சக்தி பீடம் 8. அபீதகுஜாம்பாள் – திருவண்ணாமலை

சக்தி பீடத்தில் 8 ஆவது கோயில் திருவண்ணாமலை அபீதகுஜாம்பாள் கோயில் ஆகும். அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது அருணை சக்தி பீடம் ஆகும். அம்பாள் அபித குஜாம்பாள் வேறு பெயர் உண்ணாமுலையாள். தலமரம் மகிழமரம். தீர்த்தம் பிரம்மதீர்த்தம் சிவகங்கை. காசியில் இறக்க முக்தி திருவாரூரில் பிறக்க முக்தி சிதம்பரத்தைத் தரிசித்தால் முக்தி. ஆனால் நினைத்தாலே முக்தி தரும் தலம் திருவண்ணாமலை. காசியில் இறப்பது எல்லோருக்கும் வாய்க்காது. திருவாரூரில் பிறப்பது நம் செயல் அன்று. சிதம்பரத்திற்கு நேரில் சென்று தரிசிப்பது என்பது எல்லோராலும் இயலாது. ஆனால் திருவண்ணாமலையை ஒரு முறையேனும் நினைப்பது யாவருக்கும் எளிதான செயலே. அவ்வாறு ஒரு முறை நினைத்தாலும் முக்தி எளிதில் வாய்க்கும் என்ற சிறப்பை உடையது திருவண்ணாமலை தலம்.
அபீதகுஜாம்பாள் இத்தலத்தில் மலையை கிரிவலம் வந்து தவம் செய்தார். தவத்தின் பலனாக சிவபெருமான் தன் உடம்பில் சரிபாதியாக இடப்பாகம் தந்து ஜோதி சொரூபமாய் இத்தலத்தில் காட்சி கொடுத்தார். கார்த்திகை மாதம் கிருத்திகை நாளன்று பார்வதிக்கு சிவன் இடப்பாகம் அளித்தார்.

திருக்கயிலாயத்தில் ஆழ்நிலை தியானத்தில் இருந்த சிவபெருமானின் கண்களை அன்னை பராசக்தி விளையாட்டாக மூடியதால் இப்பிரபஞ்சமே இருண்டது. அனைத்து ஜீவராசிகளும் துன்பத்திற்கு ஆளாகி தவித்தன. இதனால் ஏற்பட்ட பாவத்தை போக்க பூவுலகில் காஞ்சிபுரம் கம்பை நதிக்கரையில் அன்னை காமாட்சியாக தவம் இருந்தாள். ஒருநாள் கம்பை நதி வெள்ளத்தில் தான் அமைத்த சிவலிங்கம் கரையாமல் இருக்க மார்போடு சேர்த்து அணைத்தார் அன்னை காமாட்சி. இதனால் அன்னையின் பாவத்தை சிவபெருமான் நீக்கினார். அய்யனே நீங்கள் எப்போதும் என்னை பிரியாதிருக்க தங்கள் திருமேனியில் எனக்கு இடபாகம் தந்தருள வேண்டும் என சக்தி வேண்டினார். அதற்கு சிவபெருமான் அண்ணாமலை சென்று தவம் செய் என உத்தரவிட்டார். அவ்வாறே உமையும் தவம் செய்தாள். கார்த்திகை மாதத்தில் பவுர்ணமியும் கிருத்திகையும் சேரும் நாளில் மலையின்மீது பிரகாசமான ஒளி ஒன்று உண்டானது. அப்போது மலையை இடதுபுறமாக சுற்றிவா என அசரீரி ஒலித்தது. அதன்படி கிரிவலம் சென்ற அன்னையை அழைத்து தனது மேனியில் இடபாகத்தை அளித்து ஆட்கொண்ட சிவபெருமான் அர்த்தநாரீஸ்வரராக காட்சியளித்தார்.

சர்வ சிருஷ்டி காலத்தில் பிரம்மதேவருக்கும் திருமாலுக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி ஏற்பட்டது. இதுதொடர்பாக இருவரும் விவாதம் செய்து கொண்டிருந்த போது சிவபெருமான் ஜோதி ரூபமாக அங்கு தோன்றினார். அந்த ஜோதியை யார் என்று இருவரும் ஆராய திருமால் அடியையும் பிரம்மா முடியையும் காண சென்றார்கள். இருவராலும் அடி முடியை காண முடியவில்லை.ஔ அந்த ஜோதியே நெருப்பு மலையாக மாறியது. இதுவே கோயிலின் பின்னணியில் உள்ள திருவண்ணாமலையாகும்.

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 233 வது தேவாரத்தலம் திருவண்ணாமலை ஆகும்.
மூலவர் அருணாசலேஸ்வரர் அண்ணாமலையார். லிங்கமே மலையாக அமைந்த மலை பஞ்சபூதம் தலங்களில் முக்கியமான அக்னி தலம் இது. கோயில்களில் சுவாமியை அஷ்டபந்தன மருந்து சாத்தி பிரதிஷ்டை செய்வார்கள் இக்கோயிலில் அண்ணாமலையார் ஸ்வர்ணபந்தனம் (சுத்தமான தங்கத்தால் பந்தனம்) பிரதிஷ்டை செய்யப் பெற்றுள்ளார். இந்த கோயில் அக்னி கோயில். அக்னிக்குரிய நாள் செவ்வாய்கிழமை. இந்த கோயிலில் செவ்வாய் கிழமை அன்று மட்டும் சிறப்பு பூஜைகள் நடக்கும்.

