ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 84

கேள்வி: பிறவிகளைப் பற்றி

ஒரு ஆத்மா மீண்டும் இந்த பூமியிலே பிறக்க வேண்டிய ஒரு சூழல் வரும் போது இதுவரை எடுத்த மொத்த ஜென்மங்கள் எத்தனை? அதில் கழித்த பாவங்கள் எத்தனை? இந்த விகிதாசாரத்தின் அடிப்படையிலே ஓரளவு புண்ணியம் இருந்தால்தான் மனிதனாகவே பிறக்க முடியும். அதற்கே அவன் சேர்த்து வைத்த புண்ணியம் செலவாகிவிடும். மிகுதி புண்ணியம் இந்த பூமியிலே மேல்திசை நாடுகளிலே பிறக்காமல் இந்த பாரத கண்டத்திலே கர்ம பூமியிலே பிறப்பதற்கே சில புண்ணியம் வேண்டும். அதனினும் இறை மறுப்புக் குடும்பத்தில் இல்லாமல் இறையை நம்பக்கூடிய குடும்பத்தில் பிறப்பதற்கே சில புண்ணியங்கள் வேண்டும். அதோடு மட்டுமல்லாமல் மகான்களின் தொடர்பு கிடைப்பதற்கும் ஸ்தல யாத்திரை செல்வதற்கும் தர்மங்களில் நாட்டம் வருவதற்கும் புண்ணியம் தேவைப்படும். பிறகு ஆணாக பெண்ணாக ஆரோக்கியமான உடல் கிடைக்க புண்ணியங்கள் வேண்டும். பெண்ணாக பிறப்பதற்கு புண்ணியம் வேண்டும். பெண் என்றால் பெண் தோற்றத்தில் மட்டுமல்ல அந்த பெண் உணர்வை நன்றாக உணரக் கூடிய பெண்மைக்குரிய குணங்கள் மேலோங்கி நிற்கக்கூடிய சாத்வீகமான பெண்ணாக பிறப்பதற்க்கென்றே சில புண்ணியம் தேவைப்படும். அதன் பிறகுதான் ஏனைய விஷயங்கள் கல்வி பணி பொருளாதாரம் என்று புண்ணியத்தைப் பகுத்துக் கொண்டே வந்தால் ஒரு நிலையில் புண்ணியம் தீர்ந்துவிடும். எதோடு புண்ணியம் தீர்ந்துவிடுகிறதோ அதன் பிறகு அந்த ஆத்மாவிற்கு போராட்டமாகத்தான் இருக்கும். அதைத்தான் (புண்ணியத்தை) அவன் அந்த ஊரிலே பிராத்தனை செய்து தர்மங்களை செய்து சத்தியத்தைக் கடைபிடித்து சேர்த்துக் கொள்ள வேண்டும்.

சுலோகம் -59

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் #12

இவ்விதம் நான் எப்பொழுதும் இருந்ததில்லை என்பது இல்லவே இல்லை. நீயும் இருந்ததில்லை. இந்த அரசர்களும் இருந்ததில்லை என்பதும் இல்லை. இனி மேலும் நாம் இருக்கப் போவதில்லை என்பதும் இல்லை.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

கிருஷ்ணர் அர்ஜூனனிடம் சொல்கிறார். யுத்தத்தில் யார் அழிந்து விடுவார்கள் என்று நீ நினைக்கிறாயோ அவர்கள் யுத்தத்தில் கொல்லப்பட்டு அவர்களின் உடல் அழிந்தாலும் அவர்கள் இல்லாமல் போக மாட்டார்கள். அது அவர்களுக்கு மட்டுமல்ல. நமக்கானதும்தான். உனக்கும் எனக்கும் இருக்கும் இந்த உடல் அழிந்தாலும் நாமும் இல்லாமல் போக மாட்டோம். எனெனில் இந்த உடலுக்குள் இருக்கும் ஆத்மா அழிவற்றது. இந்த உடல் தோன்றுவதற்கு முன்பும் நாம் இருந்தோம். இந்த உடல் அழிந்தாலும் நாம் இருப்போம். ஆகவே யுத்தத்தில் கொல்லப்படுபவர்கள் அனைவரும் அழிந்து போவார்கள் என்று நீ வருந்துவது தேவையில்லாதது என்று கிருஷ்ணர் அர்ஜூனனுக்கு உபதேசம் செய்கிறார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 83

