மகாபாரதம் 2. சபா பருவம் பகுதி -15

திரௌபதி சகுனியை பார்த்து தாங்கள் அங்கு அமர்ந்தபடியே பேசலாம். பகடை காயை நான் உருட்டுவதால் தாங்கள் முதல் எண்ணிக்கையை கூறுங்கள். எனது வெற்றிக்கான எண்ணிக்கையை அடுத்துக் கூறுகிறேன் என்றாள். எனது எண்ணிக்கை ஐந்து என்றான் சகுனி. திரௌபதி கிருஷ்ணரை சரணடைந்தாள். தான் வெற்றி பெற வேண்டும் என்று வேண்டி எனது எண்ணிக்கை ஒன்று இதில் நான் வெற்றி பெற்றால் இதற்கு நான் விரும்பி கேட்பது ஒருவரை மட்டுமே என்றாள். பாண்டவர் ஐவரையும் கேட்பாள் என்று நினைத்த பலர் மனத்திலும் யார் ஒருவரை இவள் கேட்கப் போகிறாள் ஆர்வத்தில் இருந்தார்கள். கையிரண்டையும் கூப்பி இதுவரை வலது புறங்காலில் ஆட்டிக்கொண்டிருந்த பகடைக்காய்களை தனக்கும் யுதிஷ்டிரருக்கும் இடையே போடுகிறாள். பகடை ஒன்று. பக்கத்தில் இருந்த விகர்ணன் ஆவலாய்ப் பார்த்து பகடை ஒன்று. என சந்தோஷ மிகுதியால் கூறுகிறான்.

துரியோதனன் முதல் ஆட்டத்தில் தாம் தோல்வி அடைந்து விட்டோம். அடுத்த ஆட்டத்தில் மற்ற நால்வரில் ஒருவரையோ இல்லை நால்வரையுமே கேட்டு இவள் வெற்றி கொண்டாலும் பாதகமில்லை. எப்படியும் இந்திரபிரஸ்தம் மற்றும் அவர்களுடைய செல்வம் அனைத்தும் நம்முடையது தான். இவளை அவையில் அவமானப்படுத்த வேண்டும் என்று நினைத்தேன். நினைத்தது அனைத்தும் நடந்து விட்டது என நினைத்து அடுத்த ஆட்டத்தில் மற்ற நால்வரையும் சந்தோஷமாய் கொடுக்க தயாராகி விட்டான் துரியோதனன். கௌரவர்களின் அடிமையாய் இருந்த யுதிஷ்டிரர் ஆசனத்தில் அமர்ந்ததும் திரௌபதி அவரை வணங்குகிறாள்.

குந்தி புத்திரரே என்னை முதல் ஆட்டத்திற்கு பணயமாய் வைத்தேன். பகடைக் காயை மன்னர் காலடியிலிருந்து எடுத்து வந்து தாங்கள் என் காலில் காயை வைத்த போது பலரும் தங்களுக்கு நான் செய்யும் அவமரியாதை என்றே நினைத்திருக்கக் கூடும். அந்த நிலையில் வேறு வழி ஏதும் தெரியவில்லை. பகடை ஆட தாங்கள் சம்மதமும் வெற்றி பெற ஆசியும் வேண்டும். தாங்கள் பகடையை கொண்டு வந்து கொடுத்ததில் சம்மதமாய் எடுத்துக்கொண்டேன். மாமா சகுனியின் ஆயுதமான பகடைக்காயை கைகளால் தொடுவதில்லை என சத்தியம் செய்ததால் காலால் வேகமாய் உதைத்தேன். அவமரியாதை செய்யும் எண்ணம் எனக்கு இல்லை. மாமா சகுனிக்குத் தெரியும் அவர் ஆயுதம் எவ்வளவு சக்தி வாய்ந்ததென்று. ஆடுவதற்கு முன்பு அதன் வீர்யத்தைக் குறைக்க அது ஒன்று தான் வழி. அனைத்தும் எதற்காக செய்தேன் என்று அப்போது தங்களிடம் எடுத்துச் சொல்ல வழியில்லை. மோட்சத்திற்கு வழி என்று நான் சொன்ன போதே இங்கு மரணம் நிகழ்ந்து விட்டது. அதை மாமா சகுனி மட்டும்தான் அறிவார். பின் அஸ்தி கரைப்பது தங்கள் கையால் நடக்க வேண்டும் என நான் விரும்பியபடி காய்களை தாங்கள் ஏந்தி வந்தீர்கள். கண்ணில் வழியும் கண்ணீரை கங்கையாக பாவித்து தங்கள் கையில் தெளித்து அதையும் தாங்களே செய்து முடிக்கும்படி செய்தேன். இது மாமா சகுனிக்கு முழுவதுமாய் புரிந்திருக்கும். எல்லோருக்கும் புரிய வேண்டும் என்ற அவசியமில்லை.

மகாபாரதம் 2. சபா பருவம் பகுதி -14

காந்தார தேசத்து மன்னர் சகுனியே ஆட்டத்தை ஆரம்பிக்கலாமா என்று கேட்டாள் திரௌபதி. சகுனி ஆசனத்தை விட்டு எழ ஆரம்பிக்கிறான். துரியோதனன் மாமா சற்று அமருங்கள். இவள் காயை எட்டி உதைத்தாள். ஏதோ கேட்டாள். ஆமாம் என்று கூறி அதற்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டீர்கள். தற்போது காயை எடுத்துவந்து அவள் காலடியில் வைக்கப் போகிறீர்களா? கூடாது. இந்த ஐந்து அடிமைகளில் ஒருவர் அதைச் செய்யட்டும் என்றான். திருதராஷ்டிரன் யுதிஷ்டிராரை பார்த்து காய்களை நீயே எடுத்துக் கொடுக்கலாமே என்றார்.