கோவிலின் திசைக்கு ஒன்றாக நான்கு கோபுரங்கள் உள்ளது. 5 ஆம் பிரகாரத்தில் இருந்து 4 ஆம் பிரகாரத்துக்குச் செல்லும் வகையில் திசைக்கு ஒன்றாக 4 கோபுரங்கள் உள்ளது. 4 ஆம் பிரகாரத்தில் இருந்து 3 ஆம் பிரகாரத்துக்குச் செல்லும் வகையில் கிழக்கில் கிளி கோபுரம் என்று அழைக்கப்படும் கோபுரம் ஒன்று ஆக மொத்தம் 9 கோபுரங்களுடன் இவ்வாலயம் திகழ்கிறது. இவற்றில் கிழக்கு திசையிலுள்ள இராஜகோபுரம் தமிழகத்தின் 2 ஆவது பெரிய கோபுரமாகும். இது 11 நிலைகளுடன் 217 அடி உயரம் கொண்டது. தெற்கு திசை கோபுரத்திற்கு திருமஞ்சன கோபுரம் என்றும் மேற்கு திசை கோபுரத்திற்கு பேய் கோபுரம் என்று வடக்கு திசை கோபுரத்திற்கு அம்மணி அம்மாள் கோபுரம் என்றும் பெயர். 9 கோபுரம் 7 பிரகாரங்களுடன் 25 ஏக்கரில் அமைந்துள்ள மிகப்பெரிய தலம். ஏராளமான சித்தர்கள் வாழ்ந்த தற்போதும் வாழ்ந்து கொண்டிருக்கும் சிறப்பு வாய்ந்த மலை.

கோயிலுக்கு உள்ளே பேய் கோபுரத்துக்கு வலது புறத்தில் அடி முடி காணாத பரம் பொருள் அண்ணாமலையார் பாதம் உள்ளது. பாதத்தை சுற்றியுள்ள துண்களில் விநாயகர் முருகர் கோதண்டராமர் சக்திதேவியின் திருவடிவங்கள் காட்சி தருகின்றன. மேலும் மலை உச்சியிலும் அண்ணாமலையாரின் திருப்பாதம் அமைந்திருக்கிறது. தீபம் ஏற்றப்படும் மலை உச்சியின் வலது புறத்தில் அண்ணாமலையார் பாதம் உள்ளது. அண்ணுதல் என்றால் நெருங்குதல் என்று பெயர். அண்ணா என்றால் நெருங்கவே முடியாது என்று பொருள் தரும். பிரம்மனாலும் விஷ்ணுவாலும் அடியையும் முடியையும் நெருங்க முடியாத நெருப்பு மலை என்பதால் அண்ணாமலை என பெயர் வந்தது. உலகம் தோன்றிய காலத்திலிருந்தே இம்மலை உள்ளது. கிருத யுகத்தில் நெருப்பு மலையாகவும் திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும் துவாரயுகத்தில் பொன்மலையாகவும் இப்போது கலியுகத்தில் கல்மலையாகவும் உள்ளது. மலையின் உயரம் 2688 அடி. (800 மீட்டர்). கிரிவலப் பாதையின் தூரம் 14 கிலோமீட்டர். இப்பாதையில் 360 தீர்த்தங்களும் பல சந்நிதிகளும் அஷ்ட லிங்கங்களும் உள்ளன. திருவண்ணாமலையில் அடிக்கு 1008 லிங்கம் அமைந்துள்ளது. மலையை ஒவ்வொரு இடத்தில் நின்று பார்த்தால் ஒவ்வொரு வகை தரிசனமாக 27 வகை தரிசனம் காணலாம்.

கிரிவலப்பாதையில் எட்டு திசைகளுக்கும் ஒவ்வொரு லிங்கம் இருக்கும். 1.இந்திர லிங்கம் 2.அக்னி லிங்கம் 3. எமலிங்கம் 4. நிருதி லிங்கம் 5. வருண லிங்கம் 6. வாயுலிங்கம் 7.குபேர லிங்கம் 8. ஈசான லிங்கம் உள்ளது. கோயிலில் ஒன்பது கோபுரங்கள் உள்ளன. கோபுரங்கள் அதிகம் உள்ள கோயில் இது. இக்கோயிலில் உள்ளே ஆறு பிராகாரங்கள் உள்ளன. 142 சன்னதிகள் 22 பிள்ளையார்கள் 306 மண்டபங்கள் 1000 தூண்கள் கொண்ட ஆயிரங்கால் மண்டபம் அதனடியில் பாதாள லிங்கம் (பால ரமணர் தவம் செய்த இடம்) 43 செப்புச் சிலைகள் கல்யாண மண்டபம் அண்ணாமலையார் பாத மண்டபம் என பல சிறப்புகள் அமைந்த கோயில். கோயிலின் உள்ளேயே சிவகங்கைத் தீர்த்தம் பிரம்ம தீர்த்தம் என்ற இரு பெரிய குளங்கள் உள்ளன.

முருகப்பெருமானுக்கு 6 படை வீடு இருப்பது அனைவருக்கும் தெரியும். இதே போல் விநாயகருக்கும் 6 படை வீடு இருக்கிறது. இத்தலத்தில் கிளிக்கோபுரத்தின் கீழ் இடது பக்கம் உள்ள அல்லல் போக்கும் விநாயகர் சன்னதி விநாயகரின் முதல் படை வீடாகும். அருணகிரிநாதர் பிறந்து வளர்ந்து வாழ்ந்து முக்தி அடைந்த தலம். அருணகிரிநாதர் வாழ்க்கை வெறுப்புற்று தற்கொலை செய்து கொள்ள முயன்றபோது முருகனே வந்து காப்பாற்றி திருப்புகழ் பாட உத்தரவிட்ட தலம். எல்லா சிவதலத்திலும் மூலவர் பின்புறமுள்ள லிங்கோத்பவர் தோன்றிய  தலம். சேஷாத்திரி சுவாமிகள் ரமண மகரிஷி விசிறி சாமியார் போன்ற எண்ணற்ற ஞானிகள் வாழ்ந்து முக்தியடைந்த தலம்.

