இரண்டு கேள்விகள்

  1. பீஷ்மருக்கு தான் நினைக்கும் போது மட்டுமே மரணம் நேரும் வரம் சந்தனுவால் கிடைத்தது. இந்த வரத்தை சந்தனுவால் எவ்வாறு தர இயன்றது.

இக்ஷவாகு குலத்தில் பிறந்த மன்னன் மஹாபிஷன். அவன் அஸ்வமேத யாகங்களையும் நூறு ராஜசூய வேள்விகளையும் செய்தவன். இவனே பிரம்மனின் சாபத்தால் சந்தனுவாகப் பிறக்கிறான். சந்தனுவை விட்டு கங்கை நீங்கியபின் அவன் முப்பத்தாறு வருடங்கள் பல வேள்விகள் அறப்பணிகள் செய்கிறான். இவற்றால் அவனுடைய தவ வலிமை கூடுவதால் அவனுக்கு வாக்குபலிதம் உண்டாகிறது. சந்தனுவுக்கு இன்னொரு சக்தியும் உண்டு. அவன் தழுவிக் கொண்டோருக்கு அத்தனை நோய்களும் போய் உடல் புத்துணர்ச்சியடையும்.

  1. காந்தாரியின் நூறு குழந்தைகள் எந்த முறையில் உயிர்பெற்றனர்? எந்த முறையில் வியாசர் கையாண்டார்?

இன்று விஞ்ஞானத்தில் ஸ்டெம்செல் என்று கர்ப்பத்தில் உடல் உண்டாகும் அடிப்படை செல்களைச் சொல்கிறோம். இந்த ஸ்டெம்செல்கள் அடைப்படைச் செல்களாகும். இவை தானாகவே எலும்பகளாக, தசைகளாக, நரம்புகளாக வளரும் சக்தி பெற்றவை. இவற்றைக் கொண்டு நமக்கு தேவையான அனைத்து உறுப்புகளையும் செய்து கொள்ளலாம் என விஞ்ஞானம் சொல்கிறது. நாம் பிறக்கும்போது நஞ்சுக்கொடி ரத்தத்தில் இருக்கும் ஸ்டெம் செல்களை சேகரித்து வைத்து பிற்காலத்தில் நமக்குத் தேவையான உடல் உறுப்புகளை உருவாக்கலாம் என்று நவின விஞ்ஞானம் சொல்கிறது.

வியாசரின் இதுபோன்ற ஒரு முறையை கையாள்கிறார். தாயின் கர்ப்பப்பை போன்று 101 பானைகளை தயார் செய்கிறார். அவற்றில் கருவளர்ச்சிக்குத் தேவையான அனைத்து மூலிகைகளையும் மருந்துகளையும் சேர்க்கிறார். கருவளர்ச்சிக்குத் தேவையான ஆக்சிஜன் புரதங்கள் மற்ற இதர சத்துக்களை அந்த மருந்துகள் உருவாக்குமாறு செய்கிறார். இதனால் மாமிசபிண்டமாகக் கிடந்த ஸ்டெம்செல்கள் தனித்தனிக் குழந்தைகளாக முழுவளர்ச்சியை எட்டின.

இன்று விஞ்ஞானம் இதை செய்யும் நிலைக்கு மிக அருகில் வந்திருக்கிறது. தாயின் வயிற்றைப் போல குழந்தை வளர இன்குபேட்டர் உள்ளது. குறைமாதக் குழந்தைகளை அங்கே வைத்து சராசரி குழந்தையாக வளர்க்க முடிகிறது.

மண்

குருஷேத்திர களத்தில் வீழ்த்தப்பட்டார் பீஷ்மர். பீஷ்மரின் கண்கள் விண்ணை நோக்கின. தேவர்களும், விண்ணவர்களும் புடைசூழ நிற்பது கண்டு வணங்கினார். அருகிலேயே மரணதேவனும் பீஷ்மரின் அனுமதிக்கு காத்திருந்ததார். மனம் முழுதும் நிறைந்திருந்த பீஷ்மரை மண்ணை விட்டு அனுப்ப நான் காரணமாகிப் போனேனே என்று கிருஷ்ணரிடம் படபடத்தான் அர்ஜூனன். பீஷ்மர் மண்ணைவிட்டுப் போய் வெகுகாலமாகிவிட்டது அர்ஜூனா என்றார் கிருஷ்ணன். திகைப்பாய்ப் பார்த்தான் அர்ஜூனன். மண்ணாள மட்டும் பீஷ்மர் நினைத்திருந்தால் அவரை தடுப்பார் எவருமில்லை. மண்ணோடு தன் தொடர்பை என்றோ விட்டொழித்தார் பீஷ்மர். அதனாலேயே தன் சுக துக்கங்களை அவரால் மறக்க முடிந்தது. தன்னைப் பற்றிய நினைவு இன்றி தம் குலத்திற்காக மட்டுமே வாழ்வினை அர்ப்பணிக்க முடிந்தது. பிரம்மச்சரியம் மட்டுமே பீஷ்மமாகாது அர்ஜூனா விருப்பு வெறுப்பின்றி எதனையும் அணுகமுடிவதே பீஷ்மம். கொண்ட கொள்கைக்காக தன்னைப்பற்றிய சிந்தனையே இன்றி தொடர்ந்து கடமையாற்றுவதே பீஷ்மம். பீஷ்மரின் கொள்கை தன் குலம் காத்து நிற்பது மட்டுமே. அதற்கு எது சரியோ அதை மட்டுமே சிந்தனையில் கொள்பவர். அது சரியா தவறா என்றுகூட யோசிக்கமாட்டார். தன் நிலை தாழ்ந்தாலும் கவலைப்படாமல் தன்னை நம்பியிருக்கும் தன் குலம் காப்பவர் எவரோ அவரே பீஷ்மர். அதற்காக அவர் கொண்ட தவம் தான் பிரம்மச்சர்யம். மண்ணிலிருந்து தன்னை ஒட்டாமல் விலக்கிக் கொள்பவனால் மட்டுமே பீஷ்மனாக முடியும் என்றார் கிருஷ்ணன்.

பஞ்சபூதங்களில் ஒன்று இம்மண். அதை விட்டு விலகி நின்றால் போதுமா என்று கேட்டான் அர்ஜூனன். நீர் நெருப்பு என இரண்டையும் தன்னுள் அடக்கி இருக்கும் மண்ணை அத்தனை சாதாரணமாக எண்ணிவிடாதே அர்ஜூனா. இங்கு அனைத்திற்கும் காரணம் மண்தான். மண்தொட முடியாத ஒரே விஷயம் ஆகாயம் மட்டுமே. அதுவும் இறப்பிற்கு பின்மட்டுமே அடையமுடியும் இடம். உலகின் அத்தனை செயல்களுக்கும் ஆதாரமாய் நிற்பது மண் மட்டுமே. மனிதப்பிறவியின் அசைக்கவே முடியாத விடவே இயலாத ஆழமான ஓர் உணர்வு ஆசை. அந்த ஆசையின் அஸ்திவாரமே மண்தான். கருவில் இருக்கும்வரை மண்ணோடு தொடர்பில்லை. வெளியில் வந்தபின்னும் தாய்மடியில் இருக்கும்வரை தனக்கென்று ஓர் தனித்த சிந்தனை இருப்பதே இல்லை. எப்போது குழந்தை என்ற ஓர் உயிர் மண்தொட ஆரம்பிக்கிறதோ அப்போது தான் படுத்திருக்கும் இடம் தன் இடம் என்று உள்நுழைகிறது ஆசை. பிறகு மண்ணில் புரள்கிறது குழந்தை. இன்னும் இடம் கிடைக்கிறது. அதுவும் தன் இடம் என்றபின் முன்னோக்கி நகர்கிறது. தவழ்கிறது இடம் பிடிக்க அதுவும் போதவில்லை. கண்படும் இடமெல்லாம் தனதாகவேண்டும் என்று எழ முயற்சித்து தொட நினைக்கிறது. எழுகிறது நடக்கிறது ஓடுகிறது இத்தனை இடம் கிடைத்தும் போதவில்லை. ஓடுகிறது. தேடுகிறது. வாழ்நாள் முழுதும் தேடியே ஓய்கிறது. முதுமையில் தளர்ந்து மறுபடியும் மண்மேல் விழும்வரை ஓய்வதில்லை. எல்லாம் ஓய்ந்தபின்னே உயிர்பிரிந்து போனபின்னே மண்ணால் வந்த மனிதனின் ஆசை மண்ணுக்குள்ளேயே புதைக்கவும் படுகிறது.

