சக்தி பீடம் 3. மீனாட்சி அம்மன் மதுரை

சக்தி பீடத்தில் 3 ஆவது கோயில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலாகும். அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது ராஜமாதங்கி சியாமள சக்தி பீடம் ஆகும். அன்னை மீனாட்சி மூலஸ்தானத்தில் நின்ற கோலத்தில் இடைநெளித்து கையில் கிளி ஏந்தி அழகே உருவாக மரகத மேனியாக அருள்பாலிக்கிறார். இவளுக்கு இடப்பக்கத்தில் சுந்தரேஸ்வரர் சுயம்புலிங்கமாக வீற்றிருக்கிறார். சக்தி பீடங்களில் ஒன்றான இத்தலம் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதால் அம்மனின் இடப்பாகத்தில் இறைவன் அருள்புரிகிறார். போகத்தையும் முக்தியையும் வேண்டுபவர்களுக்கு சித்திதரும் தலம் என்று இத்திருத்தலத்தை திருவிளையாடல் புராணம் போற்றியிருக்கிறது. வேறு நூலின் குறிப்புப்படி சக்தி பீடத்தில் இவை மந்த்ரிணீ பீடம் ஆகும். 18 சித்தர்களின்  பீடத்தில் இதுவும் ஒன்று. தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் 191 ஆவது தலம் ஆகும். புராணபெயர் திருஆலவாய், கூடல், நான்மாடக்கூடல், கடம்பவனம். தலவிருட்சம் கடம்பமரம். இத்தலத்தினை பூலோக கைலாசம் என்றும் தலத்தின் பெயரை படித்தாலோ கேட்டாலோ முக்தி கிடைக்கும் என்பது சான்றோர் வாக்கு.

பாண்டிய நாட்டை மலயத்துவசன் அரசன் சிறப்புற ஆட்சி செய்து வந்தான். அவன் சூரசேனன் என்னும் சோழ அரசரின் மகளான காஞ்சன மாலையை திருணம் செய்தான். ஆனால் இத்தம்பதியருக்கு நீண்ட நாட்கள் குழந்தைப் பேறு வாய்க்கவில்லை. இதனால் மலயத்துவசன் அசுவமேத யாகம் செய்யத் தொடங்கினான். தொண்ணூற்று ஒன்பது யாகங்கள் முடிந்த நிலையில் இந்திரன் இப்பாண்டியன் நூறு யாகங்களை முடித்தால் நொடிப்பொழுதில் இந்திரப்பதவி அவனுக்கு போய்விடும் என்று எண்ணி மலயத்துவசன் முன் தோன்றினான். பாண்டியனே நீ நற்புத்திரப் பேற்றினை விரும்பினாய். ஆதலால் உலக இன்பத்தை அளிக்கக் கூடியதும் நற்புத்திர பேற்றினை வழங்கக் கூடிய புத்திர காமேஷ்டி செய் என்று கூறி தன்னுலகத்தை அடைந்தான்.

பாண்டியனும் இந்திரனின் வழிகாட்டுதலின்படி புத்திர காமேஷ்டி யாகத்தை தொடங்கினான். யாகத்தின் பலனாக தலையின் இடது புறத்தில் கொண்டையுடன் கையில் கிளி வைத்துக் கொண்டு காலில் சதைங்கை அணிந்து முகம் நிறைய புன்னகையைச் சிந்தியவாறே மூன்று வயதினை ஒத்த சிறுமியாக உலக நாயகியான உமையம்மை மூன்று தனங்களுடன் தோன்றினார். அக்குழந்தையின் கண்கள் மீன்களைப் போன்று நீண்டு அழகாக இருந்தன. ஆகையால் அங்கயற்கண்ணி என்ற பெயரில் அழைக்கப்பட்டாள். அவள் தன் சின்னஞ் சிறு கால்களால் நடை நடந்து காஞ்சன மாலையின் மடியில் போய் அமர்ந்தாள். தன்னுடைய சின்னச்சிறிய செவ்விதழ்களால் காஞ்சனமாலையை அம்மா என்று மழலை மொழியில் அழைத்தாள். அதனைக் கண்டதும் காஞ்சன மாலை குழந்தை வடிவில் இருந்த உலக அன்னையை வாரி எடுத்து அணைத்து முத்தமிட்டு மகிழ்ந்தாள்.

