தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 249 திருப்பாசூர்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 249 வது தேவாரத்தலம் திருப்பாசூர். மூலவர் வாசீஸ்வரர், பாசூர்நாதர், பசுபதீஸ்வரர்.. இறைவன் இத்தலத்தில் சதுரவடிவில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். உற்சவர் சோமஸ்கந்தர். அம்பாள் பசுபதிநாயகி, மோகனாம்பாள், தங்காதளி அம்பாள். தலவிருட்சம் மூங்கில். தீர்த்தம் சோம தீர்த்தம், மங்கள தீர்த்தம். தலையில் வெட்டுப்பட்ட தடத்துடன் தன் உடலில் மேல் பகுதி மட்டும் இடப்புறத்தில் சற்று நகர்ந்தபடியான கோலத்தில் இருக்கிறார். காயம்பட்ட லிங்கம் என்பதால் இவரை கையால் தொட்டு பூஜைகள் செய்யப்படுவதில்லை. அலங்காரங்கள் கூட பாவனையாகத்தான் நடைபெறுகிறது. சுவாமி தீண்டாத் திருமேனி என்று அழைக்கப்படுகிறார். அர்த்த மண்டபத்தில் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீசக்கரம் இருக்கிறது. மூங்கில் வனத்தின் அடியில் தோன்றிய சிவன் என்பதால் இவருக்கு பாசுரநாதர் என்றொரு பெயரும் உண்டு. பாசு என்றால் மூங்கில் என்று பொருள். மூங்கில் காட்டில் சுயம்புவாகத் தோன்றிய இடத்தில் ஆலயம் உள்ளதால் திருப்பாசூர் என்று பெயர் பெற்றது.

சிவன் இங்கு லிங்க வடிவிலும் பெருமாள் வினை தீர்த்த ஈஸ்வரன் என்ற பெயரில் தனியாகவும் இருக்கிறார். தெற்கு திசையில் 3 நிலை இராஜகோபுரமும் கிழக்கு திசையில் ஒரு முகப்பு வாயிலும் கொண்டு இவ்வாலயம் உள்ளது. வெளிப் பிரகாரம் சுற்றி வரும்போது கிழக்குச் சுற்றில் பலிபீடம், கொடிமரம், நந்தி மண்டபம் ஆகியவை உள்ளன. இச்சுற்றில் சொர்ணகாளிக்கு தனி சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இறைவன் கருவறை விமானம் கஜப்பிரஷ்ட அமைப்பைக் கொண்டது. அம்பாள் சந்நிதி சிவபெருமான் சந்நிதியின் வலதுபுறம் அமைந்துள்ளது. இவ்வாறு சுவாமி சந்நிதியின் வலதுபுறம் அம்பாள் சந்நிதி உள்ள சிவஸ்தலங்களுக்கு ஆக்க சக்தி அதிகம் உண்டு என்று சாத்திரங்கள் கூறுகின்றன. சுவாமி சந்நிதியின் இரு பக்கமும் துவாரபாலகர்கள் உள்ளனர். மூலவர் கருவறையில் நுழைவாயில் இடதுபுறம் ஏகாதச விநாயகர் சபை இருக்கிறது. இதில் சிறிதும் பெரிதுமாக 11 விநாயக திரு உருவச்சிலைகள் உள்ளது. முன்புறம் மூன்று பின்புறம் மூன்று என ஆறு விநாயகர்களும் இவர்களுக்கு இடப்புறம் ஐந்து விநாயகர்களும் இருக்கின்றனர். அருகில் கேதுவும் இருக்கிறார். கருவறை சுற்றுச் சுவர்களில் கோஷ்ட மூர்த்தங்களாக தட்சினாமூர்த்தி, அண்ணாமலையார், துர்க்கை, பிரம்மா ஆகியோர் உள்ளனர். உட்பிரகாரத்தில் தேவார மூவரின் உருவச்சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன.

தனது தலை முடியைக் கண்டதாக பொய் சொன்ன பிரம்மனுக்காக பொய் சொன்னதால் தாழம்பூவை பூஜைகளில் இருந்து ஒதுக்கி வைத்தார் சிவன். தாழம்பூ சிவனிடம் தன்னை மன்னித்து பரிகாரம் வேண்டவே சிவராத்திரி நாளில் மட்டும் தனது பூஜைக்கு பயன்படும்படி சிவன் வரம் கொடுத்தார். இதன் அடிப்படையில் இக்கோயிலில் சிவராத்திரி தினத்தன்று இரவு ஒரு கால பூஜையில் மட்டும் தாழம்பூவை சிவனின் உச்சியில் வைத்து பூஜை செய்கின்றனர். தட்சனின் யாகத்திற்கு சென்றதால் பார்வதி தேவியை பூலோகத்தில் சாதாரண பெண்ணாக பிறக்கும்படி சபித்தார் சிவன். சாபத்தால் பூலோகத்தில் இத்தலத்திற்கு வந்த அம்பாள் சிவனை வேண்டி தவம் செய்தாள். அவளுக்கு இங்கிய சிவன் அம்பாளை தன் காதலியே என்று சொல்லி அன்போடு அழைத்து அவளை மன்னித்து அருளினார். இதனால் இங்குள்ள அம்பாளை தங்காதலி அம்பாள் என பெயர் பெற்றாள். அம்பாளின் பெயரால் இவ்வூருக்கு தங்காதலிபுரம் என்ற பெயரும் உண்டு.

