மகாபாரதம் 6. பீஷ்ம பருவம் பகுதி -5

பீஷ்மரை எதிர்த்து பீமன் போரிடத் தொடங்கினான். பீமனனுடன் சாத்யகியும் அபிமன்யுவும் பீஷ்மரை சேர்ந்து தாக்கினார்கள். இதைக் கண்ட துரியோதனன் பல வீரர்களை ஒன்று திரட்டி பீஷ்மருக்கு துணையாக அனுப்பினான். பீஷ்மருக்கு துணையாக இருந்த வீரர்கள் அனைவரும் பீமனையும் அபிமன்யுவையும் வளைத்துக் கொண்டார்கள். பீமனும் அபிமன்யுவும் ஆபத்தில் இருப்பதை அறிந்த அர்ஜூனன் அவர்களுக்கு உதவுவதற்காக வில்லோடு வந்தான். திடீரென்று அர்ஜூனன் வந்ததும் பீஷ்மரை சுற்றியுள்ள அவரது படைகள் நிலை தடுமாறி போயின. அர்ஜூனன் விருப்பம் போல கௌரவ வீரர்களைக் கொன்று குவித்தான்.

சாத்யகி பீஷ்மருடைய சாரதியை வெட்டித் தள்ளினான். அதன் விளைவாக பீஷ்மர் ஊர்ந்து சென்ற ரதத்தில் பூட்டியிருந்த குதிரைகள் போர்க்களத்திலிருந்து நெடுந்தூரத்திற்கு இழுத்துச் சென்றன. ஆகையால் அர்ஜுனனுக்கு தடையை ஏற்படுத்த யாருமில்லை. அவன் தன் விருப்பப்படி கௌரவப் படைகளை அழித்துத்தள்ளினான். கௌரவ சேனைகளுக்கிடையில் குழப்பம் ஏற்பட்டது. அதற்கிடையில் சூரியனும் அஸ்தமித்தது. இரண்டாம் நாள் போர் முடிவுக்கு வந்தது. இரண்டாம் நாள் போரில் அதிகமான நஷ்டம் தன் பக்கம்தான் என்று உணர்ந்த துரியோதனன் வருத்தம் அடைந்தான்.

இரண்டாம் நாள் போராட்டத்தில் கௌரவர்களுக்கு ஏற்பட்ட இழப்பிற்கு ஈடு பண்ண பீஷ்மர் உறுதி பூண்டார் அதற்கு அவர் கௌரவர்களுடைய சேனையை கருட வியூகத்தை அமைத்தார். பார்ப்பதற்கு கருடன் சிறகுகளை விரித்துக் கொண்டு பறப்பது போன்ற தோற்றத்தில் இருந்தது. அந்த வியூகத்தில் ஆங்காங்கு பொருத்தமான இடங்களில் பெரிய பெரிய போர் வீரர்களை இடம் பெறச்செய்தார். அந்த வியூகத்தின் தலை ஸ்தானத்தில் பீஷ்மர் தாமே இடம் வகித்தார்.

கருட வியூகத்தின் வல்லமையை சிதறடிக்கச் செய்ய பாண்டவ சேனாதிபதியான திருஷ்டத்யும்னன் தன்னுடைய படைகளை சந்திர வியூகத்தில் அமைத்தான். அதன் இரண்டு முனைகளிலும் பீமனும் அர்ஜுனனும் இடம் பெற்றார்கள். பயங்கரமாக போர் துவங்கியது சாத்யகியும் அபிமன்யுவும் ஒன்றுகூடி சகுனியின் படைகளை அழித்து தள்ளினார்கள். பீஷ்மரும் துரோணரும் ஒன்றுகூடி யுதிஷ்டிரனுடைய சேனையை எதிர்த்தார்கள். பீமனும் அவனுடைய ராட்சச மைந்தன் கடோத்கஜனும் ஒன்று சேர்ந்து துரியோதனனுடைய சேனையை எதிர்த்தார்கள். பீமனை விட கடோத்கஜன் பன்மடங்கு அதிகமாக எதிரியின் படைகளை அழித்து தள்ளினான்.

பீமன் எய்த அம்பு ஒன்று துரியோதனனை தாக்கியது. துரியோதனன் மேல் பாய்ந்த அம்புகள் அவனது கவசத்தை பிளந்து அவன் மார்பை துளைத்தது. மார்பைப் பிளந்த அம்பின் வேகமும் வலியும் தாங்க முடியாமல் துரியோதனன் தேர்த்தட்டில் மயக்கமடைந்து விழுந்தான். அபிமன்யு துரியோதனனின் தேரோட்டியை அம்புகள் எய்து கீழே தள்ளி வீழ்ச்சியடையச் செய்தான். அந்நிகழ்ச்சி கௌரவ சேனையில் குழப்பத்தை உண்டு பண்ணாமல் இருக்க துரியோதனன் அங்கிருந்து விரைவாக அப்புறப்படுத்தப்பட்டான். துரியோதனன் மூர்ச்சையடைந்த செய்தி பீஷ்மருக்கு படைவீரர்கள் தெரிவித்தனர். பீஷ்மர் உடனே துரியோதனனின் உடலைத் தனியாக தேரின் மேல் வைத்து போர்க்களத்தின் ஓரமாக கொண்டு வந்து சிகிச்சை அளித்து துரியோதனனுக்கு சுய நினைவை வரவழைத்தார்.