குழந்தையைக் கண்ட மலயத்துவசன் மனதில் மகிழ்ச்சி கொண்டான். இருப்பினும் கவலை ஒன்று அவனை வாட்டியது. புத்திர பேற்றினை விரும்பி புத்திர காமேஷ்டி செய்த தனக்கு தான் விரும்பியபடி ஆண் குழந்தை தோன்றாமல் மூன்று தனங்களுடன் கூடிய பெண் குழந்தை தோன்றியதுதான் அவனுடைய கவலை ஆகும். மலயத்துவசன் தன் மனைவி மற்றும் குழந்தையுடன் சோமசுந்தரக் கடவுளை வழிபட்டான். தன்னுடைய மனக் குறையை இறைவனிடம் விண்ணப்பித்தான். இறைவனும் அவ்வரசனுக்கு மட்டும் கேட்குமாறு திருவாக்கு ஒன்றினைக் கூறினார். பாண்டியனே கலங்காதே. உன்னுடைய அன்பு புதல்விக்கு தடாதகை எனப் பெயரிட்டு எல்லா கலைகளையும் கற்பித்து அவளுக்கு ராணியாக முடிசூட்டு. அவளுக்கு ஏற்ற கணவனை அவள் காணும் போது அவளுடைய ஒரு தனம் தானே மறைந்து விடும். எனவே மனம் வருத்தம் கொள்ள வேண்டாம் என்று சொக்கநாதர் கூறினார். இறைவனின் திருவாக்கினை கேட்ட மலயத்துவசன் கவலை நீங்கி மனத்தெளிவு பெற்றான்.

மீனாட்சி அம்மையின் திருவதாரம் நிகழ்ந்து விட்டது என்று அகத்தியர் மற்ற முனிவர்களுக்கு கூறினார். அம்முனிவர்கள் அகத்தியரிடம் மலையரசனும் பல நாட்கள் வருந்தி தவம் இயற்றியே உலக அன்னையை தம் மகளாக பெற்றிருக்கிறான். தற்போது அன்னை பாண்டியனின் திருமகளாக இப்பூமியில் இறைவனை விட்டுவிட்டு தனியே தோன்றக் காரணம் என்ன? என்று கேட்டார்கள். அதற்கு அகத்தியர் கந்தர்வ லோகத்தில் வசித்த விச்சுவாவசு என்வனின் மகளான விச்சாவதி உமையம்மையின் மீது மிக்க அன்பு கொண்டு இருந்தாள். ஒரு நாள் தனது தந்தையிடம் உமையம்மையின் அருளைப் பெற வழிபட வேண்டிய தலம் என்ன? என்று கேட்டாள். அதற்கு விச்சுவாவசுவும் துவாத சந்தம் எனப்படும் மதுரை சிறந்த இடம் என்று கூறினார். விச்சாவதியும் மதுரையை அடைந்து பல விரத முறைகளை மேற்கொண்டு தை மாதத்தில் அங்கையற்கண்ணி இறைவியின் சந்நதியை அடைந்து யாழினை இசைத்து அம்மன் பற்றிய இனிய பாடல்களை பாடினாள். அப்போது அங்கையற்கண்ணி அம்மை மூன்று வயது குழந்தையாக விச்சாவதிக்கு காட்சி தந்தாள். விச்சாவதியிடம் அங்கையற்கண்ணி உன் விருப்பம் என்ன? என்று கேட்டாள். விச்சாவதியும் தாயே நின் திருவடியில் நீங்காத அன்பினை நான் எப்போதும் பெற்றிருக்க வேண்டும். என்று கேட்டாள். அங்கையற்கண்ணி மேலும் இன்னும் வேறு என்ன வேண்டும் என்று கேட்டாள். அதற்கு விச்சாவதி அம்மையே தற்போது காட்சி தருகின்ற திருவுருவத்திலேயே என்னிடம் தோன்ற திருவருள் புரிய வேண்டும் என்று கேட்டுக் கொண்டாறள். அதனை கேட்ட அங்கையற்கண்ணி பாண்டியனின் மரபிலேயே மலயத்துவசன் தோன்றுவான். நீ அவனுடைய மனைவியாய் வருவாய். யாம் அப்போது இத்திருவுருவத்தியேயே உனது தவப்புதல்வியாய் உன்னிடம் வருவோம் என்று அருளினார். விச்சாவதியின் தவப்பயனால் உலக அன்னை மதுரையில் தடாதகையாகத் தோன்றினாள். என்று அகத்தியர் சொல்லி முடித்தார்.