யுதிஷ்டிரர் மௌனமாய் நடந்து வந்து மன்னர் காலடியில் கிடக்கும் பகடைக்காய்களை இரு கைகளாலும் எடுத்து திரௌபதி முன்னால் காய்களை கையில் ஏந்தி நிற்கிறார். கண்களில் ஆறாய் பெருகும் கண்ணீரால் யுதிஷ்டிரர் கைகளில் உள்ள காய்கள் மீதும் அவர் கால்களிலும் இரு கைகளாலும் ஏந்தி தெளிக்கிறாள் திரௌபதி. தன் வலது காலை அவள் ஒரு அடி முன்னே எடுத்து வைக்க யுதிஷ்டிரரும் காலை மண்டியிட்டு பகடை காய்களை அவள் வலது கால் மேல் வைக்கிறார். யுதிஷ்டிரர் ஓரடி பின்னே நகர்ந்து நிற்க திரௌபதியும் தன் வலது காலை சற்று மேலே தூக்கி முன்னும் பின்னுமாக ஆட்டி காய்களை கைகளினால் உருட்டுவது போல உருட்ட ஆரம்பிக்கிறாள். சபையில் உள்ளவர்கள் யாவரும் என்ன நடக்கப் போகிறது என்று புரியாமல் இருக்கிறார்கள். திரௌபதி யுதிஷ்டிரரை அவமானப்படுத்துவது போல் அனைவருக்கும் தெரிந்தது.

சகுனி யோசித்தான். முதலில் காலால் ஆடுவேன் என்றாள். துரியோதனனும் காலென்ன கையென்ன என்று கூறிவிட்டான். தவிர காயை அவள் வைத்த பகடை காய்களை காலால் எத்தி அரசர் காலடியில் விழச் செய்து பூச்சியை இறக்க செய்து விட்டாள். என்னிடம் கேள்வி கேட்டு என்னையும் தலை குனிய செய்துவிட்டாள். இவள் காலால் எத்தியதை கர்ணனை தவிர யாரும் ஆட்சேபிக்கவில்லை. கர்ணனின் கேள்விக்கு அங்க தேசத்து முதலடிமையே அமரும் என்று கூறி அதையும் முடித்துவிட்டாள். இவள் புத்திசாலித்தனத்திற்கு முன் ஏதும் செய்ய முடியாது போல் தோன்றுகிறதே என்று எண்ணிக்கொண்டிருந்தான்.

காயை மன்னர் காலடியிலிருந்து எடுத்து வரும் சாக்கில் சிறுவண்டு உயிருடன் இருக்கிறதா அல்லது இறந்து விட்டதா? இறக்காமல் இருந்தால் வண்டின் துணையோடு ஆட்டத்தை வெல்லலாம் என்று எண்ணினால் இதையும் துரியோதனன் இடத்தை விட்டு நகராதே இன்று கூறிக் கெடுத்தான். வண்டு பிழைத்திருக்க வழியில்லை. திடீரென இவள் உதைத்ததால் அவை இருக்கும் நிலையில் இறந்து போயிருக்கும். இவள் ஒரு நொடி காயை உருட்டுவதை நிறுத்தினாலும் ஏதாவது சூசகம் கிடைக்கும். ஏதாவது பேச்சுக் கொடுத்து இவள் காயை உருட்டுவதை நிறுத்த வைத்தால் காயைப் பார்த்து நிச்சயமான ஒரு முடிவிற்கு வரலாம் இவ்வாறு சிந்தித்து சகுனி மறுபடியும் எழுந்தான்.
துரியோதனன் மாமா ஆசனத்தில் அமருங்கள். இவள் முதல் ஆட்டத்தில் இவள் ஜெயித்தாலும் நமக்கு இரண்டாவது ஆட்டம் இருக்கிறது. அமர்ந்தபடியே இவளுக்கு பதில் கூறுங்கள் என்றான்.

இறைவன் தரிசனம்

கடவுள் தரிசனம் வேண்டி பலகாலம் தவம் இருந்த அந்த நாட்டின் மன்னனுக்கு அன்று கடவுளின் தரிசனம் கிடைத்தது. பெரும் மகிழ்ச்சி அடைந்த மன்னன் கடவுளிடம் ஒரு வரம் கேட்டான். கடவுளும் என்ன வரம் வேண்டுமோ கேள் என்றார். மன்னனும் எப்படி நீங்கள் எனக்கு தரிசனம் தந்தீர்களோ அதே போல ராணியாருக்கும் மந்திரி மற்றும் அரச குடும்பத்தினருக்கும் நாட்டின் பிரஜைகள் அனைவருக்கும் நீங்கள் காட்சி தர வேண்டும் என்று ஆவலான வரத்தை கேட்டான். இது அவரவர்களின் கர்ம வினையைப் பொறுத்தே அமையும் இருந்தாலும் மன்னன் வரத்தை கேட்டு விட்டதால் கடவுளும் அதற்கு சம்மதித்தார்.

அதோ தெரிகின்றதே ஒரு உயர்ந்த மலை அங்கே அனைவரையும் அழைத்துக் கொண்டு வா காட்சி தருகின்றேன் என்று சொல்லி மறைந்தார். மன்னனும் நாட்டில் அனைவருக்கும் தண்டோரா போட்டு அரச குடும்பத்தினருடனும் இறைவனை காண வாருங்கள் என்று மக்களுடனும் மலையை நோக்கி புறப்பட்டான். அனைவரும் கடவுளை காணும் ஆவலில் மலையேற துவங்கினர். சிறிது உயரம் சென்றவுடன் அங்கே செம்பு பாறைகள் தென்பட்டன. உடனே மக்களில் நிறைய பேர் செம்பை மடியில் கட்டிக் கொண்டு சிலர் செம்பு பாறைகளை உடைத்து தலையில் வைத்துக் கொள்ளவும் ஆரம்பித்தனர். மன்னன் அனைவருக்கும் கடவுளின் காட்சி கிடைக்க போகின்றது இதெல்லாம் அதற்கு முன்னால் ஒன்றுமே இல்லை அனைவரும் வாருங்கள் என்று உரக்க சப்தமிட்டான். அதற்கு மன்னா இப்பொழுது இது தான் தேவை கடவுளின் காட்சியை வைத்து என்ன செய்வது என்று ஒட்டு மொத்தமாக கூட்டத்தில் குரல் எழும்பியது. எப்படியோ போங்கள் என்று மீதி இருப்பவர்களை அழைத்துக் கொண்டு மலையேற துவங்கினான் மன்னன்.

மலையின் சில மைல் தூரத்தை கடந்தவுடன் அங்கே வெள்ளியிலான பாறைகளும் வெள்ளி துண்டுகளும் நிறைய இருந்தன. அதை பார்த்த கொஞ்சம் மீதி இருந்த மக்கள் ஓடிச்சென்று மூட்டை கட்ட ஆரம்பித்தனர். மன்னன் மறுபடியும் மக்களுக்கு உரக்க சொன்னான். விலை மதிக்க முடியாத கடவுளின் காட்சி கிடைக்க போகின்றது அதற்கு முன்னால் இந்த வெள்ளிக்கட்டிகள் எதற்கு பயன்பட போகின்றன என்று உரைத்தான். மன்னா இப்பொழுது கடவுளின் காட்சியை விட வெள்ளிக்கட்டிகளே பிழைப்புக்கு உதவும் என்று சொல்லிக் கொண்டே மக்கள் முடிந்த அளவு அள்ள துவங்கினர். உங்கள் தலையெழுத்து என்று சொன்ன மன்னன் மீதி இருந்த ராஜ குடும்பத்தினரோடு மலையேற ஆரம்பித்தான்.

