சக்தி பீடம் 1. மூகாம்பிகை கோயில்

இந்தியாவின் தென்பகுதியில் உள்ள கர்நாடக மாநிலத்தில் உடுப்பி மாவட்டத்தின் கொல்லூரில் இக்கோயில் அமைந்துள்ளது. கோல மகரிஷி வழிபட்டதால் இத்தலம் கொல்லூர் என பெயர் பெற்றது. புராண பெயர் மூகாம்பாபுரி மற்றும் கோலாபுரம். 51 சக்தி பீடங்களில் இது அர்த்தநாரி சக்தி பீடம் ஆகும். இக்கோவில் 51 சக்தி பீடங்களில் தேவியின் காதுகள் விழுந்த பீடமாகப் போற்றப்படுகிறது. கோடாச்சத்ரி மலைக் குன்றுகளின் அடிவாரத்திலும் சௌபர்னிகா நதியின் தென்புறத்திலும் இக்கோயில் அமைந்துள்ளது. இங்கு மூகாம்பிகை தேவி முதன்மை தெய்வமாக வழிபடப்படுகிறார். கோயில் அமைந்துள்ள நிலப்பகுதி புராண காலத்தில் துறவியான பரசுராமரால் உருவாக்கப்பட்டது. கோயில் முழுவதும் கேரளா ஆலய கட்டுமான பாணியில் உள்ளது.

கொல்லூரிலிருந்து 25 கிமீ தொலைவில் குடஜாத்ரி மலை இருக்கிறது. அனுமன் சஞ்சீவி மலையை தூக்கி சென்ற போது அதிலிருந்து விழுந்த துண்டு பகுதி குடஜாத்ரி மலையாகும். இதில் 64 வகை மூலிகைகளும் 64 தீர்த்தங்களும் உள்ளன. இந்த மலையில் கணபதி குகை சர்வஞபீடம் சித்திரமூலை குகை உள்ளன. இந்த குகையில் கோலமகரிஷி தவம் செய்திருக்கிறார். இவரின் தேவைக்காக அம்பாள் ஒரு நீர் வீழ்ச்சியை இங்கு தோற்றுவித்தார். குடஜாத்ரி மலையிலிருந்து 64 நீர்வீழ்ச்சிகள் தனித்தனியாக உருவாகி பின்னர் அவை ஒருங்கிணைந்து சௌபர்ணிகா நதியாக உருவெடுத்துப் பாய்கிறது. சுபர்ணா என்ற கழுகு இந்த நதிக்கரையில் தவம் செய்து இறுதியில் முக்தி அடைந்தது. எனவே இந்த நதிக்கு சௌபர்ணிகா என்று பெயர் வந்தது. கிருதயுகத்தில் இக்கோயிலுக்கு மகாராண்யபுரம் என்றும் பெயர். இக்காலத்தில் இதன் கரையில் ஏராளமான முனிவர்கள் தவம் இருந்தனர். இந்தப் பகுதிக்குப் பாத யாத்திரையாக வந்தார் கோலன் என்கிற மகரிஷி. இதன் அமைதியான சூழல் அவருக்குப் பிடித்துப் போக அங்கேயே ஆசிரமம் அமைத்துத் தங்கி இறைவனை நோக்கிக் கடுந் தவம் இருந்தார். கோல மகரிஷி தங்கியதால் இந்தப் பகுதி கொல்லாபுரம் என்று அழைக்கப்பட்டு பின்னர் கொல்லூர் ஆனது.

கோல மகரிஷி இங்கு தவம் செய்து கொண்டிருந்த போது ​​அவரை ஒரு அரக்கன் தொடர்ந்து தொந்தரவு செய்து வந்தான். அரக்கனின் தொந்தரவுகளை பொருட்படுத்தாத முனிவர் அரக்கனால் பாதிக்கப்படாமல் அமைதியுடன் இருந்தார். அரக்கனால் முனிவரை ஒன்றும் செய்ய முடியவில்லை. முனிவரை மேலும் துன்புறுத்த இந்த அரக்கனும் தன்னை யாராலும் வெல்ல முடியாத சக்திகளைப் பெற சிவபெருமானை நோக்கி கடுமையான தவமிருந்தான். இந்த அரக்கனின் தீய மனதை அறிந்த சக்திதேவி சிவபெருமான் அரக்கன் முன் தோன்றிய போது அரக்கனை மூக்கனாக (ஊமையாக) ஆக்கினாள். அதனால் அரக்கனால் வரம் எதுவும் கேட்க முடியவில்லை. இதனால் கோபமடைந்த அரக்கன் கோல மகரிஷியை தவம் செய்ய முடியாதபடி மேலும் துன்புறுத்தத் தொடங்கினான். கோல மகரிஷி சக்திதேவியை எண்ணி பிரார்த்தனை செய்தார். சக்திதேவி அரக்கனான ஊமை மூகாசுரனுடன் போரிட்டு வென்றார். மூகாசுரன் அம்பிகையிடம் சரணடைந்தான். அவனது வேண்டுகோளுக்கு இணங்க இத்தலத்தில் அவனது பெயரையே தாங்கி மூகாம்பிகை என்ற பெயரில் அம்பிகை தங்கினாள்.