கேள்வி: இளந்தளிரை மொட்டைப் பறித்தால் பல இளம் சிசுக்களைக் கொல்வதற்கு சமம் என்று ஒரு முறை கூறியிருந்தீர்கள். பூஜைக்கு பூக்கள் தேவைப்படுகிறது. அப்படி பூஜைக்கு பறிப்பதென்றால் மலர்கள் மலர்ந்த பிறகுதான் பறிக்க வேண்டுமா?

இறைவன் அருளைக் கொண்டு ஒரு மனிதனின் நோக்கத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு மருத்துவன் கத்தியால் ஒரு நோயாளியின் வயிற்றை காயப்படுத்தி மருத்துவம் செய்கிறான். ஒரு கள்வனின் கையில் இருக்கும் கத்தியும் அதையே செய்கிறது. இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை மனிதர்கள் புரிந்து கொள்ள வேண்டும். மருத்துவனின் கத்தி பிணியை நீக்குவதற்காக அந்த செயலை செய்கிறது. அதனால் துன்பம் ஏற்பட்டாலும் பிணியாளி பொறுத்துக் கொள்கிறான். ஏன் என்றால் நோய் என்னும் கடுமையான துன்பத்திலிருந்து நிவாரணம் அடைவதற்கு இந்த சிறிய துன்பத்தைப் பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் கள்வனின் கையில் உள்ள கத்தி பொருளைப் பறித்து பிற மனிதர்களுக்கு இடையூறு செய்வதற்காகவே இருக்கிறது. எனவே பூக்களைப் பறித்தாலும் தளிரைப் பறித்தாலும் இறைவனுக்கு ஏற்ற நோக்கத்திலே மெய்யாக மெய்யாக மெய்யாக அந்த நோக்கம் சற்றும் மாறாமல் பொது நலத்திற்கு என்று செய்யப்படும் பொழுது அது பாவமாக மாறாது. அது மட்டுமல்ல. அந்தப் பூக்களையெல்லாம் பறித்து இறைவனின் திருவடியிலும் இறைவனின் திருமேனியிலும் சமர்ப்பணம் செய்வதால் அந்த பூக்கள் எல்லாம் மோட்சம் அடைவதால் அவைகளின் ஆசிர்வாதமும் மனிதனுக்குக் கிட்டுகிறது. ஆனால் இறந்த மனிதனின் மீது மலர்களைப் போடுவது கடுமையான தோஷத்தையும் பூக்களின் சாபத்தையும் விருக்ஷங்களின் (மரங்கள் )சாபத்தையும் மனிதன் பெறுவதற்கு வழி வகுக்கும். அதை ஒருபொழுதும் செய்யக்கூடாது. ஆனாலும் மனிதர்கள் தவறாக அதனை செய்து கொண்டே இருக்கிறார்கள். சாலை முழுவதும் பூக்களை வாரி இறைப்பது மகா பெரிய பாவமும் தோஷமும் ஆகும். ஆனால் எத்தனையோ பாவங்களை நியாயப்படுத்திக் கொண்ட மனிதன் இதைப் பாவம் என்று ஒருபொழுதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. ஒரு மகான் உண்மயைாக ஒரு புனிதனாக வாழ்ந்திருக்கிறான் நல்ல சேவைகளை செய்திருக்கிறான் பிறருக்கு நல்ல புத்திமதிகளைக் கூறியிருக்கிறான் என்றால் அப்பொழுதும் துளசி போன்ற இலைகளைதான் ஆரமாக கட்டிப்போட வேண்டுமே தவிர மகானாக இருந்தாலும் மலர்களைப் போடுவது எமக்கு (அகத்திய மாமுனிவர்) உடன்பாடு இல்லை.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 82

