மகாபாரதம் 2. சபா பருவம் பகுதி -18

திரோபதியின் சபதத்தை கேட்ட பீமன் எழுந்து திரௌபதியின் இரு சபதத்தையும் நிறைவேற்ற நானும் என் கதையும் துணை நிற்போம் இது சத்தியம் என்றான். அர்ச்சுனன் திரௌபதியின் இந்த சபதத்திற்கு மூல காரணமான கர்ணனை என் காண்டீபத்திலிருந்து புறப்படும் பாணங்களினால் துளைத்து மடியச் செய்வேன் இது சத்தியம் என்றான். திருதராஷ்டிரன் இபோது திரௌபதியை சமாதானம் செய்தால் நிலமையை சீர் செய்யலாம் அவளது சபதத்தை திரும்ப பெற செய்யலாம் என்ற எண்ணத்துடன் திரௌபதி உனக்கு வரம் தருகிறேன் என்றான். அதற்கு திரௌபதி இந்த சபையில் சூதால் தோற்ற அவர்களை சூதாலேயே வென்று பெற்று விட்டேன். பாண்டவர்களுக்கு அவர்கள் இராஜ்யம் வேண்டும். அதை நான் வரமாகக் கேட்க முடியாது. அது அவர்கள் தேசம். க்ஷத்திரியர்களான பாண்டவ புத்திரர்கள் தங்கள் ராஜ்யத்தை யுத்தம் செய்து வென்று பெற்றுக்கொள்வார்கள். ஆகையால் இப்போது தங்களின் வரம் தற்போது வேண்டாம் என்று கூறிவிட்டாள்.

மன்னன் திருதராஷ்டிரன் யோசிக்கிறான். பாண்டவர்கள் ஐவரும் இப்போது சுதந்திரமானவர்கள். இப்போது மேலும் பேச்சை வளர்த்தினால் இன்றே யுத்தம் துவங்கிவிடும். இதற்கு உடனே அணை போட வேண்டும். இதையெல்லாம் மனதில் கொண்டு யுதிஷ்டிரா இங்கு சபையில் நடந்தவைகள் யாருக்கும் விருப்பமில்லாதவைகளாய் நடந்துவிட்டன. நாளை சபை கூடியதும் மறுபடியும் பேசலாம். இப்போது நீங்கள் ஐவரும் திரௌபயும் சென்று ஓய்வெடுங்கள் என்று கூறி அனுப்பி வைத்தான். பாண்டவர்கள் வெளியேறியதும் பலரும் சபையை விட்டு தொடர்ந்து வெளியேறுகிறார்கள்.

துரியோதனன் மற்றும் அவன் உடன் பிறந்தவர்கள் துரியோதனனின் நலம் விரும்பிகள் திருதராஷ்டிரரிடன் ஆலோசனை செய்ய வேண்டும் என்று அந்த மண்டபத்திலேயே இருந்தார்கள். பாண்டவர்கள் நாடு நகரம் செல்வம் இவைகள் அனைத்தும் இல்லையென்றாலும் இப்போது சுதந்திரம் ஆனாவர்களாக இருக்கின்றார்கள். திரோபதியின் சபதத்தை முன்னிட்டு பீமனும் அர்ஜூனனும் துரியோதனனையும் துச்சாதனனையும் கொல்வதாக சபதம் எடுத்திருக்கின்றார்கள். நாளையே அவர்கள் யுத்தத்திற்கு வந்தால் அனைவரும் அவர்களுக்கே துணை நிற்பார்கள். ஆகவே இதற்கு ஓர் தீர்வு காணவேண்டும் என்று விவாதிக்கின்றாரகள். இறுதியில் பாண்டவர்களை 12 வருடகாலம் வனவாசம் செல்ல வேண்டும். ஒரு வருடம் அக்ஞாத வாசம் இருக்க வேண்டும் அப்படி அவர்கள் செய்தால் பகடையில் தோற்ற நாடு செல்வங்கள் அனைத்தையும் அவர்களுக்கு திருப்பி கொடுப்பதாக சொல்லி காட்டிற்கு அனுப்ப வேண்டும். ஒரு வருட அக்ஞாத வாசத்தில் அவர்களை கண்டு பிடித்து விட்டால் மீண்டும் 12 வருட காலம் காட்டில் இருக்க வேண்டும். இதை திருதராஷ்டிரர் யுதிஷ்டிரரிடம் சொல்லவேண்டும். மன்னரின் ஆணையை யுதிஷ்டிரன் தட்டமாட்டான். இதை செய்யாவிட்டால் பாண்டவர்கள் தாங்கள் எடுத்த சபதத்தின்படி யுத்தத்திற்கு வருவார்கள் என்று திருதராஷ்டிரரிடம் பேசி அவரை சம்மதிக்க வைத்தார்கள்.

Related image

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 213 பெண்ணாகடம்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 213 வது தேவாரத்தலம் பெண்ணாகடம். புராணபெயர் தூங்கானை மாடம். மூலவர் சுடர்கொழுந்தீசர், பிரளய காலேஸ்வரர், கடந்தை நாதர். இங்கு இறைவன் சதுர ஆவுடையாரக மீது உயர்ந்த பாணத்துடன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அம்பாள் ஆமோதனாம்பிகை, கடந்தை நாயகி. தீர்த்தம் கயிலை தீர்த்தம், பார்வதி தீர்த்தம், இந்திர தீர்த்தம், முக்குளம், வெள்ளாறு. தலமரம் செண்பகம். முகப்பு வாயிலைக் கடந்து சென்றால் நேரே பலிபீடம், கொடிமரம், நந்தி மண்டபம் இருப்பதைக் காணலாம். அதையடுத்து 5 நிலை இராஜகோபுரம் உள்ளது. கருவறையைச் சுற்றிலும் மூன்று பலகணிகள் அமைக்கப்பட்டுள்ளதால் மூலவரை மூலஸ்தானத்திற்கு வெளியே எந்த திசையில் நின்றாலும் வணங்கலாம். தேவகன்னியர்களாகிய பெண், காமதேனுவாகிய ஆ, வெள்ளை யானையாகிய கடம் (பெண்-ஆ-கடம்) இங்கு பூஜை செய்ததால் இத்தலம் பெண்ணாகடம் ஆனது. தற்போது பெண்ணாடம் என அழைக்கப்படுகிறது.

ஒருமுறை தேவலோகத்தில் சிவபூஜை செய்ய பூலோகத்து பூக்கள் தேவைப்பட்டது. இந்திரனின் பூசைக்காக மலர்களைப் பறிக்க வந்த பூலோகம் வந்த தேவகன்னியர் இத்தலத்து இறைவனைக் கண்டு மகிழ்ந்து வழிபாடு செய்து இங்கேயே தங்கி விட்டனர். மலர் கொண்டு வரச்சென்ற தேவகன்னியர் திரும்பி வாராததால் இந்திரன் காமதேனுவை அனுப்ப தானும் இறைவனுக்கு பால் அபிஷேகம் செய்து இறைவனை வழிபட்டு இங்கேயே தங்கி விட்டது. காமதேனுவைத் தேடிச்செல்லுமாறு இந்திரன் தன் வெள்ளை யானையை அனுப்ப யானையும் இறைவனை வணங்கி திறந்த வெளியில் இருக்கும் இறைவனை மறைத்து வெயில் படாமல் பார்த்துக்கொண்டு இங்கேயே தங்கிவிட்டது ஒன்றும் புரியாத இந்திரன் தானே புறப்பட்டுத் தேடிவந்து பெருமானை வழிபட்டான். ஒருமுறை உலகம் சிவபெருமானால் அழிக்கப்பட்டது. அப்போது இத்தலம் தவிர அனைத்து இடங்களும் வெள்ளத்தால் மூழ்கியது. இதையறிந்த தேவர்கள் இங்கு வந்து உயிர்களை இத்தலத்தில் வைத்து காக்கும்படி வேண்டினர். சிவனும் நந்தியிடம் வெள்ளத்தை தடுக்க ஆணையிட்டார். சிவனைப் பார்த்திருந்த நந்தி ஊரை நோக்கி திரும்ப வெள்ளத்தை திசை மாற்றி பூமியை காத்தது. எனவே இங்குள்ள இறைவன் பிரளயகாலேஸ்வரர் என அழைக்கப்பட்டார்.

