ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 100

அகத்திய மாமுனிவரின் (குருநாதர்) பொது வாக்கு:

இறைவன் அருளால் எப்பொழுது மனித குலம் தாங்கொண்ணா துயரை நுகர்கிறதோ அப்பொழுதே புரிந்து கொள்ள வேண்டும். ஒட்டுமொத்த சமுதாயத்தில் தர்மம் குறைந்திருக்கிறது என்று. தர்மம் குறைவதுகூட பாதகமில்லை. பாவத்தில் கொடிய பாவம் எது தெரியுமா? ஒருவன் தர்மம் செய்யலாம் அல்லது செய்யாமல் போகலாம். அது அவனின் கர்மவினையைப் பொறுத்தது. அது ஒருபுறம் இருக்கட்டும். ஆனால் நல்லவர்களை இனம் காண முடியாமல் நல்லவர்களையெல்லாம் ஏளனம் செய்து ஒதுக்கிவிட்டு தீயவர்களையும் ஆளுமை கொண்டு கர்வத்தோடு இருக்கக்கூடிய மனிதர்களை வெறும் பதவிக்காகவும் தனத்திற்காகவும் அவன் பின்னால் ஒரு கூட்டம் சென்று கொண்டேயிருக்கிறது. ஒருவன் நான் பாவம் செய்யவில்லை என்று மார் தட்டலாம். ஆனால் பாவம் செய்து கொண்டிருக்கும் மனிதனை அண்டிப் பிழைக்கிறானே? அதுதான் மாபெரும் பாவம். இப்பேற்ப்பட்ட சமுதாயக் கூட்டம் இருக்கும் வரையில் எங்கெல்லாம் நல்லவை நடக்கிறதோ அதை புரிந்து கொள்ளாத அறியாமை இருள் இருக்கும் வரையிலும் எங்கெல்லாம் நல்ல விஷயங்கள் நடக்கிறதோ அங்கெல்லாம் குதர்க்கவாதம் பேசி விமர்சனம் செய்துவிட்டு வெறும் வெற்று ஆர்பாட்டத்திற்கும் வெற்று வேடிக்கைக்கும் கூட்டத்திற்கும் செவி கொடுத்து பார்வை கொடுத்து அதை நோக்கி ஒரு மனித சமுதாயம் செல்லும் வரையிலும் நதி வரண்டுதான் இருக்கும். வருணன் பொய்த்துதான் போவான். முதலில் ஒருவன் தான் நல்லது செய்வது என்பது அடுத்த நிலை. ஏற்கனவே அவனை சுற்றி நடக்கக்கூடிய உண்மையான நல்ல விஷயங்களையெல்லாம் செவி கொடுத்து கேட்க வேண்டும். கண் கொண்டு பார்க்க வேண்டும். எதைப் பார்த்தாலும் அதில் குற்றம் கண்டு கொண்டே இருப்பதைவிட இது தக்கது இது தகாதது என்பதை புரிந்து கொண்டு நல்ல விஷயங்களை முதலில் கேட்க பழக வேண்டும். கேட்டு கேட்டு கேட்டு கேட்டு கேட்டு மனதிலே பதிய வைத்து வைத்து வைத்து பிறகு அதனையே விவாதம் செய்து செய்து செய்து செய்து பிறகு அதனை நடைமுறைப்படுத்த கற்றுக் கொள்ள வேண்டும். நல்லதை எண்ணி நல்லதை உரைத்து நல்லதை செய்ய அப்படி செய்யக்கூடிய மனிதர்கள் எல்லாம் சத்சங்கமாக கூட கூட வருணன் பொழிவான். நதி கரைபுரண்டோடும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 99

கேள்வி: ஐயனே சம்பளத்தில் ஒரு 10% தானத்திற்கு கொடுத்தால் போதுமா?

பதில்: அப்படி என்றால் கர்மவினையும் 10% தான் குறையும் போதுமா?