கேள்வி: ஐயனே தாங்கள் தீட்டு என்பது மனதை பொறுத்தவிஷயம் என்று கூறியிருக்கிறீர்கள். இருந்தாலும் தீட்டை எந்த கால கட்டத்தில் பார்க்க வேண்டும். அப்படி எதாவது இருக்கிறதா? உதாரணமாக மாதவிலக்கு மரண வீட்டுத் தீட்டு?

உள்ளம் சுத்தமாக இருப்பதை நாங்கள் பார்க்கிறாறோம். அதற்காக உடல் அசுத்தமாக இருக்க வேண்டும் என்று பொருளல்ல. உடலும் உள்ளமும் சுத்தமாக இருக்க வேண்டும். இப்பொழுது நீ கூறிய பெண்களுக்கு உண்டான மாதாந்திர விலக்கு என்பது ஒருவகையான உடல் சார்ந்த நிகழ்வு. இது போன்ற தருணங்களிலே உடல் சோர்ந்து இருக்கும். எனவே அவர்கள் அயர்வாக ஓய்வாக இருப்பது அவசியம். அதைக் கருதிதான் அவர்கள் விலக்கி வைக்கப்படுகிறார்கள். எனவே தோஷம் காரணமாக விலக்கி வைக்கப்படுகிறார்கள் என்று கருதத் தேவையில்லை. என் உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்கிறது என்றால் தாராளமாக இயங்கட்டும். ஆனால் சித்தர்களைப் பொறுத்தவரை இது போன்ற தருணங்களில் பெண்கள் முழுக்க முழுக்க ஓய்வாக இருப்பது அவர்களின் பிற்கால உடல் நிலைக்கு ஏற்புடையதாக இருக்கும். அனைத்து இல்லக்கடமைகளில் இருந்தும் ஒதுங்கி இருப்பதே ஏற்புடையது. ஆனால் நடைமுறையில் இது சாத்தியமில்லையே என்று மனிதன் எண்ணலாம். மனிதன் ஏதாவது ஒன்றை இழந்து தான் ஆக வேண்டும். இது போன்ற தருணங்களில் ஒன்றல்ல இரண்டல்ல குறைந்தபட்சம் ஏழு நாட்கள் இல்லையென்றால் ஐந்து நாட்கள் அமைதியாக இருப்பதும் உடலை அதிகமாக வருத்தக்கூடிய எந்த செயலையும் செய்யாமல் இருப்பதும் பெண்களுக்கு ஏற்புடையது.

இது போன்ற தருணங்களில் ஆலயம் சென்றால் தோஷம் இறைவன் சினந்து (கோபித்து) விடுவார் என்று நாங்கள் (சித்தர்கள்) கூறவில்லை. இது போன்ற தருணங்களில் எங்கும் செல்லாமல் இருப்பது ஒரு பாதுகாப்பான நிலையைத் தரும். அது மட்டுமல்ல இது போன்ற தருணங்களிலே நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவதால் நோய்கள் தாக்கக்கூடிய நிலைமை ஏற்படும். சில எதிர்மறை ஆற்றல்கள் எதிர்மறை சக்திகள் பெண்களை பீடிக்க வாய்ப்பு இருப்பதால் அமைதியாக இல்லத்தில் ஒரு பகுதியில் அமர்ந்து மனதிற்குள் இறை நாமத்தை ஜெபித்துக் கொண்டு இருக்கலாம். இந்த அளவில் இதை எடுத்துக் கொள்ளலாமே தவிர மனிதர்கள் எண்ணுவது போல் ஏதோ மூலையில் முடங்கிக் கிடக்க வேண்டும். கடுமையான தோஷம் ஏதோ குற்றவாளி போல் நடத்த வேண்டும் என்றெல்லாம் நாங்கள் (சித்தர்கள்) கூறவில்லை. அதைப்போல் இறப்பு குறித்து நாங்கள் முன்னர் கூறியதுதான். மன உலைச்சலை ஏற்படுத்தாத எந்த இறப்பும் பெரிய தோஷத்தை ஏற்படுத்தாது.

