தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 39 திருப்பனந்தாள்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 39 வது தேவாரத்தலம் திருப்பனந்தாள. மூலவர் செஞ்சடையப்பர் தாலவனேஸ்வரர் ஜடாதரர் அருணஜடேஸ்வரர். இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சித்திரை மாதம் சில நாட்களில் மூலவர் மீது சூரிய ஒளிக்கதிர்கள் விழுகின்றன. அம்பாள் பிருகந்நாயகி பெரிய நாயகி தாலவனேஸ்வரி. தலமரம் பனைமரம் தல விருட்சத்தின் பக்கத்தில் உள்ள சிவலிங்கத்தை அடுத்துள்ள கிணறு நாககன்னிகை பிலம் எனப்படும். இதன் வழியாக நாககன்னியர் வந்து இறைவனை வழிபட்டுள்ளார். தீர்த்தம் பிரம்ம தீர்த்தம் ஐராவத தீர்த்தம் தாடகை தீர்த்தம். ஆவணி அமாவாசையன்று இங்குள்ள பிரம்ம தீர்த்தத்தில் இறைவன் எழுந்தருள்வார். புராண பெயர் தாடகையீச்சரம். கோயிலுக்கு தாடகையீஸ்வரம் தாடகேச்சுரம் என்றும் உள்ளது. தாடகை பூசித்தமையால் இப்பெயர் பெற்றது. பனையின் தாளின் (அடிப்பகுதி) இறைவன் எழுந்தருளியிருத்தலாலும் பனைமரம் தலமரமாதலால் ஊரின் பெயர் பனந்தாள் என்று பெயர் பெற்றது. இத்தல விநாயகர் ஆண்ட விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.

திருப்பனந்தாளில் வாழ்ந்த நக்கன் தரணி என்பவனால் இக்கோயில் கருங்கல்லால் கட்டப்பட்டது. கொள்ளிடம் ஆற்றின் தென்பகுதியில் அமைந்துள்ள இக்கோயிலில் மேற்கு நோக்கிய 7 நிலை ராஜகோபுரம் கிழக்கில் 5 நிலை கோபுரம் மூன்று பிரகாரகங்களுடன் கோயில் உள்ளது. இரண்டு ஆண் பனைமரங்கள் கோயில் பிரகாரத்தில் உள்ளன. சுவாமி விமானம் பிரணவ வடிவில் மூன்று ஸ்தூபிகளுடன் விளங்குகிறது. இத்தல விநாயகர் ஆண்ட விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். இரண்டு ஆண் பனைமரங்கள் கோயில் பிரகாரத்தில் உள்ளன. சுவாமி விமானம் பிரணவ வடிவில் மூன்று ஸ்தூபிகளுடன் விளங்குகிறது. இத்தல விநாயகர் ஆண்ட விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். இக்கோயிலின் இரண்டாம் பிராகாரத்தில் மேற்கு கோபுரத்தின் தெற்கு பக்கம் குங்குலியக்கலய நாயனாரின் கோயில் உள்ளது. இந்நாயனாரின் மனைவியின் பெயர் நீலாயி என்று கல்வெட்டு கூறுகிறது. கல்வெட்டில் இத்தலம் திருத்தாடகை ஈச்சரம் என்றும் இறைவன் பெயர் தாடகேச்சரத்து மகாதேவர் என்றும் குறிக்கப்படுகிறது. ஆஸ்தான மண்டபத்தில் ஊர்த்துவ தாண்டவர் உள்ளார். தருமபுரம் ஆதினத்துக்கு சொந்தமான இக்கோயிலில் குமரகுருபரர் ஏற்படுத்திய காசிமடம் உள்ளது.

