சக்தி பீடம் 11. மகாகாளி-உஜ்ஜையினி

சக்தி பீடத்தில் 11 ஆவது கோயில் மகாகாளி உஜ்ஜையினி கோயிலாகும். இக்கோயில் இந்தியாவில் மத்தியபிரதேசத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் ருத்ராணி சக்தி பீடமாகும். தேவியின் உதடு விழுந்த இடமாக இது கருதப்படுகிறது. சிவபெருமான் திரிபுரங்களை எரித்து அசுரர்களை வெற்றி கொண்ட இடம் என்பதால் உஜ்ஜையினி (வெற்றித்தலம் என்று பொருள்) என்று பெயர் பெற்றது. மேலும் சமண மதத்தை சார்ந்த சுதன்வா என்ற மன்னன் இந்த நாட்டை சீரும் சிறப்புமாக ஆண்டு வந்தான். ஜைன மதம் அவ்வூரில் எங்கும் வியாபித்திருப்பதைக் கண்டு உஜ்+ஜைன் – உச்சத்தில் இருக்கும் ஜைனம் என்று பொருள் பட உஜ்ஜைய்ன் என்று பெயர் சூட்டினான் எனவும் வரலாறு உள்ளது. புராண பெயர்கள் அவந்திகா அவந்தி அவந்திபூர் அவந்திபுரம் என பல கால கட்டத்தில் பல பெயர்களில் அழைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் மகாகாளி மங்கள சண்டி என்ற பெயரில் அன்னை எழுந்தருளி இருக்கிறாள். சுடரும் ஜ்வாலையை மகுடமாய் தாங்கி பூத வேதாள கனங்களின் அதிகாரியாக உடுக்கை நாகம் கபாலம் வீரவாள் சூலம் ஏந்தி வீராசனமாக சிம்ம வாகனத்தில் எழுந்தருளி அருள்வாள். தலமரம் ஆலமரம். இதற்கு சித்திவடம் என்று பெயர். இம்மரம் பல நூறு வருடங்களாகச் சிறிய அளவிலேயே இருந்து வருகிறது. தீர்த்தம் சிப்ராநதித் தீர்த்தம் சூரிய குண்டம் நித்திய புஷ்கரணி கோடிதீர்த்தம். இந்த சிப்ரா நதிக்கரையில் பார்வதி தேவியால் விதைக்கப்பட்டு வளர்க்கப்பட்ட ஆலமரத்தின் கீழ்தான் குழந்தையாக இருந்த முருகப் பெருமான் வளர்ந்தார். இந்த நதிக்கரையின் அருகில்தான் ஆதிசங்கரர் ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்தார். புண்ணிய தீர்த்தங்களில் மிகவும் முக்கியமானது இந்த தீர்த்தம் என்று அக்கினி புராணம் குறிக்கிறது.

கருட புராணத்தில் முக்தி தலங்களாக போற்றப்படுபவை ஏழு. அவை துவாரகா அயோத்யா வாரணாசி ஹரித்துவார் மதுரா காஞ்சி மற்றும் அத்தலமான உஜ்ஜையினி கோயிலும் ஒன்றாகும். 12 ஜோதிர் லிங்கத்தலங்களுள் இத்தலமும் ஒன்று. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பமேளா திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. சைவ வைணவ புத்த மற்றும் சமண மதத்தினருக்கு மிக முக்கியமான யாத்திரை தலம். இத்தலத்தில் விநாயகர் ஓங்காரேசுவரர் தாரகேசுவரர் பார்வதி தேவி சுப்ரமணியர் நந்தி ஆகியோர் பரிவார மூர்த்திகளாக உள்ளனர். அனைத்து கோயில்களிலும் ஒரு தடவை பூஜித்த பொருள்களை மீண்டும் பயன்படுத்தி பூஜிப்பதில்லை. ஆனால் இந்த கோயிலில் பூஜித்த பிரசாதத்தையும் வில்வம் போன்ற தளிர்களையும் மீண்டும் உபயோகிப்பது வழக்கமாக இருக்கிறது. தேவர்களும் அசுரர்களும் அமிர்தத்தை கடைந்த பொழுது அசுரர்களுக்கு பங்கு தராமல் தேவகுரு கலசத்தை தூக்கிக் கொண்டு ஓடும் பொழுது அமிர்தம் சிந்திய இடங்களுள் இத்தலமும் ஒன்று. துவாபர யுகத்தில் சாந்தீப முனிவரிடம் பகவான் கிருஷ்ணர் பலராமர் சுதாமர் குசேலன் ஆகியோர் இத்தலம் இருந்த இடத்தில்தான் கல்வி பயின்றார்கள். மகாபாரத காலத்தில் இந்நாட்டை ஆண்ட இளவரசர்கள் கௌரவர்கள் பக்கம் நின்று மகாபாரதப் போரில் யுத்தம் புரிந்தனர். இராமாயண காலத்தில் இராமர் வந்து நீராடியுள்ளார். அந்த இடத்தில் இப்போது ராமர் காட் என்னும் குளியல் கட்டம் உள்ளது. இங்கே மீன்களை கடவுளாக வழிபடுகின்றனர்.