Related image

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்தின் மொத்த கட்டமைப்பும் கட்டிமுடிக்க சுமார் 1000 ஆண்டுகள் ஆகி இருப்பது கல்வெட்டுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கல்வெட்டுகள் கடந்த காலத்தைக்காட்டும் கண்ணாடி. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் நூற்றுக்கணக்கான கல்வெட்டுகள் உள்ளன. தமிழ், சமஸ்கிருதம், கன்னடம் ஆகிய மொழிகளில் இந்த கல்வெட்டுகள் உள்ளன. இந்த கல்வெட்டுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதை சொல்வதாக உள்ளன. திருவண்ணாமலை ஆலயத்தின் சிறப்புகள் ரகசியங்களில் பெரும் பாலானவை இந்த கல்வெட்டுகளில் இருந்துதான் வெளி உலகுக்கு தெரிய வந்தன. இத்தனைக்கும் அங்குள்ள பல நூறு கல்வெட்டுகளில் 119 கல்வெட்டுகள் தான் இதுவரை ஆராயப்பட்டுள்ளன. மொத்த கல்வெட்டுகளையும் ஆய்வு செய்தால் ஆச்சரியமூட்டும் மேலும் ஏராளமான தகவல்கள் ரகசியங்கள் வெளிவர வாய்ப்புள்ளது. இதுவரை ஆராயப்பட்ட 119 கல்வெட்டுகளில் இருந்து திருவண்ணாமலை ஆலயம் முதலில் எப்படி தோன்றியது எப்படி வளர்ச்சி பெற்றது, யார் யாரெல்லாம் கோவிலை கட்டினார்கள் என்ற உண்மை ஆதாரப்பூர்வமாக நமக்கு கிடைத்துள்ளது.

பல்லவர் காலத்து சாசனங்கள் எதுவும் கிடைக்கவில்லை. அவையும் கிடைத்து இருந்தால் அண்ணாமலையார் ஆலயத்தின் பழமை சிறப்புகள் நமக்கு மேலும் அதிக அளவில் துல்லியமாக கிடைத்திருக்கும். சங்கநாட்டு மன்னன், காலச்சூரி மன்னன் ஆகியோரும் திருவண்ணாமலையார் அருளை கேள்விப்பட்டு நிறைய பொன்னும் பொருட்களையும் தானமாக கொடுத்துள்ளனர். திருவண்ணாமலை ஆலயம் இப்போது 24 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக உள்ளது. ஆனால் கல்வெட்டு ஆய்வுப்படி பார்த்தால் இதிகாச காலத்தில் மகிழம் மரத்தடியில் ஈசன் சுயம்புலிங்கமாக தோன்றினார் என்று தெரிய வருகிறது. அதனால்தான் திருவண்ணாமலை தலத்தில் மகிழ மரம் தல விருட்சமாக உள்ளது.

அடி முடி காண முடியாதபடி ஆக்ரோஷமாக தீப்பிழம்பாக நின்ற ஈசன் மனம் குளிர்ந்து மலையாக மாறியபோது அவரிடம் விஷ்ணுவும் பிரம்மாவும் இவ்வளவு பெரிய மலையாக இருந்தால் எப்படி மாலை போட முடியும்? எப்படி அபிஷேகம் செய்ய முடியும்? என்று கேட்டனர். இதைத் தொடர்ந்தே ஈசன் மலையடி வாரத்தில் சுயம்பு லிங்கமாகத் தோன்றியதாகத் தல புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதல் மற்றும் இரண்டாம் நூற்றாண்டுகளில் மகிழ மரத்தடியில் சுயம்பு லிங்கம் சிறு மண்சுவர் கோவிலாக இருந்தது. 4 ம் நூற்றாண்டில் கருவறை செங்கல்லால் கட்டப்பட்டது. 5 ம் நூற்றாண்டில் அது சிறு ஆலயமாக மேம்பட்டது. 6, 7, 8 ம் நூற்றாண்டுகளில் திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் அண்ணாமலையார் பாடப் பெற்றார். அப்படி பாடப் பெற்றபோது கூட அண்ணாமலையார் செங்கல் கருவறையில்தான் இருந்தார். ஆலயமும் ஒரே ஒரு அறையுடன் இருந்தது. 9-ம் நூற்றாண்டில் சோழப் பேரரசு செல்வாக்கு பெற்ற போது திருவண்ணாமலை ஆலயம் மாற்றம் பெறத் தொடங்கியது. 817 ம் ஆண்டு முதலாம் ஆதித்ய சோழ மன்னன் செங்கல் கருவறையை அகற்றி விட்டு கருங்கல்லால் ஆன கருவறையைக் கட்டினார். பிறகு ஒரு காலக்கட்டத்தில் அந்த கருவறை மகிழ மரத்தடியில் இருந்து தற்போதைய இடத்துக்கு மாறியது. 10 ம் நூற்றாண்டில் கருவறையைச் சுற்றி முதல் மற்றும் இரண்டாம் பிரகாரங்கள் கட்டப்பட்டன. சோழ மன்னர்களின் வாரிசுகள் தான் இந்த பிரகாரங்களைக் கட்டினார்கள். அப்போதே திருவண்ணாமலை ஆலயம் விரிவடையத் தொடங்கி இருந்தது.