சிற்பங்கள் பல்லவர் கால வேலைப்பாடுடையன இராச கோபுரத்தின் மீது சுதை வேலைப்பாட்டுடன் கூடிய கந்தர்வர் கிம்புருடர் உருவங்கள் அமைந்துள்ளன. பதினாறு கால் மண்டபத்தில் தாடகையினால் சாத்தப்பட்ட மாலையினை ஏற்றுக் கொள்ள பெருமான் தலை குனிந்ததும் அதனை நிமிர்த்த அரசன் யானைகளைக் கட்டி இழுத்ததும் குங்குலியக்கலய அரிகண்டம் போட்டு நிமிர்ந்ததும் அப்போது சிவலிங்கத்திடையே இறைவரது திருக்கரம் தோன்றியதும் நாயனார் வழிபட்டதும் ஆகிய உருவங்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன. சிங்க வாயிலினுள் நுழைந்ததும் வடபுற மதியில் திருக்குறிப்புத் தொண்டர் வரலாற்றினையொட்டிச் சில உருவங்கள் அமைந்திருக்கின்றன. சுப்ரமண்யர் உற்சவருக்குப் பின் தாடகை பெருமானை வழிபட்டுப் பதினாறு கைகள் பெற்றது சிற்பமாக செதுக்கப் பட்டிருக்கிறது. கோயில் கட்டிய தரணி நக்கனார் சிற்பமும் அமைக்கப்பட்டிருக்கிறது. வெளவால் நெற்றி மண்டபத்தில் சுதையினால் பஞ்ச மூர்த்திகளும் வேலை செய்யப்பட்டிருக்கின்றன. அலங்கார மண்டபத்தின் முன் மேலே விதானத்தில் தாடகை வரலாறு ஒவியமாக வரையப்பட்டுள்ளது. அறுபத்து மூவர் வரிசையில் சிலைகளுக்குப் பின் அந்த அந்த நாயனாரின் உருவங்கள் வரையப்பட்டுள்ளன. 1942 இல் திருப்பனந்தாளில் வாழ்ந்த துளசி ராஜா என்பவர் இவ்வோயித்தை வரைந்தவர் ஆவர். வெளவால் நெற்றி மண்டபத்தில் உள்ள பஞ்ச மூர்த்திகளின் சுதை உருவத்திற்கு எதிரே பஞ்ச பூதத்தலங்களின் படமும் அதனையடுத்து இறைவனின் தாண்டவங்களும் தத்ரூபமாக வரையப் பெற்றுள்ளன.

தாடகை என்ற பெண் மகப்பேறு வேண்டி பிரம்மனை நோக்கி தவம் இருந்தாள். அப்போது பிரம்மன் அவள் முன் தோன்றி நீ தாலவனேஸ்வரரை சென்று பூசித்து வழிபட்டால் விரும்பிய பேற்றைப் பெறுவாய் என்று அருளினார். தாடகையும் அவ்வாறே இத்தலத்திற்கு வந்து நியமம் தவறாமல் விதிப்படி இறைவனைப் பூசித்து வந்தாள். ஒரு நாள் பூஜை முடிவில் மாலையைச் சாத்த எழுந்த காலத்து அவள் அன்பை உலகத்திற்கு வெளிப்படுத்த இறைவன் அவளுடைய ஆடையை விலகச் செய்தனன். ஆடையை ஒரு கையால் பற்றிக்கொண்டு மாலை சாத்தமுடியாமல் இரண்டு கைகள் மட்டுமே இருக்கிறதே இன்னும் கைகள் இருந்தாள் இறைவனுக்கு மாலை சாத்தலாமே என்று அப்பெண் வருந்தி துதித்து வழிபட்டாள். அப்போது இறைவன் அந்த பெண்ணுக்காக இரங்கி தன் தலையை சற்று சாய்த்து கொடுத்தார். மேலு இறைவன் அவளுக்கு தரிசனம் கொடுத்து 16 கைகளை கொடுத்தார். மங்கையும் மாலையை அணிவித்து விட்டு மகிழ்ச்சியுடன் வணங்கிச் சென்றாள். அன்று முதல் சிவலிங்க திருமேனி சாய்ந்தே இருந்தது. அப்போது இந்தக் கோயிலில் சோழ மன்னனின் திருப்பணி நடந்து கொண்டிருந்தது. சிவன் தலை சாய்ந்திருக்கும் செய்தியை மன்னன் கேள்விப்பட்டான். உடனே தனது படையை அனுப்பி சிவனது தலையை நிமிர்த்த ஏற்பாடு செய்தான். யானைகளை சிவலிங்கத்தோடு சேர்த்து கயிற்றால் கட்டி இழுத்தனர். ஆனால் முடியவில்லை. மனம் வருந்தினான் மன்னன். 63 நாயன்மார்களில் ஒருவரான குங்குலியக்கலய நாயானர் இத்தல சிவனை வழிபட வந்திருந்தார். அவருக்கும் இந்த செய்தி எட்டியது. நமசிவாய எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதியபடி சிவனுக்கு குங்குலியப் புகையினால் தூபமிட்டார். பின் பூவினால் சுற்றப்பட்ட ஓர் கயிறை எடுத்து ஒரு முனையை சிவலிங்கத்தில் இணைத்து மற்றொரு முனையை தன் கழுத்தில் கட்டி பலமாக இழுத்தார். கயிறு இறுகியதால் இவரது உயிர் போகும் நிலை ஏற்பட்டது. ஆனால் நாயனார் கவலைப்படவில்லை. தன் முழு பலத்தையும் கொண்டு இழுத்தார். இவரது அன்புக்கு கட்டுப்பட்டார் சிவன். இதற்கு மேலும் நாயனாரை இறைவன் சோதிக்க விரும்பவில்லை. சிவலிங்கம் நேரானது. குங்குலியக்கலயனாரின் பக்தியையும் இறைவனிடம் கொண்ட அன்பையும் கண்ட மன்னன் மகிழ்ந்தான். நாயனாருக்கு பல பரிசுகள் கொடுத்து கவுரவப்படுத்தினான்.