இப்பொழுது சிறிது தொலைவில் தென்பட்டது தங்கமலை. ராஜகு டும்பத்தினர் பாதி பேர் அங்கே சென்று விட மீதி இருந்தவர்கள் ராணியும்..மந்திரியும் தளபதியும் மற்றும் முக்கியமானவர்கள் மட்டுமே சரி வாருங்கள். செல்வோம் என்று மீதி இருந்தவர்களை அழைத்துக் கொண்டு முக்கால் வாசி மலையை கடந்திருப்பான் மன்னன் அங்கே தென்பட்டது வைரமலை அதைப் பார்த்த ராணி முதற் கொண்டு அங்கே இருந்தவர்கள் ஓடிவிட மலையின் உச்சியில் தன்னந்தனியாக போய் நின்றான் மன்னன். கடவுள் மன்னன் முன் பிரத்யட்சம் ஆகி எங்கே உன் மக்கள் என்றார் மன்னன் தலை குனிந்தவனாக அவர்களது வினைப்பயன் அவர்களை அழைத்து சென்றது அய்யனே என்னை மன்னியுங்கள் என்றான் மன்னன். அதற்கு கடவுள் நான் யாராக இருக்கின்றேன் எப்படி இருக்கின்றேன் என்று கோடியில் ஒரு சிலரே அறிவார்கள். அப்படிபட்டவர்களுக்கே எமது காட்சி என்பது கிட்டும். உலக இச்சைகள் என்ற சேற்றை பூசிக் கொண்டவர்கள் சிலருக்கு உடல் செல்வம் சொத்து என்ற செம்பு வெள்ளி தங்கம் வைரம் போன்ற ஏமாற்றும் மாயைகளில் சிக்கிக் கொண்டுள்ளனர். இவற்றையெல்லாம் கடந்து இச்சையற்ற நிலையில் இருப்பவரே எம்மை அடைவர் என்று சொல்லி மன்னனுக்கு அருளை வழங்கி காட்சியை நிறைவு செய்தார் கடவுள்.

மகாபாரதம் 2. சபா பருவம் பகுதி -13

திரௌபதியைப் பார்த்து கர்ணன் ஐந்து அடிமைகளின் மனைவியே என் நண்பன் துரியோதனனுக்கு அடிமையாவதில் உனக்கு அவ்வளவு அவசரமா? இந்த ஆட்டத்தில் உன் கைவளை குலுங்கும் ஓசையைக் கேட்க நான் ஆவலாய் இருக்கிறேன். கண்களில் கோபத்துடன் திரௌபதி கர்ணனை முகத்துக்கு நேரே பார்த்து அங்க நாட்டு முதல் அடிமையே ஐவருக்கு நான் அடிமையா இல்லை அவர்களுடன் நானும் அடிமையா என சூதாடித் தீர்மானிக்கப்படவில்லை. திரியோதனனின் மனைவி பானுமதியுடன் சூதாடி கைவளையோசை கேட்டு அடிமையான உன் புத்தி அப்படித்தான் பேசும் என்றாள். தன்னை அடிமை என்று அவள் கூறியதே கேட்டு துரியோதனன் ஒன்றும் சொல்லாமல் இருந்து விட்டானே? உண்மையில் தான் துரியோதனனின் அடிமையா? தான் எந்த மூதாதையர் விட்டுச் சென்ற இராஜ்யத்தையும் ஆளவில்லை. எந்த மன்னனுடன் போர் புரிந்து வென்ற தேசத்தையும் ஆளவில்லை. துரியோதனன் கொடுத்த அரசு அங்க தேசத்து அரசன் என்ற அடிமைப் பட்டயம். திரௌபதி பார்வையில் நான் அடிமைதான். அவள் பார்வை தவறா? மற்றவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள்?’ கர்ணன் சுய சிந்தனையில் ஆழ்ந்தான்.

திரௌபதி இங்கு அமர்ந்து சூதாட மாட்டாள். கைகளாலும் பகடை உருட்டமாட்டாள். கால்களால் தான் உருட்டுவாள். நான் கைகளால் பகடையை தொடுவதில்லை என சத்தியம் செய்திருக்கிறேன் என்றாள். துரியோதனன் நீ காலால் ஆடினால் என்ன? கையினால் ஆடினால் என்ன? மாமா என் சார்பில் ஆடுவார். அதிகம் பேசாதே. ஆட்டத்தைத் துவக்கு என்றான் துரியோதனன். தன் கைவளை ஓசை ஏதும் எழக்கூடாது என்று கிருஷ்ணனால் வளர்ந்த வஸ்திரத்தினால் உடலோடு கைகளையும் சேர்த்து மூடிய நிலையில் நடந்து வருகிறாள். சட்டென தனது வலது காலை தூக்கி சூதாட்ட மேடையில் ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த காய்களை வேகமாய் தட்டி விடுகிறாள். அது மன்னர் திருதராஷ்டிரர் வீற்றிருந்த சிம்மாசனத்தின் முதல் படியில் வேகமாய் மோதி கீழே விழுகிறது. திரௌபதியின் இச்செயல் பலரையும் துணுக்குறச் செய்கிறது. கர்ணன் இதை ஆட்சேபிக்கிறான். அடிமை மன்னரே சற்று அமருங்கள். இது எனக்கும் மாமா சகுனிக்கும் இடைப்பட்டது. நான் கேட்கும் கேள்விக்கு அவர் பதில் கூறட்டும். பிறகு அரசர் நீதி வழங்கட்டும். நான் செய்தது சரியென்றால் ஆமாம் அல்லது தவறென்றால் இல்லை என்று இரண்டில் ஒன்றாய் சகுனி அவர்கள் பதில் கூறட்டும். என் கேள்வி நான் ஒரு சிறுவண்டுக்கு மோட்சத்திற்க்கான பாதை காட்டினேன். இது உண்மைதானா? இல்லையா? பதில் கூறும் சகுனி அவர்களே என்றாள்.