காளி கோயில்களில் ஆத்யகாளி மகாகாளி மகாகாளி தசமுகி பத்ரகாளி மங்கலகாளி உச்சினி மாகாளி உச்சிமாகாளி என்று பல பெயர்களில் காளிதேவி அழைக்கப்படுகிறாள். காளிகளில் மிகவும் புராதனமாக விளங்குபவள் உஜ்ஜைனி நகரில் இருக்கும் உஜ்ஜைனி மாகாளி ஆவாள். ருத்ரம் என்றால் ஆவேசம் என்று பொருள். உக்கிர சக்தியைக் கொண்டு ஆவேசமாக இருப்பாள் இந்த அம்பிகை. அம்பிகையின் ஆவேசத்தை மாற்றி அம்பிகையின் அருகில் ஆதிசங்கரர் யந்திரத்தைப் பிரதிஷ்டை செய்து அம்பாளை சாந்த சொரூபியாக மாற்றினார். அன்னை அசுரர்களை அழிக்கும் ஹரசித்தி தேவியாகவும் மகாகாளியாகவும் தன்னை வழிபடும் பக்தர்களுக்கு அசுர குணங்களை அழித்து மங்களம் அருளும் மங்கள சண்டியாகவும் பத்ர என்றாலே சாந்தம் அமைதி சாந்தத்தையும் அமைதியையும் கொடுக்கும் பத்ர காளியாகவும் விளங்குகிறாள். மகாகாளியின் அருளைப் பெற்றவர்களை எவராலும் வெல்ல முடியாது. கவிஞர்கள் புலவர்கள் உபாசகர்கள் சக்கரவர்த்திகள் மந்திரவாதிகள் போன்றவர்கள் விரும்பி வழிபட்ட தெய்வம் மகாகாளி. அவர்களுக்கு அவள் கவித்துவம் புலமை ஏகச்சக்ராதிபத்தியம் மந்திர ஆற்றல் போன்றவற்றை அளித்திருக்கிறாள்.

கோயில் மூன்று அடுக்குகளாக கட்டப்பட்டுள்ளது. முதல் அடுக்கில் ஓங்காரேஸ்வரரும் இரண்டாம் அடுக்கில் தாரகாஸ்வரரும் அமையப் பெற்றுள்ளனர். மூன்றாம் அடுக்கு பூமிக்கு கீழே அமைந்துள்ளது. மூலவர் சிவபெருமான் மகா காளேஷ்வர் பெரிய அளவு லிங்க ரூபமாக காட்சியளிக்கிறார். முகலாயரின் படையெடுப்பின் போது அல்டுமிஷ் என்பவன் இக்கோயிலை இடித்து விட்டு அங்கிருந்த சிவலிங்கத்தை எடுத்து சென்று விட்டான். அதன் பிறகு ராமச்சந்திரன் என்பவர் புதிய லிங்கத்தை ஸ்தாபிதம் செய்து புதிய கோவிலை உருவாக்கினார். பின்னர் பல மன்னர்களின் கைங்கரியத்தினாலும் பொது மக்களின் திருப்பணிகளாலும் இன்று இத்திருக்கோயில் ஐந்து அடுக்குடன் மிகச்சிறப்புடன் விளங்குகிறது. ஒரு காலத்தில் நள்ளிரவு இரண்டு மணியளவில் சுடுகாட்டு சாம்பலை கொண்டு வந்து மகாகாளேஷ்வரருக்கு பஸ்மார்த்தி என்று சொல்லப்படும் சாம்பல் அபிஷேகம் செய்து வந்தார்கள். இப்பொழுது அந்த அளவிற்கு இல்லாமல் சம்பிரதாயத்திற்கு சிறிதளவு சாம்பலால் அபிஷேகம் செய்கிறார்கள்.

இந்தத் தலத்தில் உள்ள காளிதேவி புராணப் பெருமையும் புகழும் பெற்றவள். காளிதாசனுக்கு அன்னை அருள்புரிந்த வரலாறு ஒரு சான்று. ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மூடன் ஒருவன் அமைச்சனின் சூழ்ச்சியால் மன்னன் மகளை திருமணம் முடிக்க நேர்கிறது. தன் கணவன் சகல கலைகளிலும் வல்லமை பெற்றவனாக இருப்பான் என்று எண்ணி அகம் மகிழ்ந்தாள் அரச குமாரி. ஆனால் சில நாட்களில் அவனுடைய உண்மையான ரூபம் வெளிப்பட்டு தனக்கு கணவனாக வந்தவன் மூடன் என்று அரச குமாரிக்குத் தெரிகிறது. தன் கணவன் படிப்பறிவு இல்லாதவன் என்பதை உணர்ந்த ராஜகுமாரி பெரும் துயரில் ஆழ்ந்தாள். நாட்டை ஆளும் தனக்கு நாயகனாக வந்தவன் எழுத்தறிவில்லாதவனாக இருந்தால் எல்லோரும் ஏளனம் செய்வார்களே என்று வேதனை அடைந்தாள். இதற்கு ஒரு வழி தேடினாள்.