வெள்ளத்திலிருந்து பூமியை காப்பதற்காக அன்று திசை திரும்பிய நந்தி இன்றும் வாசலை நோக்கி திரும்பியே இருக்கிறது. 63 நாயன்மார்களில் ஒருவரான கலிக்கம்பநாயனார் இவ்வூரில் வாழ்ந்தவர். தன் மனைவியுடன் இணைந்து வீட்டிற்கு வரும் சிவனடியார்களுக்கு பாத பூஜை செய்து வந்தார். ஒருமுறை அவரது மனைவி, சிவனடியார் ஒருவருக்கு பாத பூஜை செய்ய மறுத்து விட்டார். இதனால் கோபம் கொண்ட கலிக்கம்பர் மனைவியின் கையை வெட்டி விட்டார். கருணைக்கடலான் ஈசன் அந்த பெண்ணின் கையை மீண்டும் தந்தார். சோழமன்னன் ஒருவன் இறைவனை தரிசிக்க இத்தலம் வரும்போது ஆற்றில் வெள்ளம் வந்தது. ஆற்றின் கரையில் இருந்தபடி சிவனை வேண்டிய போது அவனுக்காக தன் இருப்பிடத்தை உயர்த்தி கரையில் இருந்தபடியே தரிசனம் கிடைக்க செய்தார். இப்போதும், 30 மீட்டர் உயரத்தில் உள்ள கட்டு மலைக்கோயில் என்ற மேட்டுப்பகுதியில் சௌந்தரேஸ்வரர் சந்நிதி கோயிலுக்குள் உள்ளது. தனிக்கோபுரத்துடன் கூடிய கோயில் ஏறுதற்குப் படிகள் உள்ளன. கட்டுமலைக் கோயிலின் கீழ்ப்பகுதியில் பிரளயகாலேஸ்வரி அம்பாள் தனியாக உள்ளார். திருநாவுக்கரசர் தூங்கானைமாடம் தலத்திற்கு வந்தபோது தான் சமணநெறியில் ஈடுபட்டு சிலகாலம் இருந்ததை நினைத்து வருந்தினார். சமண நெறியிலே வாழ்ந்து வந்த இந்த உடம்புடன் வாழ விரும்பவில்ல என்றும் சிவபெருமானுடைய அடையாளங்களை என் உடம்பிலே இட்டால் நான் வாழ்வேன் என்றும் வேண்டிக்கொண்டு திருப்பதிகம் ஒன்று பாடினார். தன் உடலில் திரிசூல முத்திரையும், ரிஷப முத்திரையும் பொறிக்க வேண்டினார். இவரது வேண்டுகோளை ஏற்ற சிவன் இத்தலத்தில் அவருக்கு முத்திரையை பொறித்தார். கலிக்கம்பநாயனார், மெய்கண்டார் அவதரித்ததும், மறைஞான சம்பந்தர் வாழ்ந்ததும் இங்கு தான். திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் பாடல்கள் பாடியுள்ளனர்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 212 திருவட்டத்துறை

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 212 வது தேவாரத்தலம் திருவட்டத்துறை. புராணபெயர் திருநெல்வாயில் அரத்துறை, நெல்வாயில் அருத்துறை. மூலவர் தீர்த்தபுரீஸ்வரர், அரத்துறைநாதர், ஆனந்தீஸ்வரர். இங்கு இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அம்பாள் ஆனந்தநாயகி, திரிபுரசுந்தரி, அரத்துறைநாயகி. தீர்த்தம் நீலமலர்ப்பொய்கை, வட வெள்ளாறு, நிவாநதி. ஒரு முறை வெள்ளாறு நதியில் வெள்ளப்பெருக்கெடுத்த போது அதனால் சேதம் உண்டாகாதிருக்க நந்தி தலையை திருப்பி பார்க்க வெள்ளம் வடிந்தது. இதனால் இன்றும் இத்தலத்தில் நந்தியின் தலை சற்று திரும்பியுள்ளது. தலவிருட்சம் ஆலமரம். தீர்த்தபுரீஸ்வரர் ஆலயம் கிழக்கு நோக்கிய முகப்பு வாயிலுடன் அமைந்துள்ளது. முகப்பு வாயில் கடந்து உட்சென்றால் வெளிப் பிரகாரத்தில் விநாயகர், சமயக்குரவர்கள் நால்வர், வான்மீகிமுனிவர், சப்த கன்னியர்கள், பூத, பவிஷ்ய, வர்த்தமான லிங்கங்கள், மகாவிஷ்ணு, ஜோதிலிங்கம் முதலிய சந்நிதிகள் உள்ளன. அடுத்து அண்ணாமலை, ஆதிசேஷன், வள்ளி தெய்வயானை சமேத முருகன், தண்டாயுதபாணி சந்நிதிகளையும், சேர சோழ பாண்டிய மன்னர்கள் பெயரில் உள்ள லிங்க மூர்த்திகளையும் தரிசிக்கலாம். காசி விசுவநாதரும் விசாலாட்சியுடன் காட்சி தருகிறார். கஜலட்சுமி, சந்தான குரவர்கள், பைரவர், சூரியசந்திரர் சந்நிதிகளும் அடுத்துள்ளன. கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், பிட்சாடனர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா ஆகியோர் உள்ளனர். நடராசர் சிவகாமி தரிசனம், துர்க்கை, அர்த்தநாரீஸ்வரர், சண்டேஸ்வரர், பைரவர் ஆகியோரின் மூர்த்தங்களைத் தரிசித்தபின் உள்ளே சென்றால் மூலவரைத் தரிசிக்கலாம். உள் சுற்றில் இடதுபுறம் நவக்கிரக சந்நிதி, சனிபகவானுக்கு தனி சந்நிதி உள்ளது. சுவாமிக்கும் அம்பாளுக்கும் தனித்தனியே கொடிமரமும் பலிபீடமும் நந்தியும் உள்ளன.

அருணகிரிநாதர் இத்தலத்திலுள்ள முருகனை தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தல முருகன் மீது ஒரு பாடல் உள்ளது. இத்தல முருகப் பெருமான் ஒரு திருமுகமும் நான்கு திருக்கரங்களுடன் இருதேவியருடன் நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கி காட்சி தருகின்றார். மயில் பின்பறம் உள்ளது. திருஞானசம்பந்தர் சீர்காழியில் உமையம்மை கையால் ஞானப்பால் பெற்று பதிகம் பாடி சைவ சமயத்தை சிறப்பிக்க சிவபெருமான் குடி கொண்டிருக்கும் தலங்களுக்கெல்லாம் திருயாத்திரை தொடங்கினார். திருஞானசம்பந்தர் சிறு பாலகனாக இருந்ததால் அவருடைய தந்தையார் சம்பந்தரைத் தூக்கிக் கொண்டு செல்வது வழக்கமாக இருந்தது. திருதூங்காணைமாடம் சிவஸ்தலத்தை தரிசித்து திருநெல்வாயில் அரத்துறை நோக்கி செல்லும் போது தந்தை தோள்மீது செல்வதை விட்டு நடந்தே சென்றார். திருஞானசம்பந்தர் தன் கால்கள் வழ்க்க நடந்து செல்வதைக் கண்டு யாவரும் வருந்தினர். திருநெல்வாயில் அரத்துறை செல்லும் வழியில் மாறன்பாடி என்ற இடத்தில் இரவு தன் அடியார்களுடன் திருஞானசம்பந்தர் தங்கினார். அன்றிரவு திருநெல்வாயிலிலுள்ள அடியார்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் கனவில் இறைவன் தோன்றி திருஞானசம்பந்தர் கால்கள் வலிக்காமல் இருக்க தான் முத்துச் சிவிகை, முத்துக்குடை, முத்துச் சின்னங்கள் அளிப்பதாகவும் அவற்றை திருஞானசம்பந்தரிடம் சேர்த்து அவரை ஆலயத்திற்கு அழைத்து வரும்படியும் ஆணையிட்டார். இதே போன்று திருஞானசம்பந்தர் கனவிலும் தோன்றி இவ்விபரங்களைக் கூறி முத்துச் சிவிகையில் ஏறிக்கொண்டு தன்னை தரிசிக்க வருபடியும் ஆணையிட்டர்.

