ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 107

கேள்வி: ஜாகத்தின்படி ஒரு தோஷத்தைக் கொடுத்த இறைவன் அதில் ஏதாவது ஒரு நன்மையையும் வைத்திருப்பாரே? அது குறித்து?

இறைவன் அருளால் நன்றாய் கவனிக்க வேண்டும். இறைவன் யாருக்கும் தோஷத்தையும் பாவத்தையும் கொடுப்பதில்லை. மனிதனின் செயல்தான் அவனுக்கு தோஷத்தை ஏற்படுத்துகிறது. அதிகமாக மாம்பழத்தை உண்டால் வயிற்றுவலி வருவது போல ஒருவன் செய்கின்ற பாவங்கள்தான் தோஷமாக பாவமாக திசா புத்தி அந்தரமா ஏழரையாண்டு சனியாக வருகிறது. இறைவன் இதில் சாட்சியாகத்தான் இருக்கிறார். இருந்தாலும் இந்த கேள்வியின் மறைபொருளாக ஒவ்வொரு பாவ விளைவிற்குப் பின்னால் ஏதாவது ஒரு நன்மை இருக்குமே? என்று இன்னவன் கேட்கிறான் இருக்கிறது. சற்றே யோசித்துப் பார்க்க வேண்டும். ஒருவனுக்கு ஏராளமான செல்வம் உயர்ந்த பதவி அழகான தோற்றம் நல்லதொரு உறவு சுகமான வாழ்வு நிலை இருந்தால் அப்படி இருக்கக்கூடிய எத்தனை மனிதர்கள் இறைவனை நோக்கி வருவார்கள்? நாடியை நோக்கி வருவார்கள். அதிகமாக தாகம் எடுப்பவர்கள் நீர்நிலையை நாடுகிறார்கள். அதிகமாக பசி உணர்வு வந்தால் உணவைத் தேடுகிற நிலை வந்து விடுகிறது. அதிகமாக துன்பப்படுகின்றவர்கள் கட்டாயம் ஏதாவது ஒரு நிலையிலே இறைவனை வெறுத்தாலும்கூட இறை வழிபாட்டை நோக்கி தள்ளப்படுகிறார்கள். எனவே துன்பங்களில் ஒரு மனிதன் பெறக்கூடிய மிகப்பெரிய பாக்கியம் இறை பக்தி வளர்வதுதான். ஒரு வகையில் மனிதனுக்கு வரக்கூடிய இன்பத்தைவிட துன்பம்தான் அவனை இறைவனை நோக்கி தள்ளுகிறது என்பதால் இறை பக்தி வளர்வதற்கு தர்மம் வளர்வதற்கு தன்முனைப்பு குறைவதற்கு கர்வம் குறைவதற்கு கட்டாயம் ஒரு மனிதனுக்கு அவன் ஜாதகத்தில் உள்ள தோஷம் மறைமுகமாக உதவி செய்கிறது.

கேள்வி : கும்பகோணம் கும்பேஸ்வரர் கோவிலின் வெளிபிரகாரத்தில் தாங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அது குறித்து:

இறைவன் அருளால் அங்கு மட்டும் என்று நாங்கள் இல்லையப்பா. எங்கெல்லாம் உள்ளன்போடு நினைக்கிறார்களோ அங்கெல்லாம் நாங்களும் ஏனைய மகான்களும் இருக்கிறோம்.

சுலோகம் -74

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் #27

இதன்படி பிறந்தவனுக்கு இறப்பு நிச்சயம். இறந்தவனுக்கு பிறப்பு நிச்சயம். இந்த நிகழ்வுகள் தவிர்க்க முடியாதது ஆகும் இதற்காக நீ வருந்துதல் தகாது.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

மண்ணை வைத்து பானை செய்து உபயோகப்படுத்தலாம். பானை உடைந்தால் மீண்டும் அது மண்ணோடு மண் ஆகிறது. அந்த மண்ணில் மீண்டும் புதிய பானை செய்யலாம். அது போல் இறப்பு பிறப்பு என்பது எப்போதும் இருக்கும் ஒரு பொருளின் நிலை மாறுபாடே ஆகும். இந்த உலகத்தில் பிறந்தவைகள் அனைத்தும் இறப்பதை கண்கூடாகப் பார்க்கின்றோம். அதே போன்று இறந்தவைகள் அனைத்தும் மீண்டும் பிறப்பது உறுதி. இறப்பு பிறப்பு என்ற சுழற்சி தவிர்க்க முடியாதது இது இயற்கையாகும். ஆகவே அர்ஜூனா நீ வருத்தப்படாதே என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 106

கேள்வி: புற்று நோய் எதனால் வருகிறது? இதற்கு சித்த மருவத்தில் தீர்வு இருக்கிறதா?

