நம்பிக்கை

ஒரு ஊரில் திருடன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவ்வூரில் அவனைப் பற்றி தெரிந்ததால் அவனால் திருட்டு தொழிலை செய்ய முடியவில்லை. வேறு ஊருக்கு சென்று திருட்டு தொழிலை செய்ய முடிவு செய்து பயணமானான். வெகுதூரம் பயணப்பட்டு ஓர் ஊரை அடைந்தான். திருடனுக்கோ அகோர பசி. உணவுக்கு எங்கு செல்வது எனப் பார்க்கும் பொழுது பூசணிக்காய் தோட்டம் ஒன்று இருப்பதை கண்டு வேலியை தாண்டி குதித்து பூசணி பழத்தைத் திருடி உண்ண எண்ணினான். வெள்ளை பூசணி பழத்தை திருடும் சமயம் தோட்ட காவல்காரன் யாரோ ஒருவன் தோட்டத்தில் இருப்பதை பார்த்து கூச்சலிட்டான். சப்தம் கேட்டு மக்கள் கூட்டமும் தோட்ட காவல்காரனும் வருவதை கண்ட திருடன் மறைந்து கொள்ள இடம் தேடினான். பூசணி தோட்டத்தில் மறைந்து கொள்ள இடமா இருக்கும்? உடனே சமயோஜிதமாக தனது ஆடைகளைக் கழற்றி விட்டு பூசணிக்காய் மேல் படந்திருக்கும் சாம்பலை எடுத்து உடல் முழுவதும் பூசிக் கொண்டான். திருடனை நெருங்கிய மக்கள் நீண்ட நாட்கள் பசியில் மெலிந்த உடல் சாம்பல் பூச்சு என அங்கு ஒரு சிவ தொண்டு புரியும் ஆன்மீக குரு இருப்பதாக நினைத்துக் கொண்டனர்.

திருடனின் சாம்பல் பூச்சு அவனை ஒரு முனிவனாக காட்டியது. தாங்கள் முனிவரை தவறாக எண்ணியதாக்க கூறி மன்னிப்பு கேட்டனர். ஊருக்கு வந்த புதிய முனிவரை காண பலரும் வரத் துவங்கினார்கள். ஞானத் தேடல் கொண்ட ஒருவன் இந்த முனிவரை சந்தித்தான். ரிஷி புருஷரே என்னை சிஷ்யனாக ஏற்று உங்களைப் போல ஞானம் அடைய வழி சொல்லுங்கள் எனக் கேட்டான். பூசணி முனிவருக்கு ஞானம் என்றால் என்ன என்றே தெரியாது. வாய் திறந்து பேசினால் தனது சுயரூபம் தெரிந்துவிடும் என்பதால் சைகையில் பேச ஆரம்பித்தார்.

பூசணி முனிவர் பூசணி திருட வந்த நான் இவ்வாறு ஆகிவிட்டேன் என்பதையே சைகையில் கூறுவதற்காக பூசணிக்காயை காட்டி தனது உடல் முழுவதையும் காட்டி விட்டு கண்களை மூடினார். வாலிபனோ தன்னை ஆசீர்வதித்து சிஷ்யனாக ஏற்றுக் கொண்டார் என்று நினைத்தான். மேலும் உலகில் எதுவும் இல்லை அனைத்தும் உன் உள்ளே இருக்கிறது என குரு உணர சொல்வதாக எண்ணிக் கொண்டான். சீடனோ ஆனந்தமாக அவரை மூன்று முறை வலம் வந்து வணங்கி விடை பெற்றான். வருடங்கள் ஓடின. தீவிர தேடலில் சீடன் ஞானம் அடைந்தார்.

இந்தக் கதையின் மூலம் குருவின் தன்மை முக்கியமில்லை. சிந்தனையில் உணர்வுகளில் நம்முடைய எண்ணத்தை நம்பிக்கையில் வைத்ததால் ஞானம் கிடைக்கும்.

தொண்டு

ஒரு பெரிய அரசர் இருந்தார். அவருக்கு ஆன்மிகத்தில் மிகவும் ஈடுபாடு ஆகையால் தினந்தோறும் கோவிலுக்கு செல்வார். வழக்கம் போல ஒரு நாள் கோவிலுக்கு சென்று திரும்பி வந்து கொண்டிருந்தார். கோவிலுக்கு வெளியில் ஒரு சந்நியாசி தியானத்தில் அமர்ந்திருந்தார். இதனைக் கண்ட அரசர் அவரிடம் சென்று வணங்கி நின்றார். சந்நியாசியும் ஆசிர்வாதம் செய்தார். அரசர் தன்னிடம் இருந்த விலை உயர்ந்த சால்வை ஒன்றை சன்னியாசிக்கு கொடுத்து விட்டு அங்கிருந்து கிளம்பினார். மறுநாள் காலையில் அரசர் அரண்மனையின் மேல் மாடத்தில் நின்றிருந்தார். அப்போது தெருவில் ஒரு பிச்சைக்காரன் சென்று கொண்டிருந்தான். அவனை பார்த்த அரசர் அதிர்ச்சி அடைந்தார். காரணம் சன்யாசியிடம் கொடுத்த அந்த விலை உயர்ந்த சால்வையை இப்போது அந்த பிச்சைகாரன் வைத்திருந்தான். அரசர் உடனே காவலர்களை அனுப்பி அந்த பிச்சைக்காரனை அழைத்து வரச் சொன்னார். அவனிடம் இந்த போர்வை எப்படி வந்தது என்று விசாரிச்சார். கோவில் வாசலிலே தனக்கு ஒரு சன்யாசி கொடுத்தார் என்று சொன்னான். உடனே அந்த சன்யாசியை அழைத்து வர உத்தர விட்டார். சன்யாசியிடம் ஏன் பிச்சைக்காரனிடம் இந்த சால்வையை கொடுத்தீர்கள் என்று கேட்டார். அதற்கு சன்யாசி இவன் இரவில் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தான். அவனது உடையும் கிழிந்திருந்தது. ஆகவே எனக்கு தேவைப்படுவதை விட இவனுக்குத்தான் தேவை என்று கொடுத்து விட்டேன் என்றார். இந்த பதிலைக் கேட்ட பிச்சைக்காரன் சன்யாசியின் அன்பில் பூரித்து மகிழ்ச்சியில் சிரித்தான். இதனைக் கண்ட அரசர் கோபமடைந்து இது மிகவும் விலை உயர்ந்த சால்வை அரசர்களுக்கு என்றே விசேசமாக தயாரிக்கப்பட்டது. அதை உங்களுக்கு கொடுத்தேன். இந்த சால்வையை அவனிடம் கொடுத்தது என்னை அவமதிப்பு செய்வது போல் உள்ளது. ஆகவே உங்களையும் உங்களுடன் இந்த பிச்சைக்காரனையும் சிறையில் அடைக்க உத்தர விடுகிறேன் என்று சொல்லி விட்டு அரண்மனைக்குள் சென்று விட்டார். காவலாளிகள் இருவரையும் சிறையில் அடைத்தார்கள்.

