சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 261 வது தேவாரத்தலம் திருக்கழுகுன்றம். புராணபெயர் கழுகுன்றம், வேதாசலம், கதலிவனம். மூலவர் வேதகிரீஸ்வரர், பக்தவத்சலேஸ்வரர். இறைவன் வாழைப் பூக்குருத்துப் போன்று சுயம்பு மூர்த்தியாக அருள்பாளிக்கிறார். அம்பாள் சொக்கநாயகி, திரிபுரசுந்தரி. தீர்த்தம் சங்குத் தீர்த்தம்.. தலவிருட்சம் வாழை. திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவராலும் பதிகம் பாடப்பெற்ற திருமுறைத் தலங்கள் 44. அவற்றில் திருக்கழுக்குன்றம் தலமும் ஒன்றாகும். வேதமே மலையாய் இருப்பதால் இத்தலம் வேதகிரி எனப் பெயர் பெற்றது. மலைமேல் ஒரு கோயிலும் மலையின் கீழே ஊருக்குள் ஒரு கோயிலும் உள்ளது. மலை மேல் இருக்கும் கோவில் திருமலை என்றும் ஊருக்குள் இருக்கும் கோவில் தாழக்கோயில் என்றும் அழைக்கப்பபடுகிறது. மலைக்கோவிலில் இறைவன் வேதபுரீஸ்வரர் என்ற பெயரிலும் தாழக்கோவிலில் இறைவன் பக்தவத்சலேஸ்வரர் என்ற பெயரிலும் குடி கொண்டுள்ளனர். ரிக், யஜுர், சாமம், அதர்வணம் என்ற நான்கு வேதங்களும் 4 பெரிய பாறைகளாக இருப்பதாகவும் அவற்றுள் அதர்வணவேத பாறை உச்சியில் சிவபெருமான் கோவில் கொண்டுள்ளார் என்று தலபுராணம் விவரிக்கிறது.
சுரகுரு மகாராஜாவுக்கு சுவாமி இத்தலத்தில் காட்சி தந்தார். அவரே இத்திருத்தலம் அமையக் காரணமாக இருந்தவர் என்றும் வரலாறு கூறுகிறது. 565 படிக்கட்டுகளுடன் மலை மீது உள்ள மலைக்கோவில் சுமார் 4 கி.மி. சுற்றளவும் 500 அடி உயரமும் கொண்டு மலைமேல் இராஜகோபுரம் ஒரு பிராகாரத்துடன் அமைந்துள்ளது. மூலவர் வேதகிரீஸ்வரர் என்ற பெயருடனும் அம்மன் சொக்கநாயகி என்கிற பெண்ணினல்லாளம்மை என்ற பெயரிலும் எழுந்தருளி இருக்கின்றனர். சிவத்தலங்களில் கருவறைக்கு எதிரில் நந்தி இல்லை. இறைவன் மட்டுமின்றி இறைவியும் சுயம்பு ஆகும். கழுகுகள் பூசித்துப் பேறு பெற்ற காரணத்தால் கழுக்குன்றம் என்று பெயர் ஏற்பட்டது.
பிரம்மனின் எட்டு மானச புத்திரர்கள் சாயுச்சியம் (இறைவனோடு இரண்டறக் கலத்தல்) பதவிக்காக தவம் இருந்தனர். தவத்தின் முடிவில் முடிவில் இறைவன் தோன்றி சாரூபம் (இறைவனின் உருவை ஒத்த நிலையடைதல்) பதவியாக வரம் தந்து இப்பதவியில் சில காலம் இருங்கள் பிறகு சாயுச்சியம் தருகிறோம் என்றார். அதை ஏற்க மறுத்து இறைவனுடன் வாதிட்ட புத்திரர்களை கழுகுருவம் அடைக என்று சாபமிட்டார். எனவே நான்கு யுகத்திற்கு இருவர் என கழுகுகளாக இங்கு வரும் அவர்கள் சர்க்கரைப் பொங்கல் பிரசாதம் உண்டு செல்வர். கழுகுகளுக்கு உணவு கொடுக்கும் செயல் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்று வருகிறது. முதல் யுகத்தில் சாபம் பெற்ற சண்டன் பிரசண்டன் என்னும் கழுகுகளும் இரண்டாம் யுகத்தில் சம்பாதி ஜடாயு என்னும் கழுகுகளும் மூன்றாம் யுகத்தில் சம்புகுத்தன் மாகுத்தன் என்னும் கழுகுகளும் நான்காம் யுகத்தில் சம்பு ஆதி என்னும் கழுகுகளும் முறையே வழிபட்டுப் பேறு பெற்றன. இறைவனின் வரத்திற்கு சாரூபம் (இறைவனின் உருவை ஒத்த நிலையடைதல்) ஏற்ப இந்த கழுகுகள் இறைவனாகவே பக்தர்களால் வழிபடப்பட்டன. கழுகுகள் இராமேஸ்வரத்தில் ஸ்னானம் செய்து கழுக்குன்றத்தில் ஆகாரம் உண்டு காசியில் அடைக்கலம் ஆவதாக ஐதீகம். 500 அடி உயரமுள்ள இம்மலையில் நாள் தோறும் உச்சிப்பொழுதில் கழுகு வந்து உணவு பெற்றுச் செல்லுவதால் இதற்கு பட்சி தீர்த்தம் என்றும் திருக்கழுக்குன்றம் என்றும் பெயராயிற்று. சில வருடங்கள் முன்பு வரை இக்கழுகுகள் மதியம் வந்து உணவு சாப்பிட்டு சென்று கொண்டிருந்தது. இப்போது அவைகள் வருவதில்லை.
