மகாபாரதம் 3. வன பருவம் பகுதி -13

பாண்டவர்கள் காம்யக வனத்திற்கு திரும்பி வந்ததை அறிந்த கிருஷ்ணன் தன்னுடைய துணைவியான சத்தியபாமாவையும் அழைத்துக்கொண்டு பாண்டவர்களை பார்க்க வந்தான். இந்த சந்திப்பு அனைவருக்கும் மகிழ்ச்சியை அளித்தது. வனவாசத்தில் நடந்த அனுபவங்களை பாண்டவர்கள் கிருஷ்ணனிடம் தெரிவித்தார்கள். நகரில் இருக்கும் உப பாண்டவர்கள் அபிமன்யூ சுபத்திரை ஆகியோருடைய நலனை கிருஷ்ணர் பாண்டவர்களிடமும் தெரிவித்தார். அர்ஜூனன் தனக்கு இறைவனிடம் இருந்து கிடைத்த ஆயுதங்கள் தேவலோகத்து அனுபவங்கள் அனைத்தையும் கிருஷ்ணனிடம் தெரிவித்தான்.

சிரஞ்சிவியாகிய மார்கண்டேய மகரிஷி காம்யக வனத்தில் பாண்டவர்கள் இருக்கும் இடத்திற்கு வந்தார். அவரை தொடர்ந்து நாரதமகரிஷியும் அங்கு வந்தார். மகாபுருஷர்களின் வருகையால் அந்த இடத்தில் தெய்வீகம் மேலோங்கியது. பக்தியை வளர்க்கும் கதைகள் கருத்துக்களை மார்க்கண்டேய மகரிஷி சிறப்பாக கூறினார். அவரிடம் இருந்த தெய்வீக ஆற்றலை பாண்டவர்கள் வேண்டியவாறு பயன்படுத்திக்கொண்டார்கள். அவர்கள் அங்கு இருந்ததில் காலம் வெகு விரைவாக சென்றது. கிருஷ்ணனும் மார்கண்டேய மகரிஷியும் விரைவில் உங்களுக்கு நல்லகாலம் வரும் என்றும் ஆசிர்வதித்து விட்டு அங்கிருந்து கிளம்பினார்கள்.

வேதங்களை கற்றறிந்த தவத்திலும் ஒழுக்கத்திலும் சிறந்த யாத்திரை செய்யும் பிராமணன் ஒருவன் திருதராஷ்டிரரை அவருடைய மண்டபத்தில் சந்தித்தான். பாண்டவர்களை காம்யக வனத்தில் சந்தித்ததையும் அவர்களுடைய விவரங்களையும் திருதராஷ்டிரருக்கு எடுத்துரைக்க ஆரம்பித்தான். கௌரவர்கள் அனைவரும் அவர் சொல்வதை கேட்க ஆர்வமாக இருந்தார்கள். ஏனெனில் வஞ்சகமாக சூதாடி வனத்துக்கு விரட்டப்பட்ட பாண்டவர்களின் நிலைமையை அறிந்து கொண்டால் மேலும் தாங்கள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பயன்படும். திருதராஷ்டிரர் பாண்டவர்களின் எப்படி இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்வதிலும் ஆர்வமாக இருந்தான்.

பாண்டவர்களில் முத்தவனான யுதிஷ்டிரன் இப்போது மண்ணுலகிற்கு மட்டும் அல்லாமல் விண்ணுலகிற்கும் பயன்படுகின்ற ஏராளமான தபோபலன்களை பெற்றிருக்கின்றான். பீமன் அனுமனிடம் இருந்து புதிய உடல் திட்பத்தையும் வல்லமையையும் பெற்றிருக்கின்றான். அர்ஜுனன் தன்னுடைய தவத்தின் விளைவாக மகாதேவனிடமிருந்து பாசுபத அஸ்திரத்தை சிவ பிரசாதமாகப் பெற்று இருக்கின்றான். இந்திரன் அர்ஜுனனை இந்திர லோகத்திற்கு அழைத்துச் சென்று ஒப்புயர்வற்ற அஸ்திரங்களை வழங்கியிருக்கின்றான். நகுலன் சகாதேவன் திரௌபதி ஆகியோர்கள் தங்களுடைய தவத்தின் விளைவாக திண்ணிய மனப்பான்மை படைத்தவர்களாக மேலோங்கி இருக்கின்றார்கள்.

தொடரும்………..

மகாபாரதம் 3. வன பருவம் பகுதி -12

யுதிஷ்டிரனிடம் பாம்பு கேள்வி கேட்க ஆரம்பித்தது. பிராமணன் என்பவன் யார்? அவனுடைய இலட்சணம் என்ன?

உண்மை, கொடை, பொறுமை, நல்லொழுக்கம், இரக்கம், தவம், கருணை ஆகிய குணங்களுடன் தவமும் தெய்வ சம்பத்தும் வாய்க்கப்பெற்று இருப்பவனே பிராமணன். பொறி புலன்களை அவன் வென்றவன். சத்திய விரதத்திலிருந்து அவன் மாறுவதில்லை. பரஞானத்தை நாடியிருப்பதும் அந்த பரஞானத்தை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்வதும் அவனுடைய தர்மமாகும். இதுவே பிராமணனுக்குரிய இலட்சணமாகும் என்று யுதிஷ்டிரர் சொல்லி முடித்தார்.

பாம்பு – எதை அறிந்தால் மனிதன் அனைத்தையும் அறிந்தவனாகின்றான்?

யுதிஷ்டிரன் – மாய பிரபஞ்சத்துக்கு ஆதாரமாக இருப்பது பிரம்மம். அந்த பிரம்மத்தை அறிந்தவன் அனைத்தையும் அறிந்தவன் ஆகிறான்.

பாம்பு – அறியத்தக்கது எது?

யுதிஷ்டிரன் – தேசம் காலம் வஸ்து ஆகிய எவற்றாலும் அளவிடமுடியாத எந்த இறைவனிடம் சென்று அடைந்து உயிர்கள் மீண்டும் பிறப்பெடுப்பதில்லையோ அந்த இறைவனே அறியத்தக்கவன்.

பாம்பு – சாதி பிறப்பை அடிப்படையாகக் கொண்டதா?

யுதிஷ்டிரன் – பிறப்பில் சாதி அடிப்படையாக கொண்டது இல்லை. அனைவரும் மனிதர்களாகவே பிறக்கின்றார்கள். பிறகு அவர்கள் அடைந்து வருகின்ற மனப்பரிபாகத்தை முன்னிட்டு மானுடன் ஒருவன் சாதியில் மேலோங்குகின்றான். இவ்வுலக இன்பங்கள் அனைத்தையும் அறவே துறந்து இறைவன் எண்ணத்திலேயே நிலைத்திருந்து மக்கள் எல்லோரையும் உயர்நிலைக்கு அழைத்துச் செல்பவன் பிராமணன் ஆகிறான். சமுதாய ஒழுக்க கட்டுப்பாட்டை முறையாக காப்பாற்றி வருபவன் க்ஷத்திரன் ஆகின்றான். சமுதாயத்தின் செல்வத்தை வளர்ப்பவன் வைசியனாகின்றான். தன்னுடைய சுயநலத்தில் கண்ணும் கருத்துமாய் இருப்பவன் சூத்திரன் ஆகின்றான்.