இறைவனின் திருவாக்குப்படி தாடாகை என்ற பெயரை குழந்தைக்கு சுட்டி மனைவியுடன் அரண்மனை திரும்பிய மலயத்துவசன் தனக்கு குழந்தை பிறந்ததை உலகெங்கும் அறிவிக்கச் செய்தான். தடாதகை என்ற சொல்லுக்கு மாறுபட்டவள் என்பது பொருள் ஆகும். தடாதகை பற்றிய இறைவனின் திருவாக்கினை மன்னன் தன்னுடைய நம்பிக்கைக்கு உரிய அமைச்சர் சுமதியிடம் மட்டும் சொன்னான். தடாதகையும் போர் கலைகள் உள்ளிட்ட எல்லா கலைகளையும் கற்று குமரிப்பருவத்தை எய்தினாள். தடாதகை பிராட்டியார் குமரிப் பருவத்தை அடைந்ததும் மலயத்துவசன் தன் அமைச்சரான சுமதி என்பவரிடம் கலந்தாலோசித்து நல்லதொரு நாளில் தடாதகை பிராட்டியாருக்கு பாண்டிய நாட்டு அரசியாக திருமுடி சூட்டினான். சில நாட்களில் மலயத்துவசன் விண்ணுலகத்தை அடைந்தான். மலயத்துவசனுக்கு பின் தடாகை ஆட்சி அதிகாரத்தை எடுத்துக் கொண்டு தான் கற்ற கல்வியின்படி நாட்டினை சிறப்புற ஆட்சி செய்தார்.

மீனானது பார்வையாலே தன் குஞ்சுகளுக்கு உணவினை ஊட்டி பாதுகாப்பது போல தடாதகையும் தம் குடிமக்களைப் பாதுகாத்து அரசாண்டார். மீன் போன்ற கண்களைக் கொண்டு அரசியாக அரசாண்டதால் மீனாட்சி என்றும் அங்கயற்கண்ணி என்றும் அழைக்கப்படுகிறார். அம்+ அயல்+கண்ணி = அங்கயற்கண்ணி. அம் என்றால் அழகிய என்று பொருள். கயல் என்றால் மீன் கண்ணி என்றால் கண்களை உடையவள். அழகிய மீன் போன்ற கண்களை உடையவள். தடாதகை பிராட்டியார் கன்னிப் பருவத்தில் முடிசூடி பாண்டிய நாட்டை ஆண்டமையால் பாண்டியநாடு கன்னிநாடு என்னும் பெயர் பெற்றது. நால்வகைப் படைகளுடன் புறப்பட்டுச் சென்று திக்விஐயம் செய்து வென்றாள். தடாதகை மணப் பருவத்தை அடைந்தாள். இறுதியாகத் திருக்கைலாயத்தை அடைந்து சிவகணங்களுடன் சிவபெருமானையும் கண்டாள். கண்டவுடன் மூன்று தனங்களில் ஒன்று மறைந்தது. முன் அறிவித்தபடி இறைவனே கணவன் என்பது புலப்பட்டது. திருமணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. திருமால் முதலிய தேவர்களும் முனிவர்களும் வந்திருந்தார்கள். பிரமதேவன் உடனிருந்து நடத்தினார். பங்குனி உத்திர நன்னாளில் சிவபெருமான் திருமங்கல நாணை பிராட்டியாருக்குச் சூட்டினார். தடாதகைப் பிராட்டியே மீனாட்சி அம்மனாக விளங்குகிறார்.

