சக்தி பீடம் 10. பகவதியம்மன் – கன்னியாகுமரி

சக்தி பீடத்தில் 10 ஆவது கோயில் கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் ஆகும். தந்திர சூடாமணி கூறும் அம்மனின் 51 சக்தி பீடங்களில் அம்பாளின் முதுகுப்பகுதி விழுந்த இடமாகும். குமரி சக்திபீடம் என்று அழைக்கப்படுகிறது. கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் இந்தியாவின் தென்முனையில் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்தியப் பெருங்கடல் அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடா எனும் முக்கடல்கள் கூடுமிடத்தில் அமைந்துள்ளது. அம்பாள் பகவதியம்மன் வேறுபெயர் துர்காதேவி மற்றும் தேவிகன்னியாகுமரி ஆகும். உற்சவ மூர்த்தி தியாகசெளந்தரி பாலசௌந்தரி. புனித தீர்த்தத்தின் பெயர் பாபநாச தீர்த்தம். தனது ஆயுதமாக ஜபமாலையை வைத்திருக்கிறாள். இக்கோவிலின் வழிபாடுகளையும் சடங்குகளையும் சங்கராச்சாரியார் அவர்கள் சங்கரா மடம் மூலமாக நடக்க வழிவகைச் செய்துள்ளார். முனிவர் பரசுராமரால் இக்கோவில் கட்டப்பட்டது. இக்கோயில் 2000 ஆண்டு பழமையானதாகும். பகவதியம்மன் கன்னியாகவும் இளமையுடன் குமரியாக உள்ளதால் இந்த ஊர் கன்னியாகுமரி என்று பெயர் பெற்றது.

மகாபாரதம் சங்க நூலான மணிமேகலை புறநானூறு நாராயண உபநிடதம் கிருஷ்ண யஜூர் வேதம் சம்ஹித வைஷ்ணவ வேதங்களில் அம்மன் வழிபாடு பற்றி கூறப்பட்டுள்ளது. 1892ல் இராமகிருஷ்ண பரஹம்சருக்கு தேவி ஆசி வழங்கியுள்ளார். சுவாமி பிரமானந்தா (1863-1922) நிர்மலானந்தா (1963-1938) இக்காலகட்டங்களில் பகவதியம்மனுக்கு பணிவிடை செய்துள்ளனர். 1935 ஆம் ஆண்டுகளில் கேரள மாநிலத்திலிருந்து பல பெண்களை வரவழைத்து பகவதியம்மனுக்கு பூசை செய்ய அறிவுறுத்தப்பட்டார்கள். இவ்வாறு வந்த பெண்களில் ஏழு பெண்கள் குழு மூலம் சாரதா மடம் ஆரம்பிக்கப்பட்டது. கேரளாவில் பாலக்காடு ஒட்டப்பாளையம் என்ற இடங்களிலும் பின்னர் ஆரம்பிக்கப்பட்டது. 3000 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட இக்கோயில் வலுவான கல் சுவர்களால் சூழப்பட்டுள்ளது. கோயில் வளாகத்தில் விநாயகர் ஐயப்பன் பால சுந்தரி மற்றும் விஜய சுந்தரி சூரியன் ஆகியோருக்கு சன்னதிகள் உள்ளன. கோயிலின் பிரதான நுழைவு வடக்கு வாசல் வழியாகும். கோயிலின் கிழக்கு வாசல் பெரும்பாலும் மூடப்பட்டு விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படும்.

புரட்டாசி மாதம் நவராத்திரி திருவிழா 10 நாள் மற்றும் வைகாசி விசாகம் 10 நாளும் திருவிழா நடைபெறும். இத்திருவிழா நாட்களில் காலையிலும் இரவிலும் ஊர் தெரு வழியாகத் தேவியின் திருவுருவம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். ஒன்பதாவது நாள் தேர்த்திருவிழாவும் பத்தாவது நாள் தெப்பத்திருவிழாவுமாகும். தெப்பத் திருவிழாவன்று நன்றாக அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் தேவியின் திருவுருவம் நீரின் மேல் வலமாக மிதப்பில் கொண்டு செல்லப்படும். எழுத்தாளர் பெரிபிளசு 1060 – 1080 பகவதியம்மன் பற்றியும் பிரம்மச்சர்யம் பற்றியும் அன்னையின் வழிபாடு பற்றியும் தனது நூலில் குறிப்பிடுகிறார்.