கோல மகரிஷியின் தவத்தின் பலனால் சிவபெருமான் அவர் முன் தோன்றி என்ன வரம் வேண்டும் என்று என்றார். இறைவன் தன் துணையுடன் என்றென்றும் இங்கே வீற்றிருந்து மக்களுக்கு அருள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். சிவபெருமான் மனம் மகிழ்ந்து இதோ இந்தப் பாறையில் உனக்காக ஒரு லிங்கம் அமைக்கிறேன். இதை நீ தினமும் பூஜை செய்து வா என்று அருளினார். சிவனருளால் அங்கு ஓர் அழகிய லிங்கம் தோன்றியது. அதைக் கண்ட கோல மகரிஷி சிவபெருமானிடம் சக்தி இல்லாத சிவனை நாங்கள் எப்படி வழிபடுவது? என்று கேட்டார். அதற்கு சிவபெருமான் இந்த லிங்கத்தின் மத்தியில் உள்ள சுவர்ண ரேகையைப் பார். இதன் இடப் பாகத்தில் பார்வதியும் அறுபத்து நான்கு கலைகளுக்கும் தாயான சரஸ்வதியும் செல்வங்களை அள்ளித் தரும் லட்சுமி ஆகிய மூவரும் அரூபமாக இருப்பார்கள். வலப்புறம் பிரம்மா விஷ்ணு ஆகியோருடன் நானும் இருப்பேன் என்று கூறி மறைந்தார். சிவபெருமான் அருளியவாறு சுவர்ணரேகை ஜொலிக்கும் அந்த ஜோதி லிங்கத்தை கோல மகரிஷி உட்பட மற்ற முனிவர் களும் பூஜித்து வந்தார்கள்.

பாரத தேசம் முழுதும் புனித யாத்திரை மேற்கொண்ட ஆதிசங்கரர் கொல்லூருக்கு வந்தபோது மக்கள் அவரிடம் சுவாமி தங்க ரேகை மின்னும் சிவலிங்கத்தில் அம்பாள் அரூப வடிவில் இருக்கிறாள். ஆனால் மூகாம்பிகை அன்னையின் முகம் எப்படி இருக்கும் என்று எங்களுக்குத் தெரியவில்லையே என்று முறையிட்டனர். ஆதிசங்கரர் ஆழ்ந்த தியானத்தில் அமர்ந்தார். அப்போது அம்பாள் அவருக்கு காட்சி கொடுத்தாள். பத்மாசனத்தில் வீற்று இரு கரங்களில் சங்கு சக்கரம் மற்ற இரு கரங்களில் ஒரு கரம் பாதங்களில் சரணடையத் தூண்ட மற்றது வரம் அருளி வாழ்த்தும் கோலத்தில் அன்னை தோற்றமளித்தாள். தன் முன் தோன்றிய அம்பாளின் உருவத்தை தேர்ந்த ஸ்தபதியிடம் விவரித்து விக்கிரகம் செய்யப் பணித்தார் ஆதி சங்கரர். அதன்படி அம்பாளின் அழகிய உருவம் பிரமிப்பூட்டும்படி உருவானது. சுவர்ண ரேகை லிங்கத்தின் பின்னால் மூகாம்பிகை திருவுருவச் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதன் அடியில் ஆதிசங்கரரால் ஸ்ரீசக்ரம் ஒன்றும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அந்தச் சக்கரத்தில் 64 கோடி தேவதைகள் இருப்பதாக ஆதிசங்கரர் அருளியிருக்கிறார். கோயிலின் பூஜை முறைகள் அனைத்தையும் ஆதிசங்கரரே வகுத்து அருளினார். இன்று வரை அவை சற்றும் மாறாமல் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. மூகாம்பிகை ஆதிசங்கரருக்குப் காட்சி கொடுத்த பிறகு அவர் இயற்றியதுதான் சௌந்தர்ய லஹரி.