பல்லாண்டுகளுக்கு பின்பு இத்தலம் மூங்கில் மரங்கள் நிறைந்த வனமாக இருந்தது. அருகில் உள்ள புல்வெளியில் மேய்ச்சலுக்கு வந்த பசுக்களில் ஒன்று மட்டும் தொடர்ந்து இங்கு ஒரு சிறு மேட்டின் மீது அடிக்கடி பால் சொரிந்தது. இதனைக் கண்ட இடையன் இத்தகவலை கரிகாலசோழ மன்னரிடம் தெரிவித்தான். மன்னன் மண்ணிற்கு அடியில் தோண்டி பார்க்க உத்தரவிட்டான். காவலர்கள் இவ்விடத்தில் வாசி எனும் கருவியால் தோண்டி பார்த்தனர். அப்போது மண்ணிற்கு அடியில் இருந்து ரத்தம் வெளிப்பட்டது. அதிர்ந்த மன்னன் அடியில் பார்த்தபோது சிவன் சுயம்பு லிங்கமாக இருந்தார். பயந்துபோன மன்னன் அரண்மனைக்கு திரும்பி விட்டான். சிவலிங்கத்தின் மீது இன்றும் வெட்டிய தழும்புகள் அடையாளமாகத் திகழ்கின்றன. மறுநாள் மன்னனின் சமண எதிரிகள் அவனை பழி தீர்ப்பதற்காக கொடிய விஷம் கொண்ட பாம்பு ஒன்றை குடத்தில் இட்டு அவனிடம் கொடுத்து விட்டனர். மன்னன் குடத்தை திறந்து பார்ப்பதற்கு முன்பு அங்கு வந்த ஒரு பாம்பாட்டி குடத்தில் இருந்த பாம்பை பிடித்துவிட்டு ஏதும் சொல்லாமல் சென்றுவிட்டார். அன்றிரவில் தானே பாம்பாட்டியாக வந்ததையும் மூங்கில் காட்டிற்குள் சுயம்புவாக எழுந்தருளியுள்ளதையும் மன்னனுக்கு உணர்த்தினார் சிவன். அதன்பின் மன்னன் இத்தலத்தில் கோயில் எழுப்பினான். வாசி எனும் கருவியால் வெட்டுப்பட்ட சிவன் என்பதால் இவர் வாசீஸ்வரர் என்றழைக்கப்படுகிறார். அரசர் மீது எதிரிகள் ஏவிய பாம்பை இறைவன் எழுந்தருளித் தடுத்தாட்டினார் .இதை திருநாவுக்கரசர் இத்தலத்திற்குரிய தாண்டகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மது கைடபர் எனும் இரு அசுரர்கள் பிரம்மாவின் வேதத்தை கடலுக்கு அடியில் மறைத்து வைத்து விட்டனர். இதனால் பிரம்மாவால் படைப்புத் தொழிலை செய்யமுடியவில்லை. எனவே மகாவிஷ்ணு மீன் அவதாரம் எடுத்துச் சென்று அவர்களை அழித்து வேதத்தை மீட்டு வந்தார். இதனால் அவரை தோஷம் பிடித்தது. இத்தோஷம் விலக சிவனிடம் வேண்டினார். அவர் பூலோகத்தில் இத்தலத்தை சுட்டிக்காட்டி தன்னை வழிபட்டுவர தோஷம் நீங்கும் என்றார். அதன்படி மகாவிஷ்ணு இங்கு வந்தார். இங்கிருந்த தீர்த்தத்தில் நீராடி சிவனை வழிபட்டு தோஷம் நீங்கப்பெற்றார். விஷ்ணு அசுரர்களை அழித்த தோஷத்தால் தன்னிடமிருந்த 16 செல்வங்களில் 11 செல்வங்களை இழந்தார். அந்த செல்வங்களை பெறுவதற்காக சிவனை வேண்டினார். அவரது ஆலோசனையின்படி இத்தலத்தில் 11 விநாயகர்களை பிரதிஷ்டை செய்து வணங்கி இழந்த செல்வங்களை பெற்றார். இதனை உணர்த்தும் விதமாக இக்கோயிலில் 11 விநாயகர்கள் ஒரே இடத்தில் சிறு மண்டபத்தின் கீழ் காட்சி தருகின்றனர். சிவனும் சுயம்புவாக எழுந்தருளினார்.

இப்பகுதியை ஆட்சி செய்து வந்த குறும்பன் எனும் சிற்றரசன் ஒருவன் மன்னனுக்கு சரியாக வரி கட்டாமல் இருந்தான். எனவே அவனுடன் போரிட்டு வரியை வாங்க சோழ மன்னன் ஒருவன் குறும்பன் மீது படையெடுத்தான். காளி பக்தனான குறும்பன் அவளை ஏவி விட்டு சோழ படைகளை விரட்டியடித்தான். சோழ மன்னன் சிவனிடம் தனக்கு உதவும்படி வேண்டினான். அவனுக்காக சிவன் காளியை அடக்க நந்தியை அனுப்பி வைத்தார். பூலோகம் வந்த நந்தி காளியுடன் போரிட்டு வெற்றி பெற்றார். மேலும் காளியின் இரண்டு கால்களிலும் பொன் விலங்கை பூட்டியும் அதனைக் கட்டுப்படுத்தினார். பின் மன்னன் இப்பகுதியை மீண்டும் கைப்பற்றினான். சோழர் காலக் கல்வெட்டுகளும், மற்றய காலத்தவைகளும் ஆக 16 கல்வெட்டுகள் உள்ளன. இக்கோயிலுள்ள கல்வெட்டுகள் மூலம் அரசர்கள் இக்கோயிலுக்குச் செய்தற்க்கான தருமங்கள் தெரியவருகின்றன. ராஜராஜன் பூஜைக்காக 47 பொன்காசுகள் விளக்கிற்காக 32 பசுவும் முரசுவாத்தியத்திற்காக 1 எருதும் அளித்தான் என்றும் குலோத்துங்கன் காலத்தில் திருஆபரணத்திற்காக ஒருபெண் 30 பொன்காசும் நாள்ஒன்றுக்கு 2 படி அரிசியும் கொடுத்ததாகத் தெரியவருகிறது. திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் பாடல்கள் பாடியுள்ளனர்.

ராம ஜப மகிமை

ஒரு நாள் சக்கரவர்த்தி அக்பர் வேட்டைக்காக ஒரு பரந்த வனத்திற்குள் சென்றார். அவருடன் மந்திரி பீர்பாலும் சென்றார். ஆனால் காட்டுக்குள் சென்றவர்களுக்கு வழி தவறிப் போனது. கொடும் வனம் அதைவிட கொடிய பசி இருவரையும் வாட்டி வதைத்தது. ஆனால் பீர்பாலோ அடர்ந்த வனத்தின் அழகில் மனதை பறிகொடுத்து விட்டார். உடனே ஒரு பெரியமரத்தின் கீழ் அமர்ந்து ராம ராம என்று ராம நாம ஜபத்தை ஜபிக்கத் தொடங்கினார். அக்பர் பசி தாங்க முடியாமல் பீர்பாலை நோக்கி ஏதாவது உணவை சேகரித்துக் கொண்டு வாருங்கள். நிச்சயம் சிறிது தூரம் போனால் ஏதாவது வழி தென்படும் என்று கூற பீர்பாலோ அரசே என் வயிறோ உணவிற்கு ஏங்குகிறது. ஆனால் மனமோ ராம நாமத்திற்கு ஏங்குகிறது. அதனால் மன்னா இப்போது நான் உணவைப் போய் சேகரிக்கும் நிலையில் இல்லை என்று பதிலளித்தார்.

இதைக் கேட்டு சினம் கொண்ட அக்பர் தானே உணவை தேடிக் கொண்டு போனார். அவர் எதிர்பார்த்தது போலவே தொலைவில் ஒரு வீடு தென்பட விரைந்து சென்ற சக்கரவர்த்தி அக்பரை அவ்வீட்டினர் மனம் மகிழ்ந்து வரவேற்று அறுசுவை உணவளித்து உபசரித்தனர்.