சுலோகம் -58

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் #11

நீ துக்கப்படத் தகாத மனிதர்களின் பொருட்டு வருந்துகிறாய். மேலும் பண்டிதர்களைப் போன்று பேசுகிறாய். ஆனால் உயிர் போனவர்களுக்காகவும் உயிர் போகாதவர்களுக்காகவும் பண்டிதர்கள் வருந்துவதில்லை.

இந்த சுலோகத்தில் முதல் கேள்வி?

துக்கப்படத் தகாத மனிதர்கள் என்று கிருஷ்ணர் யாரை குறிப்பிடுகிறார்?

கௌரவர்களுடன் சேர்ந்து யுத்தம் செய்வதற்காக வந்திருப்பவர்கள் அனைவரும் அதர்மத்திற்கு துணை நிற்பவர்களே. அதர்மத்திற்கு துணை நிற்பவர்கள் அனைவரும் தர்மத்தால் அழிக்கப்படுவார்கள். இவர்கள் அழிந்தால் அவர்களைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. இவர்களையே துக்கப்படத் தகாத மனிதர்கள் என்று கிருஷ்ணர் இங்கு குறிப்பிடுகிறார்.

இந்த சுலோகத்தில் 2 வது கேள்வி?

அர்ஜூனனை பண்டிதர்களைப் போன்று பேசுகிறாய் என்று கிருஷ்ணர் எதனால் கூறுகிறார்?

அர்ஜூனன் முதல் அத்தியாயத்திலும் 2 வது அத்தியாயத்திலும் குலநாசத்தினால் வரும் பெரிய பாவங்களை எடுத்துக் காட்டியும் மேலும் பல விதமான கருத்துக்களை கிருஷ்ணரிடம் சொல்லியும் யுத்தம் செய்வது சரியில்லை என்று பேசினான். அர்ஜூனன் பேசிய கருத்துக்கள் அனைத்தும் உயர்வான நீதி சாஸ்திரங்களைப் படித்து அவற்றை விளக்கும் பண்டிதர்களின் கருத்துக்களைப் போல இருந்ததால் அவனை பண்டிதர்கள் போல பேசுகிறாய் என்று கிருஷ்ணர் கூறினார்.

இந்த சுலோகத்தில் 3 வது கேள்வி?

உயிர் போனவர்களுக்காகவும் உயிர் போகாதவர்களுக்காகவும் பண்டிதர்கள் வருந்துவதில்லை என்று கிருஷ்ணர் ஏன் கூறினார்?

பண்டிதர்களின் பார்வையில் ஆனந்த மயமான பொருள் ஒன்று தான். அது அழியாதது. அதைத் தவிர உலகில் அழியாத வேறு பொருள் எதுவும் இல்லை. அதுவே எல்லாவற்றிற்குள்ளும் இருக்கின்ற சோதி வடிவான ஆத்மா. அதற்கு எந்த விதத்திலும் அழிவு ஏற்படாது என்று நன்கு உணர்ந்தவர்கள் பண்டிதர்கள். மேலும் இந்த உலகிலுள்ள உயிர்கள் தங்களின் ஐந்து புலன்களின் மூலம் பார்ப்பவைகள் கேட்பவைகள் உண்பவைகள் முகர்பவைகள் உணர்பவைகள் ஆகிய அனைத்தும் தவிர்க்க முடியாத கனவு போன்ற மாயையால் ஆகியது என்பதையும் தெரிந்து கொண்டதால் அனைத்தும் இறைவன் செயலே என்று இருப்பார்கள். அதனால் இறந்தவர்களை பற்றி கவலைப்படவும் மாட்டார்கள். இருப்பவர்களை நினைத்து வருத்தப்படவும் மாட்டார்கள். இதனை வைத்து பண்டிதர்கள் வருந்துவதில்லை என்று கிருஷ்ணர் கூறினார்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