கோயிலின் மூலஸ்தானத்தில் மூகாம்பிகை தனது இரு கரங்களில் சங்கும் சக்கரமும் ஏந்திக் கொண்டு காட்சி அளிக்கிறாள். மேலும் இரண்டு கரங்களில் ஒரு கையில் அபயகரமும் மற்றொரு கையை தன் திருவடியை சுட்டிக்காட்டும் படி காட்டிக் கொண்டு பத்மாசனத்தில் பார்வதி மகாலட்சுமி சரஸ்வதி ஆகிய முத்தேவியரின் வடிவில் அமர்ந்தபடி கருவறையில் வீற்றுள்ளாள். ஐம்பொன்னால் ஆன காளி சரஸ்வதி சிலைகள் மூகாம்பிகையின் இருபுறமும் உள்ளார்கள். அன்னை அவ்வப் பொழுது நவமணியால் அலங்கரிக்கப்படுகிறார். மார்பின் இடையில் மரகதம் பதித்த பொற்சரம் அலங்கரிக்கின்றது. மூகாம்பிகைக்கு நெற்றி கண்கள் மூக்கு காது ஆகியவற்றில் விலை உயர்ந்த ரத்தினங்களால் செய்யப்பட்ட அணிகலன்கள் அணிவிக்கப்பட்டு வருகிறது. விசேஷ காலங்களில் அன்னையின் திருமார்பில் அணிவிக்கப்படும் பச்சைக்கல் அட்டிகை சுமார் 600 ஆண்டுகளுக்கு முன் கெதளி ராஜ வம்சத்தை சேர்ந்த அரசன் ஒருவன் தேவிக்கு காணிக்கையாக அளித்த ஒன்றாகும். இதன் விலை மதிப்பிட முடியாதது ஆகும். இத்திருவுருவம் ஆதி சங்கரரால் பஞ்சலோகத்தில் தனக்கு கிடைத்த காட்சிப்படி அமைக்கப் பெற்றதாகும். அதற்கு முன்னர் இங்குச் சிவலிங்கம் ஸ்ரீ சக்கரமும் மட்டுமே இருந்து வந்தன. பரமேசுவரர் தனது கால் விரலின் உதவியால் ஸ்ரீசக்கரத்தை வரைந்தார் என்று புராண செவி வழி செய்திகள் உள்ளது. மூகாம்பிகையின் முன் தரையோடு தரையாக சிவலிங்கம் உள்ளது. சுயம்பாகத் தோன்றிய அந்த சிவலிங்கம் பொற் கோடால் இரு பிளவுபட்டாற் போன்றும் இடப்பாகம் பெரிதாகவும் அமையப் பெற்றுள்ளார். உச்சிப் பொழுதின் போது கண்ணாடியின் மூலமாக இந்த லிங்கத்தின் மீது பிரதிபலிக்கச் செய்தால் அப்பொற்கோட்டைப் பார்க்கலாம். அசையாத சக்தியாக சிவமும் அசையும் சக்தியாக உடையவளும் இச் சிவலிங்கத்தில் ஒன்றி உள்ளனர். சுயம்பு லிங்கத்திற்கும் விசேஷ பூஜை காலங்களில் அணிவிப்பதற்கு என்றே தனியாக அணிவிக்கப்பட ஆபரணங்கள் உள்ளது.