இத்தனைக்கும் காரணமான இம்மண்ணை மட்டும் அத்தனை எளிதாய் எவராலும் துறக்க முடியாது. வாழும் காலத்திலேயே மண்ணாசையை மண்ணால் கொண்ட உணர்வுகளை துறந்து நின்றதால்தான் அவர் பீஷ்மர் என கிருஷ்ணர் கூறியதைக் கேட்ட அர்ஜூனன் திகைத்தான். அதனால்தான் மண்படாமல் பீஷ்மரை அம்புப் படுக்கையில் ஏற்றச் சொன்னேன் அர்ஜூனா. பீஷ்மர் வாவென்றழைக்காமல் மரணதேவனால் அவரை நெருங்கக்கூட இயலாது. வாழும்போது மண்ணோடு தான் கொண்ட உறவறுத்து வாழ்ந்த பீஷ்மர் இறுதி நேரத்தில் மண்மீது விழுந்துவிட்டால் மறுபடியும் வாழவேண்டும் என்ற ஆசைதனை மண் அவருக்குள் புகுத்திவிட்டால் பீஷ்மர் மண்ணாள ஆசை கொண்டுவிட்டால் உன்னால் என்னால் எவராலும் அவரை தடுத்து நிறுத்திட இயலாது என்பதால்தான் அம்புப் படுக்கையில் கிடத்தச் சொன்னேன்.

ஒருவேளை அதிலிருக்கும் போதும் மண்தொட அவர் விரும்பினாலும் அம்புகள் குத்தி நிற்கும் உடலின் வலி அதிகரிக்கும். மண்தொட ஆசைப்பட்டால் வலிதான் மிஞ்சும் என்பதாலேயே மறந்தும் கூட அவர் அதனை செய்ய மாட்டார். அதனாலேயே இறுதிவரை அவரை மண் பார்க்க விடாமல் விழிகளை விண்நோக்கியே இருக்கச் செய்தேன். இத்தனையும் நான் அறிந்து கொண்டேனே மண் வேண்டாம் என என்னால் போரிடாமல் விலக முடியாதா என்று ஆதங்கத்தோடு கேட்டான் அர்ஜூனன். சிரித்தார் கிருஷ்ணர். நீ நிற்பதே மண் மீதுதான். விண் நோக்கிச் செல்ல உனக்கான காலம் இன்னும் வரவில்லை என்றபின் மண்ணில் தான் போராடவேண்டும். மண்ணோடுதான் போராட வேண்டும் என்றார் கிருஷ்ணர். நாம் கொண்ட சுகங்களும், துக்கங்களும் மண்ணால்தான் அருளப்பட்டது. எதை வெல்ல நினைத்தோமோ அதில்தான் அடங்கப் போகிறோம். இங்கு நாம் கண்ட உறவுகள் அத்தனையும் இந்த மண் தந்ததுதான். உறவுகளையும் உணர்வுகளையும் கொடுத்த மண்தான் அவைகளை திரும்பவும் பெற்றுக் கொள்ளப் போகிறது அர்ஜூனனுக்குப் புரிந்தது.

நான் என்பது யார் இதைப் புரிந்து கொள்ளவே வாழ்க்கை. புரிந்தாலும் புரியாவிட்டாலும் தான் யார் என்பதை மண் புரிய வைத்துவிடும். இங்கு ஒவ்வொருவர் வாழ்வும் குருஷேத்திரமே ஒவ்வொருவரும் அர்ஜூனரே. கிருஷ்ணன் எனும் சாரதி ஒவ்வொருவருக்குள்ளும் உண்டு. வாழும்போதே அதை உணர வேண்டும்.

ஐந்து கணவன்மார்களுடன் வாழ்ந்த திரௌபதி

ஒருமுறை பஞ்ச பாண்டவரின் வனவாசத்தின் போது கிருஷ்ணர் அவர்களைச் சந்திக்க வந்தார். அன்று திரெளபதி பீமனுடன் சேர்ந்து வாழத் துவங்கும் நாளாக அமைந்தது. பீமனுக்கு சந்தேகம் வந்தது. திரோபதி எப்படி எல்லாரையும் கணவனாக ஏற்றுக் கொண்டு குற்ற உணர்ச்சி இல்லாமல் இருக்கிறாள். கிருஷ்ணன் முன்னால் பீமன் முகம் சுருங்கிக் கிடந்தது. கிருஷ்ணர் பீமனின் சந்தேகத்தை ஊகித்துக் கொண்டார். திரெளபதியைக் கண்களால் பார்த்துச் சிரித்தார். திரெளபதியும் கிருஷ்ணரைப் பார்த்துச் சிரித்தாள். பீமனுக்குக் கோபம் வந்தது. தனிமையில் கிருஷ்ணரைச் சந்தித்து கிருஷ்ணா உனக்கே இது நியாயமா இவ்வளவு நாள் எனக்கு அண்ணியாக இருந்தவள் எனக்குத் தாய் ஸ்தானத்தில் இருந்தவள் இன்று முதல் ஒரு வருஷத்திற்கு மனைவி என்றால் என்னால் எப்படி ஏற்க முடியும் நீயும் சிரிக்கிறாய் திரெளபதியும் சிரிக்கிறாளே என்று கேட்டான்.

கிருஷ்ணர் சொன்னார் பீமா நடப்பவை எல்லாம் உன்னைக் கேட்டு நடக்கவில்லை. ஏற்கெனவே இது இவ்வாறு நடக்கும் என்று எழுதப்பட்டவை தான் நடக்கிறது. இதில் நீ வருத்தப்படுவதற்கு ஒரு காரணமும் இல்லை. உன் ஆறுதலுக்கு ஒரு விஷயம் சொல்கிறேன் கேள். வருடத்திற்கு ஒரு முறை திரெளபதி நள்ளிரவில் தனியாக வெளியில் செல்வாள் பார்த்திருக்கின்றாயா என்று கேட்டார். ஆம் பார்த்திருக்கிறேன். ஒரு வருஷம் முடிந்ததும் ஒவ்வொரு நள்ளிரவிலும் வெளியே சென்று விட்டுப் பின் காலை உதயத்தில் திரும்பி வருவாள் என பீமன் சொன்னான். அப்போது திரெளபதி எப்படி இருப்பாள் என்று கிருஷ்ணர் கேட்டார். பீமனோ புடம் போடப்பட்ட புதுப் பொன்னைப் போல் ஜொலிப்பாள். அவள் முகத்தின் தேஜஸ் சுடர் விட்டுப் பிரகாசிக்கும் என்றான்.

பீமா இன்றிரவு அம்மாதிரித் திரெளபதி வெளியே போகும்போது நீயும் உடன் போய்ப் பார் என்றார் கிருஷ்ணர். அன்றிரவில் நள்ளிரவில் திரெளபதி வெளியே போக பீமனும் கிருஷ்ணனும் அவளுக்குத் தெரியாமல் பின்தொடர்ந்து செல்கிறார்கள். அவர்கள் இருவரும் மறைந்து இருந்து பார்க்கும் வேளையில் தீ மூட்டிய திரெளபதி தானும் அந்தத் தீயில் விழுகிறாள். மனம் பதைத்த பீமன் அவளைக் காப்பாற்ற ஓட முயற்சிக்க தடுத்து அங்கே பார் என்றார். பீமன் கண்களுக்கு தீக்குள் திரெளபதி சாட்சாத் அகிலாண்டேஸ்வரி சர்வ உலகத்தையும் காத்து அருளும் மஹா சக்தி அன்னை தன் சுய உருவில் காட்சி அளிக்கிறாள். திகைத்துப் போன பீமனை அழைத்து வந்து புரியவைத்தார் கிருஷ்ணர்.

பீமா நீங்கள் ஐவரும் பஞ்ச பூதங்கள் என்றால் உங்களை ஆளும் மஹாசக்தி திரெளபதி. அவளுக்குள் நீங்கள் அடக்கமே அன்றி அவள் உங்களுக்குள் அடக்கம் இல்லை. எப்படி இந்தப் பிரபஞ்சமானது பஞ்சபூதத்தையும் வெளிக்காட்டி ஆளுமை செய்கிறதோ அதை ஆளுமை செய்யும் சக்தி இவளே நீங்கள் ஐவரும் ஐம்புலன்கள் என்றால் உங்கள் உடலில் உள்ள ஜீவாத்மா இந்தத் திரெளபதி ஆவாள். இந்த ஜீவாத்மா எப்படிப் பரமாத்மாவிடம் ஐக்கியம் ஆகிறதோ அப்படி நீங்கள் அனைவரும் அவளுள் ஒடுங்குவீர்கள். இந்த உண்மைதான் உங்கள் ஐவரையும் திரெளபதி மணம் புரிந்ததாகக் காட்டப்படும் காட்சி இந்தத் தத்துவத்தை உணர்ந்தவர்கள் என்னையே உணர்ந்தவர்கள் ஆவார்கள். உனக்கு இந்த உண்மை புரியவேண்டும் என்பதற்காக இந்தக் காட்சியைக் காட்டினேன். இந்த உண்மை உனக்குள் உறைந்து போகட்டும். இவளை விடக் கன்னியோ அல்லது பத்தினியோ இவ்வுலகில் இல்லை. நீ கவலை இல்லாமல் உன் கடமையைச் செய் என்றார்.