மகாகாளி அன்னை தனக்கு விருப்ப தெய்வம் என்றும் மிகவும் சக்தி வாய்ந்தவள் என்றும் அவள் ஊர் எல்லையில் இருக்கிறாள் அவளிடம் சென்று அம்பிகையின் அருள் பெற்று வாருங்கள் எனக் கூறி அனுப்பினாள். அரசியின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு மகாகாளி அன்னையை நோக்கி கடும் தவத்தை மேற்கொண்டான் அவன். களங்கமில்லாத அவனுடைய வேண்டுதலைக் ஏற்ற காளி அவன் முன்னே தோன்றி அவன் நாவில் தன் சூலத்தினால் எழுதி ஈடு இணையற்ற கவித்துவத்தை அளித்தாள். அவன் கேட்டதற்கிணங்க தன் வாய் தாம்புலத்தை வாயில் உமிழ்ந்து அவனை உலக மகாகவியாக்கினாள். சரஸ்வதி தேவியும் மகிழ்ந்து அவனுக்கு அளப்பரிய ஞானத்தை வழங்கினாள். மாகாளி அவனுக்கு சியாமளாவாகவும் ராஜராஜேஸ்வரியாகவும் காட்சியளித்து அருள்புரிந்தாள். காளிதாசன் எழுதிய வடமொழி நூலான சியாமளா தண்டகத்தில் இது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இதில் மாகாளியின் தலைமுதல் பாதம் வரையிலான கேசாதி பாத வர்ணனை இடம் பெற்றுள்ளது. மாகாளியின் அருளால் மூடனாக இருந்தவன் பின்னாளில் கவிச் சக்கரவர்த்தியாக மாறி காளிதாசன் என்கிற அழியாப் புகழினைப் பெற்றான்.

முன்பொரு காலத்தில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் பெரிய யுத்தம் நடந்தது. இரண்டு பக்கமும் பெரும் நாசம். நிறைய பேர் இறந்தனர். தேவர்கள் விலிமை இழந்து நின்றார்கள். தேவர்கள் ஏராளமானோர் இறந்த போது கவலை கொண்ட இந்திரன் விஷ்ணுவை அணுகி காப்பாற்றும்படிக் கேட்டுக் கொண்டார். அதற்கு விஷ்ணு பாற்கடலைக் கடைந்தால் அமுதம் கிடைக்கும். அதனை சாப்பிட்டால் இழந்த வலிமை அனைத்தையும் பெறலாம். ஆனால் அந்த பாற்கடலை கடையக்கூட தற்போது தேவர்களுக்கு வலிமை இல்லை. ஆகவே அசுரர்களோடு சேர்ந்து பாற்கடலை கடையுங்கள் என்று அறிவுறுத்தினார். இந்த தகவல் அசுரர்களுக்கும் எட்டியது. தேவர்கள் அசுரர்களின் உதவியை நாடினார்கள். அசுரர்கள் ஒப்புக் கொள்ளவே இரண்டு பக்கத்தாரும் பாற்கடலைக் கடைய சம்மதித்தார்கள். மந்தர மலையை மத்தாக்கி வாசுகிப் பாம்பை கயிறாக்கி பாற்கடலை கடைய ஆரம்பித்தார்கள். அப்போது கடலிலிருந்து பல வகையான பொருட்கள் வெளிவந்தன. காமதேனு வச்சிராயுதம் கற்பக விருட்சம் என்று பல பொருட்கள் கிடைத்தது. அப்போது ஆலகால விஷம் வந்தது. அவ்விஷம் மூவுலகையும் அழிக்கும் தன்மை கொண்டது. ஆகவே விஷத்தைப் பார்த்து எல்லோரும் பயந்தார்கள். அது நிலத்தில் விழக்கூடாது என்று தேவர்கள் பயந்தனர். அப்போது சிவன் உலக நன்மைக்காக அந்த விஷத்தைக் கையிலே எடுத்து வாயிலே போட்டு விழுங்கி விட்டார். அதைக் கண்ட பார்வதி சிவனைத் தடுத்தாள். சிவன் பார்வதியின் செய்கையைப் பொருட்படுத்தவில்லை. பார்வதியோ கோபப்பட்டு சிவனின் உச்சியில் அடித்தாள். உடனே சிவன் தலையிலிருந்து மாகாளி பிறந்தாள்.

