தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 252 காளஹஸ்தி

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 252 வது தேவாரத்தலம் காளஹஸ்தி. புராணபெயர் சீகாளத்தி, திருக்காளத்தி. மூலவர் காளத்தீசுவரர், காளத்தியப்பர், காளஹஸ்தீஸ்வர சுவாமி, காளத்திநாதர், குடுமித்தேவர். இத்தலத்தில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். கருவறை அகழி போன்ற அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. அம்பாள் ஞானப்பிரசுனாம்பிகை, ஞானப்பூங்கோதை, ஞானசுந்தரி, ஞானாம்பிகை. அம்மனின் இடுப்பில் அணிவிக்கப்படும் ஒட்டியானத்தில் கேது உருவம் காணப்படுகிறது. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது ஞான சக்தி பீடம் ஆகும். அம்பாளின் திருவடியில் ஸ்ரீ ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த அர்த்த மேரு உள்ளது. தலவிருட்சம் அலரி. தீர்த்தம் பொன்முகலியாற்று தீர்த்தம், ஸ்வர்ணமுகி ஆறு. தலமரம் மகிழம்.

இக்கோவில் வாயு (காற்று) தலம் என்பதால் மூலஸ்தானத்தில் இருக்கும் விளக்கு காற்றில் ஆடிக்கொண்டே இருக்கும். இறைவனுக்கு அணிவித்துள்ள தங்கக்கவசத்தை எடுத்துவிட்டு ஆரத்தி எடுக்கும்போது லிங்கத்தின் அடிப்பாகத்தில் சிலந்தி வடிவத்தையும் நடுவில் நீண்டு கூடியனபோன்று உள்ள யானையின் இரு கொம்புகளையும் மேற்புறத்தின் உச்சியில் ஐந்து தலைப் பாம்பு படம் எடுத்துள்ள வடிவத்தையும் வலப்புறத்தில் கண்ணப்பர் பெயர்த்து அப்பிய ஒரு கண்ணின் வடுவையும் காணலாம். மூலவர் தீண்டாத் சிவலிங்கத் திருமேனி ஆவுடையார் பிற்காலத்தில் கட்டப்பட்டது. சுவாமி மீது உள்ள தங்கக் கவசம் பார்ப்பதற்கு பட்டைகளாகத் தெரிவது சார்த்தும் போதும் எடுக்கும்போதும் கூட சுவாமியை இங்கு உள்ள குருக்கள் தீண்டுவது இல்லை. இக்கவசத்தில் இருபத்தேழு நட்சத்திரங்களும் பொறிக்கப்பட்டுள்ளது. மூலவருக்கு கங்கைநீரால் மட்டுமே அபிஷேகம் செய்யப்படுகிறது. பிற அபிஷேகங்கள் அனைத்தும் ஆவுடையாருக்கே செய்யப்படுகிறது.

கருவறையை அடுத்த மண்டபத்தில் கண்ணப்பர் சிலை உள்ளது. மூலவரின் எதிரில் வெள்ளைக்கல் நந்தியும், பித்தளையில் நந்தியுமாக இரு நந்திகள் உள்ளனர். கோஷ்டத்தில் கணபதி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை மூர்த்தங்கள் உள்ளன. கோயிலின் நுழைவுவாயிலின் எதிரில் கவசமிட்ட கொடிமரம் ஒன்றும் 60 அடி உயரமுடைய ஒரே கல்லால் ஆன கொடிமரம் ஒன்றும் உள்ளது. இதன் அருகே பலிபீடமும் நந்தியும் உள்ளன. கிருஷ்ணதேவராயர் அவருடைய மனைவி, சீதை, லட்சுமணன், ஆஞ்சநேயர் சப்தரிஷிகள், சித்திரகுப்தர், யமன், தருமர், வியாசர் ஆகியோர் பிரதிஷ்டை செய்த பல சிவலிங்கங்களும் ஸ்ரீ ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த பெரிய ஸ்படிகலிங்கமும் உள்ளது. அம்பாள் கருவறையை வலம் வரும்போது வட்டமாகத் தரையில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள மூலை இடத்தில் மூன்று தலைகள் சேர்ந்திருப்பது போன்ற சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் சக்தி வாய்ந்த எந்திரம் இருக்கிறது. பரத்வாஜர் இங்கு தவம் செய்து பேறு பெற்றுள்ளதால் பரத்வாஜ கோத்ரத்தைச் சேர்ந்தவர்களே இங்கு பூஜை செய்யும் உரிமை பெற்றுள்ளனர். இத்தலம் கிரக தோஷ தலம் என்பதால் நவக்கிரகங்கள் இல்லை. சனீஸ்வரர் மட்டும் இடம்பெற்றுள்ளார். இறைவன் மேனியில் மாலை சாத்தப்படுவதில்லை. அங்கி அணிவிக்கப்பெற்ற பின்பு உள்ள திருமேனியிலேயே தும்பை மாலை சாத்துகிறார்கள்.