பாம்பு – பிரம்மஞானி யார்? பிரம்ம ஞானத்தின் பயன் என்ன?

யுதிஷ்டிரன் – ஞானத்தின் சிகரமாகிய பிரம்மஞானத்தை பெறுவது வாழ்வின் முடிவான குறிக்கோள் ஆகும். பிரம்மஞானி ஒருவன் நான் உடல் அல்ல தான் ஆத்ம சொரூபம் என்பதை அனுபூதியில் அறிய வருகின்றான். அவன் இறப்பிற்கும் பிறப்பிற்கும் அப்பாற்பட்டவன். இவ்வுலகத்தின் இன்ப துன்பங்கள் அவனை தாக்காது. அவனே பிரம்மஞானி. பிரம்மஞானிகளிடம் தொடர்பு கொள்கின்ற மக்கள் அனைவரும் ஒழுக்கத்திலும் பரஞானவளர்ச்சியிலும் முன்னேற்றமும் அடைகின்றனர்.

பாம்பு கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் யுதிஷ்டிரன் சரியான பதில் கூறியதும் அகத்தியர் இட்ட சாபம் முடிவுற்றது. மலைப்பாம்பு உயிர் அற்றதாக நழுவி கீழே விழுந்தது. பாம்பின் உடலில் இருந்த நகுஷன் ஜோதிமயமாக கிளம்பினான். சொர்க்கத்திலிருந்து ரதம் கீழே இறங்கி வந்து அவனை விண்ணுலகு அழைத்துச் சென்றாது. ரதம் மேல் நோக்கி செல்வதற்கு முன் யுதிஷ்டிரனை நகுஷன் ஆசிர்வதித்தான். பீமன் பழையபடி வலிமையான மனிதன் ஆனான். மானுட வாழ்க்கையில் அமையக்கூடிய அதிசயங்களையெல்லாம் வியந்து கொண்டே அண்ணனும் தம்பியும் தங்களுடைய காம்யக வனத்திற்கு திரும்பிச் சென்றனர்.

மகாபாரதம் 3. வன பருவம் பகுதி -11

காம்யக வனத்தில் பாண்டவர்கள் தங்கிய போது ஒருநாள் பீமன் அருகில் இருந்த வனத்திற்குள் வேட்டைக்கு சென்றான். காட்டுக்குள் வெகு தூரம் சென்று விட்டான். அடர்ந்த அந்த பகுதிக்குள் கந்தர்வர்கள் சித்தர்கள் தேவ ரிஷிகள் அப்சரஸ்கள் மட்டுமே உலாவும் இடம் அது. காட்டிற்குள் மிகவும் ரம்யமாக இருந்ததால் பீமன் உற்சாகத்தோடு அங்கே சென்று விட்டான். அப்போது அவன் கண்ணில் ஒரு மிகப் பெரிய பாம்பு ஒன்று தென்பட்டது. பாம்பு பீமனை பார்த்ததும் கண் இமைக்கும் நேரத்தில் அது பீமனை தனது உடலால் சுற்றி இறுக்கியது. பலம் மிக்க பீமனால் அதனிடமிருந்து விடுபட முடியவில்லை. பீமன் அதிர்ச்சி அடைந்தான். அப்பாம்பு அவனைப் பிடித்துக் கொண்டதும் அவனிடத்தில் இருந்த வலிமை அனைத்தும் அவனை விட்டு போய் விட்ட அனுபவம் அவனுக்கு உண்டாகியது. நொடிப்பொழுதில் விவேகம் ஒன்று அவன் உள்ளத்தில் உதயமானது. உடல் வலிமை நிலையற்றது. உடல் வலிமையை சார்ந்திருக்க கூடாது என்று எண்ணினான். வலிமையை இழந்தாலும் தைரியத்தை பீமன் இழந்து விடவில்லை.

பாம்பின் வடிவில் இருக்கும் நீ யார் என்னை சுற்றி பிடித்துக் கொண்டு நீ என்ன செய்யப்போகிறாய். யுதிஷ்டிரனுடைய தம்பி பீமன் நான் என்று பாம்பிடம் கூறினான். அதற்கு மலைப்பாம்பு நான் மிகவும் பசியோடு இருக்கிறேன் உன்னை சாப்பிட விரும்பி உன்னை பிடித்தேன். ஆனால் உன்னை யாரென்று நீ அறிமுகப்படுத்தியதன் விளைவாக உன்னை சாப்பிட நான் தயங்குகிறேன். நான் நகுஷ மன்னன். இந்திர லோகத்தில் இந்திரனாக பதவி ஏற்றேன். அப்போது சொர்க்க வாசத்தில் மண்ணுலகில் நான் பெற்ற செல்வத்தை முன்னிட்டு எனக்கு கர்வம் உண்டாயிற்று. ஆகையால் அகத்திய மகரிஷி எனக்கு சாபமிட்டார். அவரிட்ட சாபத்தின்படி நான் மண்ணுலகில் நெடுங்காலம் மலைப் பாம்பாக வாழ்ந்திருக்க வேண்டும். அப்பொழுது யுதிஷ்டிரன் என்முன் வந்து என்னுடைய கேள்விகளுக்கு பதில் அளித்து சம்வாதம் செய்து வெற்றி பெறுவான். அதன் விளைவாக எனக்கு விமோசனம் கிடைக்கும். உன்னை நீ அறிமுகப்படுத்தியதன் வாயிலாக என்னுடைய பழைய சம்பவங்கள் எனக்கு ஞாபகத்திற்கு வருகின்றது என்று பாம்பு கூறியது.

பீமனை காணாமல் காட்டிற்குள் தேடி பாண்டவ சகோதரர்கள் ஆளுக்கு ஒரு பக்கம் சென்றார்கள். அப்பொழுது யுதிஷ்டிரன் பீமனை தேடிக்கொண்டு அவ்விடத்திற்கு வந்து சேர்ந்தான். பீமன் மலைப்பாம்பிடம் அகப்பட்டு இருந்த காட்சியை பார்த்து அவன் திகைத்துப் போனான். எனினும் அதிவிரைவில் அவன் தன் மனதை தேற்றிக்கொண்டு அங்கு நிகழ்ந்தவற்றை விசாரித்தான். பாம்பு தன் வரலாற்றை முழுவதுமாக விளக்கியது. மலைப் பாம்பாக இருந்தது தன்னுடைய மூதாதையர் நகுஷன் என்பதையும் ஒரு சாபத்தின் விளைவாக இந்த நிலைக்கு அவன் வந்திருப்பதை அறிந்த யுதிஷ்டிரன் தன்னுடைய மூதாதையராகிய பாம்பின் முன்னிலையில் வீழ்ந்து வணங்கினான். பிறகு இருவருக்கும் இடையிலான சம்பாஷணை தொடர்ந்தது.

