தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 83 நல்லூர் பஞ்சவர்ணேஸ்வரர்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 83 வது தேவாரத்தலம் நல்லூர் புராணபெயர் திருநல்லூர். மூலவர் பஞ்சவர்ணேஸ்வரர். இங்கு சிவன் சதுர ஆவுடையாராக சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மூலவர் தினமும் ஐந்து தடவை நிறம் மாறுகிறார். 1. தாமிர நிறம் 2. இளம் சிவப்பு 3. தங்க நிறம் 4. நவரத்தின பச்சை 5. இன்ன நிறமென கூறமுடியாத தோற்றம். இப்படி ஐந்து வண்ணத்தில் காட்சி தருவதால் இவர் பஞ்சவர்ணேஸ்வரர் என அழைக்கப்படுகிறார். சிவலிங்கத் திருமேனி ஒரு நாளில் பகல் ஒன்றில் 6 நாழிகைக்கு ஒரு முறை ஐந்து தடவை நிறம் மாறுகிறார். பிருங்கி முனிவர் வண்டு உருவில் இறைவனை வழிபட்டதால் லிங்கத்தில் துளைகள் இருப்பதைக் காணலாம். மூலவருக்குப் பக்கத்தில் ஒரு சிறிய லிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இது அகத்திய லிங்கம் எனப்படுகிறது. உற்சவர் கல்யாண சுந்தரேஸ்வரர். அம்பாள் கல்யாணசுந்தரி கிரிசுந்தரி. தனி சந்நிதியில் தெற்கு நோக்கி காட்சி தருகிறாள். தலவிருட்சம் வில்வம் மிகவும் பழமையானது. முதன் முதலாக தோன்றிய வில்வமரம் என்பதால் இதற்கு ஆதிமரம் என்ற பெயரும் உண்டு. தீர்த்தம் சப்த சாகரம். பிரம்மதேவர் இத்திருக்குளத்தின் கிழக்குத் திசையில் ரிக் வேதத்தையும் தெற்கு திசையில் யசூர் வேதத்தையும் மேற்குத் திசையில் சாம வேதத்தையும் வடக்கு திசையில் அதர்வண வேதத்தையும் நடுவில் சப்தகோடி மகா மந்திரங்களையும் பதிணென் புராணங்களையும் வைத்து புனிதமாக்கினார் என்று தலபுராணம் கூறுகிறது. திரிபுர சுந்தரி தனி சன்னதியில் காட்சி தருகிறாள். முருகப் பெருமான் ஒரு முகம் நான்கு கரங்களுடன் வள்ளி தெய்வானையுடன் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். எட்டு கைகளுடன் கூடிய அஷ்டபுஜ மகாகாளி இங்கு அருள்புரிகிறாள். 8 கரங்களுடன் ஆடும் நடராஜர் அகத்தியர் காசிவிஸ்வநாதர் திருநாவுக்கரசர் திருஞானசம்பந்தர் சுந்தரர் காசி விஸ்வநாதர் கணநாதர் காசிவிநாயகர் பாணலிங்கம் விஸ்வநாதர் முருகன் நால்வர் குந்திதேவி தட்சிணாமூர்த்தி லிங்கோத்பவர் பிரம்மா துர்க்கை சண்டிகேஸ்வரர் ஆகியோரை மண்டபங்களிலும் பிராகாரத்திலும் தரிசிக்கலாம். முசுகுந்த சக்கரவர்த்தி இந்திரனிடமிருந்து தியாகராஜரைப் பெற்று திருவாரூர் செல்லும் போது இத்தலத்தில் 3 நாள் இருந்து தியாகராஜரை வைத்து பூஜை செய்துள்ளார். கொடிய அரக்கனாகிய இரண்யனைக் கொல்ல நரசிம்ம வடிவம் வேண்டி திருமால் இத்தலத்திற்கு வந்து தவம் இருந்தார். அப்போது இத்தல இறைவன் தோன்றி நரசிம்ம வடிவத்தை திருமாலுக்கு அளித்தார். இரணியனை மாய்ந்த பின் தன் கருவறை விமானத்தின் உச்சியில் மேற்கு முகமாய் இருக்கவேண்டும் என்று இறைவன் பணித்தார். அதன்படி அந்த வடிவத்தை இன்றும் இந்த விமானத்தில் காணலாம்

