ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 396

கேள்வி: ஒரு குடும்பத்தில் தலைப் பிள்ளைக்கு பாவங்களும் மற்ற பிள்ளைகளுக்கு சொத்தும் சேரும் என்று கூறப்படுவது பற்றி:

இதுபோல் கருத்தை யாங்கள் ஏற்கவில்லையப்பா. எல்லா குழந்தைகளுக்கும் அவர்கள் அவர்கள் செய்த பாவங்களும் அவர்கள் பிறந்த குடும்பத்தின் வம்சாவழி பாவங்களும் கட்டாயம் போய் சேரத்தான் செய்யும். ஒரு குடும்பத்திலே பிறக்கும் குழந்தையின் ஆத்மா பல பிறவிகளில் சேர்த்த பாவங்கள் அதிகமாகவும் புண்ணியம் குறைவாக இருப்பதாகக் கொள்வோம். அந்தக் குடும்பத்தின் பாவங்களும் அந்தக் குழந்தைக்கு சேரும் பொழுது அது அதிகமாக துன்பமடைகிறது. அதே குடும்பத்தில் வேறு சில காரணங்களுக்காக இன்னொரு குழந்தை பிறக்கிறது. அது பூர்வ ஜென்மத்தில் செய்த புண்ணியம் அதிகமாகவும் பாவங்கள் குறைவாகவும் இருக்கின்ற தருணத்திலே அந்த பூர்வ ஜென்ம புண்ணியங்களின் விளைவாக அந்தக் குடும்பத்தின் சாபங்களும் தோஷங்களும் அந்தக் குழந்தையை குறைவாகவே தாக்குகிறது அவ்வளவே.

இறைவனின் கருணையைக் கொண்டு இதுபோல் கூறுவது யாதென்றால் நல்விதமாய் எல்லா ஆலயங்களுக்கும் எம் சேய்கள் சென்று இயன்ற வழிபாடுகள் செய்க. இல்லத்திலும் வழிபாடு செய்க. இதுபோல் குறிப்பிட்ட ஆலயத்தில் குறிப்பிட்ட பெருமை இருக்கிறது என்று மனிதன் எழுதி விட்டாலே அங்கு கூட்டம் அதிகமாகி விடுகிறது. யாங்கள் கூறிவிட்டால் இன்னும் அதிகமாக செல்வார்கள். எனவே எம்மைப் பொருத்தவரை எம் வழியில் வருகின்ற சேய்களுக்கு எல்லா ஆலயங்களும் ஒன்றுதான். அதுபோல் இன்னவன் குறிப்பிட்ட ஆலயமும் சிறப்புதான். குறிப்பாக கடுமையான மன உளைச்சலில் இருக்கின்ற பெண்கள் சென்று வழிபட்டு அவர்கள் கர்ம வினையை தணித்துக் கொள்ளலாம். அதற்காக ஆண்கள் செல்லக் கூடாது என்று பொருளல்ல. ஆண்களின் பாவகர்மாவும் குறைகின்ற இடம். குறிப்பாக இன்னவன் கேட்டதால் யாங்கள் கூறினோம். இதோடு மட்டுமல்லாமல் பாழ்பட்ட ஆலயங்களிலே இறைவன் அருள் இல்லையென்று தவறான கருத்து இருக்கிறது. ஆத்மார்த்தமான பூஜைகள் செய்து எந்த இடத்தில் அழைத்தாலும் இறைவன் அருள் உண்டு. எம் வழியில் வருகின்ற சேய்கள் பலரும் சென்று வணங்கக் கூடிய ஆலயத்தை நோக்கி செல்வதைவிட (அங்கும் செல்லட்டும்) பலரும் செல்லாத ஆலயமாக தேர்ந்து எடுத்து சென்று அந்த ஆலயத்தை நன்றாக பராமரிக்க உதவுவது ஏற்புடையது ஆகும்.

இதுபோல் வழிமுறையை தொடர்ந்து பின்பற்றி இறையருளை பெறுவதோடு தொடர்ந்து இறையருளை பெறுவதற்குண்டான சத்தியத்தை கடைபிடிப்பதும் தர்மத்தை கடைபிடிப்பதும் எத்தனை இன்னல்கள் துன்பங்கள் துயரங்கள் வந்தாலும் மன உறுதியோடு அதனை எதிர்கொண்டு தொடர்ந்து எம் வழியில் எம் பார்வையில் நல்ல சேய்களாக வாழ முயற்சி செய்ய இறைவன் அருளால் நல்லாசிகள் கூறுகிறோம். மீண்டும் இறைவன் அருளால் இதுபோல் பொது வாக்கினை கூறும் வரை அனைவரும் இறைவன் வழியிலே மனம் தடுமாறாது வர மீண்டும் மீண்டும் நல்லாசிகளைக் கூறுகிறோம். ஆசிகள் ஆசிகள் பூரண ஆசிகள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.