தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 223 அறகண்டநல்லூர்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 223 வது தேவாரத்தலம் அறகண்டநல்லூர். புராணபெயர் அறையணிநல்லூர், திருவறையணிநல்லூர். மூலவர் அதுல்யநாதேஸ்வரர், அறையணிநாதர். இங்கு இறைவன் சுயம்பு லிங்கமாக மேற்கு பார்த்தபடி ருத்ராட்ச பந்தலின் கீழ் அருள்பாலிக்கிறார். அம்பாள் அழகிய பொன்னம்மை, ஸ்ரீசெளந்திர கனகாம்பிகை. தலமரம் வில்வம். தீர்த்தம் தென்பெண்ணை. ராஜகோபுரம் ஏழுநிலைகளை உடையது. ராஜகோபுரம் ஒரு பெரிய பாறையின் மீது கட்டப்பட்டுள்ளது. கோபுர வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் பிரகாரத்தில் வலம்புரி விநாயகர் உள்ளார். இவரே இத்தலத்தின் தலவிநாயகர். விநாயகருக்கு முன்பு இடதுபுறம் கையில் தாளமேந்திய நிலையில் திருஞானசம்பந்தர் உள்ளார். விநாயகரின் பக்கத்தில் விஸ்வநாத லிங்கம் உள்ளது. இறைவனின் கருவறையைச் சுற்றிலும் அகழி போன்ற அமைப்பு உள்ளது. கருவறைச் சுற்றில் நடராஜர் சபையும், நவக்கிரக சந்நிதி, பைரவர், கல்லில் வடித்துள்ள நாராயணர், நர்த்தன கணபதி, சக்கரதாரியாக நின்ற நிலையில் மகாவிஷ்ணு ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன. சப்தமாதாக்கள் வரிசையாக வடிக்கப்பட்டுள்ளனர். வெளிச் சுற்றில் அண்ணாமலையார் சந்நிதி உள்ளது. இத்தலத்திலுள்ள முருகன் ஒருமுகத்துடனும் ஆறுகரங்களில் ஆயுதங்களுடன் வள்ளிதெய்வயானையுடன் வடக்கு நோக்கிக் காட்சியளிக்கிறார். இங்கு நவக்கிரகத்தில் உள்ள சனீஸ்வரர் வலது காலை தூக்கி காகத்தின் மீது வைத்தபடி வித்தியாசமான கோலத்தில் காட்சி தருகிறார். இவருக்கு அருகிலேயே மற்றொரு சனீஸ்வரர் நின்ற கோலத்தில் தனியாகவும் இருக்கிறார்.

திருவண்ணாமலை வரும் வழியில் ரமண மகரிஷி இக்கோயிலுக்கு வந்து அதுல்யநாதேஸ்வரரை வணங்கி விட்டு அதன்பின்னரே திருவண்ணாமலைக்கு சென்று அண்ணாமலையாரை வழிபட்டார். இவருக்கு இக்கோயிலில் தனிச்சன்னதி இருக்கிறது. ராமலிங்க வள்ளலார் இவரை வணங்கி பாடல் பாடியிருக்கிறார். மகாபலி மன்னனிடம் மூன்றடி நிலம் கேட்டு அவரை அடக்கிய மகாவிஷ்ணு உயிரைக் கொன்ற தோஷம் நீங்க சிவனை வேண்டினார். அவர் பூலோகத்தில் தன்னை வழிபட்டு வர தோஷம் நீங்கப்பெறும் என்றார். அதன்படி பல தலங்களுக்கும் சென்ற மகாவிஷ்ணு, இத்தலத்தில் சிவனை வழிபட்டபோது சிவன் அவருக்கு காட்சி தந்து விமோசனம் தந்தார். மகாவிஷ்ணு தாயாரை பிரிந்து தனியே வந்ததால் ஸ்ரீதேவியும் மகாவிஷ்ணுவைத் தேடி இத்தலத்திற்கு வந்தாள். இவ்விருவருக்கும் சிவன் காட்சி தந்தருளினார். மகாவிஷ்ணு இங்கு வழிபட்டதை குறிக்கும் விதமாக பிரகாரத்தில் கையில் பிரயோகச் சக்கரத்துடன் மகாவிஷ்ணுவும் ஸ்ரீதேவியும் இருக்கின்றனர். ஸ்ரீதேவியின் கையில் உள்ள ஒரு தண்டத்தில் பறவையும் அவளுக்கு இடப்புறத்தில் ஒரு பெண்ணும் வலப்புறத்தில் விலங்கு முகம் கொண்ட ஒரு ஆணும் இருக்க ஸ்ரீதேவி வித்தியாசமான கோலத்தில் அமர்ந்திருக்கிறாள்.

நீலகண்டர் எனும் முனிவர் ஒருவர் தான் பெற்ற சாபத்திற்கு விமோசனம் வேண்டி சிவதல யாத்திரை சென்றார். அவர் திருவண்ணாமலை செல்லும் வழியில் தென்பெண்ணை ஆற்றில் நீராடி சிறு குன்றாக இருந்த இந்த இடத்தில் அமர்ந்தார். அப்போது தூரத்தில் இருந்த திருவண்ணாமலையை தரிசித்த முனிவருக்கு இந்த இடத்திலேயே சிவனை வழிபட வேண்டும் என ஆசை வந்தது. சிவனை எண்ணி இவ்விடத்தில் தவம் செய்து வழிபட்டார். அவருக்காக மனம் இரங்கிய சிவன் அம்பாளுடன் காட்சி தந்து அவருக்கு சாபவிமோசனம் கொடுத்தருளினார். நீலகண்ட முனிவர் சிவனிடம் தனக்கு இவ்விடத்தில் அருளியது போல இங்கிருந்து அனைவருக்கும் அருள் புரிய வேண்டுமென வேண்டினார். அவருக்காக சிவன் சுயம்பு லிங்கமாக எழுந்தருளி அறையணிநாதர் என்ற பெயர் பெற்றார். அறை என்றால் பாறை என்றும் அணி என்றால் அழகு என்றும் பொருள். பாறை மீது அழகாக அமைந்திருப்பவர் என்பதால் சிவனுக்கு இப்பெயர் வந்தது. கோயிலுக்கு வெளியில் பாறைகளுக்கு இடையில் உள்ளது பீமன் குளம். பாஞ்சாலி நீராடுவதற்காக இக்குளத்தை பீமன் வெட்டியதாக புரணாச் செய்திகள் மூலம் தெரிய வருகிறது. ராஜகோபுரத்தின் அடிவாயிலில் குடைவரைக் கோயில்களாக ஐந்து அறைகள் உள்ளன. பஞ்ச பாண்டவர்கள் வனவாசத்தின் போது இங்கு தங்கி இருந்துள்ளார்கள். வனவாசம் முடிந்து 18 நாட்கள் போருக்குப் பின் நாட்டைத் திரும்பப் பெற்ற பாண்டவர்கள் பட்டாபிஷேகம் முடிந்ததும் குடும்பத்தினரோடு மீண்டும் இங்கு வந்து வழிபட்டுச் சென்றனர்.

திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வந்தபோது பிற சமயத்தினர் கோயிலை அடைத்து சுவாமி வழிபாட்டை நிறுத்தி வைத்திருந்தனர். திருஞானசம்பந்தர் பதிகம் பாடி கதவை திறந்து மீண்டும் வழிபாட்டிற்கு கொண்டு வந்தார். அவர் எளிதாக சுவாமியை தரிசனம் செய்ய பிரதோஷ நந்தி வலதுபுறமாகவும் அதிகார நந்தி இடது புறமாகவும் சற்று சாய்ந்தனர். இதனை உணர்த்தும் விதமாக இங்குள்ள இரண்டு நந்திகளும் இரு வேறு திசைகளில் திரும்பியபடியே இருக்கிறது. திருஞானசம்பந்தர் இயற்றியுள்ள திருஞானசம்பந்தர் தனது பதிகத்தில் அறகண்டநல்லூர் இறைவனை தலையினால் தொழும் பெருமை மிக்கவர் தடுமாற்றம் நீங்குவர் என்றும் பழிபாவங்கள் நீங்கப் பெறுவார்கள் என்றும் அவரை அன்போடு நினைப்பவர்களின் வலிய வினைகள் மாயும் என்றும் பாவங்களும் கழியும் என்றும் சிவபிரான் திருவடிகளைத் தொழுது போற்றி தொழுதால் குற்றமற்றவர் வாழும் சிவலோகத்தை அடைவர் என்றும் குறிப்பிடுகிறார். திருஞானசம்பந்தர் இங்கு வந்து அறையணிநாதரை வணங்கி பதிகம் பாடிவிட்டு திருவண்ணாமலை செல்ல விரும்பினார். ஆனால் ஏதோ சில காரணங்களால் அவரால் திருவண்ணாமலை செல்ல முடியவில்லை. எனவே இக்கோயிலிலேயே அண்ணாமலையாரை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். பின் இங்கிருந்தே தூரத்தில் தெரிந்த திருவண்ணாமலையாரை குறித்து பதிகம் பாடினார். திருஞானசம்பந்தர் பிரதிஷ்டை செய்த சிவன் சன்னதி அறையணிநாதர் அம்பாள் சன்னதிகளுக்கு இடையே தனியே இருக்கிறது. திருஞானசம்பந்தர் திருவண்ணாமலையாரை வணங்கி பதிகம் பாடிய இடத்தில் ஒரு பீடத்தின் மேல் அவரது இரு பாதங்களும் இருக்கிறது. இந்த இடத்தில் இருந்து பார்த்தால் திருவண்ணாமலையை முழுவதுமாக பார்க்கலாம். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் பாடல்கள் பாடியுள்ளனர்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 222 திருக்கோவிலூர், வீரட்டேஸ்வரர்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 222 வது தேவாரத்தலம் திருக்கோவிலூர். புராணபெயர் அந்தகபுரம், திருக்கோவலூர். மூலவர் வீரட்டேஸ்வரர். இங்கு இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். உற்சவர் அந்தகாசுர வதமூர்த்தி. அம்பாள் பெரியநாயகி, சிவானந்த வல்லி. அம்பாள் அபயவரதத்துடன் கூடிய நான்கு திருக்கரங்களுடன் நின்ற திருக்கோலத்தில் தரிசனம் தருகிறாள். தலமரம் சரக்கொன்றை. தீர்த்தம் தென்பண்ணை. வீரட்டேஸ்வரர் கோவிலும் அம்பாள் சிவானந்தவல்லி கோவிலும் தனித்தனி கோவில்களாக சுற்று மதிலுடன் மேற்கு நோக்கி அருகருகே அமைந்துள்ளன. சுவாமி கோவிலுக்கு இடதுபுறம் அம்பாள் கோவில் அமைந்துள்ளது. இரண்டு கோவில்களுக்கும் 3 நிலை கோபுரங்கள் உள்ளன. கோபுரங்களுக்கு முன்னால் விசாலமான வெளியிடம் உள்ளது. சுவாமி கோவில் கோபுர வழியே உள்ளே நுழைந்ததும் கவசமிட்ட கொடிமரம் முன்னால் நந்தி உள்ளதைக் காணலாம். வெளிப்பிராகாரத்தில் சந்நிதி ஏதுமில்லை. முகப்பு வாயிலில் மேலே பஞ்சமூர்த்திகள் வைக்கப்பட்டுள்ளன. முன்தூணில் இடதுபுறம் மெய்ப்பொருள்நாயனார் சிற்பம் உள்ளது. வலதுபுறம் கணபதியின் சந்நிதி உள்ளது.