அதர்மம் செய்பவர்களையும் அதற்கு துணை நிற்பவர்களையும் நினைத்து துக்கப்படத் தேவையில்லை. ஏனெனில் அதற்கான தகுதியை அவர்கள் இழந்து விட்டார்கள் என்றும் மேலும் அர்ஜூனன் பண்டிதர்களைப் போல் பேசினாலும் பண்டிதர்களைப் போல் முடிவு எடுக்கவில்லை. ஆகையால் நீ பண்டிதன் அல்ல ஆனால் பண்டிதன் போல் பேசுகிறாய் அவ்வளவு தான் என்று அர்ஜூனனுக்கு உணர்த்தி அவன் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் கிருஷ்ணர் இந்த சுலோகத்தில் இருந்து பதில் சொல்ல ஆரம்பிக்கிறார்.

அன்பு

ஒரு நாள் குருவும் அவரது சீடர்களும் ஒரு குளக்கரையில் அமர்திருந்தார்கள். அப்போது ஒரு சீடன் எழுந்து குருவிடம் ஒரு கேள்வி கேட்டான். குருவே சுயநலமிக்க அன்பிற்கும் சுயநலமில்லாத அன்பிற்கும் வித்தியாசம் என்ன? எனக்கு விளக்கமாக சொல்லுங்கள் என்றான். குரு சீடனுக்கு சுற்றிலும் பார்த்தார். ஒரு இளைஞன் குளக்கரையில் தூண்டிலைப் பிடித்துக் கொண்டு அமர்திருந்தான். அவனருகில் கூடையில் அவன் பிடித்துப் போட்ட மீன்கள் துடித்துக் கொண்டிருந்தது. குரு அந்த இளைஞனிடம் பேச்சு கொடுத்தார். தம்பி மீன் என்றால் ரொம்ப பிடிக்குமோ? என்றார். அவனும் ஆமாம் ஐயா மீன் என்றால் எனக்கு உயிர் பிடித்து வைத்த மீன்களையெல்லாம் இன்றிரவு என் மனைவியை சமைக்கச் சொல்லி ஒரு பிடி பிடிக்கப் போகிறேன். உங்களுக்கு வேண்டுமானால் கொஞ்சம் எடுத்துக் கொள்ளுங்கள். குளத்தில் நிறைய மீன் கிடைக்கிறது என்றான். குருவோ எனக்கு வேண்டாம் தம்பி என்று புன்சிரிப்புடன் கூறி மறுத்து விட்டார். நடப்பதையெல்லாம் சீடன் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தான். அந்த இளைஞனும் சற்று நேரத்தில் மீன் பிடித்து விட்டு கிளம்பிவிட்டான்.