மறுநாள் காலை திருநெல்வாயில் கோவில் பணியாளர்கள் ஆலயத்தை திறந்து பார்க்க அங்கு முத்துச் சிவிகை, முத்துக்குடை, முத்துச் சின்னங்கள் ஆகியவை இருக்கக் கண்டு இறைவனை கைகளைக் கூப்பி வணங்கினர். பின்னர் அவற்றை எடுத்துக் கொண்டு மாறன்பாடி சென்று திருஞானசம்பந்தரிடம் கொடுத்து அவரை முத்துச் சிவிகையில் உட்கார வைத்து முத்துக்குடை நிழலில் அரத்துறைநாதர் ஆலயம் அழைத்து வந்தனர். திருஞானசம்பந்தரும் ஆலயம் வந்து இறைவனைத் தொழுது பதிகம் பாடி வணங்கினார். வெள்ளாற்றின் கரையில் உள்ள ஆதித்துறை(காரியனூர்), திருவாலந்துறை, திருமாந்துறை, திருஆடுதுறை, திருவட்டத்துறை (திட்டக்குடி) திருநெல்வாயில் அரத்துறை, திருக்கரந்துறை எனும் ஏழு துறைத்தலங்களுள் இது முக்கியமான தலம். இந்த ஏழு புண்ணியத்துறைகளில் மக்களின் பாவங்களை நீக்க இறைவன் இங்கு எழுந்தருளி அருள்பாலிக்கின்றார். இந்த ஏழு துறைகளையும் சப்தரிஷிகள் நீவா என்று அழைத்துள்ளார்கள். இதுவே நீவா-வடவெள்ளாறு நதியாக மாறியது. இத்தலம் நிவாநதியின் கரையின்மேல் இருப்பதாக திருஞானசம்பந்தர் குறிப்பிட்டுள்ளார். மகாவிஷ்ணு, ஆதிசேஷன், சனி, செவ்வாய், வால்மிகி முனிவர், சனகர், சேர, சோழ, பாண்டியர்கள் வழிபட்டுள்ளார்கள். திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர், ஆதிசங்கரர், குகை நமச்சிவாயர், ராமலிங்க அடிகள் பாடல்கள் பாடியுள்ளனர்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 211 கரூர்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 211 வது தேவாரத்தலம் கரூர். புராணபெயர் கருவூர், திருக்கருவூர் ஆனிலை. மூலவர் பசுபதிநாதர், பசுபதிஸ்வரர் ஆநிலையப்பர். இரண்டடி உயரம் உள்ள இறைவன் சதுர ஆவுடையாராக சிறிது சாய்ந்த நிலையில் சிவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மாசி மாதத்தில் ஐந்து நாட்கள், பங்குனி மாதம் 14, 15, 16 ஆகிய மூன்று நாட்கள் சுவாமி மீது சூரிய ஒளி படுகிறது. கீழ்ப்பகுதி பிரம்மபாகம். நடுப்பகுதி திருமால் பாகம். மேல்பகுதி உத்திர பாகம் என்று மும்மூர்த்திகளும் சேர்ந்த திருமூர்த்தியாக காட்சி தருகிறார். அம்பாள் அலங்காரவல்லி, சௌந்தரநாயகி, கிருபா நாயகி, சுந்தரவல்லி. தீர்த்தம் தடாகைதீர்த்தம், ஆம்பிரவதி (அமராவதி) நதி. தலவிருட்சம் வஞ்சி. மூர்த்தி, தலம், தீர்த்தம் எனும் மூன்று சிறப்புக்களை உள்ளடக்கியது கரூர் பசுபதிநாதர் கோயில். இந்த சிவஸ்தலம் கோவில் சுமார் 2.65 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. கோவில் ராஜகோபுரம் ஏழு நிலைகளையும் ஏழு கலசங்களையும் கொண்டுள்ளது. கோபுரத்தில் திருவிளையாடல் புராணம், தசாவதாரம் ஆகியவை சுதைச் சிற்பங்களாக சித்தரிக்கப்பட்டுள்ளன. உட்கோபுரம் ஐந்து நிலைகளைக் கொண்டது. இரு கோபுரங்களுக்கும் இடையே புகழ்ச்சோழர் மண்டபம் உள்ளது.

புகழ்ச்சோழர் 63 நாயன்மார்களில் ஒருவர். இவர் கருவூர்ப் பகுதியை ஆண்ட மன்னராவார். 63 நாயன்மார்களில் ஒருவரான எறிபத்த நாயனார் இவ்வூரிலேயே பிறந்துள்ளார். கோவில் நல்ல சுற்று மதிலோடு கூடியது. கிழக்கு மேற்காக 465 அடி நீளமும், தெற்கு வடக்காக 205 அடி நீளமும் உடையது. முன் கோபுரம் 120 அடி உயரம் உள்ளது. கோவிலுக்குள் 2 பிரகாரங்கள் உண்டு. கோயிலில் லிங்கத்திற்கு எதிரில் கொடிமரமும், அடுத்து பலிபீடமும், நந்திகேஸ்வரரின் திருமேனியும் உள்ளன. உட்பிரகாரத்தில் தெற்குச்சுற்றில் 63 நாயன்மார்கள் எழுந்தருளியுள்ளனர். அவர்களில் எரிபத்த நாயனாருக்கு தனி சந்நிதி இருக்கிறது. மேற்குச் சுற்றில் விநாயகர், கஜலட்சுமி, ஆருமுகன் ஆகியோரின் திரு உருவங்கள் உள்ளன. வடக்குச் சுற்றில் பஞ்சலிங்க மூர்த்திகள் உள்ளனர். ஈசன் சந்நிதியில் இருந்து வடக்கு நோக்கிச் சென்று ஒரு வாயிலைக் கடந்தால் அம்மன் சுந்தரவல்லி சந்நிதி தெற்கு பார்த்தபடி அமைந்திருக்கிறது. இவள் கிரியா சக்தி வடிவானவள். இந்த சந்நிதியின் இடது புறம் கிழக்கு நோக்கி அலங்காரவல்லி என்ற அம்மனின் பழைய கோவில் இருக்கிறது. இவள் ஞான சக்தி வடிவானவள். இறைவனை காமதேனு வழிபட்டுள்ளார். காமதேனு வழிபடும் போது ஏற்பட்ட குளம்பின் தழும்பு இப்போதும் சிவலிங்கத்தின் மீது காணலாம். கந்த புராண காலத்தில் வாழ்ந்ததாக கருதப்படும் முசுகுந்த சக்ரவர்த்தியால் திருப்பணி செய்யப்பட்டதாக பெருமை பெற்றது இந்த சிவஸ்தலம். பதினெட்டு சித்தர்களில் ஒருவரான கருவூர் சித்தர் வாழ்ந்து இக்கோவிலில் உள்ள சிவனுடன் ஐக்கியமானதால் அவருக்கு தெற்குப் பிரகாரத்தில் கன்னி மூலையில் கிழக்கு நோக்கி கருவூர் சித்தர் சந்நிதி உள்ளது. புகழ்ச்சோழ நாயனார் ஆண்ட பதி. எறிபத்த நாயனார் பிறந்த தலம். சிவகாமியாண்டார் வாழ்ந்து தொண்டு செய்த தலம். திருவிசைப்பா பாடிய கருவூர்த் தேவரின் அவதார தலம்.

திருப்பரங்குன்றத்தில் தெய்வானையுடனான முருகப்பெருமானது திருமண வைபவத்திற்கு முசுகுந்த சக்கரவர்த்திக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டதாக இத்தல புராணங்கள் கூறுகின்றன. கோயிலுக்குள் நுழையும்போது கருங்கல்லால் ஆன கொடிமரம் உள்ளது. இதில் ஒரு பக்கத்தில் புகழ் சோழ நாயனார் கையில் தலையோடு கூடிய தட்டுடன் நிற்கும் சிற்பமுள்ளது. மறுபுறத்தில் பசு சிவலிங்கத்தை நாவால் வருடுவது போலவும் அதன் பின் கால்களுக்கிடையில் பால் மடிக்கு நேர்கீழே சிவலிங்கம் அமைந்துள்ளதான சிற்பமும் உள்ளது. புகழ்ச்சோழர் மண்டபம் நூற்றுக்கால் மண்டபம் உள்ளது. நடராஜர் சன்னதியும், கோஷ்டமூர்த்தமாக தட்சிணாமூர்த்தியும் லட்சுமி சன்னதியும் அடுத்து ஆறுமுகர் சன்னதியும் உள்ளது. பதினென் சித்தர்களில் ஒருவரான சித்தர் கருவூரார் இத்தலத்துள் தென்மேற்கு மூலையில் கோயில் கொண்டுள்ளார். பற்றற்றவராக வாழ்ந்திருந்த இவர் மீது அந்தண இனத்தைச் சார்ந்தவர்கள் வாம மார்க்கத்தைக் கடைப்பிடித்து மது, புலால் இவைகளால் பூஜை செய்வதாக மன்னரிடம் குறை கூற மன்னன் இவரிடம் எக்குறையும் காணாது குறை கூறியவர்களைத் தண்டித்தான். மீண்டும் மீண்டும் அந்தணர்கள் தொல்லை தரவே இவர் தைப்பூசத்தன்று ஆனிலையப் பருடன் ஐக்கியமாகி விட்டார். ஆனிலையப்ப ரோடு ஐக்கியமானதால் கருவறையில் உள்ள சுயம்பு லிங்கம் சற்றே சாய்ந்தவாறு உள்ளது.

