அனுமனை பிடித்த சனீஸ்வரர்

ராமர் ராவணனை அழிக்க வானர சேனைகளுடன் இலங்கை செல்வதற்காக கடலில் பாலம் அமைக்கும் பணியை மேற்கொண்டிருந்தார். இந்த பணியில் சுக்ரீவன் அங்கதன் அனுமன் மற்றும் வானர சேனைகளும் ஈடுபட்டிருந்தன. அனுமனும் பாறைகளை பெயர்த்தெடுத்து அவற்றின் மீது ஜெய் ஸ்ரீராம் என்று செதுக்கி கடலில் எறிந்து கொண்டிருந்தார். அப்போது அங்கே சனீஸ்வர பகவான் தோன்றி ராமரை வணங்கி அனுமனுக்கு ஏழரைச் சனி பிடிக்கும் காலம் தொடங்குகிறது. என்னை தவறாக எண்ணாதீர்கள். என் கடமையை செய்ய அனுமதி தாருங்கள் என்று வேண்டினார். எங்கள் கடமையை நாங்கள் செய்கிறோம். அது போல் உங்கள் கடமையை நீங்கள் செய்யுங்கள். முடிந்தால் அனுமனை பிடித்து பாருங்கள் என்றார் ராமர். உடனே சனீஸ்வரன் அனுமன் முன் தோன்றி அனுமனே நான் சனீஸ்வரன் இப்போது உனக்கு ஏழரைச் சனி ஆரம்பமாகிறது. உன்னை பிடித்து ஆட்டிப்படைக்க உன் உடலில் ஓர் இடம் கொடு என்றார்.
சனீஸ்வரா ராவணனின் சிறையில் இருக்கும் சீதையை மீட்க நாங்கள் இலங்கை நோக்கி செல்ல இருக்கிறோம். அதற்காகத்தான் இந்த சேதுபால பணியை ராம சேவையாக ஏற்று தொண்டாற்றி கொண்டிருக்கிறோம். இந்த பணி முடிந்ததும் நானே தங்களிடம் வருகிறேன். அப்போது என் உடல் முழுவதுமே தாங்கள் வியாபித்து என்னை ஆட்கொள்ளலாம். அனுமனே காலதேவன் நிர்ணயித்த கால அளவை நான் மீற முடியாது நீயும் மீறக்கூடாது. உன்னை நான் பிடிக்கும் நேரம் நெருங்கிவிட்டது. உடனடியாக சொல் உன் உடலின் எந்த பாகத்தில் நான் அமரலாம் என்று கேட்டான்.

ராம வேலையில் என் கைகள் ஈடுபட்டுள்ளன. அதனால் அங்கே இடம் தர முடியாது. என் கால்களில் உங்களுக்கு இடம் தந்தால் அது உங்களுக்கு நான் தரும் அவமரியாதையாகும். எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம். எனவே நீங்கள் என் தலை மீது அமர்ந்து தங்கள் கடமையைச் செய்யுங்கள் என்று சனிஸ்வரரை தலை வணங்கி நின்றார் அனுமன். அவரின் தலை மீது அமர்ந்து கொண்டார் சனீஸ்வரன். இதுவரை சிறிய சிறிய பாறைகளை தூக்கி வந்த அனுமன் சனீஸ்வரன் தன் தலை மீது அமர்ந்த பின்பு மிகப்பெரிய பாறைகளை பெயர்த்து எடுத்து தலை மீது வைத்துக்கொண்டு கடலை நோக்கி நடந்து பாறைகளை கடலில் வீசினார். பெரிய பெரிய பாறைகளின் பாரத்தை அனுமனுக்கு பதிலாக அவர் தலை மீது அமர்ந்திருந்த சனீஸ்வரனே சுமக்க வேண்டியதாயிற்று. அதனால் சனீஸ்வரனுக்கே கொஞ்சம் பயம் வந்துவிட்டது. தனக்கே ஏழரைச் சனி பிடித்துவிட்டதா என்று சிந்தித்தார். அனுமன் ஏற்றிய சுமை தாங்காமல் அவரது தலையில் இருந்து கீழே குதித்தார். சனீஸ்வரா ஏழரை ஆண்டுகள் என்னை பிடிக்க வேண்டிய தாங்கள் ஏன் இவ்வளவு சீக்கிரம் விட்டுவிட்டீர்கள் என்று கேட்டார் அனுமன். அதற்கு சனீஸ்வரன் உன்னை ஒரு சில விநாடிகள் பிடித்ததால் நானும் பாறைகளை சுமந்து சேது பாலப்பணியில் ஈடுபட்டு புண்ணியம் பெற்றேன். சிவனின் அம்சம் தாங்கள். முந்தைய யுகத்தில் தங்களை நான் பிடிக்க முயன்று வெற்றி பெற்றேன். இப்போது தோல்வி அடைந்து விட்டேன் என்றார் சனீஸ்வரன். அதற்கு அனுமன் இல்லை இல்லை இப்போதும் தாங்களே வென்றீர்கள். ஏழரை ஆண்டுகளுக்குப் பதில் ஏழரை விநாடிகளாவது என்னை பிடித்துவிட்டீர்கள் என்றார் அனுமன். அதைக்கேட்டு மனம் மகிழ்ந்த சனீஸ்வரன் அனுமனே உனக்கு நான் ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என விரும்புகிறேன். என்ன வேண்டும் கேள் என்றார். ராம நாமத்தை பக்தி சிரத்தையோடு பாராயணம் செய்பவர்களை உங்களது ஏழரைச் சனி காலத்தில் ஏற்படும் துன்பங்களில் இருந்து நீங்களே காத்தருள வேண்டும் என வரம் கேட்டார் அனுமன். சனி பகவானும் அந்த வரத்தை தந்து அருளினார். ராமநாமம் சொல்லி அனுமனை வழிபட்டால் சனி பகவானால் ஏற்படும் துன்பத்தில் இருந்த நம்மை காத்துக் கொள்ளலாம்.