சிவனின் உச்சியில் இருந்து பிறந்ததால் இவளை உச்சினி மாகாளி என அழைத்தனர். பார்வதி அவளுக்கு வாந்திபேதி பெரியம்மை சின்னம்மை வலிப்பு ஆகிய வியாதிகளை போக்கும் சக்தியைக் கொடுத்தாள். அவளுக்கு நிறைய வரமும் கொடுத்தாள். உன்னை வணங்குபவர்களுக்கு வெப்பத்தினால் வரும் வெப்ப நோய்கள் வராது. உன்னை நினைத்தால் நோய் குணமாகும் என வரம் கொடுத்தாள். உச்சினிக்குத் துணையாக பச்சைவேதாளம் கறுப்பன் மோகினி ஆகியோரையும் படைத்தாள். உச்சினிமாகாளி பார்வதியிடம் வேறு சில வரங்களும் வாங்கினாள். பின் கயிலையை விட்டுப் புறப்பட்டு விக்கிரமாதித்தனின் நாட்டுக்கு வந்தாள். அங்குள்ள ஒரு பெரிய மலையின் உச்சியில் தங்கினாள்.

இங்கு சிவபெருமான் மகாகாளிக்கு 32 வேதாந்த ரகசியங்களை கதைகளாகச் சொல்லிக் கொண்டிருந்தார். அதனை அர்ச்சகர் ஒருவர் மறைவாக இருந்து அதனை கேட்டார். அதனால் அவருக்கு சிவபெருமான் அங்கிருந்த முருங்கை மரத்தில் வேதாளமாகத் தொங்கும்படி சாபம் கொடுத்தார். பின் சாப விமோசனமாக விக்கிரமாதித்தன் என்ற மன்னன் இங்கு வருவான். அவனால் சாபம் நீங்கும் எனவும் கூறி அருளினார்.

விக்ரமாதித்யன் ஆண்ட இந்த உஜ்ஜயினி மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த போபால் இந்தோர் அருகில் உள்ள அழகான சிறிய ஊர். உஜ்ஜயினியை ஆண்ட விக்கிரமாதித்தனுக்கு பட்டி என்ற மந்திரி. இருவரும் இணைபிரியாத நெருங்கிய நண்பர்கள். ஒருநாள் அந்த மலைக்கு விக்கிரமாதித்தனும் தனது நண்பனும் மந்திரியுமான பட்டியும் வேட்டையாட வந்தார்கள். அவர்கள் அங்கு விலங்குகளை வேட்டையாடினர். விக்கிரமாதித்தன் களைத்துப் போனான். ஒரு மரத்தடியில் அமர்ந்தான். பட்டியிடம் தாகமாயிருக்கிறது தண்ணீர் வேண்டும் எப்படியாவது கொண்டு வா என்றான். பட்டி காட்டுக்குள் சென்றான் பல இடங்களில் அலைந்தான். கடைசியில் ஒரு சுனையைக் கண்டான். பட்டி சுனையில் தண்ணீர் எடுத்த போது அந்தப் பகுதியில் தெய்வீக மணம் கமழுவதைக் கண்டான். ஆனால் அவனுக்கு எதுவும் தெரியவில்லை. அந்தச் சுனையின் கரையில் உச்சினிமாகாளி வீற்றிருந்தது அவனுக்குத் தெரியவில்லை. சுனையிலிருந்து எடுத்து வந்த தண்ணீரைக் விக்கிரமாதித்தனிடம் கொடுத்தான். அந்த நீரைக் குடித்ததும் விக்கிரமாதித்தன் உடம்பு புத்துணர்ச்சி அடைந்தது. அப்போது உலகத்தையே மறந்து தூங்கினான். தூக்கத்தில் ஒரு கனவு கண்டான்.

உச்சினிமாகாளி கனவில் வந்தாள். அந்தச் சுனையின் அருகே தான் இருப்பதாகவும் தனக்கு இங்கு ஒரு கோவில் கட்டு என்றும் அருளினாள். விக்ரமாதித்ய மன்னன் விழித்தான். தான் கண்ட அற்புதக் கனவைப் பற்றி பட்டியிடம் கூறினான். பட்டி அரசே அந்தச் சுனையில்தான் தெய்வீக மணம் கமழுகிறது. அங்கேயே கோவில் கட்டுவோம் என்றான். மன்னனின் ஆசைப்படியே அந்த இடத்தில் பெரிய கோவிலைக் கட்டி உச்சினிமாகாளியை அங்கு பிரதிஷ்டை செய்தான் பட்டி. கோவிலுக்கு ஏராளமான பொருட்களைக் கொடுத்தான் விக்ரமாதித்யன். தங்கக் கட்டிகளையும் ஆபரணங்களையும் அளித்தான். அவையெல்லாம் அக்கோவிலிலேயே பல இடங்களில் புதைத்து பாதுகாத்து வைக்கப்பட்டன. தனது விருப்ப தெய்வமாக உஜ்ஜயினி மகாகாளியை வழிபட்டு வந்தான். அவனுக்கு போரில் வெற்றி பெற தேவையான அனைத்தையும் உஜ்ஜயினி மகாகாளி அவனுக்கு அருள் புரிந்தாள்.