11-ம் நூற்றாண்டில் கோபுரங்கள் எழத் தொடங்கின. முதலாம் ராஜேந்திரச் சோழன் கொடி மர ரிஷி கோபுரத்தையும் சுற்றுச் சுவர்களையும் கட்டினான். 1063 ம் ஆண்டு வீரராஜேந்திர சோழ மன்னனால் கிளிக்கோபுரம் கட்டப்பட்டது. இதனால் திருவண்ணாமலை ஆலயம் கம்பீரம் பெறத் தொடங்கியது.

12 ம் நூற்றாண்டில் மூன்றாம் குலோத்துங்கச் சோழ மன்னர் உண்ணாமலை அம்மனுக்கு தனி சன்னதி கட்டினார். 13-ம் நூற்றாண்டில் சிறு, சிறு சன்னதிகள் உருவானது. சோழ மன்னரிடம் குறுநில மன்னராக இருந்த பல்லவராஜா கோப்பெருஞ்சிங்கன் ஆகியோர் இந்த சன்னதிகளைக் கட்டினார்கள். அதோடு ஏராளமான நகைகளையும் திருவண்ணாமலை கோவிலுக்கு அவர்கள் வாரி வழங்கியுள்ளார்கள்.

14 ம் நூற்றாண்டு திருவண்ணாமலை ஆலயத்துக்கு மிக முக்கியமான காலக்கட்டமாகும். அந்த நூற்றாண்டில்தான் வடக்கு, தெற்கு, மேற்கு பகுதிகளில் கோபுரங்கள் கட்டப்பட்டன. 1340 ம் ஆண்டு முதல் 1374 ம் ஆண்டுக்குள் இந்த மூன்று கோபுரங்களும் கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஹொய்சாள மன்னர் வீரவல்லாளன் இந்த திருப்பணிகளைச் செய்தார்.

15 ம் நூற்றாண்டில் திருவண்ணாமலை ஆலயத்துக்கு நிறைய பேர் தானமாக நிலங்களை எழுதி வைத்தார்கள். திருவண்ணாமலை ஆலயம் பொருளாதாரத்தில் மேம்பாடு பெற்றது இந்த நூற்றாண்டில் தான்.

16 ம் நூற்றாண்டில் விஜய நகர பேரரசர் கிருஷ்ண தேவராயருக்கு திருவண்ணாமலை கோவில் மிக பிடித்து போய் விட்டது. திருவண்ணாமலை ஆலயத்தை மிகப்பெரிய ஆலயமாக மாற்றி அமைத்த பெருமைக்கு சொந்தக்காரர் அவர். அவர் மற்ற மன்னர்கள் போல ஏதோ ஒன்றிரண்டு திருப்பணிகள் மட்டும் செய்யவில்லை. இருபது பெரிய திருப்பணிகளை செய்தார். அந்த திருப்பணிகள் ஒவ்வொன்றும் இன்றும் திருவண்ணாமலையில் கிருஷ்ண தேவராயரை நினைவுபடுத்திக் கொண்டிருக்கின்றன. 217 அடி உயரத்தில் கம்பீரமாக ஓங்கி உயர்ந்து நிற்கும் கிழக்கு ராஜகோபுரம் சிவகங்கை தீர்த்தக்குளம், ஆயிரம் கால் மண்டபம், இந்திர விமானம், விநாயகர் தேர் திருமலைத்தேவி அம்மன் சமுத்திரம் என்ற நீர்நிலை, ஏழாம் திருநாள் மண்டபம், சன்னதியில் உள்ள 2 கதவுகள், வாயில் கால்களுக்கு தங்க முலாம் பூசியது, உண்ணாமுலை அம்மன் ஆலய வாயில் கால்கள் கதவுக்கு தங்க முலாம் பூசியது, உண்ணாமுலை அம்மன் சன்னதிக்கு முன் ஆராஅமுதக்கிணறு வெட்டியது, அண்ணாமலையார்க்கும் உண்ணாமுலை அம்மனுக்கும் கிருஷ்ணராயன் என்ற பெயரில் பதக்கம் செய்து கொடுத்தது, நாகாபரணம், பொற்சிலை, வெள்ளிக்குடங்கள் ஆகியவை கிருஷ்ண தேவராயரின் முக்கிய திருப்பணிகளில் சில.