கண்ணப்பர் மலைக்கு ஏறும் வழியில் உள்ள மலைச்சரிவு ஒன்றில் மணிகண்டேசுவரருக்கு ஒரு கோயில் உள்ளது. அதையடுத்து மலையை வெட்டி செதுக்கிய மண்டபம் ஒன்று உள்ளது. அதற்கு மணி கர்ணிகா கட்டம் என்று பெயர். இங்கு பெண் ஒருத்திக்கு இறைவன் தாரக மந்திரத்தை வலக்காதில் ஓதி அருளியுள்ளார். சைவ மதத்தின் திருக்கடவுளான சிவபெருமான் மீது பெரும்பிரியம் கொண்டிருந்த வேடனான கண்ணப்பன் என்பவர் தினமும் தான் வேட்டையாடிய விலங்குகளையே இங்கே காளஹச்தீஸ்வரருக்கு படைத்து வழிபட்டு வந்திருக்கிறார். எம்பெருமானுக்கு புலால் படைக்கப்படுவது கண்டு கோபம் கொண்ட காளஹச்தீஸ்வரருக்கு பூசை செய்து வழிபடும் சிவ கோசரியார் என்ற அந்தணர் சிவபெருமானிடம் வேண்டி முறையிடுகிறார். சிவ கோசரியார் கனவில் தோன்றிய சிவபெருமான் கண்ணப்பன் என்மீது கொண்ட அதீத பக்தியின் வெளிப்பாடாகவே தனக்குத் தெரிந்த வகையில் எனக்கு சேவை செய்கிறான். என் மீது கொண்ட அவனது பக்தியை உமக்கு உணர்த்துகிறேன் என்று சொல்லி மறைகிறார். அடுத்த நாள் கண்ணப்பன் சிவனுக்கு பூசை செய்வதை சிவ கோசரியார் மறைந்திருந்து காண்கிறார். அப்போது லிங்கத்தின் கண்ணில் இருந்து ரத்தம் வடிகிறது சற்றும் யோசிக்காத கண்ணப்பன் அம்பு கொண்டு தன்னுடைய ஒரு கண்ணை தோண்டியெடுத்து லிங்கத்தின் கண் மேல் வைக்கிறார். ஒரு கண்ணில் ரத்தம் நின்று கொஞ்ச நேரத்தில் லிங்கத்தின் மறு கண்ணிலும் ரத்தம் வரவே சற்றும் யோசிக்காத கண்ணப்பன் ரத்தம் வரும் இடத்தை அடையாளம் காண தன் ஒரு காலை லிங்கத்தில் ரத்தம் வரும் இடத்தில் வைத்தபடியே அம்பினால் தன்னுடைய மற்றொரு கண்ணையும் எடுக்க எத்தனித்த நேரத்தில் சிவபெருமான் தோன்றி நில் கண்ணப்பா என்று கூறி தடுத்தி நிறுத்தி அவருக்கு முக்தி வழங்கினார். இந்த நிகழ்வு நடந்த இடம் தான் இப்போதிருக்கும் காளஹச்தி கோயில்.