இந்த விநாயகப்பெருமானை குறித்து அவ்வையார் சீதக்களப எனத் தொடங்கும் விநாயகர் அகவல் பாடியுள்ளார். அந்தகாசூரனை சிவபெருமான் சம்காரம் செய்த திருத்தலம் இது. அட்ட வீரட்டத் தலங்களில் மிகவும் தொன்மையன வரலாற்றுச் சிறப்பு பெற்ற 2 வது வீரட்டான திருத்தலம் இது. சுவாமி மூலஸ்தானத்தில் பைரவ சொரூபமாக உள்ளார். சுக்கிரன் சாப விமோசனம் பெற்ற தலம். அம்பாள் திரிபுர பைரவி உற்பத்தி தலம் இது. சப்த மாதாக்கள் உற்பத்தியான தலம் இது. 64 பைரவர்கள் 64 பைரவிகள் உற்பத்தியான தலம் இது. இத்தலத்தில் பாரி வள்ளல் தன் மகள்களான அங்கவை சங்கவை இருவரையும் திருக்கோயிலூரை ஆண்ட மன்னனுக்கு அவ்வையார் கபிலர் இருவரும் சேர்ந்து திருமணம் செய்து வைத்தனர். இந்த திருமணத்தை வைத்து அமைந்த பெயர்களே சுற்றுப்புற கிராமங்களின் பெயர்களாக இப்போதும் உள்ளன. சங்கப்புலவர் கபிலர் பெருமான் குடியிருந்த பெருமைக்குரிய பேரூர். கபிலர் வடக்கிருந்து உயிர் துறந்த கற்பாறை கபிலர்குன்று என்ற பெயரில் பெண்ணை ஆற்றின் நடுவில் தற்போதும் உள்ளது. முருகப்பெருமான் ஆறுமுகராக ஆறு திருமுகத்துடனும் 12 திருக்கரங்களுடனும் தேவியர் இருவருடம் மயில் மீது அமர்ந்து அருள்பாலிக்கின்றார். இத்தலத்து முருகப்பெருமான் குறித்து அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல்கள் பாடியுள்ளார்.

64 நாயன்மார்களில் இருவரான மெய்ப்பொருள் நாயன்மார், நரசிங்க முனைய நாயனார் ஆகியோர் அவதரித்த ஊர் இது. சிவபெருமான் வீரச் செயல்கள் புரிந்த அட்டவீரட்டத் தலங்களில் அந்தாகாசுரனை வதைத்த தலம். 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான திரிவிக்ரமப் பெருமாள் வைணவ ஆலயமும் ஒருவர் படுக்கலாம், இருவர் இருக்கலாம், மூவர் நிற்கலாம் என்று சொல்லப்படும் முதல் மூன்று ஆழ்வார்களின் வரலாற்று நிகழ்ச்சி இடம் பெற்ற தலம். தஞ்சை பெரிய கோவிலைக் கட்டிய திருமுறை கண்ட சோழன் ராஜராஜன் பிறந்த தலம். திருக்கோவலூர் மேலூர், கீழையூர் என இரு பிரிவுகளாக உள்ளது. அட்டவீரட்டத் தலங்களுள் ஒன்றான வீரட்டேஸ்வரர் கோவில் கீழையூர்ப் பகுதியில் தெண்பெண்ணையாற்றின் கரையிலும் மேலூரில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திரிவிக்ரமப் பெருமாள் வைணவ ஆலயமும் உள்ளன.

திருக்கயிலாயம் செல்வதற்காக ஈசனை உருகி வேண்டிக்கொண்டிருந்தார் சுந்தரமூர்த்தி சுவாமிகள். இதையடுத்து அயிராவணம் என்னும் யானையை ஈசன் அனுப்பினார். அதில் ஏறிய சுந்தரர் கயிலாயம் புறப்பட்டார். அவரோடு அவரது நண்பரான சேரமான் பெருமானும் குதிரையின் காதில் பஞ்சாட்சரம் ஓதி குதிரையில் ஏறி கயிலாயம் சென்றார். இருவரும் வானில் சென்றபோது கீழே திருக்கோவிலூர் என்ற சிவதலத்தில் வீற்றிருக்கும் தல விநாயகரை அவ்வையார் வழிபட்டுக் கொண்டிருந்தார். அவரிடம் சுந்தரரும் சேரமானும் அவ்வையே நாங்கள் கயிலாயம் செல்கிறோம் நீயும் வருகிறாயா என்று கேட்டனர். கயிலாயம் செல்லும் எண்ணம் யாருக்குத்தான் இருக்காது நானும் வருகிறேன் என்று கூறிய அவ்வை விநாயகர் வழிபாட்டை அவசரம் அவசரமாக முடிக்க எண்ணினார். சுந்தரர் சேரமான் இருவரும் வான்வழியாக கயிலை செல்லும் போது அவ்வை இந்த தலத்தில் பூஜை செய்து கொண்டிருந்தார். தானும் கயிலை செல்ல எண்ணி அவசரமாக பூஜை செய்தாராம். உடனே விநாயகர் காட்சி தந்து பொறுமையாக பூஜை செய்ய அருளினார். சீதக் களப எனத் தொடங்கும் விநாயக அகவல் பாடி பூஜை செய்த பிறகு விசுவரூபம் கொண்டு தன் துதிக்கையால் அவ்வையாரை சுந்தரர், சேரமான் ஆகியோர் சென்றடையும் முன்பே கயிலையில் விட்டார் கணபதி. இவர் விசுவரூபம் எடுத்ததாலேயே பெரிய யானை கணபதி என்று பெயர் பெற்றார்.

முருகன் அசுரனை கொன்றதால் பிரம்மகத்தி தோசம் நீங்க பூமியில் சிவபூஜை செய்ய வேண்டினார். அம்பாள் எந்த இடம் என்று உணர்த்த அம்பாள் தன் கையிலிருந்த வேல் விழுந்த இடம் திருக்கைவேலூர் என்று பெயர் பெற்று பின்நாளில் பெயர் மறுவி திருக்கோவிலூர் ஆனது. முருகன் சிவனை பூஜை செய்த தலம் இது. பார்வதி ஈசனின் இரு கண்களையும் விளையாட்டாக மூடியதால் இருள் சூழ்கிறது. இருள் சூழ்ந்து அந்த இருளே அசுரனாக மாறுகிறது. அந்தகம் என்பது இருள். அந்த அந்தாகசூரனுக்கும் ஈசுவரனுக்கும் யுத்தம் நடக்கிறது. சிவன் தன் கரத்தில் உள்ள கதையால் அந்தகனுடைய தலையில் அடிக்க அவன் தலையிலிருந்து ரத்தம் பீறிட்டு பூமியில் விழுகிறது. ஒவ்வொரு துளி ரத்தத்திலிருந்தும் பல அசுரர்கள் உற்பத்தி ஆகி போர் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. பார்வதி காளி சொரூபம் கொண்டு அந்தகனின் தலையிலிருந்து வெளிப்படும் ரத்தத்துளிகளை கபாலம் கொண்டு கையிலேந்தி அசுர உற்பத்தியை தடுக்கிறாள். வெளிப்பட்ட ரத்தங்கள் ரத்தக்கோடுகளாகி எட்டு திசையிலும் விழுந்து குறுக்கும் நெடுக்குமாக 8, 8 ஆக 64 பாகங்களாக விழுகிறது. அந்த 64 இடத்தில் சிவன் தனது அருளால் 64 பைரவர்களை உற்பத்தி செய்து அங்கு இருக்க செய்கிறார். 64 பைரவ சக்திகளையும் உற்பத்தி செய்து அசுர உற்பத்தியை தடுத்து அசுரனை வதம் செய்து தேவர்களுக்கு அனுகிரகம் செய்கிறார். இவ்வாறு அந்தகனை அழித்து அஞ்ஞானத்தை நீக்கி நிஜ சொரூப மெய்ஞானத்தை அருளியவர் வீரட்டானேசுவரர் ஆவார். ராஜராஜ சோழனின் சகோதரி இந்த ஆலயத்திற்கு விளக்குகள் ஏற்றிட நிதி வழங்கினார் என கல்வெட்டில் உள்ளது. சோழர் காலக் கல்வெட்டுகள் 79 உள்ளன. இத்தல இறைவனை முருகப்பெருமான், ராமர், பரசுராமர், கிருஷ்ணர், இந்திரன், காளி, எமன், காமதேனு, சூரியன், குரு, உரோமச முனிவர், கண்வ மகரிஷி, மிருகண்டு முனிவர், பதஞ்சலி முனிவர், வியாக்ரபாதர், வாணாசுரன், ஆதிசேஷன், மன்மதன், குபேரன் ஆகியோர் வழிபட்டுள்ளனர். சுந்தரர், திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் பாடல்கள் பாடியுள்ளனர்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 221 நெய்வணை

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 221 வது தேவாரத்தலம் நெய்வணை. புராணபெயர் திருநெல்வெணெய். மூலவர் சொர்ணகடேஸ்வரர், வெண்ணையப்பர். இங்கு இறைவன் சுயம்பு மூர்த்தியாக 7500 ருத்திராட்ச மணிகள் கொண்ட பந்தலின் கீழ் அருள்பாலிக்கிறார். ஒவ்வொரு வருடமும் மாசி மாதத்தில் மகாசிவராத்திரியன்று அதிகாலையில் சுவாமியின் மேனியில் சூரிய ஒளி விழுகிறது. அந்நேரத்தில் மட்டும் சிவன் நீலம், பச்சை, சிவப்பு, வெள்ளை என நிறங்கள் மாறி மாறி தெரிகிறார். அம்பாள் நீலமலர்க்கண்ணி, பிருஹந் நாயகி. இங்கு சூலத்தின் மத்தியில் சிவன் நின்றகோலத்தில் உற்சவராக இருக்கிறார். சிவமும் சக்தியும் இணைந்த அர்த்தநாரீஸ்வரர் வடிவத்தை உணரலாம். தலமரம் புன்னை. தீர்த்தம் கிணற்று தீர்த்தம். நான்கு முறமும் சுற்று மதிலுடன் ஒரு முகப்பு வாயில் மட்டுமே கொண்டு இவ்வாலயம் அமைந்துள்ளது. முகப்பு வாயிலுக்கு முன்பாக நந்தி மற்றும் பலிபீடம் உள்ளன. கொடிமரமில்லை.