ராமருடன் அனுமன் புரிந்த போர்

ராமர் ராவண வதமெல்லாம் முடிந்து அயோத்தி திரும்பினார். ராமருக்கு பட்டாபிஷேகமும் விமரிசையாக நடைபெற்றது. யாகம் ஒன்றை செய்ய வசிஷ்டர் விஸ்வாமித்திரர் போன்ற பல மகரிஷிகள் முன்னிலையில் யாகம் ஒன்றை செய்ய முடிவு செய்த ராமர் அதற்கான ஏற்பாடுகளை செய்ய ஆணையிட்டார். அயோத்தி நகருக்கு வெளியே ஒரு பரந்து விரிந்த இடம் தேர்வு செய்யப்பட்டு யாகம் விமரிசையாக துவங்கியது. அப்போது ராமனின் ஆளுகைக்கு உட்பட்ட தேசம் ஒன்றை ஆண்டு வந்த சகுந்தன் என்கிற அரசன் வந்தான். யாகம் ஒன்று மிகப் பெரிய ரிஷிகளை கொண்டு நடத்தப்பட்டு வருவதை பார்த்து வியந்தவன் உள்ளே சென்று அவர்களிடம் ஆசி பெற தீர்மானித்தான். ஆனால் வேட்டையாடி விட்டு திரும்பிக் கொண்டிருந்த காரணத்தால் அப்படியே யாகசாலைக்குள் செல்ல விருப்பமின்றி வெளியே நின்றபடி உள்ள இருந்த ரிஷிகளை பார்த்து வசிஷ்டாதி முனிவர்களுக்கு என் வணக்கங்கள் என்று கூறி விட்டுச் சென்றான். இதை நாரதர் கவனித்துவிட்டார். நேராக விஸ்வாமித்திரரிடம் சென்று விஸ்வாமித்ர மகாமுனிவரே ராமனின் ஆளுகைக்குட்பட்ட ஒரு நாட்டின் சிற்றரசன் சகுந்தன். அவன் இந்த யாகசாலை முன்பு நின்று வசிஷ்டாதி முனிவர் யாவருக்கும் என் வணக்கங்கள் என்று கூறி விட்டுப் போகிறான். வசிஷ்டரைப் போன்று தாங்களும் ராமருக்குக் குருதானே? தாங்களும் தானே முக்கியப் பொறுப்பேற்று இந்த யாகத்தை நடத்துகிறீர்கள்? தங்கள் பெயரையும் சொல்லிச் சகுந்தன் வணக்கத்தைத் தெரிவித்திருக்க வேண்டாமா? வேண்டுமென்றே விஷமத்தனமாகத் தங்களை இந்தச் சிற்றரசன் அவமானப்படுத்தியிருப்பது எனக்கு வேதனையாக இருக்கிறது என்று தன் கலகத்தை ஆரம்பித்தார். இதனைக் கேட்ட விஸ்வாமித்திரர் கோபம் கொண்டார். என்ன ஆணவம் அவனுக்கு அவனை இப்போதே என்று சபிக்க எத்தனித்தார். உடனே இதனை தடுத்த நாரதர் குறுக்கிட்டு விஸ்வாமித்திரரே சற்றுபொறுங்கள். சகுந்தனை சபித்து தங்கள் தவவலிமையை ஏன் குறைத்துக் கொள்கிறீர்கள் ராமனை அழைத்து சகுந்தனை தண்டிக்கும் பொறுப்பை அவரிடம் விட்டுவிடுங்கள் என்றார். நாரதரின் கருத்தை ஏற்றுக் கொண்டார் விஸ்வாமித்திரர்.

ராமனை தன்னை வந்து சந்திக்கும்படி பணித்தார். இராமனும் விஸ்வாமித்திரரை வந்து சந்தித்தார். நடந்தவற்றை அவரிடம் விளக்கிய விஸ்வாமித்திரர் உன் குருவை அவமதித்தவனுக்கு என்ன தண்டனை தரப்போகிறாய் என்று கேட்டார். நீங்கள் என்ன சொன்னாலும் அதை நிறைவேற்ற தயாராக இருக்கிறேன் என்றார் ராமர். இன்று மாலை சூரியன் மறைவதற்குள் சகுந்தனின் தலை என் காலடியில் கிடக்கவேண்டும் என்கிறார் விஸ்வாமித்திரர். சகுந்தனை தேடி புறப்பட்டார் ராமர். நாரதர் உடனே சகுந்தனிடம் ஓடிச்சென்று நடந்தவற்றை சொல்லி உன்னை தண்டிக்க ராமரிடம் சொல்லியிருக்கிறார் விஸ்வாமித்தரர். உன் தலையை துண்டிக்க ராமர் வந்து கொண்டிருக்கிறார் என்றார். இதனை கேட்டு திடுக்கிட்ட சகுந்தன் ராமரை எதிர்க்க என்னால் முடியாது ஆகையால் என் தலையை நீங்களே துண்டித்து ராமரிடம் கொடுத்து விடுங்கள் என்று உடைவாளை நாரதர் கைகளில் கொடுத்தான். இதனை கேட்ட நாரதர் உன் மீது எந்த தவறும் இல்லை எனும் போது நீ ஏன் வீணாக உயிர்த்தியாகம் செய்யவேண்டும்? நீ மாண்டுவிட்டால் உன் மனைவி மக்களுக்கு குடிகளுக்கு யார் இருக்கிறார்கள் என்றார். அதற்கு சகுந்தன் இதிலிருந்து தப்பிக்க நீங்கள் தான் ஒரு வழி சொல்லுங்கள் என்று கேட்டுக் கொண்டான். உனது நாட்டின் எல்லையில் இருக்கும் கானகத்தில் உள்ள மலைப் பகுதியில் தான் அனுமனின் தாய் அஞ்சனா தேவி வசிக்கிறாள். அவளிடம் சென்று அவரனடைந்து விடு. அவள் ஒருவளால் தான் உன்னை காப்பாற்ற முடியும் என்றார். சகுந்தனும் உடனே அஞ்சனா தேவி வசிக்கும் கானகத்திற்கு சென்று அவளை தேடினான். நேரம் கடந்து சென்று கொண்டிருந்தது. அஞ்சனா தேவியை கண்டுபிடிக்க முடியவில்லை. இறுதியில் தீ மூட்டி அஞ்சனா தேவி சரணம் என்று கூறியபடி அதில் குதித்து உயிர்த் தியாக செய்ய முயன்றான் சகுந்தன். அப்போது அஞ்சனாதேவி அவன் முன் வந்து எதற்காக என்னை தேடிக்கொண்டிருந்தாய்? தற்போது உயிரையும் அதற்காக தியாகம் செய்ய துணிந்து விட்டாய் என்று கேட்டாள். அதற்கு சகுந்தன் எனக்கு அடைக்கலம் கொடுங்கள் அது உங்களால் மட்டும் தான் இப்போது முடியும் என்றான். அதற்கு அந்தனாதேவி என்ன விபரம் என்று சொல் என்று கேட்டாள். எனக்கு அடைக்கலம் கொடுப்பதாக முதலில் வாக்கு கொடுங்கள் அதன் பிறகு சொல்கிறேன் என்று சகுந்தன் பிடிவாதமாக நிற்றான். வேறு வழியில்லாமல் அஞ்சனா தேவி உனக்கு அபயமளிக்கிறேன் கவலைப்படாதே இப்போது விவரத்தை சொல் என்றாள்.

ராமர் என்னுடன் யுத்தம் செய்து தனது தலையை எடுக்க வந்து கொண்டிருக்கிறார் என்று நடந்தவைகள் அனைத்தையும் விவரமாக சொன்னான் சகுந்தன். அனைத்தையும் கேட்ட அஞ்சனா தேவி திடுக்கிட்டாள். இருப்பினும் கொடுத்த வாக்கின்படி சகுந்தனை காப்பது தன் கடமை என்பதால் அனுமனை தன் முன் வரும்படி நினைத்தாள். தாய் அஞ்சனாதேவி நினைத்த அடுத்த நொடி அனுமன் அங்கே தோன்றினான். என்னை அழைத்த காரணத்தை சொல்லுங்கள் தங்கள் கட்டளைக்கு காத்திருக்கிறேன் என்றார் அனுமன். அஞ்சனா தேவி அனைத்தையும் சொல்லி என்னிடம் சரணடைந்தவனை காப்பாற்ற வேண்டியது உன்கடமை என்று கூறி சகுந்தனை ராமனின் அஸ்திரத்திடமிருந்து காக்கும் பொறுப்பை அனுமனிடம் ஒப்படைத்தாள் அஞ்சனாதேவி. இக்கட்டான சூழ்நிலை தனக்கு ஏற்பட்டதை எண்ணி வருந்தினான் அனுமன். இருப்பினும் தாய் சொல்லை காப்பாற்ற வேண்டியது தன் கடமே என்று எண்ணிய அனுமன் உயிரினும் மேலான தனது ராமரையே எதிர்க்க துணிந்தான். தனது வாலால் ஒரு பெரிய கோட்டையை எழுப்பி அதனுன் சகுந்தனை அமரச் செய்து செய்து அதன் மேல் தான் உட்கார்ந்து கொண்டார் அனுமன். சகுந்தனை தேடி அந்தப் பகுதிக்கு வந்த ராமர் அவனை கண்டுபிடிக்க இயலாமல் சகுந்தனின் தலையை கொய்து வாரும் அஸ்திரத்தில் மந்திரத்தை செபித்து எய்தினார் அம்பை எய்தினார். ராமர் எய்த அஸ்திரம் மீண்டும் அவரது காலடியிலேயே வந்து வீழ்ந்தன. சக்தி மிக்க ராம பாணத்தை எய்தார் கூட தோற்று விட்டது. ராம பாணமும் திரும்பி அவரது காலடியில் விழுந்தது. ராமருக்கு ஒன்றும் புரியவில்லை. ராம பாணம் தோற்றதாக சரித்திரமேயில்லையே என்ன காரணம் என்று புரியாமல் யோசித்த படி நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த நாரதர் ராமா உனது எதிர்பக்கம் உற்றுக் கவனி காரணத்தை நீயே அறிவாய் என்றார். ராமர் எதிர் பக்கம் உற்று கவனித்தார்.