ஒரு வயது முதிர்ந்த பெரியவர் குளக்கரையை நோக்கி வருவதை குரு பார்த்து விட்டார். அவர் கையில் ஒரு வெள்ளை நிறப்பை இருந்தது. அதில் மீன்களின் உணவான பொரி இருந்தது. அந்த பெரியவர் குளக்கரையில் வந்து அமர்ந்தார். பையிலிருந்த பொரியை எடுத்து தண்ணீரில் தூவினார். நூற்றுக்கணக்கான மீன்கள் பொரி இருக்கும் இடத்தை எறும்புகள் போல மொய்த்தன. குரு அவரிடமும் பேச்சு கொடுத்தார். என்ன பெரியவரே மீன் என்றால் உங்களுக்கு ரொம்ப பிடிக்குமா? என்று சற்று முன் அந்த இளைஞனிடம் கேட்ட அதே கேள்வியை பெரியவரிடம் கேட்டார். பெரியவரும் ஆமாம் ஐயா மீன் என்றால் எனக்கு உயிர் நேரம் கிடைக்கும் போதெல்லாம் இங்கு வந்து இங்குள்ள மீன்களுக்கு உணவளிப்பேன் என்றார். குரு அவரிடம் பேசி முடித்து விட்டு சீடனின் பக்கம் திரும்பினார். பார்த்தாயா இருவரும் மீனின் மீது அளவு கடந்த அன்பு வைத்திருக்கிறார்கள் என்பது அவர்கள் மீனென்றால் உயிர் என்று கூறும் போதே தெரிந்திருக்கும். அந்த இளைஞன் மீன்களிடம் இருக்கும் ருசி என்னும் சுயநலத்திற்காக பயன்படுத்திக் கொண்டான். அவன் தன்னுடைய சந்தோஷத்தில் மட்டுமே கவனம் செலுத்தினான். ஆனால் அந்த பெரியவர் மீன்கள் பசியாறுவதற்கு சுயநலமில்லாமல் உணவளித்தார். இருவருக்கும் மீன்கள் பிடித்திருந்தது ஆனால் இருவரின் நோக்கம் வேறு. மொத்தத்தில் அன்பில் சுயநலம் இருந்தால் அது அன்பே இல்லை சுயநலமில்லாத அன்பு தான் உண்மையானது நிரந்தரமானது என்று சொல்லி முடித்தார்.

சுலோகம் -57

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் #10

பரத குலத் தென்றலே திருதராஷ்டிரரே கிருஷ்ணன் இரண்டு படைகளுக்கு நடுவில் துயரப்பட்டுக் கொண்டிருக்கும் அர்ஜூனனிடம் சிரித்தார் போல் இந்த வார்த்தைகளை பேச ஆரம்பித்தார்.

இந்த சுலோகத்தில் முதல் கேள்வி?

திருதராஷ்டிரரை பரதகுலத் தென்றல் என்று சஞ்சயன் ஏன் குறிப்பிட்டு சொல்கிறார்?

பரதகுலத்தில் தோன்றிய அரசர்கள் தர்மத்தின்படி உடனடியாக முடிவு எடுத்து அதனை செயல் படுத்தினார்கள். ஆனால் திருதராஷ்டிரருக்கு சஞ்சயன் பல முறை மறைமுகமாக எச்சரித்து விட்டான். இந்த யுத்தம் நடந்தால் யுத்தத்தில் கௌரவர்கள் தோற்கடிக்கப்படுவார்கள். உங்கள் புதல்வர்கள் அனைவரும் கொல்லப்படுவார்கள் என்று ஆனாலும் திருதராஷ்டிரர் தனது மகன் துரியோதனன் செய்யும் அதர்மமான செயலுக்கு துணை செல்வது போல் எந்த முடிவும் எடுக்காமல் தென்றல் போல் அமைதியாகவே இருக்கிறார். ஆகவே பரத குலத் தென்றலே என்ற வார்த்தையை சஞ்சயன் குறிப்பிட்டு சொல்கிறான்.

இந்த சுலோகத்தில் 2 வது கேள்வி?

மேற்கண்ட சுலோகங்களில் அர்ஜூனன் சொன்னவைகள் அனைத்தையும் கேட்ட கிருஷ்ணர் ஏன் சிரித்தபடியே பதில் சொல்ல ஆரம்பிக்கிறார்?

அர்ஜூனன் தர்மத்தை காக்க யுத்தம் செய்து தனது வீரத்தைக் காட்டுவதற்காக யுத்தகளத்திற்கு வந்துவிட்டு வருந்திக் கொண்டிருக்கிறான். என்னை சரணடைந்து பதில் சொல்லுமாறு கூறிவிட்டு நான் பதில் சொல்வதற்கு முன்பாகவே யுத்தம் செய்ய மாட்டேன் என்று முடிவு செய்துவிட்டானே என்று கிருஷ்ணர் தனது மனதிற்குள்ளாக எண்ணி அர்ஜூனனை பார்த்து சிரித்தார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 81

கேள்வி: உயிர்க்கொலை செய்வது பாவம் எனப்படுகிறது. படிப்பு நிமித்தமாக உயிர்க்கொலை செய்ய வேண்டியிருக்கிறது. அதற்கு என்ன பரிகாரம் செய்வது?

