ராமாயணம் 6. யுத்த காண்டம் பகுதி – 3

ராமரைப் பற்றி அறிந்த நான் பேசுகிறேன் என்று ராவணனின் தம்பி விபீஷணன் எழுந்தான். இங்கிருக்கும் அனைவரும் தங்களின் பெருமைகளை பேசுவதிலும் உங்களை புகழ்வதிலுமே குறியாக இருக்கிறார்கள். இவர்களின் யோசனைகள் தங்களுக்கு இனிமையாக இருந்தாலும் நமது நாட்டிற்கும் நமது குலத்திற்கும் இது சரியானதல்ல. நீதி தர்மத்திற்கு எதிராக ஒரு காரியத்தை செய்தால் அதன் எதிர் விளைவுகள் கடுமையானதாக கண்டிப்பாக வரும். அதுவே இப்போது வந்திருக்கிறது. இதற்கு முதலில் அமைதியான பேச்சுக்கள் வழியாகவும் அறிவுப்பூர்வமாகவும் தீர்வுகளை தேட வேண்டும். அது முடியாவிட்டால் அதன் பிறகு யுத்தத்தை செயல்படுத்த வேண்டும். இவர்கள் சொல்வது போல் நீங்கள் முதலில் யுத்தத்தை ஆரம்பித்தால் இலங்கையும் நமது குலமும் முற்றிலும் அழிந்து போகும். தருமத்தை சிந்தித்து எது சரியானதோ அதனை முதலில் செய்யுங்கள்.

ராமருடைய மனைவி சீதையை நீங்கள் தூங்கி வந்தது பாவகரமான காரியமாகும். அந்த பாவத்தை தீர்த்துக் கொள்ள முதலில் அதற்கான வழியை தேடுங்கள். ராமர் நமக்கு என்ன தீங்கு செய்தார். தனது தந்தையின் சத்தியத்தை காப்பாற்ற தண்டகாருண்ய காட்டில் தனது மனைவியுடனும் தனது தம்பியுடனும் யாருக்கும் எந்த தீங்கும் செய்யாமல் அமைதியாகவே வாழ்ந்து வந்தார். அங்கு அவரிடம் சரணடைந்தவர்களையும் தன்னை சார்ந்தவர்களையும் காப்பாற்றிக் கொள்வதற்காக தன்னை எதிர்த்து வந்த ராட்சசர்களை யுத்தம் செய்து அழித்தார். ராமரின் மேல் கோபம் இருந்தால் நீங்கள் ராமரை எதிர்த்து யுத்தம் செய்திருக்க வேண்டும் அதைவிட்டு அவர்களை வஞ்சகமாக ஏமாற்றி அவரது மனைவியை தூக்கி வந்து விட்டீர்கள். இது மிகப்பெரிய பாவமாகும். நம் பெயரில் குற்றத்தை வைத்துக் கொண்டு யுத்தம் செய்ய வேண்டும் என்று சொல்வது சரியானதல்ல.

ராமருடைய பலத்தை முதலில் சரியாக தெரிந்து கொள்ள வேண்டும். அவரின் தூதுவனாக வந்த அனுமனின் பலத்தையும் சாமர்த்தியத்தையும் நாம் அனைவரும் கண்டோம். இவ்வளவு பெரிய கடலை ஒரே தாவலில் தாவ யாராலும் முடியாது ஆனால் அனுமன் தாண்டினான். அனுமானம் செய்ய முடியாத அளவிற்கு அனுமனின் வீரம் உள்ளது. ராமரைப் பற்றியும் அனுமனைப் பற்றியும் இங்கிருப்பவர்கள் அலட்சியமாக பேசுவதில் பயனில்லை. நம்முடைய பலம் பெரிதாக இருந்தாலும் எதிரியின் பலத்தையும் பார்த்து யுத்தத்தை தீர்மானிக்க வேண்டும். சீதையை முதலில் ராமரிடம் ஒப்படைத்து விட்டால் யுத்தம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. ராமரும் லட்சுமணனும் இங்கு வருவதற்குள் சீதையை அவர்களிடம் ஒப்படைத்து விடுங்கள். உங்களின் கருத்துக்கு எதிரான கருத்தை சொல்கிறேன் என்று என்மீது கோபம் கொள்ள வேண்டாம். உங்களின் நன்மைக்காக சொல்கிறேன் என்று ராவணனிடம் விபீஷணன் அமைதியுடன் கூறினான். தன்னுடைய மந்திரிகள் சேனாதிபதிகளின் வீரப்பேச்சுக்களை மகிழ்ச்சியுடன் கேட்டுக் கொண்டிருந்த ராவணனுடைய மனதில் இருந்த சந்தேகம் அதிகமானது. நாளை மீண்டும் இதை பற்றி விவாதிக்கலாம் என்ற ராவணன் அவையை ஒத்தி வைத்து விட்டு அந்தப்புரம் சென்று விட்டான்.

ராமரைப் பற்றியே இரவு முழுவதும் சிந்தித்துக் கொண்டே இருந்தான் ராவணன். அதிகாலையில் வாத்தியங்கள் வேதங்கள் முழங்க மங்கள இசைகளுடன் இருந்த ராவணனது அந்தப்புரத்திற்கு விபீஷணன் சென்றான். ராவணனை வணங்கிய விபீஷணனை பார்த்ததும் அங்கிருக்கும் அனைவரையும் வெளியே போகச் சொல்லிவிட்டு விபீஷணனிடம் என்ன செய்தி என்று கேட்டான் ராவணன். அதற்கு விபிஷணன் அண்ணா நான் சொல்வதில் தவறு இருந்தால் மன்னிக்க வேண்டும். என்னுடைய லாபத்திற்காக நான் எதுவும் பேசவில்லை. என்னுடைய அண்ணன் என்ற பாசத்தில் உங்களின் நலன் கருதியே பேசுகிறேன். நீங்கள் அனைத்தையும் ஆராய்ந்து பார்த்து ஒரு முடிவுக்கு வாருங்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.