மூலவர் சந்நிதி வாயிலின் வெளியே மகாவிஷ்ணு சங்கு சக்ரதாரியாக தன் இடது மடியில் கைகளை கூப்பி வணங்கிய கோலத்தில் மகாலட்சுமியை அமர்த்தியபடி லட்சுமி நாராயணராக இருக்கிறார். வெளிப் பிராகாரத்தில் விநாயகர் சந்நிதியுள்ளது. அதையடுத்து வள்ளி தெய்வயானை உடனாகிய ஆறுமுக சுவாமி மயில் வாகனத்துடன் காட்சி தருகிறார். மயில் இடதுபுறம் திரும்பி உள்ளது. முருகர் சந்நிதி பின்புறம் காசி விஸ்வநாதர் சந்நிதி, ஸ்படிக லிங்கம், நால்வர் சந்நிதிகள் உள்ளன. திருஞானசம்பந்தர் கையில் தாளமின்றி கை கூப்பிய நிலையிலும் சுந்தரர் நடன சுந்தரராகவும் காட்சி தருகின்றார். அப்பர் பெருமானும் கை கூப்பிய நிலையில் காணப்படுகிறார். இங்கு அதிகார நந்தி பக்தர்களுக்காக இரண்டு கால்களையும் இணைத்து கை கூப்பி வணங்கி சிவனிடம் வேண்டிக்கொள்கிறார். சிவனே வந்து நெல்லை அணையாக கட்டிய தலம் என்பதால் இவ்வூர் நெல் அணை எனப்பட்டு காலப்போக்கில் நெய்வணை என்று மருவியுள்ளது. திருத்தல யாத்திரை வந்த திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு அருகே வந்தபோது இருட்டி விட்டது. எனவே அவர் வழி தெரியாமல் தடுமாறி ஓரிடத்தில் நின்றார். அப்போது சிவன் அம்பாளை அனுப்பி திருஞானசம்பந்தனுக்கு வழிகாட்டி இங்கு வரச்சொல் என்று சொல்லி அனுப்பினார். அம்பாளும் திருஞானசம்பந்தருக்கு எதிரே சென்று தன்னுடன் வரும்படி கூறினாள். அம்பாள் திருஞானசம்பந்தரின் எதிர்நின்று அழைத்த இடம் அருகில் எதலவாடி என்று பெயரில் இன்றும் இருக்கிறது. அவளுடன் இங்கு வந்த திருஞானசம்பந்தர் சிவனை வணங்கி இருட்டிலும் தனக்கு அற்புத தரிசனம் தந்த மகிழ்ச்சியில் நடனம் ஆடிக்கொண்டே பதிகங்கள் பாடினார். எனவே இங்குள்ள திருஞானசம்பந்தர் நடனம் ஆடிய கோலத்தில் அமைக்கப்பட்டிருக்கிறார்.

முன்னொரு காலத்தில் இப்பகுதி வயல்கள் நிறைந்து விவசாயத்தில் சிறந்த இடமாக இருந்தது. இதனால் மக்கள் அனைவரும் மிகவும் செழிப்பாக குறைவில்லாத வாழ்க்கை வாழ்ந்தனர். வசதியான வாழ்க்கையால் மக்கள் இறை வழிபாட்டை முழுமையாக மறந்தனர். அவர்களுக்கு பாடம் புகட்ட எண்ணிய சிவன் ஒரு திருவிளையாடலை நிகழ்த்தினார். அவர் வருணனிடம் சொல்லி இவ்விடத்தில் மட்டும் இடைவிடாது தொடர் மழையை பெய்யும்படி கூறினார். அதன்படி வருணனும் இங்கு மழை பொழிவித்தான். முதலில் மழையைக் கண்டு மகிழ்ந்த மக்கள் தொடர்ந்து நிற்காமல் பெய்யவே கலக்கம் கொண்டனர். இவ்வாறு தொடர்ந்து மழை பெய்ததால் ஊரில் இருந்த அனைத்து குளம் ஏரிகளும் நிரம்பி வழிந்தது. அப்போது ஊரின் மத்தியில் இருந்த பெரிய ஏரி உடைந்து தண்ணீர் வெள்ளமாக ஊருக்குள் பாய்ந்தது. அது வரையில் இறை வழிபாட்டை மறந்திருந்த மக்கள் தங்கள் உயிருக்கு ஆபத்து வரும் நிலையில் தங்களைக் காக்கும்படி சிவனிடம் வேண்டினர்.

மனம் இறங்கிய சிவன் ஒரு வாலிபர் வடிவில் வந்தார். ஒவ்வொருவரும் வீட்டில் வைத்திருந்த நெல் மூட்டைகளை தரும்படி கூறினார். அவர்களும் எடுத்து கொள்ளும்படி சொல்லவே அவர் நெல்மூடைகளை தூக்கி வந்து ஏரியில் அணையாக கட்டி வெள்ளத்தை தடுத்தார். பின் அவர் வருணபகவானிடம் மழையை நிறுத்தும்படி சொல்லவே அவரும் மழையை நிறுத்தினார். மழையினால் தங்கள் உடமைகள் பொருள் அனைத்தையும் இழந்து நின்ற மக்கள் உயிர் பிழைத்த மகிழ்ச்சியில் வாலிபனிடம் நீ தான் எங்கள் தெய்வம் என்று மகிழ்ச்சி பொங்க கூறினர். அவர்களிடம் உங்களது அனைத்து நிலைகளுக்கும் இறைவன் ஒருவனே காரணம். எனவே எந்த சூழ்நிலையிலும் அவனை மட்டும் மறந்து விடாதீர்கள் என்று சொல்லி அனைவருக்கும் தங்கம் நிரம்பிய குடங்களை கொடுத்துவிட்டு இழந்ததை இதன் மூலம் மீட்டுக் கொள்ளுங்கள் என்று சொல்லி மறைந்து விட்டார். மக்கள் புரியாமல் தவிக்கவே அந்த வாலிபர் அவர்களுக்கு தன் சுயரூபம் காட்டி சுயம்புவாக எழுந்தருளினார். பின் மக்கள் இவ்விடத்தில் சிவனுக்கு கோயில் எழுப்பினர். சொர்ணம் தந்தவர் என்பதால் சொர்ணகடேஸ்வரர் என்று பெயர்பெற்றார். இவருக்கு நெல்வெண்ணெய்நாதர் என்ற பெயரும் உண்டு. இத்தலத்து கல்வெட்டு ஓன்றில் இத்தல இறைவன் பெயர் பொற்குடங் கொடுத்தருளிய நாயனார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் ஆகிய நால்வரும் சுவாமியை பூஜித்து வணங்கியுள்ளனர். திருஞானசம்பந்தர் பாடல்கள் பாடியுள்ளார்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 220 விருத்தாச்சலம்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 220 வது தேவாரத்தலம் விருத்தாச்சலம். புராணபெயர் திருமுதுகுன்றம். மூலவர் விருத்தகிரீஸ்வரர், பழமலைநாதர்,விருத்தாசலேஸ்வரர், முதுகுன்றீஸ்வரர், விருத்தகிரி. இங்கு இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அம்பாள் விருத்தாம்பிகை, பாலாம்பிகை, இளைய நாயகி, பெரியநாயகி. தலமரம் வன்னிமரம் 2500 ஆண்டுகள் பழமையானது. இதனை திருச்சியில் உள்ள மத்திய அரசு பாரத மின்பகிர்வு கழகம் ஆராய்சி செய்து வெளியிட்டுள்ளது தீர்த்தம் மணிமுத்தாநதி, நித்தியானந்த கூபம், அக்னி, சக்ர தீர்த்தம், குபேர தீர்த்தம். இத்தலத்தில் பிறந்தால், வாழ்ந்தால், வழிபட்டால், நினைத்தால், இறந்தால் என இந்த ஐந்தில் ஏதேனும் ஒன்று நடந்தால் கூட முக்தி நிச்சயம் என்கிறது தலவரலாறு முருகப்பெருமானுக்கு 6 படை வீடு இருப்பது அனைவருக்கும் தெரியும். இதே போல் விநாயகருக்கும் 6 படை வீடு இருக்கிறது. இத்தலத்தில் ராஜகோபுரத்தை அடுத்து இடது பக்கம் உள்ள ஆழத்து விநாயகர் சன்னதி விநாயகரின் இரண்டாவது படை வீடாகும். இவர் 18 படியிறங்கி கீழே சென்று தரிசிக்கும்படி அமர்ந்துள்ளார்.

ஒருமுறை உலகம் அழிந்த போது இந்தத்தலம் மட்டும் அழியாமல் இருந்தது. சிவத்தலங்கள் அனைத்திலும் 1008 தலங்கள் சிறப்பானதாக கூறப்படும். இதில் நான்கு தலங்கள் முக்கியமானவை. அதில் விருத்தாசலமும் ஒன்று. சைவ சமயத்தில் 28 ஆகமங்கள் உண்டு. இவற்றை 28 லிங்கங்களாக இத்தலத்தில் முருகப்பெருமான் பிரதிஷ்டை செய்து பூஜை செய்துள்ளார். 28 ஆகமங்களுக்குரிய பெயர்களான காமிகேஸ்வரர், யோகேஸ்வரர், சிந்தியேஸ்வரர், காரணேஸ்வரர், அஜிதேஸ்வரர், தீபதேஸ்வரர், சூட்சமேஸ்வரர், சகஸ்ரேஸ்வரர், அம்சுமானேஸ்வரர், சப்பிரபேதேஸ்வரர், விசயேஸ்வரர், விசுவாசேஸ்வரர், சுவயம்பேஸ்வரர், அநலேஸ்வரர், வீரேஸ்வரர், ரவுரவேஸ்வரர், மகுடேஸ்வரர், விமலேஸ்வரர், சந்திரஞானேஸ்வரர், முகம்பிபேஸ்வரர், புரோத்கீதேஸ்வரர், லலிதேஸ்வரர், சித்தேஸ்வரர், சந்தானேஸ்வரர், சர்வோத்தமேஸ்வரர், பரமேஸ்வரர், கிரணேஸ்வரர், வாதுளேஸ்வரர் என்ற பெயர்கள் அவற்றுக்கு சூட்டப்பட்டுள்ளன. இந்த அமைப்பு வேறு எங்கும் இல்லை. இக்கோயிலை ஆகமக்கோயில் என்றே அழைப்பார்கள். இந்த லிங்கங்கள் கோயிலின் வடமேற்கு பகுதியில் தனி சன்னதியில் அமைந்துள்ளன. இதில் தெற்கு வரிசையில் உள்ள லிங்கங்களின் நடுவில் விநாயகரும், மேற்கு வரிசையில் உள்ள லிங்கங்களின் நடுவில் வள்ளி தெய்வானையுடன் முருகனும் இருக்கின்றனர். விருத்த என்றால் முதுமை என்றும் அசலம் என்றால் மலை என்றும் பொருள்படும். எனவே விருத்தாசலம் என்றால் பழமலை என்பது கருத்தாகிறது. தேவாரப்பாடல்களில் அதே பொருளில் திருமுதுகுன்றம் என்று பாடப்பட்டுள்ளது. இத்தலத்து பெருமானை வழிபட்டால் இம்மை பயன்களும் மறுமை பயன்களும் கிடைக்கும் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிட்டு பாடியுள்ளார்.