மலைக்கோவிலுக்கு ஏறிச் செல்லும் படிகள் வழியாகவே கீழே இறங்கி வரலாம். ஆயினும் கீழே இறங்குவதற்கு மற்றொரு பாதையும் உள்ளது. அவ்வழியே இறங்கி வந்தால் பல்லவர் மகேந்திரவர்மன் காலத்திய கி.பி. 610 – கி.பி. 640 குடைவரைக் கோவில் ஒன்றுள்ளது. கோவிலினுள்ளே ஒரு சிவலிங்கம் உள்ளது. ஊருக்குள் இருக்கும் 2வது கோவில் சுமார் 12 ஏக்கர் நிலப்பரளவில் நான்கு புறமும் கோபுரங்களுடன் அமைந்துள்ளது. இவற்றில் 7 நிலையுள்ள கிழக்கிலுள்ள கோபுரமே இராஜகோபுரம் ஆகும். ஆலயம் மூன்று பிராகாரங்களுடன் அமைந்துள்ளது. கல்மண்டபத்தின் மீது செங்கல்லால் அமைக்கப்பட்ட மிகப் பழமையான கோயில். கோயிலுக்கு வெளியே 5 தேர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இக்கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தால் நேர் எதிரே ஒரு 4 கால் மண்டபம் உள்ளது, வலதுபுறம் அலுவலக மண்டபக் கற்சுவரில் அழகான அஷ்டபுஜ துர்க்கையின் சிற்பம் உள்ளது. இடதுபுறம் 16 கால் மண்டபம். இதிலுள்ள தூண்களில் அழகிய சிற்பங்கள் உள்ளன. 4 கால் மண்டபத்தையடுத்து 2 வது கோபுரம். கோபுரத்தின் இருபுறமும் விநாயகரும் சுப்பிரமணியரும் உள்ளனர். வெளிப் பிராகாரம் வலம் வரும் போது வடக்குச் சுற்றில் நந்தி தீர்த்தமும் கரையில் நந்தியும் உள்ளது.
மூலவர் சதுரபீட ஆவுடையாரில் பக்தவத்சலேஸ்வரர் என்ற பெயருடன் கிழக்கு நோக்கி எழுந்தரிளியுள்ளார். கருவறை கஜப்பிரஷ்ட அமைப்புடையது. கோஷ்டமூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, இலிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். சண்டேஸ்வரர் தனி சந்நிதியில் உள்ளார். உட்பிராகாரத்திலுள்ள சுமார் 7 அடி உயரமுள்ள அகோரவீரபத்திரர் உள்ளார். 2வது கோபுர வாயிலில் நுழைந்து பிராகாரம் வலம் வரும்போது சோமாஸ்கந்தர் சந்நிதி உள்ளது. இப்பிராகாரத்தில் பீடம் மட்டுமே கொண்ட ஆத்மநாதர் சந்நிதி உள்ளது. பாணப்பகுதி இல்லை. எதிரில் மாணிக்கவாசகர் சந்நிதி, ஏகாம்பரநாதர், தலவிநாயகரான வண்டுவன விநாயகர், ஜம்புகேஸ்வரர், அருணாசலேஸ்வரர் சந்நிதிகள் தனித் தனிக் கோயில்களாக அமைந்துள்ளன. ஆறுமுகப்பெருமான் சந்நிதியும் இப்பிராகாரத்திலுள்ளது. அழகான முன் மண்டபத்துடன் உள்ள அம்பாள் சந்நிதியும் இப்பிராகாரத்தில் அமைந்துள்ளது. அம்பிகைக்கு தினமும் பாதத்தில் மட்டுமே அபிஷேகம் நடைபெறுகிறது. ஆடிப்பூரம் 11ம் நாள், நவராத்திரி 9ம் நாள், பங்குனி உத்திரம் இரவு என வருடத்தில் மூன்று நாட்கள் மட்டும் திருவுருவம் முழுவதும் அபிஷேகம் செய்யப்படுகிறது. அம்பாளுக்கு மார்பில் ஸ்ரீ சக்கரப் பதக்கம் சார்த்தப்பட்டுள்ளது. நடராச சபை உள்ளது. உள்சுற்றில் வலம் வரும்போது சூரியன் சந்நிதியும் அதையடுத்து விநாயகர் அடுத்து ஏழு சிவலிங்கங்களும், அதனையடுத்து 63 நாயன்மார்களும் உள்ளனர். பைரவர் வாகனமின்றி உள்ளார்.
