செயல்

ஒரு ஜென் மத குருவிடம் சீடன் ஒருவன் தங்களுடைய கொள்கை என்ன என்று கேட்டார். அதற்கு குரு பசி எடுத்ததால் சாப்பிடுவது தூக்கம் வந்தால் தூங்குவது. சீடர் மறுபடியும் கேள்வி கேட்டார். பசித்தால் புசிப்பது உறக்கம் வந்தால் உறங்குவது இதைத்தான் எல்லோரும் செய்கிறார்களே என்றார். ஞானி சிரித்தார். மற்றவர்களுக்கும் எனக்கும் வேறுபாடு உள்ளது. நீங்கள் சாப்பிடும் போது உங்கள் மனம் சாப்பாட்டில் இருக்காது. அங்கும் இங்குமாக அலைபாயும். எதையோ நினைத்துக் கொண்டு பேசிக் கொண்டு சாப்பிடுவீர்கள். நான் சாப்பிடும் போது சாப்பிட மட்டும் செய்கிறேன். வேறு எந்த சிந்தனையும் கிடையாது. நீங்கள் தூங்கும் போது உங்களது மனம் தூக்கத்தில் இல்லை. கவலையில் சிந்தனைகளில் மற்றும் குழப்பத்தில் அலைகிறீர்கள். ஆனால் தூக்கத்தின் போது நான் தூங்க மட்டுமே செய்கிறேன் என்றார்.

செய்வதைச் சரியாகச் செய்வதே யோகம் என்று பகவத்கீதை கூறுகிறது. எந்த செயலானாலும் செய்யும் செயலில் ஒன்றிவிடும் போது அது தியானமாகி விடுவதோடு செய்யப்படும் செயலும் முழுமை அடைந்து விடுகிறது. அத்துடன் செய்யும் செயலின் பாரம் துன்பம் எதுவும் இல்லாமல் அச்செயலை நிறைவாக செய்யமுடியும்.

குருச்சேத்திர படைகள்

அஸ்தினாபுரம் அரியணைக்காக கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே நடந்த போர் குருச்சேத்திரம் என்ற இடத்தில் நடைபெற்றது. இவ்விடம் தற்போதைய ஹரியானா மாநிலத்தில் இருப்பதாக ஆய்வாளர்களால் கருதப்படுகிறது. படைகளும் அதன் வகைகளும்

ஒரு தேரும் ஒரு யானையும் ஐந்து காலாட்களும் மூன்று குதிரைகளும் சேர்ந்தது ஒரு பத்தி.
மூன்று பத்தி ஒன்று சேர்ந்தது ஒரு சேனாமுகம்.
மூன்று சேனாமுகம் ஒன்று சேர்ந்தது ஒரு குல்மம்.
மூன்று குல்மம் ஒன்று சேர்ந்தது ஒரு கணம்.
மூன்று கணங்கள் ஒன்று சேர்ந்தது ஒரு வாகினி.
மூன்று வாகினி ஒரு பிருதனை.
மூன்று பிருதனை ஒரு அனீகினி.
பத்து அனீகினிகள் ஓர் அக்ரோணி சேனை.

ஓர் அக்ரோணி படை என்பது
21870 தேர்கள்
21870 யானைகள்
65610 குதிரைகள்
109350 காலாட்படைகள் ஆக மொத்தம் 2,18,700 எண்ணிக்கை கொண்டது. இது போன்று கௌரவர் அணியில் 11 அக்ரோணி படைகளும் பாண்டவர் அணியில் 7 அக்ரோணி படைகளும் இருந்தன். இரு அணிகளில் இருந்த 18 அக்குரோணி படைகளின் மொத்த எண்ணிக்கை 39,36,600 ஆகும்.

அதிரதர்

இவர்கள் இருப்பதிலே திறமை அதிகம் உள்ளவர்கள். எவர் ஒருவர் தனியாளாக ஒரு தேரின் மேல் நின்று ஒரே சமயத்தில் பல்லாயிரம் தேர் வீரர்களோடு போரிடும் வல்லமை உடையவரோ அவரே அதிரதர் ஆவார்.

மகாரதர்

இவர்கள் அதிரதருக்கு அடுத்தபடியாக தனி ஒருவராக நின்று ஒரே சமயத்தில் பதினோராயிரம் தேர்வீரர்களோடு போரிடும் வல்லமை பொருந்தியவர்கள்.

சமரதர்

இவர்கள் மகாரதருக்கு அடுத்தபடியாக ஒரு சமயத்தில் ஒரு தேர்வீரரோடு போரிடும் வல்லமை கொண்டவர்.

ஆன்மீகம்

தியானம் செய்தால் எதிரில் கடவுள் வந்து நிற்பார் என்றெல்லாம் நினைக்கக்கூடாது. உடற்பயிற்சி செய்தால் உடல் வலிமையாவது போல தியானம் செய்தால் மனது வலிமை அடையும். நமது சிந்தனையில் தெளிவு பிறக்கும். மனது வலிமையடைந்தால் தீயவற்றின் பக்கம் மனம் செல்லாது. நல்ல பழக்க வழக்கங்களோடு நல்லதையே செய்து நல்லதையே பார்த்து நல்லதையே கேட்டு நல்லதையே பேசி தகுதிகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். தகுதி வந்ததும் கடவுள் எதிரில் வந்து நிற்பார்.

ஆன்மீகம் என்பது தேடி அலைகிற விஷயம் இல்லை. தகுதி இருந்தால் தேடி வருகிற விஷயம்.

வில் வித்தையில் அஸ்திரங்களின் ஆளுமையும் அவற்றின் செயல்பாடும்

அஸ்திரங்கள் என்பவை அம்பு தர்ப்பை பொருட்களின் மேல் மந்திரங்களால் உருவேற்றப்பட்ட மிகவும் வலிமை வாய்ந்தவை ஆகும். அஸ்திரங்கள் அனைவருக்கும் கிட்டிவிடாது. முறையான பயிற்சியும் குருவின் துணையும் இறையருளும் இருந்தால் மட்டுமே அவை வீரனுக்கு கைவசமாகும். இந்த அஸ்திரங்களுக்கு அம்புகள் அவசியம் தேவையில்லை. ஒரு தர்பை புல்லை எடுத்து அந்த அஸ்திரத்திற்கு உண்டான மந்திரத்தை ஜெபித்து இலக்கை நோக்கி விசினால் கூட அஸ்திரம் தனது பணியை செய்துவிடும்.

பிரம்மாஸ்திரம்: பிரம்மாவின் அஸ்திரம். இலக்கை மொத்தமாய் அழிக்கும் வலிமை கொண்டது. வேறு எத்தகைய அஸ்திரத்தையும் எதிர்க்கும் வலிமை கொண்டது.