அன்றிரவு அரசர் தூக்கத்தில் ஒரு கனவு கண்டார். அந்த கனவில் மன்னர் அந்த கோவிலுக்கு போகிறார். ஆண்டவன் சந்நிதியில் போய் நிக்கிறார். அங்கே கடவுள் குளிரால் நடுங்கி கொண்டிருக்கிறார். அரசர் கடவுளே என்ன ஆச்சு உனக்கு என்றார்? அதற்கு கடவுள் குளிர் அதிகமாக இருக்கிறது என்றார். உடனே அரசர் தன்னிடமிருந்த விலை உயர்ந்த சால்வையை எடுத்துக் கொண்டு கடவுளை நெருங்கினார். கடவுள் பயத்தில் கத்தினார் என்ன அது? உன்னுடைய சால்வையா? வேண்டாம் வேண்டாம் என்றார். அரசர் கடவுளே இதை ஏன் வேண்டாம் என்று சொல்கிறீர்கள்? நான் என்ன பாவம் செய்தேன்? என்று பயத்துடன் நின்றார். அதற்கு கடவுள் நேற்று ஒரு சால்வையை எனக்கு கொடுத்தனுப்பினாய். அதை கொண்டு வந்தவனையும் பெற்றுக் கொண்டவனையும் சிறையில் அடைத்து விட்டாய். இப்போது எனக்கும் சால்வை கொடுக்கிறாய். நாளை என்னையும் சிறையில் அடைத்து விடுவாய் ஆகவே வேண்டாம் என்றார். அரசர் அதிர்ச்சியில் விழித்து கொண்டார் அவருக்கு எல்லாம் புரிந்தது. ஓடிப்போய் அவரே சிறையின் கதவுகளை திறந்து விட்டார். சன்யாசியின் கால்களில் விழுந்தார். சுவாமி நான் அறியாமல் செய்து விட்டேன் தாங்கள் ஒரு மகான் என்னை மன்னித்து விடுங்கள் என்றார். அரசரே துன்பப் படுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான் கடவுளுக்கு செய்கிற தொண்டு அதை புரிந்து கொள் என்று சொல்லி விட்டு நடக்க ஆரம்பித்தார் சன்யாசி.

தர்மத்தின் சிறப்பை உணர்த்தும் கதை

ஒரு காலத்திலே பல்வேறுவிதமான பணிகளை செய்யக் கூடிய மனிதர்கள் இருக்க அவர்களில் இல்லங்களை பழுதுபார்க்கும் ஒருவன் இருந்தான். ஜாதி பேதங்கள் கடுமையாக இருந்த காலமது. சில நாட்களாக பணியில்லாமல் இருந்த அவன் பக்கத்து ஊருக்கு பணி தேடுவதற்காக புறப்பட்டான். செல்லும் வழியில் ஒரு காடு. அந்த வனத்தை கடந்து அவன் போகும் பொழுது மகனே வா என்று அன்பொழுக யாரோ அழைப்பது போல் அவனுக்குத் தோன்றுகிறது. யார் நீ? எனக்கு பயமாக இருக்கிறது. ஓர் உருவத்தையும் இங்கு காண முடியவில்லையே? என்றான் மனிதன். அச்சம் வேண்டாம் மகனே ஒரு காரியத்தின் பொருட்டுதான் உன்னை அழைத்தேன். உன் நீண்ட கால வறுமையும் நீங்கிவிடும் என்றது அக்குரல். யார் என்னிடம் பேசிக் கொண்டிருப்பது? என்றான் மனிதன். நான் வனதேவதை. நான் உன் கண்ணுக்கு தெரியமாட்டேன். ஆனால் நான் சொல்வதை நீ செய்தே ஆக வேண்டும். ஏதும் குழப்பமில்லை. நான் சொல்வதை மட்டும் கேள். சரி சொல் என்றான் மனிதன். இதொ இந்த ஆலயத்தின் வடகிழக்கு மூலையிலே ஒரு அற்புதமான மணம் பரப்பும் பாரிஜாத மரம் இருக்கிறது. அதிலுள்ள மலர்களை பறித்து இங்குள்ள சிவபெருமான் சாற்றி வணங்கிவிட்டு அம்மரத்தின் பக்கத்தில் இத்தனை தூரம் குழி தொண்டு என்று வனதேவதை கூற இவனும் பவ்யமாக அவ்வாறே செய்கிறான். அங்கே ஏராளமான தங்கத் துவர்கள் (துவரம் பருப்பு) இருந்தன. இதை பார்த்தவுடன் அந்த மனிதனுக்கு ஆசை பொங்கி விட்டது. எல்லாவற்றையும் எடுத்து தன்னிடம் உள்ள ஒரு கோணிப்பையிலே போட்டு முடிக்கும் பொழுது வனதேவதை குறுக்கிட்டது. மகனே அவசரப்படாதே. அத்தனையையும் எடுத்துக் கொள்ளாதே. அது உனக்கு ஆபத்தை விளைவிக்கும். அதில் ஒரு சிறிய பங்கை மட்டும் எடுத்துக் கொண்டு மீதியை அங்கேயே வைத்துவிடு. நான் காரணமாகத்தான் கூறுகிறேன். முழுவதையும் எடுத்துக் கொள்ள உன் விதி இடம் தரவில்லை என்று வனதேவதை கூற அதெல்லாம் முடியாது. எனக்கென்று காட்டினாய். இப்பொழுது மாற்றிப் பேசினால் என்ன பொருள் முழுவதும் எனக்கே சொந்தம் என்றான் மனிதன். வேண்டாமப்பா பகுதியாவது வைத்துவிடு. முடியாது. வேண்டாம் மகனே கால் பகுதியையாவது மீதம் வை. ஒரு காரணமாகத்தான் கூறுகிறேன” என்றது வனதேவதை. அதெல்லாம் முடியாது என்றான் மனிதன். மீண்டும் வனதேவதை பலமுறை கெஞ்ச என்ன இது? உன் தொல்லை அதிகமாகி விட்டதே? என்று அலுத்துக் கொண்டே நான்கே நான்கு கனகப்பருப்பை மட்டும் மீதம் வைத்து விட்டு மற்றவற்றையெல்லாம் மூடை கட்டி அந்த வனதேவதைக்கு நன்றி கூட சொல்லாமல் காட்டை விட்டு வெளியேறுகிறான்.

ஏதாவது பணி கிடைத்தால் அந்த பணியையும் செய்து அதில் வரும் தனத்தையும் பெறலாமே? என்ற பேராசையோடு ஓர் ஊரை அடைகிறான். அந்த ஊரிலே ஒரு பெண்ணின் வீட்டு மேல்விதானம் சிதிலம் அடைந்திருந்தது. ஓடுகள் அலங்கோலமாக இருந்தது. அந்த பெண்மணி இவனிடம். அப்பா என் வீட்டு ஓடுகளை எல்லாம் சரி செய்து தருவாயா? என்று கேட்க அது எனக்கு கை வந்த கலை. செய்து தருகிறேன். அதற்கு எவ்வளவு தனம் தருவீர்கள்? என்று இம்மனிதன் கேட்க அப்பெண்மணி ஒரு தொகையைக் கூற இந்த பெண்மணி குறைவாகத்தான் சொல்கிறாள். என்றாலும் கிடைத்தவரை இலாபம்தானே? என்று எண்ணி மூடையை ஓரமாக வைத்துவிட்டு மேலே ஏற முற்படுகிறான். அந்த மூடையைப் பார்த்த அப்பெண்மணி இது என்னப்பா மூடை? என்று கேட்க அது ஒன்றுமில்லை தாயே என் மனைவி சமையலுக்கு பருப்பு வாங்கி வரும்படி சொன்னாள். சந்தையிலே வாங்கிக் கொண்டு போகிறேன் என்றபடியே மேலேறி ஓடுகளை சரிசெய்யும் பணிகளில் இறங்குகிறான். அப்பெண்மணி வீட்டின் உள்ளே சென்று சமையல் செய்யத் துவங்குகிறாள். அப்போது தான் பருப்பு இல்லை என்று என்பது நினைவிற்கு வருகிறது. உடனடியாக அவளுக்கு ஓர் எண்ணம் தோன்றுகிறது. இதோ இவன்தான் பருப்பு மூடை வைத்திருக்கிறானே? இதிலிருந்து சிறிது எடுத்துக் கொள்வோம். அதற்குரிய தனத்தை மாலையிலே சேர்த்துக் கொடுத்து விடுவோம் என்று முடிவு செய்து அப்பா உன் மூடையிலிருந்து சிறிது பருப்பு எடுத்துக் கொள்ளட்டுமா? என்று கேட்கிறாள். வேலை மும்முரத்தில் இருந்தவனுக்கு இப்பெண்மணி கேட்டது காதில் விழவேயில்லை. சரி பிறகு இவனிடம் சொல்லிக் கொள்ளலாம் என்று மூடையை அந்தப் பெண்மணி திறந்து பார்க்கிறாள். உள்ளே கனக துவரம் பருப்புகள். ஆச்சிரியம் மேலிட அப்பா எத்தனை தங்கம்? என்று எண்ணுகிறாள். வழக்கம் போல் அங்கே அவளுக்கு அசுர புத்தி தலை தூக்குகிறது. துவரம் பருப்பு என்று சொல்லி இவன் நம்மை ஏமாற்றி விட்டானே? என்று எண்ணியவள் சூழ்ச்சியாக அந்த கனக பருப்புகளை எல்லாம் வேறு இடத்தில் பாதுகாப்பாக வைத்துவிட்டு உண்மையான பருப்பை வாங்கிக் கொட்டி மூடையாக மூடி மீண்டும் அதே இடத்திலேயே வைத்து விடுகிறாள்.