அக்பரும் மனம் கேளாமல் பீர்பாலிற்காகவும் உணவைக் கேட்டுப் பெற்று காட்டில் மரத்தடியில் ராமநாமத்தை ஜபித்துக் கொண்டிருந்தவருக்கு உணவு கொடுத்துவிட்டு ஏளனத்தோடு சொன்னார். பீர்பால் இப்போதாவது தெரிந்ததா நான் எடுத்த சரியான முடிவு தான் இன்று உங்களுக்கு உணவு கிடைத்தது. நீங்கள் ஜபித்துக் கொண்டிருக்கும் ராமஜபம் உங்களுக்கு உணவு கொடுக்கவில்லை தெரிந்துகொள்ளுங்கள் என்று கூறினார். உணவைப் புசித்து முடித்து விட்டு அமைதியாக பீர்பால் அரசே உணவிற்காக மகாபெரிய சக்கரவர்த்தியான தாங்கள் ஒரு சாதாரண பிரஜையிடம் யாசிக்க நேர்ந்தது. ஆனால் என் பிரபு ராமரோ எனக்கு உணவை மாமன்னரான உங்கள் கையில் கொடுத்தனுப்பியுள்ளார். இது தான் ராம ஜபத்தின் மகிமை என்று கூற அக்பர் வாயடைத்துப் போய் நின்றார்.

Image result for பீர்பால் அக்பர்

மகாபாரதம் 6. பீஷ்ம பருவம் பகுதி -10

பீஷ்மரும் பாண்டவர்களின் படை தளபதியான திருஷ்டத்துய்மனும் நேருக்கு நேர் போரில் சந்தித்தனர். வில் வித்தையில் தான் குருவையே தோற்கடித்தவர் பீஷ்மர் என்பதால் அவரின் ஆற்றல் என்ன என்பதை திருஷ்டத்துய்மன் நன்கு அறிவான். சாமர்த்தியமாக அவரை தாக்காமல் அவருடைய அனைத்து தாக்குதலையும் தடுத்து பீஷ்மரை சோர்ந்து போக வைத்தான்.

அர்ஜுனனும் துரோணரும் நேருக்கு நேர் சந்தித்தனர். அர்ஜூனனை பார்த்து துரோணர் அர்ஜுனா நீ என்னை வென்றால் அதனால் பெருமை எனக்கு தான். தயங்காமல் உன் அம்புகளை செலுத்து இது உனக்கும் எனக்கும் நடக்கும் போர் அல்ல. தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் நடக்கும் போர். வீழ்வது நானாக இருப்பினும் வெல்வது தர்மமாக இருக்க வேண்டும். நான் என் ஆற்றலை குறைத்து யுத்தம் செய்ய மாட்டேன் என் முழு ஆற்றலுடன் போர் செய்வேன். என்னை நீ இந்த போரில் வென்றால் நீ வில்லுக்கு விஜயன் என்று பெயர் பெறுவாய். வில்லுக்கு விஜயன் என்ற புகழ் உன்னை சேரட்டும் என்று ஆசி வழங்கினார். குருவின் ஆசியோடு அம்புகளை செலுத்தினான் அர்ஜுனன். அம்புகள் காற்றை கிழித்து கொண்டு பாய்ந்தன. அக்னி மற்றும் வாயு அஸ்திரங்களை செலுத்தினான். துரோணரும் அதற்க்கு ஈடாக போர் புரிந்தார். இருவரின் ஆயுதங்கள் தீர்ந்து போகும் நிலையில் இருவரும் சோர்ந்தனர். கிருஷ்ணர் அர்ஜுனரிடம் இன்று நீ புரிந்த யுத்தம் தான் துரோணரின் தலைமை சீடன் என்பதை உலகிற்கு தெரிவித்தது என்று கூறி ஊக்கம் அளித்தார்.

நகுலனும் சகாதேவனும் காலாட்படைகளை சிதறடித்தனர். நகுலனின் வாள் சுழர்ச்சியும் சகாதேவனின் ஈட்டியும் போர் களத்தில் புயலை உருவாகியது. அன்றிய போரில் சகாதேவன் வீசிய ஈட்டிகளின் எண்ணிக்கை 17485. ஆறாம் நாள் போரில் பாண்டவர்களின் கை ஓங்கி இருந்தது. அர்ஜுனன் துரோணர், பீமன், துரியோதனன், பீஷ்மர், திருஷ்டத்துய்மன், நகுலன் சகாதேவன் என அனைவரும் சோர்ந்திருந்த நிலையில் மாலையில் சூரியன் அஸ்தமித்தான். ஆறாம் நாள் போர் முடிவிற்கு வந்தது.

ஏழாம் நாள் யுத்தத்திற்கு அனைவரும் தயாரானர்கள். ஆறாம் நாள் போரில் சோர்வடைந்த துரியோதனன் அடுத்த நாள் காலை பீஷ்மரிடம் முறையிட்டான். எனது அச்சமும் சோர்வும் என்னை விட்டு அகவில்லை. உங்கள் உதவி இல்லாமல் நான் எப்படி வெற்றி பெறுவேன் எனக் கெஞ்சிக் கேட்டான். பீஷ்மர் என்னால் முடிந்த அளவிற்கு போர் செய்து கொண்டு தான் இருகிறேன் என்று கூறினார்.

தீட்சை

அரசன் ஒருவனுக்கு தீட்சை பெற வேண்டும் என்ற ஆசை உண்டானது. தீட்சை பெற வேண்டுமானால் அதற்கு குரு ஒருவரை அனுகி மந்திரதீட்சை பெறுவது முற்றிலும் அவசியம் என்று சாஸ்திரங்கள் கூறுவதை அவன் அறிந்திருந்தான். தொலைதூத்தில் இருக்கும் அந்த பிரம்மஞானியிடம் சென்று மந்திரதீட்சை பெற முடிவு செய்தான். பிரம்ம ஞானியின் ஆஸ்ரமம் இருந்த மலைச்சாரலுக்கிடையே இருந்த குடிலுக்கு சென்றான். முதலில் அவரைப் பணிந்து வணங்கிக் கொண்டவன் எனக்கு மந்திரதீட்சை கொடுங்கள் என்று கேட்டுக் கொண்டான். மன்னனை உற்று நோக்கிய பிரம்மஞானி இவன் மந்திரதீட்சை பெறும் போதிய மனப்பக்குவம் இல்லாதவனாத் தெரிகிறான். இவனுக்கு மந்திரதீட்சை கொடுக்கும் தகுதி இப்போது இல்லை என்பதைப் புரிந்து கொண்டுவிட்டார். எனவே அரசனிடம் அரசே நீங்கள் மந்திரதீட்சை பெறுவதற்கு உரிய நேரம் இன்னும் வரவில்லை. அதற்கு சில மேலும் சில ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். நான் இப்போது உங்களுக்கு மந்திரதீட்சை தருவதற்கில்லை என்று கூறினார். அரசன் தனக்கு மந்திரதீட்சை நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் வந்திருந்தனால் ஞானி தீட்சை தராததால் மிகவும் ஏமாற்றத்துடன் அரண்மனைக்குத் திரும்பினான்.