பிரம்மஸ்ரிஷா: பிரம்மாவின் அஸ்திரம். தேவர்களையும் எதிர்க்கும் வலிமை கொண்டது. பிரம்மாஸ்திரத்தின் அளவு அழிவை தரவல்லது.

இந்திராஸ்திரம்: இந்திரனின் அஸ்திரம். ஆயிரக்கணக்கான அஸ்திரங்களை வானிலிருந்து மழை பொழிவது போலே பொழிய வைக்க வல்லது.

வஜ்ராயுதம்: இந்திரனின் அஸ்திரம். மின்னலால் தாக்குண்டது போல இலக்கை அழிக்கும் வலிமை கொண்டது.

பாசுபதாஸ்திரம்: சிவனின் அஸ்திரம். இலக்கு எந்த இயல்புடையதாக இருப்பினும் அதை அடியோடு அழிக்கும் வலுப்பெற்றது.

ஆக்னேயாஸ்ச்திரம்: அக்னியின் அஸ்திரம். இலக்கை எரித்து சாம்பலாக்கும் அஸ்திரம்

வருணாஸ்திரம்: வருணனின் அஸ்திரம். எல்லை இல்லாமல் எரியும் நெருப்பையும் அடக்கவல்லது. ஆக்னேயாஸ்ச்திரத்தை எதிர்க்க செலுத்தப்படும் அஸ்திரம்

வாய்வாஸ்திரம்: வாயுவின் அஸ்திரம். கடுமையான சூறாவளியை உண்டாக்கும் அஸ்திரம். இலக்கை பூமியை விட்டுத் தூக்கி சுழற்றி அடிக்கும் அஸ்திரம்.

சூரியாஸ்திரம்: சூரியனின் அஸ்திரம். இருளை மறைத்து ஒளியைக் கொடுக்கும் அஸ்திரம்.

நாகாஸ்திரம்: நாகமாய் மாறி இலக்கை அழிக்கும் வலுகொண்டது. கிடைப்பதற்கு அரியது. பொதுவாய் இதற்கு ஈடான எதிரான அஸ்திரம் கிடையாது.

நாகபாசானம்: விஷம் கொண்ட நாகங்கள் இலக்கை கட்டி மயக்கமடைய செய்யும். இதில் கட்டுண்டவர் கடவுளே ஆனாலும் கண்விழிப்பது அரிது.

மோகினி அஸ்திரம்: விஷ்ணுவின் அஸ்திரம். இலக்கை ஒரு மாயையில் சிக்க வைக்கும். ஒரு முழு சேனையையும் மதி இழக்கச் செய்யும் வலு கொண்டது

சம்மோஹனம்: எதிரியின் மொத்த சேனைக்கும் ஆபத்தை வரவழைக்கும் ஆற்றல் கொண்டது

பிரம்மோஹனம்: சம்மோஹன அஸ்திரத்தைப் போன்றது

நாராயனாஸ்திரம்: விஷ்ணுவின் அஸ்திரம். எண்ணற்ற அம்புகளையும் சக்கரங்களையும் இலக்கை நோக்கி மழை போல பொழியச் செய்யும். இதை யாரும் எதிர்த்து நின்றால் நிற்பவரின் வலிமையையும் இந்த அஸ்திரத்தில் சேரும். நிராயுதபாணியாய் நிற்பவரை அஸ்திரம் தாக்காது. ஒரு முறை மட்டுமே உபயோகிக்க இயலும். பின்னர் இது விஷ்ணுவை அடைந்து விடும்

வைஷ்ணவாஸ்திரம்: விஷ்ணுவின் அஸ்திரம். இலக்கை அதன் இயல்பு எதுவாக இருப்பினும் அழிக்கும் வல்லமை கொண்டது.

பர்வதாஸ்திரம் : இலக்கின் மேல் வானத்தில் இருந்து மலை ஒன்றை விழச் செய்யும்.

நல்லதை அப்போதே செய்ய வேண்டும்

ஒரு நாள் பாண்டவர்கள் உணவருந்திக் கொண்டிருந்தபோது ஏழை ஒருவன் வந்து யுதிஷ்டிரனிம் ஐயா நான் வறுமையில் வாடுகிறேன் ஏதாவது உதவி செய்யுங்கள் என்றான். உடனே யுதிஷ்டிரர் தனது இடது கையால் பக்கத்திலிருந்த வெள்ளிக் கிண்ணத்தை எடுத்து தானமாகக் கொடுத்தார். ஏழை வாங்கிச் சென்றதும் பீமன் அண்ணா இடது கையால் செய்வது பாவமாயிற்றே. தர்ம பலனும் இல்லையே. எல்லா சாஸ்திரங்களையும் அறிந்த நீங்கள் இப்படிச் செய்யலாமா என்று கேட்டான்.

தம்பி ஏழையின் துயர் கேட்டதும் மனமிறங்கி அவனுக்கு வெள்ளிக் கிண்ணத்தை கொடுக்கும் எண்ணம் ஏற்பட்டது. நான் சாப்பிட்டுக் கைகழுவி வந்த பின்பு தரலாம் என்றால் அதற்குள் இந்தப் பொல்லாத மனம் மாற வாய்ப்பு இருக்கின்றது. ஒரு வேளை வேறு ஏதாவது பொருளைக் கொடுத்தால் போதாதா வெள்ளிக் கிண்ணம் கொடுக்க வேண்டுமா என்று தோன்றலாம். எனவே நல்லதைச் செய்ய நினைக்கும்போது அந்த நொடியிலேயே செய்வது நல்லது. அதனால் நமக்கு ஏற்படும் நன்மை தீமையைவிட பிறருக்கு ஏற்படும் நன்மையே முக்கியம் என்றார் யுதிஷ்டிரர்.

சக்கரம்மா என்னும் சக்கரையம்மா பெண் சித்தர்

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சார்ந்த தேவிகாபுரம் என்ற சிற்றூரில் 1854 ல் பிறந்தாள் ஆனந்தாம்பா. அந்த ஊரில் புகழ்பெற்ற பெரியநாயகி ஆலயம் உண்டு. அந்த ஆலயத்தின் மேற்கு மூலையில் தேவியின் மூல விக்கிரகத்தை தரிசித்தவாறு மணிக்கணக்கில் தியானத்தில் ஆழ்ந்திருப்பாள் சிறுமி ஆனந்தாம்பா. அவளது வீடு கோயிலின் அருகில் ஞ இருந்தது அவள் தந்தை சேஷ குருக்கள் கோயில் அர்ச்சகர்களில் ஒருவர். குருக்களின் புதல்வி என்பதால் ஆலயத்திற்கு அவளால் எப்போது வேண்டுமானாலும் போக முடிந்தது. தியானத்தில் மணிக்கணக்கில் அமர்ந்திருக்கவும் முடிந்தது. அவள் வயதுடைய சிறுமிகள் பல்லாங்குழியிலும் பாண்டியிலும் பொழுது போக்கிய காலங்களில் அவள் மட்டும் தன் நேரம் முழுவதையும் தியானத்திற்கே அர்ப்பணித்தாள்.