விக்கிரமாதித்தனுக்குப் பல ஆற்றல்களைக் கொடுத்தவள் காளி. காளிதேவியின் அருளை தனது குருவின் மூலம் கேட்டு அறிந்த விக்கிரமாதித்தன் சர்வ வல்லமையும் பெற நினைத்து தன்னையே பலி கொடுக்க தீர்மானித்தான். அவன் தலை ஈட்டி முனையில் படும்போது மாகாளி தோன்றினாள். விக்கிரமாதித்தனிடம் இங்கிருந்து 2 கல் தொலைவில் ஒரு சிவாலயம் உள்ளது. அந்த சிவன் கோயிலில் உள்ள முருங்கை மரத்தில் ஒரு வேதாளம் தொங்கிக் கொண்டிருக்கிறது. அதை நீ கீழே இறக்கினால் அது உனக்கு 32 கதைகளைச் சொல்லி கேள்வி கேட்கும். அந்த கேள்விக்கு பதில் சொல்லி அதை வென்று அடிமைப்படுத்தினால் உனக்கு எல்லா உதவிகளையும் செய்யும். அதன்படி நீ நடந்தால் உனக்கு உன்னத பதவி கிடைக்கும் எனக் கூறி அருளினாள். அதன்படி விக்கிரமாதித்தனும் காட்டில் வாழ்ந்த ஆறு மாத காலத்தை சரியாக பயன்படுத்தி அந்த வேதாளத்தின் கதைகளை கேட்டு பதிலை சொல்லி அதனை வென்று பல உதவிகளைப் பெற்று நாட்டை வளப்படுத்தினான். இவ்வாறே வேதாளம் விக்கிரமாதித்தனுக்கு கதை சொன்ன வரலாறு நடந்தது. சிவனருளால் காளியின் வழி காட்டலில் அர்ச்சகருக்கு விக்கிரமாதித்தன் மூலமாக சாப விமோசனம் கிடைத்தது.

ஒருமுறை தேவலோகத்தில் நாட்டியத்தில் சிறந்தவள் ரம்பையா ஊர்வசியா என்ற சர்ச்சை எழுந்தது. யாராலும் தீர்ப்பை சொல்ல முடியவில்லை. நாரதரின் ஆலோசனைப்படி பூலோகத்தில் சிறந்து விளங்கும் விக்கிரமாதித்தன் தேவலோகம் அழைத்து வரப்படுகிறான். மகாகாளியின் அருளால் சரியான தீர்ப்பைச் சொன்ன விக்கிரமாதித்தனுக்கு பல பரிசுப் பொருட்களோடு முப்பத்திரண்டு பதுமைகள் உள்ள சிம்மாசனம் ஒன்றையும் தந்து  ஏறிய சிம்மாசனம் இறங்காமல் ஆயிரம் ஆண்டுகள் வாழ்க என்று வரம் தந்து அனுப்பி வைக்கிறான். பூலோகம் வந்து நடந்தவற்றை பட்டிக்கும் மற்றவர்களுக்கும் சொல்கிறான். இதைக் கேட்ட பட்டி நீ 1000 ஆண்டுகள் அரசனாக வாழ வரம் வாங்கிவிட்டாய். விக்கிரமாதித்தனுடன் 1000 ஆண்டுகள் வழவேண்டும் என்று ஆசைப்பட்ட பட்டி மாகாகாளியை சரணடைந்து தனது பக்தியினால் 2000 ஆண்டுகள் வாழும் வரம் வாங்கினான். இதனால் மந்திரி பட்டிக்கு முன்பே விக்கிரமாதித்தன் இறந்து போகும்படி வரங்கள் அமைந்தது. இதனால் இருவரும் கவலை அடைந்தார்கள். இருவரும் தீவிர யோசனைக்குப் பின் மந்திரி பட்டி ஒரு யோசனை கூறினார். ஆறு மாதம் சிம்மாசனத்தில் அமர்ந்து நாட்டை ஆள்வது. பின்னர் சிம்மாசனத்தை விட்டு இறங்கி ஆறு மாதம் காட்டிற்குள் சென்று வாழ்வது என்ற யோசனை சொன்னான். இதனால் வரத்தின்படி 1000 வருடங்கள் அரசனாக வாழ்வான். 1000 வருடங்கள் காட்டில் வாழ்வான். ஆக மொத்தம் இரண்டாயிரம் வருடங்கள் விக்கிரமாதித்தனும் வாழ்வான்.

விக்கிரமாதித்தன் இந்த யோசனையின் படி காடாறு மாதம் நாடாறு மாதம் என்ற முறைப்படி வாழ்ந்து வந்தான். அப்போது காட்டிற்கு செல்லும் போதெல்லலாம் மாகாகாளியும் அவனுடன் செல்வாள். விக்கிரமாதித்தன் வாழ்ந்து வந்த இடம் மற்றும் அவன் தங்கிய இடத்திலெல்லாம் மாகாளியும் தங்கியபடியால் அங்கெல்லாம் மகாகாளியின் கோயில்கள் பிற்காலத்தில் கட்டப்பட்டது. இப்படித்தான் இந்தியா இலங்கையில் மகாகாளிக்கு பல கோயில்கள் வந்தது. இவளைத்தான் தமிழகத்தில் உச்சினி மாகாளி உச்சிமாகாளி என்று பெயரிட்டு அழைக்கின்றனர்.