முத்தாநதியில் நீராடினால் சித்தி பெறுவதுடன் முக்தியும் கிட்டும் என்று புராண நூல்கள் கூறுகின்றன. சிவாலயம் 4 புறமும் சுமார் 26 அடி உயரமுள்ள மதிற்சுவரையும் 660 அடி நீளமும் 390 அடி அகலமும் உடைய ஒரு பெரிய கோவிலாகும். ஆலயத்தின் 4 புறமும் 7 நிலைகளையுடைய பெரிய கோபுரங்கள் உள்ளது. கிழக்கே உள்ளே பிரதான வாயில் வழியாக உள்ளே சென்றால் 16 தூண்களை உடைய மண்டபம் இருக்கிறது. முதல் வெளிப் பிரகாரத்தில் விநாயகர் சந்நிதி கிழக்கு நோக்கி சுமார் 18 அடி பள்ளமான இடத்தில் அமைந்துள்ளது. மூன்றாம பிரகாரத்தில் 63 நாயன்மார்களில் உருவச் சிலைகளும் பிந்து மாதவப் பெருமாள் சந்நிதியும் உள்ளன. 63 நாயன்மார் பிரகாரத்தின் வடகிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் காலபைரவர் மூர்த்தம் காசியில் இருப்பது பொன்ற வடிவமைப்பில் உள்ளது. கோவிலில் அனைத்தும் ஐந்து என்ற எண்ணிக்கையில் உள்ளது. இறைவனுக்கு ஐந்து பெயர்கள் விருத்தகிரீஸ்வரர், பழமலைநாதர், விருத்தாசலேஸ்வரர், முதுகுன்றீஸ்வரர், விருத்தகிரி. ஆழத்து விநாயகர், மாற்றுரைத்த விநாயகர், முப்பிள்ளையார், தசபுஜ கணபதி, வல்லப கணபதி என ஐந்து வினாயகர்கள் உள்ளனர். கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் கண்டராதித்தன் கோபுரம் என ஐந்து கோபுரங்கள் உள்ளன. உரோமச முனிவர், விபசித்து முனிவர், குமார தேவர், நாத சர்மா, அனவர்த்தினி என ஐந்து முனிவர்கள் இங்கு இறைவனை தரிசித்துள்ளனர். தேரோடும் திருச்சுற்று, கைலாய திருச்சுற்று, வன்னியடி திருச்சுற்று, அறுபத்து மூவர் திருச்சுற்று, பஞ்சவர்ண திருச்சுற்று என ஐந்து பிரகாரங்கள் உள்ளன.

ஐந்து கொடி மரங்களும் இந்த கொடி மரங்களின் முன்புள்ள நந்திகளுக்கு இந்திரநந்தி, வேதநந்தி, ஆத்மநந்தி, மால்விடைநந்தி, தர்மநந்தி என்று பெயர். கோவிலுக்கு உள்ளே அர்த்த மண்டபம், இடைகழி மண்டபம், தபன மண்டபம், மகா மண்டபம், இசை மண்டபம் என ஐந்து மண்டபம் உள்ளது. கோவிலுக்கு வெளியே இருபது கால் மண்டபம், தீபாராதனை மண்டபம், நூற்றுக்கால் மண்டபம், விபசித்து மண்டபம், சித்திர மண்டபம் என ஐந்து மண்டபங்கள் உள்ளது. திருவனந்தல், காலசந்தி, உச்சிகாலம், சாயரட்சை, அர்த்தஜாமம் என ஐந்து விதமான வழிபாடுகள் இறைவனுக்கு நடைபெருகிறது. விநாயகர் தேர், முருகன் தேர், பழமலை நாதர் தேர், பெரியநாயகி தேர், சண்டிகேஸ்வரர் தேர் என ஐந்து தேர்கள் உள்ளது. திருமுதுகுன்றம், விருத்தகாசி, விருத்தாசலம், நெற்குப்பை, முதுகிரி என ஐந்து பெயர்கள் உள்ளது. இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். இத்தலத்தில் மூன்றாம் பிரகாரத்தில் ஆறுமுருகப்பெருமான் 12 திருக்கரங்களுடன் தனது தேவியர் இருவருடன் மயில் வாகனத்தில் எழுந்தருளியுள்ளார். நின்ற திருக்கோலத்தில் உள்ள முருகப்பெருமானின் தேவியர்களுக்கு மேலே சக்கரங்கள் அமைந்துள்ளது.

இந்தத் தலத்தில் உயிர்விடும் எல்லா உயிர்களுக்கும் இறைவி பெரியநாயகி தம்முடைய புடவைத்தலைப்பால் வீசி இளைப்பாற்றி பாவங்களைப் போக்குகிறாள் என்றும் இறைவன் பழமலைநாதர் பஞ்சாட்சர உபதேசத்தை அருளி அந்த உயிர்களை தம்முடைய உருவமாக ஆக்குகிறார் என்றும் கந்தபுராணம் சொல்கிறது. ஆகையால் இத்தலம் விருத்தகாசி என்றும் வழங்கப்படுகிறது. காசியைக் காட்டிலும் சிறந்தது என்றும் இந்தத் திருமுதுகுன்றத்தில் வழிபாடு செய்தால் காசியில் செய்த புண்ணியம் கிடைக்கும் என்றும் தலவரலாறு சொல்கிறது. காசியைப்போன்று விருத்தாசலமும் முக்தி தலமாகும். வடக்குக் கோபுர வாயிலுக்கு நேரே வடபால் மணிமுத்தாற்றில் உள்ள புண்ணிய மடுவில் இறந்தோரின் எலும்புகளை இட்டால் அவை கூழாங்கற்களாக மாறிவிடுகிறது. இங்குள்ள மணிமுத்தாறு நதியில் நீராடி மூலவர் பழமலைநாதரை வழிபட்டால் காசியில் நீராடி விஸ்வநாதரை வழிபட்ட பலன் கிடைத்து சித்தி அடைவர் என்கிறது தலவரலாறு ஆதியில் பிரம்மதேவர் இந்த மண்ணுலகைப் படைக்க விரும்பியபோது சிவபெருமானை துதிக்க சிவபெருமானும் அருள் செய்து தானே ஒரு மலையாகத் தோன்றினார். அதன் பின்னரே பிரம்மா படைத்த மலைகள் தோன்றின. பிரம்மா படைத்த மலைகளுக்கெல்லாம் சிவபெருமான் மலையாகத் தோன்றிய மலையே முதலில் தோன்றியது என்பதால் இது பழமலை என்றும் இத்தலத்து இறைவன் பழமலைநாதர் என்றும் வழங்கப்படுகிறார்.

குருநமசிவாயர் என்ற மகான் 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். ஒருமுறை அவர் திருவண்ணாமலையிலிருந்து சிதம்பரம் சென்ற போது வழியில் திருமுதுகுன்றத்தில் இரவு தங்கினார். பழமலை நாதரையும் பெரிய நாயகியையும் தரிசித்து விட்டுக் கோவிலின் ஒருபக்கத்தில் படுத்திருந்தார். பசிமிகுந்தது. பசி உண்டான போதெல்லாம் அம்பிகையைப் பாடி உணவைப் பெற்று உண்ணும் வழக்கமுடைய இவர் பெரிய நாயகியை கிழத்தி என்ற வார்த்தையை உபயோகித்து துதித்து பாடினார். பெரிய நாயகி முதியவடிவில் எதிரே தோன்றி என்னைப் பலமுறையும் கிழத்தி என்று ஏன் பாடினாய் கிழத்தி எவ்வாறு சோறும் நீரும் கொண்டு வர முடியும் என்று கேட்க குருநமசிவாயர் இளமை நாயகியே என்று பொருளுடன் பாட அம்மையும் மகிழ்ந்து இளமை நாயகியாக வடிவு கொண்டு வந்து உணவு படைத்தாள். பெரிய நாயகியே குருநமசிவாயருக்கு இளமை நாயகியாக வந்து உணவளித்ததால் இவ்வாலயத்தில் இளமை நாயகிக்குத் பாலாம்பிகை என்ற பெயரில் தனிக்கோயில் உள்ளது.

ஒருமுறை சுந்தரர் திருவாரூரில் நடக்கும் பங்குனி உத்திர விழவில் அடியார்களுக்கு அன்னதானம் செய்ய பொருள் சேகரிக்க ஒவ்வொரு தலமாகச் சென்றார். இத்தலத்து ஈசனான முதுகுன்றப்பெருமானை பாட மறுத்துச் சென்ற சுந்தரரை இறைவன் தடுத்து ஆட்கொண்டு தன்னை பாட வைத்தார். சுந்தரர் இத்தலத்து இறைவன் மேல் பதிகங்கள் பாடி 12000 பொற்காசுகள் பெற்றார். பொற்காசுகளை எடுத்துக் கொண்டு திருவாரூர் செல்வது சிரமமாக இருக்கும் என்று எண்ணி சிவபெருமானிடம் இந்த பொற்காசுகள் தனக்கு திருவாரூரில் கிடைக்கும் படி அருள் செய்ய வேண்டும் என்று முறையிட்டார். பழமலைநாதரும் பொற்காசுகளை ஆலயத்திற்கு அருகில் ஓடும் மணிமுத்தா நதியில் வீசிவிட்டு திருவாரூரில் கமலாலய குளத்தில் பெற்றுக் கொள்ளும் படி அருள் செய்தார். தந்த பொன் மாற்றுக்குறையாத தங்கம்தானா என்று சுந்தரர் மனம் அலைபாய்ந்ததை உணர்ந்த இறைவன் நம்பிக்கைக்காக தும்பிக்கை நாயகனை சாட்சியாக அமைத்து பொன்னை மாற்றுறைத்து காட்டினார். திருவாரூர் குளத்தில் பெற்றுக் கொள்ளவும் செய்தார். எனவேதான் இத்தலத்தில் உள் சுற்று பிரகாரத்தில் அமைந்துள்ள விநாயக பெருமான் மாற்றுரைத்த விநாயகர் என்ற பெயரோடு விளங்குகிறார். தேவர்களுக்காக இறைவன் இங்கு நடனம் ஆடியுள்ளார். சிதம்பரத்தில் சிவன் போட்டிக்காக ஆடிய தலம் என்றும் இத்தலம் சிவன் சந்தோஷத்திற்காக ஆடிய தலம் என்றும் கூறுவர். இங்குள்ள அர்த்த மண்டபத்தில் 4 வேதங்களே 4 தூண்களாக அமைந்துள்ளன. இத்தலம் முன்பொரு காலத்தில் குன்றாக இருந்தது. விபசித்து முனிவர் முத்தா நதியில் மூழ்கி இரவு திருக்கோயிலில் தங்கியதால் அருள் கிடைக்கப்பெற்று திருப்பணி செய்யும் பேறு பெற்றார். இத்திருக்கோயிலில் தலமரமாக உள்ள வன்னி மரத்தின் இலைகளை திருக்கோயிலின் திருப்பணியின்போது விபசித்து முனிவர் தொழிலாளருக்கு வழங்கினார் அந்த இலைகள் அவர்களின் உழைப்பிற்கு ஏற்றவாறு பொற்காசுகளாக மாறியது அருணகிரிநாதர், குமார தேவர், குருநமச்சிவாயர், சிவப்பிரகாசர், ராமலிங்க அடிகளார் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் பாடல்கள் பாடியுள்ளனர்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 219 திருநாவலூர்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 219 வது தேவாரத்தலம் திருநாவலூர். புராணபெயர் ஜம்புநாதபுரி, திருநாமநல்லூர். மூலவர் பக்தஜனேசுவரர் ஜம்புநாதேசுவரர், திருநாவலீசுவரர். பங்குனி மாதம் 23 முதல் 27 ஆம் நாள் வரை சூரியனின் ஒளிக்கதிர்கள் மூலவர் மீது படுகின்றன. இங்கு இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அம்பாள் மனோன்மணி நாவலாம்பிகை, சுந்தர நாயகி. அம்பிகை நான்கு திருக்கரங்களுடன் நின்ற திருக்கோலத்தில் அருட்காட்சி தருகிறாள். தலமரம் நாவல்மரம். தீர்த்தம் கோமுகி தீர்த்தம், கருட நதி. திருநாவலூர் சுந்தரர் அவதரித்த தலம் சுக்ரன் வழிபட்ட சிவதலம் இங்கு தட்சிணாமூர்த்தி ரிஷப வாகனத்தில் நின்ற கோலத்தில் உள்ளார். இவர் சுந்தரருக்கு காட்சியளித்தவர்.

