37. சோழனை மடுவில் வீட்டிய படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் சோழனை மடுவில் வீட்டிய படலம் முப்பத்தி ஏழாவது படலமாகும்.

இராசேந்திர பாண்டியனின் வழித்தோன்றலான சுந்தரரேச பாத சேகரபாண்டின் என்பவன் சொக்கநாதரிடம் பேரன்பு கொண்டவனாக இருந்தான். அவன் தன் படைபலத்தைக் குறைத்துக் கொண்டு அதற்கு செலவிடும் அத்தொகையைக் கொண்டு சிவாலயங்களைப் புதுப்பித்து சிவதொண்டு செய்து வந்தான். அப்போது சோழ நாட்டை பரிக்கோர் சேவகன் என்ற சோழ அரசன் ஆட்சி செய்து வந்தான். இவன் யுத்தத்தில் ஆயிரம் குதிரைகளை இவன் ஒருவனே சமாளிக்கும் வலிமை பெற்றவனாக இருந்தான். ஆகையால் ஆயிரம் குதிரைகளுக்கு ஒருவன் என்பதால் பரிக்கோர் சேவகன் என்று பெயர் பெற்றான். பாண்டியன் படைபலத்தைக் குறைத்ததை ஒற்றர்களின் மூலம் அறிந்த ஆயிரம் பரிக்கோர் சேவகன் இதுவே பாண்டிய நாட்டினைக் கைப்பற்ற சரியான தருணம் என்று எண்ணி பாண்டிய நாட்டின் மீது படையெடுத்தான். சோழன் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து வருவதை அறிந்த சுந்தரரேச பாத சேகரபாண்டியன் திருக்கோவிலை அடைந்தான். இறைவா பாண்டிய படையின் பலத்தினைக் குறைத்ததை அறிந்த சோழன் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து வருகிறான். சோழனிடமிருந்து பாண்டிய மக்களைக் காப்பாற்று என்று உருகி வழிபட்டான். பாண்டியனின் முறையீட்டினைக் கேட்டதும் இறைவனார் சுந்தரரேச பாத சேகர பாண்டியா நீ கலங்காதே உன் படையைத் திரட்டி சோழனை எதிர்கொள். யாமும் சோழனுடன் போரிட்டு வெற்றியை உனதாக்குவோம் திருவாக்கு அருளினார்.

இறைவனின் திருவாக்கினைக் கேட்டதும் சுந்தரரேச பாத சேகரபாண்டியன் தெளிந்த மனத்துடன் தனது படைகளைத் திரட்டி சோழனை எதிர்க்க போர்க்களம் சென்றான். சொக்கநாதரின் திருவருளால் சிறிய பாண்டியர் படை சோழர் கண்களுக்கு கடல் போல் விரிந்து காணப்பட்டது. இத்தனை பெரிய படை இவர்களுக்கு ஏது என சோழர் படை குழம்பியது. பிரம்மாண்டமான சோழர் படை சிறியதாக பாண்டியப் படைக்குக் காட்சியளித்தது. இத்தனால் பாண்டியப் படைகள் மன தைரியம் பெற்று மன வலிமையுடன் போரிட்டனர்.  இதனால் சோழனது படையின் பெரும்பாகம் அழிந்து விட்டது.  இதனால் சோழன் சினம் கொண்டு போரின் முன்னணிக்கு வந்தான். ஆயிரம் புரவி வீரர்களை ஒரே சமயத்தில் வெல்லக்கூடிய சோழன் முழுவேகத்துடன் முன்னணிக்கு வரவும் பாண்டியன் மனம் கலங்கி நின்றான். அப்போது சொக்கநாதர் தழல் போன்ற சிவந்த கண்களுடன் கரு நிறத்தவராய் விசித்திரமான சட்டை தலைப்பாகை அணிந்து யானைக் கொம்பிலிருந்து செய்த காதணி கழுத்திலே முத்து மாலை தோள்வளை கைக்காப்பு தலைப்பாகையில் மயில் தோகையுடன் வேதமாகிய குதிரை மீதேறிக் கொண்டு வேடனின் உருவத்தில் கையில் வேலோடு விரைந்து வந்து ஆயிரம் பரிக்கோர் சேவகனின் முன்னால் சென்று நின்றார். இதனைக் கண்ட சோழன் சினந்து நான் ஆயிரம் குதிரைகளுக்கு ஒரே வீரனாக நான் இங்கு போரிட வந்தேன் என்று கூறினான். அதனைக் கேட்டதும் சொக்கநாதர் எண்ணில்லாத குதிரைகளுக்கு ஒரே வீரனாக நான் இங்கு போரிட வந்தேன் என்று கூறி சோழனுடன் போரிட்டார். வேடுவனின் தாக்குதலை சமாளிக்க இயலாத சோழன் குதிரையில் ஏறி போர்களத்தை விட்டு ஓடினான். நடந்த நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருருந்த பாண்டியன் வேடனாக வந்திருப்பது சொக்கநாதர் என்பதை உணர்ந்தான்.

வேடனின் வடிவத்தில் வந்த சொக்கநாதரும் சோழனும் சண்டையிட்டது மிகப் பயங்கரமாய் இருந்தது. விரைவில் சோழன் புறமுதுகு காட்டி ஓடினான். வேடனுக்கு பயந்து சோழன் ஓடுவதைக் கண்ட அவனது படைகளும் பின்வாங்கின. அப்போது வேடனான சொக்கநாதர் அங்கிருந்து மறைந்தார். பாண்டியனும் அவன் படைகளும் உற்சாகத்துடன் சோழப் படைகளை விரட்டத் தொடங்கினார்கள். சோழனை விரட்டி பாண்டியன் அவனைத் தொடர்ந்து சென்றான். சிறிது நேரம் கழித்து சோழன் திரும்பிப் பார்த்தான். தன்னை துரத்திய வேடனைக் காணாது பாண்டியன் துரத்துவதை கண்டான். பயம் தெளிந்த சோழன் பாண்டியனை துரத்தத் தொடங்கினான். போர்க் களத்தை நோக்கி பாண்டியன் ஓடினான். அப்போது பாண்டியன் எதிரில் மடு (குளம்) ஒன்று இருப்பதைக் கவனியாது அதனுள் வீழ்ந்தான். பாண்டியனைத் துரத்திய சோழனும் மடுவினுள் வீழ்ந்தான். சோழன் விழுந்த இடத்தில் சுழல் இருந்ததால் சோழன் மடிந்தான். பாண்டியன் இறைவனின் கருணையால் உயிருடன் மடுவில் இருந்து மீண்டான். பின்னர் சோழப் படையை வெற்றிக் கொண்ட பாண்டியன் அவற்றின் மூலம் கிடைத்த வருவாயைக் கொண்டு சிவாலயத் திருப்பணிகள் செய்து இறைவனின் அருளுக்கு பாத்திரமானான்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

இறைபணியில் ஈடுபடுபவர்களை பாதுகாத்து அவர்களது தேவைகளை நிறைவேற்றி இறைவன் காப்பார் என்பதை இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.