பஞ்சவர்ணேஸ்வரர் கோவில் கோச்செங்கட் சோழன் கட்டிய ஒரு மாடக்கோவிலாகும். ஐந்து நிலை அழகான ராஜ கோபுரம் மற்றும் 3 நிலைகளையுடைய உள் கோபுரத்துடன் இந்த ஆலயம் அமைந்துள்ளது. இறைவன் சந்நிதி ஒரு கட்டுமலை மீது அமைந்துள்ளது. கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தால் ஒரு விசாலமான இடம் உள்ளது. இந்தப் பிரகாரத்தில் கவசமிட்ட கொடிமரமும் அதற்கு முன்னால் கொடிமர விநாயகரும் உள்ளார். இதையடுத்து வடபுறம் வசந்த மண்டபமும் தென்புறம் அமர்நீதி நாயனார் தராசுத் தட்டில் ஏறி அமர்ந்த துலா மண்டபமும் உள்ளன. 63 நாயன்மார்களில் ஒருவரான அமர்நீதி நாயனார் தனது மனைவி மற்றும் மகனுடன் சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்டு முக்தி பெற்ற தலம் திருநல்லூர். இத்தலத்தில் அமர்நீதி நாயனார் அவர் மனைவி மகன் அருகில் அந்தணர் உருவில் இறைவன் ஆகியோர் உருவச் சிலைகள் உள்ளது. ஒருசமயம் ஆதிசேசனுக்கும் வாயுவுக்கும் தமக்குள் யார் வலியவர் என்பதில் போட்டி எழுந்தது. ஆதிசேசன் கயிலையைத் தன் ஆயிரம் மகுடங்களாலும் இறுகப்பற்றிக் கொள்ள வாயுதேவன் சண்டமாருதமாக மலையை அசைக்க முற்பட்டு பலத்த காற்றை வீசினார். இந்த இருவரின் போட்டியால் தேவர்கள் அஞ்சினர். தேவர்கள் வேண்டுகோளுக்கு இணங்கி ஆதிசேசன் தன்பிடியைச் சிறிது தளர்த்தினார். இது தான் தக்க சமயமென்றெண்ணி வாயு இரு சிகரங்களைப் பெயர்த்துக் கொண்டு வந்து தென்னாட்டில் ஒன்றை திருநல்லூரிலும் மற்றொன்றை அருகிலுள்ள ஆவூரிலும் விடுவித்தார். நல்லூரில் விழுந்த அம்மலைச் சிகரமே இறைவன் பஞ்சவர்ணேஸ்வரர் எழுந்தருளியுள்ள மலையாகும். தென் கயிலாயம் என்று இத்தலமும் வழங்கப்படுகின்றது.

இமய மலையில் பார்வதியை சிவன் திருமணம் செய்யும் காட்சியைக்காண உலகில் உள்ள உயிரினங்களும் திரண்டு நின்றன. இதனால் வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது. உலகை சமப்படுத்த அகத்தியரை தென் திசைக்கு செல்லும் படி சிவபெருமான் ஆணையிட்டார். தனக்கு திருமணத்தை காணும் வாய்ப்பு இல்லாமல் போய் விட்டதே என எண்ணிய அகத்தியருக்கு நினைக்கும் போது திருமண காட்சியை கொடுப்பதாக இறைவன் வரமளிக்கிறார். அதன்படி இத்தலம் வந்து திருமணக் காட்சியை காண எண்ணிய அகத்தியருக்கு இறைவன் இத்தலத்தில் திருமணக்காட்சி காட்டியருளினார். இதைக்கண்டு மகிழ்ந்த அகத்தியர் இங்குள்ள சுந்தரலிங்கத்தின் வலதுபுறம் மற்றொரு லிங்கத்தை வைத்து பூஜித்தார். சிவலிங்கத்தின் பின்னால் அகத்தியருக்குத் திருமணக் கோலம் காட்டியருளிய கல்யாண