தன் அமைச்சரிடம், எனக்கு பிரம்மஞானி மந்திர உபதேசம் தர மறுத்துவிட்டார். எப்படியும் நான் மந்திரதீட்சை பெற்றாக வேண்டும். அதற்கு வேறு என்ன வழி? கூறுங்கள் என்று கேட்டான். மன்னர் பெருமானே நமது நாட்டில் சாஸ்திரங்களை மிகவும் நன்கு கற்றறிந்த பெரிய சமஸ்கிருத பண்டிதர்கள் நிறைய பேர்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரிடம் நீங்கள் தீட்சை பெற்றுக் கொள்ளலாமே என்றார். தாங்கள் விரும்பினால் உடனே அவரிடம் நீங்கள் மந்திரதீட்சை பெறுவதற்கு நான் உரிய ஏற்பாடுகள் செய்கிறேன் என்றார் அமைச்சர். மன்னனும் அமைச்சர் சொன்னபடி மந்திர தீட்சை பெற்றுக்கொள்வது என்று முடிவு செய்தான். அமைச்சர் பண்டிதருடன் தொடர்புகொண்டு உரிய ஏற்பாடுகள் செய்தார். பண்டிதர் ஒரு நல்ல நாளில் அரண்மனைக்கு வந்தார். அவர் மன்னனுக்கு மந்திரோபதேசம் செய்து வைத்தார்.
அவருக்கு அரசன் நிறைய வெகுமதிகள் வழங்கி அனுப்பி வைத்தான். அரசன் தந்த பரிசுப் பொருட்களைப் பெற்றுக்கொண்ட பண்டிதர் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினார். இப்போது தனக்கு மந்திர தீட்சை கிடைத்துவிட்டது. தனக்கு தீட்சை தர மறுத்த பிரம்மஞானிக்கு இப்போது நான் பாடம் புகட்ட வேண்டும் என்று முடிவெடுத்தான். தன் வீரர்களை அழைத்தான். எனக்கு மந்திரதீட்சை தர மறுத்த பிரம்மஞானியைப் பிடித்து வர கட்டளையிட்டு அனுப்பினான்.

அரசன் முன்னால் கொண்டு வந்து நிறுத்தினார்கள் பிரமஞானியை வீரர்கள். சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த அரசன் ஞானியை ஏளனத்துடன் பார்த்து உங்களிடம் எனக்கு மந்திரதீட்சை கொடுங்கள் என்று நான் கேட்டுக்கொண்டேன். எனக்கு உபதேசம் செய்ய மறுத்துவிட்டீர்களே இப்போது என்ன ஆயிற்று தெரியுமா? நான் என்ன மந்திரத்தை உங்களிடம் உபதேசம் பெற வேண்டும் என்று விரும்பினேனோ அதே மந்திரத்தை நான் இப்போது ஒரு பண்டிதரிடம் பெற்றுக்கொண்டேன் என்றான். பிரம்மஞானி எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். மன்னன் தொடர்ந்தான். ஓம் நமச்சிவாய இது தானே மந்திரம் இந்த மந்திரத்தை தருவதற்குத் தானே நீங்கள் மறுத்தீர்கள்? இப்போது நான் விரும்பியபடி எனக்கு மந்திரதீட்சை கிடைத்து விட்டது என்றான் ஆணவமாக. அது கேட்ட பிரம்மஞானி அரசே இப்போது நான் சொல்வதுபோல் நீங்கள் சிறிது நேரம் நடந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்றார். ஏதும் புரியாத அரசனும் அதையும் பார்க்கலாம் என சம்மதித்தான். பிரம்மஞானி அரசனிடம் அரசே நீங்கள் இப்போது அமர்ந்திருக்கும் சிம்மாசனத்தில் நான் சிறிது நேரம் அமர்வதற்கு என்னை அனுமதியுங்கள். அதே சமயம் நீங்கள் நான் இப்போது நின்று கொண்டிருக்கும் இந்த இடத்திற்கு வந்து சிறிது நேரம் நிற்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அந்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட அரசன் பிரம்மஞானி நின்று கொண்டிருந்த இடத்தில் வந்து நின்று கொண்டான். ஞானியோ சென்று சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டார்.

பிரம்மஞானி அரியணையில் அமர்ந்தவுடன் அவர் அரசனைச் சுட்டிக்காட்டி அருகில் இருந்த வீரர்களிடம் இவரை உடனே கைது செய்யுங்கள் என்று கட்டளையிட்டார். இவ்விதம் பிரம்மஞானி கூறியதைக் கேட்டு அரசவையில் இருந்தவர்கள் அனைவரும் திடுக்கிட்டார்கள். வீரர்களுக்கு இப்போது என்ன செய்வது என்று தெரியாது அதிர்ச்சியாக அசையாது நின்றார்கள். இந்த நிலையில் பிரம்மஞானி தன்னைக் கைது செய்யும்படி கூறியதைக் கேட்டு கோபம் கொண்ட அரசன் அரியணையில் உட்கார்ந்திருந்த பிரம்மஞானியை வீரர்களுக்குச் சுட்டிக்காட்டி இவரை உடனே கைது செய்யுங்கள் என்று கட்டளையிட்டான். இவ்விதம் அரசன் சொன்னவுடன் வீரர்கள் உடனே சென்று பிரம்மஞானியைக் கைது செய்தார்கள். அப்போது பிரம்மஞானி அரசனைப் பார்த்து சிரித்தபடியே கூறினார். அரசே இப்போது இங்கு நடந்த சம்பவத்தில் உங்கள் கேள்விக்கு உரிய பதில் இருக்கிறது. இதுதான் மெய்ஞ்ஞானி ஒருவரிடம் மந்திரதீட்சை பெறுவதற்கும் பண்டிதர் ஒருவரிடம் மந்திரதீட்சை பெறுவதற்கும் உள்ள வேறுபாடு என்றார்.

