46. பன்றிக்குட்டிகளை மந்திரிகள் ஆகிய படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் பன்றிக் குட்டிகளை மந்திரிகள் ஆகிய படலம் நாற்பத்தி ஆறாவது படலமாகும்.

சொக்கநாதரிடம் பால் அருந்திய பன்றிக் குட்டிகள் பன்றி முகமும் மனித உடலும் கொண்ட பன்றி குமாரர்களாக மாறினர். அவர்கள் பல கலைகளிலும் வல்லவர்களாக பன்றி மலையில் வசித்து வந்தனர். அப்போது ஒருநாள் மீனாட்சி அம்மன் சொக்கநாதரிடம் எம்பெருமானே இழிந்த பிறவியான பன்றிக் குட்டிகளுக்கு தாங்கள் பாலூட்டி அவைகளின் அறியாமையை போக்கியது ஏன்? என்று கேட்டார். அதற்கு சொக்கநாதர் உலகில் உள்ள சகல உயிர்களும் எமக்கு ஒரே தன்மையை உடையவையே. உலக உயிர்களிடம் எந்த பேதமையும் எமக்கு கிடையாது. ஆகையால்தான் எம்மை சகல ஜீவ தயாபரன் (எல்லா உயிர்களுக்கும் ஒரே தன்மையை அருளுபவன்) என்று அழைக்கின்றனர். ஆதரவின்றி தவித்த பன்றிக் குட்டிகளுக்கு பாலூட்டி அவற்றின் அறியாமையை நீக்கினோம். இனி அப்பன்றி குமாரர்களை பாண்டியனுக்கு மந்திரியாக்கி இறுதியில் அவர்களை சிவகணங்களாக்குவோம் என்று திருவாய் மலர்ந்து அருளினார்.

இராசராச பாண்டியனின் கனவில் தோன்றிய சொக்கநாதர் அரசனே பன்றி மலையில் அறிவில் சிறந்த பன்னிரெண்டு பன்றி குமாரர்கள் இருக்கிறார்கள். நீ அவர்களை மந்திரியாக்கி நன்மைகளைப் பெறுவாயாக என்று கூறினார். சொக்கநாதரின் ஆணையைக் கேட்ட இராசராசபாண்டியன் விழித்து எழுந்தான். காலையில் தன்னுடைய ஆட்களை பன்றி மலைக்கு அனுப்பி பன்றி குமாரர்களை அழைத்து வரச்செய்தான். பன்றி குமாரர்களுக்கும் அரசனின் அழைப்பினை ஏற்று மதுரை வந்தனர். பின்னர் அவர்கள் மதுரையை அடையும் போது அவர்களை எதிர்கொண்டு அழைத்து பரிசுகள் பல அளித்து அவர்களை மந்திரிகளாக ஆக்கிக் கொண்டான். பழைய அமைச்சர்களின் பெண்களை அவர்களுக்கு திருமணம் செய்வித்தான். அப்பன்றி குமாரர்களும் ஒற்றுமையுடன் வாழ்ந்து பாண்டியனுக்கு நல்லோசனைகள் கூறி நல்ல நெறிகளைச் செயல்படுத்தினர். சிலகாலம் சென்றபின் சிவலோகத்தை அடைந்து சிவகணங்களாக மாறும் பேறு பெற்றனர். இராசராச பாண்டியனும் தேவலோகம் அடைந்தான்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

இறைவன் முன் அனைத்து உயிர்களும் சமம். தகுதி பெறும் உயிர்களுக்கு உலக வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் கொடுத்து இறுதியில் அருளையும் கொடுத்து தன்னிடம் அழைத்துக் கொள்கிறார் என்பதே இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.