ராமரின் காதில் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் என்று ராம நாமம் ஒலிப்பது கேட்டது. இது அனுமனின் குரலாயிற்றே அவன் ஒருவனால் தான் இத்தனை பக்தியுடனும் தீர்க்க்கத்துடனும் ராம நாமத்தை கூற முடியும் என்று தீர்மானித்தார். ராமா நீ நினைப்பது சரிதான். அனுமன் அங்கே இராம நாமம் ஜபித்து கொண்டிருக்கிறான். உன்னை விட உன் நாமத்திற்கு சக்தி அதிகம். உன் நாமத்தை அனுமன் இதயப்பூர்வமாக செபித்துக் கொண்டிருக்கும்போது அவனைமீறி அவன் காவல் காத்துக்கொண்டிருக்கும் சகுந்தனை உன்னால் ஒன்றும் செய்ய முடியாது ராமபாணம் மட்டுமல்ல பிரம்மாஸ்திரம் கூட இதன் முன் பலிக்காது என்றார். இதற்குள் சினம் தணிந்த விஸ்வாமித்திரர் தன்னால் ஒரு நிரபராதியின் உயிர் போய் விடக்கூடாதே என்று அங்கு ஓடி வந்தார். ராமா நிறுத்து நிறுத்து சகுந்தனை ஒன்றும் செய்துவிடாதே என்றார். அதற்கு ராமர் குருநாதா என்னை மன்னிக்க வேண்டும். நீங்கள் சொன்னதை நான் இப்போது நிறைவேற்றா விட்டார் நான் வாக்கு தவறினான் ஆவேன். அதனால் உங்களின் கட்டளைப்படி சகுந்தனின் தலையை சூரிய அஸ்தமனத்திற்குள் தங்கள் காலடியில் சமர்ப்பிக்கிறேன் என்றார். தான் போட்ட முடிச்சை தானே அவிழ்க்க விரும்பிய நாரதர் சகுந்தனை வெளியே வரும்படி அழைத்து விஸ்வாமித்திரரின் பாதங்களில் அவன் தலைபடும் படி வீழ்ந்து வணங்கச் சொன்னார். இப்போது ராமரிடம் திரும்பிய நாரதர் ராமா விஸ்வாமித்திரரிடம் நீ கொடுத்த வாக்குப் படி இப்போது சகுந்தனின் தலை அவரது பாதத்தில் வீழ்ந்து கிடக்கிறது உன் வாக்கு பொய்க்கவில்லை. உனது ராம மந்திரத்தின் பெருமையை உலகிற்கு காட்டுவதற்காகவே இந்த லீலையை செய்ததாக நாரதர் கூறினார்.

ராவணன் கேட்ட தட்சணை

ராமர் சேது பாலத்தை கட்டும் பணியை துவக்கி வைக்க சிவ பூஜைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் வேண்டியனவற்றை தயார் செய்யுங்கள் என்று பணித்தார். ராமனின் விருப்பமறிந்த ஜாம்பவான் இத்தகைய சேதுவை துவக்கி சிவ பூஜை செய்து வைக்க மிகச்சிறந்த பண்டிதர் அவசியம் என்றுரைத்தார். அது போல் பண்டிதர்கள் யாராவது அருகே உள்ளனரா என்ற ராமனின் கேள்விக்கு இந்த சிவ பூஜையை செய்வதில் சிறந்த பண்டிதன் என்றால் அது ராவணன் ஒருவனே என்று தயக்கத்துடன் பதிலளித்தார் ஜாம்பவான். பதிலைக் கேட்ட ராமனின் பிறகென்ன நமது வேண்டுகோளுடன் அனுமனை அனுப்புங்கள். இப்பூஜையை சிறப்புற நடத்தி தர அப்பண்டிதரையே வேண்டி வரவழைத்து வாருங்கள். விரோதியின் தேசத்தை அடையும் வழிக்கு அவனை வைத்தே பூஜையா? இது நடக்குமா? சுக்ரீவனும் அவனின் சேனைகளும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

ராமனின் விருப்பமறிந்த அனுமன் இமைப்பொழுதில் இலங்கை அரண்மனையில் நின்றார். ராட்சசர்கள் அனுமனை சூழ்ந்தார்கள். ராட்சசர்களிடம் அனுமன் பேச ஆரம்பித்தார். நான் உங்களுடன் சண்டையிட வரவில்லை. நான் சிவ பூஜை செய்து வைக்க உத்தமமான சிவ பக்தன் ராவணனை நாடி வந்துள்ளேன். தன் முன்னால் நிற்கும் அனுமனின் கோரிக்கையை கேட்டு ராவணனின் சபையினர்கள் வியந்தார்கள். ராவணன் ஆச்சரியத்தோடு பார்த்தான் அனுமனை. சபையில் உள்ளவர்கள் இது ராமரின் சூழ்ச்சி என்றார்கள். அதற்கு அனுமன் சூழ்ச்சியால் தங்களை வெல்ல இயலுமா? தயவு கூர்ந்து எங்கள் வேண்டுகோளுக்கு செவிசாய்க்க வேண்டும் என்றார் அனுமன். அச்சமும் ஆவேசமும் திகைப்பும் கூடி எழுந்து நின்று அனுமனை நோக்கி கூச்சலிட்டவர்களை கையமரச்செய்த ராவணன் இந்த வேள்வியை நடத்தித் தர ஒப்புக் கொண்டு ராமர் இருக்குமிடத்திற்கு வந்தான் சிவ பக்தனான ராவணன்.