சுலோகம் -72

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் #25

ஆத்மா புலன்கள் மூலம் அறியப்பட இயலாதவன். மனதால் சிந்தித்து அறிய இயலாதவன். எந்த விதமான மாறுதல்களும் இல்லாதவனாக உள்ளான். ஆகவே அர்ஜூனா இப்படி ஆத்மாவை அறிந்து கொண்ட பின்னர் ஆத்மாவைக் குறித்த வருத்தத்தை நீ அடையக் கூடாது.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

பார்த்தல் கேட்டல் சுவைத்தல் நுகர்தல் உணர்தல் என்ற ஐந்து புலன்களால் ஆத்மாவை அறிந்து கொள்ள முடியாது. இப்படித்தான் இருப்பான் என்று மனதால் சிந்தித்துப் பார்த்து ஆத்மாவை அறிந்து கொள்ள முடியாது. ஆத்மாவானது இறைவனிடம் இருந்து பிரிந்து வந்தபோது எப்படி இருந்ததோ அதேபோல் இறைவனிடம் சென்று சேரும் வரை எப்போதும் மாறாமல் உள்ளது. ஆகவே அர்ஜூனா புலன்களால் சிந்தனையால் ஆராய்ந்து அறிந்து கொள்ள முடியாத இந்த ஆத்மாவைப் பற்றி நீ வருத்தப்படக் கூடாது என்று கிருஷ்ணர் அர்ஜூனனுக்கு உபதேசம் செய்கிறார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 98

அகத்திய மாமுனிவர் (குருநாதர்) பொதுவாக்கு

இறைவன் அருளைக் கொண்டு கூறுவது என்னவென்றால் நூற்றுக்கு நூறு எம்மை நம்பி எம் வழியில் வருகின்ற அனைவருக்கும் நாங்கள் (சித்தர்கள்) இறைவனருளால் நல்ல வழி காட்டுவோம். உலகியல் ரீதியாக முன்னேற்றம் காட்டினால்தான் ஒருவனுக்கு நாங்கள் அனுக்ரஹம் செய்கிறோம் என்பது மிகவும் குழந்தைத்தனமான எண்ணம். நன்றாக எமது வார்த்தையை கவனித்து பொருள் கொள்ள வேண்டும். எதற்காக இந்த ஜீவ அருள் ஓலைக்கு (ஜீவநாடி) இங்கு வருகின்ற அனைவரையும் இழுத்து வந்து விதவிதமான வாக்குகளைக் கூறி விதவிதமான தேர்வுகளை வைக்கிறோம் என்றால் இங்கு மனித நிலையிலே வெறும் தோற்றத்தில் மனிதனாக குணத்தில் மிருகமாக இருக்கலாம். பிறகு தோற்றத்திலும் குணத்திலும் மனிதனாக இருக்கலாம். தோற்றத்திலும் குணத்திலும் மனிதனைவிட மேம்பட்ட மாமனிதனாக இருக்கலாம் புனிதனாக இருக்கலாம்.

இதையெல்லாம் தாண்டி ஒவ்வொரு மனித ஆத்மாவையும் சித்த ஆத்மாவாக மாற்ற வேண்டும். இதுதான் இறைவன் எங்களுக்கிட்ட (சித்தர்கள்)கட்டளை. ஒவ்வொரு மனிதனையும் சித்தர்களாக மாற்ற வேண்டும் என்றால் அது எத்தனை பெரிய இரசவாதம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அது எளிமையான காரியம் அல்ல. செம்பை தங்கமாக்குவதோ அல்லது இரும்பை பொன்னாக்குவதோ அல்ல. அது மிக மிக எளிது. ஆனால் மனிதனை குறைந்தபட்சம் மனிதனாக்கி அவனை மாமனிதனாக்கி அந்த மாமனித நிலையிலிருந்து மேலும் புனிதனாக்கி அவனை நல்ல நிலையிலே சித்தனாக்க வேண்டும். அப்படி சித்த நிலை நோக்கி செல்ல வேண்டும் என்றால் நாங்கள் கற்பிக்கும் பாடங்கள் கடினமாகத்தான் இருக்கும். அந்த பாடங்களை சரியாக உள்வாங்கி எவன் புரிந்து கொள்கிறானோ லோகாய (உலகியல் ரீதியாக) கஷ்டங்களையெல்லாம் ஒதுக்கி வைத்து எம் பின்னால் வருகிறானோ அவனை நாங்கள் ஒரு சித்தனாக்கி விடுவோம். சித்தனாக்கி விட்டால் பிறகு அவன் எதற்கு இன்னொரு சித்தனை நாட வேண்டும்? அவன் இறையைகூட நாட தேவையில்லை. ஒவ்வொரு ஆணையும் பெண்ணையும் அந்த நிலைக்கு அழைத்து போக வேண்டும் என்றுதான் நாங்கள் இந்த ஜீவ அருள் நாடி என்று நாமமிட்டு மூன்று முனிவர்களும் போராடிக் கொண்டிருக்கிறோம்.

