சக்தி பீடம் 6. பர்வதவர்த்தினி – ராமேஸ்வரம்

சக்தி பீடத்தில் 6 ஆவது கோயில் ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி கோயிலாகும். ஊர் ராமேஸ்வரம். புராணபெயர் கந்தமாதனபர்வதம் திருவிராமேச்சுரம். அம்பாளின் பெயர் பர்வதவர்த்தினி. மலைவளர்காதலி என்ற பெயரும் உள்ளது. மலைவளர் காதலி என்று திருஞானசம்பந்தர் அம்பிகையைப் போற்றிப் பாடியுள்ளார். சக்தி பீடங்களில் இத்தலம் சேதுசக்திபீடம் ஆகும். அம்பாள் சன்னதியில் அஷ்டலட்சுமி மற்றும் மேற்கு நோக்கிய சண்டிகேஸ்வரி ஆகியோர் உள்ளனர். பர்வதவர்த்தினி அம்பிகை பீடத்திற்கு கீழே ஆதிசங்கரர் நிறுவிய ஸ்ரீசக்கரம் உள்ளது. அம்பிகைக்கு சித்திரைப் பிறப்பன்று மட்டும் சந்தனக்காப்பு அலங்காரம் நடைபெறுகிறது. அம்மன் சன்னதி பிரகாரத்தில் வீடணன் அமைத்த ஆதிசேசன் மீது பள்ளி கொண்ட கோலத்தில் பெருமாள் காட்சி தருகிறார். தீர்த்தம் கோயிலுக்கு உள்ளே 22 தீர்த்தங்களும் கோயிலுக்கு வெளியே 22 தீர்த்தங்களும் உள்ளது. இந்த தீர்த்தங்கள் தேவிபட்டினம் திருப்புல்லாணி பாம்பன் தங்கச்சிமடம் மண்டபம் ஆகிய இடங்களில் உள்ளன.

அம்பிகை பர்வதவர்த்தினியின் சந்நிதி இராமநாதரின் வலப்பக்கம் அமைந்திருக்கிறது. அம்பிகை கோவிலின் வடமேற்கு மூலையில் பள்ளிகொண்ட பெருமாள் ஆகாயத்தை நோக்கியபடி கிடந்த திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார். அம்பாள் சன்னதியில் அஷ்டலட்சுமி மற்றும் மேற்கு நோக்கிய சண்டிகேஸ்வரி உள்ளனர். சந்தான விநாயகரும் சௌபாக்கிய விநாயகரும் அருள்பாலிக்கின்றனர். தென்மேற்கு மூலையில் சந்தானகணபதியின் சந்நிதி அமைந்திருக்கிறது. ஆலயத்தின் வெளிப் பிரகாரத்தில் வடகிழக்கு மூலையில் நடராஜர் சந்நிதி அமைந்துள்ளது. ராமபிரானுக்கு கடலில் சேது பாலம் அமைக்க உதவி செய்ய வந்த நளன் நீலன் கவன் ஆகிய மூன்று வானரர்களின் பெயரால் லிங்க சன்னதிகளும் பதஞ்சலி ஐக்கியமான நடராஜர் சன்னதியும் உள்ளன. இந்த நடராஜர் ருத்திராட்ச மண்டபத்தில் அழகுடன் எழுந்தருளியுள்ளார். முதல் பிரகாரத்தில் சீதை அமைத்த மணல் லிங்கத்திற்கு ராமர் பூஜை செய்யும் சன்னதி அமைந்துள்ளது.

ஒரு சமயம் இக்கோயில் லிங்கம் மணலால் செய்யப்பட்டதல்ல என்றும் அப்படியிருந்தால் அபிஷேகத்தின் போது கரைந்திருக்க வேண்டும் என்று சிலர் வாதம் செய்தனர். அப்போது பாஸ்கரராயர் என்ற அம்பாள் பக்தர் தண்ணீரில் எளிதில் கரையும் தன்மையுடைய உப்பில் ஒரு லிங்கம் செய்து அதற்கு அபிஷேகம் செய்தார். அந்த லிங்கம் கரையவில்லை. அம்பாளை வணங்கும் தன்னால் பிரதிஷ்டை செய்த லிங்கமே கரையாதபோது சீதாதேவி பிரதிஷ்டை செய்த லிங்கம் கரையாததில் ஒன்றும் அதிசயமில்லை என்று நிரூபித்தார். அம்பாள் பக்தரான ராயர் செய்த இந்த உப்பு லிங்கம் பிரகாரத்தில் ராமநாதர் சன்னதிக்கு பின்புறம் உள்ளது. உப்பின் சொரசொரப்பை அந்த லிங்கத்தைப் பார்த்தாலே உணர முடியும்.

