சக்திபீடம் 14. நந்தாதேவி – மிர்ஜாப்பூர்

சக்தி பீடத்தில் 14 ஆவது கோயில் நந்தாதேவி கோயிலாகும். இக்கோயில் விந்தியா சக்தி பீடமாகும். இக்கோயில் உத்தரபிரதேசத்தின் மிர்சாபூர் மாவட்டத்தில் புனித கங்கை நதிக்கரையில் விந்தியாசலம் பகுதியில் அமைந்துள்ளது. இப்பகுதி சித்தர் பீடம் என்றும் புகழ் பெற்றது. இங்கு மூல தெய்வமாக விந்தியவாசினி அருளுகின்றாள். இவள் நந்தா தேவி என்றும் கஜலா தேவி என்றும் அழைக்கப்படுகிறாள். இந்த பெயரை கொண்டு நந்தா தேவி கோயில் என்று அழைக்கப்படுகிறது. கோயிலில் சிவன் காளி சரஸ்வதி கிருஷ்ணர் ராதையுடனும் அனுமான் மற்றும் பைரவர் அருள் பாலிக்கிறார்கள். இக்கோயிலில் விந்தியவாசினி சிலை உட்பட பெரும்பாலான சிலைகள் கருங்கல்லால் ஆனவை. விந்தியவாசினி தேவி சிங்கத்தின் மீது அமர்ந்தபடி காட்சி கொடுக்கிறார். விந்திய மலையிலிருந்து இவள் அருள் புரிவதால் இவளுக்கு விந்தியவாசினி என்ற பெயர் ஏற்பட்டது. ஆதி சக்தியின் உடல் பாகங்கள் பூமியில் விழுந்த இடங்கள் சக்தி பீடங்கள் என்று அழைக்கப்படுகிறது. இந்த இடத்தில் ஆதி சக்தியின் பாகங்கள் ஏதும் விழவில்லை. ஆதி சக்தியின் உடல் பகுதிகள் அனைத்தும் ஒவ்வொரு இடத்தில் விழுந்த பின் ஆதிசக்தி இந்த இடத்தில் தனது முழு சக்தியுடன் வசிக்க தொடங்கியதால் இந்த இடம் சக்தி பீடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. விந்தியவாசினி தேவியே சரஸ்வதி லட்சுமி காளி ஆகிய மூன்று தெய்வங்களாக ரூபமெடுத்து அருள்பாலிக்கிறாள். கோயில் காலை 5:30 மணிக்கு காலை ஆரத்தியுடன் திறக்கப் படுகிறது. தினமும் பூஜையில் நடத்தப்படும் 4 ஆரத்திகளின் போதும் தேவியின் சன்னதி மூடுப்படுகிறது. கோயிலில் ஒரு மரக் கூரையால் சூழப்பட்ட கல் கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்ட ஒரு சின்னம் உள்ளது.

தேவகி வசுதேவரின் எட்டாவது குழந்தையாக கிருஷ்ணர் பிறந்த அதே நேரத்தில் தேவி நந்தகோபன் யசோதாவிற்கு மகளாகப் பிறந்தார். விஷ்ணுவின் அறிவுறுத்தலின் படி வசுதேவர் கிருஷ்ணருக்கு பதிலாக யசோதாவிற்குப் பிறந்த பெண் குழந்தையை இடம் மாற்றி வைத்தார். கம்சன் இந்த பெண் குழந்தையை கொல்ல முயன்ற போது கம்சனின் கையில் இருந்து தேவி ரூபமெடுத்து கம்சனிடம் உன்னைக் கொல்பவன் ஏற்கனவே பிறந்து பாதுகாப்பாக இருக்கிறான் என்று கூறிவிட்டு மதுராவின் சிறையிலிருந்து மறைந்து போனார். அதன்பிறகு இவர் விந்திய மலைகளைத் தனது இருப்பிடமாகத் தேர்வு செய்து அங்கு வரும் பக்தர்களுக்கு அருள்புரிகிறார்.