விக்கிரமாதித்தன் தனது இறுதிக் காலம் முடிந்த பிறகு உஜ்ஜயினி மகாகாளி அவளுக்கு பிடித்த இடத்தில் சென்று இருக்க வேண்டும் என்று எண்ணினான். எனவே முறையாக பிரசன்னம் பார்த்தான். அதன் வழிகாட்டுதலின்படி வேதவிற்பனர்கள் பூஜகர்கள் பூஜைகள் செய்து மூலப்பொருட்கள் வைத்து பச்சை கலசத்தை உருவாக்கி அம்மனை ஆவாகனம் செய்து அருகில் இருந்த கடலில் விட்டனர்.

சமுத்திரத்தில் விடப்பட்ட கலசமானது பல இடங்களை சுற்றி இறுதியாக ராமநாதபுரத்தில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவிலும் ராமேஸ்வரத்தில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ள ஆற்றாங்கரை என்னும் பகுதியில் கரை ஒதுங்கி உள்ளது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக அங்கு ஆலயம் எழுப்பி வழிபட்டு வந்தனர். இதை அறிந்த சேதுபதி சமஸ்தான சிப்பாய்கள் சமஸ்தானத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அங்கு சென்ற சேதுபதி மன்னர் அந்த கலசத்தை மீட்டு ராமநாதசுவாமி திருக்கோவிலில் வைக்குமாறு ஆணையிட்டார். ராமநாதசுவாமி திருக்கோவில் வைத்த பிறகு கோவிலுக்குள் அமானுஷ்ய நிகழ்வுகள் நடைபெற தொடங்கியது. மேளதாளங்கள் ஓசை கேட்பது சலங்கை கட்டி ஆடுவது போல் ஓசைகளும் கேட்பது போன்று தொடர்ந்து நடைபெற தொடங்கியது. கோவிலில் பணிபுரிந்தவர்கள் மன்னரிடம் நடப்பதைப் பற்றி கூறி கலசம்‌ வந்ததில் இருந்து இப்படி நடைபெறுவதாக தெரிவித்தனர். உடனடியாக மன்னர் கோவில் வேதவிற்பனர்கள் ராஜகுருமார்களை வைத்து பூஜை செய்து அந்த கலசத்தை பற்றிய பிரசனம் பார்த்தான். பெரும் தேசத்தினை ஆண்ட விக்ரமாதித்தன் மன்னன் வழிபட்ட தெய்வமான உஜ்ஜயினி மகாகாளி என்று தெரிய வந்தது.

இந்த உக்கிரமான மகாகாளியை சாந்தப்படுத்தி அமைதி வாய்ந்த அம்மனாக இருக்க என்ன செய்யலாம் என ராஜகுருமார்களிடம் கேட்டார்கள். அதற்கு ராஜகுருமார்கள் ராமநாதர் சன்னதிக்கு எதிரே ஆலயத்தினனை உருவாக்கி அங்கே மகாகாளியை பிரதிஷ்டை செய்தால் சாந்தமாக இருப்பாள் என்று தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து ராமநாதசுவாமிக்கு எதிரே அக்னி தீர்த்தம் கடற்கரைக்கு பின் இருந்த பிள்ளையார் கோவில் அருகில் மகாகாளிக்கு கோவில் கட்டி வழிபடத் தொடங்கினர். இங்கு இருந்து ஒரே நேரத்தில் உஜ்ஜயினி மாகாகளியையும் ராமநாத சுவாமியையும் வழிபட முடியும். ராமநாதசுவாமி மற்றும் உச்சயினி மகாகாளி கருவறையும் பூமியில் இருந்து ஒரே நேர்கோட்டில் சரிசமமாக அமைக்கப்பட்டுள்ளது. ராமநாதசுவாமி சன்னதியின் எதிரே உள்ள நந்தி சிலையானது சற்று கழுத்து பகுதி மட்டும் வலதுபக்கமாக வளைந்து காணப்படும் அது ஏனென்றால் உச்சியினை காளியம்மன் ராமநாதசுவாமியை பார்க்கும் படியும் இருந்தால் சாந்தமாக இருக்கும் என்பதால் அவ்வாறு இருக்கும். மேலும் நான்கு திசைகளிலும் ராமநாதசுவாமி கோவிலை காக்கும் தெய்வங்கலாக கிழக்கு பகுதியில் உஜ்ஜயினி மாகாளி அம்மனும் தெற்குப் பகுதியில் நம்பு நாயகி அம்மனும் மேற்கில் துர்க்கை அம்மனும் வடக்கு பத்திரகாளி அம்மனும் உள்ளனர்.