இறைவன் அருளால் இது குறித்தும் பலமுறை கூறியிருக்கிறோம். பாவத்தின் தன்மை இதுதான். இதனால்தான் இந்த நோய் வருகிறது. இந்த துன்பம் வருகிறது என்று கூற இயலாது. ஒட்டு மொத்த பாவங்களின் விளைவுதான் கடுமையான நோய் கடுமையான பிணி. இருந்தாலும் பிறவி தோறும் புற்று மனிதன் மீது பற்று வைக்கிறது என்றால் அந்த அளவிற்கு அவன் பாவம் தொடர்கிறது என்பது பொருளாகும். புற்று மட்டுமல்ல எல்லா வகையான நோய்களுக்கும் மனித ரீதியான காரணங்கள் வேறு. மகான்கள் ரீதியான காரணங்கள் வேறு. வெளிப்படையாக ஒரு கிருமியால் அல்லது வெள்ளை அணுக்கள் அளவிற்கு அதிகமாக உற்பத்தியாவதால் இந்த நோய் வருவதாகக் கூறினாலும் கூட இந்த பல்வேறு பிறவிகள் பிறந்து பல்வேறு மனிதர்களின் குடும்பத்தை நிர்கதியாக்கி நிர்மலமாக்கி பல குடும்பங்களை வாழவிடாமல் அவர்களை மிகவும் இடர்படுத்தி பல மனிதர்களின் வயிற்றெரிச்சலை யார் ஒருவன் வாங்கிக் கொள்கிறானோ அவனுக்கு புற்று (நோய்) பிறவி தோறும் பற்று வைக்கும். இதற்கு மட்டுமல்ல எல்லா பிணிகளுக்கும் மருந்து இருக்கிறதப்பா கொல்லி மலையிலும் சதுரகிரி மலையிலும். ஆனால் புண்ணியமும் இறைவன் அருளும் இருப்பவனுக்கு மட்டும்தான் அந்த மருந்து கிடைக்கும். அந்த மருந்து கிடைத்தாலும் அவனுக்கு நல்லதொரு வேலையை செய்யும். இருந்தாலும்கூட பிராத்தனை எந்தளவிற்கு ஒரு மனிதன் மனம் நெகிழ்ந்து செய்கிறானோ அந்தளவிற்கு நலம் நடக்கும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 105

கேள்வி: போக மகரிஷி அறிந்த ரகசியங்களில் ஒரு சிறிதேனும் அன்பர்கள் அறிந்து கொள்ள உபாயம் அருளுங்கள்

இறை அனுமதித்தால் தக்க காலத்தில் கூறுவோம். அதற்குள் அவரவர்கள் பிரச்சனைகளுக்கு அவரவர்களே அறிந்து கொள்ள பழனியம்பதிக்கு சென்று முருகப் பெருமானையும் போகனையும் வணங்கிவிட்டு அவரவர் இல்லத்திலே போகரின் உருவத்தை வைத்து முருகப் பெருமானின் உருவத்தை வைத்து அன்றாடம் பூஜித்து வணங்குவதும் வடகிழக்கு திசை நோக்கி அமர்ந்து அதிகாலையிலே போகனை நினைத்து நினைத்து நினைத்து துதி செய்தால் அவன் உள்ளிருந்து பலவற்றைக் காட்டித் தருவான். இன்னென்ன பிணிக்கு இன்னென்ன செய்தால் நன்மை உண்டு. உன் பிணிக்கு இதை செய்தால் போதும் என்று உள் உணர்வாகவே உணர்த்தி வழிகாட்டுவான்.

கேள்வி: எல்லா ஆண்களும் எல்லா பெண்களும் வேலைக்கு சென்று விட்டால் வீட்டுப் பணிகள் என்ன ஆவது?