ராமருக்கு பூஜை நடத்தி தர வந்த ராவணன் ராமரைப் பார்த்து சங்கு சக்கரங்கள் மட்டும் இவரது கரங்களில் இருந்தால் விஷ்ணுவாகத்தான் இவர் தோன்றுவான் என ராவணன் எண்ணினான். பூஜை ஏற்பாட்டில் ஏதேனும் குறை இருந்தால் கூறுங்கள் என்றார் ராமர் அதற்கு ராவணன் தசரத மைந்தா பூஜைக்கான ஏற்பாடுகள் நேர்த்தியாக உள்ளது. ஆனால் திருமணம் ஆனவன் தனது துணைவியில்லாமல் செய்யும் எந்தக் காரியத்தையும் சாஸ்திரங்கள் அங்கீகரிப்பதில்லை அதனால் இந்த பூஜை செய்தும் உபயோகம் இல்லை என்று பதிலளித்தான் ராவணன். தாங்கள் தான் வேள்வியை சிறிதும் குறைவின்றி நடத்தி தர வேண்டும் என்றார் ராமர். சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்த ராவணன் ராமரிடம் ஒரு நிபந்தனை விதித்தான். பூஜைக்காக சீதையை சிறிது நேரம் அழைத்து வருகிறேன். பூஜை முடியும் வரை உங்கள் இருவருக்கும் இடையே எந்த பேச்சுவார்த்தையும் கூடாது மேலும் பூஜை முடிந்த மறுகணமே சீதையை அழைத்து சென்று விடுவேன் என்றான். நிபந்தனையை ஏற்றுக் கொண்டார் ராமர் இப்பூஜையை நடத்திக் கொடுத்தற்காக தட்சணையை தயவு கூர்ந்து தாங்கள் தெரியப்படுத்த வேண்டும் என்று கைக்கூப்பிய வண்ணம் பண்டிதரான ராவணனிடம் கேட்டார் ராமர். அதற்கு ராவணன் மெதுவான குரலில் ராமனுக்கு மட்டுமே கேட்கும் படி பதில் அளித்தான். என்னை பண்டிதராய் மதித்து சிவ பூஜை செய்ததற்கு நன்றி மேலும் சிவ பூஜைக்கு நான் தட்சணை வாங்குவதில்லை. தட்சணை தராததால் பலன் கிட்டாது என்று நீ எண்ணக்கூடும். யுத்தத்தில் ஒருவேளை நான் தோல்வியுற்று என் உயிர் பிரிய நேர்ந்தால் அத்தருணத்தில் நீ என் அருகில் இருக்க வேண்டும். இது மட்டும் தான் நான் எதிர்பார்க்கும் தட்சணை என்றான் சகல வேதங்களையும் சாஸ்திரங்களையும் கற்றுத் தேர்ந்த ராவணன். ராமரும் சம்மதிக்க சிவ பூஜை சிறப்பாக நடைபெற்றது. ராவணனின் எண்ணப்படி அவன் உயிர் பிரிந்திடும் சமயத்தில் போர்க்களத்தில் ராவணனின் அருகிலிருந்து ராமர் தன்னுடைய வாக்குறுதியை நிறைவேற்றும் வண்ணம் அருகிலிருந்து ஆசிர்வதி்த்தார். மன்னிக்க முடியாத சீதை அபகரணத்திற்காக வதம் செய்யப்பட்ட ராவணனுக்கு அவனுடைய உயர்ந்த வேத பண்டிதனுக்கான குரு தட்சிணை அவன் மரணத்தின் போது கிட்டியது.

சீதையின் ஆசிர்வாதம் பெற்ற ஆலமரம்

ராமர் வன வாசம் செய்த போது பித்ருக்களுக்கான சிரார்த்த தினம் வந்தது. உணவு தயாரிக்க உணவுப் பொருட்களை எடுக்க லட்சுமணர் காட்டிற்குள் சென்றான். லட்சுமணன் வருவதற்கு வெகு நேரமானது. ராமர் லட்சுமணனைத் தேடி காட்டிற்குள் கிளம்பினார். சிரார்த்த காலம் நெருங்கி விட்டது சீதை தவித்தாள். சிரார்த்தகாலம் தாண்டி விட்டால் பித்ருக்கள் சபிப்பார்களே என்று வருந்தினாள். அருகில் கிடைத்த சில பழங்களை பறித்து அக்கினியில் வேக வைத்தாள். அதைப் பிசைந்து பிண்டம் தயாரித்தாள். அப்போது அவள் முன்பு தேஜோ மயமாக பிதுர்க்கள் தோன்றினர். சீதை பிண்டத்தை எங்களுக்கு சமர்ப்பிக்கலாம். மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கிறோம் என்றார்கள். உங்கள் வம்சத்தினர் சமர்ப்பிக்க வேண்டியதை நான் செய்யலாமா என்று சீதை தயங்கினாள் நின்றாள். சிரார்த்த காலம் தவறி அசுர காலம் வந்து விடும். எனவே சாட்சி வைத்துக் கொண்டு கொடு தவறில்லை என்றார்கள் பித்ருக்கள். சரி என்று சீதையும் அங்கிருந்த பல்குனிநதி ஒரு பசு துளசிச்செடி மற்றும் ஆலமரம் ஆகியவற்றை சாட்சியாக வைத்துக்கொண்டு பிதுர்க்களுக்கு பிண்டம் தருகிறேன். என் கணவரிடம் இந்த நிகழ்ச்சியைச் சொல்ல வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டு பிண்டம் கொடுத்தாள். பிதுர்க்கள் பிண்டத்தை மகிழ்ச்சியோடு ஏற்று மறைந்தார்கள். ராம லட்சுமணர்கள் சிறிது நேரத்தில் தானியங்களோடு வந்தார்கள். சீதை சீக்கிரம் சமையல் செய்’ என்றார் ராமர். சீதை நடந்ததைக் கூறினாள். ராமர் திகைப்புடன் சாஸ்திரமாக சிரார்த்தம் நடத்தும் எங்கள் முன் வராத பிதுர்க்கள் உன் முன்தோன்றி நேரில் பிண்டம் வாங்கினர் என்பது கற்பனை’ என்றார். நான் உண்மையைத் தான் சொல்கிறேன் பல்குனி நதி பசு துளசிச்செடி மற்றும் ஆலமரம் ஆகியவற்றை சாட்சி வைத்துக் கொண்டேன். அவற்றிடம் விசாரித்துக் கொள்ளுங்கள் என்றாள் சீதை.

ராமர் சீதை சொல்வது போல் பிதுர்க்கள் நேரில் வந்து பிண்டம் வாங்கினாரா என்று கேட்டார். ஆலமரம் தவிர மற்றவர்கள் எங்களுக்கு தெரியாது என்று சொல்லி விட்டன. ராமர் வருவதற்குள் சீதை சிரார்த்த காரியத்தை முடித்ததற்குத் தாங்கள் உடந்தையாக இருந்தோம் என்று ராமர் கோபிப்பாரோ என அவைகள் பயந்து தெரியாது என்று சொல்லி விட்டன. ராமரும் வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு சமையலை முடி நாங்கள் நீராடி வருகிறோம் என்று கூறிச்சென்றார். சீதை தன்னைக் கணவர் நம்பாததை எண்ணி துக்கத்தோடு சமையல் செய்தாள். ராமர் நீராடி வந்து சங்கல்பம் செய்து கொண்டு பிதுர்க்களை சிரார்த்த சாமான்களில் ஆவாஹனம் செய்யும் போது வானிலிருந்து அசரீரி ஒலித்தது. ராமா ஏன் இரண்டாம் முறையாக திதி கொடுக்க எங்களை அழைக்கிறாய்? சீதை கையால் பிண்டம் வாங்கி நாங்கள் திருப்தியுள்ளோம் என்றது அசரீரி. அதன் பின் ராமர் சமாதானமானார். அதன் பின் சாட்சி சொல்லாதவர்களை பார்த்த சீதை பல்குனி நதியே உன்னிடம் எந்தக் காலத்தும் வெள்ளம் தோன்றாது. தண்ணீர் வற்றியே காணப்படும் என்றாள். பசுவே உன் முகத்தில் வாசம் செய்த நான் இன்று முதல் உன் பின்பக்கத்துக்குப் போய் விடுவேன் என்றாள். இந்த கயாவில் எங்கும் துளசி வளராது போகட்டும் என்ற சீதை சாட்சி சொல்லாதவர்களுக்கு சாபமிட்டாள். ஆலமரம் தனக்கு சாட்சியாக நின்றதற்கு மகிழ்ந்து யுக யுகாந்திரங்கள் நீடுடி வாழ வாழ்த்தி யுக முடிவின் போது பிரளயத்தின் போது உனது இலையிலேயே பரமாத்மா குழந்தை வடிவில் தோன்றுவார். அவரது திருவடிகளில் உலகங்கள் அனைத்தும் லயமாகும் என்று அருளினாள். மேலும் கயாவில் சிரார்த்தம் செய்ய வருபவர்கள் ஆலமரத்தின் அடியில் பிண்டங்களை அர்ப்பணம் செய்வார்கள் அப்போது தான் கயாவில் சிரார்த்தம் செய்வதன் பலன் கிடைக்கும் என்றும் ஆசிர்வதித்தாள். இந்த சாபத்தின் விளைவால்தான் கயாவில் துளசி வளருவதே கிடையாது. மேலும் பல்குனி நதியும் வற்றிபோய் காட்சியளிக்கிறது.