சகுனி மிகவும் கலங்கிவிட்டான். ஆமாம் அல்லது இல்லை என்று கூற வேண்டிய கட்டாயம். ஒரு சிறுவண்டை அகஜ்ஜுவாலா என்னும் மரத்தில் செய்த பகடைக்காயில் வைத்திருப்பதை தெரிந்தே சொல்கிறாளா? தான் துரியோதனனுக்கும் கூட சொல்லாத இந்த ரகசியத்தை இவள் எப்படி அறிந்தாள்? இவள் பகடையை உதைத்த வேகத்தில் காயில் இருந்த சிறுவண்டு நிச்சம் இறந்து போயிருக்கும். அதைத்தான் இவள் மோட்சத்திற்கு வழி என்கிறாள். ஆமாம் என்று சொல்வதைத் தவிர வேறு வழியில்லை. இல்லை என்று சொன்னால் பகடைக்காயை உடைத்து சிறுவண்டை இந்த சபையில் காட்டுவாள். தான் சங்கேதமாய் எண்களை சொல்லும் போது சங்கேத சொல்லுக்கு ஏற்ப அந்த வண்டு குதித்து விழும். அதனை கணக்கிட்டு தான் சொல்லும் எண்ணிக்கையை விழும்படி இதுவரை தான் செய்தது எல்லோருக்கும் தெரிந்துவிடும். இதில் தோற்றுவிட்டோம். இனி என்ன செய்வது? நொடியில் தீர்மானித்து சகுனி எழுந்து நின்று ஆமாம் என்று தலை கவிழ்ந்து குற்றவாளி போல் நின்றான்.

தொடரும்……………..

மகாபாரதம் 2. சபா பருவம் பகுதி -12

கர்ணன் துச்சாதனனிடம் கூறியதைக் கேட்ட அர்ஜுனன் கர்ணன் மேல் கோபம் கொண்டு தக்க நேரம் வருகின்ற பொழுது உன்னை கொள்வேன் என்று விரதம் எடுக்கின்றேன் என்றான். அதேசமயத்தில் சகாதேவன் சகுனியை கொள்வேன் என்று விரதம் கொள்கிறேன் என்றான். யுதிஷ்டிரன் அர்ஜுனனையும் சகாதேவனையும் சமாதானப்படுத்தினான். கௌரவர்கள் போட்டிருந்த கேடு நிறைந்த திட்டங்களில் இருந்து தன்னை காப்பாற்ற வேண்டும் என்று திரௌபதி திருதராஷ்டிரனிடம் வேண்டினாள். துரோணரும் விதுரரும் மற்றும் சிலரும் அவருடைய பரிதாபகரமான வேண்டுதலுக்கு ஆதரவு கொடுத்தார்கள். இதைக் கேட்ட திருதராஷ்டிரர் மகளை என்று திரௌபதி பார்த்து அழைத்து தன்னுடைய புதல்வர்களாகிய துரியோதனனும் துச்சாதனனும் வரம்பு மீறி நடந்து கொண்டதை குறித்து நான் ஆட்சேபம் தெரிவிக்கின்றேன் என்று கூறினார்.

அதைக்கேட்ட திரௌபதி தன் தம்பி மகன்களையே இந்த அவையில் அடிமைகளாய் நிற்கச் செய்துவிட்டு அவர்கள் மனைவியை மட்டும் மகளே என அழைப்பது முரணாய் இல்லையா தங்களுக்கு? கணவரின் பெரியப்பாவை நான் மன்னிக்கலாம். ஆனால் பெண்மையை அவமதித்த இந்த அவையின் மன்னவரை பெண்மையின் சார்பில் நான் மன்னிக்க முடியுமா? இந்த அஸ்தினாபுரத்தின் ஒவ்வொரு பெண்ணும் மன்னித்தாலும் இந்த பரந்த பூமியில் இருக்கும் மற்ற பெண்கள் அவர்களால் உருவாக்கப்படும் சந்ததிகளும் மன்னிக்குமா? என்று கேட்டாள். மன்னர் திருதராஷ்டிரும் மற்றவர்களும் வாய்மூடி மௌனமாய் இருந்தார்கள். முதலில் யுதிஷ்டிரர் மனைவியை இழந்து ஆதன் பிறகு தன்னை இழந்தாரா? இல்லை. ஆகவே என்மீது அவருக்கு என்ன உரிமை இருக்க முடியும்? ஆக நான் சுதந்திரமானவள் என்பதை அரசர் அறிவிக்கட்டும் என்றாள்.

திரௌபதி சுதந்திரமானவள் என்று திருதராஷ்டிரன் அறிவித்தார். அதற்கு திரௌபதி பாண்டவர்கள் ஐவர் அன்புக்கு மட்டுமே நான் அடிமை. மற்றபடி நான் சுதந்திரமானவள் என்பதை இந்த சபையில் உள்ள எல்லோரும் அறிந்து கொள்ளுங்கள் என்றாள். பிறகு மன்னரே நான் அடிமை அல்ல. என்னை அடிமைப்படுத்த நினைக்கும் கௌரவர்களுடன் ஒரு முறையல்ல இரு முறை பணயம் வைத்தாட அனுமதி தாருங்கள் என்றாள். அதற்கு திருதராஷ்டிரரின் மனைவி காந்தாரி மகளே நீயும் தவறு செய்யப் போகிறாயா? சூதை சூதால் வெல்ல முடியுமா? அரசவையை சூதாட்ட களமாக்க பெண்ணான நீயும் ஆக்க முடியலாமா? உன்னைத் தடுக்க வேண்டும் என எனக்கு தோன்றவில்லை. ஆனால் இதை தவிர்க்கலாமே என்று எண்ணுகிறேன். கொஞ்சம் யோசி மகளே என்றாள். அதற்கு திரௌபதி சூதை இந்த மாதால் வெல்ல முடியும் என்று அனைவருக்கும் நிச்சயம் உணர்த்துவேன் என்றாள்.

திருதராஷ்டிரர் திரௌபதிக்கு அனுமதி கொடுத்தார். கர்ணன் துரியோதனனிடம் நண்பா மாமா பக்கத்தில் இருக்க ஜெயம் நமக்குத்தான். அடிமை இல்லை என இவள் வாக்கு சாதுரியத்தால் மன்னரை சொல்ல வைத்துவிட்டாள். நாமும் ஒருமுறைக்கு இரு முறை ஆடி இவள் அடிமை என்று ஊரறியச் செய்யலாம் என்றான். சகுனி துரியோதனன் துச்சாதனன் எல்லோரும் கோஷமாய் ஆட்டத்திற்கு நாங்கள் தயார் என்று கூறினார்கள்.

