சக்தி பீடம் 7. அகிலாண்டேஸ்வரி திருவானைக்கா

சக்தி பீடத்தில் 7 ஆவது கோயில் திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி கோயிலாகும். ஊர் திருவானைக்கா. புராணபெயர். அம்பாளின் பெயர் அகிலாண்டேஸ்வரி அகிலாண்டநாயகி. அகிலத்தை (உலகம்) காப்பவளாக அம்பிகை அருளுவதால் அகிலாண்டேஸ்வரி என்றழைக்கப்படுகிறாள். அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது ஞான சக்தி பீடம் ஆகும். இத்தலத்தில் அகிலாண்டேஸ்வரி ஜம்புகேஸ்வரரை உச்சிக்காலத்தில் பூஜிக்கிறார். எனவே மதிய வேளையில் அம்பாளுக்கு பூஜை செய்யும் அர்ச்சகர் அம்பாள் அணிந்த புடவை கிரீடம் மற்றும் மாலை அணிந்து கையில் தீர்த்தத்துடன் மேளதாளம் முழங்க சிவன் சன்னதிக்கு செல்வார். சுவாமிக்கு அபிஷேகம் செய்து கோமாதா பூஜை செய்துவிட்டு அம்பாள் சன்னதி திரும்புவார். அம்பாள் காலையில் லட்சுமியாகவும் உச்சிக்காலத்தில் பார்வதியாகவும் மாலையில் சரஸ்வதியாகவும் காட்சி தருகிறாள். சிவன் அம்பாளுக்கு இத்தலத்தில் குருவாக இருந்து உபதேசம் செய்ய அம்பாள் மாணவியாக இருந்து கற்றறிந்தாள். தலமரம் வெண்நாவல். தீர்த்தம் நவதீர்த்தங்கள் காவிரி இந்திரதீர்த்தம் சந்திரதீர்த்தம். பஞ்சபூத தலங்களில் இத்தலம் நீர் தலம் ஆகும். ஆடி மாதத்தில் அம்பாள் இங்கு சிவனை வேண்டி தவமிருந்தார். எனவே இத்தலத்தில் ஆடி வெள்ளி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆடிவெள்ளியன்று அதிகாலை 2 மணியிலிருந்து நள்ளிரவு 12 மணி வரையில் தொடர்ச்சியாக நடை திறந்திருக்கும்.

ஒருமுறை ஈசன் யோக நிஷ்டையில் அமர முடிவு செய்தார். உலகில் நீதி நெறி தவறி அக்கிரமம் எங்கும் தலை விரித்தாடியது. மனிதர்களை நல்வழிப்படுத்த ஈசன் நிஷ்டையில் தட்சிணாமூர்த்தி கோலத்தில் அமரும்போது அம்பிகை வந்தாள். நான் அருகில் இருக்கும்போது நீங்கள் எப்படி தனியாக தியானம் செய்ய முடியும்? என்று கேட்டாள். ஈசன் உலக நன்மைக்காக அம்பிகையைப் பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்தார். ஆம் தேவி நீ சொல்வது சரியே. எனவே நீ பூமிக்குச் சென்று உன் குழந்தைகள் ஞானம் பெறத் தியானம் செய். என் பக்தன் ஜம்பு என்பவன் நாவல் மரமாக வருவான். அங்கு சென்று நீ தவம் செய். நான் உனக்கு உபதேசம் செய்கிறேன் என்றார். சிவன் கட்டளைக்காக அம்பிகை பூலோகத்தில் மானிடப்பெண்ணாக பிறந்தாள். இங்கு காவிரி நதியில் நீர் எடுத்து மணலில் லிங்கம் பிடித்து வழிபட்டாள். சிவன் அந்த லிங்கத்தில் எழுந்தருளி அவளுக்குக் காட்சி தந்தார். அம்பிகையால் நீரில் லிங்கம் உருவாக்கப்பட்ட தலம் என்பதால் இது பஞ்ச பூத தலங்களில் நீர் தலமானது. ஜம்பு என்னும் முனிவர் சிவனை வேண்டி இங்கு தவமிருந்தார். சிவன் அவருக்கு காட்சி கொடுத்து நாவல் பழ பிரசாதம் கொடுத்தார். பழத்தை உண்ட முனிவர் அதன் புனிதம் கருதி விதையையும் விழுங்கி விட்டார். அவர் விழுங்கிய விதை வயிற்றுக்குள் முளைத்து தலைக்கு மேலாக மரமாக வளர்ந்தது. அவர் சிரசு வெடித்து முக்தி பெற்றார். நாவல் மரத்துக்கு ஜம்பு என்றும் பெயருண்டு. அம்பிகையால் அமைக்கப்பட்ட நீர் லிங்கம் இந்த மரத்தின் கீழ் அமைந்தது. பக்தராகிய ஜம்புவுக்கு முக்தி தந்ததால் சுவாமி ஜம்புகேஸ்வரர் என பெயர் பெற்றார். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் இத்தலம் 60 வது தேவாரத்தலம் ஆகும்.