கன்னியாகுமரி பகவதி அன்னையின் ஒளிமிக்க மூக்குத்தி யோகசக்தியின் வெளிப்பாடு என்பதால் பக்தர்களின் வழிபாட்டுக்கு உரியதாக உள்ளது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் கன்னியாகுமரி இருந்த காலகட்டம் அது. மன்னராட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது திருவிதாங்கூர் பகுதியில் வசித்த ஒரு பனையேறும் தொழிலாளிக்கு ஏற்கனவே ஐந்து பெண் குழந்தைகள் பிறந்திருந்தன. ஆறாவதாக பனை தொழிலாளியின் மனைவி கருவுற்றிருந்தார். அந்த பிரசவத்திலும் பெண் குழந்தை பிறந்தது. அதை அவரது மூத்த மகள் தன் தந்தையிடம் வந்து சொன்னாள். ஆண் குழந்தை பிறக்கும் என்று நினைத்தவருக்கு பெருத்த ஏமாற்றம். மீண்டும் மனைவி கருவுற்றிருந்தார். அவரது மனம் இப்போது அடுத்த முறை பெண் குழந்தை பிறந்ததாக தன் மகள் வந்து என்னிடம் சொன்னால் மரத்தில் இருந்து இரண்டு கைகளையும் எடுத்து விட்டு கீழே விழுந்து தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தார்.

தொழிலாளியின் மனைவிக்கு மீண்டும் பெண் பிள்ளையே பிறந்தது. அந்த விஷயத்தை அவரது மூத்த மகள் அவரிடம் சொல்ல வந்தபோது அந்த தொழிலாளி மரத்தை விட்டு கீழே இறங்கியிருந்தார். அதனால் உடனடியாக தற்கொலை செய்து கொள்வது இயலாமல் போனது. வாழ்க்கை வெறுத்துப்போன தொழிலாளிக்கு அருகில் இருந்த புற்று தென்பட்டது. அதற்குள் கையை நுழைந்தார். புற்றுக்குள் பாம்பு ஏதாவது இருந்து கடித்தால் இறந்து போய்விடலாம் என்பது அவரது எண்ணம். புற்றுக்குள் கையை நுழைத்த தொழிலாளியின் கையில் ஏதோ ஒன்று சுடுவது போன்று உணர்ந்தார். சட்டென்று கையை எடுத்தவரின் கையோடு மாணிக்கக் கல் ஒன்று வந்தது. அதைக் கொண்டு போய் மன்னனிடம் கொடுத்தார் அந்த பனை தொழிலாளி. அதைப் பெற்றுக்கொண்ட மன்னன் அவரது குதிரையை அவிழ்த்து விட்டு அது எவ்வளவு தூரம் ஓடுகிறதோ அவ்வளவு இடத்தையும் அந்த தொழிலாளியின் பெயரில் எழுதி வைக்கச் சொன்னார். மகிழ்ச்சியோடு வீடு திரும்பினார் தொழிலாளி.

அன்று இரவு திருவிதாங்கூர் மன்னனின் கனவில் தோன்றிய சிறு பெண் இன்று காலை பனை தொழிலாளி உன்னிடம் ஒரு மாணிக்கக் கல் கொண்டு வந்து கொடுத்தாரே. அதில் எனக்கு ஒரு மூக்குத்தி செய்து தரக்கூடாதா? என்று கேட்டாள். காலையில் எழுந்ததும் நம்பூதிரிகளை அழைத்து பிரசன்னம் பார்க்கச் சொன்னார் மன்னன். பிரசன்னம் பார்த்ததில் கனவில் தோன்றிய சிறுமி கன்னியாகுமரி பகவதி அம்மன் என்பது தெரியவந்தது. மன்னன் உடனடியாக தன்னிடம் இருந்த மாணிக்கக் கல்லில் ஒரு மூக்குத்தியை செய்து அதை தேவிக்கு சமர்ப்பித்தான். அந்த மூக்குத்தியைத்தான் இன்றளவும் பகவதியம்மன் அணிந்திருக்கிறாள். அந்த மாணிக்கக் கல்லின் ஒளி பன்மடங்கு அதிகமாக இருந்த காரணத்தால் அன்னையின் மூக்குத்தி வெளிச்சத்தை கலங்கரை விளக்கம் என்று நினைத்த கப்பலோட்டிகள் பலரும் விபத்துக்களை சந்திக்க நேர்ந்தது. எனவே ஆலயத்தின் கிழக்கு வாசல் அடைக்கப்பட்டு தெற்கு வாசல் வழியாக சென்று தேவியை தரிசிக்கும் நடைமுறை பழக்கத்திற்கு வந்தது.