இறைவன் அருளால் அப்படியெல்லாம் நீ கலக்கம் கொண்டிட வேண்டாமப்பா. ஏனென்றால் எல்லோரும் படித்து வேலைக்கு சென்று விடலாம் என்கிற நிலை வந்தாலும்கூட அப்பொழுதும் கலைமகள் (அன்னை சரஸ்வதிதேவி) அருள் கிட்டாமல் எத்தனை பேர் இருப்பார்கள். அவர்களுக்கென்று ஒரு பணி வேண்டாமா? அவர்களெல்லாம் வீட்டுப் பணிகளை ஏற்க முன்வருவார்கள். இல்லப் பணிகளை என்னதான் பிறரை வைத்து செய்தாலும் கூட எத்தனைதான் வெளியில் சென்று பணியாற்றினாலும் கூட ஒரு கணவனும் மனைவியும் சேர்ந்து செய்வதுதான் சிறப்பிலும் சிறப்பைத் தரும். நல்ல ஆக்கப்பூர்வமான அதிர்வெண்களைத் தரும்.

சுலோகம் -73

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் #26

ஆத்மா பிறக்கிறது ஆத்மா இறக்கிறது என்று நினைக்காதே அப்படி நினைத்தால் வலிமையுடைய தோள்களை உடையவனே அதனை நினைத்து நீ வருத்தப்படாதே.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

உடல் பிறக்கும் போது அதனுடன் புதிதாக ஆத்மாவும் பிறக்கிறது என்று எண்ணினால் அந்த உடல் அழியும் போது ஆத்மாவும் அழிகிறது என்று நினைக்க வேண்டியது வரும். உடல் தான் பிறக்கிறதே தவிர ஆத்மா எப்போதுமே இருந்து கொண்டே தான் இருக்கின்றது அதனால் அது புதிதாக உடலுடன் பிறப்பதில்லை. ஏற்கனவே இறைவனை விட்டுப் பிரிந்து வந்த ஆன்மாவனது புதிதாகக் கிடைத்த உடலுக்குள் புகுகின்றது அவ்வளவே. அதுபோலவே உடல் அழிந்த பிறகும் ஆன்மா அழிவதில்லை அது உடலை விட்டுப் பிரிந்து அடுத்த உடலுக்காக காத்திருக்கின்றது. எனவே ஆன்மா பிறக்கிறது இறக்கிறது என்று தவறாக நீ நினைத்தாலும் அதைப் பற்றி நீ வருத்தப்படத் தேவையில்லை. காரணம் இந்த உடலுக்கு மாற்றங்கள் ஏற்படுவது இயற்கையே உடலுக்கு பிறப்பு இறப்பு என்பது தவிர்க்க இயலாத ஒன்றாகும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 104

கேள்வி: வால்மீகி இராமாயணத்தில் ராமர் மான் மாமிசத்தை உண்டார் என்று கூறப்படுவது இடைசெருகலா?

மகாவிஷ்ணுவின் அவதாரம் ராமர் என்பதை நீ ஒப்புக்கொள்கிறாயா? (பதில் : ஆமாம்). அப்படியென்றால் மான்களை வேட்டையாடவே கூடாது என்று மிக மிக சராசரியான மன்னனே அக்காலத்திலெல்லாம் சட்டம் இயற்றியிருந்தான் தெரியுமா? மான்கள் முயல் இன்னும் சாதுக்களான விலங்குகளை யாரும் எக்காலத்திலும் வேட்டையாடுதல் கூடாது. இன்னும் கூறப்போனால் முறையான பக்குவம் பெற்ற மன்னர்கள் பொழுது போக்கிற்கு என்று வேட்டையாட செல்ல மாட்டார்கள். என்றாவது கொடிய விலங்குகள் மக்களை இடர்படுத்தினால் மட்டும் அதிலும் முதலில் உயிரோடு பிடிக்கதான் ஆணையிடுவார்கள். முடியாத நிலையில்தான் கொல்வார்கள். ஒரு சராசரி மன்னனே இப்படி செயல்படும் பொழுது மகாவிஷ்ணுவின் அவதாரம் என்று கூறப்படுகின்ற ஸ்ரீ ராமபிரான் இவ்வாறெல்லாம் செய்திருப்பாரா? கட்டாயம் செய்திருக்கமாட்டார். அப்படி விலங்குகளைக் கொன்று தின்னக்கூடிய அளவில் ஒரு கதாபாத்திரம் கற்பனையாகக்கூட ஒரு ஞானியினால் படைக்கப்படாது. ஒரு வேளை அது உண்மை என்றால் அப்பேற்ப்பட்ட ஸ்ரீ ராமர் தெய்வமாக என்றும் போற்றப்படுவாரா? யோசித்துப் பார்க்க வேண்டும். என்ன காரணம்? பின்னால் மனிதனுக்கு வசதியாக இருக்க வேண்டும். ராமரே இவற்றையெல்லாம் உண்டிருக்கிறார். நான் உண்டால் என்ன? என்று பேசுவற்கு ஒரு காரணம் வேண்டுமல்லவா?