இக்கோயிலில் ஆரம்பத்தில் அம்பாள் உக்கிரமாக இருந்தாள். பொதுவாக உக்கிரமான அம்பிகையை சாந்தப்படுத்த ஸ்ரீசக்கரத்தில் அம்பாளின் ஆக்ரோஷத்தைச் செலுத்தி அந்த சக்கரத்தை பிரதிஷ்டை செய்து சாந்தப்படுத்துவர். ஆனால் இங்கு வந்த ஆதிசங்கரர் ஸ்ரீசக்கரத்துக்குப் பதிலாக இரண்டு தாடங்கங்களை (காதில் அணியும் அணிகலன்) ஸ்ரீசக்கரம் போல் உருவாக்கி அம்பாளுக்கு பூட்டி விட்டார். பின்னர் அம்பாள் சாந்தமானாள். பிள்ளைகளான விநாயகர் முருகன் இருவரும் தனது தாயை சாந்தப்படுத்தும் வகையில் அம்பாளுக்கு எதிரே விநாயகரையும் பின்புறம் முருகனையும் சங்கரர் பிரதிஷ்டை செய்தார். அகிலாண்டேஸ்வரியை நன்கு மலர்ந்த செண்பகப்பூ போல் வாசம் வீசுபவள். அவளின் மாணிக்கம் வைர மூக்குத்தி ஒளியில் இந்த உலகமே ஒளி பொருந்தி இருக்கிறது என்று சஹஸ்ரநாமம் பாடலில் வருகிறது. ஆதிசங்கரர் தனது சௌந்தர்யலஹரியில் முழுமதி நிகர்த்த வடிவுடையாளை வணங்கினால் எதிரிகளே இருக்க மாட்டார்கள் என்று பாடுகிறார்.

இக்கோயிலுக்கு வந்த வேதியர் ஒருவர் கவி இயற்றுவதில் வல்லமை பெற அகிலாண்டேஸ்வரியை வேண்டினார். அவருக்கு அருள்வதற்கு அம்பாள் வெற்றிலை (தாம்பூலம்) போட்டபடியே சென்றாள். வேதியரிடம் நான் வெற்றிலை போட்டுள்ளேன். கோயிலுக்குள் உமிழ்வது தவறு. எனவே உம் வாயைத் திறக்கிறீரா? உமிழ்ந்து கொள்கிறேன் என்றாள். கோபமடைந்த வேதியர் அவளை விரட்டி விட்டார். அதே நாளில் கோயிலுக்கு வரதர் என்ற பக்தர் வந்திருந்தார். அவர் கோயில்கள் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறையுடையவர். கோயில் பாழ்படாமல் இருக்க எந்த தியாகத்தையும் செய்வேன் பெண்ணே தாராளமாக என் வாயில் உமிழ்ந்து கொள் என்றார். அம்பாளும் அப்படியே செய்ய அவர் பிரபலமான கவியானார். அவரே காளமேகப் புலவர் என பிற்காலத்தில் அழைக்கப்பட்டார்.