முன்னொரு கற்பத்தில் அம்பாள் இறைவனை வணங்கி ஞானோபதேசம் புரிந்தருளல் வேண்டும் எனப் பிரார்த்தித்தாள். அதற்கு இறைவன் நீ தாலவனம் சென்று எம்மை பூசித்தால் அருள் செய்வோம் என்று உரைத்தனர். அம்மையாரும் இறைவன் ஆணைப்படி இத்தலத்துக்கு வந்து எதிர்முகமாக வடக்கு திசையில் அமர்ந்து தவம் செய்தார். இறைவன் காட்சியளித்து அம்பாளுக்கு ஞானத்தை உபதேசித்து அருள் செய்தனர். இக்காரணத்தால் இறைவர் மேற்கு முகமாக எழுந்தருளியிருக்கிறார். இறைவி கிழக்கு முகமாக எழுந்தருளி இருக்கிறார். அம்பாள் உபதேசம் பெறுவதற்கு முன்பாக பாலாம்பிகை எனவும் உபதேசம் பெற்றபின் பிரகந்நாயகி எனவும் பெயர் அழைக்கப்படுகிறாள்.

அசுரர்களின் கொடுமைக்கு உட்பட்ட தேவர்கள் ஓடிவந்து இந்திரனிடம் முறையிட்டார்கள். இதனைக் கேட்ட இந்திரன் போர் புரிய ஐராவதத்தை வருமாறு அழைத்தான். ஐராவதம் போகத்தை விரும்பி மண்ணுலகில் மந்தர மலையைக்கு வந்திருந்தது. இதனை அறிந்த இந்திரன் தக்க சமயத்துக்கு உதவாத காரணத்தால் தெய்வ வலிமையை இழந்து மண்ணுலகத்தில் காட்டானையாக திரிவாய் என்று சாபமிட்டான். இதனால் காட்டில் ஐராவதம் காட்டுயானையாக திரிந்து கொண்டிருந்தது. அப்போது காட்டிற்கு வந்த நாரதரை வணங்கி சாபவிமோசணம் பெற அவரிடம் வழி கேட்டது. நாரதர் தாலவனேஸ்வரரை வணங்கினால் சாபத்தை போக்கிக் கொள்ளலாம் என்று கூறினார். அவரின் சொற்படி இத்தலத்திற்கு ஐராவதம் வந்து தாலவனநாதரை வணங்கித் தன் சாபத்தைப் போக்கிக் கொண்டது.

