சுலோகம் -20

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #20

அனுமன் கொடியை கொண்ட தேரில் நின்றிருந்த அர்ஜூனன் திருதராஷ்டிரரின் சேனைகள் அணிவகுத்து நிற்பதையும் அவர்கள் ஆயுதங்கள் கொண்டு தாக்க தயாராக இருப்பதையும் கண்டான். உடனே தனது காண்டீபம் என்ற வில்லை கையில் எடுத்து கிருஷ்ணரிடம் பேசத் துவங்கினான்.

இந்த சுலோகத்தில் முதல் கேள்வி: அனுமன் கொடியில் இருக்கிறார் என்று சஞ்சயன் திருதராஷ்டிரரிடம் குறிப்பிட்டு ஏன் சொல்கிறார்?

பாண்டவர்கள் வன வாசத்தில் இருந்த போது பீமனுக்கு அனுமன் வரம் ஒன்று கொடுத்தார். அதன்படி அனுமன் யுத்தத்தில் பாண்டவர்களுக்கு துணையாக அர்ஜூனனின் கொடியில் அமர்ந்திருப்பேன் என்றும் பீமன் யுத்தம் செய்யும் போது கர்ஜனை செய்யும் போதெல்லாம் தன்னுடைய கர்ஜனை சத்தமும் சேர்ந்து கொள்ளும் இதனால் பாண்டவர்களின் சேனையில் பலம் அதிகரித்து கௌரவர்கள் சேனையில் குழப்பமும் உண்டாகும். நீ ஜெயம் கொள்வாய் என அனுமான் ஆசி அளித்தார். பாண்டவர்களின் பக்கம் அனுமன் இருப்பதினால் அவர்களுக்கு வெற்றி உறுதி என்று சஞ்சயன் மறைமுகமாக திருதராஷ்டிரரிடம் குறிப்பிடுகிறார்.

இந்த சுலோகத்தில் 2 வது கேள்வி: அர்ஜூனன் வைத்திருக்கும் காண்டிபம் வில் யாருடையது அது அவனுக்கு எப்படி கிடைத்தது?

கண்வ ரிஷியின் கடும் தவத்தால் அவர் தவம் செய்த இடம் புற்று சூழ்ந்தது. அந்த புற்றிலிருந்து கந்தி எனும் ஒரு மூங்கில் மரம் வளர்ந்தது. அது தவத்தின் மகிமையால் வளந்த மரம் ஆகையால் அதித சக்தி பெற்றது. எனவே இதை வீணடிக்க விரும்பாத பிரம்மதேவர் அதனை கொண்டு தீயவர்களை அழிக்க காண்டீவ வில்லை உருவாக்கினார். அவர் அதனை 1000 ஆண்டுகள் வைத்திருந்தார். பின் சிவன் 1000 ஆண்டுகளும் பிரஜாபதி 503 ஆண்டுகளும் பின்பு தேவேந்திரன் 580 ஆண்டுகளும் சந்திரன் 500 ஆண்டுகளும் அவருக்கு பின் நீர் கடவுளான வருணன் 100 ஆண்டுகளும் வைத்திருந்தார். காந்தவ காட்டை அழிப்பதற்காக அக்னி தேவனின் வேண்டுகோளின் படி வருணன் இக்காண்டீபத்தை அர்ஜூனனுக்கு வழங்கினார். பிரகாசமாக இருக்கும் இந்த திவ்யமான வில் இடியின் முழக்கத்தை உண்டாக்கும். இந்த வில் ஒரே சமயத்தில் ஒரு லட்சம் வீரர்களையும் (தேவர்கள் அசுரர்கள் கந்தர்வர்கள் உள்ளிட்ட) போரிட்டு அழிக்கும் திறன் கொண்டது. அனைவராலும் வணங்கப்பட்ட இந்த வில் நூற்றி எட்டு நாண்களை கொண்டது. 108 நாண்களையும் ஒன்றினைத்தால் மட்டுமே அவ்வில்லை பயன்படுத்த இயலும். இதன் கடைசி நாணை எவராலும் அறுக்க இயலாது.