பலம் என்பது உடலில் இல்லை மனதில் இருக்கிறது. சுவாசத்தை எவனொருவன் சரியாக கட்டுப்படுத்தி சிறு வயதிலிருந்து முறையான பிராணாயாமத்தை கடைபிடிக்கிறானோ அவனுக்கு 72000 நாடி நரம்புகள் பலம் பெறும் திடம் பெறும். அவனுடைய சுவாசம் தேவையற்ற அளவிலே வெளியேறாது. நன்றாக புரிந்து கொள். எவனொருவன் வாய் வழியாக சுவாசம் விடுகிறானோ அவனுக்கு தேகத்தில் (உடலில்) அத்தனை வியாதிகளும் வரும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 103

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

யார் யாருக்கு விதிப்படி என்ன நடக்க வேண்டுமோ அது நடந்து கொண்டேயிருக்கிறது. அந்தக் கடுமையான விதியிலிருந்து ஒருவனைக் காப்பாற்ற வேண்டுமென்றால் அதற்கு சரியான காரணத்தை இறையிடம் நாங்கள் காட்ட வேண்டும். அப்படி சரியான காரணம் எம்மைப் பொருத்தவரை தர்மம் தர்மம் தர்மம் தர்மம் தர்மம் தர்மம் இது ஒன்றுதான். அதனையும் தாண்டி மனதிலே அப்பழுக்கில்லாமல் எந்த சூது வாது இல்லாமல் சிறு குழந்தை போல் மனதை வைத்திருந்தால் அதையும் ஒரு சரியான காரணமாகக் காட்டுவோம். ஆனால் இங்கு வருகின்ற பலருக்கும் வெறும் லோகாய விஷயங்களைக் கேட்பதற்காக நாங்கள் வருத்தப்படவோ சினப்படவோ இல்லை. அது மனிதனின் தேவை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால் எம்மிடம் வந்தும் ஒன்றும் நடக்கவில்லை என்றால் குற்றம் எங்கே? என்று யாரும் சிந்தித்துக்கூட பார்ப்பதில்லை. எனவே இன்று இங்கு எம்முன்னே அமர்ந்து வாக்கைக் கேட்கின்ற அனைவருக்கும் கூறுகிறோம். எமது வாக்கை நூற்றுக்கு நூறு சரியாகப் புரிந்து கொண்டு சரியான தர்ம வழியில் எவன் ஒருவன் நடக்கிறானோ கட்டாயம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் எதைக் கேட்டாலும் கேட்காவிட்டாலும் அவனுக்கு எதை செய்ய வேண்டுமோ அதை நாங்கள் இறையருளால் செய்திருக்கிறோம் செய்து கொண்டிருக்கிறோம் இனியும் செய்வோம். அப்படியெல்லாம் ஏதுமில்லை. பல ஆண்டுகளாக சித்தர்கள் வழியில் நான் வருகிறேன். என் கஷ்டங்கள் எதுவும் தீரவில்லை. மாறாக கஷ்டங்கள் அதிகமாகி இருக்கிறது என்று யாராவது எண்ணினால் இரண்டு நிலைகளை அங்கே பார்க்க வேண்டும். ஒன்று பரிபூரணமாக முன் ஜென்ம பாவங்கள் அங்கே குறையவில்லை. முன் ஜென்ம பாவங்கள் ஓரளவு குறைந்திருந்தாலும் இந்த ஜென்மத்தில் இளமை காலத்திலிருந்து அவன் நடந்து கொண்ட விதத்தை சிந்தித்து பார்த்தால் எங்கே குற்றம்? எங்கே குறைகள்? என்பது அவனவன் மனதிற்கு கட்டாயம் புரியும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 102

கேள்வி: ஜீவாத்மாவை எப்பொழுது பாவம் பற்றத் தொடங்குகிறது?

எப்பொழுது பரமாத்வாவை ஜீவாத்மா பிரிந்ததாக நம்பப்படுகிறதோ கூறப்படுகிறதோ எப்பொழுது பிறவி என்று இந்த மாய லோகத்திற்கு ஒரு உயிர் வருகிறதோ அப்பொழுது பாவம் பற்றி விடுகிறது.