மகாபாரதம் 2. சபா பருவம் பகுதி -11

சபையில் இருந்த அமைதியான சூழ்நிலையில் ஒருவன் அடிமைகளுக்கு அரச ரீதியில் உடையணிந்து இருப்பதற்கு உரிமை இல்லை என்றான். ஆகையால் அவர்கள் அணிந்திருந்த ராஜ உடைகள் அனைத்தும் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டன. அப்படி பறிமுதல் செய்த பொழுது பாண்டவர்கள் தாங்களே தங்கள் அணிந்திருந்த அரச உடைகளை கழற்றி கொடுத்து விட்டனர். அடிமைகளான பாண்டவர்கள் இடுப்பில் துண்டை கட்டிக் கொண்டு நின்றனர். இக்காட்சியை கண்ட துரியோதனனுக்கு அளவில்லாத மகிழ்ச்சியை உண்டு பண்ணியது. இந்திரப்பிரஸ்தத்தில் ராஜசூய யாக்ஞத்தில் யுதிஷ்டிரனின் ஆடம்பரத்தை பார்த்த பொழுது அவனுடைய உள்ளம் பொறாமையால் வெந்து கொண்டிருந்தது. ஆனால் இப்போது பாராளும் வேந்தனை இப்போது அடிமை நிலைக்கு இறக்கி வைத்து விட்டோம் என்று துரியோதனன் அடைந்த ஆனந்தத்திற்கு அளவில்லை. பாஞ்சாலத்தில் நிகழ்ந்த திரௌபதிக்கான சுயம்வரத்தில் வெல்ல துரியோதனனுக்கு இயலவில்லையே என்ற வருத்தம் அவருடைய உள்ளத்தை உறுத்திக்கொண்டே இருந்தது.

இப்பொழுது சபை நடுவே வைத்து அவளை அவமானப்படுத்தும் நோக்கத்தில் அவள் அணிந்திருந்த ஆடையை எடுக்கும் படி தன் தம்பி துச்சாதனனை ஏவினான். துச்சாதனனும் அடாத செயலில் ஈடுபட மகிழ்வுடன் திரௌபதி அருகில் வந்தான். இதற்கு தடை சொல்ல கணவன்மார்களுக்கு உரிமை இல்லை. மற்றவர்களோ வெறுமனே அமைதியாக இருந்து விட்டார்கள். திரௌபதி கிருஷ்ணனிடம் தனக்கு கிருபை புரிய வேண்டும் என்று வேண்டி அவனிடம் அடைக்கலமானாள். கிருஷ்ணனிடம் அடைக்கலம் வருகின்றவர்களுக்கு ஆபத்பாந்தவன் எப்பொழுதும் துணை நிற்பான். இப்பொழுது அதிசய செயல் ஒன்று நிகழ்ந்தது. துச்சாதனன் திரௌபதியின் புடவை ஒன்றன் பின் ஒன்றாக உருவிக்கொண்டே இருந்தான். புதிய புடைவைகள் அவளிடம் ஒன்றன் பின் ஒன்றாக வடிவெடுத்து வந்து கொண்டே இருந்தன. துச்சாதனன் உருவிய புடவைகள் திரௌபதியின் உயரத்திற்கு ஒரு பெரிய குவியல் ஆகிவிட்டது.

திரௌபதி புதிய ஆடைகளுடன் மிளிர்ந்து கொண்டே இருந்தாள். ஆடைகளை வுருவி சலித்துப்போன பொல்லாத முர்கன் பெருமூச்சு வாங்கி உட்கார்ந்துவிட்டான். துச்சாதனன் இச்செயலில் திரௌபதியிடம் மிகப்பெரிய தோல்வி அடைந்து விட்டான். ஆனாலும் அவன் இதிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளவில்லை. அடுத்தபடியாக துரியோதனன் வேண்டுமென்றே திரௌபதியை அவமானப்படுத்த வேண்டும் என்று எண்ணி தன்னுடைய இடது தொடையை காட்டினான். இதை கண்ட பீமன் மிகவும் கோபம் கொண்டு நீ காட்டுகின்ற உனது தொடையை யுத்தத்திலே நான் உடைத்து உன்னை கொல்வேன். இல்லாவிட்டால் பராக்கிரமே வடிவெடுத்து இருக்கின்ற என்னுடைய முன்னோர்கள் சென்று இருக்கின்ற சொர்க்கத்தில் நுழைய மாட்டேன் என்று சத்தியம் செய்தான். பின்பு அவன் துச்சாதனனை பார்த்து யுத்தத்திலே உன்னுடைய நெஞ்சைப் பிளந்து அதில் பீறிக்கொண்டு வருகின்ற ரத்தத்தை குடிப்பேன். இல்லாவிட்டால் பராக்கிரமமே வடிவேடுத்திருக்கின்ற என்னுடைய முன்னோர்கள் சென்று இருக்கின்ற சொர்க்கத்தில் நான் நுழைய மாட்டேன் என்று சத்தியம் செய்தான். அப்பொழுது கர்ணன் திரௌபதியை அந்தப்புரத்திற்கு இழுத்துச் சென்று அடிமைப் பெண் ஒருத்திக்கு பொருத்தமான உடைகளை கொடுத்து பணிவிடை பண்ண அவளை நியமிப்பாயாக என்று துச்சாதனை தூண்டினான்.

மகாபாரதம் 2. சபா பருவம் பகுதி -10

ஒரு நாட்டின் மன்னனை சூதாட்டத்திற்கு அழைத்து சூதாடி ராஜ்ஜியம் ஒன்றை அபகரிப்பது ராஜ தர்மம் ஆகாது. எப்பொழுது வேண்டுமானாலும் ஒரு அரசனை எதிர்த்து மற்றொரு அரசன் போர் புரிந்து ராஜ்யத்தை வெல்லலாம். சூதாட்டத்தில் இழந்த ராஜ்யத்தை நாங்கள் போர் புரிந்து வெல்லப் போகிறோம். எங்களுடன் யுத்தத்திற்கு வாருங்கள் என்று யுதிஷ்டிரன் கூறி இருக்கலாம். ஆனால் சூதாட்டம் ஆடியதன் விளைவாக அவன் விவேகத்தை முழுவதுமாக இழந்து விட்டான்.