அக்கால வழக்கப்படி அவளுக்கு ஒன்பது வயதிலேயே திருமணம் ஆகிவிட்டது. சட்டநாத மடத்தின் உரிமையாளன் கணவன் சாம்பசிவம் 24 வயதுப் பையன். சென்னை கோமளீஸ்வரன் பேட்டையில் சட்டநாத மடம் என்றொரு மடம் இருந்தது. கோமளீஸ்வரன் பேட்டை இப்போது புதுப்பேட்டை எனப்படுகிறது. ஏற்கனவே திருமணமாகி மனைவியை இழந்த அவனுக்கு இரண்டாம் தாரமாய் வாழ்க்கை பட்டாள் ஆனந்தாம்பா. ஆனந்தாம்பாவை அவன் ஒரு வேலைக்காரி போல் நடத்தினான். சட்டநாத மடத்தின் அருகில் கோமளீஸ்வரர் கோயில் என்ற சிவன் கோயில் இருந்தது. தற்போதும் கோயில் இருக்கிறது. வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் அங்கே போய் சிவன் சன்னதியில் அமர்ந்து கொள்வாள் ஆனந்தாம்பா. பெண்பித்துப் பிடித்து பல்வேறிடங்களில் அலைந்த சட்டநாதன் பெருவியாதி பிடிக்கப்பட்டு முப்பத்தைந்தே வயதில் காலமானான். ஆனந்தாம்பாவுக்கு அப்போது வயது இருபது. அக்கால வழக்கப்படி அவளுக்கு முடி மழித்து முக்காடு போட்டார்கள். கணவன் காலமானது அவளுக்கு ஆன்மிக வாழ்வுக்கு ஒரு வாய்ப்பே ஏற்படுத்தியது.

தேவிகாபுரத்தில் சிறிதுகாலம் இருந்த அவள் அதன்பின் திருவண்ணாமலை அருகே போளூரில் அண்ணன் வீட்டுக்கு வந்துசேர்ந்தாள். வீட்டின் அருகிலிருந்த குன்றில் நட்சத்திர குணாம்பா என்ற உயர்நிலைத் துறவினி ஒருவர் வாழ்ந்து வந்தார். அவளை சிஷ்யையாக ஏற்றார். இறைச்சக்தியை தேவி வடிவில் மந்திர ரூபமாக வழிபடும் ஸ்ரீ சக்ர உபாசனையைக் கற்றுத் தந்தார். அந்த உபாசனையை மேற்கொண்டதால் தான் பின்னால் ஆனந்தாம்பா ஸ்ரீ சக்ர அம்மா என அழைக்கப்பட்டார். அதுவே பொது மக்களின் வாய்மொழியில் மருவி சக்கரையம்மா ஆயிற்று. நான் மீண்டும் சென்னைக்கு, என் புகுந்த வீட்டிற்குச் செல்ல வேண்டுமே என குருவான உங்களை இனி அடிக்கடிச் சந்திப்பது எவ்விதம் என்று சக்கரையம்மா கேட்டபோது குணாம்பா அதுபற்றிக் கவலைப்படாதே என்று லகிமா என்ற ஓர் ஆன்மிக சித்தியே அவருக்கு கற்று கொடுத்தார். லகிமா என்பது உடலை மிக லேசாக மாற்றிக் கொள்வது. அந்த சித்தி அடைந்தவர்களால் விண்ணில் பறக்க முடியும். இனி எப்போது வேண்டுமானாலும் நீ பறந்துவந்து என்னைப் பார்க்கலாம் என அருள்புரிந்தார் குணாம்பா.

சென்னை கோமளீஸ்வரன் பேட்டையில் இருந்த தன் புகுந்த வீட்டுக்கு வந்தாள் ஆனந்தாம்பா. ஒருநாள் ஸ்ரீசக்ர உபாசனையில் அவள் பேரொளியால் சூழப்பட்டாள். தானே பரம் பொருளாய் ஒளிவீசுவதுபோல் தோன்றியது அவளுக்கு. அளவற்ற ஆனந்தத்தில் கடகடவென்று சிரிக்கலானாள். அவளது ஆன்மிக வளர்ச்சியை அறியாத புகுந்த வீட்டார் கணவன் இறந்ததால் அவளுக்குப் பித்துப் பிடித்துவிட்டதென்று கருதினர். அக்காலத்தில் டாக்டர் எம்.சி. நஞ்சுண்டராவ் என்ற புகழ்பெற்ற ஒரு மருத்துவர் இருந்தார். ஏழைகளுக்கு இலவசமாகவே மருத்துவம் பார்த்தவர். உன்னதமான ஆன்மிகவாதி அவர். ஒரு சமயம் ஆனந்தாம்பாவின் சகோதரருக்கு உடல்நலம் குன்றியது. மருத்துவம் பார்க்க டாக்டர் நஞ்சுண்டராவை அழைத்தார்கள். அவர் மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்த போது மொட்டை மாடியிலிருந்து வித்தியாசமான அந்தச் சிரிப்பின் முழக்கம் கடகடவெனக் கேட்டது. ஆன்மிகவாதியான நஞ்சுண்டராவ் அந்தச் சிரிப்பால் கவரப்பட்டார். யார் உரத்துச் சிரிக்கிறார்கள் என்று விசாரித்தார். கணவனை இழந்ததால் மனநிலை பாதிக்கப்பட்ட ஆனந்தாம்பா என்ற பைத்தியத்தின் சிரிப்பு அது என்று அலட்சியமாகக் கூறினார்கள் உறவினர்கள். அந்த சிரிப்பு அவரை அழைத்ததுபோல் அவருக்கு தோன்றியது. மாடியேறிச் சென்றார். முதுகுப் புறத்தைக் காட்டிக் கொண்ட அமர்ந்திருந்த ஆனந்தாம்பா மகனே வா என அழைத்தாள். தூக்கிவாரிப்போட்டது நஞ்சுண்டராவுக்கு மனிதர்களுக்கு முதுகில் கண் உண்டா என்று எண்ணி மேற்கொண்டு எதுவும் பேசாத ஆனந்தாம்பாளிடம் தானும் பேசாமல் விழுந்து வணங்கிவிட்டு வந்துவிட்டார்.