கேள்வி: விதியைத் தாண்டி கேள்விகளை கேட்க சிந்திக்க செயல்பட எங்களுக்கு அருள்புரிய வேண்டும்

இறைவன் அருளால் விதி தாண்டி எத்தனையோ நாங்கள் கூறுகிறோம். ஆனால் அதனை ஏற்கத்தான் மனிதனின் மனம் இடம் தருவதில்லை. ஒருவன் ஒரு மிகவும் அழகான இல்லம் வைத்திருப்பதாகக் கொள்வோம். இப்பொழுது இங்கு ஆணையிடுகிறோம். அந்த இல்லத்தை விற்றுவிட்டு தர்மம் செய் என்றால் அதை செய்ய ஆயத்தமாக இருக்கிறானா? இங்கு யாராவது இப்படி இருக்கிறார்களா? இருந்தால் விதி தாண்டி எப்படி வாழ்வது? விதி தாண்டி எதையெல்லாம் செய்யலாம். எப்படி செய்யலாம் என்று நாங்கள் கூறுவோம்.

கேள்வி: ஒருவனுக்கு பாவம் பார்க்கப் போனால் அவர்களின் பாவம் நம்மை பற்றிக் கொள்ளும் என்ற சொல் வழக்கில் இருக்கிறது அது குறித்து

இறைவன் அருளால் பிறரை பார்த்து இரக்கப்பட்டு உதவி செய்து நாம் சங்கடத்தில் மாட்டிக் கொள்வோம் என்ற அடிப்படையில்தான் உன் வினா அமைந்திருக்கிறது என்று யாம் எண்ணுகிறோம். கட்டாயம் பிறருக்கு உதவ வேண்டும். அப்படி உதவும் பொழுது உதவுகின்ற மனிதனுக்கு தொடர்ந்து இன்னல்கள் வருமேயானால் நாகரீகமாக ஒதுங்கிக் கொள்ளலாம். தவறேதுமில்லை. இது மனித ரீதியான சிந்தனை. ஆனால் எத்தனை கஷ்டங்கள் துன்பங்கள் வந்தாலும் தர்மத்தை கைவிடாமல் பிறருக்கு உதவுவதை நிறுத்தாமல் இருப்பதுதான் மகான்களின் போதனை.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 101

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான ஜபத்தைவிட உள்ளன்போடு ஆத்மார்த்தமாக பரிசுத்த இதயத்தோடு ஒரே ஒரு முறை இறை நாமத்தை ஜபித்தால் இறை தரிசனம் உண்டு. ஆனால் இறை தரிசனம் வேண்டும் என்கிற அந்த எண்ணம் தீவிரமடைந்து லோகாயம் எல்லாம் போக வேண்டும் என்ற எண்ணத்தோடு ஜெபித்தால் கட்டாயம் இறை துவாபர யுகத்தில் மட்டுமல்ல திரேதா யுகத்தில் மட்டுமல்ல இந்த கலியுகத்திலும் காட்சி தருவார் என்பது உறுதி. இருந்தாலும் லகரம் (லட்சம்) ககரம் (கோடி) மந்திரங்களை ஜெபி என்று கூறுவதன் காரணமே மனித மனம் ஒரு ஒழுங்குக்கு கட்டுப்படாததால் (அப்படி) கூறிக்கொண்டே இருந்தால் என்றாவது ஒருநாள் அவனையும் அறியாமல் மனம் லயித்து ஒரு முறை ஒரு முறை அந்த திருவின் நாமத்தை மனம் வாக்கு காயம் (உடல்) 72000 நாடி நரம்புகள் பரவ கூறுவான் என்று தானப்பா நாங்களும் கூறுகிறோம். எனவே கூறிக்கொண்டேயிரு. இறைவன் கருணையால் அது ஏதாவது ஒரு நிலையில் சித்திக்கும்.