ராமேஸ்வரம் கடல் அக்னி தீர்த்தம் என்றழைக்கப்படுகிறது. சீதையின் கற்பை நிரூபிப்பதற்காக அவளை அக்னி பிரவேசம் செய்யச் செய்தார் ராமர். சீதையைத் தொட்ட பாவம் நீங்க அக்னிபகவான் இங்கு கடலில் நீராடி தோஷம் நீங்கப் பெற்றார். எனவே இந்த தீர்த்தம் அக்னி தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. சீதையின் கற்புத்திறன் அக்னியையே சுட்டது. அந்த வெம்மை தாளாத அக்னி இந்தக் கடலில் மூழ்கி தனது வெப்பத்தை தணித்தது.

பர்வதவர்த்தினி அம்பாள் சன்னதி பிரகாரத்தில் சந்தான விநாயகர் சவுபாக்கிய விநாயகர் என இரண்டு விநாயகர்கள் அடுத்தடுத்து இருக்கின்றனர். இவர்களுக்கு காவி உடை அணிவிக்கப்படுகிறது. விநாயகர் பிரம்மச்சாரி என்பதாலும் இவர்கள் தங்களுக்கென எதையும் வைத்துக் கொள்ளாமல் பக்தர்கள் கேட்பதையெல்லாம் கொடுத்து விடுவார்களாம். இதன் காரணமாகவும் இவர்கள் காவியுடையை அணிந்துள்ளனர்.

முத்துராமலிங்க சேதுபதி மன்னர் இக்கோயிலில் மூன்றாம் பிரகாரத்தை மிகப்பெரிதாகக் கட்டியுள்ளார். 1212 தூண்களைக் கொண்ட இம்மூன்றாம் பிரகாரம் 690 அடி நீளம், 435 அடி அகலம் கொண்டது. ஆகும். உலகிலேயே மிக நீளமான பிரகாரம் என்ற பெருமையைப் பெற்ற இப்பிரகாரம் உலகப்பிரசித்தி பெற்றதாகும். முத்துவிஜயரகுநாத சேதுபதி அவர்களால் கி.பி. 1740-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பிரசித்தி பெற்ற மூன்றாம் பிரகாரம் அமைக்கும் பணி முத்துராமலிங்க சேதுபதி அவர்களால் 1770 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது. உள்புறத்தில் கிழக்கு மேற்காக 649 அடியும் வடக்கு தெற்காக 395 அடி நீளமும் கொண்டது. இந்த பிரகாரத்தில் ராமபிரானுக்கு கடலில் பாலம் அமைக்க உதவி செய்ய வந்த நளன், நீலன், கவன் ஆகிய மூன்று வானரர்களின் பெயரால் லிங்க சன்னதிகளும், பதஞ்சலி ஐக்கியமான நடராஜர் சன்னதியும் உள்ளன. ஆலயத்தின் உள்ளே உள்ள தீர்த்தங்கள் எல்லாம் கிணறுகளாகவே அமைந்துள்ளன. அக்னி தீர்த்தம் என்று கூறப்படும் இராமேஸ்வரம் சமுத்திரக் கரையில் முதலில் தீர்த்தமாடுதலைத் தொடங்கி பின்பு ஆலயத்தினுள் மற்ற தீர்த்தங்களில் நீராட வேண்டும். முற்காலத்தில் தனுஷ்கோடியில் நீராடி அதன் பின்பு ராமேஸ்வரம் வந்து தீர்த்தமாடும் வழக்கம் இருந்தது. தனுஷ்கோடி பல வருடங்களுக்கு முன்பு புயலில் அழிந்த பிறகு கோயில் முன்புள்ள அக்னி தீர்த்தக்கடலில் நீராடும் வழக்கம் ஏற்பட்டது. 22 தீர்த்தங்கள்

1 மகாலட்சுமி தீர்த்தம்
2 சாவித்திரி தீர்த்தம்
3 காயத்திரி தீர்த்தம்
4 சரஸ்வதி தீர்த்தம்
5 சங்கு தீர்த்தம்
6 சக்கர தீர்த்தம்
7 சேது மாதவர் தீர்த்தம்
8 நள தீர்த்தம்
9 நீல தீர்த்தம்
10 கவய தீர்த்தம்
11 கவாட்ச தீர்த்தம்
12 கெந்தமாதன தீர்த்தம்
13 பிரமஹத்தி விமோசன தீர்த்தம்
14 கங்கா தீர்த்தம்
15 யமுனா தீர்த்தம்
16 கயா தீர்த்தம்
17 சர்வ தீர்த்தம்
18 சிவ தீர்த்தம்
19 சாத்யாமமிர்த தீர்த்தம்
20 சூரிய தீர்த்தம்
21 சந்திர தீர்த்தம்
22 கோடி தீர்த்தம்.