பின்னொருநாள் கோமளீஸ்வரன் கோயிலுக்குச் சென்றார். ஆலய வாயிலில் அமரந்து கடகடவென்று சிரித்துக் கொண்டிருந்த ஆனந்தாம்பாவை மறுபடி பார்த்தார். ஒளிவீசும் கண்கள். ஆனந்தாம்பாவின் மேனியிலிருந்து ஓர் அமைதி கலந்த பிரகாசம் பொங்கி வழிவதுபோல் தோன்றியது. நிச்சயம் இவர் பித்துப் பிடித்த பெண்மணி அல்ல என்பதை அவரது அவரது மருத்துவ மனம் உணர்ந்தது. ஏன் சிரிக்கிறீர்கள் தாயே என்று பக்தி கலந்த பணிவோடு விசாரித்தார். ஆனந்தாம்பா சிரிப்பை நிறுத்திவிட்டு நஞ்சுண்டராவைப் பார்த்தார். மகனே மனித உடலின் உள்ளே உறைந்திருக்கும் ஆன்மா எப்போதும் ஆனந்தம் நிறைந்தது. இன்ப துன்பங்கள் உடலுக்குத் தானே அன்றி ஆன்மாவுக்கில்லை. நீ உடல் அல்ல. நீ உடலில் உள்ளாய். அவ்வளவுதான். உனது தற்காலிகக் கூடாரமான இந்த உடலைப் பாராமல் கூடாரத்தின் உள்ளே நிரந்தர வஸ்துவாய் வசிக்கும் உன் ஆன்மாவைப் பார் அப்படிப் பார்க்கத் தொடங்கினால் நிலையான பேரின்பத்தை நீ அடைய முடியும். இந்த வார்த்தைகள் நஞ்சுண்டராவின் உள்ளத்தில் மின்னல் போல் பாய்ந்தன. சொன்ன வார்த்தைகளில் உள்ள பேருண்மை சொன்னவர் அந்த வார்த்தைகளின் கருத்தை வாழ்வில் அனுசரித்து வாழ்கிறார் என்பதால் அந்த வார்த்தைகளுக்கு ஏற்பட்டிருந்த மந்திர சக்தி. தன் குரு அவரே என உணர்ந்து ஆனந்தாம்பா என்கிற சக்கரையம்மாவைப் பணிந்தார் நஞ்சுண்டராவ். பின்னர் சக்கரையம்மா பற்றி வெளியுலகம் அறிய நஞ்சுண்டராவே காரணமானார். அடிக்கடி சக்கரையம்மாவைச் சந்தித்து உரையாடிப் பயன்பெற்று அவர் சக்கரையம்மாவின் சீடராகவே ஆனார். தம் குருவைப் பல திருத்தலங்களுக்கு நஞ்சுண்ட ராவ் அழைத்துச் சென்றார்.

திருவண்ணாமலையில் வாழ்ந்த சேஷாத்ரி சுவாமியையும் ரமணரையும் சக்கரையம்மா சந்தித்தார். தன்னை ஆசிர்வதிக்குமாறு சக்கரையம்மா ரமணரிடம் கேட்டபோது ரமணர் மலர்ச்சியோடு அவர் ஏற்கெனவே கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவர் என்று குறிப்பிட்டார். 1901இல் சக்கரையம்மா திருவான்மியூர் மருந்தீஸ்வரர் ஆலயத்திற்குச் செல்ல விரும்பினார். நஞ்சுண்டராவ் அழைத்துச் சென்றார். அப்போது நஞ்சுண்டராவைத் தவிர இன்னும் சிலரும் அவரது சிஷ்யர்களாகியிருந்தார்கள். திரும்பி வரும்போது சக்கரையம்மா அந்தப் பகுதியில் அமைந்த ஓர் இடத்தை நஞ்சுண்டராவிடம் குறிப்பிட்டுக் காட்டினார். அந்த நிலத்தை வாங்கி விடுமாறும் தன் உடலை அங்கேயே அடக்கம் செய்ய வேண்டும் என்றும் அவர் சொன்னபோது வருத்தத்துடன் தலையாட்டினார் நஞ்சுண்டராவ். தம் குரு தம்மை விட்டு சென்றுவிடுவார் என்பதை அந்த சிஷ்யரால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. வருந்தாதே மகனே நான் சமாதியில் என்றென்றும் இருந்து அனைவருக்கும் அருள்புரிந்து வருவேன். என் சமாதி இருக்குமிடம் அமைதியின் கோயிலாகத் திகழும் என்று சொல்லிச் சீடரை ஆறுதல் படுத்தினார் குரு. சொன்னபடியே 1901 பிப்ரவரி 28 ஆம் நாள் சக்கரையம்மா உடல் சட்டையை உதறினார். அவரது பொன்னுடல் அவர் குறிப்பிட்ட இடத்திலேயே சமாதி செய்விக்கப்பட்டது. சென்னையில் திருவான்மியூரில் உறவுகளைத் துறந்து துறவியான பெண் சித்தர் சக்கரையம்மா தன் சமாதியில் நிரந்தரமாய் வாழ்ந்து வருகிறார்.சுதந்திரப் போராட்ட காலத்தில் சக்கரையம்மா என்ற பெண்சித்தர் வானில் பறவைபோல பறப்பதைப் பலரும் பார்த்து வியந்திருக்கிறார்கள். தமிழறிஞரான திரு.வி.க. தாம் எழுதிய உள்ளொளி என்ற புத்தகத்தில் இதுபற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்.

நகுசன்

விருத்தாசுரன் என்ற அரக்கன் இந்திரலோகத்தில் நுழைந்து அங்கிருந்தவர்களையெல்லாம் கொடூரமாகத் தாக்கத் தொடங்கினான். அவனுடைய தாக்குதலைக் கண்டு பயந்த அனைவரும் இந்திரனிடம் சென்று தங்களைக் காப்பாற்றும்படி வேண்டி நின்றனர். இந்திரன் தனது படையுடன் சென்று விருத்தாசுரனை எதிர்த்துப் போரிட்டான். விருத்தாசுரனின் அசுரத் தாக்குதலைச் சமாளிக்க முடியாத இந்திரன் அவனிடமிருந்து தப்பித்தால் போதுமென்று அங்கிருந்து வெளியேறினான். மேலும் விருத்தாசுரன் தன்னைக் கண்டுபிடித்து அழித்து விடுவானோ என்று பயந்து தாமரைத் தண்டு ஒன்றினுள் சென்று மறைந்து கொண்டான். பின்னர் அங்கிருந்தபடியே விருத்தாசுரனை எதிர்த்துப் போரிடுவதற்கான பலம் வேண்டி தவம் செய்யத் தொடங்கினான். இந்திரன் இல்லாததால் தேவலோகத்தை நிர்வகிக்க முடியாமல் போனது. எனவே தற்காலிகமாக ஒரு இந்திரனைத் தேர்வு செய்ய தேவர்கள் முடிவு செய்தனர். இந்திரப் பதவியில் அமர்ந்தால் விருத்தாசுரன் நம்மை அழித்து விடுவான் என்கிற பயத்தால் பலரும் அந்தப் பதவியை ஏற்க முன்வரவில்லை. இந்த நிலையில் பூலோகத்தில் சிறப்பாக ஆட்சி செய்து வந்த நகுசன் என்ற மன்னனை இந்திரப் பதவியில் அமர்த்த தேவர்கள் முடிவு செய்தனர்.