சுந்தரர் உருவம் சுதை வடிவில் காட்சியளிக்கின்றது. இருபக்கத்திலும் திருமாலும் பிரம்மாவும் காட்சி தர அகத்தியர் வழிபடும் நிலையில் நிற்கின்றார். அகத்தியர் தரிசித்த திருமணக்கோல மூர்த்தியை மூலலிங்கத்தின் பின்புறம் கருவறையில் காணலாம். திருநாவுக்கரசர் திருச்சத்திமுற்றத்தில் இறைவன் தன்னுடைய திருப்பாதங்களைத் தன் தலைமேல் வைத்து அருள வேண்டும் என்று இறைவனிடம் பதிகம் பாடி வேண்டுகோள் வைத்தார். அவரின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட இறைவன் இத்தலத்தில் திருநாவுக்கரசருக்கு பாத தரிசனம் தந்தார். அன்று முதல் இங்கு பெருமாள் கோயிலைப் போல சடாரி வைக்கும் வழக்கம் ஏற்பட்டது. இக்கோயிலில் உள்ள சோமாஸ்கந்த மூர்த்தி மாசி மகத்தின் போது கோயிலுக்குள் உலா வருவார். மாடக்கோயிலின் படிகள் வழியாக இவர் இறங்கும் போது அடியார்கள் வெண்சாமரமும் விசிறியும் வீசுவார்கள். ஆனாலும் கூட பெருமாளின் முகத்தில் வியர்வை துளிகள் அரும்புவதைக் காணலாம். இத்தலத்தின் மேற்கு கோபுர வாயிலில் மேல்புறம் பலிபீட வடிவில் கணநாதர் வீற்றிருக்கிறார். இந்த வடிவத்துடன் இத்தலத்திலும் காசியிலும் மட்டுமே கணநாதர் வழிபடப்படுகிறார். ஆண்டுக்கு ஒருமுறை இரவில் நடக்கும் கணநாதர் பூஜை சிறப்பானது. அன்றைய தினம் இந்த ஊரிலும் பக்கத்து ஊரிலும் உள்ள மக்கள் தங்கள் பசு ஒரு வேளை கறக்கும் பாலை அப்படியே கொடுத்து இப்பூஜையில் கலந்து கொள்கின்றனர். இந்த பூஜையை பக்தர்கள் பார்க்க முடியாது.

பாண்டவர்களின் தாய் குந்திதேவி பஞ்சபூதங்களினால் குழந்தை பெற்றாள் என்பதால் அவளுக்கு தோஷம் ஏற்படுகிறது. இந்த தோஷம் நீங்க குந்தி தேவி நாரதரிடம் யோசனை கேட்கிறாள். ஏழு கடல்களில் நீராடினால் தோஷம் நீங்கும் என நாரதர் கூறினார். நான் பெண் என்னால் எப்படி ஏழு கடல்களில் சென்று நீராட முடியும் எனவே வேறு ஏதாவது வழி கூற வேண்டும் என்கிறாள் குந்தி. அப்படியானால் கும்பகோணம் அருகிலுள்ள நல்லூர் சென்று 48 நாட்கள் கல்யாண சுந்தரேஸ்வரரை வழிபடு. அதற்குள் நான் வேறு வழி சொல்கிறேன் என்கிறார் நாரதர். குந்தி வழிபாடு செய்து வருவதற்குள் நல்லூர் தலத்திலுள்ள குளத்தில் ஏழு கடல்களின் நீரையும் நாரதர் சேர்த்து விடுகிறார். மகம் நட்சத்திரத்தில் பிறந்த குந்தி தன் தோஷம் நீங்க நல்லூர் குளத்தில் நீராடி தன் தோஷங்கள் நீங்கப் பெற்றாள். மகம் நட்சத்திரத்திற்குரிய கோயில் நல்லூர் என்றும் இக்குளத்தில் நீராடினால் கும்பகோணம் மகாமக குளத்தில் நீராடிய பலன் கிடைக்கும் என்று தல புராணங்கள் கூறுகின்றன. இத்தலத்தில் முருகப் பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடல்கள் பாபாடியுள்ளனர்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.