ராமாயணம் பால காண்டம் பகுதி -3

புத்திர காமேஷ்டி யாகத்தை முறையாக செய்வது மிகவும் கடினமானது. கிரியா என்ற செயல்கள் அதில் அதிகமாக உள்ளது. இம்மியளவு யாகத்தில் தவறு செய்தாலும் யாகம் தனது பலனை தராது. அதற்குரிய நியதிகளை முறையாக நிறைவேற்ற வேண்டும் என்றார் வசிஷ்டர். இதனை கேட்ட தசரதர் இந்த யாகத்தை முறையாக யாரால் செய்ய இயலும் என்று கேட்டார். காசிபர் என்னும் முனிவருக்கு விபண்டகர் என்னும் முனிவர் மகன். அவருக்கு சிவபெருமானே புகழும்படி சகலகலைகளிலும் கற்றுணர்ந்த புதல்வன் சிருங்கரிஷி என்பவர் உண்டு. அவரை இங்கு வரவழைத்து இந்த புத்திரகாமேஷ்டி யாகத்தை அவரது சொல்படி நடத்துவாயாக என்று வாழ்த்தினார் வசிஷ்டர்.

உரோமபதன் என்ற அரசனின் நாட்டில் சிருங்கரிஷி இருப்பதை அறைந்த தசரதன் அவரை முறையாக தன் நாட்டிற்கு அழைத்துவர தனது மந்திரி சுமத்திரனோடு சென்றார். தன் நாட்டிற்கு தசரதர் வருவதை அறிந்த உரோம்பதன் நாட்டின் எல்லைக்கே சென்று தசரதனை வரவேற்று விருந்தளித்தான். தசரதர் வந்த காரணத்தை அவரிடம் கேட்டு தெரிந்து கொண்ட உரோம்பதன் தானே சிருங்கரிஷியை அயோத்தி நகருக்கு அழைத்து வருவதாக வாக்களித்தார். தசரதர் சென்ற பின் சிருங்கரிஷி இருக்கும் இடத்திற்கு வந்த உரோமபதன் அவருக்கு உபசாரங்கள் செய்தான். இதனை கண்ட சிருங்கரிஷி வந்த நோக்கம் என்ன என்று கேட்டார். தாங்கள் தமக்கு ஒரு வரம் தர வேண்டும் என்று உரோமபதன் கேட்டுக்கொண்டான். தந்தோம் என்ன வேண்டும் கேள் என்றார். அசுரர்களால் துன்பப்பட்ட இந்திரனுக்கு உதவி செய்த தசரதரின் நாட்டிற்கு சென்று அவருக்கு புத்திர காமேஷ்டி யாகத்தை செய்து கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டான் உரோமபதன். வரம் தந்தோம் உடனே கிளம்புவோம் என்ற சிருங்கரிஷி உரோம்பதனுடன் அயோத்தி நோக்கி கிளம்கினார்.

உரோம்பதன் அனுப்பிய ஒற்றன் சிருங்கரிஷி அயோத்திநகர் வருவதை தசரதனுக்கு தெரியப்படுத்தினான். அதனை கேட்ட தசரதர் அயோத்தி நகருக்கு மூன்று யோசனை தூரம் (ஒரு யோசனை தூரம் என்பது தோராயமாக 15 கிமீ தூரம் ஆகும்) சென்று முரசு வாத்தியங்கள் ஒலிக்க மலர்கள் தூவி முனிவரின் அடிபணிந்து தனது வரவேற்றான். அரண்மணைக்கு வந்த சிருங்கரிஷி தசரதரை பார்த்து வசிஷ்டரை குலகுருவாக கொண்ட உன்னே போன்ற அரசர்கள் யாரும் இல்லை என்று வாழ்த்தி யாகத்திற்கு செய்ய வேண்டிய நியதிகளையும் ஒழுக்கங்களையும் விரதங்களையும் கூறினார். அவரின் ஆணைக்கு உப்பட்ட தசரதரும் அவரது மனைவியர்களும் அதற்கான விரதங்களையும் நியதிகளையும் கடைபிடிக்க ஆரம்பித்தனர்.

யாகம் செய்யும் யாக பூமியை உழுது விதிப்படி திருத்தியமைத்தார்கள். யாக சாலையில் ஆகவானீயம், தக்ஷ்ணாக்கினி, காருகபத்தியம் என மூன்று விதமான யாக குண்டங்கள் கட்டப்பட்டன. வேதம் ஓத யாக குண்டங்களில் புத்திர காமேஷ்டி யாகத்திற்கு தேவையான ஆகுதி பொருட்கள் அனைத்தும் நெய்யுடன் போடப்பட்டது. யாகம் தொடர்ந்து 12 மாதங்கள் நடந்தது. யாகம் உச்சநிலை அடைந்ததும் யாக நெருப்பில் இருந்து பிராகாசமூர்த்தி ஒருவர் மேலே கிளம்பி வந்தார். அவர் கையில் கலசம் ஒன்று இருந்தது. அதை அவர் தசரதரிடம் கொடுத்துவிட்டு மறைந்தார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.