சிவமும் சக்தியும் ஒன்று என்பதன் அடிப்படையிலும் ஒரு திருவிளையாடலை இறைவன் நிகழ்த்தினார். பிரம்மாவிற்கு ஒருமுறை தான் படைத்த பெண்ணையே அடைய விரும்பினார். இதனால் அவருக்கு ஸ்திரீ தோஷம் உண்டானது. தோஷ நிவர்த்தி பெற சிவனை வேண்டினார். அவருக்கு அருள சிவன் கைலாயத்திலிருந்து கிளம்பினார். அப்போது அம்பிகை தானும் வருவதாக கூறினாள். சிவன் அவளிடம் பிரம்மா பெண்கள் மீது மோகம் கொள்பவர் என்று சொல்லி அவளை உடன் அழைத்துச் செல்ல மறுத்தார். ஆனால் அம்பிகை சிவனிடம் நான் உங்களது வேடத்தில் வருகிறேன் நீங்கள் என் வேடத்தில் வாருங்கள் என்றாள். சிவனும் ஏற்றுக்கொள்ள இருவரும் மாறுவேடத்தில் சென்றனர். பின்னர் பிரம்மாவுக்கு இருவரும் பாவமன்னிப்பு வழங்கினர். இங்கு நடக்கும் பிரம்மோற்ஸவத்தின்போது சிவன் அம்பாள் இருவரும் மாறுவேடத்தில் பிரம்ம தீர்த்தத்ததிற்கு எழுந்தருளி பிரம்மாவிற்கு காட்சி தருகின்றனர். பிரம்மா அவர்களைத் தியானம் செய்யும் சமயம் என்பதால் அப்போது மேளதாளம் இசைக்கப்படுவதில்லை.

கைலாயத்தில் சிவனுக்கு சேவை செய்த சிவகணங்களான புட்பதந்தன் மாலியவான் என்னும் இருவர் தங்களில் யார் அதிகமாக சேவை செய்கிறார்கள் என்பதில் போட்டி வந்தது. ஒரு கட்டத்தில் இருவருக்கும் இதுவே பிரச்னையாகி ஒருவரையொருவர் சிலந்தியாகவும் யானையாகவும் பிறக்கும்படி சபித்துக் கொண்டனர். இதனால் மாலியவான் சிலந்தியாகவும் புட்பதந்தன் யானையாகவும் பிறந்தனர். இவ்விருவரும் இத்தலத்தில் சிவனை வழிபட்டனர். சிவலிங்கம் கூரையில்லாமல் வெயில் மழையில் கிடந்தது. சிலந்தி சிவலிங்கத்தின் மேல் வலை பின்னி வெய்யில் மழை மற்றும் மரத்தின் சருகுகள் லிங்கத்தின் மேல் விழாமல் காத்தது. யானை காவிரியில் இருந்து தன் துதிக்கை மூலம் நீரும் பூவும் கொண்டுவந்து வழிபட்டது. யானை சிலந்தி பின்னிய வலையைத் தேவையற்றதாகக் கருதி அதை அழித்துவிட்டுச் செல்லும். சிலந்தி மறுபடியும் வலைபின்னி தன் வழிபாட்டைத் தொடரும். தினந்தோறும் இது தொடர யானையைத் தண்டிக்க எண்ணிய சிலந்தி யானையின் துதிக்கையில் புக யானையும் சிலந்தியும் போராட கடைசியில் இரண்டும் மடிந்தன. இவைகளின் சிவபக்திக்கு மெச்சி சிவபெருமான் யானையைச் சிவகணங்களுக்குத் தலைவனாக ஆக்கினார். சிலந்தி மறு பிறவியில் கோச்செங்கட் சோழன் என்ற அரசனாகப் பிறந்தது. பூர்வஜென்ம வாசனையால் கோச்செங்கட் சோழன் யானை ஏற முடியாதபடி குறுகலான படிகளைக் கொண்ட கட்டுமலை மீது சிவலிங்கம் ஸ்தாபித்து 70 கோவில்கள் கட்டினான். அவை யாவும் மாடக்கோவில் என்று அழைக்கப்படுகின்றன. கோச்செங்கட் சோழன் கட்டிய முதல் மாடக்கோவில் திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் ஆலயமாகும். இம்மன்னனுக்கு இங்கு சன்னதி இருக்கிறது.

