையில் தேர்ச்சி பெற்றவன். மகாரதனாக இருப்பவன். அதிகமான தட்சணைகள் கொடுத்துப் பல யாகங்கள் செய்திருக்கிறார். மகாபாரத யுத்தத்தில் சாத்யகியின் கையால் இறந்தார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.