ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 250

கேள்வி: கொங்கண சித்தரின் ஜீவ சமாதி திருப்பதியில் எந்த இடத்தில் அமைந்திருக்கிறது?

ஜீவ அருட் பீடங்கள் என்று நாங்கள் கூறுகின்ற முறை வேறு. மனிதர்கள் அறிந்த முறை வேறு. பெரும்பாலும் புராண கால ரிஷிகளுக்கெல்லாம் இந்த ஜீவ அருட் பீடங்கள் அதாவது மனிதர்களால் கூறப்படும் ஜீவ சமாதிகள் என்றுமே கிடையாது. ஆண் பெண் கலப்பிலே யோனிப் பிறப்பாக வந்தவர்களில் சிலருக்கு மட்டும்தான் இந்த ஜீவ சமாதி என்பது அதுவும் அந்தந்த சித்தன் நினைத்தால் இறைவன் அருளினால் கிடைக்கிறது. மற்றவை எல்லாம் அந்தந்த சித்தர்கள் அங்கு வந்து சிலகாலம் தங்கி வழிபாடு நடத்திய ஆலயங்கள் என்ற அளவிலே பொருள் கொள்ள வேண்டும். எனவே இந்தக் கருத்தை அவரவர்கள் சொந்தக் கருத்தோடு சேர்த்து வைத்து குழப்பம் அடையாமல் அப்படி இந்த இடத்தில்தான் இருக்கிறார்கள் என்று கூறினால் தாராளமாக வணங்கி விட்டு செல்லலாம். ஆனால் உண்மை என்னவென்றால் இதுதான். முன்னர் முன்னர் புராண கால ரிஷிகள் யாருமே ஜீவ சமாதி என்பது அடைந்தது கிடையாது. அவர்கள் நித்திய சொரூபிகள். இறை போல் அன்றும் இருந்தார்கள். இன்றும் இருக்கிறார்கள் இனியும் இருப்பார்கள்.

கேள்வி: ஒரு புறம் பசு மாடுகளை காப்பாற்ற வேண்டும் என்று சொல்லப்பட்டாலும் மறுபுறம் கொலைக் களத்திற்கு பசுமாடுகளை அனுப்புவதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதை எப்படி தடுப்பது?

இந்த உலகம் தோன்றிய நாள் முதல் நன்மையும் தீமையும் கலந்தேதான் உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. எனவே இப்படி தீமையை செய்கின்ற மனிதன் எப்படி யார் சொன்னாலும் கேட்காமல் தீமையை செய்கிறானோ அதைப் போல நன்மையை செய்ய வேண்டும் என்று முடிவெடுத்த மனிதனும் யார் சொன்னாலும் அந்த நன்மையை விட்டுவிடாமல் எத்தனை சோதனைகள் வந்தாலும் தொடர்ந்து செய்ய வேண்டும். ஆனால் நடை முறையில் என்ன நடக்கிறது? தீமை செய்கின்ற எத்தனை எதிர்ப்பு வந்தாலும் அது கண்டு அஞ்சாமல் தொடர்ந்து தீமையை செய்து கொண்டே இருக்கிறான். ஆனால் நன்மையை எண்ணி இறங்குகின்ற மனிதன் சிறு எதிர்ப்பு வந்தாலும் சோர்ந்து விடுகிறான். எனவே இது போன்ற தீமைகள் தொடர்ந்து இருந்து கொண்டேதான் இருக்கும். கூட்டு வழிபாடும் தொடர்ந்து அவரவர்களால் முடிந்த நன்மையான தர்ம காரியங்களை செய்வதன் மூலம்தான் இதனை தடுக்க அல்லது குறைக்க இயலும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.