1529 ல் கிருஷ்ண தேவராயரின் ஆட்சி நிறைவு பெற்றதைத் தொடர்ந்து தஞ்சை மன்னர் செவ்வப்ப நாயக்கர் கிழக்கு ராஜகோபுரத்தை 1590-ல் கட்டி முடித்தார். இதற்கிடையே குறுநில மன்னர்களும் சிவனடியார்களும் சிறு சிறு கோபுரங்களைக் கட்டினார்கள். பே கோபுரம், அம்மணியம்மாள் கோபுரம், திருமஞ்சன கோபுரம், வல்லாள மகாராஜ கோபுரம் ஆகியவை அதில் குறிப்பிடத்தக்கவை. இன்று 9 கோபுரங்களுடன் திருவண்ணாமலை ஆலயம் அழகுற காட்சியளிக்கிறது. கோபுரங்கள் அனைத்தும் 1370 ல் கட்டத் தொடங்கப்பட்டு 1590 ம் ஆண்டில் முடிக்கப்பட்டுள்ளது. கோபுரங்கள் கட்டி முடிக்கவே சுமார் 220 ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில்தான் ஆலயத்தின் மொத்த கட்டமைப்பும் கட்டிமுடிக்க சுமார் 1000 ஆண்டுகள் ஆகி இருப்பது கல்வெட்டுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மன்னர்கள் மட்டுமில்லாமல் மகாராணிகள், இளவரசர்கள், இளவரசிகள், சிற்றரசர்கள், ஜமீன்தார்கள், பிரபுக்கள், அரசு பிரதிநிதிகள், சித்தர்களும் இந்த ஆலயத்தின் திருப்பணிகளில் முக்கியப் பங்கு வகித்துள்ளனர். சோழ, பாண்டிய, பல்லவ, ஹொய்சாள, சம்புவராய, விஜயநகர, தஞ்சை மன்னர்கள் போட்டி போட்டு செய்த திருப்பணிகள்தான் திருவண்ணாமலை தலத்தை நோக்கி மக்கள் வர உதவி செய்தது. 14 ம் நூற்றாண்டில் இருந்து 17 ம் நூற்றாண்டு வரை திருவண்ணாமலை நகரம் பல்வேறு போர்களை சந்ததித்தது. என்றாலும் அண்ணாமலையார் அருளால் இடையிடையே திருப்பணிகளும் நடந்தது. கடந்த சுமார் 150 ஆண்டுகளாக நகரத்தார் செய்து வரும் பல்வேறு திருப்பணிகள் மகத்தானது. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நாட்டுக்கோட்டை நகரத்தார் திருவண்ணாமலையில் குடியேறினார்கள். மன்னராட்சி முடிவுக்கு வந்த பிறகு திருவண்ணாமலை ஆலயத்தில் மாபெரும் திருப்பணிகள் செய்த பெருமையும் சிறப்பும் நாட்டுக்கோட்டை நகரத்தார்க்கு உண்டு. 1179 ம் ஆண்டு கட்டப்பட்ட உண்ணாமுலை அம்மன் ஆலயத்தை முழுமையாக அகற்றி விட்டு புதிய சன்னதியை நாட்டுக்கோட்டை நகரத்தார்தான் கட்டி கொடுத்தனர். அது மட்டுமின்றி இத்திருக்கோவிலை முழுமையாக திருப்பணி செய்து 12-06-1903, 4-6-1944, 4-4-1976 ஆகிய ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடத்தி வைத்த புண்ணியமும் நாட்டுக்கோட்டை நகரத்தார்களுக்கே சாரும்.

மன்னர்களில் கிருஷ்ண தேவராயரும் பல்லவ மன்னன் கோப்பெருஞ் சிங்கனும் செய்த திருப்பணிகள் அளவிட முடியாதது. எத்தனையோ மன்னர்கள் திருப்பணி செய்துள்ள போதிலும் வல்லாள மகாராஜா மீது அண்ணாமலையாருக்கு தனிப்பட்ட முறையில் பாசம் அதிகம் இருந்தது. அதற்கு காரணம் வல்லாள மகாராஜா வாரிசு எதுவும் இல்லாமல் தவித்தது தான். திருவண்ணாமலையை ஆட்சி செய்த அந்த மன்னன் மீது இரக்கப்பட்ட அண்ணாமலையார் அவரை தன் தந்தையாக ஏற்றுக் கொண்டார். அந்த மன்னனின் மகனாக மாறி அற்புதம் செய்தார். அது மட்டுமின்றி வல்லாள மகாராஜா மரணம் அடைந்தபோது அவருக்கு இறுதிச்சடங்குகள் அண்ணாமலையார் சார்பில் செய்யப்பட்டன. மேலும் ஆண்டு தோறும் வல்லாள மகாராஜாவுக்கு மாசி மாதம் அண்ணாமலையார் திதி கொடுத்து வருகிறார். ஒரு மகன் தன் தந்தைக்கு செய்ய வேண்டிய கடமைகளை அண்ணாமலையார் செய்து வருகிறார்.

No photo description available.
Image result for திருவண்ணாமலை கல்வெட்டுகள்

மகாபாரதம் 6. பீஷ்ம பருவம் பகுதி -4

முதல் நாள் நடந்த யுத்தத்தில் தங்களுக்கு நேர்ந்த அனுபவத்தை கொண்டு இரண்டாம் நாள் பாண்டவர்கள் தங்கள் படைகளை அதற்கு ஏற்றார் போல் திருத்தி அமைத்தார்கள். இரண்டாம் நாள் யுத்தம் துவங்கியது. திருஷ்டத்யும்னன் தலைமை சேனாதிபதியாக இருந்து கண்ணனுடைய ஆலோசனையின்படி தங்களுடைய படைகளை கிரௌஞ்ச வியூகத்தில் அமைத்தான். வியூகம் வடிவத்தில் ஒரு பறவை போன்று தென்பட்டது. கிரௌஞ்ச வியூகத்திற்கு துருபத மன்னன் தலையாக நின்றான். யுதிஷ்டிரர் பின் புறத்தில் நின்றார். திருஷ்டத்துய்மனும் பீமனும் சிறகுகளாக இருந்தனர். பண்டை காலங்களில் வியூகம் அமைப்பது ஓர் அலாதியான கலையாக இருந்தது. கிரௌஞ்ச வியூகத்துக்கு பொருத்தமான எதிர்ப்பு வியூகத்தை கௌரவர்கள் அமைத்துக் கொண்டார்கள்.