நான் உங்களைக் கைது செய்யும்படி இங்கிருந்த வீரர்களுக்குக் கட்டளை இட்டேன். ஆனால் என் கட்டளையை அவர்கள் நிறைவேற்றவில்லை. நான் அரசனுக்குரிய அரியணையிலிருந்துதான் உத்தரவு பிறப்பித்தேன் என்றாலும் என் உத்தரவை இங்கு யாரும் பொருட்படுத்தவில்லை நிறைவேற்றவில்லை. மாறாக நீங்கள் அரியணையில் அமராமல் அங்கு நின்றுகொண்டு என்னைக் கைது செய்யும்படி உத்தரவு பிறப்பித்தீர்கள். உடனே உங்கள் கட்டளையை வீரர்கள் நிறைவேற்றத் துணிந்தார்கள். எனவே நான் கூறிய அதே சொற்களை நீங்கள் சொன்னபோது தான் அதற்கு இங்கு பலன் ஏற்பட்டது. நீங்கள் கூறிய அதே சொற்களை நான் இங்கு சொன்னபோதிலும் அதற்கு மதிப்பில்லாமல் போனது. இது போல்தான் அரசே மந்திரோபதேசம் செய்யும்போது குருமார்கள் சீடர்களுக்கு வழங்கும் மந்திரம் ஒரே மந்திரமாக இருக்கலாம். ஆனால் மெய்ஞ்ஞானி ஒருவர் அந்த மந்திரத்தை மந்திர தீட்சையின்போது உரிய முறையில் வழங்கினால்தான் அந்த மந்திரம் உயிர் பெற்று தனக்கு உரிய உண்மையான உயர்ந்த பலனைத் தரும். இறையனுபூதி பெறாத ஒருவர் சாஸ்திரங்களை ஏராளமாகப் படித்தவராக இருக்கலாம். ஆனால்,அவர் ஞானிகள் சொல்லும் அதே மந்திரத்தை உபதேசம் செய்தாலும் அதற்குரிய உயர்ந்த பலன் இருக்காது. தகுதியானவர்கள் உபதேசம் செய்தால் தான் மந்திரம் பலிக்கும் மல மாசு நீங்கும் என்று கூறி முடித்தார்.

உண்மையையுணர்ந்த அரசன் ஞானியை கைது நிலையைத் தவிர்த்து தன் தவறுக்கு வருந்தி இனி திருத்தமாக இருந்து கொள்வதாக அறிவித்தான். தீ என்றால் மலம். ஷை என்றால் ஒழித்தல். மலமாகிய அழுக்கை ஒழிப்பதே தீட்சையாகும். தீட்சைகள் பல வகைப்படும்.

பரிச தீட்சை: ஞானகுரு தனது திருக்கரத்தினால் சீடருடைய நெற்றியில் தொட்டு மூலதாரத்தில் சுருண்டு உறங்கிக் கொண்டிருக்கும் குண்டலினி ஆற்றலை மேல் நிலையில் புருவ மத்தியிலும் தலை உச்சியிலும் நிலை நிறுத்துவதே பரிச தீட்சையாகும். உதாரணம் ஒரு பறவை முட்டையிட்டு அதன் மேல் உட்கார்ந்து அதன் உடல் வெப்பத்தினால் முட்டைபொரிந்து குஞ்சு வெளியாவதைப் போன்றது பரிச தீட்சையாகும்.

நயன தீட்சை: ஞானகுரு தமது திருக்கண்ணால் சீடரின் கண்களைப் பார்த்து புறத்தில் செல்லக்கூடிய சீடரின் மனத்தை அகத்தில் பார்க்க அருளுவதே நயன தீட்சையாகும். உதாரணம் ஒரு மீன் முட்டையிட்டு அதனைத் தன் கண்களால் பார்த்து பார்வையின் வெப்பத்தினால் முட்டை பொரிந்து மீன் குஞ்சு வெளியாவதைப் போன்றது நயன தீட்சை.

பாவானா தீட்சை: ஞானகுரு தன்னைப் போன்றே தன் சீடர்களையும் உடல் உணர்வு நிலையை விட்டு உயிர் உணர்வில் நிலைக்கச் செய்து சகஜத்திலேயே வெளிக்குள் வெளி கடந்து சும்மா இருக்கும் சுகமான எண்ணமற்ற மோனநிலையாம் ஆனந்தப் பெருவெளியில் நிலைக்க வைப்பதே பாவனா தீட்சை. உதாரணம் ஒரு ஆமை கடற்கரையில் முட்டைகள் இட்டு பின்பு கடலுக்குள் சென்று முட்டைகள் பொரிந்து குஞ்சுகளாக மாறவேண்டும் என்று இடையறாது நினைத்துக் கொண்டிப்பதைப் போன்றது பாவனா தீட்சை ஆகும்.

மகாபாரதம் 6. பீஷ்ம பருவம் பகுதி -9

ஐந்தாம் நாள் யுத்தம் தொடங்கியது. பீஷ்மர் தனது சேனையை மகர வியூகத்தில் அமைத்தார். வியூகம் வடிவத்தில் முதலை போன்று இருந்தது. அதை எதிர்த்து திருஷ்டத்யும்னன் தனது சேனேயை சியேன வியூகத்தில் அமைத்தான். வியூகம் வடிவத்தில் பருந்து போன்று இருந்தது. அன்றைக்கு நிகழ்ந்த யுத்தத்திற்கு சங்குல யுத்தம் என்று பெயர். அத்தனை பேரும் அவனவனுக்கு ஏற்ற எதிரியைத் தாக்கி போர் புரிவது சங்குல யுத்தம் ஆகும். யுத்தம் ஆரம்பிக்கும் போது துரியோதனன் துரோணரைப் பார்த்து குருவே நீங்கள் பாண்டவர்களைக் கொல்லும் செயலில் ஈடுபடுங்கள். உம்மையும் பீஷ்மரையுமே நான் நம்பியுள்ளேன் என்றான். அதற்கு துரோணர் பாண்டவரிடம் பகை வேண்டாம் என ஏற்கனவே பலமுறை சொல்லியும் நீ கேட்கவில்லை. ஆயினும் என்னால் இயன்ற அளவு போரிடுவேன் என்றார்.

அர்ஜுனன் ஆயிரக்கணக்கான வீரர்களை வீழ்த்தினார் அவனை எதிர்த்து பயந்தவர்கள் சுடர்விட்டு எரியும் தீயில் பாய்ந்து விட்டில் பூச்சிகள் போன்று மடிந்தார்கள். யுத்தத்தில் பல ஆயிரம் பேர் மாண்டனர். சாத்யகியும் பீமனும் துரோணருடன் சண்டையிட அர்ஜூனன் அஸ்வத்தாமனுடன் போரிட்டான். அபிமன்யூ துரியோதனனின் மகன் லட்சுமணனுடன் போரிட்டான். சூரியன் மறைய அன்றைய போர் முடிந்தது. பாண்டவ மற்றும் கௌரவர்களின் சகோதர இழப்பின்றி யுத்தம் முடிந்தது.