ஸ்ரீ அனுமன் சாலிஸா.

ஒருமுறை துளசிதாசரை தனது அரசவைக்கு வரவழைத்த முகலாயப் பேரரசர் அக்பர் நீர் பெரிய ராமபக்தர். பல அற்புதங்களைச் செய்கிறீர் என்கிறார்கள் ஏதாவது ஒரு அற்புதத்தைச் செய்து காட்டுங்கள் என்றார். நான் மாயாஜாலக்காரன் அல்ல ஸ்ரீராமரின் பக்தன் மட்டுமே என்று துளசிதாசர் சொல்ல கோபப்பட்ட அக்பர் அவரைச் சிறையில் அடைத்தார். எல்லாம் ஸ்ரீராமனின் சித்தம் என்று கலங்காமல் சிறை சென்ற துளசிதாசர் தினமும் ஆஞ்சநேயர் மீது ஒரு போற்றிப் பாடல் இயற்றி வழி பட்டார். இப்படி நாற்பது பாடல்களை எழுதியதும் திடீரென எங்கிருந்தோ வந்த ஆயிரக்கணக்கான வானரங்கள் அரண்மனையில் புகுந்து தொல்லை செய்ய ஆரம்பித்தன.

படை வீரர்கள் எவ்வளவோ முயன்றும் விரட்ட முடியவில்லை. அக்பரிடம் சென்ற சிலர் ராமபக்தரான துளசிதாசரைக் கொடுமைப்படுத்துவதால் ஆஞ்சநேயருக்குக் கோபம் வந்திருக்கிறது. துளசிதாசரை விடுவித்தால் பிரச்னை நீங்கிவிடும் என்று ஆலோசனை அளித்தனர். அதையடுத்து துளசிதாசரை விடுவித்து வருத்தம் தெரிவித்தார் அக்பர். மறுகணமே வானரப் படைகள் மாயமாய் மறைந்தன. துளசிதாசர் சிறையில் இருந்தபோது பாடிய போற்றிப் பாடல்கள்தான் ஸ்ரீ அனுமன் சாலிஸா.

ஹனுமான் சாலிஸா தமிழில்

மாசற்ற மனத்துடனே ஸ்ரீராமனைப் பாட
குருநாதனே துணை வருவாய்
வாயுபுத்ரனே வணங்கினேன்
ஆற்றலும் ஞானமும் வரமும் தர வந்தருள்வாய்
ஸ்ரீ ஹனுமானே

ஜயஹனுமானே ஞானகடலே
உலகத்தின் ஒளியே உமக்கு வெற்றியே
ராமதூதனே ஆற்றலின் வடிவமே
அஞ்ஜனை மைந்தனே வாயு புத்திரனே
மஹா வீரனே மாருதி தீரனே
ஞானத்தை தருவாய் நன்மையை சேர்ப்பாய்
தங்க மேனியில் குண்டலம் மின்ன
பொன்னிற ஆடையும் கேசமும் ஒளிர
தோளிலே முப்புரிநூல் அணிசெய்ய
இடியும் கொடியும் கரங்களில் தவழ
சிவனின் அம்சமே கேசரி மைந்தனே
உன் ப்ரதாபமே உலகமே வணங்குமே
அறிவில் சிறந்தவா சாதுர்யம் நிறைந்தவா
ராம சேவையே சுவாசமானவா
உன் மனக் கோவிலில் ராமனின் வாசம்
ராமனின் புகழை கேட்பது பரவசம்

உன் சிறுவடிவை சீதைக்கு காட்டினாய்
கோபத் தீயினில் லங்கையை எரித்தாய்
அரக்கரை அழித்த பராக்ரம சாலியே
ராமனின் பணியை முடித்த மாருதியே
ராமன் அணைப்பிலே ஆனந்த மாருதி
லக்ஷ்மணன் ஜீவனை காத்த சஞ்சீவி
உனது பெருமையை ராமன் புகழ்ந்தான்
பரதனின் இடத்திலே உன்னை வைத்தான்
ஆயிரம் தலைக் கொண்ட சேஷனும் புகழ்ந்தான்
அணைத்த ராமன் ஆனந்தம் கொண்டான்
மூவரும் முனிவரும் ஸனக ஸனந்தரும்
நாரதர் சாரதை ஆதிசேஷனும்
எம குபேர திக்பாலரும் புலவரும்
உன் பெருமைதனை சொல்ல முடியுமோ
சுக்ரீவனை ராமனிடம் சேர்த்தாய்
ராஜ யோகத்தை அவன் பெற செய்தாய்

இலங்கையின் மன்னன் விபீஷணன் ஆனதும்
உன் திறத்தாலே உன் அருளாலே
கதிரவனை கண்ட கவி வேந்தனே
கனியென விழுங்கிய ஸ்ரீஹனுமானே
முத்திரை மோதிரம் தாங்கியே சென்றாய்
கடலை கடந்து ஆற்றலை காட்டினாய்
உன்னருளால் முடியாதது உண்டோ
மலையும் கடுகென மாறிவிடாதோ
ராம ராஜ்யத்தின் காவலன் நீயே
ராமனின் பக்தர்க்கு எளியவன் நீயே
சரண் அடைந்தாலே ஓடியே வருவாய்
கண் இமை போல காத்தே அருள்வாய்
உனது வல்லமை சொல்லத் தகுமோ
மூவுலகமும் தொழும் ஸ்ரீஹனுமானே
உன் திருநாமம் ஒன்றே போதும்
தீய சக்திகள் பறந்தே போகும்

ஹனுமனின் ஜபமே பிணிகளைத் தீர்க்குமே
துன்பங்கள் விலகுமே இன்பங்கள் சேர்க்குமே
மனம் மெய் மொழியும் உந்தன் வசமே
உன்னை நினைத்திட எல்லாம் ஜெயமே
பக்தர்கள் தவத்தில் ராம நாமமே
ராமனின் பாதமே உந்தன் இடமே
அடியவர் நிறைவே கற்பகத் தருவே
இறையனுபூதியை தந்திடும் திருவே
நான்கு யுகங்களும் உன்னைப் போற்றிடும்
உன் திருநாமத்தில் உலகமே மயங்கும்
ஸ்ரீராமன் இதயத்தில் உந்தன் இருப்பிடம்
ஞானியர் முனிவர்கள் உந்தன் அடைக்கலம்
அஷ்ட சித்தி நவநிதி உன் அருளே
அன்னை ஜானகி தந்தாள் வரமே
ராம பக்தியின் சாரம் நீயே
எண்ணம் எல்லாமே ராமன் சேவையே

ஹனுமனைத் துதித்தால் ராமனும் அருள்வான்
பிறவா வரம் தந்து பிறவியைத் தீர்ப்பான்
ராம நாமமே வாழ்வில் உறுதுணை
அந்திம காலத்தில் அவனின்றி யார் துணை
என் மனக் கோவிலில் தெய்வமும் நீயே
உனையன்றி வேறொரு மார்க்கமும் இல்லையே
நினைப்பவர் துயரை நொடியில் தீர்ப்பாய்
துன்பத்தைத் துடைத்து துலங்கிட வருவாய்
ஜெய் ஜெய் ஜெய் ஜெய் ஸ்ரீஹனுமானே
ஜெகத்தின் குருவே ஜெயம் தருவாயே
ஹனுமான் சாலீஸா அனுதினம் பாடிட
பரமன் வருவான் ஆனந்தம் அருள்வான்
சிவபெருமானும் அருள் மழை பொழிவான்
இகபர சுகங்களை எளிதில் பெறுவான்
அடியவர் வாழ்வில் ஹனுமனின் அருளே
துளஸீதாஸனின் பிரார்த்தனை இதுவே.