ஓடக்காரன்

ராமர் லட்சுமணனை தனது யாகத்தை பாதுகாக்க அழைத்துச் சென்ற விஸ்வாமித்திரர் பல இடங்களுக்கு ராமரை அழைத்துச் சென்றார். கல்லாக இருந்த அகலிகையை ராமரின் பாதத்தில் படச்செய்து அவளுக்கு விமோசனம் அளித்தார். ஒரு நதியை கடந்து அக்கரைக்கு செல்ல வேண்டி ராமர் லட்சுமணர் விஸ்வாமித்திரர் மூவரும் நதிக்கரையில் இருக்கும் ஓடக்காரனிடம் சென்றார்கள். ஓடக்காரனிடம் சென்ற விஸ்வாமித்ரர் நாங்கள் அக்கறைக்கு போக வேண்டும். நீ ஓடம் செலுத்துபவனா? இந்த ஓடத்தில் இப்போது நாம் அக்கரைக்கு செல்லலாமா? இந்த ஓடத்தில் எத்தனை பேர் செல்லலாம் எனக் கேட்டார். அதற்கு ஓடக்காரன் நான் பரம்பரையாக ஓடம் செலுத்துபவன். உங்களை நான் அழைத்துச் செல்கிறேன். இந்த ஓடத்தில் அறுபது நபர்கள் போகலாம் என்றான். நாங்கள் மூவர் தான் வந்து இருக்கிறோம். அப்பயென்றால் மீதம் 57 நபர்கள் வரும் வரை காத்திருக்க வேண்டுமா என்று கேட்டார் விஸ்வாமித்திரர். அதற்கு ஓடக்காரன் நீங்கள் இந்த உலகத்தை காக்கும் தெய்வம். உங்களை நான் ஒரு போதும் காக்க வைக்கமாட்டேன். ஓடத்தில் ஏறுங்கள் வாருங்கள் போகலாம் என்றான். விசுவாமித்திரர் ஓடத்தில் ஏறினார்.

ராமர் ஓடத்தில் ஏறும் பொழுது ஓடக்காரன் பச்சை பச்சை ஓடத்தில் ஏறாதே என்றான் இதனை கேட்ட ராமர் தூக்கிய காலை கீழே வைத்துவிட்டார். லட்சுமணருக்கு பெரும் கோபம் உண்டானது. லட்சுமணனின் கோபத்தை கண்ட ராமர் லட்சுமணனிடம் பேச ஆரம்பித்தார். அவன் பரம்பரையாக ஓடம் செலுத்துபவன். பச்சையாக இருக்கும் என்னைப் பச்சை என்று அழைத்ததால் ஒன்றும் பிரச்சணை இல்லை. இந்த ஓடம் அவனுக்கு சொந்தமானது. அவனுக்கு சொந்தமான ஓடத்தில் கால் வைக்காதே என்று சொல்லுவதற்கு அவனுக்கு உரிமை உண்டு என்று லட்சுமணனை சமாதானப் படுத்தினார். பின்பு ஓடக்காரனை பார்த்து நான் ஏன் ஓடத்தில் ஏறக்கூடாது என்று கேட்டார். அதற்கு ஓடக்காரன் என் மேல் கோபத்தில் இருக்கும் உங்களது தம்பியை கூட நான் அழைத்துச் செல்வேன் ஆனால் உங்களை அழைத்துச் செல்ல மாட்டேன் என்றான். அதற்கு லட்சுமணன் நாங்கள் அயோத்தியை ஆளும் தசரத சக்ரவர்த்தியின் மக்கள் ராமர் லட்சுமணன் என்றான். இதைக்கேட்டவுடன் ஓடக்காரன் கண்ணீர் மல்க வணங்கி என்னை மன்னித்தருள வேண்டும். தாங்கள் பிறந்த அன்று எங்களுக்கு உணவும் ஆடையும் வழங்கினார்கள். தங்களுக்கு ஒரு கோடி வணக்கங்களை நான் செலுத்துகிறேன். ஆனால் தாங்கள் மட்டும் ஓடத்தில் கால் வைக்கவேண்டாம் என்றான்.

ராமர் ஏன் நான் ஏறக்கூடாது சரியான காரணத்தை சொல் தவறு இருந்தால் நான் திருத்திக் கொள்கிறேன் என்றார். அதற்கு ஓடக்காரம் நாங்கள் இளமையில் ஒரு பாறையில் சருக்கி விளையாடுவோம். அந்தக் கல்லில் தங்கள் கால் பட்டவுடனே அது பெண்ணாக மாறிவிட்டது. இந்த ஓடத்திலும் தாங்கள் கால் வைத்தவுடன் இந்த ஓடம் பெண்ணாக மாறிவிட்டால் என்னுடைய பிழைப்புக்கு நான் என்ன செய்வது அதனால் உங்களை ஏற்றிக் கொள்ள மறுக்கிறேன் என்றான். இதனைக் கண்டு சிரித்த ராமர் நான் கால் வைத்தால் ஓடம் பெண்ணாகாது என்றார். அதற்கு ஓடக்காரன் தாங்கள் சொல்வது உண்மை என்றால் உங்களை ஏற்றிக் கொள்கிறன் ஆனால் தாங்கள் நதியில் இறங்கி உங்களின் கால்களை சுத்தமாக கழுவிவிட்டு ஏறுங்கள் என்றான். ராமர் நதியில் இறங்கிக் கால் கழுவச் சென்றார். அப்போது ஓடக்காரன் கால் கழுவும் பணியை எனக்கு கொடுங்கள். நான் சுத்தமாய் தேய்த்து விடுகிறேன் என்று கூறி ராமருடைய பாதங்களை செம்பு தாம்பாளத்தில் வைத்து ராம ராம என்று அபிஷேகம் செய்தான். காட்டு மலர்களை கொண்டு அர்ச்சனை செய்தான். உங்களின் பாத பூஜைக்காக மகரிஷிகள் பல காலம் தவம் இருக்க தவம் செய்யாத இந்த அடியேனுக்கு பாத பூஜை கிடைத்தது என்று துதி பாடி வழிபாடு செய்தான். உங்களது பாதத்தை சுத்தம் செய்த இந்த நீரை கீழே விட்டால் நீர் பட்ட கற்களெல்லாம் பெண்களாகி விடும். அதனால் என் மனமாகிய கல் பெண்ணாகட்டும் என்று கூறி தலையில் ஊற்றிக்கொண்டான்.