பன்னிரண்டு ஜோதிர் லிங்கங்க தலங்களில் இத்தலமும் ஒன்று. விபீஷணன் ராமருக்கு உதவி செய்ததன் மூலம் ராவணனின் அழிவிற்கு அவனும் ஒரு காரணமாக இருந்தான். இந்த பாவம் நீங்க இங்கு லிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டான். அவனுக்கு காட்சி தந்த சிவன் அவனது பாவத்தை போக்கியதோடு ஜோதி ரூபமாக மாறி இந்த லிங்கத்தில் ஐக்கியமானார். இதுவே ஜோதிர்லிங்கம் ஆயிற்று. இந்த லிங்கம் சுவாமி சன்னதி பிரகாரத்தில் மேற்கு நோக்கி இருக்கிறது.

ராம அவதார காலத்தின் தொன்மை மிக்கது ராமேஸ்வரம். ராவணனை அழித்துவிட்டு சீதையையும் மீட்டுத் திரும்ப அழைத்துக் கொண்டு புறப்பட்டார் ராமர். ராமரின் வன வாசத்திற்கான பதினான்கு ஆண்டுகளின் நிறைவும் நெருங்கியிருந்தது. அயோத்தி திரும்ப எண்ணிய போது பிரம்மாவின் பேரனும் பேரரசனுமான ராவணனைக் கொன்றது பாவம் என்று அந்த பாவத்தைப் போக்க பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்கிக் கொள்வதற்காக சிவபூஜை செய்ய நினைத்தார் ராமர். இலங்கையிலிருந்து புறப்பட்டுக் கடலைத் தாண்டி ராமேஸ்வரம் நிலத்தைத் தொட்டதும் உடனடியாகச் சென்று இமயமலையிலிருந்து சிவலிங்கம் ஒன்றைக் கொண்டு வரும்படி அனுமனுக்கு ஆணையிட்டார். வேகமாக அனுமன் பறந்தார். அனுமன் திரும்புவதற்கு தாமதமானது. பூஜை வேளை நெருங்கிக் கொண்டிருக்க அனுமன் இன்னமும் வராத நிலையில் ராமர் அனுமனுக்காக காத்திருக்க கடற்கரை மணலிலேயே சீதாதேவி சிவலிங்கம் பிடித்தாள். அந்தச் சிவலிங்கத்திற்கு ராமர் பூஜையை நிறைவேற்றும் வேளையில் இன்னொரு சிவலிங்கத்தோடு அனுமனும் வந்தார். இப்போதும் ஆஞ்சநேயர் கொணர்ந்த சிவலிங்கத்திற்குப் பூஜைகள் நடந்த பின்னரே மூலவருக்குப் பூஜைகள் நடக்கின்றன. ராமேஸ்வரம் மிகவும் தொன்மையான தலம். ராமர் இங்கு சிவபூஜை செய்வதற்கு முன்னரே சிவசாந்நித்யம் பெற்ற தலம் இது. காரணம் இங்கு அம்பிகையின் அருள்வாசம் வெகு காலமாக நடந்து கொண்டிருக்கிறது. உருவமும் வடிவமும் கடந்த நிலையில் சிவனும் சக்தியும் இங்கு சஞ்சரித்திருந்தார்கள். எனவேதான், சிவபூஜைக்கு ஏற்ற இடம் என்று இதனை ராமர் தேர்ந்தெடுத்தார்.

சேற்றூர் சமஸ்தான வித்துவான் மு.ரா.அருணாச்சல கவிராயர் எழுதிய சேது பர்வதவர்த்தினியை பிள்ளைத் தமிழில் அம்பாள் காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வாரானை, அம்புலி, அம்மானை, நீராடல், ஊசல் என்று பத்து வித பருவங்களில் வர்ணித்துப் போற்றப்படுகிறார். பலபட்டடை சொக்கநாத கவிராயர் இத்தலத்தின் மேல் தேவ உலா பாடியுள்ளார். நிரம்பவழகிய தேசிகர் இத்தலத்தின் வரலாறை சேது புராணம் என்ற தலைப்பில் எழுதியுள்ளார். பதஞ்சலி முனிவர் முக்தியடைந்த தலம். திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் இத்தலத்தின் மீது தேவாரப் பாடல்கள் புனைந்து சிவபெருமானையும் அம்பிகையையும் போற்றிப் புகழ்ந்துள்ளனர்.

One thought on “சக்தி பீடம் 6. பர்வதவர்த்தினி – ராமேஸ்வரம்

  1. வடிவேல் சண்முகம் Reply

    சிவாயநம.
    🙏🙏🙏🙏🙏
    கடந்த இரண்டு வராங்களாக தாங்களது பதிவினை எதிர்பார்த்து இருந்தேன்.
    🙏🙏🙏🙏🙏
    மிக்க மகிழ்ச்சி ஐயா தங்களின் அலப்பரிய சிவதொண்டிற்கு.
    🙏🙏🙏🙏🙏

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.