தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 267 திருக்கோகர்ணம்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 267 வது தேவாரத்தலம் திருக்கோகர்ணம். மூலவர் மகாபலேஸ்வரர், பிராணலிங்கேஸ்வரர், ஆத்மலிங்கேஸ்வரர். இங்கு இறைவன் கட்டைவிரல் அளவுள்ள சிவலிங்கமாக சுயம்பு லிங்கமாக கொட்டை பாக்கு அளவு பாணமாக அருளுகிறார். இங்குள்ள கட்டைவிரல் அளவுள்ள சிவலிங்கத்திற்கு பக்தர்களே அபிஷேகம் செய்யலாம். அகத்தியர் இவருக்கு பூஜை செய்துள்ளார். அம்பாள் கோகர்ணேஸ்வரி, தாமிரகவுரி, பத்ரகர்ணி. அம்பாளின் 51 சக்தி பீடங்களில் இது கர்ண சக்தி பீடம் ஆகும். தீர்த்தம் கோகர்ணேஸ்வரி, தாமிரகவுரி, பத்ரகர்ணி. இந்த மூன்று தீர்த்தம் போக 30 தீர்த்தங்கள் உள்ளது. தலமரம் சரக்கொன்றை. இங்கு உள்ள ஆத்ம லிங்கத்திற்கு 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை இங்கு பூஜை செய்வார்கள். இந்த லிங்கத்தை இராவணனிடமிருந்து விநாயகர் மீட்டுத் தந்தார். ஓரடி உயரமுள்ள சாளக்கிரம ஆவுடையார் மீது சொர்ண ரேகையுடன் நடுவில் குழியோடு இந்த ஆத்ம லிங்கம் காட்சி தருகிறது. 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை பீடத்தை அகற்றி பூஜித்து பக்தர்கள் தரிசனத்திற்கும் வைக்கிறார்கள். இத்தலம் கர்நாடகா மாநிலத்தில் அமைந்துள்ளது.

தெற்கிலும் மேற்கிலும் வாயில்கள் உள்ளன. மேற்குவாயில் வழியாகக் கடற்கரைக்குச் செல்லலாம். கோயில் கடற்கரைக்கு அருகில் உள்ளது. தெற்கு வாயில் வழியாக உட்சென்றால் கோபுர வாயில் கடந்ததும் விசாலமான வெளிப் பிராகாரம். உள்வாயில் தாண்டியதும் ரிஷபதேவர் உள்ளார். அம்பாள் சன்னதி கிழக்கு நோக்கியது. பக்கத்தில் தாம்ரகுண்டமென்னும் தடாகம் உள்ளது. உட்புறம்ம காபலேஸ்வரர். கருவறை பக்கத்தில் தத்தாத்ரேயர், ஆதிகோகர்ணேஸ்வரர் சன்னதிகள் உள்ளன. மூலஸ்தானம் சிறிய அளவுடையது. நடுவில் சதுரமேடை அதில் வட்டமான பீடம் இப்பீடத்தின் தென்கிழக்குப் பகுதியில் வெடிப்பொன்று உள்ளது. இதற்கு சுவர்ணரேகையுள்ள சாளக்கிராம பீடம் என பெயர். இதன் நடுவில் வெள்ளை நிறமான பள்ளம் உள்ளங்கையளவு உள்ளது. அப்பள்ளத்தின் நடுவில் சிவலிங்கபாணம் உள்ளது. விரலால் தொட்டுத் திருமேனியை உணரலாம். பிராகாரத்தில் விநாயகர், மகிஷாசுரமர்த்தினி சன்னதிகள், விநாயகர், யானை முகத்துடனும் இரண்டு திருக்கரங்ளோடும் நின்ற கோலத்தில் துவிபுஜ விநாயகராகக் காட்சி தருகின்றார். இவர் முடியில் யானைத் தலையில் இருப்பது போல இருபுறமும் மேடும் நடுவில் பள்ளமும் உள்ளது. இது இராவணன் குட்டியதால் ஏற்பட்ட பள்ளமென்று புராண வரலாறு கூறுகிறது. கைலாயத்தில் சிவன் மலை வடிவிலும் அம்பிகை நதி வடிவிலும் காட்சி தருவதைப்போல இத்தலத்தில் சிவன் மலையாகவும் அம்பிகை நதியாகவும் அருள் புரிகின்றனர். அம்பாளே இங்கு நதியாக இருக்கின்றார்.