பிரம்மனுக்கு தன் படைப்புத் திறனால் ஏற்பட்ட கர்வத்தை அடக்க சிவபெருமான் காமதேனுவை கொண்டு திருவிளையாடல் நடத்தினார். அதன்படி காமதேனு நாரதர் கூறியபடி பூமிக்கு வந்து வஞ்சி வனமாக இருந்த இத்தலத்தில் தவம் செய்தது. அப்போது புற்று ஒன்றிற்குள் பாதாளத்தில் ஆதிலிங்கம் இருக்கும். அதை வழிபடு என்று அசரீரி கேட்டது. அதன்படி காமதேனுவும் தன் மடியிலிருந்த பாலை சொரிந்து தினமும் வழிபாடு செய்தது. ஒரு நாள் இறைவன் திருமுடியில் காமதேனுவின் குளம்பு பட்டுவிடவே லிங்கத்தில் ரத்தம் வந்தது. இதனால் காமதேனு மனம் வருந்தியது. இதனைக்கண்ட இறைவன் காமதேனுவிடம் நீ என்னை வழிபட்ட காரணத்தினால் இந்த உலகம் என்னை பசுபதிநாதர் என்ற பெயரால் அழைக்கும். அத்துடன் நீயும் பிரம்மனைப் போல் படைப்பு தொழில் செய்வாய் என்று வரம் தந்தார். அதன்படி காமதேனுவும் படைப்பு தொழில் செய்ய பிரம்மன் கர்வம் நீங்கினான். இதையடுத்து இறைவன் படைப்புத் தொழிலை பிரம்மனிடம் ஒப்படைத்து விட்டு காமதேனுவை சொர்க்கத்துக்கு அழைத்துக் கொண்டார் என்று இத்தல வரலாறு கூறுகிறது. கி.பி. 14ம் நூற்றாண்டில் கருவூருக்கு வந்த அருணகிரிநாதர் இக்கோவிலில் உள்ள முருகனை பற்றி தன்னுடைய திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது 7 பாடல்கள் உள்ளன. இத்தலத்தில் முருகப்பெருமான் ஆறு திருமுகங்களுடனும், 12 திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் கிழக்கு நோக்கி நினக கோலத்தில் காட்சி தருகிறார். மயில் பின் பக்கன் உள்ளது. பிரம்மா, காமதேனு ஆகியோர் இங்குள்ள சிவலிங்கத்தை வழிபட்டுள்ளனர். சோழர்கள் இருந்து அரசாண்ட ஐந்து தலைநகரங்களுள் இந்நகரமும் ஒன்று. திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர் பாடல்கள் பாடியுள்ளனர்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 210 கொடுமுடி

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 210 வது தேவாரத்தலம் கொடுமுடி. புராணபெயர் திருப்பாண்டிக்கொடுமுடி மூலவர் கொடுமுடிநாதர், மகுடேஸ்வரசுவாமி, மலை கொழுந்திஸ்வரர். குட்டையான சிவலிங்கத்தின் ஆவடையார் சதுர வடிவில் உள்ளது. பாணத்தின் மீது விரல் தடயங்களக் காணலாம். அகத்தியர் இத்தல இறைவனை பூஜை செய்த போது ஏற்பட்ட விரல் தடயங்கள் ஆகும். இங்கு சிவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அம்பாள் வடிவுடைநாயகி, சௌடாம்பிகை, திரிபுர சுந்தரி, மதுரபாஷினி. தீர்த்தம் தேவ தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், காவேரி. தலவிருட்சம் வன்னி. இத்தலத்தில் உள்ள ஆண் மரமாக கருதப்படும் வன்னிமரத்தின் வயதை கணக்கிட முடியவில்லை. மிகவும் பழமையான இந்தமரத்தில் பூ பூக்கும். ஆனால் காய் காய்க்காது. ஒரு பக்கம் முள் இருக்கும். மற்றொரு பக்கம் முள் இல்லை. இந்த மரத்தின் இலையை தண்ணீரில் போட்டால் எவ்வளவு நாளானாலும் தண்ணீர் கெடுவதில்லை. பழநி பங்குனி உத்திர விழாவிற்கு தீர்த்தக்காவடி கொண்டு செல்லும்போது காவிரி தீர்த்தத்தில் இந்த இலைகளை போட்டுதான் பக்தர்கள் பாதயாத்திரையாக கொண்டு செல்கிறார்கள். வடக்கிலிருந்து தெற்காக ஓடிவரும் காவிரி நதி கொடுமுடி சிவஸ்தலத்தில் கிழக்கு நோக்கி திரும்பி ஓடுகிறது. காவிரி நதியின் மேற்குக் கரையில் கொடுமுடிநாதர் கோவில் அமைந்துள்ளது.

கிழக்குப் பார்த்து அமைந்துள்ள இக்கோவில் சுமார் 640 அடி நீளமும், சுமார் 484 அடி அகலமும் உடையதாய் அமைந்திருக்கிறது. இக்கோவிலில் மும்மூர்த்திகளான சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூவருக்கும் தனித்தனி கோபுரஙளும், தனித்தனி சந்நிதிகளும் அமைந்துள்ளன. இக்கோவிலுக்கு மூன்று வாயில்கள் கிழக்குப் பக்கம் அமைந்துள்ளன. நடு கோபுர வாயில் வழியாக உள்ளே சென்றால் விஷ்ணு மற்றும் பிரம்மாவின் சந்நிதிகளுக்குச் செல்லலாம். நடு வாயிலுக்கு வடபுறம் உள்ள கோபுர வாயில் வழியாக உள்ளே சென்றால் மூலவர் கொடுமுடி நாதர் சந்நிதிக்குச் செல்லலாம். நடு வாயிலுக்கு தென்புறம் உள்ள கோபுர வாயில் வழியாக இறைவி வடிவுடை நாயகியின் சந்நிதிக்குச் செல்லலாம். மூலவர் சந்நிதி கோஷ்டங்களில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோரைக் காணலாம். சுவாமி சந்நிதிக்கு வலதுபுறம் அம்பாள் சந்நிதி அமைந்துள்ளது. இதுபோன்று அமைபுள்ள தலங்கள் கல்யாண தலங்கள் என்று போற்றப்படும். அம்பாள் சந்நிதி உட்பிரகாரத்தில் வல்லப கணபதி, சோழீஸ்வரர், விஸ்வேசர், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, சப்தமாதர்கள் ஆகியோரை தரிசிக்கலாம். அம்பாள் சந்நிதியில் சரஸ்வ திக்கும் தனி சந்நிதி உள்ளது.இக்கோவிலில் உமா மகேசுவரர், அகஸ்தீஸ்வரர், கஜலக்ஷ்மி, சுப்பிரமணியர் சந்நிதிகளும் உள்ளன. தென்கிழக்கு மூலையில் சூரியனுக்கும், வடகிழக்கு மூலையில் சந்திரனுக்கும் சந்நிதிகள் இருக்கின்றன. வடதிசையில் பைரவர், சனீஸ்வரர் சந்நிதிகள் உள்ளன. இறைவி வடிவுடை நாயகி சந்நிதியின் பின்புறம் மேற்கில் 2000 ஆண்டுகள் பழமையான வன்னி மரத்தடியில் மூன்று முகம் கொண்ட பிரம்மாவின் சந்நிதி உள்ளது.

ஆதிசேஷனுக்கும் வாயுதேவனுக்கும் தங்களில் யார் பெரியவர் என்பதில் தகராறு ஏற்பட்டது. இந்திரன் விதித்த பேட்டி விதிமுறைகளின்படி ஆதிசேஷன் மேருமலையை தனது ஆயிரம் மகுடங்களால் பற்றிக் கொள்ள வேண்டும் என்றும் வாயுதேவன் அதை மீறி மேருவை வீசித் தள்ள வேண்டும் என்றும் நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி வாயுதேவன தன் பலம் அனைத்தையும் சேர்த்து காற்றடிக்க மேரு மலையின் ஐந்து சிகரங்கள் அங்கிருந்நு பிய்த்துக் கொண்டு தென்திசையின் பல பாகங்களில் வந்து வீழ்ந்தன. ஐந்தும் ஐந்து மணிகளாக மாறி ஒவ்வொரு இடத்தில் விழ ஒவ்வொன்றும் ஒரு தலமானது. சிவப்பு மணி வீழ்ந்த இடம் திருவண்ணாமலையாகவும், மாணிக்கம் மணி வீழ்ந்த இடம் ரத்தினகிரியாகவும் (திருவாட்போக்கி), மரகத மணி வீழ்ந்த இடம் ஈங்கோய் மலையாகவும், நீல மணி வீழ்ந்த இடம் பொதிகை மலையாகவும், வைரம் வீழ்ந்த இடம் கொடுமுடியாகவும் மாறின. மேருவில் இருந்து பிய்ந்து வந்தவற்றில் மற்ற நான்கும் இன்றும் மலைகளாகவே காட்சி தர வைரமடிமுடி மட்டும் சுயம்பு லிங்கமாக காட்சி தருகிறது. மேருவின் மகுடத்தில் தோன்றியவர் என்பதால் மகுடேஸ்வரர் என்றும் தமிழில் கொடுமுடிநாதர் என்றும் இத்தல இறைவன் திருநாமம் கொண்டுள்ளார். இங்கே மகுடேஸ்வரர் மலை கொளுந்தீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இறைவி வடிவுடை நாயகி சந்நிதியின் பின்புறம் மேற்கில் 2000 ஆண்டுகள் பழமையான வன்னி மரத்தடியில் மூன்று முகம் கொண்ட பிரம்மாவின் சந்நிதி உள்ளது.