எருக்க இலையும் பீஷ்மரும்

மகாபாரதப் போரில் வீழ்த்தப்பட்டு விட்டார் பீஷ்மர். நினைத்த நேரத்தில் உயிர் விடலாம் என்று அவர் பெற்றிருந்த வரமே இப்போது அவருக்கு பெரிய கஷ்டத்தை அளித்துக் கொண்டிருந்தது. உத்தராயணத்தில் உயிர் விடலாம் என்று நினைத்த பீஷ்மர் அர்ஜூனனால் ஏற்படுத்தப்பட்ட அம்புப் படுக்கையின் மீது படுத்திருந்தார். மேலும் அவரது தாகத்தை தீர்ப்பதற்காக அர்ஜூனன் நிலத்தில் அம்பை செலுத்தி கங்கையை வரவழைத்துக் கொடுத்தான். இருந்தாலும் காலம் போய்க் கொண்டே இருந்தது. உத்தராயணக் காலம் வந்தும் பீஷ்மரின் உயிர் அவரது உடலை விட்டுப் பிரியவில்லை. பாண்டவர்கள் கௌரவர்கள் கிருஷ்ணர் என அனைவரும் அவரைச் சூழ்ந்து நின்றனர். பீஷ்மருக்கோ தன் உயிர் இன்னும் பிரியாததை நினைத்து வேதனை. அப்போது அங்கு வந்து சேர்ந்தார் வேத வியாசர்.

பீஷ்மர் வேதவியாசரிடம் என்னுடைய உயிர் ஏன் இன்னும் போகவில்லை. நான் செய்த பாவம் என்ன என்று கேட்டார். அதற்கு வியாசர் பீஷ்மரே ஒருவர் தன் எண்ணம் சொல் செயலால் செய்வது மட்டும் தீமை என்றில்லை. தன் கண் முன் பிறர் செய்யும் தீமைகளை தடுக்காமல் இருப்பதும் கூட ஒரு வகையில் பாவம் தான். அதற்கான தண்டனையை யாராக இருந்தாலும் அனுபவித்து தான் ஆக வேண்டும். பீஷ்மருக்கு இப்போது புரிந்து விட்டது. தன்னுடைய இந்த வேதனைக்கான காரணம். திரௌபதியை துச்சாதனன் துகில் உரித்த போது சபையில் இருந்த அனைவரிடமும் தன்னை காப்பாற்றும்படி மன்றாடினாள். அங்கு இருந்த அனைவரும் அங்கு ஒரு பெண்ணுக்கு நடக்கும் கொடுமையைக் கண்டும் காணாதது போல் இருந்தனர். அவர்களில் பீஷ்மரும் ஒருவர். அந்த பாவம் தான் தனக்கான இந்த தண்டனை என்பதை உணர்ந்த பீஷ்மர் இதற்கு என்ன பிராயச்சித்தம் என்று வியாசரிடம் கேட்டார். பீஷ்மா ஒருவர் தன் பாவத்தை உணரும் போதே அது அகன்று விடுகிறது. தவறு செய்துவிட்டோம் என்று நீ உணர்ந்ததால் உன்னுடைய பாவம் இப்போது அகன்று விட்டது. ஆனாலும் திரௌபதி சபையில் கூக்குரலிட்டு கதறியபோது கேட்காதது போல் இருந்த உன் செவிகள் பார்த்தும் பாராதது போல் இருந்த உன் கண்கள் தவறை தட்டிக் கேட்காத வாய் அசாத்திய வலிமை இருந்தும் தினவெடுக்காத உன் தோள்கள் வாளை பயன்படுத்தாத உன் கைகள் இருக்கையில் இருந்து எழும்பாத உன் கால்கள் தவறைப் பற்றி யோசிக்காத உன் மூளை இருக்கும் தலை ஆகியவற்றுக்கு தண்டனை கிடைத்தே தீர வேண்டும். அதுதான் விதி என்றார் வியாசர்.

இதனை கேட்ட பீஷ்மர் வியாசரிடம் தவறு செய்த இந்த உடலை பொசுக்கக் கூடிய வல்லமை படைத்தவர் சூரிய பகவான் ஒருவரே. சூரிய சக்தியை பிழிந்து தவறு செய்த இந்த என் உடலுக்கு தாருங்கள் என்று துக்கத்தோடு வியாசரை வேண்டினார். வியாசர் எருக்க இலை ஒன்றைக் காட்டி பீஷ்மா எருக்க இலை சூரியனுக்கு உகந்தது. இதன் பெயர் அர்க்க பத்ரம். அர்க்கம் என்றாலே சூரியன் என்று பொருள். சூரியனின் சாரம் இதில் உள்ளது. சந்திரனைத் தலையில் சூடிக் கொண்ட எம்பெருமான் சூரியனின் உருவமான எருக்க இலையையும் இதன் காரணமாகவே சூடிக் கொண்டிருக்கிறார். ஆகவே இந்த இலைகளால் உன்னுடைய அங்கங்களை அலங்கரிக்கிறேன். அதன் மூலம் உன் உடல் வெப்பம் சாந்தியாகும் என்றார். அதன்பிறகே பீஷ்மர் தியானத்தில் மூழ்கி ஏகாதசி அன்று தன் உயிரை உடலில் இருந்து விடுவித்துக் கொள்கிறார். அவருக்குச் சிராத்தம் போன்றவற்றை செய்ய யாருமில்லாமல் திருமணம் ஆகாத நைஷ்டிக பிரம்மச்சாரியாக உயிர் நீத்ததை நினைத்து வருந்திய யுதிஷ்டிரரிடம் வியாசர் ஒழுக்கமே தவறாத பிரம்மச்சாரிக்கும் துறவிக்கும் பிதுர்க்கடன் என்பது அவசியமே இல்லை. அவர்கள் மேம்பட்ட ஒரு நிலைக்குப் போய்விடுகிறார்கள் என்றாலும் உன் வருத்தத்துக்காக இனி இந்த பாரத தேசமே பீஷ்மனுக்காக நீர்க்கடன் அளிக்கும். ரதசப்தமி அன்று தங்கள் உடலில் எருக்க இலைகளை வைத்துக் கொண்டு குளிக்கும் மக்கள் தங்கள் பாவங்களில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ளுவதோடு பீஷ்மருக்கும் நீர்க்கடன் அளித்த புண்ணியம் அவர்களுக்குக் கிடைக்கும் என்று ஆறுதல் சொன்னார்.

சில காலங்களுக்கு முன்புவரை ரதசப்தமி அன்று விரதம் இருப்பதும் தலையிலும், கண்கள், செவிகள், கை, கால், தோள்களில் எருக்க இலைகளை வைத்துக் கொண்டு குளிக்கும் முறை இருந்தது.

விஷ்ணு சஹஸ்ரநாம்

குருக்ஷேத்திரத்தில் அம்புப்படுக்கையில் பீஷ்மர் கிருஷ்ணரின் புகழையும் பெருமைகளையும் விஷ்ணு சஹஸ்ரநாமத்தால் விளக்கிக் கொண்டிருந்தார். கிருஷ்ணரும் வியாசரும் உட்பட அனைவரும் வேறு எந்த நினைப்புமின்றி அவரையே உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தனர். பிதாமகர் பீஷ்மர் ஆயிரம் நாமங்களையும் சொல்லி முடித்தபின்பு அனைவரும் விழிப்படைந்தனர். முதலில் யுதிஷ்ட்டிரர் பேசினார். பிதாமகர் ஸ்ரீவாசுதேவரின் ஒப்பற்ற பெருமை வாய்ந்த ஆயிரம் புனித நாமாக்களை சொன்னார். அவற்றைக் கேட்பதில் கவனமாக இருந்த நாம் அனைவரும் அவற்றை குறிப்பெடுக்கவோ எழுதிக்கொள்ளவோ தவறிவிட்டோம். நாம் அற்புதமான விஷயத்தை இழந்து நிற்கின்றோம் என்றார். அப்போது தான் அனைவரும் எப்படிப்பட்ட தவறு நேர்ந்துவிட்டதென்று உணர்ந்து திகைத்தனர். பிறகு யுதிஷ்டிரர் கிருஷணரிடம் திரும்பி ஆயிரம் புனித நாமாக்களை மீட்டுத்தர தாங்கள் உதவுங்கள் என்று கேட்டார்.

கிருஷ்ணர் வழக்கம் போல் என்னால் மட்டும் என்ன செய்ய முடியும். உங்கள் எல்லோரையும் போல நானும் ஆச்சார்யர் பீஷ்மரைத்தான் பார்த்துக் கொண்டிருந்தேன். இதனை செய்ய முடிந்த ஒருவர் உங்களுக்குள்ளேயே இருக்கின்றார் சகாதேவன் அதனை மீட்டு சொல்ல வியாசர் எழுதுவார் என்றார். அனைவரும் சகாதேவனால் எப்படி சஹஸ்ர நாமத்தை மீட்க முடியும் என்பதை அறிய ஆவலாக இருந்தனர். கிருஷ்ணர் தொடர்ந்தார். உங்கள் அனைவருள்ளும் சகாதேவன் மட்டுமே சுத்த ஸ்படிக மாலை அணிந்திருந்தான். சகாதேவன் சிவபெருமானை பிரார்த்தனை செய்து தியானித்து சுத்த ஸ்படிகம் உள்வாங்கியுள்ள சஹஸ்ரநாமத்தை சப்த அலைகளாக மாற்ற அதனை வியாசர் எழுதிக்கொள்ளுவார் என்றார். சுத்த ஸ்படிகம் அமைதியான சூழ்நிலையில் எழும் சப்தங்களை கிரகித்துக்கொள்ளும். இது ஸ்படிகத்தின் குணம், தன்மை. ஸ்வதம்பரராகவும் ஸ்படிகமாகவும் இருக்கும் சிவபெருமானை தியானித்து அந்த சப்தங்களை மீட்க முடியும். உடனே சகாதேவனும் வியாசரும் பீஷ்மர் சஹஸ்ரநாமம் சொல்லிய அதே இடத்தில் அமர்ந்தனர். சகாதேவன் சிவனை பிரார்த்தித்து தியானம் செய்து சஹஸ்ரநாமத்தை மீட்கத் துவங்கினர். அந்த சுத்த ஸ்படிக மாலை உலகின் முதல் வாய்ஸ் ரிகார்டராக அற்புதமான விஷ்ணு சஹஸ்ரநாமத்தை நமக்குத் தந்தது.