Image result for துளசிதாசர்

மகாபாரதம் 3. வன பருவம் பகுதி -10

யுதிஷ்டிரனுக்கு அர்ஜுனன் கற்றுக்கொண்ட ஆற்றல் வாய்ந்த தெய்வீக அஸ்திர சாஸ்திரங்களையும் அவற்றை உபயோகிக்கும் முறையையும் தெரிந்து கொள்ளும் ஆவல் உண்டாயிற்று. ஆகவே அர்ஜுனனிடம் அதைப் பற்றி விளக்கமாக கூறுமாறு கேட்டுக் கொண்டான். அர்ஜுனன் தான் கற்றுக்கொண்ட தெய்வீக அஸ்திர சஸ்திர வித்தைகளையும் அதை உபயோகிக்கும் முறையையும் அதன் சக்திகளையும் விளக்க ஆயத்தமானான். அப்பொழுது அங்கு நாரத மகரிஷி பிரசன்னமாகி ஓர் எச்சரிக்கை செய்தார்.

இயற்கையின் வல்லமைகள் அனைத்தையும் மண்ணுலகவாசிகள் அறிந்தவர்கள் அல்லர். அப்படி அறிந்து கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. வலிமையற்ற மனிதன் ஒருவனிடம் இந்த அஸ்திர சாஸ்திரங்களின் வல்லமை விளக்கப்பட்டால் அவன் அவைகளை முறையாக கையாள இயலாமால் தவிப்பான். அல்லது அந்த சக்திகளை துஷ்பிரயோகம் செய்வான். தெய்வீக ஆயுதங்கள் மன சக்தியை அடிப்படையாகக் கொண்டவை. அவை மண்ணுலக்கு உரியவைகள் அல்ல. அந்த அஸ்திரத்தில் அமைந்திருக்கும் சக்தி அளப்பரியதாகும்.
அந்த ஆயுதங்களின் வேகத்தை தங்குவதற்கு ஏற்ற வலிமை மண்ணுலகில் இல்லை. வெறும் பயிற்சி முறையில் அவைகளை கையாண்டு பார்த்தாலும் மண்ணுலகம் தாங்காது. ஆகையால் தான் அவைகளின் பயிற்சி பெறுவதற்கு என்று அர்ஜுனன் மண்ணுலகில் இருந்து பிரித்தெடுத்து தேவேந்திரன் விண்ணுலகிற்கு அழைத்துச் சென்றான். இத்தகைய தெய்வீக அஸ்திரங்களுக்கு உரியவனாக அர்ஜுனன் ஒருவன் மட்டுமே உள்ளான். முற்றிலும் அவசியம் ஏற்பட்டாலொழிய அந்த அஸ்திரங்களை அவன் கையாளலாகாது. முற்றிலும் சுதாரிக்கக்கூடிய சாதாரண சந்தர்ப்பங்களில் அவைகளை பிரயோகிக்கும் எண்ணமே அர்ஜுனனின் உள்ளத்தில் உதயம் ஆகாது. அத்தகைய மன உறுதி படைத்தவன் அர்ஜுனன். ஆகையால் இந்த தெய்வீக அஸ்திரங்களை பற்றி பேச வேண்டாம் என்று அவர் நாரதர் எச்சரிக்கை செய்தார்.

பாண்டவர்கள் வனவாசத்தில் பிரவேசித்து பத்து ஆண்டுகள் ஆகியது. கஷ்ட நேரம் என கருதப்பட்ட இந்த பத்து ஆண்டு வனவாசத்தை பாண்டவர்கள் ஆத்ம பலத்தை பெருக்குவதற்கு நன்கு பயன்படுத்தி கொண்டார்கள். அதன் அறிகுறியாக பத்து ஆண்டுகள் விரைவாக சென்றது. பத்ரிகாஸ்ரமத்தின் மகிமையும் எழிலும் அவர்களின் உள்ளத்தை கவர்ந்தது. ஆகையால் அந்த இடத்தை விட்டு காலி செய்துவிட்டு வேறு இடம் செல்ல அவர்களுக்கு மனம் வரவில்லை. ஆயினும் செய்து முடிக்க வேண்டிய ஏனைய முக்கியமான காரியங்கள் பாக்கி இருந்ததால் எஞ்சி இருக்கும் இரண்டு வருடங்களை போக்குவதற்கு அவர்கள் காம்யக வனத்திற்கு திரும்பிப் வந்தார்கள்.

மகாபாரதம் 3. வன பருவம் பகுதி -9

பீமன் குரங்கிடம் நீங்கள் சாதாரண குரங்கு அல்ல. நான் தோல்வியை ஒப்புக் கொள்கிறேன், உங்கள் முன் நான் மண்டியிடுகிறேன் என கூறி குரங்கின் முன் வீழ்ந்து வணங்கினான். பாண்டவ சகோதரர்களில் ஒருவன் நான். நீங்கள் யாரென்று தயவு செய்து கூறுங்கள் என்று கேட்டான். அதற்கு குரங்கு வாயு பகவானுடைய அனுக்கிரகத்தால் அஞ்சனா தேவிக்கு மகனாகப் பிறந்தவன் நான். சிறிது நேரத்திற்கு முன் அனுமனைப் பற்றி கூறினாயே அந்த அனுமன் நான் தான். நான் ராமதாசன். நீ எனக்கு தம்பி என்று கூறி தன் சுய ரூபத்தை அடைந்த அனுமன் பீமனுக்கு ஆசி வழங்கி பீமனை கட்டித் தழுவினார். அதன் விளைவாக தன்னிடத்தில் புதிய ஆற்றல் வந்ததை போல் பீமன் உணர்ந்தான். பீமனுக்கு அனுமான் வரம் ஒன்று கொடுத்தார்.

