தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 85 திருச்சத்தி முற்றம்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 85 வது தேவாரத்தலம் திருச்சத்தி முற்றம். புராண பெயர் திருச்சத்திமுத்தம். மூலவர் சிவக்கொழுந்தீசர் தழுவக்குழைந்த நாதர் சக்திவனேஸ்வரர். இங்கு சிவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கருவறை அரை வட்ட தொட்டி வடிவில் உள்ளது. அம்பாள் பெரியநாயகி. அம்பாள் சன்னதி தெற்கு நோக்கியுள்ளது. தீர்த்தம் சூல தீர்த்தம். அம்மாள் சிவனுக்கு பூஜை செய்து தழுவி முத்தமிட்ட காரணத்தினால் இத்தலம் திருச்சத்திமுத்தம் என பெயர் பெற்றது. இங்கு அம்மாளுக்கு இரண்டு சன்னதிகள் உள்ளன. மூலஸ்தானத்திற்கு அருகில் சிவலிங்கத்தை அம்மாள் கட்டி தழுவி முத்தமிட்ட திருக்கோலம் உள்ளது. காஞ்சியில் அம்பிகை இறைவனைத் தழுவியிருப்பது போலவே இத்தலத்திலும் நிகழ்ந்ததாக தலவரலாறு உள்ளது.

ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் இரண்டு பிராகாரங்களைக் கொண்ட கிழக்கு நோக்கிய பெரிய கோவில். வாயிலில் வல்லபை கணபதி காட்சியளிக்கிறார். வெளிப் பிராகாரம் பெரியது. இரண்டாவது கோபுர வாயிலில் விநாயகர் முருகன் சன்னதிகள் உள்ளன. நடராச சபை உள்ளது. மூல வாயிலின் முன்னால் ஒருபுறம் சோமாஸ்கந்தரும் மறுபுறம் சத்திமுத்தம் தரும் தல ஐதீக மூர்த்தியும் உள்ளனர். உட்பிராகாரத்தில் தல விநாயகரும் சோமாஸ்கந்தரும் ஆறுமுகம் கஜலட்சுமி சன்னதிகளும் உள்ளன. சுவாமி சன்னதியின் வாசலின் வட புறத்தில் சக்தி சிவனுக்கு முத்தமளிக்கும் தல மூர்த்தியும் உள்ளனர். இவ்வைதீகச் சிற்பத்தின் பின்புறம் அம்மன் ஒரு காலில் நின்று தவம் செய்யும் காட்சியையும் காணலாம். சுவாமி சன்னதிப் பிரகாரத்தில் உள்ள பைரவர் சந்நிதியில் பைரவர் ஒரு ஆள் உயரத்துக்கு இருக்கிறார். முருகப் பெருமான் ஆறு திருமுகமும் பன்னிரு திருக்கரங்களும் கொண்டு வள்ளி தெய்வானையுடன் தம்பதி சமேதராய் மயில் மீது அமர்ந்த கோலத்தில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது. நடராஜர் சரபேஸ்வரர் கஜலட்சுமி அகஸ்தியர் காசி விஸ்வநாதர் திருநாவுக்கரசர் திருஞானசம்பந்தர் சூரியன் சந்திரன் ஆகியோர் திருவுருவங்கள் உள்ளது. நாகர் வழிபட்ட சிவலிங்கங்கள் உள்ளது. சனீஸ்வரர் பிரதான மண்டபத்தில் உள்ளர். இக்கோயிலில் நவக்கிரகம் இல்லை.

சிவனும் சக்தியும் பக்தியே முக்திக்கு வித்து என்பதை இந்த உலகிற்கு எடுத்துக்காட்ட விரும்பினர். இதற்காக சக்தி காவிரியாற்றின் தென்பகுதியில் அமைந்துள்ள சூரிய புஷ்கரணி சூல தீர்த்தத்தின் அருகே இத்தலம் உள்ள இடத்தில் இறைவனை பூஜை செய்து வந்தாள். சிவன் காட்சி தர நீண்ட நாட்கள் எடுத்துக் கொண்டார். சக்தியின் மன உறுதியை அனைவரும் அறிந்து கொள்ள சிவன் வராமல் காலம் தாழ்த்தினார். சக்தி தனது உறுதி கலையாமல் தன் பக்தி நிலையானது என்று உறுதி செய்யும் வகையில் ஒற்றைக் காலில் நின்று கடும் தவம் மேற்கொண்டாள். சிவபெருமான் காவிரி ஆற்றில் பெரும் வெள்ளத்தை ஏற்படுத்தினார். பார்வதி தேவி உருவாக்கிய சிவலிங்கம் வெள்ளத்தில் அழிந்து போகும் நிலையில் இருந்தது. உடனே அதைத் தழுவி நீரிலிருந்து பாதுகாத்தபடியே தவத்தை தொடர்ந்தாள். அவளது தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் சக்தியை சோதிக்க விரும்பி ஜோதிப்பிழம்பாய் காட்சி தந்தார் சிவன். தீப்பிழம்பாக காட்சி தந்தாலும் அதில் ஈசன் இருப்பதை உணர்ந்த சக்தி அந்த நெருப்பை கட்டித் தழுவினாள். சிவன் குளிர்ந்து அம்மாளை தன்னோடு ஏற்றுக் கொண்டார். தற்போதும் பிரதான லிங்கத்தில் அக்னியின் தடயங்கள் உள்ளன.

திருநாவுக்கரசர் தனக்குத் தருவடி தீட்சையருளுமாறு வேண்டிப் பாடினார். இறைவன் திருநல்லூருக்கு வருமாறு கூறி அருளிய மூர்த்தியே இங்கு மூலவராக உள்ளார். திருநாவுக்கரசருக்கு இறைவன் தன் திருவடி தரிசனம் தந்த தலம். திருஞானசம்பந்தருக்கு இத்தலத்திலிருந்து இறைவன் முத்துப்பந்தல் அருளினார். அதன் நிழலில் திருப்பட்டீச்சுரம் சென்று வணங்கிப் பதிகம் பாடினார். செங்கற்களால் கட்டபட்டிருந்த இக்கோவிலை கற்கோவிலாக மாற்றியவர் சோழ ராஜ வம்சத்தைச் சேர்ந்த செம்பியம் மாதேவி ஆவார். முதலாம் ராஜ ராஜ சோழன் காலத்திலும் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன. முதலாம் ராஜ ராஜ சோழன் மூன்றாம் குலோத்துங்க சோழன் மற்றும் விஜயநகர அரசர்கள் காலத்திய கல்வெட்டுகள் இக்கோவிலில் காணப்படுகின்றன. அக்காலத்தில் கோயில் நிலங்களில் வரிகளை வசூலிக்கும் விதிமுறைகளைப் பற்றியும் விளக்கேற்ற காசும் ஆடும் அளித்ததையும் கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. இத்தலத்தை பார்வதி அகத்தியர் திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் அருணகிரிநாதர் ராமலிங்க அடிகள் ஆகியோர் வழிபட்டுள்ளனர். சேக்கிழார் பெரிய புராணத்தில் மருவாரும் குழல்மலையாள் வழிபாடு செய்ய அருள் தருவார்தம் திருச்சத்திமுற்றம் என்று பாடியுள்ளார். இத்தலத்திலுள்ள முருகப் பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருநாவுக்கரசர் திருஞானசம்பந்தர் அருணகிரிநாதர் பாடல்கள் பாடியுள்ளார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.