ஆறாம் நாள் போரில் திருஷ்டத்துய்மன் னது சேனையை மகர வியூகத்தில் அமைத்தான். பீஷ்மர் கிரௌஞ்ச வியூகத்தில் அமைத்தார். ஒருவருடன் ஒருவர் போர் புரிந்தனர். பீமன் அன்று சிறப்பாக போரிட்டான். பகைவர்களைக் கொன்று குவித்தான். யானை படைகள் இவன் ஆற்றல் கண்டு மிரண்டது. குதிரை படைகள் தெறித்து ஓடின. பீமன் தன் கையில் இருக்கும் கதாயுதத்தை சுழற்றும் வேகமும் அதில் இருந்து எழுந்த ஓசையும் பலராமனின் சீடன் என்பதை நிருபித்தான். பீமனின் கதாயுதம் இவ்வொரு முறை நிலத்தில் மோதும் போதும் நிலம் அதிர்ந்தது. இதை கண்ட கௌரவ படைகள் அச்சத்தின் உச்சியில் இருந்தனர். அவன் ஆற்றலும் போர் வெறியும் அன்று எல்லை அற்று இருந்தது. பீமனை பார்த்த பீஷ்மர், துரோணர், கிருபர் அனைவரும் இப்படியும் ஒருவர் போர் செய்ய முடியுமா என்று மனதிற்குள் பீமனை பற்றி பெருமை கொண்டனர். துரோணர் இவன் என் சிஷ்யன் என்று கூற அதற்க்கு பீஷ்மர் அவன் என் பேரன் என்று பெருமை கொண்டார். இடையில் கிருபரோ உங்கள் அனைவருக்கும் முன்பு நான் தான் குல குரு ஆதலால் அந்த பெருமை என்னை சேரும் என்று போர்களத்தில் கூற மூவரும் நகைத்து கொண்டனர். பின்பு அவனும் தங்கள் எதிர் அணியில் ஒருவன் என்பதை உணர்ந்து மீண்டும் ஆயுதம் ஏந்தி போரினை தொடர்ந்தார்கள்.

துரியோதனன் பீமனுடன் போர் புரிய நெருங்கினான். அதைக் கண்ட பீமன் துரியோதனா நீ இங்குத்தான் இருக்கிறாயா உன்னைப் போர்க்களம் எங்கும் தேடி அலைந்தேன். இன்றுடன் உன் வாழ்வு முடிந்தது என்று கூறி அவன் தேர்க்கொடியை அறுத்துத் தள்ளினான். இருவருக்கும் பெரும் போர் மூண்டது. இருவரும் தங்களின் கதாயுதத்தால் சண்டை போட்டனர். கதாயுதங்களின் சத்தம் இடியன ஒலித்தது. இருவரின் கதாயுதங்களில் இருந்து வந்த நெருப்பு பொறிகள் பகலில் மின்னல் போல் தெரித்தது.

வைத்தீஸ்வரன் கோவில்

டில்லியை நவாப்கள் ஆண்ட கால சமயத்தில் அங்கிருந்து பெரும் படைகளுடன் புறப்பட்டு வழிநெடுக ஆங்காங்கே கோயில்களில் இருக்கும் விலைமதிக்க முடியாத பொக்கிஷங்களை கொள்ளையடித்துக் கொண்டே வந்தனர். அப்படி வரும்பொழுது தமிழகத்திலும் புகுந்து சிதம்பரத்தில் உள்ள வைத்தீஸ்வரன் கோயிலை நெருங்கியது. அப்போது படைத்தளபதிக்கு திடீரென கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டது. பல்வேறு வைத்தியம் செய்தும் வலி குறையவில்லை. இந்நிலையில் வைத்தீஸ்வரன் கோவிலில் எழுந்தருளியுள்ள செல்வ முத்துக்குமார சுவாமியின் ஆபரணங்களை பாதுகாத்து வந்த சரவணபிள்ளை முத்துக்குமரா கொடியவன் நெருங்கி விட்டார்களே அருள் வடிவான உன் மகிமை அறியாமல் உன் ஆபரணங்களை அள்ளிக் கொண்டு போய் விடுவார்களே என்று முறையிட்டு அழுதார். அப்படியே தரையில் படுத்து தூங்கி விட்டார். அவர் கனவில் முருகப்பெருமான் எழுந்தருளி சரவணா வருத்தங்கொள்ளாதே அத்தளபதிக்கு கடுமையான வயிற்று வலியை உண்டாக்கியுள்ளது. நாளை காலை இப்பொட்டலத்திலுள்ள மருந்தை அவருக்கு கொடுத்து அவனை விழுங்கச் செய் என்று கூறி மறைந்தார்.

கண்விழித்துப் பார்த்த சரவணப்பிள்ளையின் கையில் ஒரு பொட்டலம் இருந்தது. விடிந்ததும் தளபதி இருந்த முகாமிற்கு சென்று காவலர்களிடம் உங்கள் தளபதியின் வயிற்று வலியை தீர்க்க என்னிடம் மருந்து உள்ளது என்றார். அவரை அழைத்துச் சென்று தளபதியிடம் விஷயத்தை கூறினர். ஐயா என் வயிற்று வலியை உங்கள் மருந்து தீர்த்து வைத்தால் உங்களுக்கு தகுந்த சன்மானம் அளிப்பேன் என்றார் தளபதி. தன் கையில் இருந்த பொட்டலத்தைப் பிரித்தார் சரவணப்பிள்ளை. அதில் வைத்தீஸ்வரன் கோவில் பிரசாதமான திருச்சாந்து உருண்டை இருந்தது. அதை தளபதியிடம் கொடுத்து உண்ண சொன்னார். சாப்பிட்ட மறுநொடி தளபதியின் வயிற்றுவலி காணாமல் போனது. இதனால் மிகுந்த மகிழ்ச்சியடைந்த தளபதி வேண்டியதைக் கேளுங்கள் என்றார். சரவணபிள்ளையும் முருகப்பெருமான் தன் கனவில் சொன்னதை விவரித்துக் கூறினார். இதைக் கேட்டதும் மெய் சிலிர்த்தான் தளபதி தன்னிடம் இருந்த முத்துப்பந்தல், ஆலவட்டம், தண்டு, குடை, கொடி மற்றும் சாமரம் ஆகியவற்றுடன் ஏராளமான செல்வத்தையும் முருகப்பெருமானுக்கு சமர்ப்பித்தார். இதை நினைவுறுத்தும் விதமாக இன்றும் செல்வ முத்துக் குமார சுவாமிக்கு தீபாராதனை நடைபெறும் காலங்களில் தண்டு, குடை, கொடி, ஆல வட்டம் மற்றும் சாமரம் ஆகியவற்றைக் கொண்டு உபச்சாரம் நடைபெறுகிறது.