கோவிலின் ராஜகோபுரம் ஐந்து நிலைகளுடன் காட்சி தருகிறது. கோபுரத்தையடுத்து இடதுபுறம் உள்ளே சுந்தரர் சந்நிதி உள்ளது. சுந்தரர் தனது இரு மனைவியர் பரவை நாச்சியார், சங்கிலி நாச்சியார் சூழ, எதிரில் வெள்ளையானை நிற்க, சுந்தரர் கையில் தாளமேந்தி காட்சி தருகிறார். பூலோக வாழ்க்கையை நீத்து சுந்தரர் கயிலாயம் சென்றபோது யானை மீது சென்றார். எனவே சுந்தரர் யானை வாகனத்தில் உள்ளார். கோபுர வாயில் கடந்தவுடன் எதிரில் கவசமிட்ட கொடிமரம், பலிபீடம், நந்தி உள்ளனர். கொடிமர விநாயகர் சுந்தர விநாயகராகக் காட்சி தருகிறார். உள்வாயிலைக் கடந்ததும் உற்சவத் திருமேனிகள் பாதுகாத்து வைக்கப் பட்டுள்ளன. நால்வர் இரு மனைவியருடன் சுந்தரர், நடராசர், சிவகாமி, முருகன், விநாயகர், வள்ளி, தெய்வயானை முதலிய உற்சவத் திருமேனிகள் உள்ளன. நடராச சபை உள்ளது. உள்பிராகாரத்தில் நரசிங்க முனையரையர் பூசித்த மிகப் பெரிய சிவலிங்க மூர்த்தம் உள்ளது. வடக்குச் சுற்றில் தல மரங்களான நாவல் மரங்களை அம்மன் சந்நிதிக்கு அருகில் காணலாம். இந்த ஊருக்கு நாவலூர் எனும் பெயர் ஏற்பட காரணம் இதுவே.

பிரகலாதனின் தந்தை இரண்யன் என்ற அசுரன் தேவர்களை மிகவும் கொடுமைப் படுத்தி வந்தான். தேவர்களும், முனிவர்களும் மகாவிஷ்ணுவை சரணடைந்தனர். மகாவிஷ்ணுவும் இரண்யனை வதம் செய்ய முடிவு செய்தார். ஆனாலும் வரங்கள் பல பெற்ற இரண்யன் தனக்கு மரணம் நிலத்திலும், நீரிலும், வானிலும், ஆயுதங்களாலும், மனிதர்களாலும், தேவர்களாலும், விலங்குகளாலும், பகலிலும், இரவிலும், அரண்மனை உள்ளேயும், வெளியிலும் ஏற்படக்கூடாது என்ற வரமும் பெற்றிருந்தான். இப்படிப்பட்ட இரண்யனை அழிக்க மகாவிஷ்ணு திருநாவலூர் தலத்து இறைவனான பக்தஜனேஸ்வரரை வழிபட்டார். நரசிம்ம அவதாரம் எடுத்து தூணில் இருந்து வெளிப்பட்டு இரண்யனை வதம் செய்ய வேண்டிய ஆற்றலை திருமாலுக்கு வழங்கிய தலம் தான் திருநாவலூர். இத்தலத்தில் மகாவிஷ்ணு தனிக்கோவில் கொண்டுள்ளார். ஆலய பிரகாரத்தின்.வடக்குச் சுற்றில் ஸ்ரீதேவி பூதேவியுடன் வரதராஜப் பெருமாள் என்ற பெயரில் தனி சந்நிதியில் காட்சி தருகிறார். உயரமாக அமைந்த இந்தச் சந்நிதிக்குப் படிகளேறிப் போக வேண்டும். முகப்பு மண்டமும், மகா மண்டபமும் கூடிய இந்த சந்நிதியில் கிழக்கு நோக்கி ஆறடி உயரத்தில் வரதராஜப் பெருமாள் ஆஜானுபாகுவாக காட்சி தருகிறார். சந்நிதிக்கு எதிரில் கருடன் சிற்பம் உள்ளது.

ஈசனை மூலையில் நவகிரகங்களுக்கு அருகிலேயே சுக்கிரனாலேயே பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜை செய்த லிங்கமான பார்க்கவீசுவரர் லிங்கம் உள்ளது. பார்வதிதேவி இங்கு எழுந்தருளி சிவனை பூஜித்து மணம் புரிந்தார். இத்தலத்தின் சிறப்பை பெருமையை சேக்கிழார் பெரிய புராணத்தில் சிறப்பித்து கூறுகின்றார். சிவப்பிரியர் என்பவர் சிவனை பூஜித்து சண்டிகேஸ்வரர் பதவி பெற்றதும் ஆதிசேஷன் உமிழ்ந்த நஞ்சினால் கருநிறமடைந்த கருடன் சிவனை பூஜித்து விஷம் நீங்கியது இத்தலத்தில் தான். கிருதயுகத்தில் விஷ்ணு வழிபட்ட லிங்கம், திரேதாயுகத்தில் சண்டிகேஸ்வரர் வழிபட்ட லிங்கம், துவாபரயுகத்தில் பிரம்மா வழிபட்ட லிங்கம், கலி யுகத்தில் சுந்தரர் வழிபட்ட லிங்கம் இங்குள்ளது. அருணகிரிநாதர் இத்தல முருகனை திருப்புகழில் பாடல்கள் பாடியுள்ளார். சுக்கிரன் இத்தலத்தில் ஒரு லிங்கத்தை தாபித்து அதற்கு முறைப்படி பூஜைகள் நடத்தி இறையருள் பெற்றார். சுக்கிரன் நிறுவிய லிங்கம் நவகிரகங்களுக்கருகே அமைந்துள்ளது. அமிர்தத்தை கடைந்த காலத்தில் வாசுகி என்ற நாகத்தின் நஞ்சை இறைவன் சாப்பிட்டு நஞ்சு விந்தாக மாறி பூமியில் விழுந்து நாவல் மரங்களாக முளைக்கப்பெற்றது. ஜம்புவனம் என்ற பெயரில் இந்த இடத்தில் இறைவன் தானாக தோன்றப் பெற்று 4 யுகங்களுக்கு முன்பே இங்கு இறைவன் இருந்ததாக சொல்லப்படுகிறது. ஆரம்ப காலத்தில் கர்ப்ப கிரகம் மட்டும் முழுவதும் கல்லால் அமைக்கப்பட்டுள்ளது. பின்பு சேர சோழ பாண்டிய பல்லவ மன்னர்களால் பெரிய அளவில் விரிவு படுத்தப்பட்டுள்ளது.

ஜம்புநாதேசுவரர் என்று வழங்கி வந்த காலங்களில் சுந்தரர் ஜம்பு என்ற வடமொழி பெயரை நாவல் என்று அழைத்து திருநாவலீசன் என்று ஈசனையும் புராண பெயரான திருநாமநல்லூர் என்று ஊர்ப்பெயரையும் குறிப்பிட்டு தனது பாடல்களில் பாடியுள்ளார். ஒரு முறை சுக்கிர பகவான் காசிக்கு சென்று லிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து பல காலம் பூஜித்து வந்தார். இவரது பூஜைக்கு மகிழ்ந்த சிவன் இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் சஞ்சீவினி மந்திரத்தை உபதேசித்தார். இதையறிந்த அசுரர்கள் சுக்கிரனை தங்கள் குல குருவாக ஏற்றுக்கொண்டார்கள். தேவர்கள் அசுரர்கள் போர் ஆரம்பமானது. தேவர்கள் அசுரர்களை கொன்று குவித்தனர். ஆனால் இறந்த அசுரர்களை எல்லாம் சுக்கிரன் தன் சஞ்சீவினி மந்திரத்தால் உயிர் பிழைக்க செய்தார். பயந்து போன தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டார்கள். சிவன் சுக்கிரனை அழைத்து அவரை விழுங்கி விட்டார். சிவனின் வயிற்றில் பல காலம் யோகத்தில் இருந்தார் சுக்கிரன். பின்னர் அவரை வெளியே வரவழைத்து, நவக்கிரகத்தில் பதவியைக் கொடுத்து அனைவரும் செய்யும் பாவ புண்ணியத்திற்கேற்ப செல்வத்தை வழங்கி வர உத்தரவிட்டார். பின்னர் சுக்கிரனுக்கு நான்கு குமாரர்கள் இரண்டு புதல்வியர் பிறந்தனர். அவர் பூலோகம் வந்து சிவலிங்கம் ஸ்தாபித்து வழிபட்டார். இந்த இடமே இன்றைய திருநாவலூர் ஆகும். இங்குள்ள உட்கோயில் தொண்டீச்சரம் எனப்படுகிறது. இது முதற்பராந்தகனின் முதல் மகன் இராசாதித்தனால் கட்டுவிக்கப் பெற்றது என்பது கல்வெட்டுச் செய்தி. பிரம்மா, விஷ்ணு, சண்டிகேசுவரர், சப்தரிஷிகள், கருடன், சுந்தரர், சடைய நாயனார், இசைஞானியார், நரசிங்க முனையர் வழிபட்டுள்ளனர். சுந்தரர், அருணகிரிநாதர் பாடல்கள் பாடியுள்ளனர்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 218 திருவதிகை

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 218 வது தேவாரத்தலம் திருவதிகை. புராணபெயர் தியாகவல்லி. மூலவர் அதிகை வீரட்டேஸ்வரர். இங்கு இறைவன் 16 பட்டைகளுடன் கூடிய மிகப்பெரிய லிங்கமாக சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அம்பாள் பெரியநாயகி, திரிபுர சுந்தரி. தலமரம் சரங்கொன்றை. தீர்த்தம் சூலத்தீர்த்தம், கெடிலநதி. இறைவன் தேரில் வந்ததால் இத்திருக்கோயிலின் அமைப்பும் தேர் வடிவில் உள்ளது. இத்திருக்கோயிலின் கர்ப்ப கிரக விமானத்தை பார்த்து இராஜ இராஜ சோழன் பிற்காலத்தில் தஞ்சையில் பெரிய கோயிலை கட்டினான். இக்கோவிலின் நிழல் தரையில் விழாதபடி கணித சாஸ்திர முறையுடன் பல்லவர்களால் கட்டப்பட்டுள்ளது. தேவாரம் முதன் முதலில் பாடப்பட்ட தலம் இதுவே ஆகும். சுமார் 7 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள ஒரு பெரிய கோவிலாகும். கிழக்கு நோக்கிய ராஜகோபுரம் 7 நிலைகளுடனும், 7 கலசங்களுடனும் காட்சி தருகிறது. கோயிலுக்கு முன்னால் பதினாறுகால் மண்டபம் உள்ளது. இதைத் திருநீற்று மண்டபம் என்றழைக்கிறார்கள். இம்மண்டபத் தூண்களில் ரிஷபாரூடர், அப்பர், மயில் வாகனன் முதலிய சிற்பங்களும், இக்கோயிலைத் திருப்பணி செய்வித்த செட்டியார் சிற்பங்களும் உள்ளன.