கன்னிப் பெண் ஒருத்தியைத் தவிர வேறு எவராலும் தனக்கு மரணம் நிகழக்கூடாது என்ற வரத்தைப் பிரம்ம தேவரிடம் இருந்து பெற்றவன் பாணாசுரன் என்னும் கொடிய அசுரன். அவன் பெற்ற அந்த வரத்தை வைத்துக் கொண்டு தேவர்களையும் முனிவர்களையும் கடுமையாக கொடுமைப் படுத்தினான். தேவர்களும் முனிவர்களும் தங்கள் துன்பங்களை துடைத்தருளும்படி மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிட்டனர். அவரோ பாணாசுரன் கன்னிப் பெண்ணால் தான் தனக்கு மரணம் நிகழ வேண்டும் என்று வரம் பெற்றுள்ளான். ஆகையால் உங்களுக்கு அந்த சிவனின் அருகில் அமர்ந்துள்ள பார்வதியால்தான் உதவ முடியும் என்று வழி கூறினார். இதனால் அனைவரும் அன்னை பார்வதியை வேண்டி யாகம் செய்தனர். யாகத்தின் நிறைவில் ரிஷப வாகனத்தில் சிவபெருமானும் பார்வதி தேவியும் காட்சியளித்தனர். அம்மையப்பன் இருவரையும் கண்டதும் ஆனந்தக் கூத்தாடினர் தேவர்களும் ரிஷி முனிவர்களும். அவர்களைப் பார்த்து அன்பர்களே தங்களின் குறையை நான் அறிவேன். உங்கள் துயரங்கள் விலகும் காலம் வந்து விட்டது. எனது தேவியானவள் பரத கண்டத்தின் தென்கோடியில் குமரியில் ஒரு கன்னியாக வடிவெடுத்து பாணாசுரனை வதம் செய்து உங்களுக்கு வாழ்வளிப்பாள் என்று ஆசி கூறினார் சிவபெருமான்.

அன்று முதல் அவள் கன்னியாகுமரிக்கு வந்து கடுந்தவம் புரியலானாள். தேவி கடுந்தவமிருக்கும் போது ஒரு நாள் பாணாசுரன் தேவியின் அழகைப் பற்றிக் கேள்விப்பட்டு அவளை நேரில் காண வந்தான். தேவியைக் கண்டதும் அவளை மணந்து கொள்ள வேண்டினான். ஆனால் தேவி மறுத்து விடவே அசுரன் அவளைத் தன் உடல் வலிமையால் கவர்ந்து செல்ல எண்ணித் தன் உடைவாளை உருவினான். இத்தகைய தருணத்தை எதிர்நோக்கியிருந்த தேவியும் தன் போர்வாளை வீசினாள். நெடுநாட்கள் இருவரும் கடும் போர் புரிந்தனர். இறுதியில் தேவி தன் சக்கராயுதத்தால் பாணாசுரனைக் கொன்று அழித்தாள். தேவர்கள் அனைவரும் தேவிக்கு நன்றி செலுத்தினர். நாரதரும் பரசுராமரும் தேவியை கலியுகத்தின் இறுதி வரை பூமியில் இருக்குமாறு வேண்டினார்கள். இவர்களின் பிரார்த்தனையை தேவி ஏற்றுக் கொண்டாள். பரசுராமர் சமுத்திரத்தில் இந்தக் கோயிலைக் கட்டி தேவியின் சிலையை நிறுவினார். அன்று முதல் கன்னியாகுமாரியில் கன்னிப் பெண்ணாக பகவதி அம்மன் மக்களின் குறைகளை நீக்கி கொண்டிருக்கின்றாள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.