வரத்தின் படி போர் களத்தில் பீமன் சிங்கமாக உறுமும் போது அனுமானின் குரலும் சேர்ந்து கொள்ளும். அதனால் பாண்டவர்களின் சேனையில் பலமும் கௌரவர்கள் சேனையில் குழப்பமும் உண்டாகும். நான் அர்ஜுனனின் ரதத்தில் உள்ள கொடியில் இருப்பேன். நீ ஜெயம் கொள்வாய் என அனுமான் ஆசி அளித்தார். இப்போது கௌரவ சகோதரர்களுடன் இனி நிகழும் போராட்டத்தில் வென்று விடக்கூடிய வல்லமை பீமனுக்கு வந்தது. சௌகந்திகா மலரை பறிக்க தான் நீ வந்திருக்கிறாய் என எனக்கு தெரியும். நீ மலர்களை எடுக்க போகும் பாதையில் ஆபத்து இருக்கிறது. இது ஆண்டவர்களுக்கான பாதையாகும். மானிடர்களுக்கு இது பாதுகாப்பானது அல்ல. ஆதனால் உன்னை எச்சரிக்கவே நான் வந்தேன். இந்த மலர் இருக்கும் குளத்தை நான் உனக்கு காண்பிக்கிறேன். உனக்கு வேண்டிய பூக்களை எடுத்து கொண்டு செல் என கூறினார். பீமனும் பூக்களை எடுத்து வந்து திரௌபதியிடம் அளித்தான். அர்ஜூனன் சென்று நீண்ட நாட்கள் ஆகிவிட்ட படியால் அர்ஜூனனுடைய வரவிற்காக பாண்டவ சகோதரர்கள் பத்ரிகாஸ்ரமத்தில் காத்துக்கொண்டிருந்தார்கள்.

ஒருநாள் வானத்தில் மிகவும் பிரகாசத்துடன் இந்திரனுடைய மேன்மை தாங்கிய ரதம் நிலவுலகை நோக்கி வந்தது. அது பூமியில் வந்து இறங்கிய உடன் அர்ஜுனன் அதிலிருந்து குதித்து இறங்கினான். தேவலோகத்து தந்தை கொடுத்திருந்த ஆயுதங்களையும் கீரிடத்தையும் அவன் அணிந்திருந்தான். வந்தவன் தனது மூத்த சகோதரர்களான யுதிஷ்டிரனையும் பீமனையும் வணங்கினான். அந்த சந்திப்பில் பூரிப்பு நிறைந்திருந்தது. அர்ஜுனன் சிவனோடு கொண்ட இணக்கம் இந்திரலோகத்தில் வாழ்ந்த வாழ்வு அங்கு பெற்ற பயிற்சிகள் ஆகியவற்றை விரிவாக விளக்கினான் அவன் வாழ்ந்து வந்த வாழ்வின் விவரங்கள் அனைத்தையும் விரிவாக அறிந்து கொள்ள சகோதரர்கள் விரும்பினார்கள் அவர்கள் விரும்பியபடி அனைத்தையும் அர்ஜுனன் சளைக்காது அவர்களுக்கு எடுத்துக் கூறினான்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 214 திருக்கூடலையாற்றூர்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 214 வது தேவாரத்தலம் திருக்கூடலையாற்றூர். புராணபெயர் தட்சிணப்பரயாகை. மணிமுத்தாறு, வெள்ளாறு நதிகள் இங்கு கூடுவதால் இத்தலத்திற்கு தட்சிணப்பிரயாகை என்ற பெயரும் உண்டு. மூலவர் நர்த்தன வல்லபேஸ்வரர், நெறிகாட்டுநாயகர். இங்கு இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சித்திரை மாதம் முதல் மூன்று நாட்களில் மூலவரின் மீது சூரிய ஒளி படுகிறது. அம்பாள் பராசக்தி, ஞானசக்தி. இக்கோவிலில் இரண்டு அம்மன் சன்னதிகள் உள்ளன. ஞானசக்தி சன்னதியில் குங்குமமும், பராசக்தி சன்னதியில் விபூதியும் பிரசாதமாக தரப்படுகிறது. தீர்த்தம் பரம்ம, அகஸ்திய, கார்த்தியாயனர் தீர்த்தங்கள், சங்கம தீர்த்தம். தலமரம் கல்லாலமரம். வெள்ளாறு மற்றும் மணிமுத்தாறு ஆகிய இரண்டு நதிகள் கூடும் இடத்தில் அமைந்த தலம். ஆதலால் திருக்கூடலையாற்றூர் எனப் பெயர் பெற்றது.

இவ்வாலயத்தின் பழமையான ராஜகோபுரம் மூன்று நிலைகளைக் கொண்டது. கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தால் நந்திதேவர் மட்டும் காணப்படுகிறார். கொடிமரம் பலிபீடம் இல்லை. வெளிச் சுற்றில் பக்கவாயில் உள்ளது. அமுத விநாயகர், விசுவநாத லிங்கம், ஆறுமுகர், ஞானசக்தி, அம்பாள் முதலிய சந்நிதிகள் உள்ளன. அம்பாள் நின்ற திருக்கோலம். மூலவர் விமானம் இரு தள அமைப்புடையது. படிகளேறி மேலே சென்றால் அழகிய மண்டபம் உள்ளது. கோஷ்டமூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, அஷ்டபுஜ துர்க்கை உள்ளனர். சண்டேசுவரர் சந்நிதி எதிரில் உள்ளது. நடராச சபையில் நடராஜர் சிவகாமி அம்மையுடன் உள்ளார். இக்கோவிலில் சித்ரகுப்தர் உற்சவ மூர்த்தியாக ஒரு கையில் எழுத்தாணியும் மறு கையில் ஏடும் கொண்டு காட்சி தருகிறார். இக்கோயிலில் நவக்கிரக சந்நிதியில்லை. மூலவரைத் தரிசித்து விட்டு வரும்போது வலதுபுறம் பொங்கு சனிபகவான் சந்நிதி மட்டும் உள்ளது. இத்தலத்திலுள்ள முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் ஒரு பாடல் உள்ளது. இங்கு முருகர் பன்னிரு திருக்கரங்களுடன் தனது இரு தேவியர் வள்ளி, தெய்வானையுடன் மயில் மீது கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.

சிதம்பரத்தில் வியாக்ரபாத முனிவருக்கும், பதஞ்சலி முனிவருக்கும் தனது நடனக் காட்சியை காட்டி அருளினார் சிவபெருமான். அந்த நடனக் காட்சியைத் தானும் காண விரும்பி பிரம்மா இத்தலத்தில் இறைவனை வழிபட்டு வேண்டினார். அவர் வேண்டுதலை ஏற்று பிரம்மாவிற்கும் சரஸ்வதிக்கும் நர்த்தனம் ஆடி அருள் செய்தார். எனவே இத்தல இறைவன் நர்த்தன வல்லபேஸ்வரர் என அழைக்கப்படுகிறார். அகத்தியருக்கு கார்த்தியாயனன் என்ற மகன் பிறந்தான். அவனும் தந்தையைப் போல் மிகப்பெரிய ரிஷி ஆனான். அதன்பின் அகத்தியர் தனக்கு ஒரு மகள் வேண்டும் என இங்குள்ள இறைவனை வேண்டினார். இறைவனின் விருப்பப்படி மகாலட்சுமி இங்கு ஓடும் மணிமுத்தாறு நதியில் இருந்த தாமரை மலர் மீது விளையாடுவதை கண்டார். அக்குழந்தையை எடுத்து அம்புஜவல்லி என பெயரிட்டு வளர்த்து வந்தார். விஷ்ணு வராக அவதாரம் எடுத்த போது தன் துணைவி இங்கு அம்புஜவல்லியாக வளர்வதை அறிந்து மணம் செய்து கொண்டார். இங்கு விஷ்ணுவுக்கும் சன்னதி உள்ளது.