கோபுர வாயிலின் இரு பக்கமும் நாட்டியக் கலையின் 108 தாண்டவ லட்சணங்களை விளக்கும் வகையில் கரண நடன சிற்பங்கள் உள்ளது. திறந்த வெளி முற்றத்தின் தென்பக்கம் சங்கர தீர்த்தமும், வடப்பக்கம் 5 அடி உயரமுள்ள பத்மாசனக் கோலத்தில் காணப்படும் ஒரு புத்தர் சிலையும் உள்ளன. 2வது கோபுர வாயிலின் வெளிப்புறம் விநாயகர், கொடிமரம், பலிபீடம் ஆகியவை உள்ளன. 5 நிலைகளையுடைய இரண்டாவது கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் ஒரு பெரிய நந்தியின் உருவசிலைக் காணப்படுகிறது. ஒருபுறம் முருகப் பெருமானும் மறுபுறம் கணபதியும் காட்சியளிக்கின்றனர். 2வது சுற்றின் தென்புறத்தில் திருநாவுக்கரசருக்கும் அவர் தமக்கை திலகவதிக்கும் தனித் தனியாக சந்நிதி உள்ளது. அதற்கடுத்து பைரவர், சனீஸ்வரர், மற்றும் துர்க்கையம்மன் சந்நிதிகள் உள்ளன. அதன்பின் இறைவி பெரியநாயகி சந்நிதி இருக்கிறது. 3வது சுற்றில் தான் மூலவர் அதிகை வீரட்டேஸ்வரர் சந்நிதி இருக்கிறது. கருவறைச் சுவற்றில் சிவன் பார்வதி கல்யாணத் திருக்கோலத்தில் காட்சி தருகிறார். உள் சுற்றின் தென்மேற்கே உள்ள பஞ்சமுகலிங்கம் உள்ளது. இந்த லிங்கம் பல்லவர் காலத்தைச் சார்ந்தது. இத்தகைய பஞ்சமுக லிங்கம் தமிழ்நாட்டில் வேறெங்கும் இல்லை. மூன்று திக்குகளை நோக்கி நான்கு முகங்கள் உள்ளன. ஒரு முகம் மேல் நோக்கி உள்ளது. எனவே பஞ்சமுகலிங்கம் என்று பெயர் பெற்றது.

நடராச சபை உள்ளது. திருவதிகை ஊரின் மேற்கே சுமார் 8 கி.மீ. தொலைவில் திருவாமூர் என்ற ஊரில் பிறந்த திருநாவுக்கரசர் சமண மதத்தில் மிகவும் தீவிரமாக இருந்தார். அவரது சகோதரி திலகவதியார் சைவ சமயத்திலேயே இருந்து வீரட்டானேசுவரருக்கு தொண்டு செய்து வந்தார். அப்போது திருநாவுக்கரசருக்கு கடுமையான சூலை நோய் (வயிற்று வலி) தாக்கியது. சமண சமயத்தவர்கள் அவரது வயிற்று வலியை நீக்க எவ்வளவோ முயன்றனர். ஆனால் முன்னை விட மேன்மேலும் வலி அதிகமானது. ஒருநாள் அதிகாலையில் திருஅதிகை அடைந்து திலகவதியாரின் காலில் விழுந்து தமது நோயைப் போக்கும் படி கூற திலகவதியாரும் மனமிரங்கி வீரட்டானேசுவரர் சன்னதிக்கு தன் தம்பியை அழைத்து சென்று திலகவதியார் தன் தம்பியாகிய திருநாவுக்கரசரை நல்வழிப்படுத்துமாறு இறைவனை வேண்ட இறைவன் சூலை தந்து ஆட்கொள்வோம் என்று பதிலுறைத்தார். திலகவதியார் ஐந்தெழுத்தை ஓதி இறைவனது திருநீறு அளித்தார். அந்த திருநீறை பூசிக்கொண்டு திருவாயில் போட்டுக் கொண்டவுடன் வயிற்றுவலி நீங்கிவிட்டது. உடனே வீரட்டானேசுவரரை வணங்கி கூற்றாயினவாறு விலக்ககலீர் என்னும் கோதில் நீடிய திருப்பதிகம் பாடினார். அதனால் மனமகிழ்ந்த கண்ணுதற் பெருமான் நாவுக்கரசு என்று நின்நன்நாமம் நயப்புற மன்னுக என்று பட்டம் கொடுத்தார். அது முதல் திருநாவுக்கரசர் சைவத்தையே உயிர் மூச்சாகக் கொண்டு உழவாரம் செய்து வந்தார். உழவாரம் முதன் முதலில் திருநாவுக்கரசரால் இங்கு தான் செய்யப்பெற்றது.

தாருகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி என்னும் மூன்று அசுரர்கள் கடுமையான தவங்கள் செய்து பிரம்மாவிடம் வரம் பெற்று தங்களை யாராலம் வெல்லவோ கொல்லவோ முடியாது வரம் பெற்றனர். பின்பு பொன், வெள்ளி, இரும்பு ஆகியவற்றால் மூன்று கோட்டைகளைக் கட்டி வாழ்ந்து வந்தனர். இந்த கோட்டைகளுக்கு விமானம் போல் நினைத்த இடங்களுக்குச் செல்ல வசதியாக சிறகுகளும் இருந்தன. இந்த முப்புரங்களையும் வைத்துக் கொண்டு இந்த அசுரர்கள் தேவர்களை மிகவும் துன்புறுத்தி வந்தனர். அவர்களால் தொல்லையடைந்தவர்கள் ஈசனிடம் முறையிட்டனர். அதன்படி பூமியை தேராகவும் சூரிய சந்திரர்களை தேர் சக்கரங்களாகவும் நான்கு வேதங்களை குதிரைகளாகவும் பிரம்மாவை தேரோட்டியாகவும் மற்ற தேவர்களை எல்லாம் தேருடன் வரச் செய்தார். சுவாமி மேருமலையை வில்லாகவும் வாசுகி என்னும் பாம்பை நாணாகவும் திருமாலை அம்பாகவும் அம்பின் நுனியில் அக்னியையும் வைத்து அந்த வில்லுடன் தேரில் ஏறினார். அச்சு முறிந்தது.

பிள்ளையாரை வணங்காததால் தான் இப்படி என்று உணர்ந்து கணபதி பூஜை செய்து அவரது அருளை பெற்று தொடர்ந்தனர். தேரில் வந்த அனைத்து தேவர்களும் தங்களால் தான் அந்த அசுரர்கள் மடியப்போகிறார்கள் என்று நினைத்து கொண்டிருக்க சிவபெருமான் அசுரர்கள் மீது வில் அம்பு எதையும் பயன்படுத்தவில்லை. அசுரர்களை பார்த்து சற்றே சிரித்தார். அவ்வளவு தான். உலகமே நடுங்கும்படியாக தீப்பிழம்பு ஏற்பட்டு அவர்கள் மூவரும் சாம்பலாயினர். தங்கள் உதவி இல்லாமலே சிவன் சம்காரம் செய்ததை உணர்ந்து தேவர்கள் வெட்கி தலை குனிந்தனர். ஒரே சமயத்தில் தேவர்கள் அசுரர்கள இருவரது ஆணவத்தையும் அடக்கினார் ஈசன். பின்பு மூன்று அசுரர்களையும் மன்னித்து இருவரை தனது வாயில் காப்பாளர்களாகவும், ஒருவரை குடமுழா முழக்குபவனாகவும் ஆக்கி கொண்டார். இந்த புராண வரலாறு திரிபுர சம்காரம் என்று அழைக்கப்படுகிறது. இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல்கள் பாடியுள்ளார்.

திருநாவுக்கரசர் உழவாரப்பணி செய்த இத்தலத்தை மிதிக்க அஞ்சி சுந்தரர் அருகிலிருந்த சித்தவடமடத்தில் தங்கி இத்தலப் பெருமானை வழிபட்டார். சுந்தரர் இரவு மடத்தில் தூங்கிக் கொண்டு இருந்த போது அவரின் மேல் யாரோ காலால் இடிப்பது தெரிந்து சுந்தரர் நகர்ந்து படுத்தார். மீண்டும் யாரோ அவர் தலையில் கால் படும்படி படுக்க சுந்தரர் எழுந்து காலால் தலையை தீண்டியவரை கடுமையாகப் பேச பின் இறைவன் தான் இவ்வாறு திருவிளையாடல் செய்துள்ளார் என்பதைப் புரிந்து கொண்டு அவரை வணங்கினார். இவ்வாறு சுந்தரர் இறைவனிடம் திருவடி தீட்சை பெற்றார். பல்லவனான மகேந்திர வர்மனின் மனத்தை மாற்றிச் சமண பள்ளிகளை இடித்துக் குணபரவீச்சரம் என்ற கோவிலை எழுப்பச் செய்ததும் இத்தலத்தினால் தான். சைவசித்தாந்த சாத்திரங்களுள் ஒன்றான உண்மை விளக்கம் நூலை அருளிய மனவாசகங்கடந்தாரின் அவதாரத் தலம்.

கோயிலின் உட்புறத்திலுள்ள மற்றொரு பதினாறுகால் மண்டபத்தின் இரு தூண்களில் ஒன்றில் சுப்பிரமணியத் தம்பிரானின் அமர்ந்த நிலை சிற்பமும் இதற்கு நேர் எதிர்த்தூணில் சிவஞானத் தம்பிரானின் நின்று கைகூப்பிய நிலை சிற்பமும் உள்ளது. சுப்பிரமணியத் தம்பிரான் என்பவர்தான் இக்கோயிலைத் திருத்திச் செப்பம் செய்தவர். இவர் சீடரான சிவஞானத் தம்பிரான்தான் முதன்முதலில் இத்திருக்கோயிலில் திருநாவுக்கரசருக்கு பத்து நாள்கள் விழா எடுத்துச் சிறப்பித்தார். இன்றும் சித்திரை மாதம் 10 நாட்கள் திருநாவுக்கரசருக்கு விழா நடக்கின்றது. இப்பகுதியில் புத்தமதம் சிறப்பாக ஒன்பது மற்றும் பத்தாம் நூற்றாண்டு காலகட்டத்தில் இருந்தது என்பதை இங்குள்ள கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இத்திருக்கோயில் வளாகத்தில் உள்ள புத்தர் சிலை கோயிலுக்கு வரும் சிவபக்தர்களால் இன்றளவும் வழிபடப்படுகிறது. இந்த புத்தர் சிலை அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் உள்ளது. இந்திரன், பிரம்மன், திருமால், பாண்டவர்கள், சப்தரிஷிகள், வாயு, வருணன், யமன் ஆகியோர் வழிபட்டுள்ளனர். திருஞானசம்பந்தருக்கு இங்கு இறைவன் திருநடன தரிசனம் காட்டியிருக்கிறார். திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் அருணகிரிநாதர் பாடல்கள் பாடியுள்ளனர்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 217 திருச்சோபுரம்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 217 வது தேவாரத்தலம் திருச்சோபுரம். புராணபெயர் தியாகவல்லி. மூலவர் சோபுரநாதர், மங்களபுரீஸ்வரர். இங்கு இறைவன் சுயம்பு மூர்த்தியாக மணல் லிங்கமாக அருள்பாலிக்கிறார். அம்பாள் சோபுரநாயகி, தியாகவல்லியம்மை, சத்யாயதாட்சி, வேல்நெடுங்கண்ணி. தலமரம் கொன்றை. தீர்த்தம் கிணற்று தீர்த்தம். மணற்பாங்கான பகுதியில் கோயில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. ஓரு முகப்பு வாயில் மட்டும் உள்ளது. உள்ளே கவசமிட்ட கொடிமரம், பலிபீடம் ஆகியவற்றைக் காணலாம். சுப்பிரமணியர், கஜலட்சுமி, வீரட்டேஸ்வர லிங்கம், கண்ணப்பர், திரிபுவன சக்கரவர்த்தி அவர் மனைவி வழிபட்ட லிங்கங்கள், பைரவர், சூரியன், நவக்கிரகங்கள், சிவன், அம்பாள் இருவரையும் ஒரே இடத்திலிருந்து தரிசிக்கக் கூடிய அமைப்புடன் அமைந்துள்ளன. இத்தலத்து மூலவர் சிவலிங்கத் திருமேனி அகத்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. கயிலாயத்தில் சிவன் அம்பாள் திருமணம் நடந்தபோது பூமியை சமப்படுத்த தென்திசை வந்தார் அகத்தியர். அவர் வரும் வழியில் பல இடங்களில் சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டார். வங்கக்கடற்கரை வழியாக சென்றபோது அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டது. சிவனிடம் தன் வலி தீர்க்க முறையிட விரும்பி கடல் மணலால் லிங்கம் அமைக்க முயன்றார். ஆனால் எவ்வளவு முயன்றும் லிங்கத்தை சரியாக அமைக்க முடியவில்லை. சிவன் தன்னை சோதிப்பதை உணர்ந்த அகத்தியர் அருகிலிருந்த மூலிகை செடிகளை பறித்து அதன் சாறை மணலில் சேர்த்தார். அக்கலவையால் லிங்கம் அமைத்து வணங்கினார். வலி நீங்கியது. இந்த லிங்கம் இருந்த இடத்தில் பிற்காலத்தில் கோயில் கட்டப்பட்டது.