யுத்தத்தில் பீஷ்மர் மிகச்சுலபமாக பாண்டவர்களின் கிரௌஞ்ச வியூகத்தில் பிளவை உண்டு பண்ணி உள்ளே நுழைந்து பாண்டவர்களை பெருவாரியாக அழித்து தள்ளினார். கிருஷ்ணன் தேரை ஓட்ட அர்ஜுனன் தன் பாட்டனார் பீஷ்மர் மீது பாய்ந்து தாக்கினான். பீஷ்மருக்கும் அர்ஜூனனுக்கும் இடையில் நிகழ்ந்த யுத்தம் பயங்கரமாகவும் அதிசயிக்கத்தக்க வகையிலும் நெடுநேரம் நிகழ்ந்தது.

மற்றோரிடத்தில் துரோணரும் திருஷ்டத்யும்னனும் பயங்கரமாக போர் புரிந்தனர். மரணத்தின் இரண்டாவது கோலைப் போன்றதும் இந்திரனின் வஜ்ரத்தைப் போன்றதுமான ஒரு பயங்கரக் கணையை எடுத்து திருஷ்டத்யுன்மனின் அழிவுக்காக அவன் மீது குறி பார்த்தார் துரோணர். குறி பார்ப்பதைக் கண்ட போராளிகளுக்கு மத்தியில் ஓ என்னும் ஓலங்கள் எழுந்தன. வீரனான திருஷ்டத்யும்னன் அந்தப் போர்க்களத்தில் மலைபோல அசைவற்று நின்றான். மரணம் வருவதைப் போலத் தன்னை நோக்கி வந்து கொண்டிருந்ததும் பயங்கரமான சுடர்விடும் அந்தக் கணையை திருஷ்டத்யும்னன் வெட்டினான். இச்சாதனையைச் செய்த திருஷ்டத்யும்னனைக் கண்ட பாஞ்சாலர்களும், பாண்டவர்களும் அப்போது மகிழ்ச்சியால் பேரொலியுடன் ஆரவாரம் செய்தனர். திருஷ்டத்யும்னன் சக்தி வாய்ந்த ஈட்டி ஒன்றை துரோணரின் மீது ஏவினான். சிரித்து நின்ற துரோணர் தன்னை நோக்கி வேகமாக வந்துகொண்டிருந்த ஈட்டியை மூன்று துண்டுகளாகத் துண்டித்து சிஷ்யனுக்கு மேம்பட்டவர் என்பதை நிரூபித்து திருஷ்டத்யும்னனைத் தனது கணைகளால் மறைத்து அம்புகளால் துளைத்து விட்டார். இதனால் படுகாயமடைந்த திருஷ்டத்துய்மனை பீமன் போர்க்களத்திலிருந்து வெளியே அழைத்துச் செல்ல முற்பட்டான்.

பீமன் திருஷ்டத்துய்மனுக்கு உதவி செய்ய வந்ததைக் கண்ட கலிங்க வேந்தன் எதிர்ப்பக்கத்தில் பீமனை எதிர்ப்பதற்காக வந்தான். கலிங்க வேந்தனின் படையில் யானைகள் அதிகமாக காணப்பட்டது. மனிதப் படைகளை அழிப்பதை விட யானைப் படைகளை அழிப்பதில் பீமனுக்கு அதிக மகிழ்ச்சி. பீமன் கலிங்க வேந்தனையும் அவன் யானைப் படைகளையும் அழித்துத் துவம்சம் செய்ய ஆரம்பித்தான். கலிங்க வேந்தன் பின் வாங்குவதைத் தவிர வேறு வழி இல்லை என்று எண்ணி தன்னுடைய யானைகளுடன் பிறபடைகளிலும் பெரும் பகுதி அழிந்ததால் தோல்வியடைந்து விட்டேன் என்று கூறி ஓடினான். கலிங்கன் ஓடியதை பார்த்த பீஷ்மர் கலிங்க படைக்கு உதவி புரிய அங்கு வந்தார்.

மகாபாரதம் 6. பீஷ்ம பருவம் பகுதி -3

துரோணர் கூறியதை கேட்ட யுதிஷ்டிரன் ஆச்சாரியாரே தங்களை யாரும் யுத்தம் செய்து வெல்ல முடியாது. அப்படி இருக்க நாங்கள் எப்படி இந்த யுத்தத்தில் தங்களை வெற்றி பெறுவோம் என்று கேட்டார். நீ சொல்வது சரியானதே. ஆயுதம் தாங்கி போர் புரிந்து கொண்டிருக்கும் போது என்னை யாரும் வெல்ல முடியாது. ஆனால் என்னை துக்கத்தில் ஆழ்த்தும் செய்தி ஏதேனும் சத்தியம் தவறாதவன் சொல்ல கேட்டு நான் மனம் குழம்பினால் அப்போது என்னுடைய ஆயுதங்கள் எனக்கு பயன்படாது போய் விடும். அப்போது நான் தோற்கடிக்கப்படுவேன் என்று கூறினார். யுதிஷ்டிரன் மீண்டும் தரையில் விழுந்து வணங்கினான். அதுபோலவே கிருபரிடமும் யுத்தம் செய்ய அனுமதி வேண்டிப் பெற்றான். பிறகு தமது இடம் சென்று போர்க்கோலம் பூண்டு யுத்தத்திற்கு தன்னை ஆயத்தப்படுத்திக்கொண்டான்.