Image result for வைத்தீஸ்வரன் கோயில் செல்வ முத்துக்குமாரசுவாமி

மகாபாரதம் 6. பீஷ்ம பருவம் பகுதி -8

அஸ்தினாபுரத்தில் திருதராஷ்டிரன் சஞ்சயனிடம் நாள்தோறும் நீ எனக்கு யுத்ததில் நடக்கும் செய்திகளை எடுத்துக் கூறுகின்றாய். யுத்தம் செல்லும் போக்கில் போனால் என் மகன் எவ்வாறு வெற்றி பெறப்போகிறான். இன்று எனது மகன்கள் 8 பேரை பீமன் கொன்று விட்டான். இது எனக்கு கலக்கத்தை ஏற்படுத்துகிறது என்றான். அதற்கு சஞ்சயன் உண்மையை எடுத்துரைக்க நான் கடமைப்பட்டிருக்கிறேன். இந்த விபத்தை நீங்களாகவே வரவழைத்துக் கொண்டார்கள் என்றான்.

நான்காம் நாள் போரின் முடிவில் இரவில் துரியோதனன் மிகவும் துன்பத்தில் மூழ்கியவனாக இருந்தான் அவனால் தூங்க முடியவில்லை பீஷ்மருடைய கூடாரத்திற்கு மெதுவாக நடந்து சென்றான். பீஷ்மரிடம் சென்ற துரியோதனன் நீங்களும் துரோணரும் கிருபரும் இருந்தும் என் தம்பியர் 8 பேர் மாண்டார்கள். பல வீரர்கள் உயிர் இழந்தனர். பாண்டவர்கள் வெற்றியின் ரகசியம் என்ன என்று வருத்தத்துடன் கேட்டான். அதற்கு பீஷ்மர் இது குறித்து பலமுறை உன்னிடம் எச்சரிக்கை பண்ணியிருக்கிறேன். போரில் பாண்டவர்களே வெற்றி பெருவார்கள். நீ தோல்வியடைவாய். பாண்டவர்களுடன் சமாதானமாகப் போவதே நன்று என பலமுறை வற்புறுத்தியும் இருக்கிறேன்.

பாண்டவர்களிடம் நீ வைத்திருக்கும் பகைமையும் அநீதியுமே உன்னை கீழ்நிலைக்கு இழுத்துச் செல்கின்றன. பாவி ஒருவனை மண்ணுலகும் விண்ணுலகும் ஒன்று கூடினாலும் காப்பாற்ற முடியாது. பாண்டவர்கள் தர்மத்திலிருந்து இம்மியளவும் பிசகாதவர்கள். ஆகையால் கிருஷ்ணன் அவர்களை காப்பாற்றி வருகின்றான். எங்கு கிருஷ்ணர் உள்ளாரோ அங்கு தர்மம் இருக்கிறது. எங்கு தர்மம் இருக்கிறதோ அங்கு வெற்றி இருக்கிறது. கிருஷ்ணனோ நாராயணனுடைய அவதார மூர்த்தி. உலகிலுள்ள கயவர்களை எல்லாம் அழித்துத்தள்ள அவன் தீர்மானிக்கின்றான். நீ புரிந்துள்ள பாவச்செயலின் விளைவிலிருந்து நீ தப்பித்துக் கொள்ளமாட்டாய் இது உண்மை. பாண்டவர்களுடன் நீ சமாதானம் செய்து கொள். இல்லையேல் நீயும் அழிந்து போவாய். இப்பொழுதும் கூட நிலைமை தலைக்கு மேல் போய்விடவில்லை. நீ தீர்மானித்தால் உன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்கு அவகாசம் இருக்கிறது என்றார். துரியோதனன் சிறிது நேரம் ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தான். பிறகு அவருடைய கூடாரத்தை விட்டு அவன் கிளம்பி சென்றான். இரவெல்லாம் அவனுக்கு உறக்கம் இல்லை. ஆனால் தன்னை தானே திருத்தி அமைத்துக் கொள்ளும் எண்ணம் அவனுக்கு வரவில்லை.

மகாபாரதம் 6. பீஷ்ம பருவம் பகுதி -7

அர்ஜூனன் கிருஷ்ணரின் செயலை கண்டு மனம் பதறினான். ஓடோடி கிருஷ்ணரின் காலைப் பிடித்துக் கொண்டு நீங்கள் ஏன் ஆயுதம் ஏந்த வேண்டும். நீங்கள் ஆயுதம் ஏந்தி போரிட மாட்டேன் என்று சொல்லியிருக்கின்றீர்கள். என்னை உற்சாகப்படுத்த இச்செயலை செய்கின்றீர்கள் என்று எண்ணுகிறேன். என்னுடைய வல்லமை முழுவதையும் இப்போதே யுத்தத்தில் பயன்படுத்துகிறேன் என்று உறுதி கூறுகிறேன். சினம் வேண்டாம் என வேண்டினான். கிருஷ்ணரின் ஆவேசம் தணிந்தது. அர்ஜூனன் கிருஷ்ணரிடம் நீங்கள் தேரில் ஏறிக் கொள்ளுங்கள். என் கடமையை நான் செய்கிறேன் என்னை எதிர்ப்பவர்கள் இன்று மடிந்தார்கள் என்று கூறினான். கிருஷ்ணரும் தேரில் ஏறி மீண்டும் சாரதி உத்தியோகத்தை கையில் எடுத்துக்கொண்டார்.

அர்ஜூனன் கடுமையான போரை மேற்கொண்டான். அவனின் காண்டீபம் இடியென முழங்கியது. யானைகள் சாய்ந்தன. குதிரைகள் வீழ்ந்தன. காலாட் படையினர் சரிந்தனர். ஆவேசத்தோடு அர்ஜூனன் போர் புரிந்தான். அவனை எதிர்த்து நின்ற பாட்டனாருக்கு அவன் செயல் பரம திருப்தியை உண்டு பண்ணியது. போர் வீரர்கள் அர்ஜுனனுடைய வீரத்தை பார்த்து திகைத்து நின்றனர். அன்று சூரிய அஸ்தமனத்திற்கு முன்பு 16,000 தேர்ப் படை வீரர்கள் அர்ஜூனனால் துடைத்து தள்ளப்பட்டனர். இந்த எண்ணிக்கைக்கு ஏற்றவாறு யானைகளும் குதிரைகளும் காலாட்படை களைந்து ஒழிக்கப்பட்டன. சூரிய அஸ்தமனமாயிற்று. மூன்றாம் நாள் யுத்தம் முடிவுக்கு வந்தது. அன்று இரவெல்லாம் இருகட்சிகாரர்களும் அர்ஜுனனுடைய வீரத்தை பற்றிய பேசிக்கொண்டிருந்தார்கள்.