எந்த நோக்கத்தில் செய்தாலும் பாவம்தான். மருத்துவ வித்தையை (கல்வியை) கற்றுக்கொள்வதற்காக மருத்துவ அறிவு வேண்டும் என்பதற்காக உயிர்களை பகுத்துப் பார்ப்பதை நாங்கள் ஏற்கவில்லை. போகன் போஓன்ற சித்தர்கள் என்ன செய்வார்கள் தெரியுமா? எதையும் சோதிப்பதற்கு முன்னால் தன் உடலுக்கு அந்த மருந்தை செலுத்திப் பார்த்துதான் சோதனை செய்வான். ஒன்று ஞானத்தில் அறிந்துகொள்ள முயல வேண்டும் இது தக்கது இது தகாதது என்று. ஆனால் மனிதன் எப்பொழுதுமே லோகாயரீதியாக (உலக ரீதியாக) சிந்தித்தே பழகிவிட்டான். வேறு வகையில் கூறுகிறோம். ஒரு குழந்தையின் மீது ஒரு நாகம் ஏறிவிட்டது. சற்றே கவனக்குறைவாக இருந்தாலும் அந்தக் குழந்தையை நாகம் கொன்றுவிடும். இப்பொழுது அந்த நாகத்தை அப்புறப்படுத்துவதா? அல்லது கொல்வதா? நாகத்தைக் கொன்றால் பாவம் வந்துவிடுமே? என்றால் கட்டாயம் குழந்தையைக் காப்பாற்ற வேண்டும். ஆனாலும் நாகத்தை பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும். அந்த நிலையில் நாகத்தைக் கொன்றால் கட்டாயம் பாவம்தான் வரும். ஆனால் அங்கே நோக்கம் எவ்வாறு இருக்கிறது? என்று இறைவனால் பார்க்கப்பட்டு அதற்கு ஏற்றாற்போல் பாவத்தின் தன்மை அவனுக்கு அளிக்கப்படுகிறது. எனவே வெறும் சுயநல நோக்கத்திற்காக செய்யப்படுகின்ற எல்லா உயிர்க் கொலைகளும் பாவம்தான். இதை எப்படிப் பார்த்தாலும் இந்தப் பாவம் ஒரு மனிதனை பற்றத்தான் செய்யும். கூடுமானவரை இதை தவிர்ப்பது நன்மையைத் தரக்கூடிய நிலையாகும்.

சுலோகம் -56

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் #9

சஞ்சயன் திருதராஷ்டிரரிடம் அரசனே எதிரிகளை வெல்பவனும் உறக்கத்தை வென்றவனுமாகிய அர்ஜூனன் இவ்வாறு (மேலுள்ள சுலோகங்கள்) கோவிந்தனிடம் சொல்லிவிட்டு நான் போர் புரிய மாட்டேன் என்று மௌனமாகி விட்டான்.

இந்த சுலோகத்தின் ஒரு கேள்வி?

சஞ்சயன் திருதராஷ்டிரரிடம் சொல்லும் போது கிருஷ்ணரை கோவிந்தன் என்று ஏன் அழைக்கிறார்?