காண்டீப வில்லை பற்றி மேலும் தெரிந்து கொள்ள கீழ்கண்ட லிங்கை க்ளிக் செய்யுங்கள்

சுலோகம் -19

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #19

இந்த பெரு முழக்கத்திலிருந்து வந்த ஒலி ஆகாயத்தையும் பூமியையும் எதிரோலிக்கச் செய்து திருதராஷ்டிர கூட்டத்தின் இதயங்களை பிளக்கச் செய்தது.

இந்த சுலோகத்தில் ஒரு கேள்வி: பாண்டவ படைகளுக்கு உற்சாகத்தை கொடுத்து பயத்தை போக்கிய சங்கின் முழக்கம் ஏன் கௌரவ படைகளின் இதயத்தை பிளந்தது?

கௌரவர்களின் சங்கு முழக்கத்தின் சத்தத்தை விட பாண்டவர்களின் சங்கு முழக்கத்தின் சத்தம் மிகவும் அதிகமாக ஆகாயத்திலும் பூமியிலும் எதிரோலித்தது. இதனால் பாண்டவர்கள் தங்களை விட மிகவும் உற்சாகமாகவும் வலிமையாகவும் இருக்கிறார்கள் என்ற எண்ணம் கௌரவர்களுக்கு ஒரு விதமான பயத்தை உண்டு பண்ணி அவர்களின் இதயத்தை பிளந்தது.

சுலோகம் -17 # 18

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #17

வில்லாளிகளில் மிகச் சிறந்த காசிராஜனும் மகாரதனாகிய சிகண்டியும் திருஷ்டத்யும்னனும் விராடனும் தோல்வியை என்பதை அறியாத சாத்யகியும்

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #18

துருபதனும் திரௌபதியின் ஐந்து மகன்களும் பெரும் தோள்களுடைய சுபத்திரையின் மகன் அபிமன்யுவும் தனித்தனியே தங்களுக்குரிய சங்குகளை முழங்கினார்கள்.

பகவத்கீதையின் இந்த இரண்டு சுலோகத்தில் சொல்லப்பட்டவர்கள் யார் யார் என்று முதலில் வரும் சில சுலோகங்களில் விளக்கமாக சொல்லப்பட்டுள்ளது.

இரண்டு சுலோகத்திலும் எழும் பொதுவான கேள்வி: பாண்டவர்களில் முக்கியமானவர்கள் அத்தனை பேரும் ஏன் ஒரே நேரத்தில் சங்குகளை ஊதினார்கள்?

தாங்களும் தங்களின் படைகளும் யுத்தத்திற்கு தயாராக இருக்கிறோம் என்றும் தங்களின் படைகளை உற்சாகப்படுத்தவும் அவர்களிடம் உள்ள சங்குகளை தனித்தனியாக ஒரே நேரத்தில் முழங்கினார்கள்.

மேலும் இதில் கவனிக்க வேண்டியது சங்கின் சத்தமாகும். அர்ஜூனனும் பீமனும் முழங்கிய சங்குகளிலிருந்து வந்த சத்தம் எதிரிகளுக்கு பயத்தை உருவாக்கியது போல இவர்கள் முழங்கிய சங்குகளில் இருந்து வரும் சத்தம் பாண்டவ படைகளின் பயத்தை போக்குகிறது. மிகப்பெரிய ராட்சச ராட்டினத்தில் செல்பவர்களை கவனித்தால் புரியும் அதில் செல்பவர்கள் ஆ ஊ என்று சத்தம் போடுவார்கள். ஏன் என்றால் உரக்கமாக கத்தினால் வரும் சத்தத்திலிருந்து பயம் குறையும். யுத்தத்தில் ஒருவரை ஒருவர் கொல்லப் போகிறார்கள். மரண பயம் படைகளில் யாருக்கேனும் இருந்தால் சங்கு நாதத்தில் இருந்து வரும் ஒலியானது மனித மனதில் உள்ள பயத்தை பல விதங்களில் சரி செய்து யுத்தம் செய்ய ஒரு வெறியை கூட்டும். அதே ஒலி மிகவும் வெறித்தனத்துடன் இருப்பவர்களின் மனதை அமைதிப்படுத்தி யுத்த தர்மத்துடன் யுத்தம் செய்ய வைக்கும். இல்லை என்றால் யுத்த வெறியில் ஆயுதம் இல்லாதவர்களையும் யுத்த களத்தில் இருந்து பயந்து பின் வாங்குபவர்களையும் கொன்று தர்மத்திற்கு எதிராக செயல்படுவார்கள்.