சுலோகம் -70 # 71

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் #23

ஆத்மாவை ஆயுதங்கள் வெட்டுவதில்லை. நெருப்பு எரிப்பதில்லை. தண்ணீர் நனைப்பதில்லை. காற்று உலர வைப்பதில்லை.

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் #24

ஆத்மாவை ஆயுதங்கள் மூலம் வெட்டிப் பிளந்து அழிக்க முடியாது. எரித்து அழிக்க முடியாது. நீரினால் கரைத்து அழிக்க முடியாது. காற்றின் மூலம் உலர்த்தி அழிக்க முடியாது. நித்தியமானவன் உறுதியுடையவன் அசையாமல் என்றும் இருப்பவன்.

இந்த இரண்டு சுலோகத்தின் கருத்து என்ன?

ஒரு பொருளை அழிக்க வேண்டுமென்றால் அந்த பொருளுக்குள் ஏதேனும் ஒன்றை புகுத்தி அழிக்க வேண்டும். ஆத்மா எதனாலும் புக இயலாதபடி நுண்ணியதாகவும் அசையாததாகவும் அழிக்க இயாலாதபடி உறுதியாகவும் எப்போதும் இருக்கும் நித்தியமானாதாகவும் உள்ளது. ஆகையால் இந்த பிரபஞ்சத்தில் உள்ள எந்த பொருள்களாலும் எந்த தன்மையாலும் ஆத்மாவை அழிக்க முடியாது. துவைதம் என்ற சித்தாந்த தத்துவத்தை உலகில் நிலைநாட்டிய மத்வர் தனது விளக்கத்தில் பரம்பொருளை எப்படி யாராலும் எதனாலும் எப்போதும் அழிக்க முடியாதோ அதே போல் பரம்பொருளின் பிரதிபிம்பமாகவும் அதன் அம்சமாகவும் இந்த ஆத்மா இருப்பதால் ஆத்மாவை அழிக்க முடியாது என்று கூறிப்பிடுகிறார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 97

கேள்வி: அரச மரம் பற்றி

பல அரசர்களே மரம் போல் இருக்கிறார்களப்பா. இறைவனின் அருளாலே அரச மரத்திலே பலவிதமான ஆற்றல்கள் போதிந்திருப்பதை மனிதர்கள் மெல்ல மெல்லதான் புரிந்து கொள்கிறார்கள். மனித சிந்தனையிலே பெரும்பங்கு வகிப்பது மனிதன் கூறுவது போல மூளையாகும். அந்த மூளை நன்றாக வேலை செய்வதற்கு அயர்வுராமல்(சோர்வுராமல்) இருப்பதற்கு வேண்டிய வேதிப்பொருள்களை எல்லாம் தூண்டிவிடக்கூடிய நிலை அந்த அரச மரத்தை சுற்றியுள்ள காற்றிலே இருக்கிறது. இதோடு மட்டுமல்லாமல் பெண்களுக்கு கருப்பை தொடர்பான பிரச்சனைகள் இருக்கும் பட்சத்திலே அடிக்கடி அரச மரத்தடியிலே உள்ள விநாயகப் பெருமானையும் நாக தெய்வங்களையும் வணங்கி பலமுறை சுற்றி வந்தால் சில நாழிகை அங்கு அமர்ந்தால் கட்டாயம் அங்குள்ள விநாயகர் காப்பாற்றுகிறாரோ இல்லையோ அந்த அரச மரத்தின் மூலிகைத் தன்மை கட்டாயம் தேகத்தைக் காப்பாற்றும். எனவே இது போன்ற ஒவ்வொரு விருக்ஷத்திடமிருந்தும் அற்புதமான மூலிகைப் பயன்கள் காற்றின் மூலம் மனித சுவாசத்தின் மூலம் உள்ளே செல்கிறது. இதனை மனிதன் நன்றாக புரிந்து கொண்டு அந்த இடத்திலே இருக்கும் பொழுது இறை சிந்தனையோடும் வேறு தேவையற்ற சிந்தனைகளும் இல்லாமல் இருந்து அமைதியாக வாய் வழியாக இல்லாமல் ஆழ்ந்த பெருமூச்சை நாசியின் வழியாக விட்டு இழுத்தால் கட்டாயம் நல்ல பலனை பெறலாம்.