திருமஞ்சனக் கோபுரம் எனப்படும் கோபுரத்திலிருந்து பார்த்தால் நேரே பொன்முகலி ஆறு தெரியும். ஆற்றுக்குச் செல்வதற்கு படிக்கட்டுகள் உள்ளன. இவ்வழியே தான் திண்ணனார் என்ற கண்ணப்பர் நீரைக் கொண்டுவந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்தார். கண்ணப்பரின் பக்தியை ஆதிசங்கரர் தனது சிவானந்தலஹரியில் பாடியுள்ளார். கண்ணப்பர் தனது வாயில் நீர் கொண்டு வந்து காளத்தியப்பருக்கு அபிஷேகம் செய்ததால் இங்கு பக்தர்களுக்கு விபூதி வழங்கும் வழக்கம் இல்லை. பச்சைக் கற்பூரத்தை பன்னீர் விட்டு அரைத்து தீர்த்தத்தில் கலந்து சங்கு ஒன்றில் வைத்துக்கொண்டு அதையே பக்தர்களுக்கு பிரசாதமாக தருகின்றனர். மூலவருக்கு பச்சைக்கற்பூர நீரே அபிஷேகம் செய்யப்படுகிறது. பிற பொருட்கள் கொண்டு செய்யப்படும் அபிஷேகங்கள் எல்லாம் மூலவர் உள்ள லிங்க பீடமான ஆவுடையாருக்கே செய்யப்படுகின்றன. இறைவனுக்கு அணிவிக்கப்படும் கவசத்தில் நவக்கிரகங்கள் இடம்பெற்றுள்ளன. சுவாமி புறப்பாடு வடக்கு கோபுரவாயில் வழியாகவே நடைபெறும். முன்காலத்தில் ரிஷிகள் பொன்முகலி ஆற்றில் நீராடிவிட்டு கிழக்கு நோக்கி தரிசித்ததால் அவர்களுக்கு காட்சி தருவதற்காக இறைவன் மேற்கு நோக்கி உள்ளார். இங்கு வந்த அகத்தியர் விநாயகரை வழிபடாமற் போகவே பொன்முகலி ஆறு நீரின்றி வற்றியது. அகத்தியர் தம் தவறுணர்ந்து பாதாளத்தில் விநாயகரைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு அருள் பெற்றார். இன்றும் பாதாள விநாயகர் சந்நிதி உள்ளது. பாதாள விநாயகர் சந்நிதி விநாயகர் 35 அடி ஆழத்தில் உள்ளார். விநாயகர் அமர்ந்துள்ள இடம் பொன்முகலியாற்றின் மட்டத்தில் உள்ளது. இக்கோபுர வாயிலில் நுழைந்து வலமாக வரும்போது தரையில் வட்டமாக குறித்துள்ள இடங்களில் நின்று பார்த்தால் கைலாச மலையையும் சுவாமி விமானத்தையும் தரிசிக்கலாம். இக்கோயிலில் உச்சி காலம் முடித்து நடைசார்த்தும் வழக்கமில்லை காலை முதல் இரவு வரை திறந்தே இருக்கின்றது. நாள்தோறும் நான்கு கால பூஜைகளே நடக்கின்றன. அர்த்தசாமப் பூஜை இல்லை ஆகையால் சாயரட்சை பூஜையுடன் முடித்து இரவு 8 மணிக்கு சுவாமி அம்பாளை பள்ளியறையில் அப்படியே எடுத்துக் கொண்டுபோய்ச் சேர்ப்பித்து விடுகிறார்கள்.

சிவன் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்த பாம்பு பாதாளத்தில் இருந்து மாணிக்கங்களை எடுத்து வந்து சிவலிங்கத்திற்கு தினமும் பூஜை செய்தது. பாம்பு பூஜை செய்து முடித்த பின்னர் அங்கு வரும் யானை மாணிக்கங்களை தனது துதிக்கையால் அப்புறப்படுத்திவிட்டு பூக்கள், தண்ணீர், வில்வ இலை கொண்டு சிவனை பூஜித்தது. தான் வைக்கும் மாணிக்கங்களை தள்ளிவிடுவது யார் என்பதை அறிய ஒரு நாள் அந்த பாம்பு பூஜைக்குப் பின்னரும் அங்கேயே காத்திருந்தது. வழக்கம் போல் வந்த யானை மாணிக்கங்களை தள்ளிவிட்டு பூஜை செய்தது. கோபம் கொண்ட பாம்பு யானையின் துதிக்கை வழியாக அதன் தலைக்குள் புகுந்து யானை மூச்சு விட முடியாதபடி செய்தது. பரிதவித்த யானை துதிக்கையால் சிவலிங்கத்தை தொட்டு வழிபாடு செய்துவிட்டு இறந்தது. யானையின் தலைக்குள் இருந்த பாம்பும் நசுங்கி இறந்தது. இதேபோன்று சிவன் மீது பக்தி கொண்டிருந்த சிலந்தி ஒன்றும் அதே சிவலிங்கத்தை வழிபட்டு வந்தது. தனது உடலில் இருந்து வரும் நூலினால் சிவனுக்கு கோவில் கோபுரம் பிரகாரம் கட்டி பூஜித்து வந்தது. காற்றில் நூல் அறுந்து போனாலும் மீண்டும் கட்டியது. ஒரு முறை சிலந்தி கட்டிய நூல் கோபுரத்தை எரிந்து சாம்பலாகும்படி செய்தார் சிவபெருமான். கோபம் கொண்ட சிலந்தி எரிந்து கொண்டிருந்த தீபத்தை விழுங்க சென்றது. சிலந்தியின் பக்தியை கண்டு வியந்த சிவபெருமான் அதனிடம் என்ன வர வேண்டும் என்று கேட்டார். மீண்டும் பிறவாமை வேண்டும் என்று வேண்டிய அந்த சிலந்திக்கு முக்தி கொடுத்து தன்னுடன் ஐக்கியமாக்கிக் கொண்டார் சிவன். தன் மீது கொண்டிருந்த அபரிமித பக்தியால் இறந்து போன யானை, பாம்பு ஆகியவற்றுக்கும் முக்தி அளித்தார் சிவன். புராண பெயரான சீகாளத்தில் என்ற சொல்லில் சீ என்பது சிலந்தியை குறிக்கிறது. காளத்தி என்பது காளம் அத்தி என இரு பெயர் பெறுகிறது. இதில் காளம் என்பது பாம்பினையும் அத்தி என்பது யானையையும் குறிக்கிறது. சிலந்தி, பாம்பு, யானை ஆகிய உயிர்கள் சிவலிங்கத்தை பூஜித்து முக்தி பெற்றதால் அவற்றின் பெயரால் இவ்வூர் சீகாளத்தி எனப்பெயர் பெற்றது.