அம்பாள் மீனாட்சி. மீன் போன்ற விழிகளை உடையவள் என்பது பொருள். மீன் தனது முட்டைகளைத் தன் பார்வையினாலேயே தன்மயமாக்குவதைப் போல அன்னை மீனாட்சியும் தன்னை தரிசிக்க வரும் அடியவர்களை தன் அருட்கண்ணால் நோக்கி மகிழ்விக்கிறார். மீன் கண்ணுக்கு இமையில்லாமல் இரவும் பகலும் விழித்துக் கொண்டிருப்பது போல தேவியும் கண் இமையால் உயிர்களை எப்போதும் காத்து வருகிறார். அன்னை மீனாட்சிக்கு பச்சைத்தேவி, மரகதவல்லி, தடாதகை, அபிடேகவல்லி, அபிராமவல்லி, கயற்கண்குமாரி, கற்பூரவல்லி, குமரித்துறையவள், கோமகள், சுந்தரவல்லி, பாண்டிப்பிராட்டி, மதுராபுரித்தலைவி, மாணிக்கவல்லி, மும்முலைத் திருவழுமகள் போன்ற பெயர்களுடன் இன்னும் பல பெயர்களும் உள்ளன. மீனாட்சி அம்மன் சிலை முழுவதும் மரகதக் கல்லால் ஆனது.

மீனாட்சியம்மன் கோவிலில் தினமும் முதலில் அம்பாளுக்கு பூஜை செய்யப்பட்ட பின்பே சிவனுக்கு பூஜை நடக்கிறது. மீனாட்சி அம்மன் அரசியாக இருந்ததால் அபிஷேகங்களை பக்தர்கள் பார்க்க அனுமதி இல்லை. அலங்காரம் செய்த பிறகே பார்க்கலாம். ஒவ்வொரு நாளும் மீனாட்சியம்மன் பல்வேறு திருக்கோலங்களில் அருள் பாலிக்கிறாள். திருவனந்தல் விளாபூஜை காலசந்தி திரிகாலசந்தி உச்சிக்காலம் சாயரட்சை அர்த்தஜாமம் பள்ளியறை பூஜை என தினமும் எட்டுகால பூஜை நடக்கிறது. இந்த எட்டு காலங்களில் முறையே மஹாஷோடசி புவனை மாதங்கி பஞ்சதசாட்சரி பாலா சியாமளா சோடஷி ஆகிய திருக்கோலங்களில் காட்சி கொடுக்கிறாள். இப்பூஜைகள் திருமலை நாயக்கரின் அமைச்சராகப் பணிபுரிந்த நீலகண்ட தீட்சிதர் வகுத்து வைத்தபடி நடந்து வருகிறது. இங்கு காரண காமிக ஆகமங்கள் பின்பற்றப்படுகின்றன.

பாண்டிய மன்னன் குலசேகர பாண்டியன் கனவில் வந்த சிவனாரின் சடாமுடியிலிருந்து தேனாகிய மதுரம் இத்தலத்தில் வழிந்திட மதுராபுரி என அழைக்கப்பட்டு அது மருவி மதுரை ஆயிற்று. மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இக்கோயில் 8 கோபுரங்களையும் இரண்டு விமானங்களையும் உடையது. இங்குள்ள கருவறை விமானம் இந்திர விமானம் என அழைக்கப்படுகிறது. இதில் 32 சிங்கங்களும் 64 சிவகணங்களும் 8 வெள்ளை யானைகளும் கருவறை விமானங்களைத் தாங்குகின்றன. மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் கருவறை விமானங்கள் தேவேந்திரனால் அமைக்கப்பட்டவை.