ஒவ்வொரு மரத்தினாலும் நல்ல பலன் உண்டு. சில மரங்கள் தீய பலனைத் தருவதாக மனிதன் எண்ணலாம். அதை நேரடியாக தீய பலன் என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. அது யாருக்கு உகந்ததோ அவர்கள் அந்த மரத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். கூறுங்கால் புளிய விருக்ஷம் எனப்படுவது அதிக அனல் உஷ்ணம் அங்கு தங்குவது கூடாது என்று கூறப்படுவது உண்மைதான். ஆனால் அதிக அளவு குளிர் தேகம் கொண்டவர்கள் சீதளக் குற்றம் உள்ளவர்கள் அங்கு தாராளமாக தங்கலாம்.

கேள்வி: அம்மையப்பன் தான் உலகம் என்பதன் பொருள்

இறைவனையும் இறைவியையும் தாய் தந்தையாக பாவிக்க வேண்டும் என்கிற பொருளும் உண்டு. ஒவ்வொரு குழந்தையும் தன் பெற்றோர்களை இறைவனுக்கு சமமாக மதிக்க வேண்டும் என்கிற பொருளும் உண்டு.

தீர்த்த மலை தீர்த்தகிரிசுவரர் கோவில்

ராமர் இரண்டு இடங்களில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து சிவபூஜை செய்திருக்கிறார். ஒன்று ராமேஸ்வரம். மற்றொன்று தீர்த்தங்கள் நிறைந்து காணப்படும் இந்த தீர்த்தமலை. இங்குள்ள இறைவனின் பெயர் தீர்த்தகிரீஸ்வரர். இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் அம்பாளின் பெயர் வடிவாம்பிகை. இத்தல விநாயகர் சித்தி விநாயகர் என்ற பெயருடன் அருள்பாலித்து வருகிறார். இங்குள்ள தல விருட்சம் பவளமல்லி மரம். இந்த தீர்த்தமலையில் இருந்து பல நீரூற்றுகள் உற்பத்தியாகின்றன. இந்த நீரூற்றுகளை கொண்டே இதற்கு தீர்த்த மலை என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. கோவில் இருக்கும் தீர்த்த மலைக்கு கிழக்கில் இந்திர தீர்த்தம் இருக்கிறது. மேற்கே ராம தீர்த்தம் வாயு தீர்த்தம் வருண தீர்த்தம் உள்ளது. வடக்கே அனுமந்த தீர்த்தம் உள்ளது. தெற்கே எம தீர்த்தம் உள்ளது. மலையின் உச்சியில் வசிஷ்டர் தீர்த்தம் உள்ளது. மேலும் அக்னி தீர்த்தம் கௌரி தீர்த்தம் குமாரா தீர்த்தம் அகத்தியர் தீர்த்தங்கள் இமய தீர்த்தம் கந்த தீர்த்தம் உள்ளன. இதில் ராம தீர்த்தம் ஒரு பாறையின் உச்சியில் இருந்து எப்போதும் கொட்டிக் கொண்டிருக்கும் கோடைக் காலத்திலும் இந்த தீர்த்தம் கொட்டுவது நின்றதில்லை. தீர்த்தங்களால் சூழப்பட்ட அற்புதமான மலையாக தீர்த்தமலை நோய் தீர்க்கும் தலமாக விளங்குகிறது.

வனவாசத்தின் போது ராமனோடு வனத்தில் இருந்த சீதையை மாய வேலைகள் செய்து கடத்திச் சென்றான் ராவணன். சீதையை மீட்பதற்காக ராவணனுடன் யுத்தம் செய்தார் ராமபிரான். அந்த யுத்தத்தில் ராவணன் வதம் செய்யப்பட்டான். இதையடுத்து ராமர் அயோத்தி திரும்பினார். வழியில் இந்த தலத்திற்கு வந்தபோது சிவபூஜை செய்ய விரும்பினார். இங்கு சிவலிங்க பிரதிஷ்டை செய்து பூஜைக்குத் தேவையான தீர்த்தத்தை காசியில் இருந்து கொண்டு வரும்படி அனுமனிடம் ராமபிரான் கூறினார். ஆனால் அனுமன் வந்து சேருவதற்கு கால தாமதம் ஆனது. எனவே ராமர் தனது பாணத்தை எடுத்து அங்கிருந்த மலை மீது விட்டார். ராமர் விட்ட பாணம் பாறையில் பட்ட இடத்தில் இருந்து தீர்த்தம் உண்டாகியது. அந்த தீர்த்தத்தைக் கொண்டு ராமர் சிவபூஜையை நடத்தி முடித்தார். ராமரின் பாணத்தால் உருவானது என்பதால் இதற்கு ராம தீர்த்தம் என்று பெயர். இதற்கிடையில் காசியில் இருந்து அனுமனும் தீர்த்தம் கொண்டு வந்து சேர்ந்து விட்டார். தான் வருவதற்குள் ராமபிரான் தீர்த்தம் உண்டாக்கி பூஜையை நிறைவு செய்து விட்டதால் கோபம் கொண்ட அனுமன் தான் கொண்டு வந்த தீர்த்தத்தை வீசி எறிந்தார். அது இத்தலத்தில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தென்பெண்ணை ஆற்றின் கரையில் விழுந்தது. அது அனுமந்த தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.