நாராயணபட்டத்ரி

நாராயண பட்டத்ரி 1560 ஆம் ஆண்டு பாரதப் புழா ஆற்றின் வடகரையில் திருநாவா என்ற விஷ்ணு சேத்திரத்திற்கு அருகில் மேல்புத்தூர் என்ற கிராமத்தில் பிறந்தார். இவரது தகப்பனார் மாத்ருதத்தர் இவருக்கு சிறு வயதில் கல்வி கற்றுக் கொடுத்தார் பிறகு இவர் ரிக் வேதத்தை மாதவாச்சாரியார் என்பவரிடமும் தர்க்க சாஸ்திரத்தை தாமோதராச்சாரியாரிடமும் கற்றுத் தேர்ந்தார். இவர் வ்யாகரணம் என்று சொல்லப்படுகின்ற சமஸ்கிருத இலக்கணத்தை அச்யுதபிஷாரடி என்பவரிடம் பயின்றார். இவர் தன் இளமையிலேயே கல்வியைக் கற்று முடித்தார். ஒரு நாள் இவரது குருவான அச்யுதபிஷாரடி இவரை அழைத்து இன்றோடு உன் குருகுல வாசம் முடிகிறது. உனக்கு சமஸ்கிருதத்தில் எல்லாம் கற்றுக் கொடுத்து விட்டேன். இனி நீ உன் இல்லத்திற்குச் சென்று திருமணம் செய்து கொண்டு கிரகஸ்தாஸரமத்தை ஏற்றுக் கொள். தேவர்களுக்குப் பண்ண வேண்டிய யாகங்கள் ஹோமங்கள் எல்லாம் செய் என்று கூறி ஆசிர்வதித்தார். இதைக் கேட்ட பட்டத்ரி அவர் காலில் விழுந்து நமஸ்கரித்து. குருவே இத்தனை காலமும் சமஸ்கிருதத்திலேயே மிகவும் கடினமான வ்யாகரணத்தை நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்திருக்கிறீர்கள். உங்களுக்கு நான் குருதக்ஷணையாக என்ன தரட்டும் என்று பணிந்து கேட்டார். அப்பொழுது அச்யுதபிஷாரடி எனக்கு எந்த குருதக்ஷணையும் வேண்டாம். குருவுக்கு யாரும் தட்சணை கொடுக்க முடியாது. ஒரு குருவுக்கு அவர் சீடன் கொடுக்கும் சிறந்த தட்சணை அவன் கற்ற பாடத்தை மற்றவருக்கும் குற்றம் இல்லாமல் கற்றுக் கொடுப்பதுதான். அப்படியும் நீ குருதக்ஷணை கொடுக்க நினைத்தால் நீ கற்ற சமஸ்கிருதத்தை தக்ஷணை வாங்காமல் எல்லோருக்கும் கற்றுக் கொடு அதுவே எனக்குப் போதும் என்று கூறினார்.

பட்டத்ரி குருவிடம் குருவே நீங்கள் சொன்னது போலவே நான் செய்கிறேன். ஆயினும் நான் தங்களுக்கு ஏதாவது குரு தட்சணை தர விரும்புகிறேன் என்று கேட்டார். இதைக் கேட்ட குரு உன்னால் எனக்கு என்ன தர முடியும் என்று சொல் அதை வாங்கிக் கொள்ள முடியுமா முடியாதா என்று நான் சொல்லுகிறேன் என்று கூறினார். பட்டத்ரியின் விடாப்பிடியான வேண்டுகோளுக்கு ஒரு காரணம் இருந்தது. அவரது குருவான அச்யுதபிஷாரடிக்கு வாதரோகம் இருந்தது. அவரால் தன் கை கால்களை நகர்த்தக் கூட முடியாது. அப்படிப்பட்ட நிலையிலும் அவர் தன் சீடர்களுக்குப் பாடம் கற்றுக் கொடுத்தார். தினமும் அவரை 15 20 சீடர்கள் குளிப்பாட்டி அவரைக் கொண்டு வந்து ஒரு நாற்காலியில் உட்கார வைப்பார்கள். அந்த நிலையிலேயே அவர் தன் சீடர்களுக்குப் பாடம் நடத்துவார். இதனை தினமும் கண்ணுற்ற பட்டத்ரிக்கு இவரது நோயை நாம் ஏன் வாங்கிக் கொள்ளக் கூடாது என்று தோன்றியது. இவர் குருகுலம் சேர்ந்த முதல் நாளிலிருந்தே நம் குரு இவ்வளவு கஷ்டப்பட்டு நமக்குப் பாடம் நடத்துகிறாரே நாம் அவருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவர் மனதில் இருந்தது. இப்பொழுது அதைக் கேட்டே விட்டார். குருவே நீங்கள் உங்கள் வாத நோயை எனக்கு ஆவாகனம் செய்து கொடுங்கள் வாத ரோக நிவர்த்தி என்ற குருதட்சணையை நான் உங்களுக்குத் தர விரும்புகிறேன். அந்த சந்தோஷத்துடன் நான் இந்த குருகுலத்தை விட்டுச் செல்வேன். உங்களால் அந்த மாதிரி தத்தம் செய்ய முடியும். ஏனென்றால் நீங்கள் சித்த புருஷர். நீங்கள் உங்கள் கர்மபலனை அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள். அதனால் உங்கள் கைகளில் ஜலத்தை எடுத்து ஆவாகனம் செய்து எனக்கு தத்தம் செய்து கொடுத்தால் உங்கள் வாத நோய் சரியாகி விடும். அது உங்களால் முடியும் என்று கூறினார். இதைக் கேட்ட குரு சிரித்துக் கொண்டு சொல்லலானார். ஒரு குருவானவன் தன் சிஷ்யனுக்கு ஆத்ம ஞானத்தையும் கல்வி கேள்விகளையும் சாஸ்திரங்களையும் சகல வித்தைகளையும் கடவுள் பக்தியையும் புராணங்களையும் போதிக்க வேண்டுமே தவிர நீ கேட்டாய் என்பதற்காக நான் என் நோயைத் தரக் கூடாது. அவ்வாறு நான் செய்தால் இந்த ஊர் மக்கள் என்னை பழிப்பார்கள்.

குருவானவர் தன் சீடனை சொந்த மகனாக பாவிக்க வேண்டும். என்னுடைய கர்ம பலனால் வந்த இந்த ரோகம் என்னுடனே போகட்டும். இதை வாங்கிக் கொண்டு நீ அவஸ்தைப் பட வேண்டாம். நீ இங்கிருந்து புறப்படு என்றார். ஆனால் பட்டத்ரி அதெல்லாம் இல்லை. நீங்கள் கொடுத்துத்தான் ஆக வேண்டும் என்று அவரை வற்புறுத்தினார். அதற்கு குரு நீ வியாதியால் கஷ்டப்படுவதை என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. நீ என்னை விடச் சிறியவன். உன் ஆச்சார்ய பக்தியைக் கண்டு என் மனம் மகிழ்கிறது. உன்னைப் போல் ஒரு சிஷ்யன் கிடைக்க நான் மிகவும் கொடுத்து வைத்திருக்கிறேன். இருந்தாலும் இது தர்மம் கிடையாது. ஆகையால் நீ கிளம்பு என்று கூறுகிறார். அதற்கு பட்டத்ரி குருவே எனக்கும் உங்களுக்கும் சில வித்தியாசங்கள் இருக்கிறது. நான் உங்களை விட வயதில் சிறியவன். அதனால் இந்த ரோகத்தைத் தாங்கும் சக்தி உங்களை விட எனக்கு அதிகம் இருக்கும். அது மட்டுமில்லை நீங்கள் இந்த வியாதியை எனக்குக் கொடுத்தாலும் கூட நான் இதனால் கஷ்டப்பட மாட்டேன் ஏனென்றால் நீங்கள் ஆச்சார ஸ்ரேஷ்டராக இருக்கிறீர்கள். நீங்கள் வைத்தியரிடம் செல்வது கிடையாது. இதற்கு எந்த மருந்து மாத்திரையும் எடுத்துக் கொள்வது கிடையாது. ஆனால் நான் அப்படி இல்லை. நான் கேரள மாநிலத்தில் உள்ள சிறந்த வைத்தியரிடம் காட்டி என் நோயை குணப்படுத்திக் கொள்வேன். அதனால் உங்கள் நோய் என்னிடம் வெகு நாட்கள் இருக்கும் என்று நீங்கள் நினைக்க வேண்டாம். நான் இன்னும் ஒரு வாரத்தில் நன்கு குணமாகி உங்களை வந்து நமஸ்கரிப்பேன். அதற்கு எனக்கு ஆசிர்வதியுங்கள் என்று வேண்டி விரும்பி கேட்டுக் கொண்டார்.