சோழநாட்டை ஆண்டு வந்த தினகர மகாராஜன் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவளைக் கொன்று விட்டான். இதனால் அவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்து கொண்டது. இதனால் நாடு மனைவி மக்களை இழந்து சுற்றித்திரிந்தான். அப்போது ஒரு வியாதியுள்ள ஓரு நாய் அவனது பின்னால் வந்து கொண்டிருந்தது. ஒருநாள் அந்த நாய் ஒரு நதியில் மூழ்கி எழுந்தவுடன் ஆரோக்கியத்துடனும் தோற்றப்பொலிவுடனும் விளங்கியது. இதைப்பார்த்த மன்னன் தானும் அந்நதியில் நீராடி தனது தோஷம் நீங்கப்பெற்று நாடு நகரத்தை திரும்பப் பெற்றான். அவன் நீராடிய இடத்தில் இரண்டு நதிகள் கூடின. அந்த நதிகளின் கரையில் சிவாலயம் கட்டினான். நதிகள் கூடியதால் திருக்கூடலையாற்றூர் என்று பெயரும் வைத்தான். மன்னன் கட்டிய கோயில் பழுதடைந்தது. சிலைகளைக் காணவில்லை. அப்போது அம்பாள் அவ்வூர் பொன்னப்ப குருக்களின் கனவில் தோன்றி நான் ஆற்றில் கிடக்கிறேன் என்றாள். அதன்பின் குருக்கள் ஆற்றில் கிடந்த சிலைகளை எடுத்து தற்போதுள்ள கோயிலை கட்டி சிலைகளை பிரதிஷ்டை செய்தார். சுந்தரர் திருமுதுகுன்றம் தலத்தை தரிசிக்க சென்றபோது இத்தலத்தை வணங்காமல் சென்றார். இறைவன் அந்தணராக வந்து சுந்தரர் முன்செல்ல சுந்தரர் அவரைத் திருமுதுகுன்றத்திற்கு வழி யாதெனக் கேட்டார். அந்தணராக வந்த இறைவனோ கூடலையாற்றுருக்கு வழி இது என்று கூறி மறைய திடுக்கிட்ட சுந்தரர் இத்தலத்திற்கு வந்து வழிபட்டார். சுந்தரமூர்த்தி நாயனார் வந்த அந்தணர் சிவபெருமானே என்று அறிந்து இறைவன் திருவருளை வியந்து தனது பதிகத்தின் ஒவ்வொரு பாடலிலும் கூடலையாற்றூர் இறைவன் தன் முன் வந்த அதிசயத்தை தான் அறிந்து கொள்ளாமல் போனதை குறிப்பிடுகிறார். தனது பாடல்கள் பத்தினையும் பாடுபவர்களது வினைகள் பற்றுகள் அனைத்தும் கெடுவது உறுதி என்று கடைசி பாடலில் குறிப்பிடுகிறார். இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. சுந்தரர், அருணகிரிநாதர் பாடல்கள் பாடியுள்ளனர்.


மகாபாரதம் 3. வன பருவம் பகுதி -8

பாண்டவர்கள் தெய்வீகம் நிறைந்த பல இடங்களைப் பார்த்த பிறகு கைலாச கிரியை அடைந்தனர். சாந்திக்கு உறைவிடமாக அந்த இடம் திகழ்ந்து கொண்டிருந்தது. பத்ரிகாஸ்ரமம் என்னும் புண்ணிய ஸ்தலம் அந்த வட்டாரத்தில் இருந்தது. அந்த இடம் நரன் நாராயணன் என்னும் ரிஷிகள் பண்டைய காலத்தில் தவம் செய்த இடம். அங்கு சில காலம் தங்கினார்கள்.

பத்ரிகாஸ்ரமம் இருக்கும் காட்டில் இயற்கை எழிலுடன் இருந்தது. ஒரு நாள் காலையில் தரையில் முளைத்திருந்த செடிகளில் மலர்ந்திருந்த விதவிதமான நிறங்களை உடைய மலர்களை பார்த்து திரௌவுபதி மகிழ்வுற்று இருந்தாள். அப்பொழுது வடகிழக்கு திசையிலிருந்து அடித்த காற்றானது ஓர் அற்புதமான மலரை அங்கு கொண்டுவந்து போட்டது. அந்த மலர் மிக்க அழகுடனும் நறுமணத்துடனும் இருந்தது. திரௌபதி அதை எடுத்து பீமனிடம் காட்டி இந்த மலர் வளர்ந்து இருக்கும் இடத்தை தேடிக் கண்டுபிடித்து சில மலர்களை கொண்டு வந்து கொடுக்கும்படி அவள் அவனிடம் வேண்டிக் கொண்டாள். அவளுடைய விருப்பத்தை நிறைவேற்றி வைக்க பீமனும் உற்சாகமாய் காட்டிற்குள் புறப்பட்டுப் போனான். யானை ஒன்று புதர்களை ஒதுக்கித் தள்ளிவிட்டு சஞ்சரிப்பது போன்று இருந்தது பீமனுடைய நடை. அவன் போன போக்கை முன்னிட்டு பறவைகளும் விலங்குகளும் நாலா பக்கமும் பரந்து ஓடின.

பருத்த மேனியுடன் குரங்கு ஒன்று காட்டு வாழை மரங்கள் நிறைந்திருந்த இடத்தில் படுத்திருப்பதை பீமன் பார்த்தான். பெரிய அந்த குரங்கை தூங்கத்தில் இருந்து எழுப்ப இடி இடித்தார் போல் பீமன் கத்தினான். உறக்கத்திலிருந்த குரங்கு ஒரு கண்ணை சிறிது திறந்து பார்த்தது பண்புள்ள ஒரு பெருமகன் போன்று நீ தோன்றுகின்றாய். ஆனால் ஒரு பாமரன் போன்று வனத்தில் வசித்து வரும் உயிரினங்களை நீ உபத்திரவப் படுத்துகிறாய். அனைத்து உயிர்களிடத்திலும் ஒழுங்காக நடந்து நடந்து கொள்வதே அறச்செயல் என்று குரங்கு கூறியது. அதற்கு பீமன் நீ சொல்வது எனக்கு புரிகிறது. ஆனால் நான் அவசரமாக போய்க் கொண்டிருக்கிறேன். தயவு செய்து நான் செல்வதற்கு எனக்கு வழி விடு என்று கூறினான். அதற்கு குரங்கு நான் மிகவும் களைத்துப் போய் அரைத்தூக்கத்தில் இருக்கிறேன். என்னால் எழுந்து கொள்ள இயலாது. என்னை குதித்து தாண்டி கொண்டு நீ போகலாம் என்று அனுமதி கொடுத்தது.

