மகாபாரதம் 5. உத்தியோக பருவம் பகுதி -5

சஞ்சயன் சில நாட்களுக்குப் பிறகு கௌரவர்களுடைய தூதுவனாக உபப்பிளவிய நகரத்திற்கு வந்து சேர்ந்தான் தன்னுடைய வாழ்த்துக்களை ஏராளமாக எடுத்து வழங்கினான். ஆனால் இந்திரப்பிரஸ்தத்தை பாண்டவர்களுக்கு திருப்பித் தருவதை பற்றிய பேச்சு ஏதும் பேசவில்லை. துரியோதனன் ஒரு முரடன் கையகல நிலத்தைக்கூட அவன் திருப்பி தரமாட்டான். இதை முன்னிட்டு குருவம்சத்தினரான பாண்டவர்களும் கௌரவர்களும் பரஸ்பரம் போர் புரிந்து தங்களைத் தாங்களே பாழ்படுத்திக் கொள்ளல் ஆகாது. தவவாழ்வு மேலானது என்று தர்ம சாஸ்திரம் பாராட்டுகின்றது. மற்றும் தங்களைத் தாங்களே அழித்துக் கொள்ளும் யுத்தம் சரியானது அல்ல என்று அதே தர்மசாஸ்திரம் எச்சரிக்கை பண்ணுகின்றது. இந்த விஷயத்தை யுதிஷ்டிரன் யோசித்துப்பார்க்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டான்.

யுதிஷ்டிரனுக்கு யுத்தத்தில் விருப்பம் இல்லை. ஆனால் தர்மயுத்தம் ஒன்று அவன் மீது திணிக்கப்படும் போது அந்த யுத்தத்திலிருந்து அவன் பின் வாங்க மாட்டான். போராட்டத்திற்கும் சமாதானத்திற்கும் அவன் முற்றிலும் தயாராய் இருந்தான். சமாதானம் என்பது கௌரவமான முறையில் வந்து அமையவேண்டும். பாண்டவர்கள் தங்களுக்குத்தானே சம்பாதித்துக் கொண்ட ராஜ்யம் அவர்களுக்கு உரியதாக வேண்டும். அதற்கெல்லாம் மேலாக கிருஷ்ணனுடைய தீர்மானப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று யுதிஷ்டிரன் ஆயத்தமாய் இருந்தான்.

சகோதரர்களாகிய கௌரவர்கள் பாண்டவர்கள் இரு தரப்பினரின் நலன் மேல் தனக்கு அக்கரை இருப்பதாக கிருஷ்ணன் தெரிவித்தான். மேலும் தானே அஸ்தினாபுரம் சென்று இரு கட்சிக்காரர்களுக்கும் நலன் ஏற்படும் வகையில் சமாதானம் செய்து வைக்க முயல்வதாகவும் தெரிவித்தான். தன்னுடைய முயற்சி புறக்கணிக்கப்படுமானால் அதனால் வரும் சேதங்கள் அளவிடமுடியாத அளவில் இருக்கும் என்று சஞ்சயனிடம் கூறி அவன் திரும்பி செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டான்.

சஞ்சயின் அஸ்தினாபுரம் திரும்பிச்சென்று திருதராஷ்டிரனை தனியாக முதலில் சந்தித்தான். நிலைமையை உள்ளபடி அவன் தெரிவித்தான். பாண்டு மன்னன் உயிரோடு இருந்திருந்தால் அவர் சொற்படி யுதிஷ்டிரன் நடந்திருப்பான். அதன்படியே தனது பெரியப்பாவாகிய திருதராஷ்டிரர் எடுக்கும் முடிவுக்கு அடிபணிந்து நடந்து கொண்டான். யுதிஷ்டிரனுடைய இந்த அடக்கத்தை முறைதவறி கையாண்டு கெடுத்துவிட்டார்கள். அப்படி செய்த தீமையையும் யுதிஷ்டிரன் சமாளித்துக் கொண்டான். துரியோதனனுடைய துஷ்ட தனமான போக்குக்கு இணங்கி வரும்படி தன் தந்தையை வற்புறுத்துகின்றான். தந்தையின் சொற்படி நடக்க துரியோதனன் எந்த விதத்திலும் தயாராய் இல்லை. திருதராஷ்டிரன் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் நடுநிலை வகிக்கவில்லை தன் மகன் சார்பிலேயே அவன் நடந்து கொண்டான். இவ்விஷயத்தை உள்ளபடி திருதராஷ்டிரருக்கு சஞ்சயன் தெரிவித்தான். மேலும் மற்றவர்கள் அனைவருக்கும் அடுத்தநாள் சபை நடுவே வைத்து தான் பாண்டவர்களிடம் சென்றதன் விளைவே தெரிவிப்பதாக சஞ்சையன் எடுத்துச் சொல்லி விட்டு அங்கிருந்து விடை பெற்றான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.