முன்பொரு காலத்தில் ஆதிசேஷனுக்கும் வாயுதேவனுக்கும் ஒரு போட்டி வந்தது. தம்மில் யார் பெரியவன் என்ற போட்டி. ஆதிசேஷன் வாயுதேவனிடம் சொன்னான் வாயுதேவனே நான் கயிலாய மலையை என்னுடைய உடம்பால் சுற்றி இறுக்கி மூடிக்கொள்வேன். நீ உன்னுடைய பலத்தால் மலைச் சிகரங்களைப் பெயர்த்தெறிந்தால் நீ பெரியவன் என்பதை ஒப்புக்கொள்வேன். போட்டி தொடங்கியது. ஆதிசேஷன் தன் ஆயிரம் தலைகளாலும் உடம்பாலும் வாலாலும் கயிலை மலையை இறுக்கி மூடி மலையே தெரியாதபடி மறைத்துவிட்டார்.வாயுதேவன் பலம் கொண்ட மட்டும் காற்றை வீசிப்பார்த்தும் அசைக்க முடியவில்லை. பல நூறு ஆண்டுகளான பின் ஆதிசேஷன் லேசாக அசையவே அந்த நேரம் பார்த்து வாயுதேவன் தன் பலத்தைக்காட்ட கயிலையில் இருந்து மூன்று சிகரங்கள் பெயர்ந்து கொண்டு புறப்பட்டன. தெற்கே வந்து விழுந்தன. அந்த மூன்றில் ஒன்று தான் திருக்காளத்தி மலை என்கிறது புராணங்கள்.

சண்டேசுவரர் சந்நிதியில் மூலவர் பாணம் மட்டும் ஒன்று மிக உயரமாக உள்ளது. முகலாயர் படையெடுப்பின்போது கோயிலில் உள்ள மூல விக்ரகங்களை உடைத்துச் செல்வங்களை அபகரித்து வந்தனர். அவ்வாறு நிகழாதபடி தடுக்கவே மூலவருக்கு முன்னால் ஓரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வைத்து அவ்விடத்தை மூடிவிட வந்தவர்கள் இதையே உண்மையான மூலவர் என்றெண்ணி உடைத்துப்பார்த்து ஒன்றும் கிடைக்காமையால் திரும்பிவிட பின்பு சிலகாலம் கழித்து மூலவர் சந்நிதி திறக்கப்பட்டது. அப்போது முன் இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு படையெடுப்பாளர்களால் உடைக்கப்பட்ட பாணமே ஆகும். நக்கீரர் இம்மலையில் வந்து தங்கி நதியில் நீராடி இறைவனைத் தொழுது வெப்பு நோயிலிருந்து முழுமையாக நீக்கம் பெற்றார். நக்கீரர் கயிலை பாதி காளத்தி பாதி என்ற பாடல் பாடியுள்ளார்.