என்னை விட நீ வயதில் முதிர்ந்தவனாக இருக்கின்றாய். உன்னை தாண்டி செல்வது மரியாதை ஆகாது. நீ என்னை விட இளையவனாக இருந்தால் அனுமன் கடலைத் தாண்டியது போன்று நான் உன்னை தாண்டி இருப்பேன். ஆனால் என்னால் இப்பொழுது அப்படி செய்ய இயலாது என்று கூறினான். அப்படியானால் ஒரு பக்கம் எனது வாலை ஒதுக்கி தள்ளி வைத்துவிட்டு உனக்கு தேவையான பாதையை அமைத்துக் கொண்டு செல் என்று குரங்கு கூறியது. ஒரு வயது முதிர்ந்த குரங்குக்கு வரம்பு கடந்த மரியாதை காட்ட வேண்டிய அவசியம் இல்லை என்று பீமன் எண்ணிக்கொண்டு அந்த குரங்கின் வாலை தன் இடக்கையால் தூக்கி வைக்க அவன் முயன்றான். ஆனால் குரங்கின் வாலை தூக்க அவனால் இயலவில்லை. பிறகு இரண்டு கைகளாலும் தூக்க முயன்றான். தன்னுடைய முழு பலத்தையும் பயன்படுத்தினான். வால் அசையவில்லை. பீமனுக்கு தன்னுடைய வாழ்நாளில் ஏற்பட்ட முதல் தோல்வி இது.

தொடரும்……….

திருமூலர் காட்டும் லிங்கங்கள்

லிங்கம் என்பதற்கு மூன்று பொருள்கள் சொல்லப்படுகின்றன.

  1. லிம் என்பது லயத்தையும் (ஒடுங்குதல்) கம் என்பது வெளிவருதலையும் குறிக்கும். பிரளய காலத்தில் பிரபஞ்சங்கள் அனைத்தும் எந்த இடத்தில் ஒடுங்கி பின்னர்ப் படைப்புக் காலத்தில் மீண்டும் உற்பத்தியாகின்றனவோ அதுவே லிங்கம் எனப்படுகிறது.
  2. லிங்கம் என்பது சித்தரித்தல் எனப் பொருள்படும். சிவபெருமான் படைப்பு முதலான ஐந்தொழில்களால் பிரபஞ்சத்தைச் சித்தரிப்பதால் சிவலிங்கம் எனப் பெயர் ஏற்பட்டது என்று வருணபத்தி எனும் நூலில் சொல்லப்பட்டுள்ளது.
  3. லிங்கம் ஒரு பொருளின் சிறப்பியல்பின் அடையாளத்தை உணர்த்தும். சிவலிங்கம் என்பது சிவத்துக்கு அடையாளம் எனலாம்.

திரூமூலர் கூறும் லிங்க வகைகள்

  1. அண்ட லிங்கம்
  2. பிண்ட லிங்கம்
  3. சதாசிவ லிங்கம்
  4. ஆத்ம லிங்கம்
  5. ஞான லிங்கம்
  6. சிவ லிங்கம்

1.அண்ட லிங்கம்

அண்டம் என்றால் உலகம். லிங்கம் என்பது அடையாளம். அண்டலிங்கம் என்பது உலகமே சிவனது அடையாளம் என்பதே. உலகினைப் படைக்க விரும்பிய சதாசிவம் தன்னை விட்டு நீங்காத சக்தியின் துணை கொண்டு உலகத்தைத் உற்பத்தி செய்தான். குண்டலினி சக்தியின் ஆற்றலால் உலகம் உருவமாகக் காட்சியளிக்கிறது. சிவசக்தியினாலேயே அவை உலகில் வெவ்வேறு அறிவுடையனவாகக் காணப் பெறுகின்றன. (திருமந்திரம் 1713) இறைவனது திருவடிகள் கீழுலகமாகும். திருமுடி ஆகாயத்திற்கு அப்பாற்பட்டதாகும். திருமேனி ஆகாயமாகும். இதுதான் சிவபெருமான் உலகமே உருவமாகக் கொண்ட திருக்கோலமாகும். (திருமந்திரம் 1724) நிலம் – ஆவுடையார், ஆகாயம் – இலிங்கம், கடல் – திருமஞ்சனமாலை, மேகம் – கங்கை நீர், நட்சத்திரங்கள் – ஆகாயலிங்கத்தின் மேலுள்ள மாலை, ஆடை – எட்டு திசைகள் என்று லிங்கத்தின் அடையாளமாகக் குறிப்பிடலாம். (திருமந்திரம் 1725)

2.பிண்ட இலிங்கம்

மனித உடலையே சிவலிங்க வடிவமாகக் காண்பது பிண்ட இலிங்கம். மக்களின் உடலமைப்பே சிவலிங்கம், சிதம்பரம், சதாசிவம், அருட்பெருங்கூத்து ஆகியவைகளாக அமைந்திருக்கின்றன.

மானுட ராக்கை வடிவு சிவலிங்கம்
மானுட ராக்கை வடிவு சிதம்பரம்
மானுட ராக்கை வடிவு சதாசிவம்
மானுட ராக்கை வடிவு திருக்கூத்து. (திருமந்திரம் 1726)

என்று திருமூலர் கூறுகின்றார். மக்கள் தலை – பாணம், இடைப்பட்ட உடல் – சக்தி பீடம், கால் முதல் அரை வரை – பிரமபீடம் எனக் கொண்டால் மானுட ராக்கை வடிவு சிவலிங்கமாகத் தோன்றும். பிண்டத்தைச் சிவலிங்கமாகக் காண்பது இவ்வுடலைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

3.சதாசிவ லிங்கம்

லிங்கத்தைச் சக்தியும் சிவமும் இணைந்த உருவமாகக் காண்பது. சிவனுக்கு இருதயம் – ஞானசக்தி, தலை – பராசக்தி, தலைமுடி – ஆதிசக்தி, கவசம் – இச்சா சக்தி, நேத்திரம் – கிரியா சக்தி, சக்தியின் வடிவமே சிவனது வடிவமாகும். (திருமந்திரம் 1744) சதாசிவம் உருவமும் அருவமுமாக இருந்து உயிருக்கு உதவி செய்யும். (திருமந்திரம் 1734) சதாசிவ லிங்கம் சிவமும் சக்தியும் பிரிப்பற்றது என்ற உண்மையை உணர்த்துகிறது.