பட்டத்ரியின் பிடிவாதமான வார்த்தைகளைக் கேட்ட அச்யுதபிஷாரடி தன் கண்களை மூடிக் கொண்டு சிந்தித்தார் தன்னுடைய ஆத்ம பலத்தால் வருங்காலத்தை நினைத்துப் பார்த்தார். சிருஷ்டியின் சூட்சுமம் புரிந்துவிட்டது அவருக்கு. இவையெல்லாம் அந்த இறைவனின் திருவிளையாடலே இவனின் பிடிவாதத்திற்குக் காரணம் அந்த குருவாயூரப்பனே. இவன் தன் வாயால் நாராயணியம் கேட்க வேண்டும் என்று அந்த கிருஷ்ணன் முடிவு செய்து விட்டான் என்று அவர் நினைக்கையில் அவர் மனக்கண் முன் கிருஷ்ணன் வந்தான். தலையில் மயில் பீலி அணிந்து பட்டுப் பீதாம்பரம் உடுத்தி புல்லாங்குழலுடன் நின்று புன்முறுவல் புரிந்தான். தான் கண்ட காட்சியைக் கண்டு அச்யுதபிஷாரடி மெய் சிலிர்த்துப் போனார். பக்தியின் ஆழத்தை நினைத்து வியந்து போனார். தன் பக்தனுக்காக அந்த மாயக் கண்ணன் என்ன லீலை வேண்டுமானாலும் செய்வான் என்று நினைத்தார். அதனால் இதை நம்மால் தடுத்து நிறுத்த முடியாது. இது தெய்வ சங்கல்பம் என்று புரிந்து கொண்டார். எனவே தன் கையில் ஜலத்தை எடுத்து அவருக்கு தன் ரோகத்தை தத்தம் செய்து கொடுத்து விட்டார். அடுத்த நிமிஷம் குரு எப்படி இருந்தாரோ அப்படி பட்டத்ரியும் பட்டத்ரி எப்படி இருந்தாரோ அப்படி குருவும் ஆகி விட்டனர். உடனே குரு தன் மற்ற சீடர்களிடம் இவனைக் கொண்டு போய் இவனது வீட்டில் சொல்லி விட்டுவிட்டு வாருங்கள். ஏனென்றால் படிக்கச் சென்ற குழந்தை ரோகத்துடன் வந்தால் அந்த பெற்றோர் மனம் எவ்வளவு பாடுபடும் குரு எவ்வளவு சொல்லியும் கேளாமல் குருவே நிர்பந்தப்படுத்தி அவரின் ரோகத்தை இவன்தான் வாங்கிக் கொண்டு விட்டான் என்று கூறுங்கள். அவர்கள் என்னை தப்பாக நினைக்கக் கூடாது என்றார்.

பட்டத்ரியை ஒரு பல்லக்கில் வைத்து தூக்கிக் கொண்டு வந்து அவரது வீட்டில் விட்டனர் சிஷ்யர்கள். வீட்டுக்கு வந்த பட்டத்ரியைப் பார்த்த குடும்பத்தினருக்கு குரு மீது மிகுந்த கோபம். இவன்தான் கேட்டான் என்றால் அந்த குரு எப்படி ரோகத்தைத் தன் சீடனுக்குக் கொடுக்கலாம். மற்ற சீடர்களுக்கு இல்லாத அக்கறை இவனுக்கு ஏன் படிக்கச் சென்ற பிள்ளை இப்படி ரோகத்துடன் வந்து விட்டானே இவனை எப்படி குணமாக்குவது. எந்த வைத்தியரைப் பார்ப்பது என்று மனச் சஞ்சலம் அடைந்தனர். இவரை அழைத்துக் கொண்டு பிரபல வைத்தியர்களிடம் சென்றனர். ஆனால் எங்கு சென்றாலும் அவரது நோயின் வலிமை கூடியதே அன்றி ஒரு துளியும் குறையவில்லை. அவர் சாப்பிட்ட மருந்து மாத்திரைகள் சூர்ணத்தினால் உடலில் உள்ள வியாதியின் வலி குறையும் ஆனால் இவருக்கு நாளுக்கு நாள் வலி கூடியது. கை, கால்களை துளிக் கூட அசைக்க முடியவில்லை. வைத்தியத்தினால் அவர் உடலில் ஒரு முன்னேற்றமும் இல்லை. அவர் குருவிடம் இருந்து எப்படி அந்த ரோகத்தை வாங்கினாரோ அப்படியே இருந்தது. எல்லா வைத்தியர்களிடமும் காட்டி விட்டு இனி செல்ல கேரளாவில் வைத்தியரே இல்லை என்ற நிலைமைக்கு வந்தாகிவிட்டது.

இப்பொழுது பட்டத்ரி சிந்திக்க ஆரம்பித்தார். நாம் நல்ல சிந்தனையோடு தானே நம் குருவிடம் இருந்து இந்த வியாதியை வாங்கிக் கொண்டோம். ஆனாலும் ஏன் குணமாகவில்லை அதற்கு ஒரே காரணம் நாம் குருவிடம் கர்வமாகப் பேசி விட்டோம். வியாதி போகாததற்கு உங்கள் ஆசாரம் தான் காரணம். ஆனால் எனக்கு அப்படி இல்லை. வைத்தியரிடம் சென்றால் தீர்ந்து விடும். ஒரு வாரத்தில் வந்து உங்களை நமஸ்கரிக்கின்றேன் என்று கூறி விட்டேன். பகவானிடம் கூட கர்வமாகப் பேசலாம். ஆனால் குருவிடம் கர்வமாகப் பேசக் கூடாது. நான் அப்படிப் பேசியிருக்கக் கூடாது. நான் மாபெரும் அபச்சாரம் அல்லவா செய்திருக்கிறேன் அதனால்தான் என்ரோகம் இன்னும் தீரவில்லை. இப்படியாகத் தான் தன் குருவை அபசாரமாகப் பேசியதற்காக பட்டத்ரி மிகவும் வருத்தப் பட்டுக் கொண்டார். இனி நாம் என்ன செய்வது இந்த நோயை எப்படிப் போக்குவது என்று தன் மனதினுள் சிந்தித்துக் கொண்டிருந்தார். எப்பொழுதுமே வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்படுபவர்கள் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கும்போது தான் தன் ஜாதகத்தை நினைப்பார்கள். எந்த ஜோசியரிடம் போவது என்ன பரிகாரம் செய்வது என்று சிந்திக்கத் தொடங்குவார்கள். அதுபோலத்தான் இவரும் நினைத்தார். எந்த ஜோதிடரிடமாவது தன் ஜாதகத்தைக் காட்டி ஏதாவது பரிகாரம் உண்டா என்று கேட்கலாம் என்று நினைத்தார். அப்போது அவர்கள் ஊரில் எழுத்தச்சன் என்று ஒரு பிரபல ஜோசியர் இருந்தார். அவர் யார் வீட்டுக்கும் போய் ஜோதிடம் பார்க்க மாட்டார். அவர் வீட்டிற்கு நாம் சென்றால் மட்டுமே ஜோதிடம் பார்ப்பார். அவர் அஷ்ட மங்கல ப்ரஸனம் என்று எட்டு விதமான மங்கலப் பொருட்களை வைத்துக் கொண்டு சோழி உருட்டி அவர்கள் வந்த நேரத்தையும் கணக்கில் வைத்து அவர்கள் கஷ்டத்தையும் மனதில் நினைத்து அது தீர ஜோதிடம் பார்த்துச் சொல்வார். பட்டத்திரியும் நோயின் காரணமாக அவர் வீட்டுக்குச் செல்ல முடியாது. அவரும் வரமாட்டார். என்ன செய்வது என்று யோசித்தார்.

