ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 428

கேள்வி: பெண் சித்தர்கள் குறைவாக இருப்பதன் காரணம் என்ன? குறிப்பாக ஆழ்வார்கள் நாயன்மார்களில் கூட பெண் சித்தர்கள் அதிகமாக இல்லையே?

இறைவனின் கருணையாலே கூறுகிறோம். பல பல பல லகரம் கோடி ஆண் சித்தர்களுக்கு ஒரேயொரு பெண் சித்தரே சமம். அப்படி எடுத்துக் கொள்ளலாமே? ஏன் எண்ணிக்கையில் அதிகம் குறைவு என பார்க்க வேண்டும்? ஏனென்றால் எல்லா ஆண் சித்தர்களையும் பெற்றுத் தருவது பெண்மைதானே? எனவே எல்லா நிலைகளிலும் இங்கே பெண் சித்தர்கள்தான் அதிகம் இருக்கிறார்கள். ஆனால் மனித பார்வையில் குறைவு போல் தோன்றுகிறது. வேறு வகையில் கூறப்போனால் சித்தர்களை உருவாக்குவதே பெண்கள்தான் அதாவது சக்திதான். எனவே இன்னொரு வகையில் கூறப்போனால் ஒரு துலாக்கோலிலே ஒரு பக்கம் அதிக அளவு பஞ்சினை பருத்தியினை வைப்போம். இன்னொரு பக்கம் நிறை கல்லை வைப்போம். எது அதிகமாக இருக்கும்? அங்கே பருத்தி எனப்படும் பஞ்சு மூட்டை மூட்டையாக இருக்கும். இந்த அளவு மூட்டைக்கு அதே அளவா எடை கல்லை வைப்பார்கள்? ஆனால் எடை கல் அளவில் சிறியதாக இருந்தாலும் அந்த பஞ்சு மூட்டையின் அளவை அது தீர்மானிக்கிறது அல்லவா? அதைப்போல ஒரேயொரு ஆண்டாள் போதும் அத்தனை ஆண் சித்தர்களையும் சமமாக கருதுவதற்கு. அதைப்போல் ஒரேயொரு ஔவையார் போதும் அனைத்து ஆண் சித்தர்களுக்கும் சமமாக. எனவே பெண் சித்தர்கள் இல்லையென்று கூறவே வேண்டாம்.

பல குடும்பங்களில் நடக்கின்ற கொடுமைகளை பார்க்கும் பொழுது இல்லற பெண் சித்தர்களே அதிகமாக இருக்கிறார்கள். ஏதோ சித்தர்கள் என்றால் சித்து வேலையும் அதிசயங்களையும் செய்தால்தான் சித்தர்கள் என்பது அல்ல. தன் குடும்பத்திற்காக தன்னை சேர்ந்தவர்களுக்காக ஏன்? பொது நலத்திற்காக அனைத்தையும் சகித்துக் கொண்டு யார் இருந்தாலும் சித்தர்களே. எனவே அப்படி நயத்தகு நாகரீகமாக நல்ல எண்ணங்களோடு வாழ்கின்ற பல பெண் சித்தர்கள் இன்றும் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அது மட்டுமல்ல ஆண் சித்தர்களில் மனிதர்கள் அறிந்த சித்தர்கள் இந்த அளவு. அறியாத சித்தர்கள் கோடி கோடி என்பதை மனிதர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.