மீனாட்சி அம்மன் கோயில் தீர்த்தம் பொற்றாமரைக்குளம் மற்றும் வைகை, கிருதமாலை, தெப்பக்குளம், புறத்தொட்டி. நந்தி மற்றும் பிற தேவர்களின் வேண்டுகோளின்படி சிவன் தமது சூலத்தால் பூமியில் ஊன்றி உண்டாக்கியதே பொற்றாமரைக்குளம் ஆகும். இந்தக் குளம் கோயிலுக்குரிய தீர்த்தங்களில் முதன்மையானது. சிவகங்கை என்றும் பெயர் உள்ளது. நந்தி மற்றும் பிற தேவர்களின் வேண்டுகோளின் படி சிவன் தமது சூலத்தால் பூமியில் ஊன்றி உண்டாக்கியதே பொற்றாமரைக் குளம். கோயிலுக்குரிய தீர்த்தங்களில் இது முதன்மையானது. இதனை சிவகங்கை என்றும் அழைப்பார்கள். ஒரு நாரைக்கு பெருமான் அருளிய வரத்தின்படி இக்குளத்தில் மீன்களும் நீர்வாழ் உயிரினங்களும் இல்லாதிருப்பது இன்றும் ஓர் அதிசயம். தேவேந்திரன் தனது சிவபூஜைக்காக பொன் தாமரையைப் பெற்றதும் நக்கீரர் இறைவனை எதிர்த்து வாதிட்டதும் இங்கு தான். 165அடி நீளமும் 120 அடி அகலமும் உள்ள இக்குளத்தை சுற்றி சிவனின் 64 திருவிளையாடல்களும் சித்தரிக்கப்பட்டுள்ளன. திருக்குறளின் பெருமையை நிலைநாட்டி சங்கப்பலகை தோன்றிய இடம் இது தான். பொற்றாமரைக் குளத்தில் மீன் போன்ற உயிரினங்கள் காணப்படுவதில்லை என்பது ஓர் அதிசயம். இக்குளத்தில் சங்கப்பலகை இருந்ததாகவும் புலவர்கள் இயற்றும் நூல்களை அதன் மேல் வைப்பார்கள் அப்பலகை ஏற்றுக் கொண்ட பின்னரே சங்கப்புலவர்கள் அந்நூல்களை ஏற்றுக் கொண்டதாகவும் திருக்குறளும் அவ்வாறே இக்குளக்கரையில் தான் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்தக் குளத்தில் அமாவாசை மாதப் பிறப்பு கிரகணகாலம் வியதிபாதம் ஆகிய புண்ணிய காலங்களில் நீராடி இறைவனைப் பூஜித்தால் வேண்டும் சித்திகளைப் பெறலாம். இக்குளத்தை சுற்றி சிவனின் 64 திருவிளையாடல்களும் சித்தரிக்கப்பட்டுள்ளன. இந்த தீர்த்தத்தில் பல வருடங்களுக்கு முன்பாக தோன்றிய ஸ்படிக லிங்கம் இப்போதும் உள்ளது.

தெற்கு கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தவுடன் முக்குறுணி விநாயகர் சந்நிதி உள்ளது. கி.பி. 1623 முதல்1659 வரை மதுரையை ஆண்ட மன்னர் திருமலை நாயக்கர் தனக்கு அரண்மனை கட்டுவதற்காக வண்டியூர் தெப்பக்குளம் அருகே மண்ணை வெட்டியபோது மண்ணில் புதையுண்டிருந்த இந்த விநாயகர் திருவுருச் சிலையை கண்டெடுத்து இங்கே கிபி 1645 இல் பிரதிஷ்டை செய்தார். ஒரே கல்லினால் ஆன இவ்விநாயகரின் உயரம் 7 அடி. ஒவ்வொரு விநாயக சதுர்த்தியின் போதும் இந்த விநாயகருக்கு 18 படி (முக்குறுணி) அரிசியால் கொழுக்கட்டை தயார் செய்து படைக்கப்படுவதால் இவ்விநாயகர் முக்குறுணி விநாயகர் என அழைக்கப்படுகிறார்.