ராம தீர்த்தம்

மரம் செடி கொடி இலைகளில் இருந்தும் பாறைகளில் இருந்தும் இறைவனால் வெளிப்படுத்தப்பட்ட அரிய தீர்த்தம் இது. ராமரால் உருவாக்கப்பெற்ற இந்த தீர்த்தத்தில் ஸ்ரீ ராம ஜெயம் என்று தெளித்துக் கொள்வதாலும் பருகுவதாலும் சகல பாவங்களும் நீங்கும் என்று புராணம் கூறுகிறது.

அனுமன் தீர்த்தம்

அனுமான் ஒரு கிண்ணம் கங்கை நீரை இந்த பகுதியில் தெளித்ததாக புராணம் தெரிவிக்கிறது. மேலும் இந்த பகுதியில் இருக்கும் ஒரு பாறையில் இருந்து ஒரு நீரூற்று வருகிறது. இதன் தண்ணீர் மிக இனிப்பாக இருக்கும். இந்த நீரூற்றின் சிறப்பு என்னவென்றால் பென்னாற்றில் நீர் வற்றினாலும் இந்த நீரூற்று மட்டும் வற்றாமல் ஓடிக்கொண்டிருக்கும். அனுமந்த தீர்த்தத்தில் குளித்து விட்டு இங்குள்ள ராம தீர்த்தத்தில் குளித்தால் பாவங்கள் நீங்கும் என்று புராணம் கூறுகிறது.

குமார தீர்த்தம்

முருகனை தேவ சேனாதிபதியாக நியமித்த போது இத்தீர்த்தத்தால் முருகனுக்கு அபிஷேகம் செய்தனர். முருகனுக்காக வழங்கப்பட்ட இத்தீர்த்தத்தை தெளித்துக் கொள்வதாலும் பருகுவதாலும் உயர்ந்த வாழ்வும் ஞானமும் பெருகும் என்று புராணம் கூறுகிறது.

கௌரி தீர்த்தம்

இது அன்னை வடிவாம்பிகைக்காக வழங்கப்பெற்றது. இத்தீர்த்தத்தை கொண்டு இறைவனை வழிபாடு செய்ததால் வடிவாம்பிகை இறைவனை மணந்து இறைவனின் இடப்பாகத்தில் இடம் பெற்றாள் என புராணம் கூறுகிறது. இத்தீர்த்தத்தை தெளித்துக் கொண்டும் பருகியும் இறைவனையும் இறைவியையும் வணங்கினால் சகல தோசங்களும் நீங்கும். இல்லறம் நல்லறமாக இருக்கும் என்று புராணம் கூறுகிறது.

அகத்திய தீர்த்தம்

அகத்திய மாமுனிவரின் குன்ம நோய் நீங்க இறைவனால் அருளப்பெற்றது. இத்தீர்த்தம் தாமிர சத்தும் மூலிகைகளின் சக்தியும் கொண்ட இத்தீர்த்தத்தை தெளித்துக் கொள்வதாலும் பருகுவதாலும் உணவு சமைக்கவும் பயன்படுத்தி வந்தால் குன்ம நோய் (அல்சர்) நீங்கி வயிற்று வலியும் குணமடையும் என்று புராணம் கூறுகிறது.