சங்கின் முழக்கமனாது பலவகைப்படும். சங்கை முழங்குபவர்கள் என்ன தேவைக்காக எப்படி முழக்கம் செய்கிறார்கள் என்பதைப் பொறுத்து அதன் பலன் உண்டாகும். உதாரணமாக இசை ஒன்று தான் அதை என்ன ராகத்தில் இருக்கிறது என்பதை பொறுத்து ராகத்திற்கு ஏற்றார் போல் மகிழ்ச்சி துக்கம் பயம் என ஒருவருக்குள் இசையால் எந்த மனநிலையையும் வரவழைக்க முடியும். இசையால் உடல் நோய்களைக் கூட சரி செய்ய முடியும். இசையைப் போலவே மனித உணர்வுகளை பாதிப்பதில் சங்கின் நாதமும் முக்கியமானது. பயத்தைப் போக்கவும் அல்லது உண்டாக்கவும் குழப்பத்தைப் போக்கவும் அல்லது உண்டாக்கவும் தெளிவு படுத்தவும் அமைதிப் படுத்தவும் யுத்த களத்தில் சங்கு பயன்படுகிறது. ஆகவே யுத்த களத்தில் சங்கின் பங்கு மிகவும் முக்கியமானது.

சுலோகம் -16

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #16

குந்தியின் மகனான அரசர் யுதிஷ்டிரர் அநந்தவிஜயம் என்ற சங்கையும் நகுலனும் சகாதேவனும் முறையே சுகோஷம் மணிபுஷ்பகம் என்ற சங்கையும் முழங்கினார்கள்.

இந்த சுலோகத்தில் முதல் கேள்வி: யுதிஷ்டிரரின் தாய் குந்தி என்று ஏன் குறிப்பிட்டு சொல்லப்படுகிறார்?

யுதிஷ்டிரரும் அர்ஜூனனும் பீமனும் குந்திக்கு பிறந்தவர்கள். நகுலனும் சகாதேவனும் மாத்ரீக்கு பிறந்தவர்கள். இந்த சுலோகத்தில் நகுலன் மற்றும் சகாதேவன் பெயர்களும் வருகிறது. எனவே யுதிஷ்டிரரின் தாய் வேறு நகுலன் சகாதேவனின் தாய் வேறு என்பதை குறிப்பிடுவதற்காக குந்தியின் பெயர் சொல்லப்படுகிறது.

இந்த சுலோகத்தில் 2 வது கேள்வி: யுதிஷ்டிரர் மகாபாரத யுத்தம் ஆரம்பிக்கும் போது எந்த நாட்டிற்கும் அரசனாக இல்லை ஆனாலும் அரசர் யுதிஷ்டிரர் என்று ஏன் சஞ்சயன் திருதராஷ்டிரரிடம் கூறினார்?

யுதிஷ்டிரர் வனவாசம் செல்வதற்கு முன்பு இந்திரப்பிரஸ்தத்திற்கு அரசனாக இருந்து தன் சகோதரர்களுடன் ராஜசூய யாகம் நடத்தி தன்னை எதிர்த்த அனைத்து அரசர்களையும் வெற்றி பெற்று அரசர்களுக்கெல்லாம் அரசனாக இருந்து சக்கரவர்த்தி என்று பெயர் பெற்று பெரிய சாம்ராஜ்யத்தை ஆட்சி செய்து வந்தவர். மேலும் யுத்தத்தின் போது யுதிஷ்டிரருடைய உடம்பில் அரசனுக்குரிய அரசுச் சின்னங்கள் இருந்தது. இதன் காரணமாகவும் மேலும் இந்த யுத்தத்தில் யுதிஷ்டிரனே வெற்றி பெற்று அரசனாவான் என்று சஞ்சயன் அறிந்திருந்தான். இதனை திருதராஷ்டிரருக்கு மறைமுகமாக தெரிவிக்கும் வகையில் யுதிஷ்டிரனை அரசன் என்றுகூறினார்.