கபடமே வடிவெடுத்த சகுனியை துரியோதனன் ஆர்வத்துடன் கட்டித் தழுவினான். மாமா என்னுடைய வாழ்நாளில் இன்று தான் பெரும் மகிழ்வை காண்கிறேன் என்று கூறிவிட்டு அடுத்த படியாக தன் தம்பி துச்சாதனனிடம் அந்த அடிமைப் பெண்ணாக திரௌபதியை சபைக்கு இழுத்து வரும்படி உத்தரவிட்டான். துரோபதியின் நீண்ட கூந்தலை தன் கையில் சுருட்டி பிடித்துக் கொண்டு அவளை இழுத்து வந்தான் துச்சாதனன். அவனுடைய முகத்தில் அப்போது மகிழ்ச்சி ததும்பிக் கொண்டிருந்தது. அப்படி இழுத்து வரப்பட்ட திரௌபதி மன உறுதியுடன் அந்த சபையில் பேசினாள். பெண் ஒருத்தி மீது கை வைத்து அவளை அவமானப் படுத்துவதை மாண்புமிக்க இந்த சபை ஆமோதிக்கிறதா என்று கேட்டாள். ஆனால் யாரும் வாய் திறக்கவில்லை. ஒரு காலத்தில் பிரசித்தி பெற்ற குரு வம்சம் இன்றைக்கு கொடூர தன்மையில் மூழ்கிக் கிடந்தது.

என் கணவர் முதலில் சூதாட்டத்தில் தன்னை இழந்து விட்டு பிறகு என்னையும் பணயம் வைத்து தோற்று விட்டார் என்று கேள்விப்பட்டேன். தன்னை இழந்த பிறகு என்னை பணயம் வைக்க அவருக்கு உரிமை எது என்று கேட்டாள். அனைவரும் வாய்பொத்தி இருந்தனர். அங்கியிருந்த யுதிஷ்டிரனை பார்த்து நீங்கள் செய்த ராஜசூய யக்ஞத்துக்கு நிகரான செயலா இது? இச்செயல் போற்றத்தக்க செயலா என்று கேட்டாள். அவ்வேளையில் யுதிஷ்டிரனால் பேச இயலவில்லை. மௌனத்துடன் இருந்தான். பின்பு சபையில் இருந்தவர்களைப் பார்த்து பெரியப்பாவாகிய திருதராஷ்டிரன் சொல்லும் சொல்லுக்கு தன் கணவர் எப்போதும் அடிபணிந்து நடந்து கொள்கிறார். ஆனால் திருதராஷ்டிரரோ தன் தம்பியின் மைந்தர்களை அன்புடன் வரவேற்று சூதாட தூண்டினார். விளையாட்டில் அவருக்கு அனுபவம் போதாது. ஆனால் அதை ஆடுவதில் அவருக்கு விருப்பம் உண்டு. அவரிடம் இருந்த குறையை நீங்கள் பயன்படுத்தி உங்கள் காரியத்தை சாதித்துக்கொண்டீர்கள். இந்த சபையானது என் கணவரை ஏமாற்றி அவரிடம் இருக்கும் செல்வம் அனைத்தையும் கொள்ளை அடித்துக் கொண்டது. கொள்ளைக்காரர்கள் தர்மத்திலிருந்தும் சத்தியத்திலிருந்தும் பிசகுபவர்கள் ஆவார்கள். எனவே இங்கு குழுமி இருப்பவர்கள் தரத்தில் மிகவும் மட்டமானவர்கள். தான் அடிமையான பிறகு என்னை பணயம் வைக்க என் கணவனுக்கு உரிமை உண்டா?இச்சபையில் உள்ளவர்கள் யாராவது இந்த கேள்விக்கு விடை தருவீர்களா என்று கேட்டாள். சிறிது நேரம் சபையில் மௌனம் நிலவியது. பிறகு பீஷ்மர் பேசினார். இத்தகைய சூழ்நிலையில் தர்மத்தை விளக்குவது மிகக் கடினம். ஒரு விஷயம் தெளிவாக இருக்கிறது. கணவன் ஒருவன் சுதந்திரமாக இருந்தாலும் அடிமையாக இருந்தாலும் மனைவி அவனுக்கு உரியவள் ஆகிறாள் என்று கூறிவிட்டு அமர்ந்துவிட்டார்.

மகாபாரதம் 2. சபா பருவம் பகுதி -9

விதுரர் திருதராஷ்டிரனிடம் பேசிக் கொண்டிருப்பதை கண்ட துரியோதனன் விதுரரிடம் சென்று நீங்கள் எப்போதும் பாண்டவர்களுக்கு உரியவர் என்பதை நான் நன்கு அறிவேன். உங்களுக்கு உணவளிக்கும் என்னிடத்தில் உங்களுக்கு நன்றி இல்லை. எப்பொழுதும் என்னை இகழ்ந்து பேசுவதே உங்களுக்குரிய தொழிலாக உள்ளது. கௌரவர்களாகிய எங்களை நீங்கள் வெறுக்கின்றீர்கள். ஆனாலும் நாங்கள் நன்றாக இருக்கின்றோம். உங்களுடைய ஆதரவு பாண்டவர்களுக்கு இருந்தும் சிறிது நேரத்தில் பாண்டவர்கள் ஒன்றும் இல்லாத ஆண்டிகளாகப் போவார்கள். எதிர்காலத்தில் எங்களுக்கு வரும் அழிவை இப்பொழுதே நீங்கள் குறி சொல்கிறீர்கள். ஆனால் நீங்களும் பாண்டவர்கள் உட்பட அனைவரும் அழிவீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். இதற்கிடையில் இந்த மண்ணுலக வாழ்வை நன்கு பயன்படுத்துவது எப்படி என்பது எங்களுக்குத் தெரியும். தயவு செய்து எங்கள் விஷயத்தில் நீங்கள் தலையிட வேண்டாம் என்று துரியோதனன் சூதாட்ட மேடைக்கு சென்றான்.