அக்னி தீர்த்தம்

அக்னி தேவனின் பெண்ணாசையால் ஏற்பட்ட பாவங்களைப் போக்கிய தீர்த்தம் இது. இதனால் உடலின் தட்பவெப்பம் சமமாகும். ஆஸ்துமா சம்பந்தமான நோய்கள் குணமாகும் என்று புராணம் கூறுகிறது.

தீர்த்தகிரிசுவரர் கோவிலில் பல கல்வெட்டுகள் காணப்படுகின்றன என்றாலும் இவற்றில் பழமையான கல்வெட்டு மேலைக் கங்க மன்னனான மல்லிதேவ மகாராசர் என்ற மன்னன் இந்த இறைவனுக்கு ஆலம்பாடி என்ற சிற்றூரை தானமாக அளித்தார் என்று கி.பி ஆறாம் நூற்றாண்டு கல்வெட்டே பழமையானதாக உள்ளதால் இக்கோயில் ஆறாம் நூற்றாண்டுக்கு முற்பட்டக் கோயிலாகும். தீர்த்தகிரிசுவரர் கோவில் ஏழாம் நூற்றாண்டில் சோழர் மற்றும் பாண்டியர்களால் கட்டப்பட்டது. இதற்கான பல கல்வெட்டுக்கள் இங்கு காணப்படுகின்றன. ராஜேந்திரச் சோழன் தினந்தோறும் இந்த கோவிலுக்கு வந்து அவர் கையாலே சிவபூசை செய்வார் என்று கல்வெட்டுகளின் மூலமாக அறிந்து கொள்ளலாம். தீர்த்தகிரிப் புராணம் கி.பி 16 ஆம் நூற்றாண்டில் சைவ எல்லப்ப நாவலர் என்பவரால் எழுதப்பட்டது. இந்நூல் சிறப்புப் பாயிரம் சாற்றுக்கவி பாயிரம் நீங்களாக நானூற்று முப்பத்திரண்டு பாடல்களைக் கொண்டுள்ளது. அவை 14 சருக்கங்களாக அமைக்கப்பட்டுள்ளன. என்னும் சருக்கங்கள் நீங்கலாக மற்ற 9 சருக்கங்கள் தீர்த்தங்களின் பெயரைக் கொண்டுள்ளன. கோயில் உள்ள முருகன் மீது அருணகிரிநாதர் நான்கு பாடல்கள் பாடியுள்ளார்.

சுலோகம் -69

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் #22

மனிதன் எப்படி நைந்து போன பழைய துணிகளை நீக்கி விட்டு புதிய துணிகளை எடுத்துக் கொள்கிறானோ அது போலவே ஆத்மாவானது பழைய உடலை விட்டு புதிய உடல்களை சென்று அடைகிறது.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

தாயானவள் தன் குழந்தைக்கு பழைய துணிகளை கழற்றிவிட்டு புதிய துணிகளை அணிவிக்கிறாள். அப்போது குழந்தை அழுகிறது. குழந்தை அழுவதைக் கண்டு தாய் கவலைப் படுவதில்லை. புதிய துணிகளை அணிவித்து மகிழ்கிறாள். அதுபோலவே மனிதன் மரணத்தைப் பற்றி பயப்படுவதையும் அழுவதையும் கண்டு கவலைப்படாத இறைவன் ஆத்மா இருக்கும் உடலுக்கான தேவை மறையும் போது ஆத்மாவின் நன்மைக்காக அடுத்த உடலைக் கொடுக்கிறார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 96

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 96

கேள்வி: பெண்கள் மூத்தோனை (விநாயகரை) எவ்வாறு வழிபடுவது?

பெண்களுக்கு மூத்தோன் என்றால் முதலில் கணவன் என்று நாங்கள் கூறுவோம். கணவனை வணங்கு என்று நாங்கள் பெண்களைப் பார்த்து கூற இயலுமா இக்காலத்திலே? இன்னொரு வகையில் பார்த்தால் உடன் பிறந்தவர்களில் யார் மூத்தவர்களோ அவர்களை வணங்க வேண்டும். இவையெல்லாம் ஒருபுறம் இருக்க விநாயகப்பெருமானை வணங்குகின்ற தன்மையைத்தான் நீ வினாவாகக் கேட்டிருக்கிறாய். இறைவனை வணங்குவதற்கென்று விதிமுறைகள் என்று வேதங்களிலும் ஆகமங்களிலும் எத்தனையோ கூறப்பட்டிருந்தாலும் கூட எம்மிடம் வருகின்ற சேய்களுக்கு(பிள்ளைகளுக்கு) நாங்கள் அதனையெல்லாம் வலியுறுத்துவதில்லையப்பா. ஏனென்றால் விதிமுறைகளைக் கூறினால் பிறகு விதிமுறைகள்தான் அங்கே இருக்குமே தவிர பக்தி இல்லாமல் போய் விடும். விதிமுறைகள் புரிவதற்காக வகுக்கப்பட்டவை. அதனையே பிடித்துக் கொண்டு மனிதன் தொங்குவதுதான் வேதனையிலும் வேதனை.