சுலோகம் -15

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #15

கிருஷ்ண பகவான் பாஞ்சஜன்யம் என்ற பெயர் கொண்ட சங்கை முழங்கினார். அர்ஜூனன் தேவதத்தம் என்ற பெயர் கொண்ட சங்கை முழங்கினான். ஓநாயின் வயிற்றைக் கொண்ட பயங்கர செயலை புரியும் பீமன் பௌண்டிரம் என்ற பெயருள்ள பெரிய சங்கை முழங்கினான்.

இந்த சுலோகத்தில் முதல் கேள்வி: கிருஷ்ணரிடம் பாஞ்சஜன்யம் சங்கு எப்படி வந்தது?

கிருஷ்ணர் மற்றும் பலராமர் சிறுவர்களாக இருந்த போது அவர்களுக்கு கல்வி கற்றுக் கொடுக்கும் குருவாக இருந்தவர் சாந்திபனீ முனிவர் அவரிடம் குரு தட்சணையாக என்ன வேண்டும் என்று கிருஷ்ணரும் பலராமரும் கேட்டார்கள். அதற்கு அவர் தன்னுடைய மகனை சங்கு வடிவில் இருந்த பாஞ்சஜன்யன் என்ற அசுரன் விழுங்கி விட்டான். தங்களால் இயன்றால் அவனை மீட்டுத் தாருங்கள் என்று கேட்டார். குருவின் வேண்டுகோளுக்கிணங்க கடலின் அடியில் சங்கு வடிவில் இருந்த அசுரனை கடலுக்கு மேல் கொண்டு வந்து அழித்து எமபுரம் வரை சென்று குருவின் மகனை மீட்டுக் கொடுத்த கிருஷ்ணர் சங்கு வடிவில் இருந்த அசுரனுக்கு அபயம் கொடுத்து சங்கு வடிவிலேயே அவனை தன்னுடன் வைத்துக் கொண்டார். அதனால் அந்த சங்குக்கு பாஞ்சஜன்யன் என்ற பெயர் கிடைத்தது.

இந்த சுலோகத்தில் 2 வது கேள்வி: அர்ஜூனனுக்கு தேவதத்தம் சங்கு எப்படி கிடைத்தது?

யுதிஷ்டிரர் நடத்திய ராஜசூய யாகத்தின் போது போது அர்ஜூனன் பல அரசர்களை வெற்றி பெற்று நிறைய செல்வங்களை கொண்டு வந்தான். அப்போது தைத்யர்களுடன் போரிட்ட போது இந்திரன் தேவதத்தம் என்ற சங்கை அர்ஜூனனுக்கு வழங்கினான். இந்த சங்கின் சத்தம் எதிரிப் படைகளை நடுநடுங்க வைக்கும்.

இந்த சுலோகத்தில் 3 வது கேள்வி: பீமனுக்கு ஓநாயின் வயிற்றைக் கொண்டவன் என்ற பெயர் எப்படி வந்தது?

பீமன் அதிக அளவு உணவுகளை உட்கொள்ளக் கூடியவனாக இருந்தான். அத்தனை உணவுகளையும் ஜீரணமாக்கும் சக்தி அவனது வயிற்றில் இருந்தது. இதனால் அவனுக்கு ஓநாயின் வயிற்றைக் கொண்டவன் என்ற பெயர் வந்தது. பீமன் வைத்திருந்த பௌண்டிரம் சங்கு அளவில் பெரிதாக இருந்தது. பௌண்டிரம் என்ற சொல்லுக்கு எதிரிகளின் மனதை பிளப்பது என்று பொருள். பீமன் இந்த சங்கை முழங்கினால் தெளிவாக இருக்கும் எதிரிகளின் மனம் பிளந்து சிறிது நேரத்திற்கு குழப்பத்திற்குள் இருக்கும்.