கபடம் நிறைந்த சகுனியால் பாண்டவர்களுடைய சொத்து முழுவதும் கொள்ளையடிக்கப்பட்டது. தோல்வி அடைந்த யுதிஷ்டிரனை கேலி செய்யும் பாங்கில் இன்னும் உன்னிடத்தில் பணயம் வைக்க ஏதேனும் உண்டா என்று சகுனி கேட்டான். அதன் பிறகு யுதிஷ்டிரன் ஆசையை மேலும் தூண்ட துரியோதனன் தாராளமான சலுகை ஒன்றை காட்டினான். இத்தனை நேரம் நீ பணயம் வைத்து இழந்த பொருள்கள் அனைத்தையும் நான் பணயமாக வைக்கிறேன் இதற்கு இணையாக நீ எதையும் வைக்க வேண்டியதில்லை. இப்பொழுது பகடையில் வெற்றி பெற்றால் இவையாவும் உனக்குச் சொந்தம் ஆகும் என்றான். மீண்டும் அவர்கள் விளையாடினார்கள். யுதிஷ்டிரன் மீண்டும் தோற்றுப் போனான்.

கௌரவர்கள் கொள்ளையடிக்க விரும்பிய பொருள்கள் அனைத்தும் சூதாட்டத்தின் மூலம் பெற்றுவிட்டார்கள். துரியோதனன் கூறிய ஆசை வார்த்தையால் மதியிழந்த யுதிஷ்டிரன் தன்னிடத்தில் இன்னும் ஏதோ பணயம் வைக்க பொருள் இருப்பதாக அவனுடைய உள்ளத்தில் தோன்றியது. தம்பிமார்கள் நால்வரும் அவனுக்குச் சொந்தம். ஆகவே சூதாட்ட வெறியினால் தூண்டப் பெற்று தம்பிமார்களையும் பணயம் வைத்தான். அதி விரைவில் அந்த நால்வரையும் சூதாட்டத்தில் இழந்தான். சூதாட்ட வெறியில் சுய அறிவை இழந்த யுதிஷ்டிரன் பிறகு தன்னையே பணயம் வைத்து அதிலும் தோற்றுப் போய் தன்னையும் கௌரவர்களிடம் இழந்தான். மானுடர்களை பணயம் வைப்பது யாராலும் கையாளப்படாத ஒரு நூதனமான முறையாக இருந்தது. கௌரவர்களே இதை எதிர்பார்க்கவில்லை. இப்பொழுது யுதிஷ்டிரனை பார்த்து சகுனி திரௌபதியை ஏன் பணயம் வைக்கலாகாது என்று பரிகாசம் பண்ணினான். மூடத்தனமாக திரௌபதியையும் அவன் பணயம் வைத்து இழந்தான். இப்போது பாண்டவர்கள் அறவே கொள்ளை அடிக்கப்பட்டவர்கள் மட்டுமல்லாது சுதந்திரத்தையும் இழந்து அவர்கள் கௌரவர்களுக்கு அடிமைகள் ஆகி விட்டார்கள்.

மகாபாரதம் 2. சபா பருவம் பகுதி -8

யுதிஷ்டிரன் கூறிய அனைத்தையும் கேட்ட சகுனி உன்னிடத்தில் நாடு மற்றும் செல்வத்தில் பற்று அதிகரித்து உள்ளது. க்ஷத்திரியனுக்கு உண்டான தைரியம் இல்லாமல் துரியோதனின் அறைகூவலுக்கு அஞ்சி ஓடுகின்றாய் என்றான். அதைக்கேட்ட யுதிஷ்டிரனுக்கு கோபம் உருவெடுத்தது. பொருளில் நீ வைத்திருக்கின்ற பற்றுதல் என்னிடத்தில் இல்லை. உன்னுடைய அறைகூவுதலுக்கு நான் இணங்குகின்றேன். யாரோடு நான் விளையாட வேண்டும் எதை பணயமாக வைக்க வேண்டும் என்று சகுனியிடம் கேட்டான். அதற்கு துரியோதனன் பணயமாக நீ எதை வைக்கின்றாயோ அதற்கு சரிசமமானதை நானும் பணயமாக வைக்கின்றேன். எனக்காக என் மாமா சகுனி பகடையை ஆடுவார் என்றான். பொருளை பணயம் வைப்பது ஒருவன் அவனுடைய பிரதிநிதியாக மற்றொருவன் விளையாடுவது பகடை விளையாட்டின் சட்டதிட்டம் ஆகாது. இந்த சட்டத்திற்கு மாறாக நீ விளையாட தீர்மானித்து இருக்கின்றாய். ஆனாலும் உன்னுடைய விருப்பப்படி விளையாட்டை துவங்குவோம் என்று யுதிஷ்டிரன் சூதாட அமர்ந்தான். யுதிஷ்டிரன் இவ்வாறு கூறியது கௌரவர்களுக்கு பிரதகூலமாக அமைந்தது.

சூதாடும் மண்டபத்திற்குள் பார்வையாளர்கள் ஒருவர் பின் ஒருவராக வந்து சேர்ந்தார்கள். பீஷ்மர், விதுரர். கிருபாச்சாரியார், துரோணாச்சாரியார், போன்ற பெரு மக்களும் அங்கு இருந்தனர். திருதராஷ்டிரனும் அங்கு வந்து சேர்ந்தான். அவனுக்கு இந்த விளையாட்டில் ஊக்கம் மிக இருந்தது. பகடை விளையாட்டு துவங்கியது. யுதிஷ்டிரன் தன்னிடம் இருந்த நகைகள் ரத்தினங்கள் தங்கம் ஆகியவைகளை பணயமாக வைத்து பகடையை உருட்டினான். ஆனால் பகடை அவனுக்கு பலிதமாகவில்லை. அடுத்தபடியாக சகுனி பகடையை உருட்டினான். பகடையை உருட்ட உருட்ட இதோ வெற்றி இதோ வெற்றி என்று அவன் கூறிக்கொண்டே இருந்தான். அதற்குப் பிறகு வைத்த பணத்தை எல்லாம் யுதிஷ்டிரன் இழந்து கொண்டே வந்தான். ஒவ்வொரு தடவையும் சகுனி வென்று கொண்டே இருந்தான். இந்திரப்பிரஸ்தத்தில் இருந்த பெரிய செல்வங்கள் எல்லாம் துண்டு துண்டாக கௌரவர்கள் வசம் கவர்ந்து எடுக்கப்பட்டன. இந்நிலைமையை பார்த்து யுதிஷ்டிரனுக்கு விவேகம் வந்திருக்க வேண்டும். ஆனால் சூதாட்ட வெறியில் விவேகத்தை இழக்கலானான். மந்திர சக்தி வாய்ந்த மாந்திரீகனாக மாறி சகுனி செயல்பட்டான். யுதிஷ்டிரன் பணயம் வைக்கும் பொம்மையாக மயங்கிப் போனான்.

