மகாபாரதம் 6. பீஷ்ம பருவம் பகுதி -6

துரியோதனன் தெளிவு பெற்ற பின்பு அவனை பத்திரமாக வேறு இடத்திற்கு அனுப்ப பீஷ்மர் முற்பட்டார். அப்போது துரியோதனன் பீஷ்மரைப் பார்த்து பாட்டனாரே இது வரைக்கும் நடந்த யுத்தத்தை பார்த்தால் இன்னும் தங்களுடைய முழு பலத்தை கையாளாமல் இருக்கின்றீர்கள் என்று எனக்கு நன்கு தெரிகிறது. பாண்டவர்கள் பக்கம் நீங்கள் அதிக பாசம் வைத்து இருக்கின்றீர்கள் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. அந்த பாசத்தினால் என்னை நட்டாற்றில் கைவிட்டு விட்டீர்கள். இதுபற்றிய உங்களுடைய கருத்தை உள்ளபடி எனக்கு முழுமையாக தெரிவியுங்கள் என்றான். அதற்கு பீஷ்மர் முதலிலேயே நான் உனக்கு எச்சரிக்கை செய்து இருக்கிறேன். இப்போதும் சொல்கிறேன். என்னுடைய ஆற்றல் முழுவதையும் உனக்காக பயன்படுத்துவேன். ஆனாலும் இந்த யுத்தத்தில் நீ வெற்றியடைய மாட்டாய் என்று கூறிவிட்டு ஊக்கம் படைத்தவராக பீஷ்மர் போர்க்களத்தில் பிரவேசித்தார். பாண்டவர் படைகள் முழுவதையும் துடைத்து அழிக்க அவர் எண்ணம் கொண்டார். அவர் புரிந்த உயிர்ச்சேதம் அளப்பரியதாக இருந்தது.

அர்ஜூனனிடனும் பீமனிடமும் போரைத் தொடர்ந்தார். பீஷ்மர் கோபத்துடன் செய்த விற்போரில் அர்ஜூனனும் பீமனும் அவரை எதிர்த்து சமாளிக்க முடியாமல் திணறினார்கள். பீஷ்மரை எதிர்த்துப் போர் செய்வதை மறந்த அர்ஜூனன் பீஷ்மரை பார்த்து வியப்பில் ஆழ்ந்தான். தன்னை மறந்து நின்ற அர்ஜூனனை பார்த்து கிருஷ்ணர் சினம் கொண்டார். பாட்டனாரை எதிர்த்து நீ உன்னுடைய முழு வல்லமையை காட்டி யுத்தம் செய்யவில்லை. அர்ஜூனா என்னவாயிற்று உனக்கு? பீஷ்மரையும் துரோணரையும் வெல்வேன் என்றாயே அதை மறந்து விட்டாயா என்றார். உற்சாகம் அடைந்த அர்ஜூனன் தனது ஒரு அம்பால் பீஷ்மரின் வில்லை முறித்தான். பீஷ்மர் வேறு அம்பை எடுத்து எட்டு திசைகளிலும் அர்ஜூனன் மீது அம்புகளைச் செலுத்தி மறைத்தார். பல அம்புகள் அர்ச்சுனன் மேல் பாய்ந்தன. ஆனால் அர்ச்சுனனின் திறமை இயல்பாய் இல்லாததை கிருஷ்ணர் உணர்ந்தார்.

அர்ஜூனனைப் பார்த்து பாட்டனார் மீது வைத்த பாசத்தின் விளைவாக ஒருவேளை இப்படி செய்கிறாயா என்ற கிருஷ்ணன் அர்ஜூனனை தேரிலிருந்து கீழே இறங்கி விட்டார். கிருஷ்ணர் கையில் சக்கராயுதத்தை எடுத்துக் கொண்டு தானே ஆயுதம் ஏந்தி பீஷ்மரை அழிக்க தீர்மானம் பண்ணினார். பேராற்றல் படைத்த சுதர்சன சக்கரத்தை கிருஷ்ணர் கையில் ஏந்தினார். பாண்டவப் படைகளை அழித்துக்கொண்டிருந்த கொண்டிருந்த பீஷ்மரை நோக்கி கிருஷ்ணர் விரைந்து சென்றார். யாரும் எதிர்பார்க்காத வண்ணம் அங்கு திடீரென்று காட்சி மாறியது. கிருஷ்ணருடைய சக்கரத்தில் இருந்து யாரும் தப்ப முடியாது. பீஷ்மர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. கிருஷ்ணரை பார்த்து பீஷ்மர் என்னை அழித்து தள்ளிவிடுங்கள். நான் உயிரோடு இருந்தால் பாண்டவப் படைகளில் ஒரு பகுதியும் மிஞ்சாது. அதுவே என் தீர்மானம். தாங்கள் என்னை அழித்தால் அது நான் செய்த பாக்கியம் ஆகும் என்ற பீஷ்மர் கிருஷ்ணனைப் பார்த்து வணங்கி புகழ்ந்து தோத்திரம் செய்து இறைஞ்சினார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.