கோயில் கருவறையில் மூகாம்பிகை தேவியின் மூல விக்கிரகம் பக்கத்தில் சிறிய இரண்டு தேவிகளின் விக்கிரங்கள் உள்ளது. இதில் ஒரு தேவியின் திருவுருவத்தை தினத்திற்கு மூன்று வேளை அதாவது காலை உச்சி வேளை இரவு ஆகிய மூன்று நேரங்களிலும் ஆலயத்தின் உள்ளேயுள்ள பிரகாரத்தைச் சுற்றி திருவுலா வருவது வழக்கம். இதற்கு சீவேலி என்று பெயர். உட்பிரகாரத்தில் சீவேலி வருவது போன்று குறிப்பிட்ட விசேஷ தினங்களில் அம்பாள் ஆலயத்தைச் சுற்றியுள்ள முக்கிய தெருக்களில் நகர்வலம் வருவதும் உண்டு. உட்பிரகாரத்தில் பலி பீடங்களுக்கு நைவேத்யம் படையலைத் தலைமை பூசாரி படைத்தவாறு அதற்குரிய பூஜைகளைச் செய்தவாறு செல்ல அதன் பின்னால் அம்மன் கொலுவிருக்கும் உட்பிரகாரத்திலேயே சீவேலி நடைபெறும். உட்பிரகாரத்தின் சீவேலி முடிந்ததும் வெளி பிரகாரத்தில் தேவியைத் தலையில் சுமந்தவாறு ஒரு முறையும் நீண்ட பல்லக்கில் ஒரு முறையும் பின்னர் வெள்ளி தகடு வேய்ந்த சிறிய பல்லக்கில் ஒரு முறையும் தேவி சீவேலியாக 3 தடவை வலம் வருவாள். காலை இரவு ஆகிய இரு நேரங்களில் மிக பெரிய மரத்தால் ஆன ரதத்தில் அம்மனை அமர்த்தி பக்தர்கள் வெளி பிரகாரத்தில் ஊர்வலமாக அழைத்து வருவார்கள். சீவேலி சமயத்தில் நகாரா என்ற இரட்டை சிறிய முரசும் நமது ஊரில் உள்ள நாகஸ்வரம் வகையை சார்ந்த சற்றே பெரிய செனாய் என்ற இசைக்கருவியும் வாசிக்கப்படும். உடன் ஒத்து என்ற ஸ்ருதி வாத்தியக் கருவியும் இசைக்கப்படும்.

கோயிலில் பஞ்சமுக கணபதி பார்த்தேஸ்வரர் பிராணலிங்கேஸ்வரர் சந்திரமவுலீஸ்வரர் நஞ்சுண்டேஸ்வரர் துளசி கிருஷ்ணன் பெருமாள் அனுமன் சுப்ரமணியர் வீரபத்திரர் சன்னதியும் நாகக் கடவுள்களுக்கு உபசன்னதிகளும் உள்ளன. தீர்த்தம் அக்னி தீர்த்தம் காசிதீர்த்தம் சுக்ளதீர்த்தம் மதுதீர்த்தம் கோவிந்ததீர்த்தம் அகஸ்தியர்தீர்த்தம் அர்ச்சனைதீர்த்தம் குண்டுதீர்த்தம். இக்கோவிலின் கருவறை விமானம் முழுவதும் தங்க தகடுகளால் வேயப்பட்டதாகும். இக்கோயில் அம்பாளின் கொடிக் கம்பத்தை ஒட்டி விளக்குத்தூண் இருக்கிறது. ஒரே கல்லினால் ஆன அழகிய தூண் இது. இதில் ஆயிரம் விளக்குகள் ஏற்றலாம். அன்னையின் கருவறை எதிரில் பணிவுடன் அமர்ந்த நிலையில் அம்மனின் சிம்ம வாகனம் உள்ளது. கருவறையின் இருபுறமும் தியான மண்டபம் உள்ளது. பக்தர்கள் அங்கு அமர்ந்து தியானம் செய்யலாம். முன் வாயிலைக் கடந்து மீண்டும் வெளிப்பிரகாரம் சுற்றினால் ஆலயத்தில் தனிச் சன்னதியில் முருகப்பெருமான் மேற்குப் பார்த்து அருள் பாலிக்கிறார். முருகன் சன்னதிக்கு அடுத்திருப்பது சரஸ்வதி மண்டபம். இங்குதான் ஆதி சங்கரர் மூகாம்பிகையை நோக்கி மனமுருகி இங்கு அமர்ந்து சவுந்தர்ய லஹரியை எழுதி அரங்கேற்றினார். இந்த சரஸ்வதி மண்டபம் கலா மண்டபம் என்றும் அழைக்கப்படுகிறது. அன்னையின் சன்னதிக்கு நேர் பின்புறம் அன்று ஆதிசங்கரர் தியானம் செய்ய அமர்ந்த இடம் இன்றும் சங்கரர் பீடம் என்று போற்றிப் பாதுகாக்கப்படுகிறது. நவராத்திரி சமயத்தில் ஆதிசங்கரரின் சிலைக்கு சிறப்புப் பூஜைகள் செய்யப்படுகின்றன.