நகுசன் நூறு அசுவமேத யாகங்கள் செய்து முடித்த பலனால் தேவர்கள் அவனைத் தேர்வு செய்தனர். நகுசனிடம் சென்று தேவர்கள் தங்கள் கோரிக்கையை கூறினர். நகுசனும் தேவர்கள் விருப்பப்படி இந்திரப் பதவியை ஏற்றுக் கொண்டான். அந்தப் பதவியில் அமர்ந்ததும் அவனுடைய செயல்பாடுகள் அனைத்தும் மாறிப் போயின. இந்திரப் பதவியின் பெயரிலான கர்வமும் பேராசையும் நகுசனை ஆட்டிப்படைத்தது. இந்திரலோகத்தில் இருக்கும் அனைத்துச் செல்வங்களும் பொருட்களும் தனக்குரியது என்று உரிமை கொண்டாடினான். அது மட்டுமின்றி அங்கிருக்கும் நடன மங்கைகளும் இந்திராணியும் கூட தனக்கே சொந்தமானவர்கள் என்றான். இதனால் கவலையடைந்த இந்திராணி தேவகுருவான பிரகஸ்பதியிடம் சென்று நகுசனிடமிருந்து தன்னைக் காப்பாற்றும்படி வேண்டினாள்.

தேவகுரு நகுசனைத் தனியாக அழைத்து அவன் செய்வது தவறு என்று சுட்டிக் காட்டினார். அதையெல்லாம் புரிந்து கொள்ளும் நிலையில் அவனில்லை. அடுத்த நாள் தன்னைத் தேடி வந்த இந்திராணியிடம் இனி நகுசன் உன்னைத் தேடி வரும் பொழுது நீ அவனை ஏற்றுக் கொள்ள எந்த மறுப்பும் தெரிவிக்காதே. இந்திரலோகத்தில் இருக்கும் குறு முனிவர்களால் செய்யப்பட்ட பல்லக்கில் அவர்கள் உன்னைச் சுமந்து வந்தால் நான் உன்னை ஏற்றுக் கொள்கிறேன் என்று மட்டும் சொல்லி அனுப்பி விடு. அதன் பிறகு உனக்கு அவனால் எந்தத் தொல்லையும் இருக்காது என்று தேவகுரு சொல்லி அனுப்பினார். நகுசன் இந்திராணியைத் தேடிச் சென்ற போது அவளும் தேவகுரு சொன்னதைச் சொல்லி அனுப்பினாள். நகுசன் குறு முனிவர்களைத் தேடிச் சென்று தன்னைப் பல்லக்கில் அமர வைத்து இந்திராணி இருக்கும் இடத்துக்குச் சுமந்து செல்லும்படி கட்டளையிட்டான். அவன் இந்திரப் பதவியில் இருப்பதால் முனிவர்களான அவர்கள் மறுப்பேதும் சொல்லாமல் அவனை அந்தப் பல்லக்கில் அமர வைத்துத் தூக்கிச் சென்றனர். அப்படித் தூக்கிச் செல்லும் வழியில் நகுசன் அவர்களிடம் வேகமாக வேகமாக என்று பொருள் தரும் வகையில் சமஸ்கிருத வார்த்தையான சர்ப்ப சர்ப்ப என்று சொல்லி விரட்டிக் கொண்டே இருந்தான். அந்தப் பல்லக்கைச் சுமந்து சென்ற முனிவர்களில் ஒருவரான அகத்தியருக்கு அது எரிச்சலைத் தந்தது. கோபமடைந்த அகத்தியர் நகுசனைப் பார்த்து எங்களைச் சர்ப்ப சர்ப்ப என்று விரட்டிய நீ இப்போதே மலைப்பாம்பாக மாறி பூலோகத்தில் விழுந்து காட்டில் அலைந்து திரிந்து கஷ்டப்படு என்று சாபமிட்டார்.

தன் தவறை உணர்ந்த நகுசன் பல்லக்கில் இருந்து கீழே இறங்கி தான் தெரியாமல் செய்த தவறை மன்னித்துச் சாபத்திலிருந்து விமோசனம் தந்தருளும்படி வேண்டினான். அகத்தியர் கோபம் குறைந்து நகுசனே நீ பூலோகத்தில் மலைப்பாம்பாக வாழ்ந்து வரும் காலத்தில் வனவாழ்க்கை மேற்கொள்ளும் பாண்டவர்களில் ஒருவரான பீமன் உன்னிடம் மாட்டிக் கொள்வான். அவனை உன்னிடமிருந்து மீட்பதற்காக அவனுடைய சகோதரன் ஒருவன் வருவான். அவன் நீ கேட்கும் அனைத்துக் கேள்விகளுக்கும் சரியான பதிலைச் சொல்வான். அப்போது உனக்கான சாபம் நீங்கும் என்றார். முனிவரின் சாபத்தால் பூலோகம் வந்த நகுசன் அஜகரம் என்கிற பெயரில் மலைப்பாம்பாக மாறினான். அவனுடைய பழைய நினைவுகள் அனைத்தும் மறந்து போயின. மலைப்பாம்பு அங்கிருந்த மலைக்குகை ஒன்றைத் தனது இருப்பிடமாக்கிக் கொண்டது. அந்தக் காட்டிற்குள் இருந்த பறவைகளும் விலங்குகளும் அந்த மலைப்பாம்பிற்கு இரையாகிக் கொண்டிருந்தன. பல ஆண்டுகள் கடந்து பின் பாண்டவர்கள் தங்களின் வனவாழ்க்கைக்காக அந்தக் காட்டுப் பகுதிக்கு வந்து சேர்ந்தனர். ஒரு நாள் பாண்டவர்களில் ஒருவரான பீமன் மட்டும் காட்டுக்குள் தனியாகச் சென்று பல விலங்குகளை வேட்டையாடினான். மலைப்பாம்பு வசித்த குகையின் அருகில் அவன் சென்றபோது அது அவனைச் சுற்றிவளைத்துக் கொண்டது. எவ்வளவோ முயற்சி செய்தும் பீமனால் அதன் பிடியில் இருந்து விடுபடமுடியவில்லை. மலைப்பாம்பு பீமனை விழுங்க முயன்றபோது அதற்கு தன்னுடைய முந்தைய வாழ்வும் சாபமும் நினைவுக்கு வந்தது. இந்த நிலையில் காட்டிற்குள் சென்ற தம்பியைக் காணாததால் அவனைத் தேடி யுதிஷ்டிரர் காட்டுக்குள் வந்தார். அப்போது மலைப்பாம்பிடம் பிடிபட்டிருக்கும் தன் தம்பியைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