இத்தலத்தில் இந்திரன் பூஜித்தான். தொடர்ந்து இன்றும் பூஜித்து வருகிறான் என்பதற்கு அறிகுறியாக இம்மலை மீதுள்ள கருவறைக்கோபுரக் கலசத்தின் அருகில் உள்ள துவாரத்தின் வழியாக இடிவிழுந்து சிவலிங்கத்தைச் சுற்றிப் பரவிப் பாய்ந்து விடுகிறது. தாங்கவே முடியாத வெப்பம் மறுநாள் கருவறை திறக்கும்போது இருக்கும். சில ஆண்டுகளுக்கு ஒருமுறை இது நடக்கிறது. 10.11.1930 நடந்த போது ஆராய்சியாளர்கள் ஆராய்ந்து இதை உறுதிப்படுத்தியுள்ளனர். இடி இறங்குவதைப் பார்த்த முதியவர்கள் பலர் இத்தலத்தில் இன்றும் உள்ளனர். இடி இறங்குவதால் இவ்வாலயத்திற்கு எந்த சேதமும் ஏற்பட்டதில்லை.
சங்கு தீர்த்தம் கிழக்கிலுள்ள இராஜகோபுரத்திற்கு நேரே உள்ள தெருவின் மறு கோடியில் உள்ளது. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இக்குளத்தில் சங்கு பிறக்கின்றது. இவ்வாறு கிடைத்த சங்குகள் ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளன. மார்க்கண்டேயர் சிவபெருமான் அருளால் என்றும் பதினாறு வயது பெற்று காசி முதலிய தலங்களை வணங்கி இங்கு வந்தார். சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து மார்க்கண்டேயர் இறைவனை வழிபடப் பாத்திரமின்றித் தவித்த போது இறைவன் சங்கை உற்பத்தி செய்து கொடுத்தார் அதுமுதற்கொண்டு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இக்குளத்தில் சங்கு பிறக்கிறது. 2011 ம் ஆண்டு இக்குளத்தில் சங்கு கிடைத்துள்ளது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை சங்கு பிறக்கும்போது அதுசமயம் குளத்தில் அலைகள் அதிகமாவதுடன் குளத்தின் ஓரங்களில் நுரை கட்டும். சங்கு கரை ஒதுங்கியதும் கோயில் அர்ச்சகர்கள் அதை தட்டில் எடுத்துவைப்பார்கள். அதுசமயம் அதன் உள்ளே உள்ள சங்கு பூச்சியானது தனது சங்கு ஓட்டை பிரித்துவிட்டு மீண்டும் தண்ணீரிலேயே சென்றுவிடும். அந்த நிகழ்வுக்காக அர்ச்சகர்கள் படிகளில் அமர்ந்திருப்பார்கள். சாதாரணமாக உப்பு நீரில் கடலில் தான் சங்கு பிறக்கும். இங்கு மட்டுமே சாதாரண தண்ணீரிலேயே இது தோன்றுகின்றது. மேலும் சரியாக 12 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் இதுதோன்றும். 7 சங்குகள் இங்குள்ள கோயிலில் வைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் விரும்பினால் எப்போழுது வேண்டுமானாலும் அதை பார்க்கலாம்.