குறிப்பு: சுலோகம் -14 இல் கிருஷ்ணர் மற்றும் அர்ஜூனன் வைத்திருந்த சங்குகள் தெய்வீகமானவை என்று சொல்லப்பட்டது. அதற்கான காரணம் கிருஷ்ணர் திருமாலின் அவதாரம் இறைவனிடன் இருந்த சங்கும் தெய்வீக அம்சமுடையதுதான். அதன் பிரதிபலிப்பாகவே பாஞ்சஜன்யம் என்ற பெயர் பஞ்ச இந்திரியங்களையும் அடக்குவது என்ற பொருளுடன் இந்த சங்கை முழங்கும் போது சங்கு சத்தத்துடன் ஓம் என்ற பிரணவ மந்திரத்தை துல்லியமாக சரியாக ஒலிக்கின்ற படியால் அதுவும் தெய்வீகம் பெற்றது. அர்ஜூனனுக்கு இந்திரன் தேவலோகத்து சங்கை அளித்திருந்தான். அதனால் அந்த சங்கும் தெய்வீகமானதுதான்.

சுலோகம் -14

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #14

இதற்குப் பிறகு வெள்ளை குதிரைகள் பூட்டப்பட்ட உயர்ந்த தேரில் அமர்ந்திருந்த கிருஷ்ணரும் அர்ஜூனனும் தெய்வீகமான சங்குகளை முழங்கினார்கள்.

இந்த சுலோகத்தில் முதல் கேள்வி: வெள்ளை குதிரைகள் பூட்டப்பட்ட அர்ஜூனனின் தேர் ஏன் உயர்ந்தது என்று சொல்லப்படுகிறது?

சித்ரரதன் என்ற கந்தர்வன் தன்னிடம் இருந்த 100 திவ்வியமான வெள்ளை குதிரைகளில் இருந்து நான்கு குதிரைகளை அர்ஜூனனுக்கு கொடுத்திருந்தான். இந்த குதிரைகள் பூமியிலும் வானகத்திலும் சொர்க்க லோகத்திலும் செல்லக்கூடியவை. அர்ஜூனன் காண்டவ வனத்தை எரித்த போது அதில் திருப்தி அடைந்த அக்னி தேவன் இந்த ரதத்தை அர்ஜூனனுக்கு கொடுத்திருந்தான். இந்த தேரின் கொடியில் யுத்தம் முடியும் வரை அனுமனை அமர்ந்திருக்குமாறு கிருஷ்ணர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க தேரின் கொடியில் அனுமனும் அமர்ந்திருந்தார். கந்தர்வன் கொடுத்த தேவலோகத்து குதிரைகளுடன் அக்னி தேவன் கொடுத்த தேவலோகத்து தேரின் கொடியில் அனுமன் அமர்ந்திருக்கிறார். அந்தத் தேரில் கிருஷ்ணர் சாரதியாக அமர்ந்திருப்பதால் உயர்ந்த தேர் என்று சொல்லப்படுகிறது.

இந்த சுலோகத்தில் 2 வது கேள்வி: கிருஷ்ணரும் அர்ஜூனனும் சங்குகளை ஏன் முழங்கினார்கள்?

பாண்டவர்களும் யுத்தத்திற்கு தயாராகி விட்டதை அனைவருக்கும் தெரிவிக்கும் வகையில் கிருஷ்ணரும் அர்ஜூனனும் சங்கை முழங்கினார்கள். கிருஷ்ணரும் அர்ஜூனனும் ஊதிய சங்கு ஏன் தெய்வீகமானது என்று சொல்லப்படுவதற்கான காரணத்தை அடுத்த சுலோகத்தில் தெரிந்து கொள்ளலாம்.

குறிப்பு: முன்பு ஒரு நாளில் அக்னி தேவன் அர்ஜூனனுக்கு கொடுத்த தேரைப் பற்றி சஞ்சயனிடம் கேள்வி கேட்டான் துரியோதனன். அதற்கு பதில் அளித்த சஞ்சயன் தங்கத்தால் செய்யப்பட்ட இந்தத் தேர் மிகவும் விசாலமானது. தேரில் இருக்கும் கொடி மின்னல் போல் மின்னும். ஆகாயத்தில் வர்ண ஜாலங்கள் மிளிர்வது போல் அந்தக் கொடி மிளிரும். ஒரு யோசனை தூரத்திற்கு இருக்கும். இத்தனை தூரத்தில் இருந்தாலும் எவ்வளவு உயரமான மரங்களாக இருந்தாலும் இந்தக் கொடியை தொட முடியாத உயரத்தில் இருக்கும். இத்தனை பெரிய கொடியாக இருந்தாலும் இந்தக் கொடி பளு இல்லாமல் தங்கு தடை இல்லாமல் பறக்கும் என்று கூறினான்.

