16. வேதத்திற்கு பொருள் அருளிச் செய்த படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் வேதத்திற்கு பொருள் அருளிச் செய்த படலம் நூலின் பதினாறாவது படலமாகும்.

ஒரு சமயம் ஊழிக் காலம் உண்டானது. அதனால் பதினான்கு உலகங்களும் அடங்கின. மறைகள் ஒடுங்கின. பின்னர் சிவந்த கதிர்களை உடைய சூரியனின் முன்னால் மலரும் தாமரை மலர் போல சிவபெருமானின் முன் மீண்டும் அனைத்தும் தோன்றின. அப்போது இறைவனின் திருவாக்கில் இருந்து ஓம் என்னும் பிரணவம் தோன்றியது. அப்பிரணவத்திலிருந்து வேதங்கள் தோன்றின. நைமிசாரணியத்தில் இருந்த கண்ணுவர் கருக்கர் உள்ளிட்ட முனிவர்கள் வேதங்களை பயின்றனர். ஆனாலும் அவ்வேதங்களின் உட்பொருளை உணராது மனம் கலங்கி முகம் வாடி இருந்தனர். அப்போது அங்கே ஆணவ மலத்தை வென்ற அரபத்தர் என்ற முனிவர் வந்தார். முகம் வாடியிருந்த முனிவர்களை நோக்கிய அரபத்தர் நீங்கள் பாசம் நீக்கப்பட்டு விருப்பு வெறுப்பற்ற தன்மையை உடையவராய் இருந்தும் மனம் வேறுபட்டு முகம் வாடியிருக்க காரணம் என்ன? என்று கேட்டார். அதற்கு அம்முனிவர்கள் ஐயனே மும்மலங்களையும் இயல்பாகவே நீக்கக் கூடிய இறைவன் அருளிய வேதத்தின் பொருளை அறிய இயலாமல் அஞ்ஞான மனத்தினை உடையவர்களாய் இருக்கின்றோம். ஆகையால் நாங்கள் தெளிவடைய ஆலோசனை சொல்லுங்கள் என்று கேட்டார்கள். அதற்கு அரபத்தர் வேதத்தினை அருளிய சிவபெருமானால் மட்டுமே அதற்குரிய விளக்கத்தினைத் தெரிவிக்க இயலும். ஆகையால் நீங்கள் சிவபெருமானை நோக்கி தவம் இருந்து வேதத்தின் பொருளினை அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் தவம் இயற்றுவதற்கு சொக்கநாதர் குடிகொண்டிருக்கும் மதுரை சிறந்த இடம் என்று முனிவர்களுக்கு வழிகாட்டினார்.

அரபத்தரின் வழிகாட்டுதலின்படி கண்ணுவர் உள்ளிட்டோர் வேதத்தின் பொருளினை அறியும் பொருட்டு மதுரை சென்று அடைந்தனர். பொற்றாமரைக் குளத்தில் நீராடி முறைப்படி சொக்கநாதரையும் மீனாட்சி அம்மனையும் வழிபட்டார்கள். பின்னர் கல்லா மரத்தின் (கல் ஆகி விட்ட ஆலமரம்) கீழ் குருவாகிய தென்முகக் கடவுளை வணங்கி தங்களுக்கு குருவாகி வேதத்தின் பொருளினை எடுத்துரைக்குமாறு வேண்டினர். இவ்வாறு அவர்கள் ஒரு வருடக் காலம் முறைப்படி வழிபட்டனர். ஒருநாள் இறைவன் பதினாறு வயது நிரம்பிய சர்வ லட்சணங்கள் பொருந்திய வேதிய இளைஞனாக முனிவர்களின் முன்னர் தோன்றினார்.