யுதிஷ்டிரர் அந்த மலைப்பாம்பிடம் பாம்பே உன் பசிக்குத் தேவையான உணவுகளை நான் கொண்டு வந்து தருகிறேன். என் சகோதரனை உன் பிடியிலிருந்து விட்டு விடு என்று கேட்டார். நீ கொண்டு வந்து கொடுக்கும் உணவு எதுவும் எனக்குத் தேவையில்லை. நான் கேட்கும் சில கேள்விகளுக்கு நீ சரியான பதிலைச் சொன்னால் நான் உன் சகோதரனை விட்டு விடுகிறேன். சரியான பதில்களைச் சொல்லாவிட்டால் உன் சகோதரனை மட்டுமில்லாமல் உன்னையும் சேர்த்து எனக்கு இரையாக்கிக் கொள்வேன் என்றது மலைப்பாம்பு. யுதிஷ்டிரர் அதற்கு சம்மதம் தெரிவித்தார். பின்னர் மலைப்பாம்பு கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் முறையாக பதிலளித்தார். அவரது பதில்களால் மகிழ்ந்த மலைப்பாம்பு பீமனை விடுவித்தது. மலைப்பாம்பு சாப விமோசனம் பெற்று நகுசனாக சுய உருவம் பெற்றான். அவன் யுதிஷ்டிரரை வணங்கி இந்திரலோகம் சென்றடைந்தான்.

லகா மண்டல் சிவாலயம்

உத்தரகண்ட் டெஹ்ராடூன் மாவட்டத்தில் உள்ள முசோரியிலிருந்து 75 கி.மீ தூரத்திலும் சக்ரதாவிலிருந்து 68 கி.மீ தூரத்தில் லகா மண்டல் சிவாலயம் அமைத்துள்ளது. இந்த கோயில் வளாகம் தேசிய முக்கியத்துவச் சின்னமாக உள்ளது. இந்த கோயில் அழகிய மலைகள் மற்றும் யமுனா நதியால் சூழப்பட்டுள்ளது. லகா மண்டல் அதன் பெயரை இரண்டு சொற்களிலிருந்து பெறுகிறது. லகா என்பது பல என்னும் பொருளையும் மண்டல் என்பது கோயில்களையம் குறிக்கும். 6 ம் நூற்றாண்டின் கல்வெட்டின் படி லகா மண்டலில் உள்ள சிவன் கோயில் சிங்புராவின் ராஜ வம்சத்தைச் சேர்ந்த இளவரசி ஈஸ்வராவால் கட்டப்பட்டது. ஜலந்திர மன்னரின் மகனும் தனது மறைந்த கணவர் சந்திரகுப்தரின் ஆன்மீக நலனுக்காக இது இளவரசி ஈஸ்வராவால் கட்டப்பட்டது. நாகரா பாணியில் தற்போதைய கட்டமைப்பு 12 – 13 ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. புராணத்தின் படி லகா மண்டல் பாண்டவர்களை துரியோதன் மெழுகினால் ஆன அரக்கு மாளிகையில் தங்க வைத்து எரிக்க முயன்ற இடம். அதிர்ஷ்டவசமாக பாண்டவர்கள் ஒரு குகை வழியாக ஓடி அங்கிருந்து தப்பினர். லகா மண்டல் கோவிலில் இருந்து குகையின் முனையை கோவிலிருந்து 2 கி.மீ தூரத்தில் காணலாம். இந்த இடம் துந்தி ஓடாரி என்று அழைக்கப்படுகிறது. இந்த கோவிலில் சிவலிங்கம் கிராபைட் கல்லால் ஆனவர். தண்ணீர் ஊற்றப்படும்போது அது பிரகாசித்து அதன் சுற்றுப்புறங்களிலும் பிரதிபலிக்கிறது. கோவில் வளாகத்தின் உள்ளே ஒரு பாறையில் பார்வதியின் கால் அடையாளங்களைக் காணலாம். சிவன், பார்வதி, கார்த்திகேயா, விநாயகர், விஷ்ணு மற்றும் பஜ்ரங்பாலி சிலைகள் உள்ளன.

இந்த பகுதி பழங்கால கோவில்கள் சிற்பங்கள் மற்றும் கல்வெட்டுகளால் நிறைந்துள்ளது. பல சிலைகள் மற்றும் லிங்கங்களின் தொகுப்பைக் கொண்ட ஒரு அருங்காட்சியகமும் உள்ளது. தற்போது வரை 150 கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் 4 -5 ம் நூற்றாண்டு கல்வெட்டுகளாகும்.

கிராபைட் பற்றிய சில செய்திகள் நாம் எழுதப் பயன்படுத்தும் பென்சில் கிராபைட்டைக் கொண்டு தயாரிக்கப் பட்டதாகும். கிராபோ என்ற சொல்லுக்கு நான் எழுதுகிறேன் என்பது பொருளாகும். கிராபைட் இயற்கையாகப் பூமியிலிருந்து வெட்டி எடுக்கப்படுகிறது. இது கிரீன்லாந்து, பொஹீமியா, சைபீரியா, இந்தியா, இலங்கை முதலிய நாடுகளில் கிடைக்கிறது. மற்ற நாடுகளை விட இந்தியாவில் சற்றுக் குறைவாகவே கிடைக்கிறது. இந்தியாவில் தமிழ்நாட்டில் உள்ள சிவகங்கையில் கிராபைட் இயற்கையாகக் கிடைக்கிறது. உலகிலேயே சிறந்த கிராபைட் இலங்கையில் கிடைக்கிறது. கிராபைட்டில் கார்பன் அணுக்கள் தட்டையான அடுக்குகளாக அமைந்துள்ளன. ஒவ்வொரு அடுக்கும் கார்பன் அணுக்கள் அடங்கிய அறுகோண வளையங்களால் ஆனது. ஒவ்வொரு கார்பன் அணுவும் மற்ற மூன்று கார்பன் அணுக்களுடன் பிணைக்கப்பட்டுள்ளது. கிராபைட்டின் பல்வேறு அடுக்குகளுக்கிடையே உள்ள பிணைப்பு விசை வலுவிழந்த வாண்டர்வால்ஸ் விசை ஆகும். இந்த அடுக்குகள் ஒன்றின் மீது ஒன்றும் நழுவும் தன்மை உடையது. இதனால் கிராபைட் மென்மையாகவும் வழவழப்பாகவும் காணப்படுகிறது.