சிவன் கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில் திருமால் பிரம்மா இருவருக்கும் அக்னி வடிவமாக காட்சி தந்தார். இந்நாளில் தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது. அன்று அதிகாலையில் அண்ணாமலையார் சன்னதியில் ஒரு தீபம் ஏற்றி அதன் மூலம் மேலும் ஐந்து தீபங்கள் ஏற்றி பூஜிப்பர். பின்பு அந்த தீபங்களை ஒன்றாக்கி அண்ணாமலையார் அருகில் வைத்து விடுவர். இது ஏகன் அநேகனாகி அநேகன் ஏகனாகுதல் தத்துவம் ஆகும். பரம்பொருளான சிவனே பல வடிவங்களாக அருளுகிறார் என்பதே இந்நிகழ்ச்சியின் உட்கருத்தாகும். மாலையில் கொடிமரம் அருகிலுள்ள மண்டபத்திற்கு பஞ்சமூர்த்திகள் எழுந்தருளுவர். அப்போது மூலஸ்தானத்தில் இருந்து அர்த்தநாரீஸ்வரர் வருவார். அவர் முன்னால் அகண்ட தீபம் ஏற்றியதும் மலையில் மகாதீபம் ஏற்றப்படும். அவ்வேளையில் அண்ணாமலையார் மலை உச்சியில் ஜோதி வடிவில் காட்சி தருவார். மகா தீபம் ஏற்றும் வேளையில் மட்டுமே அர்த்தநாரீஸ்வரரைத் தரிசிக்க முடியும். மற்ற நாட்களில் இவர் சன்னதியை விட்டு வருவதில்லை.

அருணைநாயகி திருவண்ணாமலையில் வாசம் செய்ய வந்த கதை இது. திருப்புகழ் தந்த அருணகிரிநாதர் மேல் சம்பந்தாண்டான் என்னும் மந்திரவாதி வஞ்சம் கொண்டிருந்தான். ஆறுமுகனின் அருளுக்குப் பாத்திரமான அருணகிரிநாதர் முருக தரிசனம் பெற்று வீடுபேறு அடையக் கூடாதென்பதில் குறியாய் இருந்தான் அவன். அவன் வழிபட்டுவந்த காளிதேவி தான் அருணை நாயகி. தன் பக்தனின் வேண்டுதலையேற்று முருகனைத் தன் மடியிலிருத்தி எங்கும் செல்லாமல் பார்த்துக் கொண்டாள் அன்னை. இதைத் தன் ஞானக்கண்ணால் அறிந்த அருணகிரிநாதர் அன்னையை வசப்படுத்த பாடல்களைப் பாடினார். பாடல்களில் அம்பிகை மெய்மறந்திருக்கையில் மடியிறங்கி வந்த முருகன் அருணகிரிநாதருக்கு கம்பத்தில் காட்சி தந்தார். இதனால் கோபமடைந்த சம்பந்தாண்டான் அன்னையை நிந்தித்தான். அதுமுதற்கொண்டு சம்பந்தாண்டனின் வழிபாடுகளை ஏற்காமல் திருவண்ணாமலையிலேயே எழுந்தருளி விட்டாள் அருணைநாயகி. திருவண்ணாமலை கொசமடத் தெருவில் அன்னையின் கோயில் அமைந்துள்ளது. சிறிய கோயிலில் கருவறையில் காட்சி தருகிறாள் அன்னை நாயகி.

அண்ணாமலையார் தீபம் என்பது திருவிளக்கின் விஸ்வரூபம். தீபம் என்பது லட்சுமி தேவியின் வடிவத்தையும் (சுடர்) சரஸ்வதி தேவியின் பிம்பத்தையும் (ஒளி) பார்வதியின் சக்தியையும் (வெப்பம்) ஒன்றாக சேர்த்தது. திருவிளக்கு தீபச்சுடரில் மூன்று தேவிகளின் வடிவத்தை காணலாம். கார்த்திகை தீபத்தன்று தீபமேற்றி வழிபட்டால் சிவனின் அருளுடன் மூன்று தேவியரின் அருளும் சேர்ந்து கிடைக்கும். தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படாத வண்ணம் தடுக்கிறது. இதன் அடிப்பாகத்தில் பிரம்மா. தண்டு பாகத்தில் மகாவிஷ்ணு. நெய் எண்ணெய் நிறையுமிடத்தில் சிவபெருமான் வாசம் செய்கின்றனர். வேத புராணங்களும் கூட விளக்கேற்றுவதால் மிகச் சிறந்த பலன் கிடைக்கும் என்கின்றன. எத்தனை எத்தனையோ அரசர்கள் கோயில்களில் தீபம் ஏற்றுவதையே மிகச் சிறந்த திருப்பணியாகச் செய்துள்ளனர்.

கார்த்திகை பௌர்ணமி தீபத்தன்று மாலை 6.00 மணிக்கு பத்து தீபங்களும் மேள தாளத்துடன் வெளியே எடுத்து வந்து கொடிக் கம்பம் அருகேயுள்ள தீபக் கொப்பரையில் ஒன்று சேர்த்து எரிய விடுவார்கள். அந்த நிமிடத்தில் அர்த்தநாரீஸ்வரர் வெளிவந்து இரண்டு நிமிட தரிசன காட்சி கொடுத்துவிட்டு உடனே உள்ளே சென்று விடுவார். அப்போதே வாசல் வழியே பெரிய தீவட்டியை ஆட்டி மலைக்கு அடையாளம் காட்டுவார்கள். மலை மீது இருப்பவர்கள் உடனே மகாதீபம் ஏற்றிவிடுவர். ஏழடி உயரமுள்ள செப்புக் கொப்பரையில் தான் மகாதீபம் ஏற்றப்படுகிறது. 3000 கிலோ பசுநெய் 1000 மீட்டர் காடாதுணி திரி 2 கிலோ கற்பூரம் இட்டு தீபம் ஏற்றுவார்கள். தீபம் ஏற்றும் உரிமையுடையோர் மீனவ இன பரத்வாஜ குலத்தவர்கள்தான். இவர்களின் பரம்பரையினர்தான் இப்போதும் தீபம் ஏற்றுகிறார்கள். தீப விழாவன்று இவர்கள் கோயிலில் கூடுவார்கள். ஆலயத்தார் இவர்களை கவுரவித்தபின் தீபம் ஏற்றும் பொருட்களைக் கொடுத்தனுப்புவார்கள். மூன்று மணி நேரத்தில் மலை உச்சியையடைந்து விடுவார்கள். இவர்கள் ஏற்றிய இத்தீபம் 11 நாட்கள் எரியும். இரவில் பத்து கிலோமீட்டர் தூரம் வரை தெரியும்.