முனிவர்களிடம் குற்றமற்ற தவத்தினை உடையவர்களே உங்கள் விருப்பம் என்ன? என்று இறைவனார் கேட்டார். அதற்கு அம்முனிவர்கள் ஒப்பற்ற சிறப்பினை உடைய வேதங்களின் பொருளினை அருள வேண்டும் என்று விண்ணபித்துக் கேட்டுக் கொண்டனர். அதற்கு இறைவனார் பதில் சொல்ல ஆரம்பித்தார். லிங்கத்தின் முன் சென்று வேதங்களின் பொருளினை அறிதலே இம்மையின் போக பேற்றிற்கும் பாச பந்தத்தை அறுக்கும் வீடுபேற்றிற்கும் கருவி ஆகும். இச்சிவலிங்கமும் வேதமும் ஒன்றே. இந்த சிவலிங்கபூஜை செய்வதால் வேதங்களில் கூறப்பட்ட கருமங்கள் எல்லாம் செய்த பலன் கிடைக்கும். வேதாந்த அறிவால் பெறப்படும் பயனை இந்த சொக்கலிங்கத்தை வணங்கி வழிபடுதலால் அடையலாம். ஆதியாகி அந்தமாகி என்றும் குன்றாத ஒளிவடிவாய் இருப்பவர் இச்சொக்கலிங்கம். ஜோதிர்மயமான இந்த லிங்கத்திற்கு முதலும் முடிவும் கிடையாது. அதற்கு பிரம்மம் என்று பெயர்.  படைத்தல் காத்தல் அழித்தல் என்ற முத்தொழிலுக்காக பிரம்மம் மூன்றாகப் பிரிந்து பிரம்மன் விஷ்ணு ருத்திரன் எனப் பெயர் பெற்றது.

இறைவனின் திருவாக்கிலிருந்து உருவாகிய ஓம் என்னும் பிரணவத்திலிருந்து விரும்பிய பொருளை அடைவதற்குரிய காயத்ரி தோன்றியது. இந்த காயத்ரியானது சொக்கலிங்கரின் திருவருளால் நான்கு வேதங்களைத் தந்தன. பின்னர் இறையருளால் நான்கு வேதங்களும் அளவற்றனவாய் விரிந்தன. சொக்கநாதரின் நடுமுகத்தில் இருந்து சிவாகம நூல் தோன்றியது. தற்புருட முகத்திலிருந்து இருபத்தொரு சாகைகளோடு இருக்கு வேதம் தோன்றியது. அகோர முகத்திலிருந்து நூறு சாகைகளோடு யசுர் வேதம் தோன்றியது. வாமதேவ முகத்தில் ஆயிரம் சாகைகளோடு சாமவேதம் தோன்றியது. சத்தியோசாத முகத்தில் நாட்டப்பட்ட ஒன்பது சாகைகளோடு அதர்வண வேதம் தோன்றியது.

வேதங்களைக் கருமகாண்டம் ஞானகாண்டம் என இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். ஞானகாண்டமானது உண்மை அறிவு பகவானின் அருள் வடிவத்தை விவரிக்கின்றன.  கருமகாண்டமானது பூஜை வகைகள் ஆசிரம விதிகளை விவரிக்கின்றன. அக்கினி ஹோத்திரம் முதல் அசுவமேதம் வரை எல்லா யாகங்கள் நித்திய நைமித்திக காமிய கர்மாக்கள் எல்லாம் ஈசுவரனையே சேரும். நீங்கள் கருமகாண்டத்தில் கூறியபடி இச்சிவலிங்கத்தை வழிபட்டு ஞானகாண்டத்தின் வழிகாட்டுதலின்படி இறைவனின் உண்மை வடித்தை உணர்ந்து தெளியுங்கள். வைதிகத்துள் சுத்த சன்மார்க்கமாகிய வைதிகம் சைவம். அதனை உறுதியுடன் பற்றிக் கொள்ளுங்கள். யாம் கூறிய இப்பொருள்கள் அனைத்தும் உங்களின் மயக்கத்தினை தீர்ப்பதாக அமையும் என்று கூறி முனிவர்களின் இதயத்தை தமது திருக்கரத்தால் தடவிக் கொடுத்து சிவலிங்கத்துள் சென்று மறைந்தார்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

ஊழிக்காலத்திற்கு பிறகு உலகம் தோன்றிய விதத்தையும் காயத்திரி மந்திரம் தோன்றிய விதத்தையும் வேதங்கள் தோன்றிய விதத்தையும் வேதமும் சிவலிங்கமும் ஒன்றே என்பதை அனைவரும் அறிந்து கொள்ளவும் மேலும் வேதங்களின் பொருளை அறிந்து கொள்ள முடியாமல் இருந்த முனிவர்கள் பிரார்த்தனை செய்ததும் அவர்களின் கவலைப் போக்கியது போல் பிரார்த்தனை செய்தால் வேண்டியதை இறைவன் கொடுப்பார் என்பதை இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.