அகத்தியர், பரத்வாஜர் ஆகிய முனிவர்களுக்கு இங்கு இறைவன் திருமண கோலத்தில் காட்சி தந்துள்ளார். ஆஞ்சநேயர் கோரமான பல்லுடன் இங்கே காட்சி தருகிறார். சஞ்சீவி மலையை கொண்டு வருவதற்காக வடக்கு நோக்கி செல்வது போன்ற தோற்றத்தில் உள்ளார். வாலில்மணி கட்டப்பட்டுள்ளது. பிரம்மாவின் கோவிலுக்கு வடமேற்கில் பெருமாள் கோவில் உள்ளது. இங்குள்ள பெருமாளின் பெயர் பள்ளிகொண்ட பெருமாள் மற்றும் வீரநாரயண பெருமாள். பெருமாள் கோவிலுக்கு வெளியே திருமங்கை நாச்சியாருக்கும் ஹனுமானுக்கும் சந்நிதிகள் இருக்கின்றன. இக்கோவிலில் உள்ள பிரம்மாவும் பெருமாளும் சிவபெருமானை வழிபடுகின்றனர். மலையத்துவச பாண்டியனின் மகனுக்கு பிறவியிலேயே விரல்கள் சரியாக வளராமல் இருந்தன. கொடுமுடிநாதரிடம் வேண்டியபின் இக்குறை தீர்ந்தது. எனவே பாண்டியன் இக்கோவிலுக்கு மூன்று கோபுரங்களையும், மண்டபங்களும் கட்டி, மேலும் பல திருப்பணிகளைச் செய்தான். பாண்டிய மன்னனால் திருப்பணிகள் செய்யப் பெற்றதால் இத்தலம் பாண்டிக்கொடுமுடி ஆயிற்று. திருஞானசம்பந்தர் திருநல்லூர் பெருமணத்தில் சிவபெருமானுடன் ஜோதியில் தன் அடியார்களுடனும் சுற்றத்தாருடனும் கலக்கும் போது நமச்சிவாய பதிகம் பாடுகிறார். திருநாவுக்கரசரோ பல்லவ மன்னன் அவரைக் கல்லுடன் சேர்த்துக் கட்டி கடலினுள் எறியும் போது நமச்சிவாய பதிகம் பாடுகிறார். ஆனால் சுந்தரரோ பாண்டிக்கொடுமுடி வந்து அங்குள்ள இறைவனைக் கண்டு வணங்கி நமச்சிவாய பதிகம் பாடுகிறார். இங்குள்ள கல்வெட்டில் மலைக்கொழுந்தீசர் என்ற பெயருள்ளது. சுந்தரபாண்டியன் கேசரி காலத்திய கல்வெட்டுக்கள் இக்கோயிலில் உள்ளன. அகத்தியர், திருமால், பிரம்ம தேவர், பரத்துவாஜர், மலையத்துவச பாண்டியர் ஆகியோர் வழிபட்டுள்ளனர். சுந்தரர், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் பாடல்கள் பாடியுள்ளனர்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 209 வெஞ்சமாங்கூடலூர்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 209 வது தேவாரத்தலம் வெஞ்சமாங்கூடலூர். மூலவர் விகிர்த நாதேஸ்வரர், கல்யாண விகிர்தேஸ்வரர், இங்கு சிவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். உற்சவர் சோமஸ்கந்தர். அம்பாள் விகிர்தேஸ்வரி, விகிர்தநாயகி, மதுரபாஷிணி, பண்ணேர்மொழியம்மை. தலவிருட்சம் வில்வம். தீர்த்தம் குடகனாறு. இந்த கோவில் கோவில் சுமார் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. கொங்கு நாட்டு திருத்தலங்ளுக்கே உரித்தான கருங்கல் விளக்குத் தூண் இராஜகோபுரத்திற்கு எதிரே காணப்படுகிறது. ஐந்து நிலை கோபுரமும் பெரிய பிரகாரமும் உள்ளது. இராஜகோபுரம் வழியாக உள்ளே நுழைந்தால் சுமார் 17 படிகள் கீழிறங்கித் தான் பிரகாரத்தை அடைய முடியும். படிக்கட்டுகள் இறங்கியதும் நேர் முன்னால் உள்ள நீண்ட முகப்பு மண்டபத்தில் கொடி மரம், பலிபீடம், நந்தி ஆகியவற்றைக் காணலாம். வெளிப் பிரகாரம் சுவாமி சந்நிதி இறைவி சந்நிதி இரண்டையும் உள்ளடக்கி உள்ளது. உட்பிரகாரத்தின் தெற்குச் சுற்றில், முதலில் சைவ நால்வர் பெருமக்கள். தொடர்ந்து அறுபத்துமூவர். இந்த மூர்த்தங்களின் கீழ் அவரவர் நாடு, மரபு, காலம், நட்சத்திரம் ஆகிய விவரங்கள் எழுதப்பட்டுள்ளன. தென்மேற்கு மூலையில் ஸ்தல விநாயகர், தொடர்ந்து பஞ்ச லிங்கங்கள், அதையடுத்து வடமேற்குப் பகுதியில் வள்ளி, தெய்வானை உடனாய முருகப்பெருமான் சந்நிதி அமைந்துள்ளது. மூலஸ்தானத்தில் உள்ள பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கம் 5 அடி உயரமும், அம்பாளின் உருவச் சிலை 2.5 அடி உயரமும் உள்ளது. இறைவன் விகிர்த நாதேஸ்வரர் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார்.

இக்கோவிலின் வெளிச்சுற்றுச் சுவரில் காமதேனு லிங்கத்திற்கு பால் சொரிவது போன்ற சின்னங்கள் நிறைய காணப்படுகின்றன. கோஷ்டமூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, இலிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை உள்ளனர். சிவத்தல யாத்திரை வந்த சுந்தரர் இத்தலத்திற்கு வந்தார். அப்போது அவர் வைத்திருந்த பொன்னும் பொருளும் தீர்ந்து விட்டது. எனவே விகிர்தீஸ்வரரை வணங்கி பொன் வேண்டும் எனக்கேட்டார். சிவன் தன்னிடம் பொன் இல்லை என்றார். உன்னிடம் இல்லாத பொருள் ஏது என்று சொல்லி கட்டாயப்படுத்தி பொன் கேட்டார் சுந்தரர். அப்போதும் சிவன் தன்னிடம் கொடுப்பதற்கு ஒன்றுமில்லை. உனக்கு பொன் தரவேண்டுமானால் எந்த பொருளையாவது அடமானம் வைத்துத்தான் தரவேண்டும் என்றார். சுந்தரரும் விடுவதாக இல்லை. எதையாவது வைத்தாவது எனக்கு பொன் தாருங்கள் என்றார். சுந்தரருக்கு உதவி செய்ய எண்ணிய சிவன் பார்வதி தேவியை மூதாட்டியாக மாற்றி அங்கு வரச்செய்தார். அவளிடம் முருகன் விநாயகர் இருவரையும் கொடுத்துவிட்டு அவர்களுக்கு மாறாக பொன் தரும்படி கேட்டார். அவரும் பொன் தந்தார். அதனை சுந்தரருக்கு கொடுத்தார். நண்பன் உதவி என்று தன்னிடம் வந்தபோது தன் பிள்ளைகளை அடமானம் வைத்து உதவி செய்தார் இத்தலத்து சிவன். இவ்வாறு நட்புக்கு மரியாதை செய்த சிவனாக இவர் இருக்கிறார்.