சிவன் சன்னதிக்கு பின்புறம் பாமா ருக்மணியுடன் வேணுகோபாலர் சன்னதி இருக்கிறது. இவர் அருகில் கருடாழ்வார் ஆஞ்சநேயர் இருக்கின்றனர். வைகுண்ட ஏகாதசியன்று அதிகாலையில் இவரது சன்னதியில் ஒரு தீபம் ஏற்றி பூஜிக்கின்றனர். அதன்பின்பு அத்தீபத்தை பெருமாளாகக் கருதி பிரகாரத்திலுள்ள வைகுண்ட வாசல் வழியே கொண்டு வருவர். பஞ்சபூத தலங்களில் இது அக்னி தலம் என்பதால் பெருமாளும் ஜோதி வடிவில் எழுந்தருளுகின்ர். நரசிம்மர் இரணிய வதம் செய்தபோது அருகிலிருந்த சிறுபாலகனான பிரகலாதனை நரசிம்மரின் உக்கிரம் தாக்கவில்லை. காரணம் இரணியன் மனைவி கர்ப்பமாக இருந்த போது நாரதர் யோசனைப்படி கிரிவலம் வந்தாள். அப்போது பெய்த அமுத மழைத் துளி மலைமீதுபட்டு அவள் வயிற்றில் பட்டது. அது குழந்தைக்கு தக்க பலம் கொடுத்ததால்தான் இரணியன் மகன் பிரகலாதனுக்கு சக்தி கிடைத்தது.

திருவண்ணாமலையை ஆர்க்கேயன் காலத்தியது என்ற கருத்து உள்ளது. அதாவது இந்த காலம் 200 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டது. இந்த காலத்திலேயே திருவண்ணாமலை தோன்றி விட்டது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். திருவண்ணாமலைக்கு காந்த சக்தி இருப்பதாக (காந்த மலை) புவியியல் வல்லுனர்களும் ஆராய்ந்து கூறியுள்ளனர். திருவண்ணாமலையின் வயதை இவர்கள் 260 கோடி ஆண்டுகள் என்று மதிப்பிட்டுள்ளார்கள். இது உலகிலேயே மிகப்பழமையான மலை என்று டாக்டர் பீர்பால் சகானி என்ற விஞ்ஞானி தெரிவித்துள்ளார். முதல் கணக்கெடுப்பின் படி மலையின் உயரம் 2665 அடி. இந்த மலையை கீழ் திசையில் இருந்து பார்த்தால் ஒன்றாகத் தெரியும். இது ஏகத்தை குறிக்கும். மலை சுற்றும் வழியில் இரண்டாக தெரியும். இது அர்த்தநாரீசுவரரை குறிக்கும். மலையின் பின்னால் மேற்கு திசையில் பார்த்தால் மூன்றாக தெரியும். இது மும்மூர்த்திகளை நினைவு படுத்தும். மலை சுற்றி முடிக்கும்போது ஐந்து முகங்கள் காணப்படும். அது சிவபெருமானின் திருமுகங்களை குறிக்கும். திருவண்ணாமலையில் மலையே சிவபெருமானாகக் கருதப்படுவதால் இறைவனை வலம் வருதலைப் போல மலையை வலம் வரும் பழக்கம் இங்குள்ளது. மலையைச் சுற்றிவர இரு வழிகள் உள்ளன. ஒன்று இப்போது உள்ள சாலை வழி 2 வது மலையை ஒட்டிச் செல்லும் பாறைகள் முட்கள் மிகுந்த கடினமான பாதை.

அம்மணி அம்மாள் என்பவர் திருவண்ணாமலையில் வாழ்ந்த பெண் சித்தராவார். இவர் திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோயில் வடக்கு கோபுரத்தினை கட்டிய பெருமை உடையவர். இவருடைய ஜீவ சமாதி திருவண்ணாமலை ஈசான்ய லிங்க கோயிலின் எதிரே அமைந்துள்ளது. அம்மணியம்மாளின் இயற்பெயர் அருள்மொழியாகும். இவர் திருவண்ணாமலை அருகேயுள்ள சென்ன சமுத்திரம் என்ற கிராமத்தில் பிறந்தவர். சைவக் கடவுளான சிவபெருமான் மீது அளவற்ற பக்தியைக் கொண்டிருந்தார். பெற்றோருடன் ஒரு முறை அண்ணாமலைக்கு வந்த போது மீண்டும் கிராமத்திற்குத் திரும்ப மறுத்து அண்ணாமலையிலேயே தங்கிவிட்டார். அதன் பிறகு பருவம் வந்த போதும் திருமணம் செய்து கொள்ளாமல் துறவியாக வாழ்ந்தார். திருவண்ணாமலை அருணாச்சலேசுவர் கோயிலின் வடக்குக் கோபுரம் பாதி மட்டுமே கட்டப்பட்ட நிலையைக் கண்டு அதனைக் கட்ட எண்ணம் கொண்டார். இதற்காகப் பக்தர்கள் செல்வந்தர்களின் உதவியை நாடி கோபுரத்தினைக் கட்டி முடித்தார். அதனால் திருவண்ணாமலையின் வடக்குக் கோபுரம் அம்மணியம்மாள் கோபுரம் என்றே அழைக்கப்படுகின்றது. இவர் பூமிக்குள் புதைந்திருக்கும் புதையலையே அறிந்து கொள்ளும் வல்லமை வாய்ந்தவர். நமசிவாய மந்திரத்தினை உச்சரித்து திருநீறு தந்து எண்ணற்றவர்களின் நோய்களையும் வாழ்க்கைப் பிரச்சனைகளையும் தீர்த்து வைத்தார். அண்ணாமலையார் கோயிலின் வடக்குக் கோபுரம் பாதி கட்டப்பட்ட நிலையில் இருப்பது கண்டு மனம் வருந்தினார். பின் தாமே முன்வந்து கோபுரத்தினைக் கட்ட முடிவு செய்தார். அதற்கான பொருட் செலவுகளை நன்கொடைகள் மூலம் பெற்றார். ஒரு முறை செல்வந்தர் ஒருவரின் வீட்டிற்குச் சென்று கோபுரத்தினைக் கட்ட பணம் கேட்ட பொழுது அச்செல்வந்தர் பணத்தினை வைத்துக் கொண்டு தன்னிடம் பணமே இல்லையென்றார். ஆனால் அண்ணாமலையாரின் அருள் பெற்ற அம்மணி அம்மாள் அச்செல்வந்தரிடம் இருக்கும் தொகையைச் சரியாகக் கூறி அப்பணத்தினை நன்கொடையாகக் கேட்டார். தன்னிடம் இருப்பதை அறிந்து சரியாகக் கூறும் அம்மாளை வணங்கி அச்செல்வந்தர் பணத்தினைக் கொடுத்தார்.