அந்த மனிதன் ஓட்டு வேலை முடிந்ததும் கூலியைப் பெற்றுக் கொண்டு மூடையை எடுத்துக் கொண்டு செல்கிறான். திடீரென்று அவனுக்கு ஒரு நப்பாசை. அந்த வனதேவதையின் ஆலயத்திற்கு அருகே வந்தவுடன் அந்த மூடையை திறந்து பார்க்கிறான். உள்ளே எல்லாம் பருப்பாக இருக்கிறது. அவனுக்கு ஒரே அதிர்ச்சி. ஆஹா அந்தப் பெண்மணி நம்மை நன்றாக ஏமாற்றி விட்டாள். திரும்பி சென்று அவளிடம் கேட்பதானால் எந்த ஆதாரத்தை வைத்துக் கேட்பது?. உண்மையையும் சொல்ல முடியாதே? என்று வேதனைப்பட்டு அழத் தொடங்கினான். அப்பொழுது அந்த வனதேவதையின் குரல் கேட்டது. மகனே ஏனப்பா அழுகிறாய்? தாயே கொடுப்பது போல் கொடுத்து மீண்டும் அத்தனையும் பறித்துக் கொண்டாயே? நாங்கள் மனிதர்கள் மோசக்காரர்கள் ஒத்துக் கொள்கிறோம். தேவதை வர்க்கமான நீ இப்படி செய்யலாமா? இது நியாயமா? என்று அம்மனிதன் கேட்க மகனே அதற்குத்தான் முன்னமே சொன்னேன் பகுதியை வைத்து விட்டு மீதத்தை எடுத்துக் கொள் என்று. பிறகு பகுதியிலும் பகுதி வை என்றேன். ஆசை விட்டதா? ஒன்றைத் தெரிந்து கொள். இன்றைய விதிப்படி அந்த பெண்ணுக்குத்தான் இந்த புதையல் போய் சேர வேண்டும். அதுவும் உன் மூலம் போக வேண்டும் என்பதே விதி. என்றாலும் நீ தூக்கி செல்வதற்காக உனக்கு சுமை கூலி தர வேண்டும் என்று நான் விரும்பினேன். அதற்கு உன் விதியில் இடம் இல்லை என்றாலும் என் வார்த்தைகளால் உன் மனதை மாற்றலாம் என்று ஆசைப்பட்டுத்தான் அவ்வாறெல்லாம் கூறினேன். கெஞ்சினேன். ஆனால் விதி உன் மதிக்குள் அமர்ந்து ஆசை எனும் அசுரனைப் புகுத்தி அனைத்தையுமே உனக்கே என்று வைத்துக் கொள்ள செய்தது. அனைத்தும் அந்தப் பெண்மணிக்குதான் போய் சேர வேண்டும் என்பது எனக்கு தெரிந்தாலும் அதை வெளிப்படுத்த இயலாது என்பதே எமது விதி. இப்பொழுது நாலே நாலு வைத்தாயல்லவா? அதை மட்டும் எடுத்துக் கொள். புரிந்துகொள் யாருக்கோ எனும் பொழுது உன் கை சுருங்குகிறது அல்லவா? தரும் பொழுது தாராளமாக கொடுத்தால் அதுவே வேறு வடிவில் உனக்கே மீண்டும் வந்து சேரும் என்று வனதேவதை கூற வேறு வழியில்லாமல் அந்த நாலு பருப்புகளை மட்டும் அவன் எடுத்து சென்றான்.

இந்தக் கதையின் சம்பவங்களை விட்டுவிட்டு கருத்தை மட்டும் உள்வாங்கிக் கொள்ள வேண்டும். பிறருக்கு தரும் பொழுது தாராளமாக இருந்தால் தனக்கு வரும் பொழுதும் அது தாராளமாகவே இருக்கும். எனவே பிறருக்கு தருவதெல்லாம் தனக்குத்தானே மறைமுகமாகத் தருவதுதான் என்ற கருத்துதான் இக்கதையின் மையக்கருத்தாகும்.

திருமால்

ஒரு நாள் அக்பர் அரசவையில் அக்பரும் பீர்பாலும் பேசி கொண்டிருக்கும் போது அக்பர் பீர்பாலிடம் இந்து மதத்தில் உள்ள கடவுள் திருமால் இருக்கிறாரே அவருக்கு யாரும் சேவகர்களே கிடையாதா? என்று கேட்டார். அதற்கு பீர்பால் அவருக்கு ஆயிரக் கணக்கான சேவகர்கள் இருக்கிறார்கள் ஏன் கேட்கிறீர்கள்? என்றார். அதற்கு அக்பர் ஒரு சாதாரண யானையின் காலை ஒரு முதலை பிடித்ததற்கு உங்கள் திருமால் கருடன் மீது ஏறி சங்கு சக்கரத்துடன் வந்து அந்த யானையை காக்க வேண்டுமா? நீர் கூறியது போல் ஆயிரக் கணக்கான சேவகர்கள் இருக்கிறார்களே அவர்களில் யாரவது ஒருவரை அனுப்பி அந்த யானையை காப்பாற்றியிருக்கலாமே? அதை விட்டு விட்டு அவர் ஏன் வந்து அந்த யானையை காப்பாற்ற வேண்டும்? இதற்கு பீர்பால் பதில் ஏதும் கூறாமல் மெளனமாக இருந்தார். பீர்பால் பதில் சொல்ல முடியாத அளவுக்கு நாம் கேள்வி கேட்டுவிட்டோம் என்று அக்பர் மகிழ்ந்தார். ஒரிரு நாட்கள் சென்றன.

அக்பரும் அவர் குடும்பத்தாரும் பீர்பாலும் சில மெய் காப்பாளர்களும் கங்கை கரையை கடப்பதற்கு படகில் சென்று கொண்டிருந்தனர். அக்பரின் மூன்று வயது பேர குழந்தையை கொஞ்சி கொண்டிருந்த பீர்பால் படகு ஆழமான பகுதிக்கு வந்ததும் பீர்பால் பட கோட்டிக்கும் படகில் வந்த ஒரு வீரனுக்கும் சைகை காட்டி விட்டு அக்பரின் பேரனை கங்கையில் தூக்கிப் போட்டு விட்டார். பதறிய அக்பர் உடனே நீரில் குதித்து தன பேரனை காப்பாற்ற துணிந்தார். அவரோடு சேர்ந்து பீர்பால் சைகை செய்த வீரனும் நீரில் குதித்து அக்பரையும் குழந்தையும் தூக்கி வந்து படகில் சேர்த்தான். படகில் பேரனுடன் ஏறிய அக்பர் தன்னை ஆசுவாசப்படுத்தி விட்டு பீர்பால் என்ன இது நீயா இப்படி என் பேரனை கொல்ல துணிந்தாய் என்னால் நம்ப முடிலவில்லை. சொல் என்ன காரணத்துக்காக என் பேரனை தண்ணீரில் தூக்கி போட்டீர் சொல்லும்? என்றார் கோபமாக. அதற்கு பீர்பால் அமைதியாக உங்களுக்கு திருமாலை பத்தி தெரிய வேண்டும் என்ற காரணத்திற்காக அப்படி செய்தேன் அரசே என்றார். அதற்கு அக்பர் நீ என் பேரனை தூக்கி தண்ணீரில் போட்டதுக்கும் உமது திருமாலை நான் தெரிந்து கொள்வதற்கும் என்ன சம்மந்தம்? என்று கத்தினார்.