சதுர ஆவுடையார் மீது பாணம் சுற்றளவு சற்று குறைவாக நீட்டுவாக்கில் உள்ள லிங்கத் திருமேனியுடன் மேற்கு நோக்கி காட்சியளிக்கிறார். லிங்கத்தை அகத்தியர் பிரதிஷ்டை செய்த போது ஏற்பட்ட கைத்தடம் இருக்கிறது. லிங்கத்தின் மேல் பகுதியிலுள்ள சிறிய உருண்டை போன்ற அமைப்பில் கங்காதேவி உள்ளார். அகத்தியர் அமைத்த லிங்கத்திலேயே அம்பாள் ஐக்கியமாகி விட்டதால் சிவலிங்கத்துக்கு மஞ்சள் குங்கும வழிபாடு நடக்கின்றது. பிற்காலத்தில் அம்பாளுக்கு தனி சன்னதி அமைக்கப்பட்டது. கோஷ்ட மூர்த்தத்தில் லிங்கோத்பவருக்கு இருபுறங்களிலும் திருமாலும் பிரம்மாவும் நின்று தரிசிக்கும் கோலத்தில் உள்ளனர். கோயில் உள்ள பகுதி திருச்சோபுரம் என்றும் பக்கத்தில் உள்ள பகுதி தியாகவல்லி என்றும் சொல்லப்படுகிறது. திரிபுவனச் சக்கரவர்த்தியின் முதல் மனைவியான தியாகவல்லி அம்மையார் இக்கோவிலுக்கு திருப்பணி செய்த காரணத்தால் தியாகவல்லி என்று பெயர் பெற்றது. இக்கோயில் பல்லாண்டுகளுக்கு முன்பு கடல் சீற்றத்தால் மணலால் மூடப்பட்டு விட்டது. பிற்காலத்தில் சிவபக்தர் ஒருவர் இத்தலத்தை பற்றி அறிந்து சுவாமியை தரிசனம் செய்ய வந்தார். ஆனால் இங்கு கோயில் இல்லை. ஓரிடத்தில் கோபுர கலசத்தின் நுனி மட்டும் தெரிந்தது. அதன்பின் ஊர்மக்கள் மணலை அகற்றி இக் கோயிலை வெளிக்கொண்டு வந்தனர். கையில் வீணை ஏந்தியபடி இசைக்கு அதிபதியாக காட்சி தரும் தட்சிணாமூர்த்தி இத்தலத்தில் இசையின் வடிவமாகவே அருளுகிறார். இவரது சிலையை தட்டிப்பார்த்தால் சப்தஸ்வர ஓசை எழுகிறது. வழக்கமாக வலது கையில் நாகமும் இடது கையில் அக்னியும் ஏந்தியிருக்கும் தட்சிணாமூர்த்தி இத்தலத்தில் இடது கையில் நாகம் வலது கையில் அக்னி என மாற்றி வைத்துள்ளார். இவருக்கு மஞ்சள் வஸ்திரம் அணிவிக்காமல் வெள்ளை வஸ்திரம் சாத்தி வழிபடுகின்றனர். திருஞானசம்பந்தர் பாடல்கள் பாடியுள்ளார்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 216 தீர்த்தனகிரி

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 216 வது தேவாரத்தலம் தீர்த்தனகிரி. புராணபெயர் திருத்திணைநகர். மூலவர் சிவக்கொழுந்தீசர். இங்கு இறைவன் சதுரவடிவ பீடத்துடன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பாணம் சற்று கூர்மையாகவுள்ளது. சிவன் மீது பங்குனி மாதம் 20, 21, 22 ஆகிய மூன்று நாட்களில் சூரியஒளி சுவாமி மீது விழுகிறது. அம்பாள் ஒப்பிலாநாயகி, நீலாயதாக்ஷி, கருந்தடங்கண்ணி, இளங்கொம்பன்னாள். தலமரம் கொன்றை. தீர்த்தம் ஜாம்புவதடாகம். கோயிலுக்கு வெளியே இருக்கும் இத்தீர்த்தத்தில் முன்வினைப் பயனால் ஜாம்பு என்கின்ற கரடி வடிவம் பெற்ற மகரிஷி ஒருவர் இத்தீர்த்தத்தில் நீராடி சிவனை வணங்கி சாபவிமோசனம் பெற்றார். இதனால் இத்தீர்த்தம் அவரது பெயராலேயே அழைக்கப்படுகிறது.

இராஜகோபுரம் மூன்று நிலைகளுடன் கிழக்கு நோக்கி உள்ளது. கோபுரவாயில் வழியாக உள்ளே நுழைந்தால் நேரே கவசமிட்ட கொடிமரம். நந்தி, பலிபீடம் ஆகியவற்றைக் காணலாம். வெளிப் பிரகாரத்தில் வலதுபுறம் அம்பாள் சந்நிதி உள்ளது. மேலும் இந்த பிராகாரத்தில் நால்வர், விநாயகர், சுப்பிரமணியர், வீரசேன மன்னன் ஆகியோரின் சந்நிதிகளும், தலமரமாகிய கொன்றையும், பைரவர், சூரியன் திருமேனிகளும் உள்ளன. பிரகார வலம் முடித்து தெற்கிலுள்ள பக்கவாயில் வழியாக உள்ளே சென்றால் நேரே நடராச சபை உள்ளது. நடராச மூர்த்தியின் கீழே பீடத்தில் மகாவிஷ்ணு சங்கை வாயில் வைத்து ஊதுவது போலவும் பிரம்மா பஞ்சமுக வாத்யம் வாசிப்பது போலவும் சிறிய மூர்த்தங்கள் உள்ளன. திருமால், பிரம்மா இருவரது இசைக்கேற்ப சிவன் நடனமாடும் இக்காட்சியை காணலாம். கோஷ்ட மூர்த்தங்களாக நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோரைக் காணலாம். லிங்கோத்பவருக்கு இருபுறமும் பிரம்மா, விஷ்ணு நின்று தரிசிக்கும் கோலத்தில் காணப்படுகின்றனர். சண்டேசுவரர் சந்நிதியும் உள்ளது. இத்தலத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி இரண்டு கால்களையும் மடக்கி பீடத்தின் மீது அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். இவரது காலுக்கு கீழே முயலகன் இல்லை. நான்கு சீடர்கள் மட்டும் இருக்கின்றனர்.

விவசாய தம்பதியர்கள் உணவு படைத்தபோது சிவன் தரையில் இரண்டு கால்களையும் மடக்கி அமர்ந்து சாப்பிட்டார். இதன் அடிப்படையில் தட்சிணாமூர்த்தி இக்கோலத்தில் இருக்கின்றார். முன்னொரு காலத்தில் இப்பகுதியில் வசித்த ஒரு விவசாய தம்பதியினரான பெரியான் என்னும் பள்ளனும் அவன் மனைவியும் சிவன் மீது அதிக பக்தியுடன் இருந்தனர். தினமும் ஒரு சிவபக்தருக்கு உணவளித்து விட்டு அதன்பின்பு உண்பதை வழக்கமாக கொண்டிருந்தனர். ஒரு சமயம் சிவன் அவர்களது பக்தியை சோதிக்க எண்ணி எந்த சிவபக்தரையும் அவர் வீட்டுப்பக்கம் செல்லாதபடி செய்தார். விவசாயி தோட்டத்தில் உள்ள பணியாளர்களுக்கு உணவு கொடுக்கலாம் என்று நினைத்து தன் மனைவியுடன் தோட்டத்திற்கு சென்றான். ஆனால் அங்கும் பணியாளர்கள் யாரும் இல்லை. எனவே அவர்கள் நீண்ட நேரம் அங்கேயே காத்திருந்தனர். அப்போது இறைவன் அடியவராக வந்து அன்னம் கேட்க விவசாயி வீட்டிற்குச் சென்று உணவு எடுத்து வருவதாகக் கூறினான். அடியவராக வந்து இறைவன் அவனிடம் நான் உழைக்காமல் எதுவும் சாப்பிட மாட்டேன். உன் தோட்டத்தில் எனக்கு ஏதாவது வேலை கொடு அதற்கு கூலியாக வேண்டுமானால் சாப்பிடுகிறேன் என்றார்.