தவிர்க்க முடியாத யுத்தம் தொடங்கியது. முதலாம் நாள் போர் சங்குல யுத்தம் என அழைக்கப்படுகிறது. ஓர் ஒழுங்குக்கு உட்படாமல் ஒருவனோடு ஒருவன் முறை இல்லாமல் போரிடுவது சங்குல யுத்தம் ஆகும். இருதரப்பு படைகளும் மோதின. கடலில் உருண்டோடி வருகிற ஒரு அலை மற்றொரு அலையின் மீது மோதுவது போன்று இரண்டு பக்கங்களிலும் உள்ள சேனைகள் ஒன்றை ஒன்று தாக்கிக் கொண்டன. அதனால் விளைந்த ஆரவாரம் மிகப்பெரியதாக இருந்தது. வீரர்கள் சிங்கம் போல கர்ஜித்தனர். யானைப்படையும் குதிரைப்படையும் மூர்க்கத்தனமாக மோதிக் கொண்டன. ஒளிர்கின்ற வால் நட்சத்திரங்கள் போன்று அம்புகள் பறந்தன. அதனால் எழுந்த தூசு விண்ணை மறைத்தது. வீரர்கள் ஈட்டி, கத்தி, கதை, வளைதடி, சக்கரம் கொண்டு போரிட்டனர். குடும்ப பந்த பாசங்களை மறந்துவிட்டு அவரவர்கள் சுற்றத்தாரை எதிர்த்துப் போராடினார்கள்.

பீஷ்மர் வீராவசத்தோடு போர் புரிந்து எண்ணற்ற வீரர்களைக் கொன்றார். இவருடைய ரதம் சென்ற இடங்களிலெல்லாம் சேனைகள் அணியணியாக வீழ்ந்தது. யுத்தத்தில் பாண்டவர்கள் பக்கம் அர்ஜுனுடைய மைந்தனாகிய அபிமன்யு பாராட்டத்தக்க முறையில் எதிரிகளைத் தாக்கினன். விராடனுடைய மைந்தனாகிய உத்தரனும் சல்லியனும் ஒருவரோடு ஒருவர் போர் புரிந்தார்கள் அதன் விளைவாக உத்தரன் கொல்லப்பட்டான். அதனால் கோபமடைந்த அவனுடைய தம்பி சுவேதன் சல்லியன் மீது விரைந்து சென்று தாக்கினான். அவனுடைய பராக்கிரமத்தை இரு அணியினரும் வியந்து பாராட்டினார்கள். ஆனால் பீஷமர் சுவேதனை ஒரே அடியில் வீழ்த்தினார். சுவேதன் மரணம் பாண்டவ வீரர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. கௌரவர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது. அவர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர். முதல் நாள் யுத்தத்தில் ஆயிரக்கணக்கான வீரர்கள் மடிந்து போனார்கள். அந்த யுத்தம் கௌரவர்களுக்கு ஆறுதல் தருவதாகவும் பாண்டவர்களுக்கு ஏமாற்றத்தை உண்டு பண்ணுவதாகவும் முடிவடைந்தது. யுத்தத்தில் நடந்தவைகள் அனைத்தும் சஞ்சயன் மூலமாக திருதராஷ்டிரர் தெரிந்து கொண்டர்.

காயத்திரி மந்திரம்

மன்னரும் அவரது மந்திரியும் ஒரு நாள் மாறுவேடம் அணிந்து நகர் சோதனை செய்து வந்தனர். அப்போது ஒரு பிச்சைக்காரன் எதிர்பட்டான். அவனைப் பார்த்த மன்னர் இந்த இனத்தவர்களுக்குப் பிச்சை எடுப்பது தவிர வேறு பயனுள்ள தொழிலேதும் செய்யத் தெரியாதா என்று கேட்டார். மந்திரியின் மனத்தில் முள்ளெனத் தைத்தன அந்த வார்த்தைகள். பிறகு மந்திரி அந்தப் பிச்சைக்காரனைச் சந்தித்துக் கேட்டபொழுது தன்னுடைய பெரிய குடும்பத்தைக் காப்பற்ற வேறு வழி புலப்படாததால் பிச்சையெடுக்க முற்பட்டதாகவும் இதன் மூலம் நாளொன்றுக்கு 25 காசுகள் கிடைக்கின்றன என்றும் கூறினான். அதைச் கேட்ட மந்திரி அவன் பிச்சையெடுப்பதை விட்டு விட்டு தினந்தோறும் காலையில் ஸ்நானம் செய்துவிட்டு 10 தரம் காயத்திரி ஜபம் செய்வதாக இருந்தால் அன்றாடம் அவனுக்கு 50 காசுகள் தருவதாகக் கூறினார். அந்த ஏழையும் பிச்சை எடுப்பதை நிறுத்திவிட்டு மந்திரி சொன்னபடி ஜபம் செய்து வந்தான்.