நாகபூசணி அம்மன் கோவில்

நாகபூசணி அம்மன் கோவில்

நாகபூசணி அம்மன் கோவில் இலங்கையில் யாழ்ப்பாண மாவட்டம் நயினார் தீவில் அமைந்துள்ளது. இக்கோவில் கிட்டத்தட்ட 14000 வருங்கள் பழமையானது ஆகும். இந்த கோவில் நாகர்களால் கட்டப்பட்டது. இந்த கோவில் கட்டும் போது நாகலோகத்து நாகர்களும் தங்களால் இயன்ற வரை உதவி செய்திருக்கிறார்கள் என்று கோவிலின் புராண வரலாற்றில் உள்ளது. நாகபூசணி அம்மன் ஆலயம் நயினாதீவு முதலாம் வட்டாரத்தில் பரப்பவன் சல்லி என்னும் காணிப்பகுதியில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. ஆகம மரபுக்குட்பட்ட முறையில் அமைந்து விளங்கும் இவ்வாலயம் கருவறைக்குள் நிமிர்ந்து காணப்படும் கருநாகச் சிலை வடிவமும் அதன் கீழ் உள்ள அழகிய பீடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் அருவுருவடிவமான அம்பாளின் திருவுருவும் சுயம்பு உருவங்களாகவே உள்ளன. நீள் உருளை வடிவத் திருமேனியில் அம்மன் எழிலாக காட்சி தருகின்றாள். சீறும் ஐந்துத் தலை நாகச்சிலை பல்லாயிரமாண்டுகள் பழமையானது என்றும் காந்தார சிற்பக் காலத்தைச் சார்ந்ததாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆலயத்தில் நாயன்மார்களின் உருவச்சிலைகள் உள் பக்கம் அமைக்கப்பட்டுள்ளன. ஆலய பூஜைகள் கயிலாசநாத குருக்கள் என்பவரது பரம்பரையால் சுமார் 250 ஆண்டுளாக நடத்தப்படுகின்றன. தல மரம் வன்னி தல தீர்த்தம் தீர்த்தக்கேணி ஆகும். இத்திருத்தலத்தில் 4 கோபுரங்களும் வசந்த மண்டபம் வாகன மண்டபம் கல்யாண மண்டபம் அன்னபூரணனேஸ்வரி அன்னதான மண்டபம் அமுதசுரபி அன்னதான மண்டபம் ஸ்ரீ புவனேஸ்வரி கலையரங்க மண்டபம் முதலான 6 மண்டபங்களும் அமைந்துள்ளன.

நாகபூசணி அம்மனை நாகபாம்பு பூக்களைக் கொண்டு வந்து பூஜித்த வழிபாட்டுச் சிறப்பு மிக்க தலமாக இது விளங்குகின்றது. வரலாற்றுப் பெருமையும் வழிபாட்டுச் சிறப்பு மிக்க இவ்வாலயம் கி.பி 1620 ம் ஆண்டு ஒல்லாந்தர் என்னும் போர்ச்சுக்கீசியர் காலத்தில் தரைமட்டமாக்கப்பட்டது. இதன் சுவடுகள் இன்றும் கடலின் அடியில் காணப்படுகிறது. போர்ச்சுக்கீசியர் போர் தொடுக்கும் முன்பாக ஆலயத்தின் முக்கிய மூர்த்திகள் பொருட்களை பக்தர்கள் மறைத்து வைத்தனர். அம்மனை ஆலய மரப் பொந்தில் வைத்து வழிபட்டனர். டச்சுக்காரர்கள் ஆட்சிக்குப் பின்பு ராமலிங்கம் ராமச்சந்திரர் என்பவர்களால் 1788 இல் கல்லுக் கட்டிடமாகக் கட்டப் பெற்றது. 1935 ஆம் ஆண்டு கிழக்கு வாயில் ராஜகோபுரம் கட்டப்பட்டது. இவ்வாலயத்தின் விமானம் 1951 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டுள்ளது. வெளியில் நுழைவாயில் கிழக்கு நோக்கிய வாயிலையுடைய 108 அடி உயரமான நவதள நவகலச ராஜ கோபுரத்திற்கு 2012 ஆம் ஆண்டில் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.

நாகபூசணி அம்மன் கோயில் பதினெட்டு மகா சக்தி பீடங்களில் தேவியின் இடுப்புப் பகுதி விழுந்த பீடமாகவும் தந்திர சூடாமணி கூறும் 51 சக்தி பீடங்களில் தேவியின் சிலம்புகள் விழுந்த பீடமாகவும் கருதப்படுகிறது. உண்மையான சக்தி பீடக் கோவில் போர்ச்சுக்கீசியப் படையெடுப்பில் இடிக்கப்பட்டு விட்டதால் இந்தக் கோவிலின் அம்மன் சன்னதியே சக்தி பீடமாக வணங்கப்படுகிறது ஆதியில் நாகர்களின் முக்கிய வழிபாட்டுத்தலமாகக் காணப்பட்டுப் பின்னர் நாகபூசணி அம்மன் திருக்கோயிலாக மாற்றம் பெற்ற தலமே நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயமாகும். இக்கோவிலின் கருவறையிலுள்ள சீறும் ஐந்துத்தலை நாகச்சிலை பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானது என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். சுயம்புவாகத் தோன்றிய அம்பிகையின் வடிவத்தை இந்தியாவில் இருந்து வந்த நயினாபட்டர் என்ற வேதியர் பூஜித்து வந்துள்ளார் அதற்கான சான்றுகள் உள்ளது.