விக்ரமாதித்யன் காலத்திற்கு பிறகு பூஜைகள் சரியாக இல்லாமல் உச்சினி மாகாளி கோவில் பாழடைந்து சிதைந்து கிடந்தது. அங்கு பூசை செய்ய ஆளில்லை. அப்போது ஒருநாள் அந்தக் கோவிலுக்கு அயோத்திப் பட்டிணத்திலிருந்து நம்பியான் என்ற பிராமணன் வந்தார். அவர் அயோத்திக் கோவிலில் பூசை செய்து வந்தவர். அயோத்தியில் பஞ்சம் ஏற்பட்டதால் அங்கிருந்து குடிபெயர விரும்பினார். அப்போது அவர் கனவில் உச்சினிமாகாளி வந்தாள். என் கோவிலுக்கு வா என அழைத்தாள். அதனால் அவரும் இங்கு வந்தார். உச்சினி கோவிலின் தர்மகர்த்தாக்கள் அயோத்தி பிராமணனை அக்கோவிலின் பூசாரியாக நியமித்தனர். கோவிலையும் சரி செய்தார்கள். அவரும் மூன்று வேளைப் பூஜையைப் பக்தியோடு செய்து வந்தார்.

நம்பியானுக்கு ஏழு பெண் மக்கள் இருந்தனர். ஏழு பேருமே திருமணத்திற்குரிய வயதை எட்டியிருந்தனர். அவர்களுக்குக் கல்யாணம் செய்து வைக்க நம்பியானுக்கு வசதியில்லை. அவருடைய ஏழ்மை அவரை வதைத்தது. அவர் தினமும் பூஜையின் போது உச்சினி தேவியிடம் அம்மா என் பிள்ளைகளுக்குத் திருமணம் செய்ய உதவி செய் என உருகி வேண்டினார். ஒருநாள் காளி அவர் கனவில் தோன்றி கோவிலின் ஒரு இடத்தில் தங்கக் கட்டி இருக்கிறது எடுத்துக்கொள். உன் புதல்விகளுக்குத் திருமணம் செய்து வை என்றாள். நம்பியான் கனவில் கண்ட இடத்திற்குச் சென்றார். அந்த இடத்தில் மண்ணைத் தோண்டினார். தங்கக் கட்டி கிடைத்தது. அதை எடுத்துக் கொண்டு பக்கத்து நகரத்துக்குச் சென்றார். தங்கத்தை விற்று பணத்தை வீட்டிற்குக் கொண்டு செல்ல வேண்டும். பின் மகளுக்கு திருமணம் நடத்த வேண்டும் என்பது நம்பியானின் ஆசை. ஆனால் அவருக்கு அவ்வளவு பொன்னை எங்கு எப்படி விற்பதென்று தெரியவில்லை. ஆகவே அவர் அந்த நகரத்து வீதியில் தங்கக் கட்டியை விற்பதற்கு அலைந்தார். அவ்வளவு பெரிய கட்டியை விலை கொடுத்து வாங்க அங்கே யாருமில்லை. அப்போது அந்த வீதி வழியாக அதிகாரி ஒருவன் குதிரையில் வந்தான். அவன் பிராமணனைப் பார்த்து உன் பையைக் காட்டு என்று நம்பியானைச் சோதனை செய்தான். பிராமணனின் கையில் இருந்த பையில் நிறைய தங்கக் கட்டிகள் இருப்பதைப் பார்த்தான். அவன் திருடனோ என்ற ஐயம் அதிகாரிக்கு ஏற்பட்டது. அதிகாரி பிராமணனைத் தன் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றான். பிராமணனை அடித்துத் துன்புறுத்தி தங்கம் அவனுக்கு வந்த வரலாற்றைக் கேட்டான். நம்பியான் நடந்ததை அப்படியே கூறினார்.

நம்பியான் கூறியதை சோதனை செய்ய அவரையும் கோவிலுக்கு அழைத்துச் சென்றான். அங்கே தோண்டத் தோண்ட ஏராளமான தங்கம் வந்தது. அங்கே இருந்த எல்லா தங்கத்தையும் எடுத்துக் கொள்ள அதிகாரி ஆசைப்பட்டான். தன் கீழே உள்ள வீரர்களைக் கோவிலை இடித்துத் தோண்டி சோதனை செய்யுமாறு ஆணை இட்டான். வீரர்கள் கோவிலை இடிக்க சுற்றி வளைத்தனர். அப்போது காளியின் படைகள் பயங்கரத் தோற்றத்துடன் கூச்சலிட்டபடி அதிகாரியின் வீரர்களை வளைத்து அவர்கள் மீது கற்களை வீசி எறிந்தன. அதிகாரியும் அவரது படைகளும் பயந்து அலறி கோவிலை விட்டு ஓடினார்கள். நம்பியான் காளியை வணங்கினான். அவன் குழந்தைகளுக்கு திருமணம் நடந்தது. கோவிலை புதுப்பித்து பூஜை செய்தார்கள்.

