மகாபாரதம் 2. சபா பருவம் பகுதி -7

பாஞ்சால நாட்டில் பாண்டவர்கள் இருக்கும் பொழுது அவர்களை அழைத்து வர விதுரருக்கு திருதராஷ்டிரர் கட்டளையிட்ட போது மகிழ்ச்சியுடன் சென்ற விதுரர் இப்பொழுது திருதராஷ்டிரன் ஆணைப்படி இந்திரப்பிரஸ்தத்திலிருந்து அஸ்தினாபுரத்திற்கு பாண்டவர்களை அழைத்து வர தயங்கினார். ஆயினும் அரசனுடைய ஆணைக்கு உட்பட்டு விதுரர் அங்கு சென்றார். பாண்டவர்கள் கருத்திலேயே கண்ணும் கருத்துமாய் இருக்கும் விதுரருடைய வருகை யுதிஷ்டிரனுக்கு மிக்க மகிழ்ச்சியை அளித்தது. ஆனால் அவருடைய முகத்தில் அமைந்திருந்த கவலையை யுதிஷ்டிரன் கவனித்து விட்டான். அவரின் கவலைக்கு காரணம் என்ன என்று கேட்ட பொழுது அதற்கு அஸ்தினாபுரம் அருகே புதிய சபை ஒன்று அமைக்கப்பட்டு இருக்கிறது. அதில் பகடை விளையாட பாண்டவர்களை திருதராஷ்டிரன் அழைக்கிறார் என்று விதுரர் விஷயத்தை விளக்கி கூறினார்.

யுதிஷ்டிரனுக்கு இந்த சூழ்ச்சியின் உட்கருத்து உடனே விளங்கியது. பல தீமைகளுக்கு காரணம் சூதாட்டம் என்பது அவனுக்குத் தெரியும் அவன் மேலும் விசாரித்த போது சகுனியும் இன்னும் சில திறமை வாய்ந்தவர்கள் அந்த விளையாட்டில் கலந்து கொள்வார்கள் என்பது தெரிந்தது. பகடை விளையாட்டில் யுதிஷ்டிரன் இன்னும் ஆரம்ப கட்டத்தில் தான் இருந்தான். விளையாட்டில் ஈடுபடும்படி மன்னராகிய பெரியப்பாவிடம் இருந்து உத்தரவு வந்துள்ளது. அவருடைய உத்தரவுக்கு அடிபணிவது தன் கடமை என யுதிஷ்டிரன் எண்ணினான். மேலும் அந்த அழைப்பை ஏற்றுக் கொள்ள அவன் கடமைப் பட்டிருந்தான். க்ஷத்திரர்களை விளையாட்டுப் போட்டிக்கு கூப்பிட்டால் அதற்கு மறுப்பு கூறுவது முறை ஆகாது. அழைப்பை ஏற்றுக் கொள்வதே முறை. இவ்வாறு வடிவெடுத்து வந்த சூழ்நிலைகள் யுதிஷ்டிரனுக்கு கேடுகாலமாக உருவெடுக்க ஆரம்பித்தது. அமைதியாக இதனை ஏற்றுக்கொள்வதை தவிர வேறு வழி எதுவும் அவனுக்கு தெரியவில்லை. தெய்வச் செயலாக வருவது வரட்டும் என்று எண்ணிக் கொண்டு தன்னுடைய உற்றார் உறவினருடன் அவன் அஸ்தினாபுரம் புறப்பட்டுச் சென்றான்

தன் தம்பியாகிய பாண்டுவின் புதல்வர்களை திருதராஷ்டிர மன்னன் பேரன்புடன் வரவேற்றான். வசதிகள் நிறைந்த மண்டபங்களில் ஆங்காங்கு அவர்கள் தங்க வைக்கப்பட்டனர். உள்ளன்போடும் ஊக்கத்தோடும் கௌரவர்கள் அவர்களோடு நடந்து கொண்டனர். அவர்களுக்கிடையில் இருந்த மன வேறுபாடுகள் எல்லாம் அறவே அகற்றப்பட்டது போன்று தென்பட்டது. அத்தகைய அமைப்பே பாண்டவர்களை அழிப்பதற்கு முதல் சூழ்ச்சியாக இருந்தது.

பாண்டவர்களை படுகுழியில் ஆழ்த்தும் துர்தினமும் வந்தது. புதிதாக அமைக்கப்பட்டிருந்த சபாமண்டபத்தை பார்க்க அழைத்துச் சென்று அதன் அமைப்பு அவர்களுக்கு காட்டப்பட்டது. அதன் பிறகு பொழுது போக்காக பகடை விளையாடலாம் என்று சகுனி சொன்னான். யுதிஷ்டிரனுக்கு அந்த விளையாட்டின் மீது சிறிது நாட்டம் இருந்தது. எனினும் அதை குறித்து அவன் இப்பகடை விளையாட்டு ஏமாற்றுவதற்கென்றே அமைந்துள்ளது. பிறரை ஏமாற்றி பணம் சம்பாதிப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. சூதாட்டம் மனிதனுடைய பகுத்தறிவை விரட்டுகிறது. அது மதுபானத்திற்கு நிகரான மயக்கத்தை உண்டு பண்ணவல்லது என்று யுதிஷ்டிரன் சகுனியிடம் சொன்னான்

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.