இக்கோயிலின் முன்புறம் நதியும் அதற்கடுத்து மலையும் இருக்கிறது. சிவன் மலையாக வீற்றிருக்கும் தலங்களில் கிரிவலம் செல்வார்கள் ஆனால் இங்கே நதி இருப்பதால் கிரிவலம் செல்ல முடியாது. இத்தலத்தில் செய்யப்படும் ஒரு புண்ணிய காரியம் கோடி மடங்கு செய்ததற்கான பலன் தரும் என்கிறது தலபுராணம். முன்னொரு காலத்தில் படைக்கும் தொழிலை சிறப்பாக நிறைவேற்ற சிவன் கடும் தவம் இருந்தார். அப்போது அவரது நெற்றியிலிருந்து ருத்ரன் வெளிப்பட்டார். படைக்கும் தொழிலை சிறப்பாக செய்ய ருத்ரனே தகுதி வாய்ந்தவர் என்று அவரை வேண்டினார். ருத்ரரும் ஒப்புக்கொண்டு தான் படைக்கும் சகல ஜீவராசிகளும் நல்ல குணத்துடனும் பலத்துடனும் விளங்க பாதாள உலகம் சென்று கடும் தவம் இருந்தார். இதற்குள் 3 யுகங்கள் கழிந்து விட்டன. எனவே பிரம்மா தானே உயிர்களை படைக்க தொடங்கினார். இதையறிந்த ருத்ரர் பயங்கர கோபத்துடன் பாதாள உலகிலிருந்து பிரம்மனிடம் வந்தார். ஆனால் அவரால் படைக்கப்பட்ட பெரிய உலகம் குறுக்கிட்டது. அவர் அதை நொறுக்கத் தொடங்கினார். பயந்து போன பூமாதேவி இறைவா தாங்கள் தயவு செய்து கோபம் குறைந்து தங்கள் உருவை சிறிதாக்கி கொண்டு என் காதின் வழியாக மெதுவாக வாருங்கள் என கூறினாள்.

பூமாதேவியின் வேண்டுதலை ஏற்ற ருத்ரன் கட்டை விரல் அளவில் உடலை சிறிதாக்கி கொண்டு அவள் காதின் வழியே வெளியே வந்து பூமாதேவியே நான் பாதாள உலகில் இருந்து வெளியே வருவதற்கு நீ கருப்பையாக இருந்ததனால் இந்த இடம் ருத்ரயோனி என்றும் அதற்கு காரணமான நீ கோ (பசு) என்றும் உனது காது கர்ணம் என்றும் வழங்கப்படும் என்றார். அன்றிலிருந்து இத்தலம் கோகர்ணம் ஆனது. எனவே இத்தலத்தை காது துவார தலம் என்றும் அழைக்கப்படுகிறது. பாதாள உலகில் இருந்து வெளியில் வந்த ருத்ரன் பிரம்மனின் படைப்பில் அதிருப்தியடைந்து பிரம்மாவின் படைப்புக்களை அழிக்க பூதகணங்களை தோற்றுவித்தார். இதையறிந்த விஷ்ணு ருத்ரனே பிரம்மனை மன்னித்தருள வேண்டும். அவரது படைப்புக்களை பிரளய காலத்தில் மட்டும் அழித்து அருள்புரிய வேண்டும். அத்துடன் நீங்கள் இத்தலத்தில் இருந்து வேண்டியவர்க்கு வேண்டிய வரங்களை தந்தருள வேண்டும் என்றார். ருத்ரனும் அதை ஏற்றார். அன்றிலிருந்து இத்தலம் ருத்ரபூமி ஆனது.

ஒருமுறை பிரம்மா ஆழ்ந்த சிந்தனையில் இருந்தார். அப்போது ருத்ரனின் கோபத்திற்கு ஆளாகி கவுரி என்ற பெயரில் நதியாக ஓடிக்கொண்டிருந்த பார்வதி அவரது வலக்கையில் தோன்றினாள். பிரம்மா அவளிடம் நீ விரைவில் ருத்ரனின் மனைவி ஆவாய் என்றார். அவரை அடைவதற்காக பக்தியுடன் தாமிர பர்வத மலையில் நதிவடிவில் தவமிருந்தாள். இவளது பக்திக்கு மகிழ்ந்த ருத்ரன் அவளை திருமணம் செய்து கொண்டார். இதன்பிறகு அந்த இடம் வைவாஷிக பர்வதம் (கல்யாண கிரி) என்று அழைக்கப்பட்டது. அம்பிகை தாமிர கவுரி ஆனாள். இந்த நதி கோயிலுக்கு எதிரில் ஓடிக்கொண்டிருக்கிறது. இங்குள்ள பிராணலிங்கத்தின் பெருமையை கேள்விப்பட்ட ராவணன் அதை இலங்கை கொண்டு செல்வதற்காக கயிலை மலை வந்து சிவனை வேண்டி கடும் தவம் இருந்தான். இதையறிந்த நாரதர் சொர்க்கலோகம் சென்று இந்திரனிடம் ராவணன் இந்த லிங்கத்தை கொண்டு சென்றால் தேவர்கள் பலமிழப்பார்கள். அதைத் தடுக்க வேண்டும் என்றார். உடனே இந்திரன் தேவர்களுடன் கைலாயம் சென்றான். அதற்குள் ராவணன் தன் தவத்தால் ஈசனை மகிழ்வித்து பிராணலிங்கத்தை பெற்று இலங்கை திரும்பிக்கொண்டிருந்தான். ஈசன் இந்த லிங்கத்தை ராவணனிடம் கொடுக்கும் முன் ராவணா நடந்து தான் இலங்கைக்கு கொண்டு செல்ல வேண்டும். அத்துடன் எந்தக்காரணத்தை கொண்டும் இதை கீழே வைக்க கூடாது. அப்படி வைத்தால் அது திரும்ப வராது என கூறி அனுப்பியிருந்தார்.