அரசே என்னை மன்னித்து விடுங்கள். அன்று ஒரு நாள் திருமாலுக்கு சேவகர்களே இல்லையா அவர்தான் வந்து யானையை காப்பாற்ற வேண்டுமா என்று கேட்டீர்கள். அரசே சிறிது யோசித்து பாருங்கள் என்னையும் சேர்த்து இந்த படகில் உங்களுக்கு 10 சேவகர்கள் இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் யாருக்கும் நீங்கள் உத்தரவு பிறப்பிக்காமல் நீங்களே உங்கள் பேரனை காப்பற்ற தண்ணீரில் குதித்து விட்டீர்கள் ஏன் அரசே? உங்களை சுற்றி இருக்கும் சேவர்களான எங்களை நீங்கள் நம்பவில்லையா என்று கேட்டார். அதற்கு என் பேரன் மீது அளவு கடந்த அன்பு வைத்திருக்கிறேன். நீ திடீரென்று தண்ணீரில் அவனை தூக்கி போட்டதால் எனக்கு அவனை காப்பற்ற வேண்டும் என்கிற எண்ணம் தான் மேலோங்கி இருந்ததே தவிர உங்களுக்கு உத்தரவிட்டு அவனை காப்பாற்ற சொல்லும் அளவுக்கு எனக்கு பொறுமை இல்லமால் நானே குதித்து அவனை காப்பாற்றினேன் என்றார். பீர்பால் புன்னகையுடன் அரசே இந்த நாட்டை ஆளும் உங்களுக்கே இவ்வளவு அன்பு இருக்கும் போது அண்ட சாரசரங்களையும் ஆளும் எங்கள் திருமாலுக்கு எவ்வளவு அன்பு உயிர்கள் மீது இருக்கும்? அதனால்தான் எத்தனை சேவகர்கள் இருந்தாலும் தன்னை நம்பி அழைப்பவர்களை எங்கள் கடவுள் நேரில் காக்க வருகிறான். அரசே இப்பொழுது தங்களுக்கு புரிந்ததா திருமால் ஏன் நேரில் வந்து யானையை காப்பாற்றினார் என்று? என்று புன்னகைத்தார். நான் நீரில் வீசிய உங்கள் பேரனை காப்பற்ற இங்குள்ள ஒரு வீரனிடமும் படகோட்டியிடமும் நான் முன்னமே சொல்லி வைத்திருந்தேன் தவறு இருந்தால் மன்னியுங்கள் அரசே என்றார். அதற்கு அக்பர் பீர்பால் நான் தான் உன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். திருமாலைப் பற்றி தவறாக எண்ணி இருந்தேன். திருமால் தாயினும் மேலானவர் என்பதை புரிந்து கொண்டேன் என்றார்.

சிவராத்திரி

சிவனுக்கு உரிய ராத்திரி சிவராத்திரி

சிவன் என்றால் சிவப்பாக இருக்கின்றவன் சிவன் என்று பொருள். சிவப்பானவன் என்றால் சிவப்பின் உருவமானவன் என்று பொருள். சிவப்பு என்றால் அன்பு மற்றும் அருள் என்று பொருள். சிவன் என்றால் அன்பின் உருவமானவன் அருளின் உருவமானவன் என்று பொருள். சிவராத்திரி என்றால் அன்பிற்குண்டான ராத்திரி அருளுக்குண்டான ராத்திரி என்று பொருள். சிவராத்திரி அன்று இரவு இறைவனின் அன்பும் அருளுமானது மழை போல் கொட்டிக் கொண்டே இருக்கும். மனதை ஒரு நிலைப்படுத்தி நம்முடைய முதுகெலும்பு நேராக வைத்திருந்தால் இந்த அன்பையும் அருளையும் பெற்றுக் கொள்ளலாம்.

சிவராத்திரி அன்று ஒரு வேடன் காட்டிற்கு மான் வேட்டையாட சென்றான். நீண்ட நேரம் ஆகியும் ஒரு மானும் வராததால் அருகில் இருந்த ஒரு வில்வ மரத்தின் கிளை மீது ஏறி மானின் கூட்டம் ஏதும் வருகிறதா என்று பார்த்தான். மான் மற்றும் வேறு விலங்குகள் ஒன்றும் கண்ணுக்கு எட்டிய வரை இல்லை. விலங்குகளுக்காக காத்திருந்தவன் அப்படியே தூங்கி விட்டான். சிறிது நேரம் கழித்து விழித்தவன் திடுக்கிட்டான். ஏனெனில் இருட்டி விட்டது. காட்டில் தனியாக நடந்து விட்டுக்கு செல்ல முடியாது கொடூர மிருகங்கள் இருட்டில் எந்த பக்கம் வரும் என்று தெரியாது. இருட்டில் குறி பார்க்க முடியாமல் அம்பு விட்டு அதனை கொல்லவும் முடியாது. ஆகவே இரவு முழுவதும் மரத்தின் மீதே இருந்து விடலாம் என்று முடிவு செய்தான் வேடன். தூங்கினால் மரத்தின் பிடியை விட்டு விடுவோமோ கீழே விழுந்து விடுவோமோ என்ற எண்ணத்தில் தூங்காமல் இருப்பதற்காக மரத்தின் மீது நேராக அமர்ந்த படி மரத்தில் இருந்த இருந்த இலையை ஒவ்வொன்றாக கிள்ளி கீழே போட்டான். கீழே விழக்கூடாது என்ற எண்ணத்தில் அவன் மனம் ஒடுங்கி இருந்தது. வேறு எந்த சிந்தணையும் இல்லாமல் இலையை மட்டும் கீழே போட்ட வண்ணம் இருந்தது அவனது மனம்.

சில மணி நேரத்திற்கு பிறகு அந்த மரத்தின் அடியில் ஒரு மான் கூட்டம் வந்தது. வேடன் மானை தன் அம்பினால் குறி வைத்தான். ஆனால் அவனது மனம் அம்பை விட மறுத்தது. இந்த மானும் ஒரு ஜூவன் தானே அது தன் குடும்பத்துடன் இருக்கிறது அதனை கொன்றால் அதன் குடும்பம் வருத்தப்படுமே என்று நினைத்தபடி அம்பை விடாமல் நிறுத்தி விட்டான். அப்போது ஒரு புலி அங்கு வந்தது. புலியின் வருகையை பார்த்ததும் மான் கூட்டம் ஒடி விட்டது. வேடன் இந்த புலி நம்மை பார்த்து விடக்கூடாதே என்று புலியை பார்த்து பயந்தபடியே இருந்தான். அவன் பயந்தபடியே மனித வாடைக்கு புலி அவனை பார்த்து விட்டது. உடனே புலி அவனை தின்பதற்காக மரத்தின் மீது தாவி ஏறியது. வேடனின் அருகில் வந்த புலி அவனை பார்த்துக் கொண்டே இருந்தது. சிறிது நேரம் அவனை பார்த்துக் கொண்டிருந்த புலி அவனை ஒன்றும் செய்யாமல் திரும்பி சென்று விட்டது. மானை வேட்டையாட வந்த வேடன் ஏன் மானை வேட்டையாடாமல் மானின் மீது கருணை கொண்டான். வேடனை தின்பதற்காக வந்த புலி ஏன் அவனை கடிக்காமல் சென்றது என்றால் அவனின் மனம் மரத்தின் மீதிருந்து தான் கீழே விழக்கூடாது என்ற எண்ணத்தில் மட்டும் ஒருமுகப்பட்டு இருந்தது. முதுகுத்தண்டு நேராக வைத்திருந்தான். மரத்தின் மீதிருந்து அவன் கிள்ளி எறிந்த வில்வ இலைகளை மரத்தின் மீதிருந்த சிவ லிங்கத்தின் மீது விழுந்தது. அன்று சிவராத்திரி ஆனாதால் அவன் சிவராத்திரி சிவபூஜை செய்த பலனை பெற்றான். ஆகவே இந்த சிவராத்திரியில் ஆகாயத்தில் இருந்து வந்த அன்பின் ஆகார்சன சக்தியானது அருளின் ஆகார்சன சக்தியானது அவனை நிரப்பியது. இதன் காரணமாக அவனிடம் அன்பு வெளிப்பட்டதின் காரணமாக இவன் மானின் மீது அம்பு விடவில்லை. அன்பாலும் அருளாலும் நிரப்பப்பட்டதால் புலி அவனை ஒன்றும் செய்யாமல் சென்று விட்டது.