விருத்த்ராசுரன் விஸ்வரூபன் என்ற இருவரை தேவேந்திரன் கொன்றான். அவர்கள் பிறப்பால் அந்தணர்கள் ஆனதால் இந்திரனை பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக் கொண்டது. அதிலிருந்து விடுபட தன் குருவை நாடி உபாயம் கேட்டான். குருபகவான் அவனிடம் பூலோகம் சென்று பல்வேறு சிவஸ்தலங்களில் வழிபட்டால் ஓரிடத்தில் உன் தோஷம் நீங்கும் என்று கூறினார். அதன்படி இந்திரன் காசி முதலிய பல ஸ்தலங்களில் வழிபட்டு தெற்கு நோக்கி வந்தான். ஓரிடத்தில் கடம்ப மரத்தின் கீழ் இருந்த சிவலிங்கத்தை பூசித்தவுடன் தன்னைப் பற்றியிருந்த தோஷம் விலகக் கண்டான். இந்திரன் மகிழ்ச்சியடைய அவன் முன் கடம்ப மரத்தடியில் சிவபெருமான் அவனுக்கு காட்சி கொடுத்தார். இந்திரன் சிவபெருமானுக்கு கோவில் கட்ட நினைத்து தேவலோகத்தில் இருந்து ஒரு விமானம் வரவழைத்தான். இத்தலத்து இறைவனுக்கு இந்திரன் விமானம் அமைத்ததால் அதற்கு இந்திர விமானம் என்றும் விண்ணில் இருந்து வந்ததால் விண்ணிழி விமானம் என்றும் சொல்லப்படுகிறது. அவன் பெயரிலேயே இங்குள்ள கருவறை விமானங்கள் இந்திர விமானம் என்று அழைக்கப்படுகிறது. 32 சிங்கங்களும் 64 சிவகணங்களும் 8 வெள்ளை யானைகளும் இந்த கருவறை விமானங்களைத் தாங்குகின்றன. ஆலயம் கட்டிய இந்திரனிடம் ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி நாளில் என்னை இங்கு வந்து வழிபடுக என்று இறைவன் கட்டளையிட்டார். அதன்படி ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி நாளில் இந்திரன் இங்கு வந்து வழிபடுகிறான் என்று திருவிளையாடல் புராணம் கூறுகிறது. ஈசனின் 64 திருவிளையாடல்களும் மதுரையிலேயே நடந்தவை. சுவாமி சந்நிதி பிராகாரங்களில் 64 திருவிளையாடல் காட்சிகள் சிற்பங்களாக இருக்கின்றன.