குங்குலியக்கலய நாயனார் இவ்வூரில் தங்கியிருந்த காலத்தில் அவரது மகன் இறந்தான். தன் மகன் இறந்த செய்தி கேட்டதும் இது இறைவன் செயல் என்று எண்ணி மகனை எடுத்துக் கொண்டு ஈமக்கடன் முடிக்கச் சென்றார். அப்போது விநாயகர் அசரீரியாக நாக கன்னிகை தீர்த்தத்தில் மூழ்கி எடுங்கள் என்று அருளினார். வினாயகர் அருளியபடி நாயனார் அவ்வுடலைக் கொண்டு வந்து நாக கன்னிகை தீர்த்தத்தில் மூழ்கி எடுக்க அவரது மகன் உயிர் பெற்று எழுந்தான். இவ்விநாயகர் இன்றும் பிணமீட்ட விநாயகர் என்ற திருநாமத்துடன் திருவீதியின் வாயு மூலையில் எழுந்தருளியுள்ளார்.

நாகலோகத்தில் வாசுகி தன் மகள் சுமதிக்கு திருமணம் செய்ய எண்ணினாள். சுமதி அதைப் பற்றிய முயற்சி எதையும் தற்போது செய்ய வேண்டாம் என்று கூறி கன்னி மாடத்தில் அமர்ந்திருந்தாள். இறைவன் அவளது கனவில் தோன்றி நீ தாலவனேஸ்வரரை பூசிப்பாய் என அருளினார். சுமதியும் அவ்வாறே அக்கோவிலின் கிணறு வழியாக இத்தலம் வந்து இறைவனை வழிபட்டு வந்தாள். அப்போது தல யாத்திரை செய்து வந்த அரித்துவசன் என்னும் அரசனும் இத்தலத்தை வந்தடைந்தான். சுமதி அவனைக் கண்டு விருப்பமுற்று நாகலோகத்திற்கு அழைத்துச் சென்று திருமணம் செய்து கொண்டாள். சில நாள் அங்கிருந்து மீண்டும் கிணற்றின் வழியாக வந்து அம்பாளுக்கு மேல்புறம் ஓர் தடாகம் அமைத்து தினந்தோறும் வழிபட்டு வந்தாள். அரித்துவசனும் ஆலயத்திற்குத் தெற்கு பக்கமு ஓர் தடாகமும் இலிங்கமும் அமைத்தான். இவ்வாறு இருவரும் பூசித்துப் பல திருப்பணிகளும் செய்து முத்தி பெற்றார்கள்.

நாகுன்னன் என்பவர் அந்தணர் குலத்தில் உதித்தவன் பிதுர்க்கடனுக்காக வைத்திருந்த பொருள்களை அபகரித்ததால் நரகத் துன்பமடைந்து இறுதியில் வேடுவனாகப் பிறந்தான். வழிப்போக்கர்களின் பொருள்களைக் கவர்ந்து உயிர் வாழ்ந்து வந்தான். ஒரு நாள் தலயாத்திரை செய்து வரும் முனிவர்களுடைய பொருள்களை அபகரிக்க எண்ணி அவர்களைப் பின் தொடர்ந்து வந்தான். இத்தலத்து எல்லைக்கு வந்ததும் தனது நல்வினைப் பயனாலே வந்த காரியத்தை மறந்து மூன்று நாட்கள் தாலவனேஸ்வரரை பூசித்துத் திருவாதிரைத் திருநாளன்று சிவலோகம் சென்று அடைந்தான். சங்குகன்னன் என்ற வேடுவர் தலைவன் நாரதர் ஆணைப்படி இத்தலத்திற்கு வந்து தீர்த்தங்களில் நீராடி தாலவனேஸ்வரரை பூசித்து விரும்பியபடி மகப்பேற்றை அடைந்தான்.