நான்காவது நாள் பீஷ்மர் தம்முடைய சேனைகளை வியாளம் என்ற வியூகத்தில் அமைத்தார். ஐந்து பனைகளை அடையாளமாக உடைய கொடியுடன் பீஷ்மர் போர் புரிந்தார். அனுமானைச் சின்னமாகக் கொண்ட கொடியுடன் அவ்வனுமானின் பேராற்றலுடன் அர்ஜுனன் போரிட்டான். பாண்டவர்கள் பக்கத்தில் அர்ஜுனனுடைய செல்வன் அபிமன்யுவுடன் பூரிசிரவசு, அஸ்வத்தாமா, சல்லியன் ஆகியோர் எதிர்த்துப் போர் புரிந்தனர். அர்ஜூனனுக்கு ஏற்ற மகனாக அவன் போர் புரிந்ததை பார்த்த போர் வீரர்கள் பெரு வியப்படைந்தனர். பாண்டவர்களுக்கு சேனாதிபதியாக இருந்த திருஷ்டத்யும்னன் சால்வனுடைய மகனின் தலையை இரண்டாகப் பிளந்தான். அதை முன்னிட்டு எதிரியின் படைகளில் பெரும் குழப்பம் உண்டாயிற்று. பீஷ்மரும் அர்ஜுனனும் பராக்கிரத்துடன் போர் புரிந்தார்கள். மற்றோரிடத்தில் பீமனிடம் துரியோதனனும் அவனது தம்பிகளும் வீராவேசத்துடன் சண்டையிட்டனர். துரியோதனனுடைய தம்பிகள் 8 பேரை பீமன் கொன்றான். தன் கதையால் யானைகளை வீழ்த்தினான். பீமனுடைய மைந்தனாகிய கடோத்கஜன் சென்ற இடங்களில் எல்லாம் எதிரிகளின் படைகளை துடைந்நு தள்ளினான். அவன் புரிந்த பயங்கர போர் எதிரிகளை நடுங்கச் செய்தது. துரியோதனின் வீரர்கள் சோர்ந்து போயினர். பலர் மாண்டனர். சூரிய அஸ்தமனமாயிற்று. நான்காம் நாள் யுத்தம் முடிவுக்கு வந்தது.

மகாபாரதம் 6. பீஷ்ம பருவம் பகுதி -6

துரியோதனன் தெளிவு பெற்ற பின்பு அவனை பத்திரமாக வேறு இடத்திற்கு அனுப்ப பீஷ்மர் முற்பட்டார். அப்போது துரியோதனன் பீஷ்மரைப் பார்த்து பாட்டனாரே இது வரைக்கும் நடந்த யுத்தத்தை பார்த்தால் இன்னும் தங்களுடைய முழு பலத்தை கையாளாமல் இருக்கின்றீர்கள் என்று எனக்கு நன்கு தெரிகிறது. பாண்டவர்கள் பக்கம் நீங்கள் அதிக பாசம் வைத்து இருக்கின்றீர்கள் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. அந்த பாசத்தினால் என்னை நட்டாற்றில் கைவிட்டு விட்டீர்கள். இதுபற்றிய உங்களுடைய கருத்தை உள்ளபடி எனக்கு முழுமையாக தெரிவியுங்கள் என்றான். அதற்கு பீஷ்மர் முதலிலேயே நான் உனக்கு எச்சரிக்கை செய்து இருக்கிறேன். இப்போதும் சொல்கிறேன். என்னுடைய ஆற்றல் முழுவதையும் உனக்காக பயன்படுத்துவேன். ஆனாலும் இந்த யுத்தத்தில் நீ வெற்றியடைய மாட்டாய் என்று கூறிவிட்டு ஊக்கம் படைத்தவராக பீஷ்மர் போர்க்களத்தில் பிரவேசித்தார். பாண்டவர் படைகள் முழுவதையும் துடைத்து அழிக்க அவர் எண்ணம் கொண்டார். அவர் புரிந்த உயிர்ச்சேதம் அளப்பரியதாக இருந்தது.

அர்ஜூனனிடனும் பீமனிடமும் போரைத் தொடர்ந்தார். பீஷ்மர் கோபத்துடன் செய்த விற்போரில் அர்ஜூனனும் பீமனும் அவரை எதிர்த்து சமாளிக்க முடியாமல் திணறினார்கள். பீஷ்மரை எதிர்த்துப் போர் செய்வதை மறந்த அர்ஜூனன் பீஷ்மரை பார்த்து வியப்பில் ஆழ்ந்தான். தன்னை மறந்து நின்ற அர்ஜூனனை பார்த்து கிருஷ்ணர் சினம் கொண்டார். பாட்டனாரை எதிர்த்து நீ உன்னுடைய முழு வல்லமையை காட்டி யுத்தம் செய்யவில்லை. அர்ஜூனா என்னவாயிற்று உனக்கு? பீஷ்மரையும் துரோணரையும் வெல்வேன் என்றாயே அதை மறந்து விட்டாயா என்றார். உற்சாகம் அடைந்த அர்ஜூனன் தனது ஒரு அம்பால் பீஷ்மரின் வில்லை முறித்தான். பீஷ்மர் வேறு அம்பை எடுத்து எட்டு திசைகளிலும் அர்ஜூனன் மீது அம்புகளைச் செலுத்தி மறைத்தார். பல அம்புகள் அர்ச்சுனன் மேல் பாய்ந்தன. ஆனால் அர்ச்சுனனின் திறமை இயல்பாய் இல்லாததை கிருஷ்ணர் உணர்ந்தார்.

அர்ஜூனனைப் பார்த்து பாட்டனார் மீது வைத்த பாசத்தின் விளைவாக ஒருவேளை இப்படி செய்கிறாயா என்ற கிருஷ்ணன் அர்ஜூனனை தேரிலிருந்து கீழே இறங்கி விட்டார். கிருஷ்ணர் கையில் சக்கராயுதத்தை எடுத்துக் கொண்டு தானே ஆயுதம் ஏந்தி பீஷ்மரை அழிக்க தீர்மானம் பண்ணினார். பேராற்றல் படைத்த சுதர்சன சக்கரத்தை கிருஷ்ணர் கையில் ஏந்தினார். பாண்டவப் படைகளை அழித்துக்கொண்டிருந்த கொண்டிருந்த பீஷ்மரை நோக்கி கிருஷ்ணர் விரைந்து சென்றார். யாரும் எதிர்பார்க்காத வண்ணம் அங்கு திடீரென்று காட்சி மாறியது. கிருஷ்ணருடைய சக்கரத்தில் இருந்து யாரும் தப்ப முடியாது. பீஷ்மர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. கிருஷ்ணரை பார்த்து பீஷ்மர் என்னை அழித்து தள்ளிவிடுங்கள். நான் உயிரோடு இருந்தால் பாண்டவப் படைகளில் ஒரு பகுதியும் மிஞ்சாது. அதுவே என் தீர்மானம். தாங்கள் என்னை அழித்தால் அது நான் செய்த பாக்கியம் ஆகும் என்ற பீஷ்மர் கிருஷ்ணனைப் பார்த்து வணங்கி புகழ்ந்து தோத்திரம் செய்து இறைஞ்சினார்.