கர்ணன்

கர்ணன் கிருஷ்ணரை பார்த்து கேட்டான் என் தாயார் நான் பிறந்த உடனே என்னை ஆற்றில் விட்டுவிட்டார். நான் சத்ரியன் அல்ல என்று கூறி துரோணாச்சாரியார் எனக்கு கல்வியைக் கற்றுத்தரவில்லை. பரசுராமர் எனக்கு வில்வித்தை கற்றுக் கொடுத்தார் ஆனால் சத்ரியன் எனக்கூறி நான் படித்த எல்லாவற்றையும் மறக்க எனக்கு சாபம் கொடுத்தார். ஒரு பசு தற்செயலாக என் அம்பு மூலம் தாக்கப்பட்டது அதன் உரிமையாளர் என்னுடைய தவறுக்காக என்னை சபித்தார். திரௌபதியின் சுயம்வரத்திலே நான் தேரோட்டியின் மகன் என்பதற்காக நான் அவமானப்படுத்தப்பட்டேன். தாய் குந்தி கூட இறுதியாக தன் மற்ற மகன்களை காப்பாற்ற மட்டுமே என்னைத் தேடி வந்தார். இப்படி சுற்றி இருப்பவர்கள் அனைவராலும் வஞ்சிக்கப்பட்ட போது துரியோதனனின் அன்பு மூலமாகவே எனக்கு எல்லாம் கிடைத்தது. ஆகையால் அவன் பக்கம் நான் நிற்பது எப்படி தவறாகும் எனக் கேட்டான்

அதற்கு கிருஷ்ணன் கர்ணா நான் ஒரு சிறையில் பிறந்தேன். என் பிறப்புக்கு முன்பே மரணம் காத்திருந்தது. நான் பிறந்த இரவு அன்றே என் பெற்றோரிடமிருந்து நான் பிரிக்கப்பட்டேன். நீ சிறுவயதிலிருந்து ரதங்கள், குதிரைகள், வில், அம்புகள், வாள் ஆகியவற்றின் இரைச்சலுடன் நீ வளர்ந்திருப்பாய். ஆனால் நானோ மாடு கொட்டகையில் சாணம் வைக்கோல் இவைகளுக்கிடையே வளர்ந்தேன். நடக்க ஆரம்பிக்கும் முன்னே என்னைக் கொல்ல பல முயற்சிகள் நடந்தன. நல்ல கல்வி இல்லை. ராணுவ பயிற்சி இல்லை. ஆனால் அனைவரும் நான் தான் நடக்கும் பிரச்சினைகளுக்கெல்லாம் காரணம் என்கிறார்கள். நீங்கள் ஆசிரியர்களால் மதிக்கப்படுகிற போது நான் எந்தக் கல்வியையும் பெறவில்லை. நான் 16 வயதில் தான் ரிஷி சாண்டிபனியின் குருகுலத்தில் சேர்ந்தேன். நீங்கள் விரும்பிய ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டீர்கள். ஆனால் நானோ நான் விரும்பிய பெண்ணை திருமணம் செய்யாமல் என்னை நேசித்த பெண்களை மேலும் கொடியவர்களிடம் இருந்து காப்பாற்றி திருமணம் செய்துகொண்டேன். ஜராசந்த்திடமிருந்து என் மக்களைக் காப்பாற்றுவதற்காக யமுனா நதிக்கரையிலிருந்து கடலிலிருந்து தூரத்திலிருந்து என்னுடைய முழு சமூகத்தையும் நகர்த்த வேண்டியிருந்தது. வாழும் இடத்தைவிட்டு வேறு இடத்திற்கு நான் ஓடிப்போன ஒரு கோழை. துரியோதனன் போரில் வெற்றி பெற்றால் உனக்கு நிறைய பொருள் நாடு சேனை கௌரவம் கிடைக்கும். ஆனால் பாண்டவர்களுடன் சேர்ந்து யுத்தம் செய்தால் எனக்கு என்ன கிடைக்கும். கிருஷ்ணன் தான் இந்த போருக்கு காரணம் என்ற குற்றச்சாட்டு மட்டுமே மிஞ்சும்

கர்ணா ஒன்றை நினைவில் கொள் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் சவால்கள் உள்ளன. வாழ்க்கை எப்போதுமே இலகுவாகவும் எளிதாகவும் இருப்பதில்லை மனசாட்சிப்படி தர்மத்தின்பால் நிற்பதே சரியானதாகும். எத்தனை முறை நாம் ஏமாற்றப்பட்டோம். எத்தனை முறை நாம் அவமானப்படுதப்பட்டோம். எத்தனை முறை வீழ்ச்சி அடைகிறோம் என்பது முக்கியமானத அல்ல. அந்த நேரத்தில் நாம் எப்படி மீண்டு எழுந்தோம் என்பதே முக்கியமானது. நம் வாழ்க்கையில் நடக்கும் தவறுகள் நம்மை தவறான பாதையில் போவதற்காக உரிமையைக் கொடுக்கவில்லை. எப்போதும் நினைவில் கொள் வாழ்க்கை எனபது ஒரு பாதை சில நேரங்களில் கரடுமுரடாக இருக்கலாம் அதைக் கடப்பது நம் காலணிகளால் அல்ல நாம் எடுத்து வைக்கும் அடிகள் மூலமே என்று கர்ணனுக்கு விளக்கினார்.

ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள்

ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் ஜீவ சமாதி அடைந்த இடம் மாஞ்சாலி கிராமம் எனப்படும் மந்த்ராலயம். இது ஆந்திராவில் துங்கபத்திரா நதிக்கரையில் அமைந்துள்ளது. அது பூர்வ காலத்தில் பிரகலாதன் யாகம் செய்த இடம். அதனால் அந்த இடத்தையே தனது சமாதிக்குத் தேர்ந்தெடுத்தார் ஸ்ரீ ராகவேந்திரர். அப்பகுதியை ஆண்ட சுல்தான் மசூத் கானும் அதற்கு இணங்கி மாஞ்சாலியை ராகவேந்திரருக்குக் கொடுத்தார். ஸ்ரீ ராகவேந்திரர் 1671ம் ஆண்டில் ஜீவன் தன்னுடலில் இருக்கும் போதே பிருந்தாவனத்தில் அமர்ந்து ஜீவ சமாதி அடைந்தார். கி.பி. 1812ம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு ஒரு சட்டம் இயற்றியது. அந்தச் சட்டத்தின் மூலம் கோயில் இடத்திற்கான வாரிசுகள் யாரும் இல்லை என்றால் அந்த இடத்தை அரசாங்கமே எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவிப்புச் செய்தது. அந்தச் சட்டத்தின் மூலம் பிருந்தாவனத்துக்கு தானமாகக் கொடுக்கப்பட்டிருந்த நிலமானியம் முடிவுக்கு வரும் நிலை ஏற்பட்டது. ஆனால் பொது மக்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். பல ஆண்டுகளுக்கு முன்னால் அப்பகுதியை ஆண்ட சுல்தான் ஸ்ரீ ராகவேந்திரருக்கு தானமாக வழங்கிய இவ்விடத்தை அரசு கையகப்படுத்தக் கூடாது என்று அவர்கள் எதிர்த்தனர். அதனால் பிரிட்டிஷ் அரசு அப்போது பெல்லாரி மாவட்ட ஆட்சியாளராக இருந்த சர்தாமஸ் மன்றோ தலைமையில் ஒரு குழுவை நியமித்து நிலைமையைச் சரி செய்யச் சொல்லி உத்தரவிட்டது.