நாகபூசணி அம்மனை வழிபட நயினா தீவுக்கு அருகில் உள்ள புளியந்தீவில் இருந்த நாகமொன்று அம்மனைத் தரிசிக்க தினந்தோறும் கடலில் நீந்தி வருவது வழக்கமாக இருந்தது. அவ்வாறு வரும் போது அம்மனுக்கு அர்ச்சனை செய்ய புளியந்தீவில் இருந்து பூக்களை கொண்டு வருவது வழக்கம். ஒரு நாள் வழக்கம் போல் பூக்களுடன் நீந்தி வந்த நாகத்தை கருடன் ஒன்று உணவாக்க முயன்றது. இதனால் பதறிய நாகம் கடலின் நடுவில் இருந்த கல் பாறை ஒன்றில் ஒதுங்கியது. அந்த இடத்திற்கு வந்த கருடனுக்கும் நாகத்திற்கும் இடையே சண்டை ஏற்பட்டது. அந்த நேரத்தில் வாணிகம் செய்வதற்காக காவிரிப் பூம்பட்டினத்தில் இருந்து கப்பல் மூலம் இலங்கை சென்று கொண்டிருந்தான் மாநாயக்கன் என்ற வணிகன். அவன் நாகத்தை கருடன் கொல்ல முயல்வதைக் கண்டு மனம் இரங்கினான். நாகத்தை காப்பாற்ற கருடனிடம் பேசினார். நாகம் அம்மனை வழிபடுவதற்காச் செல்கிறது எனவே அதனை தடுக்க வேண்டாம் என்று வேண்டினான். அதற்கு கருடன் ஐயா அம்மன் மீது உங்களுக்கு பக்தி இருக்குமானால் கப்பலில் உள்ள உங்கள் பொருட்கள் அனைத்தையும் அம்மன் ஆலயத்திற்குத் தர ஒப்புக்கொண்டால் நானும் உங்களுக்காக இந்த நாகத்தை விட்டு விடுகிறேன் என்றது. கருடன் கூறியதற்கு வணிகன் ஒப்புக்கொண்டான். தான் கப்பலில் கொண்டு வந்த பொருட்களை எல்லாம் கோவிலுக்கு வழங்கி விட்டான். இதனால் நாகம் விடுதலை பெற்று வழக்கம் போல அம்மனை வழிபட்டது. வணிகன் கொடுத்த பொருட்களைக் கொண்டு கோவில் அழகாகவும் சிறப்பாகவும் கட்டமைக்கப்பட்டது. நயினா தீவின் அருகே பாம்பு சுற்றிய கல் இருப்பதையும் கருடன் கல் இருப்பதையும் இன்றும் காணலாம்.

நாகபூசணி அம்மனை இந்திரன் சில காலம் பூஜித்து தனது சாபத்தை போக்கிக் கொண்டான். அதன் பின் அம்மனுக்கு சிறிய ஆலயம் கட்டினான். மகாபாரதத்தில் அர்ஜூனன் நாகங்களைக் கொன்ற பாவங்கள் தீர இங்கு வந்து நாககன்னியை மணந்து பப்பரவன் என்ற மகனைப் பெற்றான். இதற்கு சான்றாக அர்ஜூனனின் மகனின் பெயரிலே இன்றும் அம்பாளின் ஆலயத்திடலுக்கு பப்பரவன் திடல் என்ற பெயர் உள்ளது. மணிமேகலை காவியத்தில் நாக இளவரசியான பீலிவளை மீது கிள்ளி என்னும் சோழ வேந்தன் காதலுற்று அவளைப் பிரிந்து வருடந்தோறும் நடத்தும் இந்திர விழாவையும் நடத்த மறந்தான் என்றும் இவர்களின் குழந்தையே தொண்டமான் இளந்திரையன் என்றும் இவனின் சந்ததியினரே பிற்காலத்தில் தொண்டைமான் சந்ததியினரும் தொண்டை மண்டலத் தேசத்தவரும் ஆவர்கள். நாகபூசணி அம்மன் கோவிலுக்கு பல பரம்பரைக் கதைகளோடும் பல புராண இதிகாசங்களோடும் பல ஆயிரம் வருடங்களுக்கான வரலாறுகள் இருப்பதை அறியலாம். நாகர்கோயில் நாகதேவன்துறை நாகதீவு போன்ற பெயர்களும் இன்றும் மக்களால் பின்பற்றப்பட்டு வரும் நாக வழிபாட்டு முறையும் இக்கூற்றை உறுதி செய்கின்றது.