இந்த கோவில் வெஞ்சமன் எனும் வேட்டுவ மன்னனால் கட்டப்பட்டது. மேலும் இத்தலம் வெஞ்சமன் என்னும் வேட்டுவ மன்னன் ஆண்டதாலும் அமராவதியின் கிளை நதியான சிற்றாறு, அமராவதியுடன் கூடுமிடத்தில் உள்ளதாலும் வெஞ்சமாக்கூடல் என்று பெயர் பெற்றது. சுந்தரர் தனது பதிகத்தில் சிற்றாறு என்று தான் குறிப்பிடுகிறார். சுப்பிரமணியர் வள்ளி தெய்வானையுடன் 6 முகங்களுடன் தனிச்சன்னதியில் இருக்கிறார். இவரை அருணகிரியார் வெஞ்சக்கூடல் பெருமானே என்று பதிகம் பாடியிருக்கிறார். முன்மண்டபத்தில் நடராஜர் அருளுகிறார். பிரகாரத்தில் நால்வர் அறுபத்து மூவர் மற்றும் பஞ்சலிங்க சன்னதியும் இருக்கிறது. இக்கோயில் சுவாமியை வணங்கிவிட்டு வெளியேறும்போது படிகளில் ஏறிச்செல்லும்படியாக பள்ளமாக அமைக்கப்பட்டுள்ளது. வாழ்க்கையில் துன்பப்படுபவர்கள் இங்கு வணங்கிவிட்டு திரும்பும்போதே வாழ்வில் ஏற்றம் உண்டாகிவிடும் என்பதற்காக இந்த அமைப்புடன் உருவாக்கி இருக்கிறார்கள். மணிமுத்தாறு, குடகனாறு ஆகிய இரு ஆறுகள் சேரும் ஊர் என்பதால் இவ்வூருக்கு கூடல் ஊர் என்று பெயரும் உண்டு.

தேவர்களின் தலைவனான இந்திரன் கவுதம மகரிஷியின் மனைவி அகலிகை மீது ஆசை கொண்டான். அவளை அடைவதற்காக சமயம் பார்த்து காத்திருந்த அவன் ஒருநாள் விடியும் முன்பே கவுதமர் ஆசிரமத்திற்கு சென்றான். சேவல் வடிவம் எடுத்து கூவினான். அதைக்கேட்ட கவுதமர் விடிந்து விட்டது என எண்ணி ஆற்றிற்கு நீராடச் சென்றுவிட்டார். அப்போது இந்திரன் கவுதமரின் வடிவம் எடுத்து ஆசிரமத்திற்குள் புகுந்தான். அவனை தன் கணவர் என்றெண்ணிய அகலிகை பணிவிடைகள் செய்தாள். இதனிடையே ஆற்றிற்கு சென்ற கவுதமர் பொழுது சரியாக விடியாமல் இருந்ததைக் கண்டார். ஏதோ சூழ்ச்சி நடந்திருப்பதை உணர்ந்த அவர் வீட்டிற்கு திரும்பினார். கவுதமரைக் கண்ட இந்திரன் பூனை வடிவம் எடுத்து தப்ப முயன்றான். நடந்த நிகழ்ச்சிகளை ஞானதிருஷ்டியில் அறிந்த கவுதமர் அவனது உடல் முழுதும் கண்ணாக மாறும்படி சபித்துவிட்டார். சாபம் பெற்ற இந்திரன் பூலோகத்தில் பல சிவதலங்களுக்கும் சென்று சிவனை வணங்கி தான் செய்த பாவத்திற்கு விமோசனம் தேடினான். இத்தலத்திற்கு வந்த இந்திரன் சிவனை வணங்கி தவம் செய்தான். சிவன் அவனுக்கு காட்சி தந்து தகுந்த காலத்தில் சாபம் நீங்கப்பெறும் என்றார். அவன் தனக்கு காட்சி தந்து அருளியது போலவே இங்கிருந்து அனைவருக்கும் அருளவேண்டுமென சிவனிடம் வேண்டினான். சிவனும் சுயம்புலிங்கமாக எழுந்தருளினார். ஒரு சமயம் வேடசந்தூர் பக்கத்திலுள்ள அணைக்கட்டு உடைந்து குடகனாற்றில் வெள்ளப்பெருக்கெடுத்து ஊரும் பல நூற்றாண்டுகள் பழமையான இக்கோவிலும் அழிந்தன. இக்கோயில் கருங்கற்கள் வெள்ளத்தில் 2 கி.மீ. தூரம் அடித்துச் செல்லப்பட்டன என்பதிலிருந்தே வெள்ளப் பெருக்கின் நிலைமையை உணரலாம். அதன் பின் 1982-ம் ஆண்டு ஈரோடு அருள் நெறித் திருக்கூட்டத்தார் இக்கோயில் திருப்பணியைத் தொடங்கி பெருமுயற்சி செய்து பல லட்சங்கள் திரட்டி திருக்கோயிலைப் புதியதாக எடுப்பித்து 26-2-1986 அன்று மகா கும்பாபிஷேகத்தை நடத்தி முடித்துள்ளனர். சுந்தரர், அருணகிரிநாதர் பாடல்கள் பாடியுள்ளனர்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 208 திருச்செங்கோடு

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 208 வது தேவாரத்தலம் திருச்செங்கோடு. புராணபெயர் திருக்கொடிமாடச் செங்குன்றூர். மூலவர் அர்த்தநாரீஸ்வரர் மாதொருபாகர். சுமார் 6 அடி உயரம் உள்ள உளி படாத சுயம்புத் திருமேனியாக பாதி ஆணாகவும் பாதி பெண்ணாகவும் மேற்கு நோக்கி காட்சி அளிக்கிறார். தலையில் ஜடாமகுடம் தரித்து பூர்ண சந்திரன் சூடி கழுத்தில் ருத்ராட்சம் தாலி அணிந்து கையில் தண்டாயுதம் வைத்திருக்கிறார். அம்பிகையின் அம்சமாக உள்ள இடது பாக காலில் கொலுசு உள்ளது. சிவன் சக்தி சேர்ந்த வடிவம் என்பதால் வலதுபுறம் வேட்டியும் இடப்புறம் சேலையும் அணிவிப்பர். அம்பாள் பாகம்பிரியாள். தலவிருட்சம் இலுப்பை. தீர்த்தம் தேவதீர்த்தம். சுவாமியின் பாதத்தின் கீழ் தேவதீர்த்தம் உள்ளது. மூலவரின் காலடியில் இருக்கும் தேவதீர்த்தம் எக்காலத்திலும் வற்றாமல் சுரந்து கொண்டே இருக்கும். மூலவரை தரிசிக்க வருபவர்களுக்கு இந்த தீர்த்தம் வழங்கப்படுகிறது. தேவாரப் பதிகங்களில் கொடிமாடச் செங்குன்றூர் என்று பாடப்பெற்ற சிவஸ்தலம் தற்போது திருச்செங்கொடு என்று கூறப்படுகிறது.

சிவனும் சக்தியும் இணைந்த அர்த்தநாரீஸ்வரர் கோயில்கள் திருச்செங்கோடு மற்றும் வாசுதேவநல்லூர் ஆகிய இடங்களில் உள்ளன. இந்த சிவஸ்தலத்தில் உள்ள கோவில் மேற்கு நோக்கி ஒரு சிறிய குன்றின் மீது அமைந்துள்ளது. இந்த மலை செந்நிறமாக இருப்பதால் செங்கோடு என்ற பெயர் ஏற்பட்டது. இத்தலம் 1901 அடி உயர மலையின் மீது உள்ளது. இந்த மலையில் ஏற 1200 படிகள் உள்ளன. மேலே செல்லும் வழியில் பல மண்டபங்கள் உள்ளன. குன்றின் உச்சிக்குக் சென்றவுடன் வடதிசையில் 5 நிலை ராஜ கோபுரம் உள்ளது. கோவிலின் மதில் சுவர் கிழக்கு மேற்காக 260 அடி நீளமும், வடக்கு தெற்காக 170 அடி நீளமும் கொண்டதாக அமைந்துள்ளது. மேற்கு கோபுரம் 3 நிலைகளுடன் காட்சி அளிக்கிறது. வடக்கு கோபுர வாயில் வழியாக நுழைந்து 20 படிகள் கீழிறங்கி வெளிப் பிரகாரத்தை அடையலாம். இத்தலத்தில் இறைவி தவம் செய்து இறைவனது திருமேனியில் ஒரு பகுதியைத் தம்முடையதாகப் பெற்றார் என்று புராணம் கூறுகின்றது.

திருச்செங்கொடு மலை அடிவாரத்தில் கைலாசநாதர் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் வடக்குப் பிரகாரத்திலுள்ள கிழக்கு நோக்கி உள்ள செங்கோட்டு வேலவருக்கு தினமும் உச்சிக்காலத்தில் மட்டும் அபிஷேகத்துடன் முதல் பூஜை நடக்கிறது. அருணகிரிநாதர் தனது திருப்புகழில் இத்தலத்து முருகனைப் பற்றி பாடியுள்ளார். சிவனின் இடப்பாகம் பெற அம்பாள் பூஜித்த லிங்கம் மூலஸ்தானத்திற்குள் உள்ளது. காலை, மதியம், மாலையில் நடக்கும் பூஜையின் போது மட்டும் இந்த லிங்கத்தை அர்த்தநாரீஸ்வரர் அருகில் வைத்து பூஜிப்பர். இந்த பூஜைகளை அம்பிகையே செய்கிறாள். உச்சிக்காலத்தில் இந்த லிங்கத்திற்கு அபிஷேகம் நடக்கும். ஆதிகேசவப் பெருமாள் என்ற பெயரில் மஹாவிஷ்னு தனிக்கோயிலில் காட்சி தருகிறார். வைகாசி பிரம்மோற்ஸவத்தின் போது இவருக்கு தனியே கொடியேற்றி 10ம் நாளில் திருக்கல்யாணமும், பின் தேரோட்டமும் நடக்கும். சிவராத்திரியன்று இரவில் இவருக்கு 4 கால பூஜை நடக்கும். இம்மலையை பவுர்ணமி நாளில் வலம் வந்தால் கயிலாயத்தையும் வைகுண்டத்தையும் வலம் வந்த பலன் கிடைக்கும் என தலவரலாறு கூறுகின்றது. 60 அடி நீளத்தில் ஐந்து தலை நாகத்தின் சிலை கோயில் படிக்கட்டு அருகில் உள்ளது. நாகத்தின் அருகே அமைந்துள்ள 60 படிக்கட்டுக்களை சத்தியப்படிக்கட்டு என்பர்.