ஸ்ரீமத் பாகவத புராணத்திலும் பத்ம புராணத்திலும் தேவி மஹாத்மியத்திலும் மார்க்கண்டேய புராணத்தின் துர்கா சப்தசதி அத்தியாயத்திலும் இந்த தேவி பற்றிய குறிப்புகள் உள்ளது. சர்வ சிருஷ்டியின் போது பிரம்மா விஷ்ணு மற்றும் மகேஷ்வரர் இந்த இறைவியை வழிபட்டு பின் இந்த பிரபஞ்சத்தை உருவாக்கினார்கள் என்று புராண வரலாறு உள்ளது. மார்கண்டேய புராணம் ஸ்ரீ துர்கா சப்த சதியின் வரலாற்றில் இதற்கான குறிப்புகள் உள்ளது. அந்த குறிப்பின்படி சர்வ சிருஷ்டி படைப்பின் ஆரம்ப கட்டத்தில் விஷ்ணு தூக்கத்தில் மூழ்கினார். பிரம்மா விஷ்ணுவின் தொப்புள் கொடியில் இருந்து வந்த தாமரையின் மீது சுய சிந்தனையில் ஆழ்ந்திருந்தார். அந்த நேரத்தில் விஷ்ணுவின் உடல் பாகத்திலிருந்து இரண்டு தீவிர அசுரர்கள் வெளிப்பட்டனர். அவர்கள் விந்திய மலைத் தொடரில் வந்து பலருக்கு துன்பத்தை கொடுக்கத் துவங்கினார்கள். விஷ்ணு மட்டுமே இந்த அசுரர்களை அழிக்க முடியும். அவர் தூங்கிக் கொண்டிருந்தார். அத்தகைய சூழ்நிலையில் பிரம்மா அசுரர்களைக் கொல்ல விந்தியாசல தேவியை அழைத்தார். விந்தியாசல தேவி வந்து அந்த இரண்டு அசுரர்களையும் அழித்தார்.

அயோத்தி மன்னர் திரிசந்தியின் மகன் துருவன் சந்தி. அவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவியின் மகன் சுதர்சனா. இளைய மனைவியின் மகன் சத்ரஜித். இவர்களில் சத்ரஜித்தையே மன்னராக்க அனைவரும் முடிவு செய்தார்கள். இதைத் தொடர்ந்து சுதர்சனா அம்பிகையை நோக்கி தவத்தில் ஆழ்ந்தான். அம்பிகையும் அவனது தவத்தின் பலனால் ஆயுதங்களைக் கொடுத்து யாரும் வெல்ல முடியாது என்ற வரத்தை அவனுக்கு அளித்தார். இதற்கிடையே காசி மன்னரின் மகள் சசிகலாவுக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதற்காக சுயம்வரத்தை நடத்த காசி மன்னர் ஏற்பாடு செய்திருந்தார். இதில் சுதர்சனா கலந்து கொண்டால் சசிகலாவை மணந்து விடுவான் என்று நினைத்து அவனை சத்ரஜித் கொல்ல திட்டம் திட்டினான். இதை உணர்ந்த சுதர்சனா அம்பிகை அருளிய ஆயுதங்களால் அவனை வீழ்த்தினான். பின் சுயம்வரத்தில் பங்கேற்று சசிகலாவை மணந்து சுதர்சனா மன்னராகப் பதவி ஏற்றான். தனக்கு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுத்த அம்பிகைக்கு நன்றி தெரிவிக்க நினைத்த சுதர்சனா அவருக்கு விந்தியாவாசினி என்ற பெயரில் கோயில் எழுப்பி வழிபட்டான். பின்னாட்களில் மேற்கு வங்க நடோர் பகுதியை ஆட்சிபுரிந்த ராணி பவானி இக்கோயிலைப் புதுப்பித்தார்.

இக்கோயிலில் துர்கா பூஜை நவராத்திரி மகா சிவராத்திரி திருவிழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின் போது ​லட்சுமி காளி சரஸ்வதி ஆகிய மூத்தேவியருக்கும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகிறது. ஒவ்வொரு வாரமும் செவ்வாய்கிழமை சனிக்கிழமைகளில் இங்கு சிறப்பு பூஜைகள் ஆராதனைகள் நடைபெறுகிறது. ஸ்ரீராம நவமி கிருஷ்ண ஜென்மாஷ்டமி தினங்களிலும் விந்தியவாசினிக்கு விழா எடுக்கப்படுகிறது. ஸ்ரீமத் பாகவத புராணத்திலும் தேவி மஹாத்மியத்திலும் மார்க்கண்டேய புராணத்தின் துர்கா சப்தசதி அத்தியாயத்திலும் இந்த தேவி பற்றிய குறிப்புகள் உள்ளது. ராமர் வனவாச காலத்தில் மனைவி சீதா மற்றும் சகோதரர் லட்சுமணனுடன் இந்த இடத்திற்கு வந்து வழிப்பட்டுள்ளார். மகாபார காலத்தில் நடைபெற்ற விராட் திருவிழாவில் யுதிஷ்டிரர் கலந்து கொண்டு தேவியை வழிபட்டு அவளின் புகழைப்பாடி அருளைப் பெற்றிருக்கிறார். விந்தியவாசினி தேவியை குல தெய்வமாகவும் காக்கும் தெய்வமாகவும் சேத்ரா தேவியாகவும் பீகார் மற்றும் உத்தரபிரதேசத்தில் உள்ள மக்கள் வணங்குகிறார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.