கோயில் மேற்கு கோபுரவாசல் அருகில் வடமேற்கு மூலையில் கிணறு உள்ளது. அதற்கு முன் ஆஞ்சநேயர் சன்னதி. இந்த தனிச்சன்னிதி வாயு திசையில் அமைந்துள்ளது. அதனை அடுத்து உள்ளது விஷ்ணு சன்னதி. கேரள பக்தர்கள் இந்த விஷ்ணுவை குருவாயூரப்பன் என்றே வணங்குகின்றனர். வடகிழக்கு மூலையில் துளசி மாடம். அதனை அடுத்து அம்பாளின் பரிவார தேவதைக்கு எல்லாம் தளபதியான வீரபத்திரர் சன்னதி அமைந்துள்ளது. வீரபத்திரர் இந்த தலத்திற்கு ரட்சா அதிகாரி. அன்னைக்குச் செய்யப்படும் அனைத்து பூஜைகளும் இவருக்கும் உண்டு. இவரின் எதிரே ஆஞ்சநேயர் இருக்கிறார்.

ஆதிசங்கரர் அங்கிருந்த மேடையில் அமர்ந்து தியானம் செய்து மூகாம்பிகையை சரஸ்வதியாக பாவித்து வணங்கி கலா ரோகணம் பாடி அருள் பெற்றார். ஒரு முறை ஆதிசங்கரர் இங்கு தவம் புரிந்து எழ முயன்றபோது அவரால் முடியவில்லை. அவருக்காக அம்பாளே கஷாயம் தயாரித்து சங்கரருக்கு கொடுத்தார். அன்றிலிருந்து இரவு நேர பூஜைக்கு பின் கஷாயம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. மூகாம்பிமை அம்மனுக்கு அபிஷேகம் கிடையாது. அலங்காரம் புஷ்பாஞ்சலி ஆராதனை மட்டுமே நடக்கும். லிங்கத்திற்கு மட்டுமே அபிஷேகம் நடக்கும். இங்கு ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த கரம் இருக்கிறது. பொதுவாக கிரகண நேரத்தில் கோயில்கள் நடை சாத்தப்படும். ஆனால் இங்கு கிரகண நேரத்திலும் தொடர்ந்து பூஜை நடக்கும். இங்கு பூஜை செய்வதற்கு பிரம்மச்சாரிகள் அனுமதிக்கப் படுவதில்லை.

மூகாம்பிகைக்கு வருடத்தில் நான்கு திருவிழாக்கள் மிகவும் சிறப்பாகவும் விமரிசையாகவும் நடத்தப்படுகின்றன. அவை ஆனி மாதத்தில் வரும் அன்னையின் ஜெயந்தி விழா. ஆடி மாதத்தில் வரும் அன்னை மகாலட்சுமியின் ஆராதனை விழா. புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரி விழா. மாசி மாதத்தில் வரும் மகா தேர்த்திருவிழா ஆகும். சரஸ்வதி பூஜையன்று மூகாம்பிகை சன்னதியில் உள்ள சரஸ்வதி தேவி பக்தர்களின் தரிசனத்திற்காக வெளியே பவனி வருகிறாள். சரஸ்வதி பூஜையன்று சரஸ்வதி சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. கிழக்கு கோபுர வாயிலை 1996 ஆம் ஆண்டு புனர் நிர்மானம் செய்து பழைய அமைப்பு மாறாமல் கருங்கற்களால் கட்டியுள்ளார்கள். தேவியின் வலக் கையில் உயர்த்திப் பிடித்திருக்கும் வீர வாள் முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் அளித்தது. அந்த வாள் ஒரு கிலோ தங்கத்தில் செய்யப்பட்டு வெள்ளியால் அமைக்கப்பட்ட உறையுடன் கூடியது. இக்கோயிலின் மகிமை பற்றி கந்த புராணத்தில் உள்ளது. அங்குள்ள சுயம்பு லிங்கத்தில் சக்கர வடிவத்தில் பரப்பிரம்ம சொரூபியான பராசக்தி சகல தேவதைகளுடன் எழுந்தருளியுள்ளதாக சிவபெருமான் முருகனுக்கு விளக்குவதாகவும் அதைக் கேட்ட முருகன் அவர்களை வழிபட அத்தலத்திற்கு வந்ததாகவும் கந்த புராணத்தில் உள்ளது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.