திருவானைக்கா பஞ்சபூதத் தலங்களில் ஒன்றான அப்புத்தலமாகும். வடமொழியில் அப்பு என்பதன் பொருள் நீர். மூலரான ஜம்புகேசுவரரின் லிங்கம் இருக்குமிடம் தரை மட்டத்திற்குக் கீழே இருப்பதால் எப்போதும் தண்ணீர் கசிவு இருந்து கொண்டே இருக்கும். முற்றிய கோடை காலத்திலும் காவிரி வறண்டிருக்கும் காலத்திலும் இந்நீர்க்கசிவு வற்றுவதில்லை. திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் ஆலயம் சுமார் 18 ஏக்கர் நிலப்பரப்பில் நீண்ட உயரமான மதில்களும் நான்கு திசைகளிலும் கோபுரங்களும் ஐந்து பிரகாரங்களும் உடையது. அம்மன் அகிலாண்டேஸ்வரியின் சந்நிதி நான்காம் பிரகாரத்தில் உள்ளது. தனிச் சந்நிதியில் கிழக்கு நோக்கியவாறு அகிலம் ஆளும் நாயகியாக காட்சி தருகிறாள். மூலவர் ஜம்புகேஸ்வரர் ஐந்தாம் உள் பிரகாரத்தில் சுயம்புவான அப்புலிங்கமாக எழுந்தருளியுள்ளார். மற்றொரு சந்நிதியில் குபேர லிங்கம் உள்ளது. மிகப்பெரிய வடிவாகவும் பலமுக ருத்திராட்சம் தாங்கியும் உள்ளது. இந்தக் குபேர லிங்கத்தைக் குபேரன் வழிபட்டதால்தான் சிவன் அருள் பெற்று செல்வந்தன் ஆனார். பல அரிய சிற்பங்கள் இத்தலத்தில் உள்ளது. அதில் முக்கியமானது மூன்று கால் முனிவர் சிலை. சிவலிங்க சன்னிதிக்கு இடப்புறம் அமைந்துள்ள வெளிப்பிரகாரத் தூண்களில் இந்தச் சிற்பம் உள்ளது. ஏகநாதர் திருவுருவம் அன்னையின் சன்னிதிக்கு வெளியே உள்ள தூணில் உள்ளது. ஏகநாதர் என்பவர் மும்மூர்த்திகளும் ஒருவரே என்ற மாபெரும் தத்துவத்தை விளக்குகிறது.

மதுரையைப் போல இத்தலத்திலும் சிவபெருமான் சித்தர் வடிவில் வந்து திருவிளையாடல் நிகழ்த்தினார். இப்பகுதியை ஆண்ட மன்னன் கோயிலின் ஐந்தாம் பிரகாரத்தை கட்டினான். அப்போது போர் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனாலும் அவனது மனம் போர் செய்வதில் லயிக்கவில்லை. கோயில் பிரகாரத்தை கட்டி முடிக்க அவன் சிவனை வேண்டினான். சிவன் விபூதிச் சித்தராக வந்து இத்தலத்தின் நான்காவது திருச்சுற்று மதில் சுவர் எழுப்பிய பணியாளர்களுக்குத் திருநீறை கூலியாகக் கொடுத்தார். பணியாளர்களின் உழைப்புக்கேற்ப திருநீறு தங்கமாக மாறியது. இதையறிந்த மன்னன் மகிழ்ந்தான். சிவன் கட்டிய மதில் திருநீற்றான் திருமதில் என்றும் பிரகாரம் விபூதி பிரகாரம் என்றும் அழைக்கப்படுகிறது. விபூதி சித்தருக்கு பிரம்ம தீர்த்தக் கரையில் சன்னதி உள்ளது. இந்த வரலாறு கோயில் தல புராணத்தில் உள்ளது.