நீராழி மண்டபமும் நீராடுவதற்குரிய படித்துறை மண்டபமும் உள்ளன. மலையை சுற்றி அமைந்த 12 தீர்த்தங்கள் உள்ளன. 1. இந்திர தீர்ததம். 2. சம்பு தீர்த்தம். 3. உருத்திர தீர்த்தம். 4. வசிட்ட தீர்த்தம். 5. மெய்ஞான தீர்த்தம். 6. அகத்திய தீர்த்தம். 7. மார்க்கண்ட தீர்த்தம். 8. கோசிக தீர்த்தம். 9. நந்தி தீர்த்தம். 10. வருண தீர்த்தம். 11. அகலிகை தீர்த்தம். 12. பட்சி தீர்த்தம். சுந்தரர் ஈசனிடம் பொன் பெற்ற தலம். வேதமே மலையாக அமைந்த தலம். கோடி ருத்ரர்கள் தவம் செய்து முக்தி அடைந்த தலம். சித்தர்கள் பலர் இம்மலையில் வாழ்ந்துள்ளார்கள். இறைவன் காதலித்துறையும் இடம் கழுகுன்றம் என திருஞானசம்பந்தரால் மகிழ்ந்து போற்றி பாடிய தலம். மாணிக்கவாசகருக்கு இறைவன் காட்சி தந்த தலம். மாணிக்கவாசகர் இத்தலத்தைப்பற்றி திருவாசகத்தில் பாடியிருக்கிறார். என் உடல் வீழும்போதும் நீதான் எனக்கு துணை என்று ஈசனை பட்டினத்தார் உருக்கமாக வழிபட்ட தலம். உலகின் உச்சமான அமராவதி நகருக்கு நிகரான தலம் திருக்கழுக்குன்றம் என அருணகிரிநாதரால் பாடி புகழப்பெற்ற தலம். இத்தலத்திற்கு அந்தக்கவி வீரராகவப் புலவர் தலபுராணம் பாடியுள்ளார். சுமார் 1400 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த இக்கோயில் முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் கட்டிய குடைக்கூளிக் கோயில். 7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர், சோழர், பாண்டியர், ராஷ்டிரகூடர் காலத்திய கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன. கல்வெட்டுக்களில் இத்தலம் உலகளந்த சோழபுரம் என்று குறிப்பிடப்படுகிறது. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர். சுந்தரர், அருணகிரிநாதர், பட்டினத்தார், மாணிக்கவாசகர் பாடல்கள் பாடியுள்ளனர்.
![](https://i0.wp.com/tsaravanan.com/wp-content/uploads/2020/03/image-27.png?resize=640%2C956&ssl=1)
![](https://i0.wp.com/tsaravanan.com/wp-content/uploads/2020/03/image-25.png?resize=426%2C672&ssl=1)
![](https://i0.wp.com/tsaravanan.com/wp-content/uploads/2020/03/image-26.png?resize=426%2C642&ssl=1)
![](https://i0.wp.com/tsaravanan.com/wp-content/uploads/2020/03/image-29.png?resize=318%2C749&ssl=1)
![](https://i0.wp.com/tsaravanan.com/wp-content/uploads/2020/03/image-3.jpeg?resize=600%2C450&ssl=1)
![](https://i2.wp.com/tsaravanan.com/wp-content/uploads/2020/03/image-4.jpeg?fit=650%2C486&ssl=1)
![](https://i0.wp.com/tsaravanan.com/wp-content/uploads/2020/03/image-5.jpeg?fit=650%2C180&ssl=1)
![](https://i0.wp.com/tsaravanan.com/wp-content/uploads/2020/03/image-7.jpeg?resize=600%2C450&ssl=1)
![](https://i0.wp.com/tsaravanan.com/wp-content/uploads/2020/03/image-6.jpeg?resize=650%2C418&ssl=1)
![](https://i0.wp.com/tsaravanan.com/wp-content/uploads/2020/03/image-28.png?resize=643%2C429&ssl=1)
![](https://i2.wp.com/tsaravanan.com/wp-content/uploads/2020/03/image-9.jpeg?fit=650%2C442&ssl=1)
![](https://i0.wp.com/tsaravanan.com/wp-content/uploads/2020/03/image-8.jpeg?resize=300%2C168&ssl=1)
![](https://i0.wp.com/tsaravanan.com/wp-content/uploads/2023/08/11-3.jpg?resize=484%2C957&ssl=1)
![](https://i0.wp.com/tsaravanan.com/wp-content/uploads/2023/08/12-1.jpg?resize=650%2C726&ssl=1)