4.ஆத்ம லிங்கம்

அனைத்து உயிர்களையும் இறைவனாகக் காண்பது ஆத்ம லிங்கம் எனப்படுகிறது. இறைவன் உயிருக்குள் உயிராக இருக்கிறார். ஒளியும் ஒலியும் கலத்தலே ஆன்மலிங்கம் (திருமந்திரம் 1954) என்று திருமூலர் குறிப்பிடுகிறார்.

5.ஞான லிங்கம்

உள்ளம், உரை, செயலைக் கடந்து நிற்கும் இறைவனின் நிலை உணர்தல். இது இறைவனின் சொரூப நிலையை உணர்த்தும். இதற்கு எந்தை பரமனும் என்னம்மை கூட்டமும் முந்தவுரைத்து முறைசொல்லின் ஞானமாம் (திருமந்திரம் 1770) என்று திருமூலர் ஞானத்திற்கு விளக்கம் தருகிறார்.

6.சிவலிங்கம்

அனைத்துமாக விளங்கும் சிவனை ஒரு அடையாளத்தின் இடமாக எழுந்தருளச் செய்து வணங்கும் முறையை உணர்த்துகிறது. உருவம் இல்லாத ஒன்றை உயிர்கள் மனத்தால் நினைத்து வழிபடுவது கடினம். பக்குவத்தை தேடும் உயிர்களுக்கு மனத்தை ஒருமுகப்படுத்தி தியானம் செய்து இறைவனை உணர ஓர் உருவம் தேவைப்படுகிறது. எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவன் சிவலிங்க உருவமாக எழுந்தருளியுள்ளான். இவ்வுண்மையை உணர்ந்து வழிபடாத மக்களின் இயல்பைத் திருமூலர்

குரைக்கின்ற வாரிக் குவலய நீரும்
பரக்கின்ற காற்றும் பயில்கின்ற தீயும்
நிரைக்கின்ற வாறிவை நீண்டகன் றானை
வரைத்து வலஞ்செயு மாறறி யேனே. (திருமந்திரம் 1773)

என்று கூறுவதை நினைவில் கொண்டு இறைவனை லிங்க வடிவில் வழிபட்டு நற்பேறுகளைப் பெருவோம்.

No photo description available.

மகாபாரதம் 3. வன பருவம் பகுதி -7

பாண்டவர்கள் நால்வரும் திரௌபதியும் தீர்த்த யாத்திரையை கிழக்குப் பகுதியிலும் தெற்குப் பகுதியில் முடித்துக்கொண்டு மேற்கு கடற்கரை மார்க்கமாக விருஷ்ணிகள் வாழும் இடத்திற்கு அருகாமையில் இருக்கும் பிரபாஸை என்னும் இடத்தில் சென்று கொண்டிருந்தார்கள் அவர்களுடைய வருகை பற்றிய செய்தி விருஷ்ணிகளுக்கு எட்டியது. பலராமனையும் கிருஷ்ணனையும் தலைமையாகக் கொண்டு விருஷ்ணிகள் தீர்த்த யாத்திரை செய்து கொண்டிருந்த தங்களுடைய உறவினர்களை சந்திக்க விரைந்து சென்றனர். சந்திப்பு இருதரப்பினருக்கும் பெரும் மகிழ்வை ஊட்டியது. தன்னுடைய தோழன் அர்ஜுனன் இந்திரலோகத்தில் தெய்வீக அஸ்திர சாஸ்திரங்களையும் இன்னிசை பயிற்சியும் பெற்று வருவதை கேட்டு கிருஷ்ணன் பெருமகிழ்வுற்றான்.

அப்போது பலராமன் துரியோதனன் திருட்டுத்தனமாக பாண்டவர்களின் ராஜ்யத்தை அபகரித்து அதை அனுபவித்துக் கொண்டு இருக்கின்றான். இந்த ராஜ்யத்துக்கு சொந்தக்காரர்கள் காட்டில் எங்கெங்கோ அலைந்து திரிந்து கொண்டிருக்கும் பொழுது துரியோதனன் பட்டாடை அணிந்து கொண்டு சுகவாசியாக இருக்கின்றான். பாண்டவர்கள் போதாத உணவு அருந்தி தவித்துக் கொண்டிருக்கும் பொழுது துரியோதனன் ராஜபோகத்தில் மூழ்கி இருக்கின்றான். தர்மம் கஷ்டதிசையில் தவித்துக் கொண்டிருக்கும் பொழுது அதர்மம் தலைதூக்கி வருகிறது. பலவந்தமாக விரட்டியடிக்கப்பட்டவளின் உறவினர்களாகிய நாம் வலிமையற்றவர்களாக இருந்து இந்த அக்கிரமங்களை சகித்துக் கொண்டு வருகின்றோம் என்றும் இந்த சூழ்நிலை தமக்கு பிடிக்கவில்லை என்றும் கூறினான்.

பலராமன் கூறியதை கேட்ட சாத்யகி கோபத்துடன் கௌரவர்கள் செய்யும் அனைத்து செயலுக்கும் நாம் அனுமதி தருவது சரியாகாது. கொடுமை வாய்ந்த கௌரவர்களை அறவே தோற்கடிக்கும் வல்லமை விருஷ்ணிகளிடத்தில் இருக்கிறது. நாம் படையெடுத்துச் சென்று அபகரிக்கப்பட்ட ராஜ்யத்தை மீட்டெடுத்து அபிமன்யுவை அதற்கு தற்காலிக மன்னனாக நியமித்து வைப்போம். தான் கொடுத்துள்ள வாக்குகள் அனைத்தையும் பூர்த்தி செய்த பிறகு யுதிஷ்டிரன் திரும்பி வரும் வரையில் அவனுக்கு வாரிசாக இருக்கின்ற அபிமன்யு மன்னன் ஸ்தானத்தில் இருக்கட்டும் என்றாள்.

கிருஷ்ணர் புன்னகையுடன் பாண்டவர்களுக்கும் நமக்கும் உள்ள உறவு யாராலும் அழிக்க முடியாது. இது யுதிஷ்டிரன் பொறுமையோடு காத்திருக்கும் பொழுது அவனுடைய திட்டத்தில் நாம் அவசரப்பட்டு நுழைந்து அதற்கு கேடு ஏதும் செய்யலாகாது. அவருக்கு நாடாள்வதை விட மேலானது சத்தியவிரதம். இப்பொழுது அவர் வலிமையற்று இருப்பவர் போன்று தென்படுகிறார். தக்க காலம் வருகிற பொழுது அவர் திறமையை வெளிப்படுத்துவார். அப்போது நாம் அனைவரும் அவரோடு சேர்ந்து கொள்வோம் என்றார். யுதிஷ்டிரனுக்கு பெருமகிழ்வு உண்டாயிற்று. ஏனென்றால் அவன் எண்ணத்தை கிருஷ்ணன் சரியாக அறிந்து கொண்டிருந்தான். விருஷ்ணிகளோடு சிறிதுகாலம் உறவாடிய பிறகு பாண்டவர்கள் பிரபாஸை விட்டு புறப்பட்டு வடதிசை நோக்கிச் சென்றனர்.