சுலோகம் -12

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #12

கீர்த்தி மிக்கவரும் கௌரவர்களில் முதியவருமாகிய பாட்டனார் பீஷ்மர் துரியோதனனுக்கு மகிழ்ச்சியை உண்டு பண்ணும் வகையில் சிங்கத்தின் சத்தத்தைப் போல் கர்ஜனை செய்து சங்கை முழங்கினார்.

இந்த சுலோகத்தில் முதல் கேள்வி: பீஷ்மர் கீர்த்திமிக்கவர் என்றும் முதியவர் என்றும் ஏன் அழைக்கப்படுகிறார்?

தனது பிரம்மச்சரிய விரதத்தாலும் வலிமையினாலும் பீஷ்மர் மிகவும் புகழ் பெற்றார் ஆகையால் கீர்த்திமிக்கவர் என்றும் கௌரவர்களில் பாஹ்லீகரைத் தவிர மற்றவர்கள் அனைவரைக் காட்டிலும் வயதானவர் ஆகையால் முதியவர் என்று அழைக்கப்படுகிறார்.

இந்த சுலோகத்தில் 2 வது கேள்வி: பீஷ்மர் சிங்கத்தைப் போல கர்ஜனை செய்து துரியோதனனுக்கு ஏன் மகிழ்ச்சியை ஏற்படுத்தினார்?

பீஷ்மர் பாட்டனார் என்ற முறையில் பாண்டவர்கள் கௌரவர்கள் இருதரப்பினருக்கும் ஒரே விதமான உறவுமுறை கொண்டவர். இருதரப்பினர் மீதும் ஒரே விதமான எண்ணங்களை கொண்டவர். ஆனால் யுத்த களத்தில் துரியோதனன் பாண்டவர்களின் படைகளைக் கண்டு திகைத்து கவலைப்படுவதையும் அதனை மறைக்க துரோணரிடம் சென்று தன் படைகளில் உள்ளவர்களைப் பற்றி பெருமை பேசுவதையும் படைகளில் உள்ள வீரர்களை உற்சாகப்படுத்துவதையும் கண்டார். கௌரவர்களின் பிரதான தளபதி என்ற முறையில் துரியோதனனை திருப்திப்படுத்த எண்ணி சிங்கத்தின் கர்ஜனையைப் போல கர்ஜனை செய்து துரியோதனுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினார்.

இந்த சுலோகத்தில் 3 வது கேள்வி: பீஷ்மர் சங்கை ஏன் முழங்கினார்?

கெளரவர்கள் யுத்தத்திற்கு தயாராகி விட்டதை அனைவருக்கும் தெரிவிக்கும் வகையில் சங்கை முழங்கினார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.