இறை சிந்தனை

ஒரு நாட்டின் மன்னனைக் காண ஒரு சாது வந்தார். நாட்டின் மன்னனாக இருப்பவர்கள் சாதுக்களின் அறிவுரையின்படி வாழ வேண்டும் அதன்படி மன்னனுக்கு அறிவுறுத்துவதற்காக சாதுக்கள் அரசவைக்கு அடிக்கடி வருவது வழக்கம். சாதுவைக் கண்ட மன்னன் பாரம்பரிய பழக்கத்தின்படி எழுந்து நின்று மிக்க மரியாதையுடன் அவரை வரவேற்று உபசரித்தான். மன்னனால் முறையாக வரவேற்கப்பட்ட சாது மன்னனுக்குச் சில ஆன்மீக விஷயங்களை போதிக்க முயன்றார். ஆனால் மன்னனோ அதில் சற்றும் நாட்டம் காட்டவில்லை. சாதுவிற்குத் தங்கம் வெள்ளி மான் தோல் புலித்தோல் என்று ஏதேனும் ஒரு பரிசை வழங்கி அதன் மூலம் அவரிடமிருந்து ஆசி பெறுவதில் மட்டும் மன்னன் குறியாக இருந்தான். பொன்னும் பொருளும் தனது ராஜ்ஜியத்தில் பொங்கி வளர வேண்டும் மக்கள் யாவரும் மன்னனான தனக்கு தயங்காது வரி செலுத்த வேண்டும் என்று மன்னன் ஆசியை வேண்டினான். ஆன்மீக அறிவுரைகள் வேண்டாம் ஆசி மட்டும் கிடைத்தால் போதும் என்றே மன்னனின் மனப்பான்மை இருந்தது. மன்னனுக்கு ஆசி வழங்கிய சாது அவனிடம் ஒரு விருப்பத்தை முன்வைத்தார். இந்த ஊரிலேயே மிகப்பெரிய முட்டாள் ஒருவனைக் கண்டுபிடித்து அவனுக்கு வேலை கொடுப்பாயாக. அவனது கையில் ஒரு குச்சியைக் கொடுத்து ஊரெங்கும் வலம் வரச் சொல். அதுவே அவனது வேலையாக இருக்க வேண்டும் அதற்காக அவனுக்குத் தக்க ஊதியமும் வழங்க வேண்டும். இதுவே சாதுவின் விருப்பம். சாதுவின் வேண்டுகோளைக் கேட்டு திகைப்புற்ற போதிலும் அவரின் மேல் இருந்த மதிப்பின் காரணமாக ஏதும் கேட்காமல் மன்னன் ஒப்புக் கொண்டான். சாதுவும் அரசவையை விட்டு வருத்தத்துடன் வெளியேறினார்.

சாதுவின் விசித்திரமான கட்டளையை மன்னன் மிகுந்த கவனத்துடன் நிறைவேற்றினான். தனது அமைச்சர்களின் உதவியுடன் நாட்டிலேயே மிகப்பெரிய முட்டாள் ஒருவனைக் கண்டுபிடித்தான். அவன் முட்டாளா என்பதை நன்கு சோதித்த பின்னர் அவனை வேலைக்கு அமர்த்திக் கொண்டான். அவன் கையில் ஒரு குச்சியைக் கொடுத்து ஊரெங்கும் வலம் வரும்படி கட்டளையிட்டான். மன்னன் தொடர்ந்து தனது நாட்டை திறம்பட ஆட்சி செய்து வந்தான். செல்வங்களைச் சேகரித்தான். பல நாட்டு இளவரசிகளை தனது ராணிகளாக்கினான். பல்வேறு மாளிகைகளைக் கட்டினான். மிக்க மகிழ்ச்சியுடன் வாழ்வைக் கழித்தான். முட்டாளும் முட்டாள்தனமாக ஊரெங்கும் குச்சியுடன் வலம் வந்தான். காலங்கள் உருண்டோடின. மன்னனை வயோதிகம் வாட்டத் தொடங்கியது. படுத்த படுக்கையானான். விரைவில் மரணத்தைத் தழுவப் போவதை அறிந்து உற்றார் உறவினர் என அனைவரையும் சந்தித்தார்கள். அண்டை நாட்டு மன்னர்கள் நாட்டின் முக்கியஸ்தர்கள் என அனைவரும் மரணப் படுக்கையில் இருந்த மன்னனை தினமும் சந்தித்து வந்தனர். அச்சமயத்தில் மன்னனைக் காண முட்டாளும் தனது குச்சியுடன் வந்தான்.

நீண்ட நாட்கள் கழித்து மன்னனைக் கண்ட முட்டாள் நீடூழி வாழ்க மன்னா என்று வாழ்த்து கோஷம் எழுப்பினான். தனது நிலையை உணராமல் வாழ்த்து கோஷம் எழுப்பும் முட்டாளை எண்ணி வருந்திய மன்னர் நான் வாழ்ந்த காலம் முடிந்துவிட்டது செல்ல வேண்டிய காலம் வந்துவிட்டது என்று பதிலளித்தார். எங்குச் செல்கிறீர்கள் மன்னா? எப்போது வருவீர்கள்? என்று கேட்டான். அதற்கு மன்னர் வெகு தூரம் செல்கிறேன். திரும்பி வருவதாக இல்லை என்றார். என்னையும் அழைத்துச் செல்லுங்கள் மன்னா என்றான். அங்கெல்லாம் உன்னைக் கூட்டிச் செல்ல இயலாது என்றார். அப்படியெனில் ராணியர்களோடு தனியாகச் செல்லப் போகிறீர்களா அதற்குத்தான் என்னை வேண்டாம் என்கிறீர்களோ? என்றான். முட்டாளின் முட்டாள்தனத்தை எண்ணி மன்னனுக்குச் சற்று கோபம் ஏற்பட்டது. இருப்பினும் சற்று பொறுமையுடன் தன்னுடைய ராணியர்களை எல்லாம் அங்கு கூட்டிச் செல்ல முடியாது முட்டாளுக்கு எடுத்துரைத்தான். இளைய ராணியரை மட்டுமாவது அழைத்துச் செல்லுங்களேன் என்றான். இல்லை நான் மட்டும் தனியாகத் தான் செல்ல வேண்டும் என்றார். அப்படியெனில் அமைச்சர் தங்களுக்காக அற்புதமான குதிரை வண்டியை ஏற்பாடு செய்திருப்பார் தங்களிடம்தான் எண்ணிலடங்காத குதிரைகள் உள்ளனவே அதில் செல்கிறீர்களா? என்றான். அதிகரித்த கோபத்துடன் மன்னர் முட்டாளே குதிரைகளையும் என்னுடன் கூட்டிச் செல்ல இயலாது. பாதயாத்திரையாகச் செல்ல விரும்புகிறீர்களா? வழிச் செலவிற்காகச் சற்று தங்க நாணயங்களையாவது எடுத்துச் செல்லுங்கள் என்றான். முட்டாளின் முட்டாள்தனமான கேள்விகளை இனிமேலும் பொறுத்துக் கொள்ள இயலாத மன்னன் அவனுடைய பேச்சுகளை உடனே நிறுத்தும்படி கட்டளையிட்டான். இருப்பினும் சாதுவின் பேச்சைக் கேட்டு இந்த முட்டாளை வேலைக்கு வைத்தோம் என்ற காரணத்தினால் இத்தனை காலம் நீ முட்டாளாக குச்சியுடன் நகரத்தைச் சுற்றி வந்ததால் உனக்கு இப்போது ஓய்வு தருகிறேன். இனிமேலும் நீ சுற்றி வரத் தேவையில்லை உனக்கு தொடர்ந்து ஊதியம் வழங்கப்படும். ஆனால் இந்த குச்சியை உன்னைவிடச் சிறந்த ஒரு முட்டாளைக் கண்டுபிடித்து அவனிடம் நீ கொடுக்க வேண்டும். அவனுக்கும் தக்க ஊதியம் வழங்க ஏற்பாடு செய்கிறேன் என்று உரைத்தார். பெரிய முட்டாளைக் கண்டுபிடித்து குச்சியைக் கொடுக்கும்படி மன்னன் கட்டளையிட அந்த முட்டாள் உடனடியாக தனது குச்சியினை மன்னரிடம் நீட்டினான். பிடித்துக் கொள்ளுங்கள் மன்னா என்றான். கோபத்தில் வெகுண்டெழுந்த மன்னன் என்ன தைரியம் உனக்கு என்னையே பெரிய முட்டாள் என்கிறாயா? என்று கோபத்தில் கத்தினான். முட்டாள் தனது பேச்சின் தொனியை மாற்றினான்.