இந்த மலை உருவானதற்கு புராணக்கதை உண்டு. ஆதிசேஷனுக்கும், வாயு பகவானுக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி ஏற்பட்டது. இதற்காக ஒரு பந்தயம் கட்டப்பட்டது. ஆதிசேஷன் மேரு மலையை அழுத்தி பிடித்து கொள்ள வேண்டும். வாயு தன் பலத்தால் மலையை விடுவிக்க வேண்டும் என்பதே பந்தயம். இதன்படி வாயு வேகமாக வீச மலையின் முகட்டுப்பகுதிகள் பறந்து சென்று பூமியின் பல இடங்களிலும் விழுந்தன. அதில் ஒன்றே திருச்செங்கோட்டு மலை. ஆதிசேஷ பாம்பு மலையைப் பிடித்த போது ஏற்பட்ட காயத்தில் இருந்து ரத்தம் கொட்டி மலை செந்நிறமானதாலும் இப்பெயர் வந்ததாகவும் ஓர் கருத்து உண்டு. இம்மலைக்கு நாககிரி, வாயுமலை என்றும் பெயர்கள் உண்டு. சிவன் கோயிலில் லிங்கம் இருப்பது மரபு. இங்கே மலையே லிங்கமாக கருதப்படுவதால் மலைக்கு எதிரே பெரிய நந்தி உள்ளது. இம்மலையில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் ஆதிகேசவப்பெருமாள், செங்கோட்டு வேலவர் அருளுகின்றனர். பிருங்கி முனிவர் கயிலாயம் வரும் வேளைகளில் சிவபெருமானை மட்டும் வலம் வந்து வழிபடுவார். அவரது அருகில் இருக்கும் உமாதேவியைக் கண்டு கொள்ளமாட்டார். இருவரும் ஒன்றாக அமர்ந்திருக்கும் நிலையில் சிவனை மட்டும் வணங்கும் வகையில் வண்டு வடிவம் எடுத்து சுற்றி வந்து வழிபடுவார். இதனால் கோபமடைந்த பார்வதி முனிவரே சக்தியாகிய என்னை அவமதித்ததால் நீர் சக்தி இழந்து போவீர் என சாபமிட்டாள். இதையறிந்த சிவன் நானும் சக்தியும் ஒன்றுதான். சக்தியில்லையேல் சிவமில்லை எனக்கூறி உமையவளுக்கு தன் இடப்பாகத்தில் இடம் கொடுத்தார். இருவரும் இணைந்த வடிவம் அர்த்தநாரீஸ்வரர் எனப்பட்டது.

அர்த்தநாரீ என்றால் இணைந்த வடிவம் எனப் பொருள். இந்த வடிவத்துடன் அவர் பூலோகத்திற்கும் வந்து சில தலங்களில் குடிகொண்டார். அதில் ஒன்றே திருச்செங்கோடு. செங்கோட்டு வேலவர் சந்நிதி முன்னுள்ள மண்டபத்தில் வீரபத்திரர், மன்மதன், ரதி, காளி முதலிய ஒற்றைக் கல்லினாலான சிற்பங்கள் உள்ளன. இம்மண்டபத்தின் கூரைப் பகுதியில் கல்லினாலான கவிழ்ந்த தாமரை மலர், கிளிகள், கல்சங்கிலிகள் ஆகிய சிற்ப விநோதங்கள் உள்ளன. நாகேஸ்வரரின் கருவறை, சிற்ப வேலைப்பாடுமிக்கது. கருவறை முன்மண்டபத்தில் குதிரை அல்லது யாளி மீதுள்ள வீரர்களின் கற்றூண் சிற்பங்கள் உள்ளன. ஆதிசேஷன், மஹாவிஷ்னு ஆகியோர் இங்குள்ள சிவபெருமானை வழிபட்டுள்ளனர். திருஞானசம்பந்தர் கொங்கு நாட்டுத் தல யாத்திரையில் முதலில் இக்கோவிலை வணங்கி பின்பு சில தலங்களுக்குச் சென்றுவிட்டு திரும்பவும் இங்கு வந்த போது அவருடன் வந்த அடியார்களை நளிர்சுரம் பிடித்தது. அவ்வினைக் கிவ்வினை என்னும் பதிகம் பாடி தீவினைவந்தெம்மைத் தீண்டப்பெறா திருநீலகண்டம் என ஆணையிட்டு அந்நாடு முழுவதும் பிணிதீர்த்தார் என்பது பெரியபுராண வரலாறு. இத்தலம் பற்றிய குறிப்புக்கள் சிலப்பதிகாரம், தேவாரம், கந்தர் அநுபூதி, கந்தர் அலங்காரம் ஆகிய பாடல்களில் உள்ளன. வீரகவிராஜபண்டிதரால் பாடப்பட்ட தலபுராணம் உள்ளது. இத்தலத்தில் முதலாம் இராசராசன், சுந்தரபாண்டியத் தேவர், மைசூர்கிருஷ்ணராஜ உடையார் காலத்திய கல்வெட்டுக்கள் உள்ளன. இங்குள்ள ஆதிகேசவ பெருமாளை நம்மாழ்வார் மங்களா சாசனம் செய்துள்ளார். திருஞானசம்பந்தர் பாடல்கள் பாடியுள்ளார்.

மகாபாரதம் 2. சபா பருவம் பகுதி -17

சகுனி அவர்களே காலடியில் சரணமாய் வந்தவர்களுக்கு அனுகூலம் செய்ய வேண்டியது கடமையாகிரது. என்னால் முடிந்த வரை நிச்சயம் அதைச் செய்வேன். தவிர காக்கும் தெய்வங்களை வேண்டி வேண்டியதைச் செய்வேன். இது நிச்சயம். இப்போது பகடை எண்ணிக்கையை தாங்கள் கேட்கிறீர்களா அல்லது நான் கேட்கட்டுமா என்று கூறி இடது பக்கமாக காயை சுற்றி வருகிறாள். பலமுறை இடமாக வந்த திரௌபதி கிருஷ்ணரை நினைத்து பல வருடங்களாக விமோசனம் வேண்டி நிற்பவர்கள் சார்பில் கேட்கிறேன் விமோசனம் தரும் புண்ணிய பலத்தை எனக்குத் தாருங்கள் எனக் கூறிக் கொண்டே தன் இடது காலை எடுத்து பகடைகள் மேல் கூப்பிய கரங்களுடன் வைக்கிறாள். அந்த சில நொடிகளில் அவையில் ஒரே வெப்பம் எதோ எரிவது போல் அனைவரும் உணர்கின்றனர். திரௌபதி தனது காலை பகடை காய்களை விட்டு எடுக்கிறாள். அவை சற்று வெளுத்து வெண்சாம்பல் நிறத்தில் தெரிகின்றன. பகடையில் இருக்கும் சக்தி கிருஷ்ணன் அருளாள் எரிந்துவிட்டது.

மெதுவாக இடது கால் விரல்களால் எடுத்து வலது பாதத்தின் மேல் வைத்து சகுனியைப் பார்த்து என் வெற்றிக்கான எண்ணிக்கை ஐந்து. தங்கள் எண்ணிக்கை என்ன? எனக் கேட்கிறாள். என் எண்ணிக்கை ஒன்று என்று சகுனி கூறுகின்றான். நல்லது நான் முதல் ஆட்டத்தில் ஒன்றைக் கேட்டேன். யுதிஷ்டிரர் ஒருவரை அடைந்தேன். இந்த முறை நால்வருக்காக நான்கு என்று கேட்கலாம். ஆனால் என் கணவர்கள் ஐவரும் சமம் என்று எல்லோரும் அறிந்து கொள்வதற்காக ஐந்து என்று கேட்கிறேன். திரௌபதி காயை முன்னும் பின்னும் ஆட்டி பகடைக் காயை சொக்கட்டான் விரிப்பின் நடுவில் போடுகிறாள்.