சுலோகம் -13

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #13

இதற்குப் பிறகு சங்குகள் பேரிகைகள் தம்பட்டங்கள் பறைகள் கொம்பு முதலிய வாத்தியங்கள் ஒன்றாக முழங்கின. இந்த சத்தம் மிகவும் பயங்கரமானதாக இருந்தது.

இந்த சுலோகத்தில் முதல் கேள்வி: வாத்தியங்கள் பலவும் ஒரே நேரத்தில் ஏன் முழங்கியது?

கௌரவர்கள் யுத்தத்திற்கு தயாராக இருப்பதை குறிக்கும் வகையில் பீஷ்மர் சங்கை முழங்கியதும் கௌரவப் படைவீரர்கள் தங்களுக்குரிய வாத்தியங்களில் ஒலி எழுப்பி தங்களது உற்சாகத்தை தெரிவித்ததால் அனைத்து வாத்தியங்களும் ஒரே நேரத்தில் முழங்கியது.

இந்த சுலோகத்தில் 2 வது கேள்வி: வாத்திய சத்தங்கள் ஏன் பயங்கரமானதாக இருந்தது?

கௌரவ படைகளில் 11 அக்ரோணி படைகள் இருந்தன ஓர் அக்ரோணி படை என்பது 21870 தேர்கள். 21870 யானைப்படை வீரர்கள். 65610 குதிரைப்படை வீரர்கள். 109350 காலாட் படை வீரர்கள் இருப்பார்கள். மொத்தம் 24,05,700 படை வீரர்கள் இருப்பார்கள். ஒவ்வொரு படைகளிலும் உள்ள வீரர்களில் யுத்தத்தின் போது அனைவரையும் உற்சாகப்படுத்தவும் வாத்தியத்தில் இருந்து வரும் ஒலியின் மூலமாக படைத்தலைவர்களிடம் இருந்து வரும் செய்திகளை வீரர்களுக்கு சொல்லவும் வாத்தியக் கருவிகளில் இருந்து ஒலி எழுப்புபவர்கள் பலர் இருப்பார்கள். அத்தனை பேரும் ஒரே நேரத்தில் ஒலி எழுப்பியதால் அதில் இருந்து வந்த சத்தம் ஆகாயத்தில் எதிரொலித்ததால் பயங்கரமானதாக இருந்தது.

சுலோகம் -12

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #12

கீர்த்தி மிக்கவரும் கௌரவர்களில் முதியவருமாகிய பாட்டனார் பீஷ்மர் துரியோதனனுக்கு மகிழ்ச்சியை உண்டு பண்ணும் வகையில் சிங்கத்தின் சத்தத்தைப் போல் கர்ஜனை செய்து சங்கை முழங்கினார்.

இந்த சுலோகத்தில் முதல் கேள்வி: பீஷ்மர் கீர்த்திமிக்கவர் என்றும் முதியவர் என்றும் ஏன் அழைக்கப்படுகிறார்?

தனது பிரம்மச்சரிய விரதத்தாலும் வலிமையினாலும் பீஷ்மர் மிகவும் புகழ் பெற்றார் ஆகையால் கீர்த்திமிக்கவர் என்றும் கௌரவர்களில் பாஹ்லீகரைத் தவிர மற்றவர்கள் அனைவரைக் காட்டிலும் வயதானவர் ஆகையால் முதியவர் என்று அழைக்கப்படுகிறார்.

இந்த சுலோகத்தில் 2 வது கேள்வி: பீஷ்மர் சிங்கத்தைப் போல கர்ஜனை செய்து துரியோதனனுக்கு ஏன் மகிழ்ச்சியை ஏற்படுத்தினார்?