இந்த அக்கிரமத்தை மேலும் பார்த்துக்கொண்டு சகித்துக் கொள்ள முடியாமல் விதுரர் திருதராஷ்டிர மன்னனை அணுகி பாண்டவர்கள் உங்களுடைய தம்பியின் புதல்வர்கள். துரியோதனன் அவர்களை சூதாடும் பாங்கில் கொள்ளையடிக்க நீங்கள் ஏன் அனுமதித்தீர்கள். பேராசையின் வேகத்தால் நீங்களும் உங்களுடைய மகனும் அறிவை இழந்து விட்டீர்கள். இந்த சூதாட்டத்தின் விளைவாக குரு வம்சம் அழிந்து பட்டுப்போகும். நீங்கள் மரணமடைவதற்கு முன்பே உங்களுடைய மக்களெல்லாம் கொல்லப்பட்டார்கள் என்ற செய்தி உங்களுக்கு கேட்கும் தௌர்பாக்கிய நிலை உங்களுக்கு உண்டாகும் என்றார். ஆனால் இந்த எச்சரிக்கையை பேராசை பிடித்த திருதராஷ்டிர மன்னன் கண்டு கொள்ளவில்லை.

மகாபாரதம் 2. சபா பருவம் பகுதி -7

பாஞ்சால நாட்டில் பாண்டவர்கள் இருக்கும் பொழுது அவர்களை அழைத்து வர விதுரருக்கு திருதராஷ்டிரர் கட்டளையிட்ட போது மகிழ்ச்சியுடன் சென்ற விதுரர் இப்பொழுது திருதராஷ்டிரன் ஆணைப்படி இந்திரப்பிரஸ்தத்திலிருந்து அஸ்தினாபுரத்திற்கு பாண்டவர்களை அழைத்து வர தயங்கினார். ஆயினும் அரசனுடைய ஆணைக்கு உட்பட்டு விதுரர் அங்கு சென்றார். பாண்டவர்கள் கருத்திலேயே கண்ணும் கருத்துமாய் இருக்கும் விதுரருடைய வருகை யுதிஷ்டிரனுக்கு மிக்க மகிழ்ச்சியை அளித்தது. ஆனால் அவருடைய முகத்தில் அமைந்திருந்த கவலையை யுதிஷ்டிரன் கவனித்து விட்டான். அவரின் கவலைக்கு காரணம் என்ன என்று கேட்ட பொழுது அதற்கு அஸ்தினாபுரம் அருகே புதிய சபை ஒன்று அமைக்கப்பட்டு இருக்கிறது. அதில் பகடை விளையாட பாண்டவர்களை திருதராஷ்டிரன் அழைக்கிறார் என்று விதுரர் விஷயத்தை விளக்கி கூறினார்.

யுதிஷ்டிரனுக்கு இந்த சூழ்ச்சியின் உட்கருத்து உடனே விளங்கியது. பல தீமைகளுக்கு காரணம் சூதாட்டம் என்பது அவனுக்குத் தெரியும் அவன் மேலும் விசாரித்த போது சகுனியும் இன்னும் சில திறமை வாய்ந்தவர்கள் அந்த விளையாட்டில் கலந்து கொள்வார்கள் என்பது தெரிந்தது. பகடை விளையாட்டில் யுதிஷ்டிரன் இன்னும் ஆரம்ப கட்டத்தில் தான் இருந்தான். விளையாட்டில் ஈடுபடும்படி மன்னராகிய பெரியப்பாவிடம் இருந்து உத்தரவு வந்துள்ளது. அவருடைய உத்தரவுக்கு அடிபணிவது தன் கடமை என யுதிஷ்டிரன் எண்ணினான். மேலும் அந்த அழைப்பை ஏற்றுக் கொள்ள அவன் கடமைப் பட்டிருந்தான். க்ஷத்திரர்களை விளையாட்டுப் போட்டிக்கு கூப்பிட்டால் அதற்கு மறுப்பு கூறுவது முறை ஆகாது. அழைப்பை ஏற்றுக் கொள்வதே முறை. இவ்வாறு வடிவெடுத்து வந்த சூழ்நிலைகள் யுதிஷ்டிரனுக்கு கேடுகாலமாக உருவெடுக்க ஆரம்பித்தது. அமைதியாக இதனை ஏற்றுக்கொள்வதை தவிர வேறு வழி எதுவும் அவனுக்கு தெரியவில்லை. தெய்வச் செயலாக வருவது வரட்டும் என்று எண்ணிக் கொண்டு தன்னுடைய உற்றார் உறவினருடன் அவன் அஸ்தினாபுரம் புறப்பட்டுச் சென்றான்

தன் தம்பியாகிய பாண்டுவின் புதல்வர்களை திருதராஷ்டிர மன்னன் பேரன்புடன் வரவேற்றான். வசதிகள் நிறைந்த மண்டபங்களில் ஆங்காங்கு அவர்கள் தங்க வைக்கப்பட்டனர். உள்ளன்போடும் ஊக்கத்தோடும் கௌரவர்கள் அவர்களோடு நடந்து கொண்டனர். அவர்களுக்கிடையில் இருந்த மன வேறுபாடுகள் எல்லாம் அறவே அகற்றப்பட்டது போன்று தென்பட்டது. அத்தகைய அமைப்பே பாண்டவர்களை அழிப்பதற்கு முதல் சூழ்ச்சியாக இருந்தது.

பாண்டவர்களை படுகுழியில் ஆழ்த்தும் துர்தினமும் வந்தது. புதிதாக அமைக்கப்பட்டிருந்த சபாமண்டபத்தை பார்க்க அழைத்துச் சென்று அதன் அமைப்பு அவர்களுக்கு காட்டப்பட்டது. அதன் பிறகு பொழுது போக்காக பகடை விளையாடலாம் என்று சகுனி சொன்னான். யுதிஷ்டிரனுக்கு அந்த விளையாட்டின் மீது சிறிது நாட்டம் இருந்தது. எனினும் அதை குறித்து அவன் இப்பகடை விளையாட்டு ஏமாற்றுவதற்கென்றே அமைந்துள்ளது. பிறரை ஏமாற்றி பணம் சம்பாதிப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. சூதாட்டம் மனிதனுடைய பகுத்தறிவை விரட்டுகிறது. அது மதுபானத்திற்கு நிகரான மயக்கத்தை உண்டு பண்ணவல்லது என்று யுதிஷ்டிரன் சகுனியிடம் சொன்னான்