ஒரு நாள் சிவபெருமான் காளிதேவியும் அமர்ந்திருந்த போது சண்டன் பிரசண்டன் என்ற அசுரர்கள் அங்கே வந்து நந்தியைத் தாக்க முற்பட்டனர். சிவபெருமானைப் போருக்கும் அழைத்தனர். சிவபெருமான் காளிதேவியிடம் சண்டன் பிரசண்டன் பெற்ற வரம் பற்றிக் கூறினார். அவர்களை அழைக்கும் வல்லமை காளிதேவிக்கே உள்ளது என்றும் அவ்விரு அசுரர்களையும் அழித்து விடக் கட்டளையிட்டார். நவசக்தி தேவிமார்களையும் தம்முடன் அழைத்துக் கொண்டு மிகுந்த கோபத்துடன் அசுரர்களுடன் போருக்குச் சென்றாள் காளி. மகாகாளியின் உருவத்தைக் கண்ட அசுரர்கள் இருவரும் பயந்து போய் மகாகாளி கோயில் தற்போது இடத்தில் ஓடி ஒளிந்தனர். மகாகாளி அவர்களை விடாமல் பின்தொடர்ந்து வந்து போரிட்டார். அரக்கர்கள் இருவரும் எருமைக்கடா உருவம் எடுத்து தேவியைப் பலமாகத் தாக்கினர். நவசக்தியுடன் தேவி சிங்க வாகனம் ஏறி வந்து அவ்வரக்கர்களை வதம் செய்தார். அரன் என்னும் சிவபெருமான் சித்தத்தைப் பூர்த்தி செய்தமையால் மகாகாளிக்கு அரசித்தி தேவி எனப்பெயர் பெற்றாள். சிப்ரா நதிக்கரையில் அரசித்திதேவிக்கு தனியாக கோயில் இன்றும் உள்ளது. இக்கோயில் 51 சக்தி பீடக் கோயில்களில் 5 ஆவதாகவும் உள்ளது.

அவந்தி மாநகரில் விலாசன் என்ற அந்தணன் இருந்தான். சிறந்த சிவபக்தன். அவனுக்கு நான்கு பிள்ளைகள். இரத்தின மாலை என்ற மலையில் வாழ்ந்த தூஷணன் என்ற அரக்கன் இந்த நகரைச் சூறையாடி மக்களைத் துன்புறுத்தினான். குடிகள் விலாசனை அணுகி தங்களைக் காக்கும்படி வேண்டினர். சிவலிங்கம் பிடித்து வைத்து அன்றாடம் பூசை செய்வது அந்தணர் வழக்கம். ஒரு நாள் அவர் அப்படிச் செய்யத் தொடங்கிய போது அந்த அரக்கன் வந்து பூஜைப் பொருள்களைத் தூக்கி எறிந்து சிவலிங்கத்தையும் அழித்தான். அந்தக் கணத்தில் பெருத்த சப்தம் எழுந்தது. எல்லாரும் திடுக்கிட்டனர். அந்த லிங்கத்திலிருந்து வெடித்துப் பிளந்து கொண்டு மகாகாளர் தோன்றி தூஷணை அழித்தார். அரக்கன் அழிந்த மகிழ்ச்சியில் மக்கள் மகாகாளரை அங்கேயே தங்கி தங்களைக் காக்கும்படி வேண்டினர். பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி மகாகாளர் லிங்க உருவில் அருளத் தொடங்கினார்.

மகாபாரதத்தில் தேவகிக்கு எட்டாவது குழந்தையாகப் பிறந்த கண்ணனை யசோதையின் வீட்டில் விட்டு அங்கே பிறந்திருந்த பெண் குழந்தையை வசுதேவர் தூக்கி வந்தார். மாகாகாளியே அந்தப் பெண் குழந்தையாக பிறந்திருந்தார். அந்தப் பெண் குழந்தையைைக் கம்சன் விண்ணில் தூக்கி எறிந்து வாளால் வெட்டப் போனான். ஆனால் அந்தக் குழந்தை காளி உருக்கொண்டு மாகாளியாக மாறி உன்னை அழிக்க வந்த குழந்தை வேறு இடத்தில் பிறந்து விட்டது என்று சொல்லி மறைந்தாள்.

அசோகச் சக்ரவர்த்தி உஜ்ஜயினி வர்த்தகர் மகளையே மனைவியாகத் திருமணம் செய்து கொண்டார். மவுரியப் பேரரசின் கிளைத் தலைமைப் பீடம் இங்கே இருந்திருக்கிறது. அசோகருடைய கல்வெட்டுகளில் உஜ்ஜயினி பற்றிய தகவல்கள் இருக்கிறது. பாணினி பெரிபுளூசு ஹியான்சான் போன்ற வெளிநாட்டுத் தூதர்கள் உஜ்ஜயினி வந்து இத்தலத்தைப் புகழ்ந்து எழுதியுள்ளார்கள். பதஞ்சலி காளிதாசன் திருமங்கை ஆழ்வார் ஆகியோர் தமது இலக்கியப் படைப்பில் புகழ்ந்து பாடல்கள் பாடியுள்ளார்கள். தமிழ் இலக்கிய நூல் பெருங்கதை என்பதில் வரும் உதயணன் கதை நிகழ்ச்சிகள் நடந்த தலம் உஜ்ஜயினி ஆகும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.