அவன் முகத்திற்கு ஒரு அசாதரணமான சக்தி ஏற்பட்டது. இதை அறிந்த மந்திரி அந்த ஏழையை அணுகி தினம் 108 தடவை காயத்திரி ஜபம் செய்தால் அவனுக்கு மாதம் 1000 ரூபாய் தருவதாகச் சொன்னார். அதற்கும் ஒப்புக்கொண்டு அந்த ஏழையும் தீவிரமாக ஜபம் செய்தார். பயனெதுவும் கருதாமல் நாள் பூராகவும் காயத்திரி ஜபம் செய்து வந்ததால் ஒரு நாள் அவனுக்கு அஞ்ஞான இருள் நீங்கியது. அவனுக்கு ஆன்மீக வளர்ச்சியும் தெய்வீக ஒளியும் ஏற்பட்டு தினந்தோறும் திரளான மக்கள் அவனை நாடி வணங்கி அருள் பெற்று வந்தனர். ஒரு மாதம் ஆனதும் அந்த ஏழை பணம் வாங்க வராததால் மந்திரியே அவன் வீட்டிற்கு வந்து பணம் கொடுத்தார். ஆனால் அவன் பணிவுடன் அதைப் பெற்றுக்கொள்ள மறுத்து அவனுக்குச் சிறந்த ஆன்மீக வழியைக் காட்டியதற்காக மந்திரிக்கு நன்றி தெரிவித்தான்.

மறுநாள் மந்திரி மன்னரை அந்த ஏழை வீட்டிற்கு அழைத்து வந்தார். அவன் முகத்தில் தென்பட்ட தேஜஸையும் அங்கு அருள் பெற வந்த மக்களையும் பார்த்து மன்னர் மிக ஆச்சரியப்பட்டார். அரசரும் அவர் காலில் விழுந்து அருள் புரியுமாறு வேண்டினார். சில மாதங்களுக்கு முன் நீங்கள் இகழ்ந்து பேசிய அதே பிச்சைக்காரன் தான் இவர் என்று சக்கிரவர்த்தியின் காதில் கிசு கிசுத்தார் மந்திரி. சக்கரவர்த்தி நம்பாமல் அந்த ஏழையின் இந்த மாற்றத்திற்கான காரணத்தைக் கேட்டார். அவனும் நடந்ததைச் சொல்லி காயத்திரி ஜபம் செய்ததால் வந்த பெருமை என்று மந்திரி விளக்கினார். காயத்திரி ஜபத்தினால் பட்ட மரம் தழைக்கும் வாழ்வில் நிம்மதியின்றித் தவிப்பவர்கள் நிம்மதியும் மனச் சாந்தியும் பெறுவார்கள். சத்ருக்கள் (எதிரிகள்) நாசமடைவார்கள் பாபங்கள் நீங்கிப் பிறவித்துயர் நீங்கும். வேதசாரமான இந்த மஹா மந்திரம் நம் ரிஷிகளின் அருளினால் நமக்குக் கிடைத்தது

ஓம் பூர்: புவ: ஸுவ: தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ: யோந: ப்ரசோதயாத்

பொருள்: மூவுலகத்திலும் மிகப்பெரிய சக்தியாய் விளங்கும் அந்த பரம ஜோதியை நாம் தியானிக்கின்றோம். அந்த பரம சக்தி நமது இருளை நீக்கி புத்தியை வெளிச்சப்படுத்தட்டும் என்பதே இந்த மந்திரத்தின் பொதுப்பொருள்.

அமெரிக்காவின் ஹாம்பர்க் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் சிலர் ஒன்றிணைந்து உலக நாடுகள் பலவற்றில் உள்ள பல்வேறு மந்திரங்களை ஆய்விற்கு உட்படுத்தினர். அப்போது காயத்திரி மந்திரம் ஒலிக்கும்போது மட்டும் நொடிக்கு சுமார் 1,10,000 ஒலி அலைகளை எழுப்புவதை கண்டு அவர்கள் ஆச்சர்யப்பட்டுள்ளனர். தங்கள் ஆய்வின் முடிவில் காயத்திரி மந்திரமே அதிக ஓலி அலைகளை எழுப்பும் உலகின் தலை சிறந்த மந்திரம் என்பதை தெரிவித்தனர். இந்த ஆய்விற்கு பின்பு அமெரிக்காவின் பிரபல ரேடியோ ஸ்டேஷன் ஒன்றில் தினமும் இரவு 7 மணிக்கு தொடர்ந்து 15 நிமிடங்கள் காயத்திரி மந்திரம் ஒளிபரப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மகாபாரதம் 6. பீஷ்ம பருவம் பகுதி -2

அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் மனித பிறப்பின் கடமைகள், வாழ்க்கையின் தத்துவம், யோக தத்துவங்கள், கர்மங்கள் ஆகிய பலவற்றை எடுத்து விளக்கினார். இவை அனைத்தும் பகவத்கீதை என்று பெயர் பெற்றது. கிருஷ்ணர் கூறிய அனைத்து தத்துவங்களையும் கேட்ட அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் தனது விஸ்வரூப தரிசனத்தையும் கொடுத்து அர்ஜூனனின் மனக்குழப்பத்தை போக்கினார். தெளிவடைந்த அர்ஜூனன் யுத்தம் புரிய சம்மதித்தான்.

போர் துவங்கும் நேரத்தில் யுதிஷ்டிரர் தேரிலிருந்து இறங்கினார். தன் போர்க்கருவிகளைக் கீழே வைத்தார். போருக்குரிய கவசங்களை நீக்கினார். எதிரணியிலிருந்த பீஷ்மரை நோக்கிப் போனார். இதைப் பார்த்தவர்கள் வியந்தனர். பீஷ்மரிடமும் குருவானவர்களிடமும் ஆசி பெறவதற்க்காக யுதிஷ்டிரர் செல்கிறான் என்று கிருஷ்ணருக்கு புரிந்தது. துரியோதனன் பக்கம் இருந்தவர்கள் தங்களுடைய படைகளை பார்த்து யுத்தம் புரிய பயந்து யுதிஷ்டிரர் சரணடைய வருவதாக எண்ணினர்.