பீஷ்மர் பாட்டனார் என்ற முறையில் பாண்டவர்கள் கௌரவர்கள் இருதரப்பினருக்கும் ஒரே விதமான உறவுமுறை கொண்டவர். இருதரப்பினர் மீதும் ஒரே விதமான எண்ணங்களை கொண்டவர். ஆனால் யுத்த களத்தில் துரியோதனன் பாண்டவர்களின் படைகளைக் கண்டு திகைத்து கவலைப்படுவதையும் அதனை மறைக்க துரோணரிடம் சென்று தன் படைகளில் உள்ளவர்களைப் பற்றி பெருமை பேசுவதையும் படைகளில் உள்ள வீரர்களை உற்சாகப்படுத்துவதையும் கண்டார். கௌரவர்களின் பிரதான தளபதி என்ற முறையில் துரியோதனனை திருப்திப்படுத்த எண்ணி சிங்கத்தின் கர்ஜனையைப் போல கர்ஜனை செய்து துரியோதனுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினார்.

இந்த சுலோகத்தில் 3 வது கேள்வி: பீஷ்மர் சங்கை ஏன் முழங்கினார்?

கெளரவர்கள் யுத்தத்திற்கு தயாராகி விட்டதை அனைவருக்கும் தெரிவிக்கும் வகையில் சங்கை முழங்கினார்.

சுலோகம் -11

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #11

அனைத்து போர் முனைகளிலும் நீங்கள் அனைவரும் உங்களுடைய இடங்களில் இருந்து நான்கு பக்கங்களிலும் சுற்றி நின்று பீஷ்மருக்கு பாதுகாப்பு அளியுங்கள்.

இந்த சுலோகத்தில் ஒரு கேள்வி: பீஷ்மர் தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்வதில் திறமையுள்ளவர் இருப்பினும் அனைவரும் அவரை நான்கு பக்கமும் சுற்றி நின்று பாதுகாக்கும் படி தூரியோதனன் ஏன் கூறினான்?

பீஷ்மர் பெண்களை எதிர்த்து ஆயுதம் எடுத்து போர் புரியமாட்டேன் என்று சத்தியம் செய்திருந்தார். பாண்டவர்களின் படையில் துருபதனின் மகனான சிகண்டி இருந்தான். இவன் முதலில் பெண்ணாக இருந்து பின்பு ஆணாக மாறியவன். அவனே முன் பிறவியில் அம்பாவாக இருந்தவள். இவள் காசி அரசனின் மூத்த மகளாவாள். பீஷ்மரால் சூழ்நிலை காரணமாக துன்பத்திற்கு ஆளாகி அவரைப் பழி வாங்க விரும்புகிறாள். இதனால் கடும் தவம் இருந்து பீஷ்மர் இறக்க தான் காரணமாக இருக்க வேண்டும் என வரம் பெற்றாள். அவளே மறுபிறவியில் துருபதனின் மகளாக சிகண்டினி என்ற பெயருடன் பிறக்கிறாள். அவள் பிறக்கும் போது அவளை ஒரு மகன் போல வளர்க்க வேண்டும் என மன்னருக்கு அசரீரி கேட்கிறது. அதன்படியே போர் முறைகள் கற்றுக் கொடுக்கப்பட்டு ஒரு இளவரசனைப் போல் வளர்க்கப்படுகின்றாள். ஒரு யட்சன் அவளை பாலின மாற்றம் செய்து ஆணாக மாற்றுகிறான். அதனால் சிகண்டினி சிகண்டி என்ற பெயர் பெற்று ஆணாக மாறினான். யுத்தம் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே சிகண்டி பற்றி அறிந்த பீஷ்மர் சிகண்டி ஒரு ஆணாக இருந்தாலும் பிறப்பால் ஒரு பெண் என்பதால் அவனை ஒரு பெண்ணாகவே நான் மதிக்கிறேன். ஆகையால் யுத்த களத்தில் சிகண்டி என் எதிரில் வந்தால் அவன் மீது நான் ஆயுதம் ஏந்தி யுத்தம் செய்ய மாட்டேன் மேலும் நான் இறப்பதற்கு அவனே காரணமாக இருக்க வேண்டும் என்று வரம் வாங்கி இருப்பதால் என் முன்னால் அவன் வந்தால் என்னுடைய ஆயுதங்கள் அனைத்தும் செயல் இழந்து போகும் என்று சொல்லி இருந்தார். இதன் காரணமாக தன் படையில் உள்ள அனைத்து மகாரதர்களிடமும் நீங்கள் யுத்த களத்தில் எந்த முனையில் இருந்து யுத்தம் செய்தாலும் அங்கேயே திடமாக இருந்து யுத்தம் செய்யுங்கள். நீங்கள் இருக்கும் இடத்தை கடந்து சிகண்டி பீஷ்மரின் அருகில் செல்ல முயன்றால் அவனை அங்கேயே தடுத்து நிறுத்தி விரட்டி அடியுங்கள். எக்காரணத்தைக் கொண்டும் சிகண்டியை பீஷ்மரின் அருகில் விட்டு விடாதீர்கள் என்று துரியோதனன் என்றான். சிகண்டியிடம் இருந்து பீஷ்மரை நாம் காப்பாற்றி விட்டால் பீஷ்மர் நமக்கு எளிதாக வெற்றி தேடிக் கொடுத்து விடுவார் என்று துரியோதனன் எண்ணியிருந்தான். அதன் காரணமாகவே பீஷ்மரை அனைவரும் சேர்ந்து பாதுகாப்பு கொடுங்கள் என்று கேட்டுக் கொண்டான்.