மீனாட்சி சன்னதிக்குள் நுழைந்ததும் இருப்பது அஷ்ட சக்தி மண்டபம். 18 அடி அகலமும் 25 அடி உயரமும் 46 அடி நீளமும் உள்ள இந்த மண்டபத்தை அஷ்ட லட்சுமி மண்டபம் என்றும் அழைப்பார்கள். மண்டபத்தில் இருபக்கங்களிலும் நான்கு நான்கு தூண்கள் உள்ளன. எட்டுத் தூண்களிலும் யக்ஞரூபிணி, சியாமளா, மகேஸ்வரி, மனோன் மணி, கவுமாரி, ரவுத்ரி, வைஷ்ணவி, மகாலட்சுமி ஆகியோர் அருள் பாலிக்கின்றனர். இந்த மண்டபத்தை கட்டியவர்கள் மன்னர் திருமலைநாயக்கரும் அரசிகளான ருத்திரபதியம்மையும் தோளியம்மையும் ஆவர்கள். பாண்டியன் மகளாக மீனாட்சி பிறப்பதும் முடிசூட்டிக் கொள்வதும் ஆட்சி நடத்துவதும் வீர உலா செல்வதும் இறைவனை காண்பதும் சோமசுந்தரர் ஆட்சி நடத்துவதும் இம்மண்டபத்தில் ஓவியங்களாக தீட்டப்பட்டுள்ளன. மீனாட்சியம்மன் என்றதுமே கிளி நினைவிற்கு வரும். தன்னை வேண்டும் பக்தர்களின் கோரிக்கைகளை அம்பிகைக்கு கிளி திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்குமாம். மீனாட்சியிடம் கிளி இருப்பதற்கான இன்னொரு காரணமும் உள்ளது. இந்திரன் சாப விமோசனத்திற்காக பூலோகம் வந்த போது இத்தலத்திற்கு வந்தான். அப்போது சொக்கநாதர் லிங்கமாக எழுந்தருளியிருந்த இடத்தின் மேலே பல கிளிகள் வட்டமிட்டபடி அவரது திருநாமத்தைச் சொல்லிக் கொண்டு பறந்து கொண்டிருந்தன. இதைக் கண்டு ஆச்சரியமடைந்த இந்திரன் சொக்கநாதரை வணங்கி விமோசனம் பெற்றான். இவ்வாறு இந்திரன் இங்கு சிவவழிபாடு செய்வதற்கு கிளிகள் வழிகாட்டியது. அது போல் இப்போதும் இறைவனை அடையத் தகுதி உடையவர்களுக்கு கிளி வழிகாட்டிக் கொண்டே இருக்கிறது. உலகத்திலேயே சிலைகளும் சிற்பங்களும் மூன்று கோடி உள்ள ஒரே திருக்கோயில் இதுதான். அன்னை மீனாட்சிக்கு 1981ல் தங்கத்தால் தேர் செய்யப்பட்டது. இத்தேரின் அப்போதைய மதிப்பு ரூ.14,07,093.80. 14.5அடி உயரத் தில் செய்யப்பட்ட இந்த ரதத்தில் 6.964 கிலோ தங்கமும் 87.667 கிலோ வெள்ளியும் 222.440 கிலோ தாமிரமும் சேர்க்கப்பட்டுள்ளது.

ஆங்கிலேய மாவட்ட ஆட்சியர் ரோஸ் பீட்டர் என்பவரின் கனவில் மீனாக்ஷி அம்மன் தோன்றி தூங்கி கொண்டிருந்த அவரை கட்டிடத்தை விட்டு வெளியே செல்ல சொல்லியிருக்கிறார். அவர் வெளியே சென்ற சிறிது நேரத்திலயே அந்த கட்டிடம் இடிஞ்சு விழுந்து விட்டது. அதனால் அவர் மீனாட்சி அம்மனுக்கு தங்க மற்றும் வெள்ளி நகைகளை காணிக்கையாக அளித்துள்ளார். மீனாட்சி அம்மன் கோயிலும் பொற்றாமரை குளமும் சங்க காலத்திற்கு முன்னரே உருவாக்கப்பட்டது. அதன் பின் கோபுரங்கள் மற்றும் சன்னதிகள் கட்டபட்ட ஆண்டுகள் விவரம் வருமாறு.