காசியிலே இருந்தால் முக்தி என்றால் இவன் காசியில் இறந்தால் முக்தி என்று எண்ணிக் கொண்டிருக்கிறான். காசி என்றால் ஆக்ஞா சக்கரம். அங்கே நினைவை நிறுத்தி நிறுத்தி நிறுத்தி சதாசர்வகாலம் அந்த காசியிலே (புருவ மத்தி) இருந்தால் அது முக்திக்கு வழிவகுக்கும். பஞ்சமா பாதகங்களை செய்துவிட்டு காசியிலே இறந்தால் முக்தியா கிட்டும்? தனி நரகமே ஏற்படுத்த வேண்டுமல்லவா? தேர் இழுக்க வேண்டுமென்றால் குண்டலினி எனப்படும் தேரினை எண்ணங்கள் என்னும் கயிற்றால் வைராக்யம் எனும் வலிமையால் மேலே ஏற்றி ஏற்றி மூலாதாரம் ஸ்வாதிஷ்டானம் மணிப்பூரகம் என்று ஒவ்வொரு ஆதாரமாகக் கடந்து சஹஸ்ர ஆதாரத்திற்கு கொண்டு வந்து அதனை நிலைநிறுத்த வேண்டும். அந்தத் தேர் புறப்பட்ட இடத்திற்கு வந்துவிடும். இந்தத் தேர் மேலே வந்துவிட்டால் கீழே இறங்குவது கடினம். ஆனால் வைராக்யம் பெற்ற ஞானிகள் மேலும் கீழும் இந்த குண்டலினி தேரையும் இழுப்பார்கள். இதற்கு உவமானமாக ஒரு தேரை வைத்து அதனுள் சுவாமியை வைத்து இழுப்பது என்று சுட்டிக்காட்டினால் அந்தத் தேர் இழுப்பதையே பெருமையாக வைத்துக் கொண்டு இதிலும் கலவரத்தை வளர்த்துக் கொண்டு வாழ்கின்ற மனித கூட்டத்திற்கு எதனைக் கூறுவது? எனவே விதிமுறைகளை விட்டுவிட்டு ஆத்மார்த்தமாக ஒவ்வொரு ஆணும் பெண்ணும் எப்படியெல்லாம் இறைவனை வணங்கத் தோன்றுகிறதோ பாசத்திற்குரிய தந்தையை அன்பிற்குரிய மனைவியை பாசத்திற்குரிய அன்னையை குழந்தையை எப்படியெல்லாம் பார்க்கிறார்களோ அப்படி பார்த்து அப்படி பேசிக்கொண்டால் அதுதான் உண்மையான வழிபாடு.

சுலோகம் -68

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் #21

அர்ஜூனா எந்த மனிதன் இந்த ஆத்மா அழிவற்றது நித்தியமானது பிறப்பற்றது மாறுதலற்றது என்று அறிகிறானோ அவன் கொல்வது யாரை? கொல்விப்பது எவனை?

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

ஆத்மவைப் பற்றிய உண்மையை அறிந்து கொண்டவன் அறத்தைக் காக்க தர்மத்தின் படி போர் புரிய யுத்த களம் சென்று மனம் புத்தியுடன் கூடிய உடலுடன் இணைந்து ஆத்ம தத்துவத்துடன் இருக்கும் இன்னொரு உடலை அழிக்கும் போது இங்கு நான் கொல்லவில்லை என்றும் இங்கு யாரும் கொல்லப்படவில்லை என்றும் அழியக்கூடிய உடல் தர்மப்படி அழியக்கூடிய இன்னொரு உடலை அழித்து விட்டது என்று மட்டுமே நினைப்பான். ஆகவே யாருக்காகவும் எதற்காகவும் வருத்தப்படத் தேவையில்லை என்று வருத்தப்பட்டுக் கொண்டிருக்கும் அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.