கோவிந்தன் என்ற சொல்லுக்கு பசுக்களின் தலைவன் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவன் பூமியை தாங்குபவன் என்று பொருளாகும். அர்ஜூனன் தனது மனக் குழப்பத்தில் இருந்து விடுபட கிருஷ்ணரை குருவாக ஏற்றுக் கொண்டு சரணடைந்து விட்டான். கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரும் கிருஷ்ணர் குருவாக நின்று அர்ஜூனனுக்கு உபதேசம் செய்து தெளிவைக் கொடுத்து விடுவார். அர்ஜூனன் தனது மனக் குழப்பங்களில் இருந்து தெளிந்து விடுபட்டு யுத்தம் செய்ய ஆரம்பித்தால் அதன் பிறகு உனது மகன்கள் யாரும் இருக்க மாட்டார்கள் என்று திருதராஷ்டிரருக்கு மறைமுகமாக சொல்வதற்காக கோவிந்தன் என்ற பெயரை சஞ்சயன் சொல்கிறார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 80

கேள்வி: நாரதர் கலகம்தான் செய்வார் என்பது பற்றி

இறைவன் அருளால் தவறான கருத்து அப்பா. இந்த நாரதர் மிகப்பெரிய மகான் ஞானி. ஞானத்தையெல்லாம் வேடிக்கையாகப் பல பேருக்கு உபதேசம் செய்து பல ஆத்மாக்களை கரையேற்றியிருக்கிறார். இன்று வால்மீகி மனிதர்களுக்கு கிடைத்திருக்கிறார் என்றால் அதற்கு பின்னால் நாரதரின் பங்குதான் அதிகமாக இருக்கிறது. முன் ஜென்ம பாவத்தால் தவறான தொழிலை செய்ய வேண்டி நிலைமை ஏற்பட அதே வால்மீகியின் முன் ஜென்ம புண்ணியத்தால் ஒரு மகான் மூலம் ராம நாமத்தை ஜபிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தால் அவன் புனிதனாவான் மாமேதையாவான் மாமனிதனாவான் மகானாவான் என்கிற விதி இருக்க அந்த விதிக்குள் ஒரு விதி இருந்தது. ராம நாமத்தை அவன் நேரடியாக உபதேசம் பெறக்கூடாது. பெற்றால் பலிக்காது என்று இதையெல்லாம் மனதிலே கொண்டுதான் நாரத மகரிஷி வால்மீகியை கள்வனாக இருக்கும் பொழுதே கண்டு நீ மரா மரம் மரா மரம் என்று ஓதிக் கொண்டே இரு. உனக்கு வேண்டியதெல்லாம் கிட்டும் என்று கூற அவனும் ஏதும் புரியாமல் மரா மரா மரா மரா என்று ஓத அதுவே பின்னால் ராம ராம ராம ராம என்று ஆகி மனித குலத்துக்கு ஒரு வால்மீகி கிட்டினான்.

வால்மீகி மிகப்பெரிய ஞானி. வால்மீகம் என்றால் புற்று என்று பொருள். விண்ணளவு புற்று வளரும்வரை தவம் செய்தவனடா. எனவே இதுபோன்ற பல ஞானியர்களை உருவாக்கிய பெருமை நாரதருக்கு உண்டு. முன்பே கூறியிருக்கிறோம். நாரதர் வழிபாடுகளெல்லாம் இங்கு வழக்கொழிந்து இருக்கிறது. ஹரிச்சந்திரனை மயானத்தோடு நிறுத்தி விட்டார்கள். உண்மை அங்குதான் இருக்கிறது என்பதை மனிதன் சொல்லாமல் சொல்கிறான். ஊருக்குள் உண்மை வரவேண்டாம் என்று மனிதன் என்றோ முடிவெடுத்து விட்டான். அதைப்போல் நாரதரையும் இப்படியே கூறி ஒதுக்க விட்டார்கள். அவ்வாறெல்லாம் எண்ணாமல் தாராளமாக நாரதரை மிகப்பெரிய மகானாக ஞானியாக சித்தனாக முனிவனாக வணங்கலாம். நல் உபதேசங்களும் ஞான கருத்துகளும் ஞான வழியில் வருகின்ற மனிதனுக்கு நல்ல வழிகாட்டுதலும் இன்றளவும் நாரதர் செய்து கொண்டிருக்கிறார்.