சுலோகம் -11

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #11

அனைத்து போர் முனைகளிலும் நீங்கள் அனைவரும் உங்களுடைய இடங்களில் இருந்து நான்கு பக்கங்களிலும் சுற்றி நின்று பீஷ்மருக்கு பாதுகாப்பு அளியுங்கள்.

இந்த சுலோகத்தில் ஒரு கேள்வி: பீஷ்மர் தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்வதில் திறமையுள்ளவர் இருப்பினும் அனைவரும் அவரை நான்கு பக்கமும் சுற்றி நின்று பாதுகாக்கும் படி தூரியோதனன் ஏன் கூறினான்?

பீஷ்மர் பெண்களை எதிர்த்து ஆயுதம் எடுத்து போர் புரியமாட்டேன் என்று சத்தியம் செய்திருந்தார். பாண்டவர்களின் படையில் துருபதனின் மகனான சிகண்டி இருந்தான். இவன் முதலில் பெண்ணாக இருந்து பின்பு ஆணாக மாறியவன். அவனே முன் பிறவியில் அம்பாவாக இருந்தவள். இவள் காசி அரசனின் மூத்த மகளாவாள். பீஷ்மரால் சூழ்நிலை காரணமாக துன்பத்திற்கு ஆளாகி அவரைப் பழி வாங்க விரும்புகிறாள். இதனால் கடும் தவம் இருந்து பீஷ்மர் இறக்க தான் காரணமாக இருக்க வேண்டும் என வரம் பெற்றாள். அவளே மறுபிறவியில் துருபதனின் மகளாக சிகண்டினி என்ற பெயருடன் பிறக்கிறாள். அவள் பிறக்கும் போது அவளை ஒரு மகன் போல வளர்க்க வேண்டும் என மன்னருக்கு அசரீரி கேட்கிறது. அதன்படியே போர் முறைகள் கற்றுக் கொடுக்கப்பட்டு ஒரு இளவரசனைப் போல் வளர்க்கப்படுகின்றாள். ஒரு யட்சன் அவளை பாலின மாற்றம் செய்து ஆணாக மாற்றுகிறான். அதனால் சிகண்டினி சிகண்டி என்ற பெயர் பெற்று ஆணாக மாறினான். யுத்தம் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே சிகண்டி பற்றி அறிந்த பீஷ்மர் சிகண்டி ஒரு ஆணாக இருந்தாலும் பிறப்பால் ஒரு பெண் என்பதால் அவனை ஒரு பெண்ணாகவே நான் மதிக்கிறேன். ஆகையால் யுத்த களத்தில் சிகண்டி என் எதிரில் வந்தால் அவன் மீது நான் ஆயுதம் ஏந்தி யுத்தம் செய்ய மாட்டேன் மேலும் நான் இறப்பதற்கு அவனே காரணமாக இருக்க வேண்டும் என்று வரம் வாங்கி இருப்பதால் என் முன்னால் அவன் வந்தால் என்னுடைய ஆயுதங்கள் அனைத்தும் செயல் இழந்து போகும் என்று சொல்லி இருந்தார். இதன் காரணமாக தன் படையில் உள்ள அனைத்து மகாரதர்களிடமும் நீங்கள் யுத்த களத்தில் எந்த முனையில் இருந்து யுத்தம் செய்தாலும் அங்கேயே திடமாக இருந்து யுத்தம் செய்யுங்கள். நீங்கள் இருக்கும் இடத்தை கடந்து சிகண்டி பீஷ்மரின் அருகில் செல்ல முயன்றால் அவனை அங்கேயே தடுத்து நிறுத்தி விரட்டி அடியுங்கள். எக்காரணத்தைக் கொண்டும் சிகண்டியை பீஷ்மரின் அருகில் விட்டு விடாதீர்கள் என்று துரியோதனன் என்றான். சிகண்டியிடம் இருந்து பீஷ்மரை நாம் காப்பாற்றி விட்டால் பீஷ்மர் நமக்கு எளிதாக வெற்றி தேடிக் கொடுத்து விடுவார் என்று துரியோதனன் எண்ணியிருந்தான். அதன் காரணமாகவே பீஷ்மரை அனைவரும் சேர்ந்து பாதுகாப்பு கொடுங்கள் என்று கேட்டுக் கொண்டான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.