மன்னர்கள் பலர் இக்கோவிலில் திருப்பணி செய்துள்ள போதிலும் வல்லாள மகாராஜா மீது அண்ணாமலையாருக்கு தனிப்பட்ட முறையில் வல்லாள மகாராஜாவின் பக்தி காரணமாக பாசம் அதிகம் இருந்தது. அதற்கு காரணம் வல்லாள மகாராஜா வாரிசு எதுவும் இல்லாமல் தவித்ததுதான். ஹோய்சாளப் பேரரசு என்று அழைக்கப்பட்ட தென்னிந்திய அரச மரபின் கடைசி மாமன்னர் வீர வல்லாள மகாராஜா. கிபி 1291 இல் தொடங்கி கிபி. 1343 ஆம் ஆண்டுவரை கர்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகளையும் வட தமிழ்நாட்டையும் ஆந்திராவின் சில பகுதிகளையும் ஆட்சி செய்தார். இப்பேரரசின் தலைநகரம் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹளபேடு. இவரது இரண்டாம் தலைநகரம் திருவண்ணாமலை. திருவண்ணாமலை கோவில் புராணமான கிபி. 14 ஆம் நூற்றாண்டின் அருணாச்சலபுராணம் ஹோய்சால வீரவல்லாள மகாராஜாவை வன்னி குலத்தினில் வரு மன்னா என்று குறிப்பிடுகிறது. வல்லாள மகாராஜாவுக்கு பிள்ளை இல்லை என்கிற குறை இருந்தது. இதனை அறிந்த சிவபெருமான் தானே மகனாக பிறக்கும் திருவிடையாலை நிகழ்த்தினார்.

திருவண்ணாமலையில் இருந்த எல்லா தேவதாசிகள் வீட்டுக்கும் சிவகணங்களை அனுப்பிய சிவபெருமான் வல்லாள மகாராஜாவிடம் சைவத் துறவி கோலத்தில் வந்து தனக்கு ஒரு தேவதாசி வேண்டும் என்று கேட்டார். வல்லாள மகாராஜாவும் தேவதாசியை அனுப்புவதாக வாக்களித்தார். ஆனால் ஊரில் தேவதாசிகள் யாரும் இல்லாததால் வல்லாள மகாராஜாவால் தேவதாசியை கொண்டுவர முடியவில்லை. மன்னனின் கவலை அறிந்த வல்லாள மகாராஜாவின் இளைய ராணி தானே தேவதாசியாக சிவனிடம் செல்ல முன்வந்தார். துறவி வேடத்தில் சிவன் இருந்த அறைக்குள் ராணி நுழைந்த போது குழந்தையாக சிவபெருமான் காட்சியளித்தார். ராணியும் மகாராஜாவும் சிவபெருமானை தமது குழந்தையாக ஏற்றனர். திருவண்ணாமலையை ஆட்சி செய்த அந்த மன்னன் மீது இரக்கப்பட்ட அண்ணாமலையார் அவரை தன் தந்தையாக ஏற்றுக் கொண்டார். அந்த மன்னனின் மகனாக மாறி அற்புதம் செய்தார். அது மட்டுமின்றி வல்லாள மகாராஜா மரணம் அடைந்தபோது அவருக்கு இறுதிச்சடங்குகள் அண்ணாமலையார் சார்பில் செய்யப்பட்டன. மேலும் ஆண்டு தோறும் இன்றும் வல்லாள மகாராஜாவுக்கு மாசி மாதம் அண்ணாமலையார் திதி கொடுத்து வருகிறார்.

மலையைச் சுற்றியுள்ள பாதை ஜடாவர்ம விக்கிரம பாண்டியனால் கி.பி 1240ல் திருப்பணி செய்யப்பட்டது. திருவண்ணாமலையில் மக்கள் கி.மு 1 ஆம் நூற்றாண்டுக்கு முன்னரே நகரமைத்து வாழ்ந்து வந்திருக்கின்றனர். திருவண்ணாமலை நகரம் தென்னிந்தியாவின் மிகவும் பழமையான நகரங்களில் ஒன்று என்பதற்கான குறிப்புகள் சங்க இலக்கிய பாடல்களில் பல இடங்களில் வருகின்றது. சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் தொண்டைமான் இளந்திரையன் திருவண்ணாமலை நகரத்தை ஆண்டதை பரிபாடல் மூலம் அறிய முடிகின்றது. கி.மு இரண்டாம் நூற்றாண்டிலேயே பதஞ்சலி முனிவரால் திருவண்ணாமலை குறிப்பிடப் பெறுகிறது. கிபி 2 ஆம் நூற்றாண்டு கால சங்க இலக்கியமான மணிமேகலைக் காப்பியத்திலும் இந்நகர் குறிப்பிடப்படுகிறது. கிபி 4ஆம் நூற்றாண்டு முதல் 9ஆம் நூற்றாண்டு வரை பல்லவர்களின் முக்கிய நகராக விளங்கிய திருவண்ணாமலை கலை மற்றும் தமிழ் சமஸ்கிருத மொழிகளின் கல்வியில் சிறந்து விளங்கியது.