ராமர் அவனது செய்கையை லட்சுமணனிடம் காட்டி என்னுடைய பாத பூஜைக்காக தான் இவன் இவ்வாறு செய்திருக்கிறான் என்றார். பிறகு மூவரும் ஓடத்தில் ஏறினார்கள். அவன் பகவானுடைய கீதத்தைச் சொல்லியபடியே ஓடத்தை செலுத்தினான். மூவரும் ஓடத்தை விட்டு இறங்கிய பின் ராமர் தன் கையிலிருந்த நவரத்தின மோதிரத்தை பரிசாக தந்தார். மீனவன் அதை வாங்க மறுத்தவிட்டான். நீங்களும் ஓடக்காரன் நானும் ஓடக்காரன். ஒரு தொழிலாளி மற்றொரு தொழிலாளியிடம் எதுவும் வாங்க கூடாது. நான் இந்த நதிக்கு ஓடம் விடுபவன். தாங்கள் பிறவிப் பெருங்கடலுக்கு திருவடி ஆகிய ஓடத்தை விடுபவர் என்று கூறி ராமரின் முன்பாக வீழ்ந்து வணங்கினான். ஓடக்காரனின் அன்பைக் கண்டு ராமர் உள்ளம் உருகினார். பிறகு மூவரும் மிதிலையை நோக்கி புறப்பட்டார்கள்.

லட்சுமணன் ஊர்மிளை

ராமரும் சீதையும் வனவாசத்துக்குக் கிளம்பினார்கள். அவர்களுக்குச் சேவை செய்ய லட்மணனும் கிளம்பினான். தன் மனைவி ஊர்மிளையிடம் விடை பெற்றுக் கொள்ள அவளது அந்தப்புரத்துக்கு வந்தான் லட்சுமணன். தன் மீது தன் கணவர் கொண்ட பிரியம் ஊர்மிளைக்குத் தெரியும் ஆகையால் இதே பிரியத்துடன் அவர் கானகம் சென்றால் தன் நினைவும் விரகதாபமும் அவரை சரி வர அவர் கடமையைச் செய்ய விடாது அலைக்கழிக்கும் என அவள் வருந்தினாள். ஆகவே அவர் தன்னை வெறுக்கும்படி தான் நடந்து கொள்ளவேண்டும் என நிச்சயித்தாள் ஊர்மிளை. தன்னை நன்றாக அலங்கரித்துக் கொண்டு லட்சுமணனை வரவேற்கத் தயாரானாள். லட்சுமணன் கானகம் செல்வதைப் பற்றி கூறியவுடன் தந்தை காட்டுக்குப் போகச் சொன்னது உங்கள் அண்ணனையேத் தவிர உங்களை அல்ல நீங்கள் ஏன் கஷ்டப்பட வேண்டும் அண்ணி தான் அண்ணனை மணந்த பாபத்துக்கு அவர் பின்னால் போகிறாள். நானாக இருந்தால் அது கூட போகமாட்டேன். வாருங்கள் என்னுடன் நாம் மிதிலைக்குப் போய் மகிழ்ச்சியாக வாழலாம் என்றாள். லட்சுமணன் கோபத்துடன் நீ இவ்வளவு மோசமானவளா நீ என்னுடன் வர வேண்டாம் என் முகத்திலும் இனி விழிக்க வேண்டாம். இங்கேயே சுகமாகப் படுத்து தூங்கு என் அண்ணனுடனும் அண்ணியுடனும் நான் போகிறேன் என்றான். உங்கள் தூக்கத்தையும் சேர்த்துக் கொடுத்தாலும் நிம்மதியாகத் தூங்குவேன் என்று சிரித்துக் கொண்டே சொன்னாள் ஊர்மிளை. அப்படியே ஆகட்டும். எனக் கூறிச்சென்ற லட்சுமணன் ஊர்மிளைக்குத் தன் தூக்கத்தைத் தந்துவிட்ட காரணத்தால் பதினான்கு ஆண்டுகளும் தூங்காமல் ராமனுக்குச் சேவை செய்தான். ஊர்மிளை செய்த தியாகத்தினால் அவளுடைய நினைவும் லட்சுமணனை வாட்டவில்லை. ராம பட்டாபிஷேகம் முடிந்த பிறகு சீதையின் வாயினால் உண்மையை அறிந்த லட்சுமணன் அவளின் தியாக மனமறிந்து ஊர்மிளையை முன்பை விடவும் அதிகமாக நேசித்தான்.

லட்சுமணனின் குணந்தை ஊர்மிளை அறிந்து கொள்ள சீதை ஒரு வழி செய்தாள். பட்டாபிஷேகத்துக்குப் பிறகு ஒரு நாள் தன் கால் கொலுசுகளை ஊர்மிளைக்குப் பரிசாக அளித்தாள் சீதை. அன்றிரவு அவளின் அந்தப்புரத்துக்கு வந்த லட்சுமணனின் பார்வையில் அந்தக் கொலுசுகள் தான் முதலில் பட்டன. தினமும் சீதையின் கால்களை மட்டுமே வணங்கி வந்துள்ள லட்சுமணன் சீதை தன்முன் நிற்பதாகக் கருதி அவள் கால்களில் விழுந்து வணங்கினான். துணுக்குற்றுப் பின்வாங்கிய ஊர்மிளை உண்மையைக் கூற அவளைக் கடிந்து அந்தக் கொலுசுகளை உடனே அண்ணிக்குத் திருப்பித்தர உத்தரவிட்டான் லட்சுமணன். ஊர்மிளையிடம் கொலுசைப் பெற்றுக் கொண்ட சீதை உயர்ந்த கொலுசை அவளுக்குப் பரிசளித்து லட்சுமணன் தன்னிடம் கொண்ட பக்தியை உனக்கு புரிய வைப்பதற்காகவே அவ்வாறு செய்தேன் என்று ஊர்மிளையிடம் கூறினாள்.

ராமரின் பாதுகை

ராமர் சீதையை திருமணம் செய்து கொண்டு அயோத்திக்குத் திரும்பினார். நாட்டு மக்கள் அனைவரும் ராமரை வாழ்த்தி விதவிதமான பரிசுகளை அளித்துக் கொண்டிருந்தனர். அந்தக் கூட்டத்தில் மித்ரபந்து என்ற செருப்புத் தைக்கும் தொழிலாளி ஒருவனும் இருந்தான். அவன் கைகளில் ராமனுக்கே அளவெடுத்துத் தைத்தது போன்ற அழகான இரு பாதுகைகள் இருந்தன. வரிசையாக ஒவ்வொருவரும் தாங்கள் எடுத்து வந்த பரிசுப் பொருட்களை தந்துகொண்டிருந்தார்கள். அனைத்தையும் பார்த்த மித்ரபந்துவுக்கு வருத்தம் நேரிட்டது. அனைவரும் விலை உயர்ந்த பரிசுகளைத் தரும் போது நாம் மட்டும் அற்ப காலணிகளையா தருவது என நினைத்தவன் ராமரைப் பார்க்கப் போகாமல் திரும்ப சென்று விடலாம் என்று நினைத்து திரும்பினான். அதனை கவனித்து விட்ட ராமபிரான் அவனை அருகே அழைத்தார். உண்மையான உழைப்பில் உருவான உன் பரிசு தான் இங்கே இருக்கும் அனைத்தையும் விட உயர்ந்தது. எனக்குப் பிரியமானதும் இதுவே என்று ராமர் சொல்ல அவரது அன்பில் நெகிழ்ந்து போனான் மித்ரபந்து. ராமர் வனவாசம் செல்லப் புறப்பட்ட போது வனவாசம் செல்லும் போது எதையுமே எடுத்துச் செல்வது கூடாது. இருப்பினும் இந்தப் பாதுகைகளை அணிந்து செல்ல எனக்கு அனுமதியுங்கள் என்று கேட்டு அனுமதி வாங்கி தன்னுடன் எடுத்துச் சென்றார் ராமர். கூட்டத்தில் கண்ணீர் வழிய நின்று கொண்டிருந்த மித்ரபந்துவை நோக்கி விலை உயர்ந்த எந்தப் பரிசும் எனக்குப் பயன்படவில்லை. நீ அளித்த காலணிகள் தான் என் கால்களைக் காக்கப் போகின்றன என்றார். உண்மை அன்பின் அடையாளமான அந்தப் பாதுகைகளே பின்னர் பரதனால் கொண்டு செல்லப்பட்டு அயோத்தியின் அரியணையில் அமர்ந்து பதினான்கு ஆண்டுகள் ஆட்சியும் செய்தன.