இக்கோயிலின் மண்டபங்களிலும் சுவர்களிலும் பல கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. அவைகளெல்லாம் தொல்பொருள் துறையினரால் படியெடுக்கப் பெற்றுள்ளன. இத்திருக்கோயிலைக் கட்டியவன் திருப்பனந்தாள் நக்கன் தரணி என்பவனாவான். அவனே இதனைக் கருங்கல்லால் அமைத்தவனாவான். இதனைக் கோயில் கருங்கல்லின் அடிப்புறச் சுவரில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டால் அறியலாம். சோழ மன்னன் இரண்டாம் இராசராசன் இத்திருக்கோயிலை மேலும் பெரிதாக எடுத்துக் கட்டினான். கல்வெடுக்களில் இறைவன் பெயர் திருத்தாடகையீச்சரத்து மகாதேவர் திருத்தாடகேச்சரத்துப் பெருமான் திருத்தாடகேச்சுரமுடைய நாயனார் என வழங்கப்படுகிறது. முதற் குலோத்துங்கசோழன் காலத்துக் கல்வெட்டிலிருந்து இறைவியின் பெயர் பெரிய நாச்சியார் என்பது தெரிய வருகிறது. இறைவியின் கோயிலைக் கட்டியவன் வெண்கூருடையார் அன்பர்க்கரசு மருத மாணிக்கமான வில்லவராசன் என்ற செய்தி இக்கோயில் மகா மண்டபத்து வாசலில் தெற்கு பக்கம் உள்ள கல்வெட்டினால் தெரிந்து கொள்ளலாம். சோழ மன்னர்களும் அவர்களது சேனைத் தலைவர்களும் இக்கோயிலுக்கு அடிக்கடி வந்து கோயிலைச் சுற்றிப் பார்த்தும் கோவில் பணியில் இருக்கும் பண்டாரத்தைச் சோதித்தும் வந்த செய்தி கல்வெட்டுக்களின் வழியாக தெரிந்து கொள்ளலாம். சோழமன்னர்கள் அதிராசேந்திர தேவன் குலோத்துங்க சோழன் ஆகியோர் காலத்தில் கோயில் நன்கு போற்றிப் பாதுகாக்கப்பட்டு வந்திருக்கிறது. அக்காலத்தில் இக்கோயிலில் இருந்த தேவகன்மிகள் கோயிலில் இருந்த திருவாபரணம் பரிகலச் சின்னம் முதலியவைகளைத் திருடிக் கொண்டார்கள். அதனைச் கண்டு பிடித்த மன்னன் அவர்களுக்கு அபராதம் விதித்தார். அவர்களால் அபராதம் கட்ட முடியாமையால் அவர்கள் தங்கள் கோயில் உரிமையை விற்று அபராதம் செலுத்தியதையும் கல்வெட்டால் அறியலாம். இவ்வூரில் பாயும் மண்ணி ஆற்றிற்கு குஞ்சர மல்லன் எனவும் ஊருடையப்பர் கோயிலுக்கு அசனீச்சரம் எனவும் குங்கிலியக் கலயனார் மனைவி பெயர் நீலாயி எனவும் பெயர் வழங்கியமை கல்வெட்டுக்களால் புலனாகிறது.

தாழம் பூவை சான்றாகக் காட்டி சிவபெருமானின் திருமுடியைக் கண்டதாகப் பொய் கூறிய பிரம்மனுக்கு அதனால் ஏற்பட்ட பாவம் மற்றும் இந்திரனுக்கு விருத்திராசுரனைக் கொன்ற பாவம் கெளதமர் மனைவியைக் களவாட முயற்சித்ததால் சேர்ந்த தோஷம் தக்கனுடன் கூடி இறைவனுக்கு எதிராக யாகத்தில் ஈடுபட்ட சூரியனுக்கு உண்டான பாவம் குருபத்தினியைக் கூடின சந்திரனுக்கு மாபாதகம் ஆகிய பாவங்ளை இத்தல இறைவன் போக்கியுள்ளார். இத்தல இறைவனை வாசுகியின் மகளாகிய சுமதி என்னும் நாக கன்னிகை மற்றும் அகத்தியர் ஆதிசேஷன் பார்வதி சங்கு கன்னன் நாகு கன்னன் நாக கன்னியர் பிரம்மன் திருமால் இந்திரன் ஐராவதம் அகத்தியர் சூரியர் சந்திரன் ஆதிசேஷன் நாககன்னிகை தாடகை குங்கிலியக்கலய நாயனார் பூசித்து வழிபட்டுள்ளார்கள். இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. திருநாவுக்கரசர் திருஞானசம்பந்தர் ஐயடிகள் காடவர்கோன் நம்பியாண்டார் நம்பி அருணகிரிநாதர் சிதம்பர முனிவர் காளமேகப்புலவர் செஞ்சடை வேதிய தேசிகர் தருமை சண்முகத்தம்பிரான் ஆகியோர் பாடல்கள் பாடியுள்ளார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.