1168 – சுவாமி கோபுரம்
1216 – கிழக்கு ராஜ கோபுரம்
1627 – அம்மன் சந்நிதி கோபுரம்
1315 – மேற்கு ராஐ கோபுரம்
1372 – சுவாமி சந்நிதி கோபுரம்
1374 – சுவாமி சந்நிதி வெஸ்ட் கோபுரம்
1452 – ஆறு கால் மண்டபம்
1526 – 100 கால் மண்டபம்
1559 – தெற்கு ராஜ கோபுரம், முக்குரிணி விநாயகர் கோபுரம்
1560 – சுவாமி சந்நிதி நார்த் கோபுரம்
1562 – தேரடி மண்டபம்
1563 – பழைய ஊஞ்சல் மண்டபம், வன்னியடி நட்ராஜர் மண்டபம்
1564 – வடக்கு ராஜா கோபுரம், வெள்ளி அம்பல மண்டபம், கொலு மண்டபம்
1569 – சித்ர கோபுரம், ஆயிராங்கால் மண்டபம், 63 நாயன்மார்கள் மண்டபம்
1570 – அம்மன் சந்நிதி மேற்கு கோபுரம்

இத்தலத்தில் தான் முருகன் திருவருளால் ஊமைத் தன்மை நீங்கி குமரகுருபரர் மீனாட்சி பிள்ளைத்தமிழ் அரங்கேற்றினார். திருவாதவூராருக்கு மாணிக்கவாசகர் என்ற பெயரை இறைவன் கொடுத்ததும் இத்தலத்தில்தான். திருஞானசம்பந்தர் அனல்வாதம் புனல்வாதம் செய்து சைவத்தை பாண்டிநாட்டில் நிலைபெறச் செய்த தலம். பாணபத்திரருக்கு தன் கைப்பட பாசுரம் எழுதிக் கொடுத்து சேரனிடம் இறைவன் நிதி பெற வைத்த தலம். ராமர் லட்சுமணர் மற்றும் பிற தேவர்களும் முனிவர்களும் பூசித்துப் பேறு பெற்ற தலம். திருவிளையாடல் புராணத்தில் சிவபெருமான் ஒரு நாரைக்கு முக்தியளித்த சம்பவம் கூறப்பட்டுள்ளது. அதனை மெய்பிக்கும் விதமாக 2016 மார்ச் மாதத்தில் ஒரு நாரை இக்கோவிலுக்குள் உள்ள பொற்றாமரைக் குளத்தில் 4 நாட்களாகத் தவம் செய்வது போல் நின்று கொண்டிருந்ததது. உணவு எதுவும் உட்கொள்ளாமல் குளத்திற்குள் செல்வதும் கரைக்கு வந்து நிற்பதுமாக 4 நாட்கள் அங்கேயே நின்று கொண்டிருந்தது. 17-3-2016 அன்று அங்கேயே முக்தி அடைந்ததது. அதனை கோவிலுக்குள் உள்ள கோசாலையில் அடக்கம் செய்தனர். திருநாவுக்கரசர் திருஞானசம்பந்தர் மாணிக்கவாசகர் குமரகுருபரர் பாடல்கள் பாடியுள்ளனர்.

One thought on “சக்தி பீடம் 3. மீனாட்சி அம்மன் மதுரை

  1. வடிவேல் சண்முகம் Reply

    மிகவும் அற்புதம் ஐயா.
    🙏🌹🔱
    தங்களின் பதிவினை தொடர்ச்சியாக படித்தும், எங்கள் ஊரில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பாக எம்பெருமானின் ஆனைக்கிணங்கி காவல்துறை, மின்சாரத்துறை சார்ந்த அடியார் பெருமக்கள் மற்றும் ஆன்மீக சற்றோர்கள் உதவியுடன் புதிதாக அலங்காரவல்லி அன்னை உடனுரை பசுபதீஸ்வரர் ஆலயமானது அமைக்கபெற்று அதில் What’s app குழு உருவாக்கி கிட்டத்தட்ட 270 அடியார் பெருமக்கள் உள்ளனர்.

    தங்களின் தொடர் பதிவினை பகிர்ந்து அனைவரும் பயன் பெறும்வண்ணம் பகிர்ந்து வருகிறேன். இவ்வாய்ப்பினை அளித்த தங்களின் பொர்பாத்தத்தை தொட்டு வணங்கி மகிழ்கிறேன்.
    🙏🙏🙏🙏🙏
    சிவா திருச்சிற்றம்பலம்

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.