அவர் தம் குடும்பத்தினரிடம் தன்னை அழைத்துக் கொண்டு செல்லும்படி கேட்டதற்கு வைத்தியருக்கு செலவு செய்ததே போதும். இன்னும் ஜோதிடருக்கு வேறு செலவா நீங்கள் இப்படியே இருங்கள் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று கூறி விட்டனர். ஆனால் நாளுக்கு நாள் அவரது ரோகத்தின் வீரியம் அதிகரிப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தான் அவர்கள் வீட்டு வேலைக்காரர்களில் ஒருவன். சிறு வயது முதலே அந்த வீட்டில் வேலை செய்வதாலும் பரம்பரை பரம்பரையாக அவர்களைத் தெரியும் என்பதாலும் அவனுக்கு பட்டத்ரி மீது மிகுந்த பாசம் உண்டு. பட்டத்ரி அவன் மனம் நம் எஜமானர் இப்படி கஷ்டப்படுகிறாரே அவருக்காக நாம் சென்று அவரது ஜாதகத்தைக் காட்டி பார்த்துக் கொண்டு வரலாம். என்று நினைத்தான். அதை மெதுவாக அவரிடமும் கூறினான். ஐயா நான் வேண்டுமானால் உங்கள் ஜாதகத்தை எடுத்துக் கொண்டு போய் ஜோசியர்கிட்ட காட்டி கேட்டுக் கொண்டு வருகிறேன் என்றான். இதைக் கேட்ட பட்டத்ரி மிகவும் சந்தோஷப்பட்டுக் கொண்டு என் குடும்பத்தாரும் உறவினர்களும் கூட முடியாது என்று சொல்லி விட்டபோது நீ எனக்காக செல்கிறேன் என்று சொல்கிறாயே எனக்கு மிகவும் ஆனந்தமாக இருக்கிறது என்று கூறி தன் ஜாதகத்தை அவனிடம் கொடுத்து அனுப்பினார். அவன் சென்று அந்த ஜோதிடரின் காலில் விழுந்து நமஸ்கரித்து, பட்டத்ரியைப் பற்றி முழுமையாகக் கூறி அவருடைய ஜாதகத்தைக் காட்டி இது என் எஜமானரின் ஜாதகம். அவர் வாத நோயால் வாடுகிறார். அவரால் வர இயலாது. அவர் குடும்பத்தாரும் வர மறுக்கின்றனர். அதனால்தான் நான் வந்தேன். இவர் நோய் தீருமா என்று பார்த்துச் சொல்லுங்கள் என்று கேட்டான்.

எஜமான விஸ்வாசத்தைப் பார்த்த ஜோதிடர். உனக்காக நான் பார்த்துச் சொல்கிறேன் என்று கூறி பட்டத்ரியின் ஜாதகத்தைப் பார்த்தவர் பிரமித்துப் போனார். பின் அவர் சோழியைப் போட்டுப் பார்த்து அஷ்ட மங்கல ப்ரஸனம் பார்த்து அவன் வந்த நேரத்தையும் பார்த்து அவனது உள்ளக் கிடக்கையும் அறிந்து சொல்லலானார். உன் எஜமானனுக்குக் கண்டிப்பாக இந்த வியாதி நீங்கும். இதற்குப் பரிகாரம் இருக்கிறது. ஒரே ஒரு பரிகாரம் செய்தால் போதும் என்றார். உடனே அந்த வேலைக்காரன் ஆவலோடு அப்படியா என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் ஐயா நான் உடனே செய்கிறேன் என்றார். அதற்கு எழுத்தச்சர் இந்த பரிகாரத்தை நீ செய்ய வேண்டாம் உன் எஜமானார் தான் செய்ய வேண்டும். திருச்சூர் அருகில் குருவாயூர் என்றொரு பிரசித்தி பெற்ற கோயில் உள்ளது. குருவும் வாயுவும் பிரதிஷ்டை செய்த தெய்வம் கிருஷ்ணரே ஸ்நானம் செய்த புண்ணியக் குளமான நாராயண சரஸ் உள்ள கோவில். அந்த நாராயண சரஸ் என்னும் தீர்த்தத்தில் நீராட வைத்து பின் புது வஸ்திரம் அணிவித்து கொடிக்கம்பமாகிய ஜ்வஜஸ்தம்பம் தாண்டி உள்ளே நுழையும் இடத்தில் பகவானுக்கு வலது பக்கம் நமக்கு இடது பக்கம் உள்ள திண்ணையில் அவரை உட்கார வைத்து மத்ஸ்யம் (மீன்) தொட்டுப் பாட சொல் என்று கூறினார்.

இதைக் கேட்ட அந்த வேலைக்காரன் வீட்டிற்கு ஓடி வந்து விட்டான். அவனைக் கண்ட பட்டத்ரி எனக்கு ஏதாவது நிவாரணம் உண்டு என்று சொன்னாரா என்று மிகவும் ஆவலுடன் கேட்டார். அதற்கு அவன் ஐயா அவர் உங்களுக்கு வியாதி குணமாகும். கண்டிப்பாகப் பரிகாரம் இருக்கிறது என்று கூறினார். அதுவும் ஒரே ஒரு பரிகாரம் செய்தால் போதும் என்றும் கூறினார். ஆனால் அதற்குப் பிறகு அவர் சொன்ன பரிகாரம் தான் எனக்கு அதிர்ச்சியைத் தந்தது என்றான். அதற்கு பட்டத்ரி அப்படி என்ன சொல்லி விட்டார்? என்று ஆர்வமாகக் கேட்க அவன் ஜோதிடர் சொன்ன விவரமெல்லாம் சொல்லி புனிதமான கோவில் குருவாயூரில் தங்களை மீனை நாக்கில் வைத்துக் கொண்டு பாடச் சொல்கிறார். அந்தக் கோயிலில் ஒரு சின்னக் குழந்தை அசுத்தம் செய்து விட்டாலே மூன்று மணி நேரத்திற்குக் கோயில் கதவை மூடி புண்யாகவாசனம் என்ற சுத்தி செய்துவிட்டுத்தான் பிறகு திறப்பார்கள். அப்பேர்ப்பட்ட பெருமை மிகுந்த கோயிலில் உங்களை மீனை நாக்கில் தொட்டுப் பாடச் சொல்கிறார். அப்படிச் செய்வதற்கு நீங்கள் மேல்புத்தூரிலேயே உங்கள் வாத ரோகத்துடன் இருக்கலாம். நானே உங்களைப் பார்த்துக் கொள்கிறேன். இந்த ஜோசியர் இப்படிச் சொல்லுவார் என்று தெரிந்திருந்தால் நான் போயே இருக்க மாட்டேன். நான் ஏன் தான் அந்த ஜோசியரிடம் போனேனோ என்று வருத்தப்படுகிறேன் என்றான். ஜோசியர் கூறியதன் உட்பொருளைப் புரிந்து கொண்டார் பட்டத்ரி. அவர் மிகவும் சந்தோஷப்பட்டுக் கூறலானார். நாம் இன்றே குருவாயூர் செல்ல வேண்டும். அதற்கு உண்டான ஏற்பாடுகள் செய்யுங்கள் என்றார். இதைக்கேட்ட வேலைக்காரன் நான் கூட வர முடியாது. குருவாயூர் போன்ற புண்ணிய கோவிலை நீங்கள் அசுத்தம் செய்வதை நான் விரும்பவில்லை. நீங்கள் உங்கள் வியாதி குணமாக வேண்டும் என்பதற்காக இதைச் செய்யலாம். ஆனால் இதற்கு உடன்பட என்னால் முடியாது என்று கூறினான்.

அவனை சாந்தப்படுத்திய பட்டத்ரி மத்ஸ்யம் தொட்டுப் பாடணும் என்றால் சாதாரண மீன் என்று நீ ஏன் நினைத்துக் கொள்கிறாய் பகவான் குருவாயூரப்பனின் அவதாரங்களில் முதல் அவதாரம் மத்ஸ்ய அவதாரம். அவர் மிகவும் இஷ்டப்பட்டு எடுத்த அவதாரமும் மத்ஸ்ய அவதாரம்தான். மத்ஸ்யம் தொட்டு என்றால் மத்ஸ்ய அவதாரம் தொடங்கி தசாவதாரம் முழுவதையும் அவர் என்னைப் பாடச் சொல்லி இருக்கிறார். அதனால் நான் மத்ஸ்ய அவதாரம் தொடங்கி தசாவ தாரங்களைப் பற்றி குருவாயூரில் பாட வேண்டும். அதனால் இப்பொழுதே என்னை குருவாயூருக்கு அழைத்துச் செல்லுங்கள் என்றார். தன் வியாதிக்குப் பரிகாரம் கிடைத்த சந்தோஷம் அவருக்கு. அதுமட்டுமில்லாமல் தம் குரு தமக்குக் கற்றுக் கொடுத்த சமஸ்கிருத மொழியில் பாட அந்த பகவானே நம்மைப் பணித்திருக்கிறார் என்று நினைத்து அவர் கண்கள் ஆனந்தக் கண்ணீர் சொரிந்தன. அந்த குருவாயூரப்பனைப் பாடப் பாட நம் ரோகம் நிவர்த்தி ஆகும் என்று நினைத்ததும் அவர் மனம் ஆனந்தக் கூத்தாடியது. பகவானின் பெருங் கருணையை எண்ணி மனம் பரவசம் அடைந்தது. ஆனால் இவருடைய வியாதியால் ஏற்கெனவே நொந்து போயிருந்த உறவினர்கள் இது வேறா என்ற வெறுப்புடன் வேறு வழியில்லாமல் அவர் குருவாயூர் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்தனர். ஒரு பத்துப் பதினைந்து பேர் அவரை ஒரு பல்லக்கில் வைத்துத் தூக்கிக் கொண்டு குருவாயூர் சென்றனர். பட்டத்ரியின் மனம் பல்லக்கை விட வேகமாகச் சென்றது. அந்த குருவாயூரப்பனின் தரிசனத்திற்காக அவர் மனம் ஏங்கியது. அவர் மனத்தில் இருந்த பயம் விலகியது. இந்த ரோகத்தால் இனி நம்மை ஒன்றும் செய்ய முடியாது. அந்தக் குட்டிக் கிருஷ்ணன் நம்மைப் பார்த்துக் கொள்வான். நாளை காலை நிர்மால்ய தரிசனத்தின்போது நாம் அந்த குருவாயூரப்பன் சன்னதியில் இருப்போம் என்று எண்ணிக் கொண்டார்.