தசரதர் 60000 பெண்களை திருமணம் செய்தது ஏன்?

வேத காலத்தில் காட்டில் ஆசிரமத்தில் தங்கியிருந்த ஜமதக்னி முனிவர் சிறந்த தவ ஆற்றல் கொண்டவராக இருந்தார். அந்த ஆற்றலின் மூலமாக சொர்க்கலோக பசுவான காமதேனுவை தனது ஆசிரமத்தில் வளர்த்து வந்தார். அதை கண்ட கார்த்தவீர்யாஜுனன் என்ற அரசன் அந்த காமதேனுவை தனக்கு தருமாறும் அதற்கு இணையான செல்வத்தை தான் தருவதாகவும் ஜமதக்னி முனிவரிடம் கூறினான். அதற்கு ஜமதக்னி முனிவர் மறுப்பு தெரிவிக்க அதை அவரிடமிருந்து பறித்து சென்றான் கார்த்தவீர்யாஜுனன். இதைக் கேள்விப்பட்ட ஜமதக்னியின் புதல்வர் பரசுராமர் கார்த்தவீர்யார்ஜுனனுடன் போரிட்டு அவனை கொன்று அந்த காமதேனு பசுவை மீட்டு வந்து தனது தந்தை ஜமதக்னியிடம் ஒப்படைத்தார். கார்த்தவீர்யாஜுனன் கொல்லப்பட்டதற்கு பழிக்கு பழியாக அவனது மூன்று புதல்வர்கள் பரசுராமரின் தந்தையான ஜமதக்னி முனிவரை 21 முறை வாளால் வெட்டிக்கொன்றார்கள். இதனால் கோபத்தின் உச்சத்திற்குச் சென்ற பரசுராமர் அந்த மூன்று மகன்களையும் மற்றும் அவனது படைகளையும் சிவ பெருமான் தனக்கு அளித்த கோடரி மூலம் வெட்டி வீழ்த்தினார். மேலும் தனது தந்தை ஜமதக்னி முனிவரை கொடூரமாக கொன்ற சத்திரியர்களான அரசர்கள் மீது பரசுராமருக்கு மிகுந்த வெறுப்பு ஏற்பட்டது. எனவே இந்த நாட்டின் எந்த ஒரு சத்ரிய பரம்பரையின் 21 தலைமுறையினரையும் தான் வெட்டி வீழ்த்தப்போவதாக சபதம் ஏற்று அப்படியே செய்து வந்தார்.

அயோத்திய நகரை அப்போது ஆண்டு வந்த சத்ரிய குலத்தில் உதித்த தசரத சக்ரவத்தி தனது நாட்டை தர்மத்தின் படி ஆட்சி புரிந்து வந்தார். பல போர்களில் வெற்றி பெற்றிருந்த வீரராக தசரதர் இருந்தாலும் பரசுராமரின் போர்திறன் தவசக்தி மற்றும் சிவ பெருமானிடம் அவர் தவமிருந்து பெற்ற கோடரி போன்றவை அவரிடம் இருக்கும் வரை இந்த பூமியில் தான் உட்பட எந்த சத்ரியனும் அவரை வெல்ல முடியாது என்று அறிந்து வைத்திருந்தார். இந்த இக்கட்டான சூழ்நிலையை தீர்க்க வழி தேடினார். புதிதாக திருமணம் புரிந்திருக்கும் எந்த ஒரு அரசனையும் போருக்கு அழைக்காமல் அவனை ஆசிர்வதித்து செல்லும் பரசுராமரின் குணம் பற்றி அறிந்தார் தசரதர். பரசுராமரின் பலவீனத்தை தெரிந்து கொண்ட தசரதர் ஒவ்வொரு முறை பரசுராமர் தன்னை போருக்கு அழைக்க நேரில் வரும் போதும் புதிதாக ஒரு பெண்ணை திருமணம் புரிந்து பரசுராமரின் முன்பு தோன்றினார். பரசுராமர் அவரை போருக்கு அழைக்காமல் அவரையும் அவரது புது மனைவியையும் ஆசிர்வதித்து விட்டுச் சென்றார். இப்படி ஒவ்வொரு முறையும் யுத்தம் நடக்காமல் இருக்க பரசுராமர் பார்வையில் படும் போதெல்லாம் ஒரு பெண்ணை புதிதாக திருமணம் செய்து கொண்டு அவர் முன் தோன்றினார். தனது நாட்டு மக்களுக்கு அரசனாக சேவை செய்யும் பொருட்டு தான் உயிருடன் இருக்க வேண்டிய அவசியத்திலேயே தசரதசக்கரவர்த்தி இத்தனை திருமணம் புரிந்தார்.

ஸ்ரீமன் நாராயணர்

அந்தணர் ஒருவர் கலகை என்பவளுடன் வாழ்ந்து வந்தார். அவர் மிகவும் சாந்த குணமுடையவர். கலகை அந்தணருக்கு எதிர்மறையாக இருந்தார். இவள் கணவர் வேண்டாம் என்பதை வேண்டும் என்று செய்வாள். இதனால் வெறுப்படைந்த அந்தணர் வீட்டை விட்டு வெளியில் கிளம்பிச் சென்றார். அவ்வாறு செல்லும்போது வழியில் அந்தணரை பார்த்து ஐயா எங்கே போகிறீர்? ஒருவர் என்று கேட்டார். மனைவியின் துன்பம் என்னால் தாங்க முடியவில்லை. அதனால் வீட்டைவிட்டு வெளியேறி போகின்றேன் என்றார். வேண்டாம் என்பதை வேண்டும் என்று செய்கிறாள். வேண்டும் என்பதை வேண்டாம் என்று செய்கிறாள். அன்பரே நான் சொல்லும்படி கடைப்பிடியுங்கள். உங்களுக்கு வேண்டாம் என்பதை வேண்டும் என்று சொல்லுங்கள் என்றார். இதைக் கேட்டு மகிழ்ந்த அந்தணர் வீட்டுக்குச் சென்று கலகை இன்று நான் சாப்பிடமாட்டேன் என்றார். சாப்பிடு என்று உணவை கோபத்துடன் கொடுத்தாள். இவ்வாறு அந்தணர் கலகையிடம் வேண்டும் என்பதை வேண்டாம் என்று கூறியும் வேண்டாம் என்பதை வேண்டும் என்று கூறியும் சுகமாக வாழ்ந்து வாழ்ந்தார். ஒருநாள் அந்தணர் மனைவியிடம் கலகை நாளை என் தந்தையாருடைய சிரார்த்தம். வீடு வாசல் மெழுகாதே. நீராடாதே. சமைக்காதே என்ற கூறினார். அவள் எல்லாவற்றையும் ஒழுங்காகச் செய்து வைத்தாள். பிண்டப் பிரசாதத்தை ஜலதாரையில் கொட்டுமாற சொல்லியருக்க வேண்டும். அவர் சற்றுக் கவனக்குறைவாக பிதுர் பிரசாதத்தைச் சுத்தமான நீரில் கொட்டுமாறு கூறிவிட்டார். அவள் அதைக் கொண்டு போய் அசுத்தமான தண்ணீரில் கொட்டிவிட்டாள். அந்தணர் கோபத்தில் எனக்கு ஆயிரமாயிரம் குற்றங்கள் செய்தும் அத்தனையும் பொறுத்துக்கொண்டேன். பிதுர்களின் தூய பிரசாதத்தை ஜலதாரை தண்ணீரில் கொட்டினாயே இது எவ்வளவு பெரிய பாவம் கலகை. அதனால் கலகை என பெயர் பெற்ற நீ அலகையாகப் (பேய்) போகக் கடவது என்று சாபமிட்டார். அந்த சாபத்தால் அவள் பெண் பேயாக மாறினாள். அங்கும் இங்குமாக அலைந்து திரிந்து வேதனைப்பட்டாள்.