விவசாயியும் ஒத்துக்கொண்டு தன் தோட்டத்தை உழும்படி கூறினான். இறைவன் வயலில் இறங்கி உழுதார். தம்பதியர் இருவரும் வீட்டிற்கு சென்று உணவை எடுத்துக்கொண்டு திரும்பினர். அப்போது தோட்டத்தில் அன்று விதைக்கப்பட்டிருந்த திணைப் பயிர்கள் அனைத்தும் நன்கு விளைந்து கதிர்கள் முற்றி அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தன. ஆச்சர்யமடைந்த விவசாயி சந்தேகத்துடனே அடியவருக்கு அருகிலிருந்த கொன்றை மரத்தின் அடியில் அன்னமிட்டான். அடியவர் சாப்பிட்ட பின்பு அவரிடம் ஒரே நாளில் திணைப்பயிர் விளைந்தது எப்படி என தன் சந்தேகத்தை கேட்டான். அடியவராக வந்த முதியவர் மறைந்து சிவபெருமானாக அவனுக்கு காட்சி தந்து தானே அடியவராக வந்ததை உணர்த்தினார். சிவதரிசனம் கண்டு மகிழ்ந்த விவசாயி இறைவனை அங்கேயே எழுந்தருளும்படி வேண்டிக்கொண்டான். இறைவனும் சுயம்பு லிங்கமாக அவ்விடத்தில் எழுந்தருளினார். அதிசயமாக ஒரே நாளில் தினை விளைந்ததால் இத்தலம் தினைநகர் என்று பெயர் பெற்றது. சிவன் நிலத்தை உழுவதற்கு பயன்படுத்திய ஏர் மற்றும் நீர் இறைத்த கலம் தற்போதும் இருக்கிறது. வீரசேன மன்னனுக்கு இருத்த வெண்குஷ்டம் இத்தீர்த்தத்தில் மூழ்கி தீர்ந்தமையால் அவனே இக்கோயிலைக் கட்டினான். சுந்தரர் இத்தலத்தில் உள்ள அம்பாளைக்குறித்தும் பதிகம் பாடியிருக்கிறார். சுந்தரர் பாடல்கள் பாடியுள்ளார்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 215 ராஜேந்தரப்பட்டினம்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 215 வது தேவாரத்தலம் ராஜேந்தரப்பட்டினம். புராணபெயர் எருக்கத்தம்புலியூர், குமரேசபட்டினம், திருவெருக்கத்தம்புலியூர். மூலவர் திருக்குமாரசாமி, சுவேதாரண்யேஸ்வரர், நீலகண்டேஸ்வரர். இங்கு இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மார்ச் மாதம் 16 முதல் 20 வரை 5 நாட்கள் மூலவரின் மீது சூரிய ஒளி படுகிறது. அம்பாள் வீராமுலைஅம்மன், நீலமலர்கண்ணி அம்மை, அபின்னகுசநாயகி, அபீதகுஜநாயகி, நீலோற்பலாம்பிகை. தீர்த்தம் கந்தம், செங்கழுநீர், நீலோத்பவம், சுவேதம். தலமரம் வெள்ளேருக்கு.

தேவர்களும் முனிவர்களும் இத்தலத்தில் பறவையாகவும் மரங்களாகவும் மாறி ஈசனை வழிபட்டு வந்தனர். அங்கே வந்த வேடர்கள் பறவைகளை கொல்லவும் மரங்களை வெட்டவும் முயன்றனர். உடனே அனைவரையும் யாருக்கும் பயன்படாத வெள்ளெருக்கு மரங்களாக மாறி வழிபடுங்கள் என கூறி மறைந்தார். எனவே இவ்வூர் எருக்கத்தம்புலியூர் ஆனது. ராஜராஜ சோழன் புத்திரபாக்கியம் வேண்டி இத்தல ஈசனை வணங்கினார். அதன் பலனாக ராஜேந்திர சோழன் பிறந்தான். இதனால் இத்தலத்திற்கு ராஜேந்திரபட்டினம் என்ற பெயர் ஏற்பட்டது. இவ்வாலயத்தின் ராஜகோபுரம் 5 நிலைகளையுடையது. கோபுர வாயில் கடந்து உள்ளே சென்றால் பலிபீடம், கொடிமரம், நந்தி மண்டபம் உள்ளன. வலதுபுறம் சிறிய விநாயகர் சந்நிதி உள்ளது. வெளிச்சுற்றில் இடதுபுறத்தில் நவக்கிரகமும் நால்வரும் உள்ளனர். 63 நாயன்மார்களில் ஒருவரான திருநீலகண்ட யாழ்ப்பாணருடைய அவதாரத்தலம் திருஎருக்கத்தம்புலியூர். இவரது திருவுருவம் மதங்க சூளாமணியாருடன் உள்ளது. மகாகணபதி, விசுவநாதர் விசாலாட்சி, முருகர், லட்சுமி சந்நிதிகள் உள்ளது. கோஷ்டமூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, இலிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர்.

சுவேதன் என்ற அரசனுக்கு முன்வினைப்பயனால் வெண்குஷ்டம் ஏற்பட்டது. சிவபக்தனான இவன் எருக்கத்தம்புலியூர் தீர்த்தத்தில் நீராடி சிவபூஜை செய்து நோய் நீங்கப் பெற்றான். இத்தலத்தின் எருக்கிற்கு வெண்குஷ்டத்தைப் போக்கும் சக்தியுண்டு. கைலாயத்தில் சிவன் வேதாகமத்தின் உட்பொருளை பார்வதிக்கு உபதேசித்து கொண்டிருந்தார். பார்வதி அதை சரியாக கவனிக்காததால் அவளை பரதவர் குல பெண்ணாக பிறக்குமாறு சபித்தார். இதனால் கோபமடைந்த முருகன் தன் தாயை சிவபெருமான் சபிப்பதற்கு காரணமாக இருந்த வேதாகம நூல்களை கடலில் வீசி எறிந்தார். இக்குற்றத்திற்காக சிவன் முருகனை மதுரையில் வணிகர் குலத்தில் ஊமைப்பிள்ளையாக பிறக்கும்படி சபித்தார். முருகன் மதுரையில் தனபதி, குணசாலினி என்ற பெற்றோருக்கு உருத்திரசன்மர் என்ற பெயரில் அவதரித்தார். உரிய வயது வந்த போது பல சிவத்தலங்களுக்கு சென்று வழிபாடு செய்தார். கடைசியாக எருக்கத்தம்புலியூர் வந்து சிவலிங்கம் அமைத்து வழிபட்டு பேசும் திறன் பெற்றார். குமரன் வழிபட்டதால் சிவன் குமாரசாமி ஆனார். உருத்திரசன்மரின் உருவம் இங்கிருக்கிறது. முருகப்பெருமான், வியாக்ரபாதர் வழிபட்டுள்ளனர். திருஞானசம்பந்தர் பாடல்கள் பாடியுள்ளார்.

மகாபாரதம் 3. வன பருவம் பகுதி -14

ரிஷிகள் முனிவர்கள் யோகிகள் ஆகியோர் யுதிஷ்டிரன் இருக்கும் இடத்திற்கு வந்து கொண்டே இருக்கின்றனர். கிருஷ்ணனும் அடிக்கடி பாண்டவர்கள் இருக்கும் இடத்திற்கு சென்று அவர்களுக்கு தக்க ஆதரவு கொடுக்கின்றான். அங்கு ஓயாது வந்து கொண்டிருக்கும் விருந்தினர்களுக்கு திரௌபதி அறுசுவை உணவை திருப்திகரமாக கொடுத்துக் கொண்டிருக்கிறாள். யுதிஷ்டிரன் இருக்குமிடம் கைலாசத்துக்கு வைகுண்டத்திற்கும் நிகரானது போல் தென்படுகிறது. போர்க்கலையில் அவர்கள் உச்ச ஸ்தானம் பெற்றிருக்கின்றார்கள். என்று பிராமணன் திருதராஷ்டிரன் தெரிவித்தார்.

பிராமணன் கூறிய அனைத்தையும் கேட்ட திருதரஷ்டிரருடைய மனதில் பெரும் தடுமாற்றம் ஏற்பட்டது. அவருடைய மனதில் போராட்டம் பன்மடங்கு அதிகரித்தது. துரியோதனன் மீது அவர் வைத்திருந்த பாசம் அவனுடைய உள்ளத்தில் பன்மடங்கு இருந்ததாலும் பாண்டுவின் பிள்ளைகள் மீது அவர் வைத்திருந்த பாசம் வெறும் பெயரிலேயே இருந்ததும் அவரின் வேதனைக்கு காரணமாய் இருந்தது. அனைத்தையும் கேட்ட துரியோதனன் பாண்டவர்களிடம் ராணுவ பலம் இல்லை என்றும் தன்னுடைய ராணுவத்தை அசைக்க முடியாத படி தாம் பலப்படுத்தியிருப்பதாவும் எண்ணி உள்ளம் பூரிப்படைந்ததான். நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் தன்னுடைய ராணுவத்தை பற்றியும் அதனுடைய பலத்தை பற்றியும் திருதரஷ்டிரரிடம் விளக்கி கூறினான்.

கர்ணனும் சகுனியும் துரியோதனனும் சதியாலோசனை ஒன்று செய்தார்கள். காம்யக வனத்திற்கு அருகில் அஸ்தினாபுரத்திற்கு சொந்தமான மாட்டுப்பண்ணை ஒன்று இருந்தது. அதை தாங்கள் பார்வையிட போவதாக திருதராஷ்டிரனிடம் சொல்லி அவருடைய அனுமதியைப் பெறவேண்டும். பின் அத்திட்டத்தின் படி பாண்டவர்களை அவமானப்படுத்த வேண்டும் என்பது அவர்களுடைய திட்டமாக இருந்தது. திருதராஷ்டிரரின் அனுமதியுடன் பெண்களை தங்களோடு அழைத்துக்கொண்டு பெருங்கூட்டமாக அவர்கள் புறப்பட்டு வனத்துக்குச் சென்றார்கள். அரச குடும்பத்து பெண்கள் ஆடம்பரத்துடன் பட்டாடைகள் நகைகள் அணிந்து இருப்பதை பார்த்து திரௌபதி தன் விதியை எண்ணி வருந்த வேண்டும். தாங்கள் ராஜபோகத்துடன் இருப்பதை பார்த்து பாண்டவர்களை வருத்தப்பட்டு துன்புறுதல் வேண்டும் என்றும் பல வகைகளில் அவர்களை அவமானப்படுத்த வேண்டும் என்று மனக்கோட்டை கட்டிக்கொண்டு காம்யக வனத்திற்கு கிளம்பினார்கள்.

காம்யக வனத்திற்குள் வந்த கௌரவர் கூட்டத்தினர் அங்கு தூய நீர் நிறைந்திருந்த தடகம் ஒன்றை பார்த்தார்கள். முதலில் அதில் நீராடி தங்களை தெளிவுபடுத்திக்கொள்ள அவர்கள் விரும்பினார்கள். ஆனால் அங்கு ஏற்கனவே விண்ணுலகில் இருந்து வந்த கந்தர்வர்கள் நீராடிக் கொண்டிருந்தார்கள். கந்தர்வர்கள் நீராடிக்கொண்டிருந்தது கௌரவர்களுக்கு இடைஞ்சலாய் இருந்தது. ஆகவே அத்தடாகத்தை உடனே காலி பண்ணவேண்டும் என்று அவர்களுக்கு துரியோதனன் உத்தரவிட்டான். ஆனால் கந்தர்வர்கள் அந்த உத்தரவை முற்றிலும் நிராகரித்து துரியோதனனை பொருட்படுத்தவில்லை. அங்கு தகராறு ஒன்று ஏற்பட்டது. அதி விரைவில் தகராறு ஒரு பெரிய போராட்டமாக வடிவெடுத்தது. கௌரவர்கள் விரைவில் தோற்கடிக்கப்பட்டனர். கர்ணன் தன்னுடைய ரதத்தை இழந்து அவமானத்துக்கு ஆளானான். மேலும் தான் ஆபத்துக்கு ஆளாகாத வண்ணம் அங்கிருந்து ஓட்டம் பிடித்தான். கந்தர்வர்கள் பெண்கள் உட்பட கௌரவர்கள் அனைவரையும் அவர்களது கைகளை கட்டி காட்டிற்குள் அழைத்துச் சென்றார்கள்.