நிச்சயம் மன்னா. நீங்களே பெரிய முட்டாள். ஆசையுடன் அனுபவித்த அரசியரையும் கஷ்டப்பட்டு கட்டிக்காத்த கஜானாவையும் பாசத்துடன் பார்த்து வளர்த்த படைகளையும் குதிரைகளையும் குழந்தைகளையும் அழைத்துச் செல்ல இயலாது என்று சொல்கிறீர்கள். ஆனால் எங்குச் செல்கிறோம் என்பதை நீங்கள் உணரவில்லை. எங்கு செல்கிறோம் ஏன் செல்கிறோம் எப்படிச் செல்கிறோம் யாருடன் செல்கிறோம் எதற்குச் செல்கிறோம் என்று எதையும் அறியாமல் எங்கோ செல்லும் உம்மைவிட பெரிய முட்டாள் யார் இருக்க முடியும்? ராணியரைச் சேர்த்தீர்கள் குழந்தைகளைப் பெற்றீர்கள் சேனைகளை வளர்த்தீர்கள் பல ராஜ்ஜியங்களை வென்றீர்கள் சொத்துக்களைக் குவித்தீர்கள் கஜானாவையும் நிரப்பினீர்கள் ஆனால் என்ன பிரயோஜனம்? நான் யார்? ஏன் பிறந்தேன்? ஏன் துன்பப்படுகிறேன்? வாழ்வின் குறிக்கோள் என்ன? கடவுள் யார்? கடவுளுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்? மரணம் என்றால் என்ன? பிறப்பிற்கும் இறப்பிற்கும் அப்பால் இருப்பது என்ன? என்று எதையும் தெரிந்து கொள்ளாமல் இந்த பூமியில் வாழ்ந்து என்ன பலன்? செல்லும் இடத்திற்கு தேவையான புண்ணியத்தை சேர்க்காமல் இருக்கும் இடத்தில் நிலை இல்லாத சுகத்தை சேர்த்து வைத்து என்ன பயன் என்றான். முட்டாளின் சொற்களில் பொதிந்திருந்த ஆழமான கருத்துகள் மன்னனின் நெஞ்சில் பசுமரத்தாணி போல நன்றாகப் பதிந்தன. குச்சியை வைத்துக் கொண்டு ஊரை வலம் வந்த முட்டாளிடம் இத்தனை ஞானமா மன்னருக்கு சந்தேகம் எழுந்தது. யார் நீங்கள் என்று கேட்டார். தான் உண்மையில் முட்டாள் அல்ல என்றும் பல வருடங்களுக்கு முன்பு தங்களைக் காண வந்த சாதுவின் சீடன் என்றும் தக்க தருணத்தில் ஆன்மீக உபதேசம் அளிப்பதற்காக முட்டாளாக நடித்தேன் என்றும் விளக்கினான்.

கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வது போல மரணம் தன்னை நெருங்கி வந்த பின்னர் வாழ்வின் உண்மையான பிரச்சனைகள் மன்னருக்குப் புரியத் தொடங்கின. வாழ்வை வீணடித்து விட்டதாகப் புலம்பத் தொடங்கினான். இருப்பினும் எஞ்சியுள்ள காலங்களாவது இறைவனை சிந்தித்து இறை நாமத்தில் மூழ்கி இருக்குமாறு மன்னனுக்கு அவன் அறிவுறுத்தினான். தன்னையே பெரிய முட்டாளாக ஏற்றுக் கொண்ட மன்னன் தன்னைப் போல முட்டாளாக இருந்து விடாதீர்கள் என்று தன்னை சந்திக்க வந்தவர்களுக்கும் நாட்டு மக்களுக்கும் அறிவுறுத்தி இறுதி காலம் வரை இறை சிந்தனையில் மூழ்கினான்.

சரணாகதி

பராசர பட்டர் ஸ்ரீராமானுஜரின் முதன்மைச் சீடரான கூரத்தாழ்வானின் மகன் ஆவார். ரங்கநாயகித் தாயாரும் திருவரங்கநாதனும் அவரைத் தங்கள் மகனாகவே பாவித்து வளர்த்தார்கள். அவர் ஒருமுறை காட்டுப் பாதையில் சென்று கொண்டிருந்தார். திடீரென்று அங்கே ஒரு காட்சியைக் கண்டு மயங்கி விழுந்து விட்டார். நெடுநேரம் ஆகியும் பட்டர் வீடு திரும்பாமையால் அவரைத் தேடிச் சென்ற சீடர்கள் காட்டில் அவர் மயங்கிக் கிடப்பதைக் கண்டார்கள். அவரைத் தேற்றி மெதுவாக வீட்டுக்கு அழைத்து வந்தார்கள். மயக்கம் தெளிந்து பட்டர் எழுந்தவுடன் காட்டில் என்ன ஆயிற்று? கொடிய மிருகங்கள் ஏதாவது உங்களைத் தாக்க வந்தனவா? காட்டுவாசிகளால் உங்களுக்கு ஏதேனும் ஆபத்து உண்டானதா? இயற்கைச் சீற்றங்கள் ஏதேனும் ஏற்பட்டனவா? என்றெல்லாம் கேள்வி கேட்டார்கள் அவர்களது சீடர்கள்.

நான் ஒரு காட்சியைக் கண்டேன் அதனால் மயங்கி விழுந்துவிட்டேன் என்றார் பட்டர். என்ன காட்சி? என்று பதற்றத்துடன் சீடர்கள் கேட்டார்கள். ஒரு வேடன் ஒரு முயல் குட்டியைப் பிடித்தான். அதை ஒரு சாக்குப் பையில் மூட்டை கட்டி எடுத்துச் சென்றான். இதைக் கண்ட அந்த முயல் குட்டியின் தாய் முயல் அந்த வேடனைத் துரத்திச் சென்று அவன் கால்களைப் பிடித்துக் கொண்டு மன்றாடியது. தனது குட்டியை விட்டுவிடும் படிக் கெஞ்சியது. அதைக் கண்டு மனம் இரங்கிய அந்த வேடன் முயல் குட்டியைச் சாக்கு மூட்டையிலிருந்து விடுவித்தான். இக்காட்சியைக் கண்டதும் நான் மயங்கி விழுந்துவிட்டேன் என்றார் பட்டர்.