இவ்வாலயத்திற்கு 1951 1963 1983 1998 2012 ஆகிய ஆண்டுகளில் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. இவ்வாலய மகோற்சவம் ஆனிப் பூரணையை தீர்த்தோற்சவமாகக் கொண்டு நடைபெறுவது வழக்கமாகும். ஆரம்பத்தில் பத்து நாட்களே மகோற்சவம் நடைபெற்றது. 1960 ஆம் ஆண்டிலிருந்து பதினைந்து நாட்கள் மகோற்சவம் நடைபெறுகின்றது. இப்போதும் அடிக்கடி பல நாகங்கள் கோவிலுக்கு வந்து செய்கிறது. நாகங்கள் யாரையும் எந்த விதத்திலும் துன்புறுத்துவது இல்லை. கொழும்பில் இருந்து 431 கி.மீ. தூரத்திலும் யாழ்ப்பாணம் நகரில் இருந்து 38 கி.மீ. தூரத்திலும் உள்ள நயினா தீவில் இக்கோவில் அமைந்துள்ளது.

நாகபூசணி அம்மன் கோவில் தேர்:

நாகபூசணி கோவிலின் தேர் தனித்துவம் வாய்ந்தது. இத்தேரில் வரலாற்று நிகழ்வுகள் கிருஷ்ணர் அஷ்டலட்சுமி நாகம் புளியந்தீவில் பூப்பறித்து வரும் போது கருடன் சண்டையிட்டது மணல் லிங்கம் எழுப்பி வழிபடும் காமாட்சி போன்ற வரலாறுகள் தத்ரூபமாகச் செதுக்கப்பட்டுள்ளன. மேலும் தேரில் நாகபூசணி பவனிவர தேரோட்டியாக பிரம்மனின் மனைவி பிரமாணி இருப்பதும் குறிப்பிடத்தக்க அம்சம் ஆகும். மூன்று வரிசையில் எட்டுத் திசைகளிலும் மரச்சிற்பங்கள் கலைநயத்தோடு மிளிர்கின்றது.

இலக்கியங்கள்:

யோகி சுத்தானந்த பாரதியார் இயற்றிய மனோன்மணி மாலை மற்றும் அமரசிங்கப்புலவர் இயற்றிய நயினை நாகபூஷணியம்மை திரு ஊஞ்சல் மற்றும் வரகவி முத்துக்குமாருப் புலவர் இயற்றிய நயினை நாகபூஷணியம்மை திருவிருத்தம் மற்றும் வரகவி நாகமணிப்புலவர் எழுதிய நயினை மான்மியம் மற்றும் வேலனை தம்பு உபாத்தியார் இயற்றிய திருநாக தீபப் பதிகம் மற்றும் க.ராமச்சந்திரன் இயற்றிய தேவி பஞ்சகம் மற்றுப் நயினைத் தீவு சுவாமிகள் கவிஞர் செல்வராஜன் இயற்றிய பாடல்கள் என எண்ணற்ற இலக்கியங்கள் நாகபூசணி அம்மனைப் புகழ்கின்றன.

தொன்மைச் சிறப்பு:

ஐம்பெரும்காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை காப்பியம் நயினா தீவை மணிபல்லவம் என்று குறிப்பிடுகிறது. குலோதர மகோதர என்ற இரண்டு நாக அரக்கர்களுக்கிடையே மணியாசனம் காரணமாக எழுந்த பெரும் போரை விலக்கி வைக்க புத்தர் இங்கு எழுந்தருளியதாக பவுத்த நூல்கள் கூறுகின்றன. இத்தீவில் பழமையான பவுத்த கோவில்கள் இருந்ததற்கான சுவடுகள் இன்றும் காணப்படுகின்றன. அம்மன் ஆலயத்திற்கு சற்றுத் தொலைவில் புனரமைக்கப்பட்ட பவுத்த ஆலயம் ஒன்றும் படித்துறையும் உள்ளது. இந்து சமயத்தவருக்கும் பவுத்த சமயத்தவருக்கும் புனித தலமாக நயினா தீவு விளங்குகின்றது.