சுலோகம் -10

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #10

பாட்டனார் பீஷ்மரால் காக்கப்படும் நமது படைகளை பாண்டவர்களால் எந்த விதத்திலும் வெல்ல முடியாது. பீமனால் காக்கப்படும் பாண்டவர்களின் படையை நாம் எளிதில் வெல்லலாம்.

இந்த சுலோகத்தில் முதல் கேள்வி: தன் படைகளை பாண்டவர்களால் வெல்ல முடியாது என்று துரியோததன் எதன் அடைப்படையில் நம்பினான்?.

கௌரவர்கள் தங்களின் படைக்கு சேனாதிபதியாக பீஷ்மரை நியமித்திருந்தார்கள். பரசுராமரே வந்தாலும் அவரை எதிர்க்க கூடிய வல்லமை பெற்றவர் பீஷ்மர். அடுத்து பாண்டவர்களின் படைகளில் உள்ள மகாரதர்களின் எண்ணிக்கையை விட கௌரவர்களின் படைகளில் மகாரதர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அடுத்து பாண்டவ படைகளை விட 4 அக்ரோணிப் படைகள் அதிகமாக உள்ளது என்ற காரணத்தினால் கௌரவ படைகளை வெல்ல முடியாது என்று நம்பினான். வீரர்களின் எண்ணிக்கை மற்றும் படைகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் பாண்டவர்களை எளிதில் வென்று விடலாம் என்று துரியோதனன் நம்பினான். அதனாலேயே யுத்தம் ஆரம்பிக்கும் முன்பே தனது தந்திரத்தினால் பல அரசர்களையும் வீரர்களையும் தனது பக்கம் சேர்த்துக் கொண்டான்.

இந்த சுலோகத்தில் 2 வது கேள்வி: பீமனால் காக்கப்படும் பாண்டவர்களின் படையை எளிதில் வெல்லலாம் என்று துரியோததன் எதன் அடைப்படையில் நம்பினான்?.

பாண்டவர்களின் படைக்கு சேனாதிபதியாக திருஷ்டத்யும்னனையும் படைகளை காப்பதற்கு பீமனை காப்பாளனாக நியமித்திருந்தார்கள். பீமன் உடல் வலிமை பெற்றிருந்தாலும் பீஷ்மரோடு ஒப்பிட்டு பார்க்க முடியாதவன். படைகளில் மகாரதர்களின் எண்ணிக்கை குறைவாகவும் படைகளும் எண்ணிக்கையில் குறைவாகவும் இருந்த காரணத்தால் பாண்டவர்களின் படையை எளிதில் வெல்லலாம் என்று நம்பினான். பாண்டவர்கள் யுத்தத்தை வெல்வதற்கு கிருஷ்ணரையும் தங்களின் தவ வலிமையையும் நம்பினார்கள்.