சர்தாமஸ் மன்றோ தனது குழுவினருடன் ஆலயத்துக்கு விரைந்தார். ஆலயத்தின் நுழைவாயிலில் தனது ஷூவையும் தொப்பியையும் கழற்றி விட்டு பிருந்தாவனத்தை நோக்கிச் சென்றார். ஜீவசமாதி ஆலயம் அருகே சென்ற சர்தாமஸ் மன்றோ யாரோ அங்கு இருப்பது போல் வணக்கம் செலுத்தினார். பின் சத்தமாக உரையாட ஆரம்பித்தார். அவருடன் வந்திருந்த குழுவினருக்கு ஒன்றுமே புரியவில்லை. காரணம் அங்கே மன்றோவைத் தவிர எதிரே யாருமே இல்லை. ஆனால் மன்றோவோ யாரோ எதிரில் நின்று கொண்டு பேசிக் கொண்டிருப்பது போல சரளமாக ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருந்தார். ஆலயம் பற்றி அதை தானமாக அளித்தது பற்றி ஆங்கிலேய அரசு வெளியிட்டிருக்கும் அறிவிப்பு பற்றி எல்லாம் அவர் யாரிடமோ விரிவாக விளக்கிக் கொண்டிருந்தார். அவர் யாரிடம் பேசுகிறார் எதற்குப் பேசுகிறார் ஒருவேளை சித்தப்பிரமை ஏதும் ஏற்பட்டு விட்டதா என்றெல்லாம் என்ணிய குழுவினர் ஒன்றுமே புரியாமல் திகைத்துப் போய் நின்று கொண்டிருந்தனர். வெகு நேரம் கழித்து தனது உரையாடலை முடித்துக் கொண்டு தங்கள் ஆங்கிலேயப் பாணியில் அந்த பிருந்தாவனத்துக்கு ஒரு சல்யூட் வைத்து விட்டு வெளியே வந்தார் சர்தாமஸ் மன்றோ. அதுவரை திகைத்துப் போயிருந்த குழுவினர் அவரிடம் யாரிடம் பேசிக் கொண்டிருந்தீர்கள் எனக் காரணம் கேட்டனர். அதற்கு சர்தாமஸ் மன்றோ பிருந்தாவனத்தின் அருகே காவி உடை அணிந்து ஒளி வீசும் கண்களுடன் உயரமாக ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவருக்கு நான் அரசு மான்யம் பற்றி சில விளக்கங்களை அளித்தேன். அவரும் என்னிடம் அது குறித்து உரையாடி மடத்தின் சொத்து பற்றிய சரியான விளக்கத்தைத் தந்து விட்டார். இந்த இடம் மடத்துக்குத்தான் சொந்தம் என்பதில் எந்த ஐயமுமில்லை என்றார். மேலும் அந்த மனிதரது ஒளி வீசும் கண்கள் பற்றியும் அவரது கம்பீரக் குரல் பற்றியும் செழுமையான ஆங்கில உச்சரிப்புப் பற்றியும் வியந்து கூறியவர் ஏன் நீங்கள் அவரைக் காணவில்லையா என்று கேட்டார். தங்கள் கண்களுக்கு அங்கு யாருமே தெரியவில்லை என்று கூறிய அவர்கள் சர்தாமஸ் மன்றோவுடன் உரையாடியது சாட்சாத் ஸ்ரீ ராகவேந்திரர் தான் என்பதை அவருக்கு உணர்த்தினர்.

கடந்த நூற்றாண்டில் காலமான மகான் தன் முன் நேரில் தோன்றி அதுவும் தன் பாஷையான ஆங்கிலத்திலேயே தன்னுடன் பேசிப் பிரச்சனையைத் தீர்த்த விதம் கண்டு பிரமித்தார் சர்தாமஸ் மன்றோ. தனக்குக் கிடைத்த பாக்கியத்தை எண்ணி மகிழ்ந்தார். அரசுக்கும் ஆளுநருக்கும் அந்த இடம் மடத்துக்குச் சட்டப்படி உரிமை உள்ள நிலம் என்று தகவல் அனுப்பியதுடன் அன்று முதல் ஸ்ரீ ராகவேந்திரரின் பக்தராகவும் ஆகிப்போனார். விரைவிலேயே சர்தாமஸ் மன்றோ தாற்காலிக ஆளுநராகப் பொறுப்பேற்கும் நிலை வர அவர் கையெழுத்திட்ட முதல் கோப்பு மடத்துக்கு நிலம் அளிப்பது தொடர்பானது தான். இந்தச் சம்பவங்கள் அப்போதைய சென்னை மாகாண கெஜட்டிலும் (அரசு ஆவணக் குறிப்பு) வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அன்று முதல் மந்த்ராலயம் ஆலய வளர்சிக்கு உதவியதுடன் பல இந்துத் திருத்தலங்களுக்கும் சென்று இறைவனை வணங்கி வழிபட்டார். ஒருமுறை சர்தாமஸ் மன்றோவுக்கு மிகக் கொடிய வயிற்று நோய் ஏற்பட்டது. நம்பிக்கையோடு அவர் திருப்பதி பெருமாளை வேண்டிக் கொண்டார். வயிற்றுவலி குணமானதும் ஒரு கிராமத்தையே கோயிலுக்கு தானமாக அளித்ததுடன் தன் பெயரில் தினந்தோறும் பொங்கல் செய்து இறைவனுக்குப் படைக்கப்பட வேண்டும் என்றும் ஆணையிட்டார். இன்றும் தினமும் திருப்பதி திருமலையில் சர்தாமஸ் மன்றோ கட்டளை பெயரில் பொங்கல் செய்து விநியோகிக்கப்படுகிறது.