முதல் மற்றும் இரண்டாம் நூற்றாண்டுகளில் மகிழ மரத்தடியில் சுயம்பு லிங்கம் சிறு மண்சுவர் கோவிலாக இருந்தது. 4 ஆம் நூற்றாண்டில் கருவறை செங்கல்லால் கட்டப்பட்டது. 5 ஆம் நூற்றாண்டில் அது சிறு ஆலயமாக மேம்பட்டது. 6 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயில் இது. சேர சோழ பாண்டிய வைசாள மன்னர்களால் பல்வேறு காலகட்டங்களில் திருப்பணி செய்யப்பட்ட மிகப்பழமையான திருக்கோயில் இது. 6 7 8 ஆம் நூற்றாண்டுகளில் திருஞான சம்பந்தர் திருநாவுக்கரசர் சுந்தரர் மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் அண்ணாமலையார் பாடப் பெற்றார். அப்படி பாடப் பெற்றபோது கூட அண்ணாமலையார் செங்கல் கருவறையில்தான் இருந்தார். ஆலயமும் ஒரே ஒரு அறையுடன் இருந்தது. 9 ஆம் நூற்றாண்டில் சோழப் பேரரசு செல்வாக்கு பெற்ற போது திருவண்ணாமலை ஆலயம் மாற்றம் பெறத் தொடங்கியது. 817 ஆம் ஆண்டு முதலாம் ஆதித்ய சோழ மன்னன் செங்கல் கருவறையை அகற்றி விட்டு கருங்கல்லால் ஆன கருவறையைக் கட்டினார். பிறகு ஒரு காலக்கட்டத்தில் அந்த கருவறை மகிழ மரத்தடியில் இருந்து தற்போதைய இடத்துக்கு மாறியது. 10 ஆம் நூற்றாண்டில் கருவறையைச் சுற்றி முதல் மற்றும் இரண்டாம் பிரகாரங்கள் கட்டப்பட்டன. சோழ மன்னர்களின் வாரிசுகள் தான் இந்த பிரகாரங்களைக் கட்டினார்கள். அப்போதே திருவண்ணாமலை ஆலயம் விரிவடையத் தொடங்கி இருந்தது. 11 ஆம் நூற்றாண்டில் கோபுரங்கள் எழத் தொடங்கின.

முதலாம் ராஜேந்திரச் சோழன் கொடி மர ரிஷி கோபுரத்தையும் சுற்றுச் சுவர்களையும் கட்டினான். 1063 ஆம் ஆண்டு வீரராஜேந்திர சோழ மன்னனால் கிளிக்கோபுரம் கட்டப்பட்டது. இதனால் திருவண்ணாமலை ஆலயம் கம்பீரம் பெறத் தொடங்கியது. 12 ஆம் நூற்றாண்டில் மூன்றாம் குலோத்துங்கச் சோழ மன்னர் உண்ணாமலை அம்மனுக்கு தனி சன்னதி கட்டினார். 13 ஆம் நூற்றாண்டில் சிறு சிறு சன்னதிகள் உருவானது. சோழ மன்னரிடம் குறுநில மன்னராக இருந்த பல்லவராஜா கோப்பெருஞ்சிங்கன் ஆகியோர் இந்த சன்னதிகளைக் கட்டினார்கள். அதோடு ஏராளமான நகைகளையும் திருவண்ணாமலை கோவிலுக்கு அவர்கள் வாரி வழங்கினார்கள். 14 ஆம் நூற்றாண்டு திருவண்ணாமலை ஆலயத்துக்கு மிக முக்கியமான காலக்கட்டமாகும். அந்த நூற்றாண்டில்தான் வடக்கு தெற்கு மேற்கு பகுதிகளில் கோபுரங்கள் கட்டப்பட்டன. 1340 ஆம் ஆண்டு முதல் 1374 ஆம் ஆண்டுக்குள் இந்த மூன்று கோபுரங்களும் கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஹொய்சாள மன்னர் வீரவல்லாளன் இந்த திருப்பணிகளைச் செய்தார்.

15 ஆம் நூற்றாண்டில் திருவண்ணாமலை ஆலயத்துக்கு நிறைய பேர் தானமாக நிலங்களை எழுதி வைத்தார்கள். திருவண்ணா மலை ஆலயம் பொருளாதாரத்தில் மேம்பாடு பெற்றது இந்த நூற்றாண்டில்தான். 16 ஆம் நூற்றாண்டில் விஜய நகர பேரரசர் கிருஷ்ண தேவராயருக்கு திருவண்ணாமலை கோவில் மிக மிக பிடித்து போய் விட்டது. திருவண்ணாமலை ஆலயத்தை மிகப்பெரிய ஆலயமாக மாற்றினார். அவர் மற்ற மன்னர்கள் போல ஒன்றிரண்டு திருப்பணிகள் செய்யவில்லை. இருபது பெரிய திருப்பணிகளை செய்தார். 217 அடி உயரத்தில் கம்பீரமாக ஓங்கி உயர்ந்து நிற்கும் கிழக்கு ராஜகோபுரம் சிவகங்கை தீர்த்தக்குளம் ஆயிரம் கால் மண்டபம் இந்திர விமானம் விநாயகர் தேர் திருமலைத்தேவி அம்மன் சமுத்திரம் என்ற நீர்நிலை ஏழாம் திருநாள் மண்டபம் சன்னதியில் உள்ள 2 கதவுகள் வாயில் கால்களுக்கு தங்க முலாம் பூசியது. உண்ணாமுலை அம்மன் ஆலய வாயில் கால்கள் மற்றும் கதவுக்கு தங்க முலாம் பூசியது. உண்ணாமுலை அம்மன் சன்னதிக்கு முன் ஆராஅமுதக்கிணறு வெட்டியது. அண்ணாமலையார்க்கும் உண்ணாமுலை அம்மனுக்கும் கிருஷ்ணராயன் என்ற பெயரில் பதக்கம் செய்து கொடுத்தது. நாகாபரணம் பொற்சிலை வெள்ளிக்குடங்கள் ஆகியவை கிருஷ்ண தேவராயரின் முக்கிய திருப்பணிகளில் சில. 1529 இல் கிருஷ்ண தேவராயரின் ஆட்சி நிறைவு பெற்றதைத் தொடர்ந்து தஞ்சை மன்னர் செவ்வப்ப நாயக்கர் கிழக்கு ராஜகோபுரத்தை 1590 இல் கட்டி முடித்தார்.

