மகாபாரதம் 2. சபா பருவம் பகுதி -8

யுதிஷ்டிரன் கூறிய அனைத்தையும் கேட்ட சகுனி உன்னிடத்தில் நாடு மற்றும் செல்வத்தில் பற்று அதிகரித்து உள்ளது. க்ஷத்திரியனுக்கு உண்டான தைரியம் இல்லாமல் துரியோதனின் அறைகூவலுக்கு அஞ்சி ஓடுகின்றாய் என்றான். அதைக்கேட்ட யுதிஷ்டிரனுக்கு கோபம் உருவெடுத்தது. பொருளில் நீ வைத்திருக்கின்ற பற்றுதல் என்னிடத்தில் இல்லை. உன்னுடைய அறைகூவுதலுக்கு நான் இணங்குகின்றேன். யாரோடு நான் விளையாட வேண்டும் எதை பணயமாக வைக்க வேண்டும் என்று சகுனியிடம் கேட்டான். அதற்கு துரியோதனன் பணயமாக நீ எதை வைக்கின்றாயோ அதற்கு சரிசமமானதை நானும் பணயமாக வைக்கின்றேன். எனக்காக என் மாமா சகுனி பகடையை ஆடுவார் என்றான். பொருளை பணயம் வைப்பது ஒருவன் அவனுடைய பிரதிநிதியாக மற்றொருவன் விளையாடுவது பகடை விளையாட்டின் சட்டதிட்டம் ஆகாது. இந்த சட்டத்திற்கு மாறாக நீ விளையாட தீர்மானித்து இருக்கின்றாய். ஆனாலும் உன்னுடைய விருப்பப்படி விளையாட்டை துவங்குவோம் என்று யுதிஷ்டிரன் சூதாட அமர்ந்தான். யுதிஷ்டிரன் இவ்வாறு கூறியது கௌரவர்களுக்கு பிரதகூலமாக அமைந்தது.

சூதாடும் மண்டபத்திற்குள் பார்வையாளர்கள் ஒருவர் பின் ஒருவராக வந்து சேர்ந்தார்கள். பீஷ்மர், விதுரர். கிருபாச்சாரியார், துரோணாச்சாரியார், போன்ற பெரு மக்களும் அங்கு இருந்தனர். திருதராஷ்டிரனும் அங்கு வந்து சேர்ந்தான். அவனுக்கு இந்த விளையாட்டில் ஊக்கம் மிக இருந்தது. பகடை விளையாட்டு துவங்கியது. யுதிஷ்டிரன் தன்னிடம் இருந்த நகைகள் ரத்தினங்கள் தங்கம் ஆகியவைகளை பணயமாக வைத்து பகடையை உருட்டினான். ஆனால் பகடை அவனுக்கு பலிதமாகவில்லை. அடுத்தபடியாக சகுனி பகடையை உருட்டினான். பகடையை உருட்ட உருட்ட இதோ வெற்றி இதோ வெற்றி என்று அவன் கூறிக்கொண்டே இருந்தான். அதற்குப் பிறகு வைத்த பணத்தை எல்லாம் யுதிஷ்டிரன் இழந்து கொண்டே வந்தான். ஒவ்வொரு தடவையும் சகுனி வென்று கொண்டே இருந்தான். இந்திரப்பிரஸ்தத்தில் இருந்த பெரிய செல்வங்கள் எல்லாம் துண்டு துண்டாக கௌரவர்கள் வசம் கவர்ந்து எடுக்கப்பட்டன. இந்நிலைமையை பார்த்து யுதிஷ்டிரனுக்கு விவேகம் வந்திருக்க வேண்டும். ஆனால் சூதாட்ட வெறியில் விவேகத்தை இழக்கலானான். மந்திர சக்தி வாய்ந்த மாந்திரீகனாக மாறி சகுனி செயல்பட்டான். யுதிஷ்டிரன் பணயம் வைக்கும் பொம்மையாக மயங்கிப் போனான்.

இந்த அக்கிரமத்தை மேலும் பார்த்துக்கொண்டு சகித்துக் கொள்ள முடியாமல் விதுரர் திருதராஷ்டிர மன்னனை அணுகி பாண்டவர்கள் உங்களுடைய தம்பியின் புதல்வர்கள். துரியோதனன் அவர்களை சூதாடும் பாங்கில் கொள்ளையடிக்க நீங்கள் ஏன் அனுமதித்தீர்கள். பேராசையின் வேகத்தால் நீங்களும் உங்களுடைய மகனும் அறிவை இழந்து விட்டீர்கள். இந்த சூதாட்டத்தின் விளைவாக குரு வம்சம் அழிந்து பட்டுப்போகும். நீங்கள் மரணமடைவதற்கு முன்பே உங்களுடைய மக்களெல்லாம் கொல்லப்பட்டார்கள் என்ற செய்தி உங்களுக்கு கேட்கும் தௌர்பாக்கிய நிலை உங்களுக்கு உண்டாகும் என்றார். ஆனால் இந்த எச்சரிக்கையை பேராசை பிடித்த திருதராஷ்டிர மன்னன் கண்டு கொள்ளவில்லை.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.