இந்தக் காட்சியில் மயங்கி விழும் அளவுக்கு என்ன இருக்கிறது? என்று கேட்டார்கள் சீடர்கள். என்ன இப்படிச் சொல்லி விட்டீர்கள்? சரணாகதியை எப்படிச் செய்ய வேண்டும் என்று அந்த முயலுக்கு யாராவது சொல்லிக் கொடுத்திருக்கிறார்களா? இல்லை. ஒருவர் சரணாகதி அடைந்தால் அவர்கள் கேட்பதை கொடுக்க வேண்டும் என்ற நீதியை அந்த வேடனுக்கு யாராவது சொல்லிக் கொடுத்திருக்கிறார்களா? இல்லை. ஆனாலும் அந்த முயல் சரணாகதி அடைந்ததும் அந்த வேடன் முயலின் சரணாகதியை அங்கீகரித்து அது கேட்டதை உடனே தந்து விட்டான். சரணாகதி என்றால் என்னவென்றே அறியாத ஒரு முயலுக்கு ஒரு சாமானிய வேடன் இப்படிக் கருணை காட்டுகிறான் என்றால் இறைவனே கதி என்ற உறுதியுடன் அவன் திருவடிகளைச் சரணடைந்த நமக்கு எவ்வளவு அனுக்கிரகம் செய்வான்? அவனே கதி என்று அவனைப்பற்றிய நம்மைக் கைவிடுவானா? எம்பெருமானின் அத்தகைய ஒப்பற்ற கருணையை உணராமல் இத்தனை காலம் வீணாகக் கழித்து விட்டேனே என்று வருந்தினேன். இறைவன் நம்மைக் கைவிடவே மாட்டான் காப்பாற்றியே தீருவான் என்ற உறுதி இன்னும் என் மனதில் உதிக்கவில்லையே என ஏங்கினேன். அதனால்தான் மயங்கி விழுந்து விட்டேன் என்று விடையளித்தார் பட்டர். பட்டரின் விளக்கத்தைக் கேட்ட சீடர்கள் வியந்து போனார்கள்.

துளசி

அதிகாலையில் தினமும் எழுந்து ஏழை ஒருவன் தனக்குச் சொந்தமான வயற்காட்டுக்குச் சென்று கீரை வகைகளைப் பறித்து அதைச் சந்தையில் விற்று அதில் வரும் சொற்ப வருமானத்தைக் கொண்டு குடும்பத்தை நடத்திக் கொண்டிருந்தான். அவன் தினமும் கீரைகளைப் பறிக்க காட்டுக்கு போகும் வழியில் ஒரு குடிலில் முனிவர் ஒருவர் சிறு பெருமாள் விக்கிரகத்தை வைத்து துளசி இலையால் பூஜைகள் செய்வதைப் பார்த்துக் கொண்டே போவான். ஒரு நாள் அதே போல் முனிவர் பெருமாளுக்கு துளசியை வைத்து பூஜை செய்வதைப் பார்த்துக் கொண்டே வயற்காட்டுக்குச் சென்றான். கீரைகளைப் பறிக்கும் போது அதன் அருகே சில துளசி செடிகள் வளர்ந்திருப்பதைக் கண்டான். அப்போது அவனுக்கு அந்த முனிவர் தினமும் பெருமாளுக்கு பூஜை செய்யும் துளசி இலை ஞாபகத்துக்கு வந்தது. உடனே நம்மால் தான் பெருமாள் விக்கிரகத்துக்கு பூஜை செய்ய முடியவில்லை. இந்த துளசியையாவது பறித்துச் சென்று அந்த முனிவர் செய்யும் பூஜைக்கு அர்ச்சனையாகக் கொடுப்போமே என்று எண்ணியபடி செடியில் இருந்து துளசியையும் சேர்த்துப் பறித்து கீரைக் கட்டோடு ஒன்றாகப் போட்டு தலை மீது வைத்துக் கொண்டு முனிவரின் இல்லம் நோக்கி நடந்தான். ஆனால் அவன் பறித்துப் போட்ட கீரைக் கட்டில் ஒரு சிறு கருநாகமும் இருந்ததை அவன் கவனிக்கவில்லை.

முனிவரின் இல்லத்து முன் வந்து நின்றான் ஏழை விவசாயி. முனிவர் ஏழையைப் பார்த்தார். அதேசமயம் அவன் பின்னே அருவமாய் யாரோ ஒருவர் நிற்பதைக் கண்டார். தன் கண்ணை மூடி ஞான திருஷ்டியில் அவர் யார் என்று அறிய முயன்று பார்த்ததில் அந்த ஏழையின் பின்னே நிழல் போல் நிற்பது கிரகங்களில் நாகத்தின் அம்சத்தில் ஒருவரான ராகு பகவான் என்பது தெரிந்தது. முனிவர் உடனே ஏழையிடம் உன் தலையில் உள்ள கீரைக் கட்டை அப்படியே வைத்திரு ஒரு ஐந்து நிமிஷம் அதைக் கீழே இறக்க வேண்டாம். இதோ வந்து விடுகிறேன் என்று கூறி விட்டு குடிலின் பின் பக்கம் சென்று ராகு பகவானின் மந்திரத்தை உச்சரித்து ஏழையின் பின்னே நின்றிருந்த ராகு பகவானை அழைத்தார். ஏழையின் பின்னால் இருந்த ராகு பகவானும் குடிலின் பின்னே இருந்த முனிவரின் முன்பாக வந்து நின்று வணங்கி சுவாமி என்னைத் தாங்கள் அழைத்ததன் காரணம் என்ன? என்று கேட்டார். முனிவரும் ராகுவை வணங்கி ராகுவே எதற்காக இந்த ஏழையைப் பின்தொடர்ந்து வருகிறாய்? என்ன காரணம் என்று நான் அறியலாமா? என்று கேட்டார். அதற்கு ராகு சுவாமி இந்த ஏழையை இன்று நான் ஒரு சிறு கரு நாக உருவெடுத்து தீண்ட வேண்டும் என்பது இவனுக்கு எழுதப்பட்ட கிரக விதி. ஆனால் இவன் என்றும் இல்லாத அதிசயமாக இன்று பகவானின் பிரியமான துளசியை இவன் தலையில் சுமந்து வருவதால் இவனை என்னால் தீண்ட முடியாமல் தவித்து கொண்டிருக்கிறேன். இவன் தலையில் சுமந்திருக்கும் துளசியை உங்களிடம் கொடுத்த அடுத்த கணமே அவனைத் தீண்டி விட்டு என் கடமையை முடித்துக் கொண்டு நான் கிளம்பிச் சென்று விடுவேன் என்றார்.

முனிவருக்கு ஏழை மேல் பரிதாபம் ஏற்பட்டது. எவ்வளவு ஆசையாக நம் பூஜைக்காக துளசியைப் பறித்துக் கொண்டு வந்துள்ளான். அவனைக் காப்பாற்ற முயற்சிக்க வேண்டும் என்றெண்ணினார். ராகுவே அவனை நீ தீண்டாமல் இருக்க ஏதேனும் பரிகாரம் உள்ளதா? என்றார். ராகுவோ சுவாமி இத்தனைக் காலம் நீங்கள் இறைவனை பூஜை செய்த புண்ணியத்தின் பலனை அந்த ஏழைக்கு கொடுத்தால் அவனது சர்ப்பதோஷம் நீங்கப் பெறுவான். அதனால் நான் அவனைத் தீண்டாமல் சென்று விடுவேன் என்றார். முனிவரும் அகமகிழ்ந்து அவ்வளவுதானே இதோ இப்பொழுதே நான் இதுவரை நான் செய்த பூஜை பலன்கள் முழுவதையும் அந்த ஏழைக்கு கொடுக்கிறேன் என்று கூறி ஏழைக்குத் தன் பூஜை பலனை கொடுக்க ராகு பகவானும் முனிவரின் தர்ம குணத்தை எண்ணி மகிழ்ந்து மறைந்து போனார். அப்பொழுது கீரைக் கட்டில் இருந்த கரு நாகமும் மறைந்தது. முனிவர் அந்த ஏழையிடம் வந்து இனி நீ தினமும் என் பூஜைக்கு துளசி பறித்து வரவேண்டும் சரியா? என்றார். ஏழைக்கு மிகுந்த மகிழ்ச்சி நம்மால் பெருமாளுக்கு பூஜை செய்ய முடியாவிட்டாலும் முனிவர் மூலம் இப்படி ஒரு கொடுப்பினை கிடைக்கிறதே என்று நினைத்து மகிழ்ந்து கொண்டே தன் குடிசையை நோக்கிச் சென்றான்.