அடுத்த நாள் விடியற்காலையில் அவர்கள் குருவாயூர் சென்றடைந்தனர். அவரை அழைத்து வந்தவர்கள் அவரை நாராயண சரஸில் ஸ்நானம் செய்ய வைத்தனர். புது வஸ்த்ரம் உடுத்தினர். அவரை தூக்கிக் கொண்டு கருடரை வணங்கி பின் பிரதான வாயிலைத் தாண்டி கொடிக் கம்பத்தைக் கடந்து கர்ப்பகிரகத்தின் சிறிய வாயில் நுழைந்தனர். அவரைத் தூக்கிக் கொண்டு வந்தவர்கள் அங்குள்ள திண்ணையைக் கண்டனர். பகவானுக்கு வலப் பக்கம் உள்ள அந்தத் திண்ணையில் அவரை அமர வைத்தனர். பட்டத்ரி அந்த மண்டபத்தில் அமர்ந்தவுடன் அவருக்கு குருவாயூரப்பனின் தரிசனம் கிடைக்கவில்லை. அந்த மண்டபமானது குருவாயூரப்பனுக்கு வலது பக்கத்தில் இருந்தது. பட்டத்ரிக்கோ வாத ரோகம் இருந்ததால் தன் கழுத்தைத் திருப்பி குருவாயூரப்பனை தரிசனம் செய்ய இயலவில்லை. அப்போது பட்டத்ரி அந்த குருவாயூரப்பனை மனதில் நினைத்துக் கொண்டு உன் திவ்ய தரிசனத்தைக் காணாமல் என்னால் எப்படி நாராயணியம் எழுத முடியும். அதனால் நீ எனக்கு உன் திவ்ய தரிசனத்தைத் தா என்று அழுது கண்ணீர் மல்குகிறார். அதற்கு குருவாயூரப்பன் ஒன்றும் பேசவில்லை. வாத ரோகம் உள்ள காரணத்தால் பட்டத்ரி மனம் வருந்தி கண்ணனிடம் நீ ஒன்றுமே செய்ய வேண்டாம். என் வலது பக்க கழுத்தில் மட்டுமாவது லேசாக அசைவு வரும்படி செய். உன்னைப் பார்க்க அனுகிரகம் செய். என்று மனம் குழைய கெஞ்சிக் கேட்கிறார். அப்போது குருவாயூரப்பன் முதன் முதலில் பட்டத்ரியிடம் பேச ஆரம்பிக்கிறார். எண்ணால் இப்பொழுது உன் கழுத்தை சரி செய்ய முடியாது. என்று நீ வந்த காரியம் முடிவடைகிறதோ அன்றுதான் உன் வியாதி நீங்கும் என்று கூறுகிறார்.

அப்பொழுது பட்டத்ரி எனக்கு உன் தரிசனம் எப்போது கிடைக்கும் இதைக் கேட்ட குருவாயூரப்பன் கருணையோடு சொல்லலானார். பட்டத்ரி நீ உன் மண்டபத்தில் உட்கார்ந்து கொண்டு கழுத்தை சாய்த்து தான் என்னைப் பார்க்க வேண்டும் என்று நினைக்க வேண்டாம். எனக்குக் கழுத்தின் இரு பக்கமும் நன்றாகத்தான் இருக்கிறது. அதனால் என் கழுத்தைத் திருப்பி என்னால் உன்னைப் பார்க்க முடியும். நான் என் தலையைச் சாய்த்து உன்னைப் பார்க்கிறேன். என்று கூறி பாண்டுரங்கனாக மாறி இடுப்பில் கையை வைத்துக் கொண்டு தலையை சாய்த்து பட்டத்ரியைப் பார்த்து நீ நாராயணியம் ஆரம்பித்துக் கொள் என்று கூறி அனுகிரகம் செய்கிறார். இப்பொழுதும் நாராயண பட்டத்ரி மண்டபத்தில் உட்கார்ந்து பார்த்தால் நமக்கு அந்த குருவாயூரப்பன் தெரிய மாட்டான். ஆனால் குருவாயூரப்பன் நின்று கொண்டிருக்கும் இடத்தில் இருந்து நம்மைக் காணமுடியும். பட்டத்ரி நாராயணியம் எழுதி முடித்தவுடன் இந்த ஊரில் உள்ள எல்லா இடமும் எனக்குச் சொந்தம். ஆனால் இன்று முதல் இந்த இடம் மட்டும் உனக்கு சொந்தம். இது இனிமேல் பட்டத்ரி மண்டபம் என்று அழைக்கப்படும் என்று குருவாயுரப்பன் கூறினார். இந்த நாராயணியம் என்கிற க்ரந்தம் முழுவதுமே நாராயண பட்டத்ரியும் குருவாயூரப்பனும் பேசும் பாவனையில் எழுதப்பட்டுள்ளது. நான் நாராயணியம் எழுத ஆரம்பிக்கட்டுமா என்று பட்டத்ரி கேட்க ம் எழுது நான் கேட்க ஆவலாக இருக்கிறேன் என்று குருவாயூரப்பன் கூறுகிறான். அப்போது பட்டத்ரி நான் நாராயணியத்தைத் தொடங்க வேண்டும் என்றால் சில பல நிபந்தனைகள் உள்ளன. அவற்றை எல்லாம் நீ பூர்த்தி செய்தால் மட்டுமே என்னால் நாராயணியம் பாட முடியும். இல்லையென்றால் நான் ஊருக்குச் செல்கிறேன் என்கிறார். இப்படி முழுக்க முழுக்க அவர்களுக்குள் நடக்கும் சம்பாக்ஷணை போல் அமைந்திருக்கிறது.

குருவாயூரப்பனின் இடது பக்கம் உள்ள திண்ணையில் ஒரு செப்புப் பட்டயம் இருக்கிறது. அதில் மலையாளத்திலும் தமிழிலும் நாராயண பட்டத்ரி நாராயணியம் எழுதிய இடம் என்று எழுதப்பட்டுள்ளது. அந்த இடத்தில் தான் நாராயணபட்டத்ரி நூறு நாட்கள் அமர்ந்து குருவாயூரப்பனின் பெருமையை ஸ்ரீமத் பாகவதத்தின் சாரமான நாராயணியம் எழுதினார்.

தானம் தர்மம்

மகாபாரதத்தில் உடலைப் பிரிந்த கர்ணனின் உயிரானது தன் தந்தை சூரிய தேவனுடன் பரம்பொருள் ஈசனை வணங்கி மகிழ்ந்து சுவர்க்க பேறு பெற்றது. சூரிய தேவனுக்கோ மனதில் மிகப் பெரிய ஐயம் கலந்த வேதனை. யாரிடம் கேட்பது யார் தெளிவாகக் கூறுவார்கள் குழப்பத்திலும் கோபத்திலும் சூரியனின் வெம்மை அதிகரித்தது. இதை உணர்ந்த ஈசன் அவர் முன் எழுந்தருளினார். சூரியனே என்ன தடுமாற்றம் உன் மனதில் என ஈசன் கேட்க பரம்பொருளே இல்லை என கூறாமல் சகல விதமான தான தர்மங்களையும் செய்து புண்ணியங்களை சேர்த்து வைத்த என் மகன் கர்ணனை போரில் கொன்றது விதி என்று ஏற்றுக் கொண்டேன். ஆனால் எல்லா புண்ணியங்களையும் கிருஷ்ணருக்கு தானமாகத் தந்தபடியால் அவன் இன்னும் மிகப் பெரிய புண்ணியவான் ஆகிவிடுகிறானே. பிறகு எப்படி அவனுக்கு மரணம் ஏற்பட்டது இது அநீதி அல்லவா என கேட்டார் சூரியத் தேவன்.

சூரியனே நிறைய மனிதர்களுக்குள் ஏற்படும் சலனமே உன்னை இந்தக் கேள்வியை எழுப்ப வைத்ததுள்ளது சொல்கிறேன் கேள். தானம் என்பது பிறருக்குத் தேவையானவற்றை அவர் கேட்டோ அடுத்தவர் அவர் நிலை கூறி அறிந்த பின்னோ தருவது. இதுதான் தானம். புண்ணியக் கணக்கில் சேராது. ஏனெனில் இல்லாதவர் மற்றும் இயலாதவர் கேட்டபின் கொடையளிப்பது ஒரு மன்னனின் கடமை ஒவ்வொரு மனிதனின் கடமையும் கூட.

ஆனால் தர்மம் என்பது எவரும் கேட்காமல் அவரே அறியாமல் அவர் நிலை அறிந்து கொடுப்பது. இதுதான் புண்ணியம் தரும். பசித்திருக்கும் ஒருவர் கேட்டபின் ஏதாவது தருவது தானம். அவர் கேட்காமலேயே அவர் பசியாற்றுவது தர்மம். கர்ணன் தர்மங்கள் செய்து புண்ணியங்களை ஈட்டியவன் தான். ஆனால் மொத்த புண்ணியத்தையும் கிருஷ்ணர் தானமாகக் கேட்டுத்தான் வாங்கினாரே தவிர தர்மமாகப் பெறவில்லை. எல்லா புண்ணியங்களையும் தானமாகத் தாரை வார்த்து தந்த பிறகு கர்ணனும் ஒரு சாதாரண மனிதனானான். அதனாலேயே மரணம் அவனை எளிதாய் நெருங்கியது என்றார். இதைக்கேட்ட சூரிய தேவன் இறைவா தானமும் தர்மமும் பாவமும் புண்ணியமும் எல்லாமும் நீயே என்பதை உணர்ந்தேன் என்றார்.