இரவணனிடமிருந்து அந்த லிங்கத்தைக் கைப்பற்ற எண்ணிய விஷ்ணு ராவணன் சந்தியா வந்தனம் செய்வதில் காலம் தாழ்த்த மாட்டான் என்பதை அறிந்து கணபதியை அழைத்து நீ பிரமச்சாரி வேடத்தில் ராவணன் இருக்குமிடத்தில் சுற்றித்திரி. ராவணன் சந்தியாவந்தன நேரம் வந்தவுடன் லிங்கத்தை கீழே வைக்காமல் உன்னிடம் கொடுப்பான். நீ அவனிடம் லிங்கத்தின் பாரம் தாங்க முடியாத சமயத்தில் நான் மூன்று முறை உன்னை அழைப்பேன். அப்போது நீ வராவிட்டால் லிங்கத்தை கீழே வைத்து விடுவேன் என்று சொல் என்றார். இவ்வாறு கூறிய விஷ்ணு தன் கரத்தை பூமிக்கும் வானத்திற்கும் இடையில் நிறுத்தினார். அப்போது மாலை வேளை போல் சற்றே இருள் சூழ்ந்தது ராவணன் சந்தியா வந்தனம் செய்வதற்காக கையிலிருந்த லிங்கத்தை அருகில் நின்று கொண்டிருந்த கணபதியிடம் கொடுத்து விட்டு சென்றான். அப்போது தேவர்கள் மூன்று உலகங்களின் பாரத்தையும் அந்த பிராண லிங்கத்தின் மீது செலுத்தினர். இந்த லிங்கத்தின் பாரம் தாங்க முடியாத கணபதி மூன்று முறை ராவணனை அழைத்தார். அப்படி அழைத்தும் ராவணன் வராத காரணத்தினால் லிங்கத்தை கீழே வைத்துவிட்டார். உடனே அந்த லிங்கம் சப்த பாதாளங்களையும் தாண்டி கீழே சென்று ஊன்றி நிலைத்து விட்டது. இதனால் தேவர்கள் மகிழ்ந்தனர்.

சந்தியாவந்தனம் முடித்து வந்த ராவணன் லிங்கம் கீழே வைக்கப்பட்டிருந்ததை கண்டு மகாபலம் உடையவர் இந்த இறைவர் எனக் கூறி அந்த சிறுவன் செய்த தவறுக்காக மூன்றுமுறை அவனது தலையில் குட்டினான். சிறுவனாக வந்த விநாயகர் தம் உண்மை வடிவை அவனுக்குக் காட்டி பந்துபோல அவனைத் தூக்கி எறிந்து விளையாடினார். இராவணன் தன்னை மன்னிக்கும் படி வேண்டினான். விநாயகர் உன் தலையில் இவ்வாறே மூன்றுமுறை குட்டிக்கொள் என்று கூறினார். இராவணன் தான் செய்த பிழைக்கு வருந்திக் தலையில் குட்டிக் கொண்டு அவரை வழிபட்டு அருள் பெற்றான். விநாயகர் சினம் தணிந்து தலையில் குட்டிக்கொண்டு வழிபடுவோருக்கு வேண்டும் வரங்கள் தருவதாகக் கூறி இராவணனின் பிழைகளைப் பொறுத்து அவனுக்கு நல்வரங்கள் தந்தருனினர். பிறகு தேவர்கள் தேவசிற்பியை அழைத்து லிங்கத்தை சுற்றி கோயில் அமைத்தனர். அதுவே கோகர்ண சிவன் கோயிலாகும். அதன் அருகிலேயே கணபதி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். இவர் தலையில் இப்போதும் இரவணன் குட்டிய பள்ளம் அடையாளமாக உள்ளது. பிரம்ம தேவர், அகத்தியர், காமதேனு, மார்க்கண்டேயர், வசிஷ்டர், சரஸ்வதி தேவி ஆகியோர் வழிபட்டுள்ளனர். இந்த கோவிலை மயூரசர்மா என்ற அரசன் கட்டி உள்ளார். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் பாடல்கள் பாடியுள்ளனர்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.