திருஆனைக்கா கோயிலில் திருக்கல்யாணம் நடப்பதில்லை. சிவனை வேண்டி அம்பாள் தவமிருந்த போது அவளுக்கு சிவன் காட்சி கொடுத்தார். ஆனால் திருமணம் செய்து கொள்ளவில்லை. எனவே இங்கு சுவாமிக்கு திருக்கல்யாணம் பள்ளியறை பூஜை கிடையாது. ஆனால் பள்ளியறை இருக்கிறது. இந்த பள்ளியறைக்கு இங்கு அருள்பாலிக்கும் சொக்கநாதர் மீனாட்சியே செல்கின்றனர். சிவன் அம்பாள் மட்டுமின்றி இங்குள்ள வேறு சுவாமிகளுக்கும் திருக்கல்யாணம் நடப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சிவாலயங்களில் ஐப்பசி பவுர்ணமியில் அன்னாபிஷேகம் செய்வது வழக்கம். இக்கோயிலில் ஜம்புகேசுவரருக்கு வைகாசி பவுர்ணமியில் அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. இங்கு சிவன் சன்னதியில் எப்போதும் நீர் ஊறிக்கொண்டிருக்கிறது. ஐப்பசி மாதம் மழைக் காலம் என்பதால் கருவறைக்குள் தண்ணீர் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். எனவே அன்னாபிஷேகம் செய்வது சிரமம். வைகாசியில் தண்ணீர் குறைந்து ஈரப்பதம் மட்டுமே இருக்கும். எனவே அந்நேரத்தில் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. ஐப்பசி பௌர்ணமியில் லிங்கத்திற்கு விபூதி காப்பிடப்படுகிறது.

முருகப்பெருமான் ஆங்கார கோலத்தில் ஜம்பு தீர்த்தக் கரையில் இருக்கிறார். இங்கு வந்த அருணகிரியார் தனக்கு காமம் என்னும் எதிரியால் தொந்தரவு உண்டாகக் கூடாது என்று முருகனிடம் வேண்டிக் கொண்டார். முருகனும் காமத்தை அசுரத் தன்மைக்கு ஒப்பிடும் வகையில் காமத்தை ஒரு அசுரனாக்கி காலின் அடியில் போட்டு அடக்கிய நிலையில் காட்சி தருகிறார். முருகனின் இத்தகைய அமைப்பைக் காண்பது அபூர்வம். இங்குள்ள சனி பகவான் குதிரை முகத்துடன் தனது தாயுடன் குழந்தை வடிவில் அமர்ந்துள்ளார். எனவே இவர் பாலசனி என்று அழைக்கப்படுகிறார். மேலும் சனியின் மனைவிகளான ஜேஷ்டாதேவி நீலாதேவியும் குழந்தை வடிவில் அருள்பாலிக்கின்றனர். ஜம்புகேஸ்வரர் அமர்ந்துள்ள மூலஸ்தானம் எதிரில் வாசல் கிடையாது. ஒன்பது துளைகளுடன் கூடிய கல் ஜன்னல் இருக்கிறது. பக்தர்கள் இந்த துளை வழியேதான் சுவாமியை தரிசிக்க வேண்டும். இந்த ஜன்னல் மனிதன் தன் உடலிலுள்ள ஒன்பது வாசல்களையும் அடக்கி சிவதரிசனம் செய்ய வேண்டுமென்பதை உணர்த்துகிறது. ஐந்து சுற்றுகள் கொண்ட கோயிலில் நான்காவது திருச்சுற்றில் உற்சவமும் தேரோட்டமும் நடைபெறும். சுவாமி சன்னதிக்கு பின்புறத்தில் சரஸ்வதி நின்ற நிலையில் வீணையில்லாமல் காட்சி தருகிறாள். அருகில் கார்த்திகை ரோகிணியுடன் சந்திரன் இருக்கிறார். ஐந்து முகங்கள் கொண்ட பஞ்சமுக விநாயகர் ஜேஷ்டாதேவியுடன் கூடிய சனீஸ்வரர் ஆகியோர் உள்ளார்கள். குபேரன் பூஜித்த குபேர லிங்கம் ஜம்பு தீர்த்தக் கரையில் உள்ளது. ஆனி பவுர்ணமியில் இவருக்கு முக்கனி அபிஷேகம் நடக்கிறது.

தமிழ் நாட்டைச் சார்ந்த சோழ பாண்டியர்கள் மட்டுமன்றிப் போசளப் பேரரசர்கள் விஜயநகர அரசர்கள் மதுரை நாயக்கர்கள் போன்றோரும் திருப்பணிகளை செய்திருக்கிறார்கள். சுமார் நூற்று ஐம்பத்து நான்கு கல்வெட்டுகள் உள்ளது. இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. அம்பிகை சிலந்தி யானை ஜம்பு முனிவர் ஆகியோர் வழிபட்டுள்ளனர். திருநாவுக்கரசர் திருஞானசம்பந்தர் சுந்தரர் அருணகிரிநாதர் பாடல்கள் பாடியுள்ளார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.