அருச்சுணன் தன் தீர்த்த யாத்திரையில் இங்கு வந்து இறைவனை வழிபட்டு பரத்வாஜ மகரிஷியைக் கண்டு வணங்கி சென்றிருக்கிறார். தட்சிண கைலாசம், அகண்டவில்வாரண்யம், பாஸ்கரக்ஷேத்திரம் என்றழைக்கப்படும் இத்தலத்தில் பிரவேசித்தால் முக்தி என தலபுராணம் கூறுகிறது. வீரைநகர் ஆனந்தக் கூத்தர் பாடிய திருக்காளத்திப் புராணமும், கருணைப் பிரகாசர், ஞானப் பிரகாசர், வேலப்ப தேசிகர் மூவரும் சேர்ந்து பாடிய தலபுராணமும் இத்தலத்திற்கு உள்ளது. வடமொழிப் புராணங்கள் பலவும் இக் கோயிலைப் போற்றுகின்றன. தமிழில் திருக்காளத்திப் புராணம், சீகாளத்தி புராணம் என்னும் இரண்டு நூல்கள் இதன் புராணத்தைக் கூறுகின்றன.

ஏழு நிலைகளுடன் கம்பீரமாகக் திகழும் காளிகோபுரம், நூற்றுக்கால் மண்டபம் ஸ்ரீ கிருஷ்ண தேவராயரால் கி. பி. 1516-ல் கட்டப்பட்டது. கோயிலின் பிரதான வாயிலில் உள்ள பிக்ஷசாலா கோபுரமும் ஏனைய கோபுரங்களும் 12-ம் நூற்றாண்டில் வீரநரசிம்ம யாதவராயரால் கட்டப்பட்டனவாகும். பிரதான தக்ஷிண கோபுரம் 11-ஆம் நூற்றாண்டில் குலோத்துங்க சோழனின் ஆட்சியில் அவனுடைய நேரடி மேற்பார்வையில் அதற்கென நியமிக்கப்பட்ட கோயிற் குழுவினரால் இக்கோபுரம் கட்டப்பட்டது. கண்ணப்பர் கோயிலும் கோவிலைச் சுற்றியுள்ள மண்டபமும், தாழ்வாரமும் ஆடல்வல்லான் கங்கைகொண்டானாகிய இருங்கோளன் புத்தங்கையாரால் கட்டப்பட்டது. உட்பிரகாரம் 5ஆம் நூற்றாண்டிலும் வெளிப்பிரகாரம் 12ஆம் நூற்றாண்டிலும் கட்டப்பட்டது. பல்லவர் காலத்தில் இருந்த இக் கோயிலை 10 ஆம் நூற்றாண்டளவில் சோழர்கள் திருத்தி அமைத்தனர். முதலாம் குலோத்துங்க சோழன், தெற்குவாயிலில் அமைந்துள்ள கலிகோபுரத்தை அமைப்பித்தான். சோழ விஜயநகர காகதீய மன்னர்கள் காலத்திய கல்வெட்டுக்கள் உள்ளன. இறைவன் தென்கயிலாயமுடையார் என்றும் திருக்காளத்தி உடைய நாயனார் என்று கல்வெட்டுக்களில் குறிக்கப்படுகிறார். முதற் குலோத்துங்கன் காலக் கல்வெட்டில் காளத்தி உடையான் மரக்கால் என்ற அளவு கருவி இருந்ததாக குறிப்பிடுகிறது. காளஹஸ்தி கோயில் சோழர்களின் புகழ்பெற்ற மன்னரான இராஜராஜ சோழனின் மகன் இராசேந்திர சோழன் கட்டிய கோவிலாகும். பல்லவர்கால நாயன்மார்களின் தேவாரப் பதிகங்களிலும் இக்கோயில் பற்றிய தகவல்கள் உள்ளன. சிலந்தி, பாம்பு, யானை, முசுகுந்தன், பரத்வாஜ மகரிஷி, சிவகோசரியார் வழிபட்டுள்ளனர். இங்கு வந்து பாடிய திருஞானசம்பந்தர் இங்கிருந்தவாறே கயிலாயம், கேதாரம், கோகர்ணம், திருப்பருப்பதம், இந்திரநீலப்பருப்பதம் தலங்களைப் பாடி வழிபட்டார். திருநாவுக்கரசர் இங்குள்ள இறைவனைக் காளத்திநாதர் ஞானப் பூங்கோதையார் பாகத்தான் என்று குறிப்பிட்டு பாடுகிறார். திருநாவுக்கரசர் காளத்தி வந்து வழிபட்டபோது வடகயிலை நினைவு வர கயிலைக் கோலம் காண எண்ணி யாத்திரையைத் தொடங்கினார். சுந்தரர் இங்கிருந்தவாறே திருப்பருப்பதம், திருக்கேதாரம் தலங்களைப் பாடி வழிபட்டார். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் பாடல்கள் பாடியுள்ளனர்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.