குறுநில மன்னர்கள் பலரும் சிவனடியார்களும் சிறு சிறு கோபுரங்களைக் கட்டினார்கள். பேய் கோபுரம் அம்மணியம்மாள் கோபுரம் திருமஞ்சன கோபுரம் வல்லாள மகாராஜ கோபுரம் ஆகியவை அதில் குறிப்பிடத்தக்கவை. இன்று 9 கோபுரங்களுடன் திருவண்ணாமலை ஆலயம் அழகுற காட்சியளிக்கிறது. கோபுரங்கள் அனைத்தும் 1370 இல் கட்டத் தொடங்கப்பட்டு 1590 ஆம் ஆண்டில் முடிக்கப்பட்டுள்ளது. கோபுரங்கள் கட்டி முடிக்கவே சுமார் 220 ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில்தான் ஆலயத்தின் மொத்த கட்டமைப்பும் கட்டிமுடிக்க சுமார் 1000 ஆண்டுகள் ஆகி இருப்பது கல்வெட்டுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மன்னர்கள் மட்டுமில்லாமல் மகாராணிகள் இளவரசர்கள் இளவரசிகள் சிற்றரசர்கள் ஜமீன்தார்கள் பிரபுக்கள் அரசு பிரதிநிதிகள் சித்தர்களும் இந்த ஆலயத்தின் திருப்பணிகளில் முக்கியப் பங்கு வகித்துள்ளனர். சோழ பாண்டிய பல்லவ ஹொய்சாள சம்புவராய விஜயநகர தஞ்சை மன்னர்கள் திருப்பணிகள் செய்துள்ளனர். 14 ஆம் நூற்றாண்டில் இருந்து 17 ஆம் நூற்றாண்டு வரை திருவண்ணாமலை நகரம் பல்வேறு போர்களை சந்ததித்தது என்றாலும் அண்ணாமலையார் அருளால் இடையிடையே திருப்பணிகளும் நடந்தது.

கடந்த சுமார் 150 ஆண்டுகளாக நகரத்தார் பல்வேறு திருப்பணிகள் செய்துள்ளனர். சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நாட்டுக்கோட்டை நகரத்தார் திருவண்ணாமலையில் குடியேறினார்கள். மன்னராட்சி முடிவுக்கு வந்த பிறகு திருவண்ணாமலை ஆலயத்தில் மாபெரும் திருப்பணிகள் செய்த பெருமையும் சிறப்பும் நாட்டுக்கோட்டை நகரத்தார்க்கு உண்டு. 1179 ஆம் ஆண்டு கட்டப்பட்ட உண்ணாமுலை அம்மன் ஆலயத்தை முழுமையாக அகற்றி விட்டு புதிய சன்னதியை நாட்டுக்கோட்டை நகரத்தார்தான் கட்டி கொடுத்தனர். அது மட்டுமின்றி இத்திருக்கோவிலை முழுமையாக திருப்பணி செய்து 12.06.1903 மற்றும் 4.6.1944 மற்றும் 4.4.1976 ஆகிய ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் செய்திருக்கின்றனர். மன்னர்களில் கிருஷ்ண தேவராயரும் பல்லவ மன்னன் கோப்பெருஞ் சிங்கனும் செய்த திருப்பணிகள் அளவிட முடியாதது. இன்று நாம் திருவண்ணாமலை ஆலயத்தை பார்க்கிறோம் என்றால் அதற்கு பல மன்னர்களிடம் இருந்த அண்ணாமலையார் மீதான பக்தியே காரணமாகும். சுப்பிரமணிய சந்நிதியில் பாம்பன் சுவாமிகளின் குமாரஸ்தவக் கல்வெட்டுள்ளது. அருகிலேயே அருணகிரிநாதரின் திருவெழுகூற்றிருக்கை கல்வெட்டில் உள்ளது.

அடி முடி காண முடியாதபடி ஆக்ரோஷமாக தீப்பிழம்பாக நின்ற ஈசன் மனம் குளிர்ந்து மலையாக மாறியபோது அவரிடம் விஷ்ணுவும் பிரம்மாவும் இவ்வளவு பெரிய மலையாக இருந்தால் எப்படி மாலை போட முடியும்? எப்படி அபிஷேகம் செய்ய முடியும்? என்று கேட்டனர். இதைத் தொடர்ந்தே ஈசன் மலையடி வாரத்தில் சுயம்பு லிங்கமாகத் தோன்றியதாகத் தல புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அம்பாள் சந்நிதியில் திருஞானசம்பந்தர் பதிகம், பாவை, அம்மானைப் பாடல்களின் கல்வெட்டுக்கள் உள்ளன. திருவாசகத்துள் திருவெம்பாவை என்ற பனுவல் இத்தலத்துப் பெண்கள் ஒருவரை ஒருவர் வழிபாட்டுக்கு காலையில் எழுப்பிச் சென்றதை அடிப்டையாகக் கொண்டது. இத்தலத்தில் திருப்புகழ், கந்தர் அனுபூதி, திருவெம்பாவை, திருவம்மானை, அருணாச்சல அஷ்டகம் நூல்கள் இயற்றப்பட்டுள்ளன. இக்கோவில் தலபுராணம் அருணாசல புராணம், அருணைக் கலம்பகம், சைவ எல்லப்ப நாவலர் பாடியுள்ளார். அண்ணாமலை வெண்பா குருநமசிவாயர் பாடியது.