ஏற்றத்தாழ்வு

மகாகவி காளிதாசர் வயல் வழியாக வெயிலில் நடந்து சென்ற போது தாகம் எடுத்தது. சற்று தூரத்தில் ஒரு கிராமப்பெண் கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து கொண்டிருந்தாள். காளிதாசர் அவரைப் பார்த்து அம்மா தாகமாக உள்ளது சிறிது தண்ணீர் குடிக்க தாருங்கள் என்று கேட்டார். அந்த கிராமத்துப் பெண்ணும் தருகிறேன் உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள் என்றாள். உடனே காளிதாசருக்கு இந்த பெண் சிறியவள் தன்னை பற்றி சொன்னால் இவளால் புரிந்து கொள்ள முடியாது என்ற ஏற்றத்தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டது. நாம் பெரிய கவிஞர் என்று இந்த பெண்ணிடம் சொல்ல வேண்டுமா என நினைத்து நான் ஒரு பயணி அம்மா என்றார். உடன் அந்த பெண் உலகில் இரண்டு பயணிகள் தான் ஒருவர் சந்திரன் ஒருவர் சூரியன் இவர்கள் தான் இரவு பகல் என பயணிப்பவர்கள் என்றாள். சரி என்னை விருந்தினர் என்று வைத்துக் கொள் என்றார் காளிதாசர். உடனே அந்தப் பெண் உலகில் இரண்டு விருந்தினர்கள் தான் உள்ளார்கள் ஒன்று செல்வம் இரண்டு இளமை இவை இரண்டும் தான் விருந்தினராக வந்து உடனே போய் விடும் என்றாள். சற்று எரிச்சலான காளிதாசர் தான் ஒரு பொறுமைசாலி என்றார். உடனே அந்த பெண் அதுவும் இரண்டு பேர்தான். ஒன்று பூமி எவ்வளவு மிதித்தாலும் எவர் மிதித்தாலும் தாங்கும் மற்றொன்று மரம் யார் கல்லால் அடித்தாலும் பொறுத்துக் கொண்டு காய்களைக் கொடுக்கும் என்றாள். சற்று கோபமடைந்த காளிதாசர் நான் ஒரு பிடிவாதக்காரன் என்றார். அதற்கும் அந்த பெண் உலகிலேயே பிடிவாதக்காரர்கள் இரண்டு பேர் தான் ஒன்று முடி மற்றொன்று நகம் இவை இரண்டையும் எத்தனை முறை வேண்டாம் என்று வெட்டினாலும் பிடிவாதமாக வளரும் என்றாள். நான் ஒரு முட்டாள் என்று தன்னை கூறிக்கொண்டார். உடனே அந்த பெண் உலகிலேயே இரண்டு முட்டாள்கள் தான் இருக்கிறார்கள் ஒருவன் நாட்டை ஆளத்தெரியாத அரசன் மற்றவன் அவனுக்குத் துதிபாடும் அமைச்சன் என்றாள்.

காளிதாசர் செய்வதறியாது அந்த பெண்ணின் காலில் விழுந்தார். உடனே அந்த பெண் மகனே எழுந்திரு என்றதும் நிமிர்ந்து பார்த்தார் காளிதாசர் சாட்சாத் சரஸ்வதி தேவியே அவர் முன் நின்றாள் காளிதாசர் கைகூப்பி வணங்கியதும் தேவி காளிதாசரைப் பார்த்து காளிதாசா எவன் ஒருவன் தன்னை மனிதன் என்று உணர்ந்து அனைத்து உயிர்களையும் இறைவனாக பார்த்து அன்பு செலுத்துகிறனோ அவனே மனிதப்பிறவியின் உச்சத்தை அடைகிறான். ஆகவே நீ மனிதனாகவே இருந்து பெரியவர் சிறியவர் என்ற ஏற்றத் தாழ்வுகள் பார்க்காமல் இரு என்று கூறி தண்ணீர் குடத்தை காளிதாசர் கையில் கொடுத்து சரஸ்வதி தேவி மறைந்தாள்.

பொக்கிஷம்

கிருஷ்ணர் மீது ஏழ்மையான பெண் ஒருத்தி மிகவும் பக்தி வைத்திருந்தாள். ஒருநாள் துவாரகை சென்ற அவள் கிருஷ்ணா உன் விருப்பப்படி நடந்து கொள்வதை தவிர எனக்கு வேறு மகிழ்ச்சி எதுவும் இல்லை. உனக்கு நான் என்ன செய்யவேண்டும் சொல்? என்றாள். கிருஷ்ணர் தன்னிடம் ஏதாவது பக்தி பூர்வமாக கேட்பார் அதை செய்யலாம் என்று கருதி இதுபோல் அவள் கேட்டாள். ஆனால் ஒரு அழுக்கு கோணிப்பை மூட்டையை அவளிடம் தந்த கிருஷ்ணன் நான் செல்லும் இடமெல்லாம் இதைத் தூக்கிக் கொண்டு வா அது போதும். அனைவரின் முன்னிலையிலும் இந்த அழுக்கு கோணிப்பை மூட்டையை எப்படி கொண்டு செல்வது என்று எண்ணாதே நம் கண்களை தவிர வேறு கண்ணிற்கும் இது தெரியாது என்றார். திகைத்துப் போனாள் அந்தப் பெண். பக்திப்பூர்வமாக எதையாவது சொல்வார் என நினைத்தால் அழுக்கு மூட்டையை சுமக்கச் சொல்கிறாரே என்று எரிச்சல் தோன்றினாலும் வேறு வழி இன்றி அதை அவர் செல்லும் இடம் எல்லாம் தூக்கிக் கொண்டு போனாள். பலமுறை அவள் சலித்துக் கொண்ட போதும் கிருஷ்ணர் எதுவும் சொல்லவில்லை. பல முறை அவள் கோணிப்பை மூட்டையை சுமக்க சிரமப்பட்ட சமயங்களில் தானும் ஒரு கைகொடுத்து உதவினார் கிருஷ்ணர்.

ஒரு நாள் போதும் நீ சுமந்தது மூட்டையை இறக்கி வை என்று சொன்ன கிருஷ்ணர் மூட்டைக்குள் என்ன இருக்கிறது என்று பார்ப்போமா? என்று புன்முறுவலுடன் கேட்டார். கோணிப்பை மூட்டை தானே அவிழ்ந்தது. அதில் விலை மதிப்பற்ற பொன்னும் மணியும் வைர வைடூரியங்களும் குவிந்து கிடந்தன. இத்தனை காலம் பொறுமையுடன் காத்திருந்த உனக்கு என்னுடைய பரிசு இது. எடுத்துக்கொள் என்று சிரித்துக் கொண்டே சொன்னார் பகவான். சட்டென்று கிருஷ்ணரின் பாதங்களில் விழுந்த அப்பெண் கிருஷ்ணா என்னை மன்னித்துவிடு அரும்பெரும் பொக்கிஷத்தை என்னிடம் கொடுத்திருந்தும் கூட அது தெரியாமல் இத்தனை காலம் உன்னை தவறாக நினைத்துவிட்டேன். உன்னை சந்தேகிக்காமல் உனது நோக்கத்தைப் புரிந்து கொண்டிருந்திருந்தால் இந்தச் சுமை எனக்கு சுமப்பதற்கு இன்பமாய் இருந்திருக்கும். புலம்பியிருக்கவோ குறை சொல்லியிருக்கவோ மாட்டேன் என்று கண்ணீர் விட்டுக் கதறினாள். அமைதியாகப் புன்னகைத்தார் கிருஷ்ணர்.

இறைவன் ஒவ்வொருவருக்கும் உரியவற்றை மிகவும் கவனமாகவும் அன்புடனும் பிரத்யேமாகத் தயாரித்து அவர்களிடமே தருகிறான். அதனை சுமையாக நினைப்பதும் பொக்கிஷமாகப் பார்ப்பதும் அவரவர் மனநிலையில் இருக்கிறது. யாரால் எதைச் சுமக்க முடியும் என்று ஆண்டவனுக்குத் தெரியும். தாங்க முடிந்த அளவு மட்டுமே அவன் சுமையைத் தருவான். அதுமட்டுமல்ல அதனைச் சுமக்க தன் கரம் கொடுத்தும் அருளுவான். அனைத்தும் இறைவன் செயல் அனைத்தும் நம் நன்மைக்கே என்று நம்பினால் சுமைகள் எல்லாம் சுகமாகத் தெரியும்.