யுதிஷ்டிரர் பீஷ்மரிடம் சென்று அவரை வலம் வந்து தரையில் வீழ்ந்து வணங்கி போற்றுதற்குரிய பாட்டனார் அவர்களே தங்களை எதிர்த்துப் போர் புரியும் எண்ணம் எனக்கு இல்லை. ஆனால் தர்மம் எப்பக்கம் இருக்கிறது என்பதை தாங்கள் நன்கு அறிவீர்கள். தாங்கள் அனுமதித்தால் நான் தங்களை எதிர்த்து போர் புரிகிறேன் என்று யுதிஷ்டிரர் கூறினார். அதற்கு பீஷ்மர் சரியான வேளையில் நீ என்னிடம் வந்ததை குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். என்னுடைய முழு வல்லமையையும் கையாண்டு கௌரவர்களுக்காக சண்டை போட நான் இசைந்திருக்கிறேன். ஆயினும் இந்த யுத்தத்தில் நீ வெற்றியடைவாய். ஏனென்றால் தர்மத்தின் ஆதரவு உனக்கு எப்பொழுதும் உண்டு. மேலும் கிருஷ்ணன் உன்னை காப்பாற்றி வருகிறான் என்று தனது அனுமதியை கொடுத்தார், அதற்கு யுதிஷ்டிரன் தங்களை யாராலும் தோற்கடிக்க இயலாது அப்படியிருக்க நாங்கள் எவ்வாறு தங்களை வெல்வது என்று யுதிஷ்டிரர் கேட்டான் அதற்கு பீஷ்மர் இந்த ரகசியத்தை வெளியிடுவதற்கான காலம் இன்னும் வரவில்லை. என்னை எதிர்த்து துணிந்து போர் புரிவாயாக வெற்றி உனக்கு நிச்சயம் என்று கூறி ஆசிர்வதித்தார். அர்ஜூனன் மீண்டும் ஒரு முறை பீஷ்மர் காலில் விழுந்து வணங்கி அவரிடம் இருந்து விடைபெற்று துரோணரிடம் சென்றான்.

குரு தேவா போற்றி ஆராதனைக்குரிய ஆச்சாரியாரே தங்களை எதிர்த்துப் போர் புரியும் எண்ணம் எனக்கு இல்லை. ஆயினும் என் கடமையை நான் செய்தாக வேண்டுமென்று தர்மம் என்னை உந்தித் தள்ளுகிறது. அதற்கு அனுமதி பெற தங்களை நாடி வந்திருக்கிறேன் என்றார். அதற்கு துரோணர் என்னை எதிர்த்துப் போர் புரிய என்னுடைய அனுமதியை கேட்டபதன் வாயிலாக நீ நல்ல பாங்கில் நடந்து கொண்டுள்ளாய். என்னை எதிர்த்து போர் புரியும்படி சூழ்நிலை உன்னை தூண்டுகிறது. என் கடமையை நிறைவேற்றுவதில் நான் எனது ஆற்றல் முழுவதையும் நான் கையாண்டாக வேண்டும். ஆனாலும் நீ வெற்றி பெறுவாய் ஏனென்றால் தர்மம் உனக்கு துணையாய் இருக்கிறது. அதற்கு மேல் கிருஷ்ணன் உன்னை காத்து வருகிறார் என்று துரோணர் கூறினார்.

விருதாச்சலம் விருதகிரிஸ்வரர் வன்னிமரம்

வன்னிமரம் மிகவும் வசீகரமான மரம். இதனுடைய இலைகள் முத‌ல் அனைத்தும் சிறப்பு வாய்ந்தது. வன்னி மரம் பாலைவனப் பகுதியில் கூட வளரக்கூடியது. விருதாச்சலம் விருதகிரி ஆலயத்தில் பழமையான வன்னி மரம் இருக்கிறது. இந்த வன்னி மரத்தின் இலைகளைப் பறித்து தான் அந்தக் கோயிலைக் கண்டினார்கள் என்று தலபராணம் சொல்கிறது. அங்கு விபசித்தி முனிவர் என்று ஒருவர் இருந்தார். அந்த முனிவர் அங்கேயே வாழ்ந்து அங்கேயே ஒரு கோயிலைக் கட்டிவிட்டு ஜீவ சமாதியும் அடைந்திருக்கிறார். அவர் தினசரி காலையில் இருந்து மாலை வரை வேலை பார்த்த வேலையாட்களுக்கு அந்த வன்னி மரத்தின் கீழ் உட்கார்ந்து வன்னி இலைகளை உருவி கொடுப்பார். அவர்கள் எந்த அளவிற்கு உழைத்தார்களோ அந்த அளவிற்கு அது தங்கமாக மாறும். ஒன்றுமே உழைக்காமல் சுற்றிக் கொண்டிருந்தால் தங்கமாக மாறாமல் இலையாகவே இருக்கும். கடினமாக வேர்வை சிந்தி அனைத்து வேலைகளையும் செய்தவர்களுக்கு அத்தனையும் தங்கமாக மாறும். இது வரலாற்றுச் சான்றுகளில் இருக்கிறது. கல்வெட்டுச் சான்றுகளில் இருக்கிறது.