கேட்டு கொடுப்பது தானம்
கேட்காமல் கொடுப்பது தான் தர்மம்

18 புராணங்கள்

வேத வியாசர் தொகுத்த புராணங்கள்:- அக்னி, பாகவத, பிரம்ம, பிரம்மாண்ட, பிரம்மவைவர்த்த, கருட, ஹரிவம்ச, கூர்ம, லிங்க, மார்க்கண்டேய, மத்ஸ்ய, நாரத, பத்ம, சிவ, ஸ்கந்த, வாமன, வராஹ, விஷ்ணு (வாயு=சிவ புராணம்) ஆகிய 18 புராணங்கள்

18 புராணங்களின் பெயர்களையும் எளிதில் நினைவில் வைத்துக் கொள்ள ஒரு ஸ்லோகம் உள்ளது.

மத்வயம் பத்வயம் சைவ ப்ரத்ரயம் வசதுஷ்டயம் I
அனாபலிங்ககூஸ்கானி புராணானி ப்ருதக் ப்ருதக் II

இந்த ஸ்லோகத்தின் பொருள் :- இரண்டு ‘ம’, இரண்டு ‘ப’, மூன்று ‘ப்ர’, நான்கு ‘வ’ மற்றும் ‘அ’,’நா’.’ப’, ‘லிங்’, ‘க’, ‘கூ’,’ஸ்கா’ ஆகியவையே புராணங்களாகும்.

இரண்டு ‘ம’ என்பது மகாரத்தில் ஆரம்பிக்கும் மத்ஸ்ய மற்றும் மார்க்கண்டேய புராணத்தைக் குறிக்கும்.
இரண்டு ‘ப’ என்பது பகாரத்தில் ஆரம்பிக்கும் பவிஷ்ய மற்றும் பாகவத புராணத்தைக் குறிக்கும்.
மூன்று ‘ப்ர’ என்பது ப்ர-வில் ஆரம்பிக்கும் ப்ரஹ்ம, ப்ரஹ்மாண்ட மற்றும் ப்ரம்மவைவர்த புராணத்தைக் குறிக்கும்.
நான்கு ‘வ’ என்பது வகாரத்தில் ஆரம்பிக்கும் வராஹ, விஷ்ணு, வாயு, மற்றும் வாமன புராணத்தைக் குறிக்கும்.
‘அ’ என்பது அக்னி புராணத்தைக் குறிக்கும்.
நா’ என்பது நாரதீய புராணத்தைக் குறிக்கும்.
‘ப’ என்பது பத்ம புராணத்தைக் குறிக்கும்.
‘லிங்’ என்பது லிங்க புராணத்தைக் குறிக்கும்.
‘க’ என்பது கருட புராணத்தைக் குறிக்கும்.
‘கூ என்பது கூர்ம புராணத்தைக் குறிக்கும்.
‘ஸ்கா’ என்பது ஸ்கந்த புராணத்தைக் குறிக்கும்.

இப்படி 18 புராணங்களையும் நினைவில் கொள்ள ஒரு சிறிய ஸ்லோகத்தை நினைவில் வைத்திருந்தால் போதும்.
காலம் காலமாக வழங்கப்பட்டு வரும் ஸ்லோகம் இது.

தேவி பாகவதத்தில் முதல் ஸ்கந்தத்தில் மூன்றாம் அத்தியாயத்தில் எளிதில் நினைவில் வைத்துக் கொள்ளும் இந்தக் குறிப்பு இடம் பெறுகிறது.

சக்கரத்தாழ்வார்

சக்கரத்தாழ்வார், சுதர்சனர், சக்கரராஜன், நேமி, திகிரி, ரதாங்கம், சுதர்சனாழ்வான், திருவாழிஆழ்வான் என்று பல்வேறு நாமங்களால் போற்றப்படும் சுதர்சன சக்கரமே சக்கரத்தாழ்வாராகும். மகாவிஷ்ணுவின் கைகளில் பல்வேறு விதமான ஆயுதங்கள் இருந்தாலும் பெரும்பாலான திவ்ய தேசங்களில் சங்கும் சக்கரமும் ஏந்திய திருக்கோலத்தில்தான் காட்சியளிப்பார். சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் என்று திருப்பாவையில் திருமாலை பாடுகிறாள் ஆண்டாள். திருமாலை எப்போதும் தாங்கிக்கொண்டிருக்கும் ஆதிசேஷனை அனந்தாழ்வான் என்றும் வாகனமான கருடனை கருடாழ்வார் என்றும் நம்மாழ்வார் ஞானம் பெற்ற புளியமரத்தை திருப்புளியாழ்வான் என்றும் மகாவிஷ்ணுவின் பஞ்ச ஆயுதங்களில் முதன்மையான சக்கரத்தை திருவாழிஆழ்வான் எனும் சக்கரத்தாழ்வான் என வைணவ சாஸ்திரங்களும் சில்பரத்தினம் என்ற நூலும் தெரிவிக்கிறது.

பெருமாள் கோயில்களில் 8 கரங்கள் கொண்ட சுதர்சனரையும் 16 கரங்கள் கொண்ட மூர்த்தியையும் 32 கரங்கள் கொண்ட மகா சுதர்சனரையும் வீறு கொண்டு எழும் தோற்றத்துடன் அறுகோண சக்கரத்தில் சக்கரத்தாழ்வார் காட்சி தருவார். ஷட்கோண சக்கரம் என்னும் ஆறுகோணத்தின் மத்தியில் உக்கிர வடிவ சுதர்சனரும் திரிகோண சக்கரம் எனும் முக்கோணத்தில் பின் பக்கம் யோக நரசிம்மரும் அருள் பாலிக்கின்றனர். சுதர்சனர் தனது திருக்கரங்களில் சக்கரம், மழு, ஈட்டி, தண்டு, அங்குசம்,அக்னி, கத்தி, வேல், சங்கம், வில், பாசம், கலப்பை, வஜ்ரம், கதை, உலக்கை, சூலம் என 16 கைகளில் 16 வகையான ஆயுதங்களுடன் மகா சுதர்சன மூர்த்தியாக காட்சி தருகிறார். அழிக்க முடியாத பகையை அழித்து நீக்க முடியாத பயத்தை நீக்க வல்லவர் சுதர்சன மூர்த்தி. திருமாலின் வலக்கையை அலங்கரிக்கும் சக்கர ஆயுதமே சக்கரத்தாழ்வார். இவர் திருமாலுக்கு இணையானவர் என்று வேதாந்த தேசிகர் கூறுகிறார். திருமால் கோவில்களில் சக்கரத்தாழ்வாருக்குத் தனிச் சன்னதி உண்டு. சங்கு, சக்கர, கதாபாணியான பெருமாளின் கரங்களில் எப்போதும் வலக்கையிலேயே இடம் பெற்று இருப்பவர் சக்கரத்தாழ்வார். ஆனால் சில இடங்களில் மாறுபட்டும் அமைந்திருப்பது உண்டு. திருக்கோவிலூரில் மூலவர் இடக்கையில் காட்சி அளிக்கிறார் சக்கரத்தாழ்வார்.

சக்கரத்தாழ்வார் எதிரிக்கு எதிரி சிசுபாலனின் தாய்க்கு அளித்த வாக்கின்படி சிசுபாலனின் தவறை நூறு முறை மன்னித்துவிட்டார் கிருஷ்ணர். அவனது நூற்றியோராவது தவறைக் கண்டு கொதித்த சுதர்சன சக்கரம் சீறி எழுந்து பெருமாளின் எதிரியான சிசுபாலனை அழித்தது. மகாபாரத யுத்தத்தின்போது ஜயத்ரதனை வெல்ல இயலாத நிலையில் பெருமாளின் சக்கரம் வானில் சுழன்று எழுந்து சூரியனை மறைத்தது. அதனால் குருஷேத்திரமே இருண்டது. இதனால் ஜயத்ரதன் ஒழிக்கப்பட்டு மகாபாரத வெற்றிக்கு வித்திடப்பட்டது. கஜேந்திர மோட்சம் என்ற புராணக் கதையில் யானையின் காலைப் பிடித்துக்கொண்ட மகேந்திரன் என்ற முதலையை சீவித் தள்ளி, கஜேந்திரனைக் காப்பாற்றியது சுதர்சன சக்கரமே. பக்தர்களுக்குத் துன்பம் ஏற்பட்டால், பெருமாளுக்கே இடையூறு ஏற்பட்டாற்போல் விரைந்து காப்பவர் சக்கரத்தாழ்வார். சக்கரத்தாழ்வார் வரலாற்றை முழுமையாக பக்தியுடன் நம்பிக்கையுடன் படித்தால் பிறவி இல்லா நிலையை அடையலாம் என்கிறது புராணம்.