சைவ எல்லப்ப நாவலர் எழுதிய அருணாசல புராணம், அருணைக் கலம்பகம், குருநமச்சிவாயர் எழுதிய அண்ணாமலை வெண்பா மற்றும் தேவாரம், திருவாசகம், பதினொராந்திருமுறை, பெரியபுராணம், கந்தபுராணம், திருப்புகழ், சோனசைலமாலை, திருவருணைக்கலம்பகம், அருணாசல புராணம், அருணாசல மகாத்மிய வசனம், அருணகிரி அந்தாதி, அண்ணாமலை வெண்பா, திருவருணை அந்தாதி, அண்ணாமலை சகதம், சாரப்பிரபந்தம், கார்த்திகை தீப வெண்பா, சோணாசல வெண்பா, சோணாசல சதகம், திருவருணைக்கலிவெண்பா, திருவருட்பதிகம், அருணாசலேசுவரர் பதிகம் -1, அருணாசலேசுவரர் பதிகம் – 2, உண்ணாமுலையம்மன் சதகம், அருணாசலேசர் நவகாரிகை மாலை, உண்ணாமுலையம்மன் வருகைப்பதிகம், அருணாசல சதகம், அருணாசல அட்சரமாலை, அண்ணாமலையார் வண்ணம், திருவண்ணாமலைப் பதிகங்கள், அண்ணாமலைப் பஞ்ச ரத்னம், திருவருணைத் தனி வெண்பா, அட்சரப் பாமாலை, அருணாச்சலேசுவரர் உயிர் வருக்கம் படைத்தற் பாமாலை, அருணசல அட்சரமாலை, அருணாசலநவ மணிமாலை, அருணாசல பதிகம், அருணாசல அஷ்டகம், அருணாசல பஞ்சபத்தனம் ஆகியவை இச்சிவாலயத்தின் புகழைப் பாடுகின்ற நூல்களாகும்.

திருவண்ணாமலையிலுள்ள ரமணர் ஆஸ்ரமம் அருகேயுள்ள தீர்த்தம் அகத்தியர் தீர்த்தம். இது இருக்கும் இடத்தின் பெயர் பலாக்கொத்து. இதில் வசிக்கும் மீனின் பெயர் செல்லாக்காசு. வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்  இங்குள்ள முருகப்பெருமானுக்கு சார்த்திய வேல் இன்றும் உள்ளது. விசுவாமித்திரர் பதஞ்சலி வியாக்ரபாதர் அகத்தியர் சனந்தனர் முதலானோர் வழிபட்ட லிங்கங்கள் உள்ளன. திருவண்ணாமலையை தரிசித்து தவமிருந்து பேறு பெற்ற சித்தர்கள் மகான்கள் அருளாளர்கள் ஏராளம். அவர்களில் இடைக்காட்டு சித்தர் அருணகிரிநாதர் ஈசான்ய ஞானதேசிகர் குரு நமச்சிவாயர் குகை நமச்சிவாயர் ரமணமகரிஷி தெய்வசிகாமணிதேசிகர் விருப்பாட்சி முனிவர் சேஷாத்ரி சுவாமிகள் இசக்கிசாமியார் விசிறி சாமியார் அம்மணியம்மன் கணபதி சாஸ்திரி சடைசாமிகள் தண்டபாணி சுவாமி கண்ணாடி சாமியார் சடைச்சி அம்மாள் பத்ராசல சுவாமி சைவ எல்லப்பநாவலர் பாணி பத்தர் உள்ளிட்டவர்கள் முக்கியமானவர்கள். வள்ளல் பச்சையப்பர் இக்கோயிலில் அர்த்த சாமக்கட்டளைக்கு ஒரு லட்சம் வராகன் வைத்துள்ள செய்தியைத் தெரிவிக்கும் கல்வெட்டொன்று கோயிலில் உள்ளது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்தின் மொத்த கட்டமைப்பும் கட்டிமுடிக்க சுமார் 1000 ஆண்டுகள் ஆகி இருப்பது கல்வெட்டுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் நூற்றுக்கணக்கான கல்வெட்டுகள் உள்ளன. தமிழ், சமஸ்கிருதம், கன்னடம் ஆகிய மொழிகளில் இந்த கல்வெட்டுகள் உள்ளன. இந்த கல்வெட்டுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதை சொல்வதாக உள்ளன. திருவண்ணாமலை ஆலயத்தின் சிறப்புகள் ரகசியங்களில் பெரும் பாலானவை இந்த கல்வெட்டுகளில் இருந்துதான் வெளி உலகுக்கு தெரிய வந்தன. திருவண்ணாமலை ஆலயம் சுமார் ஆயிரம் ஆண்டுகளாக கட்டப்பட்ட ஒன்று என்ற தகவலும் கல்வெட்டுகள் மூலம்தான் நமக்கு தெரிந்துள்ளது. இத்தனைக்கும் அங்குள்ள பல நூறு கல்வெட்டுகளில் 119 கல்வெட்டுகள்தான் இதுவரை ஆராயப்பட்டுள்ளன. மொத்த கல்வெட்டுகளையும் ஆய்வு செய்தால் ஆச்சரியமூட்டும் மேலும் ஏராளமான தகவல்கள் ரகசியங்கள் வெளிவரும். விசுவாமித்திரர் பதஞ்சலி வியாக்ரபாதர் அகத்தியர் சனந்தனர் மேலும் பல சித்தர்கள் முனிவர்கள் வழிபட்டுள்ளனர். சுந்தரர் திருநாவுக்கரசர் திருஞானசம்பந்தர் மாணிக்கவாசகர் அருணகிரிநாதர் பாடல்கள் பாடியுள்ளனர்.

OLYMPUS DIGITAL CAMERA

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.