தனது முன்னோர்களது எலும்பில் செய்த பகடையில் இருக்கும் சக்தியை திரௌபதி எரித்து விட்டாள். இந்த கலக்கத்தில் இருந்த சகுனி சற்றும் தாமதியாது பகடை ஐந்து துரியோதனா என்று கூறி இரு கைகளாலும் நான்கு முனைகளையும் பற்றி காயை மூடி எடுத்துக் கொண்டு சபையை விட்டு வெளியேறி பகடையில் சக்தியாய் இருந்த தன் முன்னோர்கள் அஸ்தியை கரைக்க நதிக்கரைக்கு சென்று விட்டான். சபையில் யாருக்கும் ஏதும் புரியவில்லை. விதுரர் மட்டும் நடந்ததை எதிர்பார்த்தவர் போல் உடன் எழுந்து மன்னர் திருதராஷ்டிரரிடம் நடந்ததை விளக்கி நால்வரும் சுதந்திரமானவர்கள் என்று அறிவித்து பாண்டவர் நால்வரையும் அவர்கள் ஆசனத்திற்கு அழைத்து வந்து அமர வைக்கிறார்.

திரௌபதி அனைவரையும் பார்த்து சபையோர்களே கேளுங்கள் இந்த துச்சாதனன் என் கூந்தலை பிடித்து சற்றும் யோசியாது இழுத்தானோ அந்த கைகள் சகதியில் இற்று விழ நான் பார்க்க வேண்டும். எந்த துரியோதனன் தன் துடைகளை தானே தட்டிக் கொண்டு அரச அவையில் பேசக்கூடாத வார்த்தைகளை இச்சபையில் பேசினானோ அந்த துடைகளை முறித்து கூழாக்கி அதை என் விரிந்த கூந்தலுக்கு நறுமண சாந்தாகப் பூசவேண்டும். இது திரோபதியின் சபதம் என்றாள்.

அமர்நாத் குகைகோவில்

அமர்நாத் குகைக்கோவில் சுமார் 5000 ஆண்டுகளுக்கும் மேல் பழமைமிக்க புனிததலம். இந்தியாவின் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஸ்ரீநகரில் இருந்து சுமார் 141 கிலோமீட்டர் தொலைவில் கடல் மட்டத்தில் இருந்து தோராயமாக 13 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்திருக்கிறது. புராண இதிகாசங்களின் படி இங்குதான் உயிர்களின் மூல ஆதாரமான சிவன் பார்வதிக்கு வாழ்வியலின் ரகசியங்கள் பற்றி போதித்திருக்கின்றார். சிவ வழிபாட்டு தலங்களில் முதன்மையானதாக கருதப்படும் இங்கு சுமார் 5000 ஆண்டுகளுக்கும் முன்பே பக்தர்கள் யாத்திரையாகவே வந்து வழிபட்டு சென்றிருக்கிறார்கள் என்று இதிகாசங்களும் புராணங்களும் குறிப்பிடுகின்றன.

சுமார் 150 அடி உயரம் மற்றும் அகலம் கொண்ட அமர்நாத் குகைக்குள் மலையின் மேல் பகுதியில் இருந்து வரும் தண்ணீர் குகையின் பின்புறம் உள்ள பாறையின் நடுவில் கொட்டி அப்படியே உறைந்து பனிக்கட்டியாக மாறி சிவலிங்கமாக உருப்பெருகிறது. பனிமலை சூழ்ந்த அமர்நாத்தில் எந்த விலங்கினங்களையும் பறவைகளையும் காண முடியாது. காரணம் அங்கே எந்த உயிரினமும் வாழ முடியாது. உயிர்கள் வாழ தகுதியற்ற சூழல் நிலவும் அமர்நாத் குகைக் கோவிலில் இன்று வரை ஒரு ஜோடி மலை புறாக்கள் மட்டும் எப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அதிசய பனிலிங்கத்தை தரிசனம் செய்வதோடு அந்தக் குகையில் வசிக்கும் இந்த ஜோடி புறாக்களைப் தரிசித்தால் மட்டுமே அமர்நாத் யாத்திரை நிறைவு பெறும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். இறைவனும் இறைவியுமே புறாக்கள் வடிவில் காட்சி தருகிறார்கள் என்பது பக்தர்களின் அசையாத நம்பிக்கை.

மகாபாரதம் 2. சபா பருவம் பகுதி -16

திரௌபதி யுதிஷ்டிரனை பார்த்து நான் இப்போது தங்களில் பாதி. சுதந்திர புருஷனாக தாங்கள் பக்கத்தில் இருக்கும் போது என்னால் என்னையே பணயமாய் நினைத்துக் கூட பார்க்க முடியாது. அதே போல் உங்களையும் பணயமாய் வைக்க முடியாது. இப்போது நான் இருமுறை ஆடுவேன் என்ற சொல்லிய படி இரண்டாம் ஆட்டம் ஆட வழி கேட்டு தங்கள் முன் நிற்கிறேன். தர்மத்தை உணர்ந்த தாங்கள் எனக்கு இரண்டாம் முறை ஆட அனுமதியையும் பணயம் வைப்பதற்கு வழியையும் காட்டுங்கள் என்றாள். அதற்கு யுதிஷ்டிரர் திரௌபதி உன்னை நன்கு உணர்வேன். நாம் இருவரும் பணயமாய் இரண்டாம் ஆட்டத்திற்கு உட்படுவதை தவிர எனக்கு வழி ஏதும் தெரியவில்லை. சூதில் ஒன்றுக்கு இரண்டாய் வெற்றி பெருவாய் என் ஆசிகள் என்றான்.

மன்னரே இரண்டாம் முறை ஆடுவேன் என்று கூறி தர்ம சங்கடத்தில் இருந்த எனக்கு யுதிஷ்டிரர் அனுமதி கொடுத்து பணயத்திற்கு தன்னையும் என்னையும் காட்டி விட்டார். அவர் சொன்ன வார்த்தைப்படி ஒன்றுக்கு இரண்டு என்றபடி எங்கள் இருவரையும் பணயமாய் வைத்து மற்ற நால்வரையும் மீட்க இரண்டாம் ஆட்டத்திற்கு நான் தயார் என்றாள். துரியோதனனுக்கு தான் நினைத்தபடி பாண்டவர் மீதி நால்வரை மட்டும் தான் இவள் கேட்கிறாள். இந்த முறை மாமா தோற்றாலும் நமக்கு வெற்றிதான். நாடு முழுவதும் நமக்குத்தான் என்று மனம் குதூகலித்தது.

சகுனி மனத்தில் கலக்கமுடன் இருக்கின்றான். இப்போது எனது இடது மடியில் இருக்கும் இன்னொரு பகடைக்காயை முன்பு மாண்ட என் முன்னோர்கள் எலும்பில் செய்து அதற்கு சக்தியூட்டி என் எண்ணப்படி எண்கள் விழும்படி செய்திருக்கிறேன். இதை எடுத்து ஆடலாம். ஆனால் திரௌபதி அதோ அனாதையாய் கிடக்கும் அந்த கட்டொழிந்த செந்நிற காய்களை வைத்து மறுமுறையும் ஆடுவேன் என்று சொல்லிவிட்டால் நான் ஒன்றும் செய்ய முடியாது. இதற்கு என்ன வழி என்று சகுனி யோசிக்கின்றான்.

சகுனி அவர்களே இரண்டாவது ஆட்டத்திற்கு நான் தயாராகி விட்டேன். பகடை ஆட்டத்தில் தங்களின் முதல் அஸ்திரம் தோற்றுவிட்டது. இந்த இரண்டாம் ஆட்டத்திற்கு இரண்டாம் அஸ்திரம் இருந்தால் அதை எடுத்து தாங்கள் பிரயோகிக்கலாம். அது மற்றொரு செந்நிற காயானாலும் சரி அல்லது தந்தம் போன்ற வெண்ணிற காயானாலும் சரி தங்கள் விருப்பம் என்று கூறினாள். பகடை ஆட வந்த சகுனி ஆடிப்போய் விட்டான். இவள் யுத்தத்தில் எதிர்வரும் அஸ்திரத்தைப் பார்த்து அதை முறியடிக்கும் அஸ்திரத்தைப் பிரயோகிக்கும் வீரனைக் காட்டிலும் அடுத்த அஸ்திரமான உன் வெள்ளைக்காயை எடு என சூளுரைக்கிறாள். இதையும் இவள் வென்று விடுவாளா? எப்படியோ அடுத்த அஸ்திரத்தை எடு என்று கூறி இடது மடியில் உள்ள காய்களை எடுத்து விட சம்மதம் கொடுத்து விட்டாள். சகுனி உடனேயே தன் இடது மடியில் இருந்த வெள்ளைப் பகடைக் காய்களை எடுத்து வேகமாய் வந்து திரௌபதியின் காலடியில் வைக்கிறான்.