தர்மாங்கதர் என்ற ஓர் முனிவர் கங்கைக்கரையில் ஓம் நமோ நாராயணாய என்ற மந்திரத்தை செபித்துக் கொண்டு தவம் செய்து கொண்டிருந்தார்.
கங்கைக் கரையில் ஜபம் செய்து கொண்டிருந்த தர்மாங்கதரை இந்த பெண் பேய் பிடிக்கச் சென்றது. அப்போது முனிவர் கமண்டலத் தண்ணீரை ஓம் நமோ நாராயணாய என்று தெளித்தார். அந்த மந்திர நீரால் அவளது பாவமும் சாபமும் விலகிவிட்டன. அவள் அவருடைய அடிமலர் மீது வீழ்ந்து தொழுது தர்மாங்கதரே நான் கலகை என்ற பெயருள்ள பெண். கணவனுக்கு குற்றங்கள் செய்த பாவத்தால் அவருடைய சாபத்தால் பேயாக அலைந்து திரிந்து பல துன்பங்களை அனுபவித்தேன் என்று அழுதாள். அதற்கு தர்மாங்கத முனிவர் அழாதே. நான் தோன்றிய நாள் முதல் இன்று வரை செய்த தவத்தில் பாதி உனக்கு தருகிறேன் இதன் பலனாக இனி நீ பல இன்பங்களை அனுபவிப்பாய் என்று அருளினார். உடனே வைகுண்டத்திலிருந்து வந்த பொன்மணி விமானம் இருவரையும் வைகுண்டத்துக்கு அழைத்து சென்றது.

ஸ்ரீமன் நாராயணர் தர்மாங்கதரைப் பார்த்து நீங்கள் பூவுலகில் ஆதித்தர் குலத்தில் பிறந்து தசரதன் என்ற பெயர் பெற்று அறுபதினாயிரம் ஆண்டுகள் தவம் செய்வீர்களாக. உனக்கு நான் மகனாகப் பிறந்து ராமன் என்ற பெயருடன் விளங்கி ராவணனை வதம் செய்து நாட்டுக்கு நலம் செய்வேன். கலகை நீ கேகய நாட்டில் அசுவபதி என்ற மன்னனுக்கு மகளாகப் பிறந்து கைகேயி என்ற பெயருடன் வளர்வாய். தர்மாங்கதருடைய தவத்தில் பாதி பெற்றதனால் கௌசலை வயிற்றில் நான் பிறந்தாலும் என்னை நீ அன்பு மகனாக வளர்ப்பாயாக. சமயம் வரும்பொழுது ராவண வதத்திற்காக என்னைக் கானகம் போகச் செய்வாய் என்றார். திருமாலுடைய சக்கரம் பரதனாகவும் சங்கு சத்துருக்கனாகவும் ஆதிசேஷன் லட்சுமணனாகவும் பிறக்குமாறு ஸ்ரீமன் நாராயணர் கட்டளை இட்டருளினார்.

ராம நாமத்தின் மகிமை

ராமா நாம சங்கீர்த்தனம் பாடியபடி வீதியில் பஜனை கோஷ்டி ஒன்று சென்று கொண்டிருந்தது. அதை அலட்சியம் செய்த ஒருவனுக்கு ராம நாமத்தை உபதேசித்த ஞானி ஒருவர் இதை ஒரு போதும் விற்காதே ஆத்மார்த்தமாக ஒரே ஒரு முறையாவது சொல்லிப் பார் என்றார். அவனும் அப்படியே செய்து கொண்டிருந்தான். ஒரு நாள் இறந்து போனான். அவன் ஆத்மாவை இழுத்துப் போய் எமதர்மராஜன் முன் நிறுத்தினார்கள். அவரும் அவனுடைய பாப புண்ணிய கணக்கை பரிசீலித்து ஒருமுறை ராம நாமத்தை சொல்லி இருக்கிறாய் அதற்காக என்ன வேண்டுமோ கேள் என்றார். ராம நாமத்தை உபதேசித்த ஞானி அதை விற்காதே என்று கூறியிருந்தது நினைவுக்கு வந்தது. அதனால் அதற்கு விலை கூற மறுத்து ராம நாமத்திற்கு நீங்கள் என்ன தர வேண்டுமென நினைக்கிறீர்களோ அதைத் தாருங்கள் என்றான். திகைத்த எமதர்ம ராஜா ராம நாமத்திற்கு நாம் எப்படி மதிப்பு போடுவது என்று எண்ணி இந்திரன் தான் இதை தீர்மானிக்க வேண்டும் வா இந்திரனிடம் போகலாம் என்றார். நான் வருவதென்றால் பல்லக்கில் தான் வருவேன் அத்துடன் பல்லக்குத் தூக்குபவர்களில் நீங்களும் ஒருவராக இருக்க வேண்டும் சம்மதமா என்றான். இவன் நம்மையும் பல்லக்கு தூக்கச் சொல்கிறான் என்றால் ராம நாமம் மிகுந்த மகிமை உடையதாகத் தான் இருக்க வேண்டும் அதனால் தான் இப்படி எல்லாம் பேசுகிறான் என்று எண்ணிய எமதர்ம ராஜா அதற்கு சம்மதித்து அவனை பல்லக்கில் உட்கார வைத்து சுமந்து கொண்டு இந்திரனிடம் சென்றார். இந்திரனோ ராம நாமத்தை என்னால் எடை போட முடியாது பிரம்மதேவரிடம் கேட்போம் வாருங்கள் என்றார். எமதர்மனோடு இந்திரனும் சேர்ந்து பல்லக்கு தூக்கினால் தான் வருவேன் என்று மீண்டும் அவன் நிபந்தனை விதித்தான். அதற்கு இந்திரனும் ஒப்புக் கொண்டான். பல்லக்கை சுமந்து கொண்டு பிரம்மாவிடம் சென்றனர். அவரும் ராம நாம மகிமை சொல்ல என்னால் ஆகாது வைகுண்டம் போய் அந்த பரம்பொருளையே கேட்கலாம் வாருங்கள் என்று சொல்ல அவரும் பல்லக்கு சுமக்கும்படியாக ஆயிற்று.

மகா விஷ்ணுவிடம் சென்ற அவர்கள் இந்தப் பல்லக்கில் இருக்கும் ஆன்மா ஒருமுறை ராம நாமத்தை சொல்லியிருக்கிறது அதற்காக இவனுக்கு என்ன புண்ணியம் என்பதை தாங்கள் தான் கூற வேண்டும். எங்களால் முடியவில்லை என்றனர். இந்த ஜீவனைப் பல்லக்கில் வைத்து நீங்கள் எல்லாரும் சுமந்து வருகிறீர்களே இதிலிருந்தே ராம நாம மகிமை தெரியவில்லையா என்று சொல்லி பல்லக்கில் வந்த ஆன்மாவை தன்னுடன் சேர்த்துக் கொண்டார் பகவான்.